“கொன்னுடுவேன் உன்னை. அவனே மறந்திருப்பான். உன்னை கேட்டானா? இனி பேசு வாயில வசம்பை வைக்கறேன்…” என்று வேறு முறைப்பு நளனிடம்.
“வலிக்காம கொட்டமாட்டீங்களா? கையை விடுங்க….” என்றவள் தலையை தேய்க்க கூட முடியவில்லை.
நளன் அவள் கையை பிடித்திருந்தான். தான் கொட்டிய வேகத்தில் தலையை தேய்த்து காட்டி கொடுத்துவிடுவாளோ என்று.
யாரும் கவனிக்காததே அவனுக்கு நிம்மதியாய் இருக்க, அமலாவின் கையை விடவே இல்லை.
“கையை விடலை, என் தம்பிக்கிட்ட சொல்லிருவேன்…”
“போடி போ. என்னை தாண்டி போன்னு நானும் வெக்கம் பார்க்காம குறுக்கால விழுந்திருவேன். அப்பறம் நீயும், உன் அம்மாவும் தான் பொண்ணு எடுத்தவங்க வீட்டு முன்னாடி மானம் போச்சுன்னு கதறனும். நானும் எம்புட்டு பொறுமையா போக…” என்றவன் அவளை முறைத்துக்கொண்டே நகர்ந்து வந்து நிற்க அங்கே ராகவ்.
“அண்ணே…” என ராகவ் ஆரம்பிக்க,
“இவன் வேற என்னை ரொம்ப டார்ச்சர் பன்றான்டா கடவுளே…” என பல்லை கடித்த நளன்,
“எங்கப்பா வேற எப்படா எந்திச்சு இந்த குடும்பத்தை விட்டு பிச்சுக்கிட்டு போலாம்னு பார்த்திட்டிருக்கார்…” என கவலையாக சொல்லி ப்ரியதர்ஷனை பார்த்தான்.
ப்ரியதர்ஷன் சொல்லியதற்கு அனைவருமே எப்படி அதனை மறுத்து பேசுவது என்று யோசனையாய் இருக்க கலா தான் பேச்சை துவங்கினார்.
“இந்த நேரத்துல எப்படி மாப்பிள்ளை அவந்தியை அனுப்பறது?…” என்று கேட்க,
“ஏன், இந்த நேரத்துல என்ன?…” என்றவன்,
“எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு எட்டுமாசம் முடிஞ்சு போச்சு. என் வொய்ப் தானே? நான் கூட்டிட்டு போறதுல என்ன பிரச்சனை?…” என்றான் ப்ரியதர்ஷன் அவரிடம்.
“அதுக்கில்லைப்பா…” என்ற அங்கை மகனிடம் வர, அவன் பார்த்த பார்வையில்,
“இல்ல, அவந்தி உடம்பும் அலைச்சலுக்கு ஒத்துழைக்காது. ஏற்கனவே அவளை ரொம்ப கவனமா பார்த்துக்கனும்ன்னு டாக்டர் சொல்லிருக்காங்க…” என்றார் வேகமாய்.
“நான் கவனமா பார்த்துக்க மாட்டேனா?…” என ப்ரியன் கேட்க,
“இல்லப்பா, நான் எதுக்கு சொல்றேன்னா?…”
“எல்லாம் தெரியும். நான் இப்ப டாக்டர்கிட்ட பேசிட்டு தான் வர்றேன். அவ ட்ராவல் பண்ணலாம்ன்னு சொல்லிட்டாங்க…” என்று கூற அனைவருமே முழித்தனர்.
இதற்கு மேல் என்ன சொல்லி தவிர்க்க முடியும் என்று தெரியவில்லை. நிறைமாத பெண்ணை அனுப்பவும் மனமில்லை.
“அவளுக்கு இப்போ நிறைமாசம், பிரசவம் தாய் வீட்டுல தான் பார்க்கனும். இப்ப தான் அவளோட அம்மா கவனிப்பு அவளுக்கு தேவை…” என அங்கை மீண்டும் கூற,
“ஓஹ்…” என்றவன் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“அம்மா கவனிப்பு வேணும். மாமியார் கவனிப்பு வேணும். அவசரத்துக்கு அக்கம்பக்கத்துல ஆள் வேணும். ஆனா புருஷன் கூட இருக்கவேண்டாம். ரைட்?…” என்ற வார்த்தைகளில் இருந்த கூர்மை அனைவரையுமே குத்தி கிழித்தது.
“தர்ஷன்…” என்று அமலா அழைக்க,
“நீ உன் டெலிவரிக்கு எந்த மாசம் இங்க வந்த அமலா?…” என்றான் தன் அக்காவிடம்.
“அடிப்பாவி, இது எதுக்குடா? இவள….” என நளன் ராகவ்வின் தோளை கொத்தாய் பற்றி பிடிக்க,
“ஆத்தீ, கை போச்சே…” என்று பல்லை கடித்து வலியை பொறுத்தவன்,
“சொல்லிட்டு புடிக்க மாட்டீங்களா?…” என்றான் ராகவ் குரல் உயர்த்தாமல் கிசுகிசுப்பாய்.
“டேய் அங்க என்ன ரகசியம், இங்க என்ன நடந்துக்கிட்டிருக்கு? அரட்டையா கேட்குது?…” என கலா வேறு மகனின் தோளில் பொளீர் என்று ஒன்று போட,
“ம்மா…” என்று சத்தமில்லாமல் அலறியவன் பல்லை கடித்து கலாவை முறைத்தான்.
அவர் எங்கே மகனை கவனித்தார்? மருமகனின் கோபம் கூடிவிட்டதில் பதட்டத்துடன் நின்றிருந்தார்.
“சொல்லு அமலா…”
“ஒம்பதாம் மாசம்…”
“ஹ்ம்ம், ரெண்டு தெரு தள்ளி இருந்துட்டு தாய் வீட்டுக்கு ஒம்பதாம் மாசம், அதுவும் டெலிவரிக்கு ஒருவாரம் முன்னாடி வந்த நீ…” என்று சொல்ல அதற்கு மேல் என்ன பேசுவது அவள்?
அமலா பின்வாங்கிவிட நளனுக்கு அத்துடன் விட்டானே என அவ்வளவு நிம்மதி.
“மாப்பிள்ளை உங்களோட அவ வர்றதுக்கு ஒரு நல்லநாள் பார்த்து கூட்டிட்டு வர்றோமே…” என முகிலரசன் கூற,
“இந்த ஜாதகம், ஜோசியம் இதெல்லாம் நம்பக்கூடாதுன்னு உங்க பொண்ணே சொல்லியிருக்கா. அதனால அதை எதுவும் நீங்க பார்க்கனும்ன்னு இல்லை. எல்லா நாளும் நல்லநாள் தான்…” என்றவன்,
“எங்களுக்கு என்ன புதுசா இப்போவா கல்யாணம் ஆகியிருக்கு? நாள் குறிச்சு தனியா போக? வேணும்னா தரணிக்கிட்ட கேளுங்க, ஜோசியம் பார்க்கறவங்க உள்ளதை சொல்ல மாட்டாங்களாம்….” தரணியிடம் திரும்பி,
“சொல்லும்மா தரணி…” என்றான் கூர்மையான பார்வையுடன்.
“இல்லண்ணா நீங்க சொல்றது சரி தான்…” என அவள் உடனடியாக சரண்டர்.
“இல்ல, இங்க தான் அவந்திக்கு ரெகுலர் செக்கப் பன்ற டாக்டர்…” அங்கையால் விடமுடியவில்லை.
“ம்மா…” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் அவன் திரும்பிய வேகத்தில் பதறி பின்னால் சாயப்போனார் அங்கை.
“ம்மா, பார்த்து…” என அமலா பிடித்து நிறுத்தவும் மகனை பாவமாய் பார்க்க,
“இப்ப ஏழாம் மாசம். டெலிவரிக்கு இன்னும் எவ்வளோ மாசம் இருக்கு? அது முடிச்சு உடனே அனுப்புவாங்களா? அதுக்கொரு அஞ்சாறுமாசம்….” என்று பல்லை கடித்தவனுக்கு அவர்களுக்கு அத்தனை விளக்கம் சொல்ல சுத்தமாய் பிடித்தமில்லை.
“ப்ச், எதுக்கு இந்த சலசலப்பு? நாளைக்கு மார்னிங் கார் வரும். நான் கூட்டிட்டு கிளம்பறேன். யார்க்கிட்டயும் பர்மிஷன் கேட்கலை…” என்று சொல்லிவிட அனைவருக்குமே ஒருமாதிரி ஆகிவிட்டது.
அதுவும் ப்ரியதர்ஷனின் கோபமான பேச்சும், முகத்தில் அடித்ததை போன்றான வார்த்தைகளும், அவன் முடிவும் சுத்தமாய் பிடித்தமில்லை யாருக்குமே.
“என்ன சம்பந்தி?…” என்று கலா அங்கையை கவலையுடன் பார்த்து கேட்க,
“ம்மா நீங்க வர்றதுன்னா கிளம்புங்க. இல்லையா ஒன்னும் பிரச்சனை இல்லை. அமலாவையே பார்த்துக்கோங்க…” என்று சொல்லிவிட்டு மீண்டும் அவந்திகா இருந்த அறைக்குள் செல்ல திரும்பினான் ப்ரியதர்ஷன்.
“அப்ப இப்ப நாங்க பொண்ணை கூட்டிட்டு புறப்படட்டுமா தம்பி?…” என்று பெரியப்பா உறக்கத்திலிருந்து எழுவதை போல பேச அவரை பார்த்து சென்றவன் நின்றான்.
“ஆத்தி, அரைபோதைல எந்திச்ச மாதிரி பெரிப்பா தூக்கத்துல முழிச்சுக்கிட்டாரா?…” என்ற ராகவ் அவரிடம்,
“இங்க என்ன நடந்துச்சுன்னு தெரியாம. பேசாம உக்காருங்க பெரிப்பா…” என்று சோபாவில் அவரை போட்டு அமுக்க பார்த்தான்.
“நான் என்னத்த கண்டேன்? நீ உக்கார சொன்னதும் உக்காந்து கண்ணசந்தேன். ஆமா, என்ன நடந்துச்சு?…” என்று அவர் கண்ணை கசக்கிக்கொண்டு கேட்டதோடு,
“கிளம்ப வேண்டாமா? எல்லாரும் மசமசன்னு நிக்கறீங்க?…” என அனைவரையும் பார்த்துவிட்டு,
“அப்பறம் மாப்பிள்ளை…” என ப்ரியதர்ஷனிடமே அவர் செல்ல,
“இந்த மனுஷன் இன்னைக்கு மலையேறாம போகமாட்டார் போல. அவர்கிட்டயே போறாரே?…” என்று பிடித்து நிறுத்த பார்த்தான்.
“ஆமா, கொஞ்சம் முன்னாடி மச்சான் பேசின அம்புட்டையும் உன் பெரிப்பா மறந்துட்டாரே? அது எப்படி?…” என நளன் அவசரமாய் சந்தேகத்தை தீர்க்க பார்க்க,
“அட இருங்கண்ணே…” என்று சொல்லிவிட்டு திரும்ப பெரியப்பா ப்ரியதர்ஷனிடம் நின்றிருந்தார்.
“ஏனா எங்க பொண்ணு மனசு பூஞ்சை மனசு. இம்புட்டு நாள்ல புருஷன் வீட்டை விட்டு எங்கையாச்சும் அவ போனதுண்டா. அப்படி வளர்த்திருக்கோம். பாசம் அம்புட்டும்…” என்று பெருமையாய் அவர் சொல்ல,
“ஆமாமா, ரொம்ப பாசம்…” என்றான் ப்ரியதர்ஷனும்.
“அதத்தான நானும் சொன்னேன்…” பெரியப்பா மீண்டும் கூற,
“அதத்தான் நானும் சொல்றேன். புருஷன் வீட்டை விட்டு புருஷனோட அனுப்ப முடியாத அளவுக்கு சுத்தி இருக்கறவங்களுக்கும் ரொம்ப பாசம் தான்…” என படு நக்கலாக கூறியவன் அவரை முறைப்பாய் பார்த்துவிட்டு சென்றான்.