பெண்ணை கூட்டிக்கொண்டு கிளம்பும்நேரம் இது என்ன என்றாகியிருந்தது அவருக்கு.
அதிலும் ப்ரியதர்ஷன் மகளை அழைத்து செல்வதாய் சொல்லியதில் இன்னுமே கவலையானார்.
இதுவரை மகள் அங்கே சென்று வாழவில்லை. அதில் ஏகத்திற்கும் வருத்தம் தான்.
அதற்காக நிறைமாதத்தில் அழைத்து செல்வதா என தயக்கத்துடனும், அவனை மறுக்கமுடியாதே என்னும் பயத்துடனும் நின்றார்.
“அண்ணா சாப்பிட்டு பேசலாமே? இந்த இடம் எல்லாம் கிளீன் பண்ணனும்…” என தரணி மெதுவாய் ப்ரியதர்ஷனிடம் கூற,
“ஹ்ம்ம்…” என்றவன்,
“என்ன வேலை பார்க்காராம் உங்க தங்கச்சிக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளை?…” என்றான் அவளிடம்.
“என்ன ஒரு ஆச்சர்யம்? ஏன் அமலா, இதெல்லாம் உன் தம்பிக்கு எப்படி தெரியும்?…” என நளன் கேட்க,
“இன்னும் போகலையா நீங்க?…” என்று திரும்பினாள் அமலா.
“போனோட இங்க கதவுக்கிட்ட தான் நின்னேன். பார்த்தா எதாச்சும் கேட்பான். எங்கப்பாவா இருந்தா சுகர் பேசண்டுப்பா நானுன்னு கண்ணை சொருகி மயங்கிருப்பார். நான் செய்ய முடியுமா?…” என்றான் தன் நெஞ்சில் ஒரு அடி வைத்துக்கொண்டு நளன்.
“ஏன் வாய் இருக்கே? சொல்ல வேண்டியது தான?…”
“ஏத்தம் தான். அப்பறம் என்னை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய் அக்கக்கா பிரிச்சு பார்த்து எல்லாம் சரியா இருக்கான்னதும் தான் விடுவான். எதாச்சும் ஒரு பார்ட் பால்ட்டா இருந்துச்சு, என்னோட சேர்த்து நீயும் முடிஞ்ச. இவ்வளோ நாள் கவனிக்கலையா அப்படின்னு கேட்டு அடுத்து தலையே காட்டமுடியாது. காலத்துக்கும் ராகி கூழு தான். பார்த்துக்கோ…”
“வீட்டுக்கு வா, உன் மூச்சை நிப்பாட்டறேன். அராஜகமா பன்ற இங்க வந்தா? என்னா நக்கலு?…” என்றவன் அங்கே தரணி என்ன பேசிக்கொண்டிருக்கிறாள் என்று பார்க்க ராகவ் தன் மனைவியை தெய்வம் போல் பார்த்துக்கொண்டிருந்தான்.
“அங்க பாரு என் தம்பியை. தரணி பேச்சுக்குடுத்து நெக்ஸ்ட் சிக்கவும், என் குலசாமியே, என்னை காப்பாத்திட்டம்மான்னு பரவசத்தோட பார்க்கறதை?…” என்று நக்கலடிக்க,
“நீங்க என்னமோ பேசனும்ன்னு சொன்னீங்களே? நான் வேணா என் தம்பிக்கிட்ட சொல்லவா?…” அமலா கேட்கவும்,
“யார் நீ?…” என்றவன்,
“அப்டின்னு கேட்டுட்டு நடு மண்டையில ஞைஞைன்னு கொட்டிட்டுனாலும் போயிருவேன். உன் குடும்பத்தோட குடும்பம் நடத்தவே மாட்டேன். அப்பறம் பாவத்த சம்பாதிக்காத பார்த்துக்கோ…” என்று அழுவதை போல பெருமூச்சு விட்டு சொல்லி என்ன நடக்கிறது என்று பார்த்தான்.
“சரி, பொருத்தம் பார்த்தாச்சு. என்ன சொன்னாங்க? ஐ மீன், அவந்திகா சொன்ன மாதிரி சொன்னாங்களா என்ன?…” என்றான் நிதானமாக சாப்பிட்டுக்கொண்டே.
தரணிக்கு தான் சங்கடமாய் இருந்தது. மற்றவர்களுக்கு விஷயம் தெரிந்திருக்கவில்லை என்பதனால் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.
கலாவும், முகிலரசனும் தரணியை என்னவென கேள்வியாய் பார்க்க, ராகவ்விற்கு தப்பித்தால் போதும் என்பதை போலிருந்தது.
“எல்லா பொருத்தமும் பொருந்தி இருக்குன்னு சொன்னாங்க. வேற எதுவும் இல்லை…” என்றாள் தரணி.
“டவுட் இருந்தா அவந்திகாவை கூட்டிட்டு போய் கிளியர் பண்ணிட்டு வேணா வரலாமேன்னு தான் கேட்டேன். மேடம்க்கு தான் உண்மை எது உருட்…” என்று சொல்லவந்தவன் அதனை அப்படியே நிறுத்திக்கொள்ள பயந்தேவிட்டாள் தரணி.
மற்றவர்களுக்கு அவன் என்ன சொல்லவந்து நிறுத்தினான் என்பது தெரியவில்லை என்பதனால் ப்ரியதர்ஷன் முகத்தினை பார்த்தபடி இருக்க அதில் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவனின் குரல் எப்போதும் போல எந்த உணர்வையும் காண்பிக்காத முரட்டு குரல் தான்.
“என்னம்மா?…” என்றார் கலா மருமகளின் அருகில் நின்று.
அவர் தரணியிடம் கேட்கவும் ப்ரியதர்ஷன் அவரை நிமிர்ந்து பார்க்க சட்டென்று அமைதியாகிவிட்டார்.
ராகவ் இலையை மூடிவிட்டான். அதற்குமேல் இறங்கவில்லை. எழுந்து சென்றாலும் நன்றாக இருக்காது என்று அமர்ந்திருந்தவனுக்கு ப்ரியதர்ஷன் பேச்சில் என்னவோ என்பது மட்டும் புரிந்தது.
அதிலும் தரணியின் முகம் வெளுத்திருக்க அதை கண்டவனுக்குள்ளும் கலவரம் தொற்றிக்கொண்டது.
நிச்சயம் என்னவோ பேச்சு நடந்திருக்கிறது என நினைத்தவனுக்கு தன் தங்கையை தவிர வேறு யார் பேசியிருக்க கூடும் என கவலையானான்.
“வேற எதுவும் வைக்கட்டுமா ண்ணா…” தரணி கேட்க,
“இல்லம்மா, போதும்…” என்று தானும் இலையை மூடிக்கொள்ள இன்னும் ஓரிரு சொந்தங்கள் நேரத்தை கவனித்து கீழே இறங்கி வந்துவிட்டனர்.
“என்ன கலா புறப்படலாமா?…” என்றவர்கள் அங்கே ப்ரியதர்ஷன் இருக்க,