“கேலி பண்ணிட்டேனாம் பொண்டாட்டி வீட்டாளுங்களை. பார்த்தியா உன் தம்பியை…” என்று நளன் அமலாவின் காதை கடிக்க,
“மாமாவும், அத்தையும் எங்க மாப்ள? வந்தப்போ பார்த்தேன். கொஞ்சம் முன்னாடி கூட பார்த்தேனே?…” என நளன் புறம் அவன் திரும்ப, சட்டென மற்றவர்கள் அவரவர் வேலையை கவனிப்பதை போல கழன்று சென்றுவிட்டனர்.
‘அடப்பாவிங்களா? நான் ஒத்தையில. ஒத்தையில’ என உள்ளுக்குள் புலம்பிக்கொண்டு அவனருகில் சென்று அமர்ந்தான் நளன்.
“இவ்வளோ நேரமா டேப்லட் போடாம இருந்தாங்களா? நான் சாப்பிட்டதே அன்டைம். இதை கவனிக்காம நீங்க இங்க என்ன பண்ணிட்டிருந்தீங்க?…” என்றதும் நளனுக்கு மாட்டிக்கொண்ட உணர்வு.
“இல்ல, கெஸ்ட் எல்லாம் இருந்தாங்க…”
“அதனால என்ன? அதுவும் நான் வரும்போதே எல்லாரும் கிளம்பிட்டாங்களே?…” என்று கேட்க, மெதுவாய் ப்ரியதர்ஷன் பின்னே வெளியிலிருக்கும் ஜன்னலில் இருந்து எட்டி பார்த்தான் ராகவ்.
“இப்ப என்ன நா சொல்றது? எப்படி சிக்கியிருக்கேன் பார்த்தியாப்பா?…” என நளன் மைண்ட்வாய்ஸ் மடைதிறந்த வெள்ளம் போல எதிர் இருந்தவனை கவனியாமல், எட்டிப்பார்த்தவனை பார்த்ததும் வந்துவிட்டது.
“ஆத்தீ, அண்ணே. எனக்கு கேட்டுடுச்சு…” ராகவ் ரகசியம் போல எச்சரிக்கை விடுக்க,
“என்னடா? சத்தமா சொல்லு…” என்று கேட்ட நளன் அப்படியே பார்வையை எதிர் இருந்த ப்ரியதர்ஷனிடம் திருப்ப அவன் திரும்பி ராகவ்வை பார்த்தான்.
“அங்க என்ன பன்றீங்க ராகவ்?…” என்றதும்,
“பெரிப்பா தனியா வேன்ல இருக்கார். அதான்…” என்றவன் வேறு வழியின்றி உள்ளே வர அதற்குள் மாடியில் இருந்த உறவுகள் அனைவரும் கீழே வந்து சேர்ந்தனர்.
வந்தவர்களில் ஒருசிலர் தவிர மற்றவர்கள் யாரும் ப்ரியதர்ஷன் வந்ததை அறிந்திருக்கவில்லை என்பதனால் அவனிடம் நலம் விசாரிக்க அனைவருக்கும் ஒற்றை வார்த்தையில் பதிலளித்துவிட்டு அமர்ந்துகொண்டான்.
வீட்டில் நடக்கும் வேலைகளை கவனித்தப்படி அவனிருக்க அவனை யாரும் கவனிக்காததை போல எல்லாவற்றையும் எடுத்து வேனுக்கு நகர்த்திக்கொண்டிருந்தனர்.
அவந்திகாவின் பெட்டிகளும் வெளியில் வர சற்றுநேரத்தில் அவளும் தரணியுடன் வந்துவிட்டாள்.
“என்ன அவந்தி, அழுதியா?…” என்றார் அங்கை அனைவரையும் வைத்துக்கொண்டே.
“ம்ஹூம், இல்ல த்தை…” என்று அவள் சொல்லியும்,
“இங்க இருந்து கிளம்பவே மனசில்லாம கிளம்பறா…” என அங்கயும் கண்ணை துடைத்துக்கொண்டு,
“போய்ட்டு நல்லபடியா பிள்ளையை சுகமா பெத்து சந்தோஷமா அத்தைக்கிட்ட வாம்மா. உன்னை நான் பார்த்துக்கறேன்…” என்று அவளின் கன்னம் வழித்து உச்சிமுகர்ந்து வழியனுப்ப அவந்திகாவின் விழிகள் இந்தநொடி என்னவோ கணவனை தான் தேடியது.
“கிளம்பறப்போ புருஷனை பார்க்க கூடாது கண்ணு. நீ புறப்படு. அப்பறமா அவன் வருவான்…” என்றார் அங்கை அப்போதும்.
அவர் எதார்த்தமாக சொல்வது எல்லாம் ப்ரியதர்ஷன் பிபியை ஏற்றியபடி இருக்க மௌனமாய் வேடிக்கை பார்த்தான்.
“அவங்க சொல்றது சரிதான, கிளம்பறப்போ புருஷனை பார்க்க கூடாதுல…” என்று உறவுகளும் கூற அடிக்கண்ணால் தன்னை காண முயல்பவளின் முயற்சி ப்ரியதர்ஷனுக்கும் புரிந்தது.
“அத்தை உள்ள நிலவன் தூங்கறான். தூக்கிட்டு வந்திருங்க…” என்று தரணி சொல்ல,
“ம்மா, நான் தூக்கிக்கறேன்…” என்று ராகவ் உள்ளே சென்று தன் மகனை உறக்கத்தோடு தூக்கி தோளில் போட்டுகொண்டான்.
இன்னும் அமலா மகள் துளசி அயர்ந்த உறக்கத்தில் இருக்க அவளுக்கு நன்றாய் போர்த்திவிட்டு வெளியே வந்துவிட்டான்.
தரணி அவந்திகாவை அழைத்து செல்ல அதன்பின் கலா, முகிலன், ராகவ் என அனைவரும் வந்து ப்ரியதர்ஷனிடம் தனியே கிளம்புவதாய் சொல்லி விடைபெற்று கிளம்ப உள்ளிருந்தே வெளியே பார்த்தபடி இருந்தான் ப்ரியதர்ஷன்.
அவர்கள் புறப்படவும் ப்ரியதர்ஷன் பக்க சொந்தங்கள் சிலரும் கிளம்ப, வீடு போட்டது போட்டபடி இருந்தது.
எடுத்து ஒதுக்க வேண்டியவற்றை எல்லாம் வேலையாளை வைத்து கடகடவென்று ஒதுக்கி வைக்க ஒன்றரை மணிநேரத்தில் ராகவ்விடமிருந்து அழைப்பு.
“ஹ்ம்ம், டேக் கேர்…” என்று சொல்லி அழைப்பை துண்டித்தாகிவிட்டது.
“தம்பி, நீ கொஞ்சநேரம் வேணும்னா தூங்கேன்…” என்று அமலா வர,
“வேற எதாச்சும் வேலை இருக்கா?…” என்றான் வீட்டை சுற்றி பார்த்து.
“இல்லை, எல்லாமே ஒதுக்கிட்டோம். சாப்பாட்டு பாத்திரங்கள் கிளீன் பண்ணிட்டிருக்காங்க. அதை கொஞ்சநேரத்துல வந்து எடுத்துட்டு போய்டுவாங்க….”
“எங்க உன் வீட்டுக்காரரை?…”
“இப்பதான் வீட்டுக்கு போய் அத்தை, மாமாவை பார்த்துட்டு வர்றேன்னு கிளம்பினார். துளசியும் தூங்கறா. வேற எதுவும் வேணுமா?…” என்றாள் அமலா.
“ம்ஹூம். வேண்டாம்….” என தோளை குலுக்கிக்கொண்டவன் மாடிக்கு சென்றான்.
“என்னடி ஒன்னும் சொல்லாம போய்ட்டான்?…” என அங்கை கேட்க,
“பேசாம இருங்க. அவன் என்ன பன்றானோ பண்ணட்டும்…”
“அதுக்கு புள்ளைத்தாச்சி பொண்ணை அலைக்கழிக்கலாமா? இவன் எனக்கென்ன போச்சுன்னு வேலையை பார்த்துட்டு கிளம்பிருவான். நினைச்ச நேரம் போக வரன்னு இருப்பான். அவ அங்க ஒத்தையில என்ன செய்வா?…” என்ற அங்கை,
“இந்த நேரம் தான் உறவுகளோட இருக்க மனசுக்கு தோணும். அதெல்லாம் உங்களுக்கு என்ன புரியும்?…” என பெருமூச்சு விட்டவர்,
“நான்லாம் உங்க ரெண்டையும் ஒத்தையில பெத்து வளர்த்தேன். நாள், கிழமை, விசேஷம்ன்னு கூட இவரை விட்டுட்டு போக முடியலை. என் மாமியார் அதுக்கு மேல. புருஷனை விட்டுட்டு அம்மா வீடுன்னு சுத்தினா குடும்பம் உருப்பட்ட மாதிரின்னு என்னை உங்கப்பாவை விட்டு நகரவிடலை…”