“சும்மா உங்க மம்மி, நான் கூப்பிட்டதும் திரும்பி பார்க்காங்களான்னு பார்த்தேன்…” என்றான் ப்ரியன் மகனை தூக்கி மடியில் சாய்த்துக்கொண்டு.
“நானும் இந்த சைட்…” என்று அனன்யா வர,
“அப்போ நான்….” துளசி ஒருபுறம்.
“நானில்லையா?…” என நிலவன் இன்னொருபுறம்.
“என்னையும்…” என்று நிலவனின் தம்பி பிரவீன் ஒருபுறம் என்று ப்ரியதர்ஷனை குழந்தைகள் கட்டிக்கொள்ள,
“எட்றா எந்த கேமராவை….” என்று நளன் ராகவ்விடம் கை நீட்டினான்.
“ஒரு சிங்கத்தை சிறையில அடைச்சிருக்காங்க. என்னா ஒரு குதூகலம்?…” என்று ராகவ் சிரிக்க,
“அன்பு சிறைடா. அவன் அனுபவிக்கட்டும். இப்பவும் அவங்கம்மா போட்டோ பார்க்கும் போதெல்லாம் அவன் கண்ணுல தெரியும் பார் ஒரு வலியும், ஆதங்கமும். அதெல்லாம் யாராலையும் தாங்கிக்க முடியாது. இவன் இருக்கான்…” என்ற நளன்,
“அவன் சந்தோஷமா இருக்கற இந்த நிமிஷங்கள் தான் எல்லாம் மறந்து ஒரு நிம்மதியோட இருப்பான்…” என்றான் நளன்.
“ஹ்ம்ம்…” என்றபடி அவர்களை திரும்பி பார்த்தான் ராகவ்.
அதற்குள் இரவு உணவிற்கு அனைவரையும் அமர சொல்லவும் ப்ரியதர்ஷன் அமர பிள்ளைகளும் அவனை சூழ்ந்து அமர்ந்துகொண்டது.
அனைவரும் உண்டு முடித்து மற்றவர்கள் கிளம்ப தரணியும், ராகவ்வும் பிள்ளைகளுடன் அங்கேயே இருந்தனர்.
குழந்தைகள் அனைவருக்கும் நடுஹாலில் மெத்தைகளை விரித்து படுத்துக்கொள்ள பேச்சுக்களுடன் அவ்விடமே அத்தனை சந்தோஷம் நிறைந்ததாய் இருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாய் ஒவ்வொரு பிள்ளைகளும் உறங்க ஆரம்பிக்க அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியே நிலைத்திருந்தது.
“இப்பலாம் அப்பப்ப என்கிட்ட இதை கேட்டுட்டே இருக்கீங்க…” என்றாள் அவனிடம் வருத்தத்துடன்.
“இல்லடா, தெரிஞ்சுக்கனும். உன்னை நான் கவனிச்சிட்டே இருந்தாலுமே உனக்குள்ள நீ என்ன நினைக்கிறன்றது எல்லாம் என் கண்ணுக்கு தெரியாது பாரு…” என்றவன்,
“உணர்வுகள் கனமில்லாத காற்றை மாதிரி. அதுல சந்தோஷம்ன்ற ஈரத்தன்மை களவு போய்ட்டா கடினமா கனத்துடும். அது பாசமா இருக்கட்டும். காதலா இருக்கட்டும் எல்லாத்துக்குமே பொருந்தும். எல்லா உறவுகளுக்கும் பொருந்தும்…” என்று கூறும்பொழுது அவனின் குரலில் இருந்த உணர்வில் அவந்திகாவின் விழிகள் கலங்கியது.
“ப்ச் ஓகே, லீவ் இட். நீ ஹேப்பி தான?….” என அவளின் கன்னம் தட்டியவன்,
“தூங்கு. நாளைக்கு எர்லி மார்னிங் அவுட்டிங் கிளம்பறோம். உனக்கும் டயர்டா இருக்கும்….” என்றதும் தான் நெற்றியில் கை வைத்தாள் அவந்திகா.
“அச்சோ, மறந்தே போய்ட்டேன். காலையில பிள்ளைங்களுக்கு எடுத்துட்டு போக ஸ்நாக்ஸ் எல்லாம் வாங்கி வச்சிருந்தேன். பேக்ல எடுத்து வைக்க மறந்துட்டேன்…” என்று உள்ளே செல்ல,
“நில்லு அவந்தி…” என கை பிடித்து நிறுத்தியவன்,
“நான் எடுத்து வைக்கறேன். நீ போய் படு. வந்தவங்க எல்லாரையும் கவனிச்சு நீ தான் டயர்டா இருக்க…” என்றான்.
“ப்ச், அது ஒரு வேலையா? அதுவும் அம்மா, அண்ணி, அண்ணா எல்லாருமே ஹெல்ப் பண்ணினாங்க. தனியா எதுவுமே செய்யலை. இதுல உங்க பொண்ணு வேற எல்லாரையும் கவனிச்சுட்டு மிரட்டிட்டு இருந்தா…” என்றவள்,
“அவளுக்கு உங்களை மாதிரி போலீஸ் ஆகனுமாம்…” என்று சிரிக்க,
“அவ விருப்பம். என் பொண்ணு அவ இஷ்டப்படி வரட்டும்….” என்றவன்,
“நான் எடுத்து வைக்கறேன். நீ போய் படு…” என்று அவளை அனுப்பிவிட்டு தான் எடுத்து வந்து வைத்துவிட்டு அனைவரின் படுத்திருந்த ஹாலில் அவனும் சோபாவை இழுத்து போட்டு படுத்துக்கொண்டான்.
படுத்தானே தவிர உறக்கமில்லை. மனதில் முணுமுணுவென்னும் உறங்கா உணர்வும், உறங்குபவர்களை காண்கையில் ஒரு நிறைவும் ஒருங்கே மேலோங்கியது.
அதனை பார்த்தபடி விழிகளை உயர்த்த புகைப்படத்தில் புன்னகையுடனான அங்கையின் புகைப்படம்.
தாயின் அரவணைப்பை போலொரு உணர்வை கொடுத்ததை அவனின் ஆழ்மனம் உணர உதட்டில் மெல்லிய புன்னகையும் அவனின் உறக்கத்தில்.
அதிகாலை கிளம்பி குடும்பங்கள் சுற்றுலா பயணம் மேற்கொள்ள அங்கே வைத்து பணி மாற்றுதலை பற்றி பகிர்ந்திருந்தான் ப்ரியதர்ஷன்.
அமலாவிடம் சொல்லியே தான் கிளம்பினான் அவன். வீட்டில் எந்தநேரமும் விளக்கு எரிந்துகொண்டே இருக்கட்டும் என்று.
தினமும் சுத்தம் செய்வதற்கு ஆளையும் ஏற்பாடு செய்தவன் அமலாவை விளக்கேற்றும்படி சொல்லிவிட்டு தான் புறப்பட்டான்.
அதிகாலையே பிள்ளைகள் இருவரையும் பின்னிருக்கையில் படுக்கை போல் செய்து உறங்க தயார் செய்தவன் நாகர்கோவில் கிளம்ப தயாராய் வந்து சேர்ந்தான்.
அவந்திகா ஒவ்வொன்றையும் சரிபார்த்துக்கொண்டே தான் இருந்தாள். எல்லாம் எடுத்து வைத்தாகிற்றா என்று.
பிள்ளைகளுக்கு முன்பே அவர்களுக்கானதை சரிபார்த்துக்கொள்ளும் பழக்கத்தை உருவாக்கி இருந்ததனால் அதில் எந்தவித குழப்பமும் இல்லை.
“இன்னும் எவ்வளோ நேரம் பார்ப்ப அவந்தி?…” என்றாள் அமலா.
“எதுக்கும் செக் பண்ணிக்கலாமேன்னு தான் அண்ணி. பார்த்துட்டேன்…” என்றவள், திரும்ப வீட்டினுள் இருந்து ப்ரியதர்ஷன் ப்ளாஸ்க்குடன் வெளியே வந்தான். உடன் நளனும்.
“இது என்ன தர்ஷா?…” என அமலா கேட்க,
“தூங்காம வண்டி ஓட்டனுமே? அதான் காபி…” என புன்னகையுடன் சொல்லியவன் அவந்திகாவை பார்க்க,
“இவருக்கு யார் சொன்னாங்கன்னே தெரியலை. எப்ப பாருங்க தூங்காம இருக்கனும்ன்னா உடனே காபின்னு ஆரம்பிச்சிடுவாங்க…” என அவள் சொல்ல,
“சொன்னவங்களுக்கு மறந்துடுச்சு போல. போற வழில ஞாபகப்படுத்தறேன்…” என்றவன் காரினுள் ஏறி அமர்ந்துகொள்ள,
“விழுந்திருக்கும். இப்ப எடுத்து வச்சிடறேன்…” என்று ஹேண்ட்பேக்கில் இருக்கும் பொட்டை எடுத்து நெற்றியில் ஒட்டிக்கொண்டு அவனை பார்த்து கண் சிமிட்ட அவளின் கைப்பையினுள் ப்ரியனின் புகைப்படம்.
இன்னும் தனது அந்த புகைப்படத்தை கைகளுக்குள் வைத்துக்கொண்டிருக்கும் மனைவியை கண்டு ப்ரியதர்ஷன் முகத்திலும் ப்ரியம் நிறைந்தது.
இங்கே களவுகள் காதல் மனங்கள் மட்டுமே களவாடப்படுவதில்லை. அவர்களுடனான கனவுகளும் களவாடப்படும்.
விழிகளால் காணாத உருவமற்ற உயிருக்கும் மேலான உணர்வுகளின் ஜீவனையும் உயிர்ப்போடும் உள்ளன்போடும் களவாடிக்கொள்ளும் உறவுகளுக்கு வாழ்வின் உன்னதத்தை இதயங்கள் உரித்தாக்கும்.
காற்றை போல களவுகளுக்கும் வடிவமில்லை. வடிவம் கொடுக்கும் மனிதர்கள் மனிதத்துடன் உயிர் கொடுப்போம்.