“ஆமா, இப்ப நான் என்ன சொல்லிட்டேன்? இங்க என்ன நடந்துச்சு?…”என்ற பெரியப்பா,
“ஏன்டா ராகவா நான் தூங்குன கேப்புல என்னமாச்சும் பேசி அவரை கோவப்படுத்தினீங்களா?…” என்றவர்,
“முகிலா, என்ன பழக்கம்? சம்பந்தி வீட்டுக்கு வந்திருக்கோம். எப்படி பேசனும்ன்னு தெரியவேண்டாமா? பொண்ணை குடுத்திருக்கோம்டா. நாம தான் பதவிசா நடக்கனும். மருமகன் மனசு புண்படாம பேச தெரியாதா?…” என்று சொல்ல அனைவருக்கும் ஹைய்யோ என்றானது.
“சரி முதல்ல மாடில இருக்கறவங்களை எல்லாம் போய் எழுப்புங்க. போனா போன இடம்ன்னு பாய போட்டு படுத்துக்கறது. என்ன ஆளுங்களோ?…” என்றவர்,
“நகண்டு நில்லுடா. அங்கங்க போஸ்ட் மரமாட்டம் நிக்காம…” என்று சொல்லி ராகவ்வை தள்ளிவிட்டு சோபாவின் ஓரத்தில் அமர்ந்த வேகத்தில் பெரியப்பாவிற்கு கண்ணை சுழற்றிக்கொண்டு வர அப்படியே கண்கள் சொருகி உறக்கத்திற்கு சென்றார்.
அத்தனைபேரும் சுற்றி சுற்றி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க நளன் குப்பீரென்று சிரித்துவிட்டான்.
“இப்படி ஒரு மனுஷராடா? நான் கூட பட்டுவேட்டியும், அங்கவஸ்திரமுமா அவர் நின்னதை பார்த்துட்டு நாட்டாம பாதம் பட்டான்னு நினைச்சுட்டேன்….” என்று சொல்லிவிட மற்றவர்கள் முகத்திலும் லேசாய் புன்னகை.
“அப்ப முதல்ல மச்சான் திட்டினதும் கூட போய் தூங்கிருக்காருடா. நான் கூட கோவிச்சுக்கிட்டு சோபாவுக்கு முட்டுக்குடுத்து சோகத்துல கன்னத்துல கை வச்சு உக்கார்ந்திருக்காருன்னு நினைச்சேன்….” என்று கூற,
“என்னங்க…” என்றாள் அமலா.
“ஓகே ஓகே. பேக் டூ பார்ம்…” என்றவன்,
“என்ன பண்ணலாம்ன்னு இருக்கீங்க சித்தப்பா?…” என கேட்டான் முகிலரசனிடம் நளன்.
“என்ன சொல்றது? எனக்கு தெரியலை…” என அவர் யோசிக்க,
“இதுக்கு மேல வேண்டாம்ன்னு சொல்ல முடியாது. ஆனா அவந்தி…” கலாவும் கையை பிசைய,
“நீங்க மருமகளை கூட்டிட்டு போங்க சம்பந்தி. நான் டாக்டர்கிட்ட என்னன்னு கேட்டுட்டு என் பையன்கிட்ட பேச சொல்றேன்…” என்றார் அங்கை.
“யாரும் எதுவும் பேசவேண்டாம் ம்மா. அவந்தியை அவரோட அனுப்பி வைப்போம்…” என தரணி சொல்லவும்,
“என்னம்மா இப்படி சொல்ற? நிறமாசம் அவளுக்கு. இன்னும் வாமிட் கூட நிக்கலை. அப்பப்ப தலை சுத்துதுன்னு உக்கார்ந்திடறா. சாப்பிடறதும் நாம கவனிச்சு குடுத்தா தான்…” என அங்கை கூறவும்,
“ஏன், அவந்திகா ஒன்னும் யாரும் இல்லாத பொண்ணில்லைல…” என்றான் நளன்.
“என்னங்க, என்ன பேசறீங்க?…” அமலா பதறி கணவனை பார்த்தாள்.
ஏற்கனவே பிரச்சனை, இதில் நளனும் எதுவும் பேசி அவந்திகாவின் வீட்டினருக்கு சங்கடமாகிவிடக்கூடாதென நினைத்தாள்.
“சரியா தான் பேசறேன். உன் தம்பி இதுக்கு மேல பொண்டாட்டியை அனுப்புங்கன்னு வேற எப்படி கேட்பான்னு தெரியலை. சும்மா சும்மா அந்த பொண்ணை கைக்குள்ளவே வச்சுக்கிட்டா எதுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க?…” என்று காட்டமாய் கேட்டுவிட்டான்.
“வேணும்ன்னா பண்ணுனாங்க? அவ உடல்நிலை அப்படி மாப்பிள்ளை…” அங்கை பேச,
“நீங்க மாமியார் தான? உங்க புள்ளை கேட்டதுக்கு பின்னாடியுமா புரியலை? அமலாவை மட்டும் பார்த்தா போச்சா? நீங்க போய் கூட இருந்து கவனிக்க வேண்டியது தான? நானும் எதுவும் சொல்லவேண்டாம்ன்னு பார்த்தா ரொம்பத்தான் பன்றீங்க…” என்றான் அங்கையை.
“நான் வேணும்னா மாப்பிள்ளை அவளை இங்கயே இருக்க வச்சேன்? எல்லாரும் சேர்ந்து எடுத்த முடிவு தான?…” அங்கைக்கு கண்கள் கலங்கிவிட்டது.
அவரின் பார்வை கலாவையும், முகிலரசனையும் பார்க்க அவர்களுக்குமே சங்கடம் தான்.
“அவங்களை ஏன் பார்க்கறீங்க? பொண்ணை புருஷனோட அனுப்ப எந்த பெத்தவங்க யோசிப்பாங்க? நீங்க வேண்டாம்ன்னு சொன்னீங்க. உங்க பேச்சுக்கு மதிப்பு குடுத்து அவங்களும் மறுபேச்சு பேசலை. இது ஒரு காரணமா உங்களுக்கு?….” என்றான் நளன்.
அவன் சொல்லும் ஒவ்வொன்றும் ஏற்றுக்கொள்ளும்படி இருக்க பதில் சொல்ல முடியவில்லை.
“இதுக்கு அவனுக்கு கல்யாணமே பண்ணி வச்சிருக்க வேண்டாம். அவனா இருக்க போய் இவ்வளோ பொறுமையா பேசறான்….” என்றவன்,
“ஏன் ராகவ் நீ இதுக்கு சம்மதிப்பியா?…” என ராகவ்விடம் கேட்டான் நளன்.
“அதெப்படி ண்ணே? எனக்கும் அவர் சொல்றதுல தப்பிருக்கறதா தோணலை. மாப்பிள்ளை சொன்ன விதம் தான் சங்கடமே தவிர்த்து மத்தபடி எனக்கு சந்தோஷம் தான்…” என்ற ராகவ்,
“ம்மா, அவந்தியை நினைச்சு கவலைப்படவேண்டாம். திருச்சிலையும் பெஸ்ட் கைனாக் இருக்காங்க. அங்க போனா அவந்திக்கும் ஒரு சேஞ்ச் இருக்கும். வேணும்னா எல்லாரும் மாத்தி மாத்தி போய் பார்த்துக்கலாம்…” என்று சொல்லவும்,
“ஆமா ராகவ்….” என்ற கலா அங்கையை பார்க்க,
“அவந்தி என்ன சொல்றா?…” என்றார் அங்கை அப்போதும்.
“அவ்வளோ மருமக மேல அக்கறை இருந்தா நீங்க கூட போங்க….” என்று நளன் சொல்லவும்,
“ம்மா, ஏன்ம்மா இப்படி பன்றீங்க? முதல்ல மத்த வேலைகளை பார்ப்போம். கிளம்ப எல்லாம் எடுத்து வைப்போம்…” என்று அமலா அங்கையை அடக்கினாள்.
“நீ உள்ள கூட்டிட்டு போ…” என்று நளன் சொல்லவும், அங்கை அங்கிருந்து நகர,
“வாயை மூடிட்டு பேசாம இரும்மா. தம்பி ஏற்கனவே கோவமா இருக்கான்…” என்றாள் அமலா.
“அதுக்குத்தான் சொல்றேன். அவ பயந்த புள்ளை அமலா. பாவமில்ல. இவன் கோவத்தை என்னன்னு சமாளிப்பா?…” என வழக்கமான புலம்பல் தான்.
“ம்மா, அவருக்கு கேட்டா இதுக்கும் பேசுவார்…” என அமலா தான் தாயை அடக்கி வைக்கவேண்டியதானது.
கலாவும், முகிலரசனும் மனதில்லை என்றாலும் மகளை அனுப்ப முடிவு செய்து என்னென்ன வேண்டும் என்று அப்போதே பேச ஆரம்பிக்க தரணி உறுதுணையாய் இருந்தாள்.
“இந்த கும்பல் இருக்கே?…” என நளன் பெருமூச்சுடன் சோபாவில் பொத்தென்று அமர,
“பொறவுடா ராகவ்வு, பொறப்படுவோமா?…” மீண்டும் எழுந்தார் பெரியப்பா கண்ணை கசக்கிக்கொண்டு.
“இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சதும் போவோம். இப்ப உறங்குங்க…” என்று கடுப்பாகிவிட்டான் ராகவ்.
“கிடைச்சிட்டாலும்….” என்று நளன் சொல்லி சிரிக்க என்ன பேசுகிறார்கள் என்று தெரியாமல் பெரியப்பா முகிலனிடம் சென்று கிளம்புவதை பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்.
ப்ரியதர்ஷன் வந்ததில் இருந்து அவந்திகாவை பார்த்தபடி இருக்க அவன் வந்ததும் எழுந்து குளியலறை சென்று திரும்பியவள் அமராமல் இங்குமங்குமாய் நடந்துகொண்டிருந்தாள்.
வெளியே நடந்த அனைத்துமே கேட்டுக்கொண்டு தான் இருந்தது. எதுவும் செய்யமுடியவில்லை.
தன்னை அங்கு செல்ல தயார் நிலைக்கு கொண்டுவரவேண்டும் என்பது மட்டுமே அவளின் எண்ணமாக இருந்தது.
யாரிடமும் இனி எதுவும் பேசுவதாய், கேட்பதாய் இல்லை. இத்தனை மாதங்கள் கழித்து இப்போது என்னவாம்? என்று தான் தோன்றியது.
அதனைகொண்டே இன்னும் அமைதியாய் அவனை பாராமல் நடக்க பெருமூச்சுடன் அவளை பார்த்தவன்,
“உன்னோட திங்ஸ் எல்லாமே பேக் பண்ணிக்கோ. அங்க போய்ட்டு எதுவும் இல்லைன்னாம….” என்றவன்,
“இல்லைன்னாலும் பிரச்சனை இல்லை. அங்க பார்த்துக்கலாம். உனக்கு இப்ப தேவையான மெடிக்கல் எமர்ஜென்ஸிக்கு மட்டும் எடுத்து வச்சுக்கோ…” என்றான் ப்ரியதர்ஷன்.
“ஹ்ம்ம்…” என்று தலையசைத்து மெலிதான சப்தமிட,
“மார்னிங் நான் இங்கருந்து கிளம்பும்போது கால் பண்ணிட்டு வருவேன்…”
“ஹ்ம்ம்…”
“எல்லாமே நைட்டே முடிச்சிடு. கிளம்பும்போது எதுவும் இல்லன்னா மாதிரி தேடிட்டிருந்தா டென்ஷன் ஆகிடுவேன். புரியுதா?…” அதட்டல், அதட்டல், அதட்டல் மட்டுமே.
“ஹ்ம்ம்…” என்றாள் அதற்கும்.
“என்ன?…” என்று குரல் உயர,
“சரிங்க…”
“யார்க்கிட்ட? சுவத்துக்கிட்டையா?…” என காட்டமாகிவிட்டான்.
“இல்லைங்க, சரின்னு சொன்னேன்…” என்று இப்போது அவனை நிமிர்ந்து பார்க்க பார்த்தவன் புருவங்கள் சுருங்கியது.
“இங்க வா…” என்று அவளை அழைக்க அருகில் வரும்முன், அவள் நெற்றியில் வைத்திருந்த சந்தனம் காய்ந்து அவந்திகாவின் கண்ணில் விழ,
“ஸ்ஸ்…” என்று கண்ணை கசக்கினாள் அவள்.
“ஹேய், என்னாச்சு?…” என அவனே எழுந்து வந்தான்.
“சந்தனம் கண்ணுல விழுந்திருச்சு…” என்று சொல்லி இன்னும் கண்ணை கசக்க,
“கையை எடு….” என்று கண்ணுக்குள் ஊதிவிட்டான் ப்ரியதர்ஷன்.
எத்தனை ஊதியும் உறுத்தல் இருக்க கண்கள் கலங்கி கண்ணீர் திரண்டு நின்றது.
“போய் கண்ணை கழுவு…” என சொல்லவும் தலையசைத்து உள்ளே சென்றவள் திரும்பி வர,
“நீ எப்ப இருந்து கோபுர பொட்டுல இருந்து ரவுண்ட் பொட்டுக்கு மாறின?…” எனும் ஆராய்ச்சி பார்வையோடு அவளை கேட்டான் ப்ரியதர்ஷன்.
முகத்தை துடைத்தபடி நின்றவளுக்கு அவனின் கேள்வி மயக்கம் வராத குறை தான்.
‘இவன் தன்னை கவனித்தானா?’ என்னும் பார்வையுடன் ப்ரியதர்ஷன் விழிகளை சந்திக்க, அவளின் திகைத்த பார்வையில் ப்ரியனின் ப்ரியத்தில் மலர்களின் வாசம்.