“அதுதான் உன் மருமகளை இப்படி தாங்குற போல? அதிருக்கட்டும், அப்பா உன்னைவிட்டு இருக்காம கூடவே கூட்டிட்டு போயிருக்கார். இது புரியாம….” அமலா கேலியாய் கேட்க,
“கிழிச்சார். ஒரு நாளைக்கு நாலே வார்த்தை. சமையல் ஆச்சா? பிள்ளைங்க படிச்சாங்களா? பசங்க தூங்கியாச்சா? செலவுக்கு பணம் வேணுமா? அவ்வளோ தான். நானா பேசினா எதாச்சும் பறக்கும். வாய திறந்து ஒத்த மனுஷ, மக்கட்ட பேசி, சிரிக்க முடிஞ்சதா? அந்த பிழைப்புக்கு…” என்ற அங்கை,
“இப்படித்தான் இருக்கனும், இப்படித்தான் வளரனும்ன்னு சொல்லி சொல்லியே உன் தம்பியையும் இறுக்கமா வளர்த்துட்டார். கல்யாணம் முடிஞ்சதுமாச்சும் எப்படி இருக்கான்னு பார்த்தா நம்ம முன்னாடியே அவ்வளோ பேசறான்….” என்று கண்ணை துடைத்துக்கொண்டார் அங்கை.
அவர் மகளிடம் புலம்பிக்கொண்டிருக்க மாடிக்கு சென்றவன் கையில் இரண்டு ட்ராலிகள்.
“என்னடி பொட்டியோட வர்றான் இவன்?…” என கன்னத்தில் கை வைத்து அங்கை பார்க்க,
“என்ன தர்ஷன்? என்ன இந்தநேரமே? எதுவும் கால் வந்திருச்சா?…” என அமலா கேட்க,
“இந்த ரூம்ல இருக்கற அவந்தி திங்ஸ் எல்லாம் எடு…” என்று பெட்டியை கட்டிலில் வைத்து பிரித்து தனக்கு தெரிந்தவற்றை எடுத்து வைக்க,
“நிஜமாவே கூட்டிட்டு போறியாப்பா?…” என்றார் அங்கை.
“பதில் சொன்னேன்னு நினைக்கறேன்…” என அவன் திரும்பி பார்த்ததில் அங்கையின் வாய் பசை போட்டதை போல ஒட்டிக்கொண்டது.
கடகடவென்று எல்லாம் பெட்டிக்குள் அடைய எடுத்து சென்று தன் காரில் வைத்துவிட்டு வந்தான் ப்ரியதர்ஷன்.
அதற்குள் மாலையாகியிருந்தது. அதன்பின் தான் இங்கிருந்தே திருச்சியில் நடப்பவற்றை கவனிக்க ஆரம்பித்தான்.
————————————————–
உடையை மாற்றிவிட்டு தலையில் இருந்த பூக்களை எல்லாம் எடுத்து, அலங்காரத்தை கலைத்துவிட்டு இலகுவாய் முழங்கால் தொடும் கவுனில் தளர்வாய் அமர்ந்திருந்தாள் அவந்திகா.
“அப்பறம் புது பொண்ணு, முகத்துல சட்டுன்னு கல்யாண களை வந்திருச்சு போல?…” என்று கேலி பேச,
“அப்பட்டமாவா தெரியுது?…”என்றவள்,
“உங்களை பார்க்கனும்ன்னு தான் வந்தேன். அம்மாவும் கூட வந்திருக்காங்க. அத்தையோட வெளில பேசிட்டிருக்காங்க…” என்றாள்.
“உஷார். நான் கேட்க முன்னவே சொல்லிட்ட நீ…”
“ஆமா, இனிமே தனியா எங்கயும் போக கூடாது. இதை செய்யாத, அது பண்ணாதன்னு வந்ததுல இருந்து ஓவர் ரிஸ்ட்ரிக்ஷன். காதெல்லாம் வலி. அதான் அக்காவுக்கு கூப்பிட்டு அம்மாவை தாஜா பண்ணி இங்க வந்தாச்சு…” என்று புன்னகைக்க, சிலமாதங்களுக்கு முன் தானும் இப்படி தானே என்று தோன்றியது அவந்திகாவிற்கு.
“அதுக்குள்ள மாப்பிள்ளை வீட்டுக்கு சொல்லியாச்சா?…”
“ஆமா, அவந்தி க்கா. அவங்க வீட்டுல இருந்தும் தான் பொருத்தம் பார்க்க அங்க வந்திருந்தாங்க. அப்படியே பேசி ஓகே ஆகிடுச்சு. அடுத்தவாரம் பொண்ணு பார்க்க வர்றாங்க…” என்று சரிகா சொல்லவும் அவந்திகா முகத்தில் புன்னகை விரிந்தது அவளின் வெட்கம் பார்த்து.
“அதை சொல்லனும்ன்னு வந்தா நீங்க கிளம்பறீங்களாமே, இப்ப தான் அக்கா வெளில சொன்னா. அப்போ நீங்க அன்னைக்கு வர முடியாதா?…” என்றவள்,
“எவ்வளோ ஜாலியா இருந்துச்சு தெரியுமா, அன்னைக்கு நீங்களும் வந்திருவீங்க. நல்லா என்ஜாய் பண்ணலாம்னு நினைச்சேன். ப்ச், போங்க க்கா. மிஸ் பண்ணுவேன்…” என்று உடனே சோகம் போல் சொல்ல,
“அவ புருஷன் கூப்பிடும்போது போகாம இருக்க முடியுமா என்ன?…” என்று வந்த தரணி,
“அவந்தி நெத்தில பொட்டை காணுமே? முகம் கழுவும் போது விழுந்துடுச்சா?…” என்றாள்.
“ஹேண்ட்பேக் இங்க தான வச்சேன்…” என்று கண்களை சுழற்ற,
“நீ உக்கார். நான் எடுத்து தர்றேன். லக்கேஜோட முன்னாடியே இருக்கு போல. காலையில புறப்படும்போது அப்படியே எடுத்துட்டு போகலாம்ன்னு அத்தை அங்கயே வைக்க சொன்னாங்க…” என்று சொல்லி வெளியேறினாள் தரணி.
“ஹ்ம்ம், அப்பறம் அவந்தி க்கா, கல்யாணம் முடிஞ்சு முதல் முதல்ல தனியா போறீங்க. அதுவும் கெத்து ஆபீஸர் கூட. செம்ம ஜாலி இல்ல?…” என்று கேட்க,
“ஆமாமா, ரொம்ப ஜாலி…” என்றவளுக்கு தனது ஆதங்கத்தை சரிகாவிடம் காண்பிக்க விருப்பமில்லை.
இப்போதுதான் திருமணம் ஆகவிருக்கிறது. ஆரம்பிக்கும் முன்னரே இதனை சொல்லி அவளுக்கு அது மனதில் வேறுவிதமாய் பதிந்தால்?
அதற்காகவே எதுவும் சொல்லவில்லை. சிரித்து சமாளித்துக்கொண்டாள் அவந்திகா.
“அம்மாப்பாவை, இந்த ஊரை விட்டு போக கஷ்டம். அதானே? எனக்கு புரியுது. இதுதான் காரணம். இல்லன்னா ஹஸ்பண்ட் கூட போக கசக்குமா என்ன?…” என்றவள்,
“நான் எல்லாம் லைஃபை நல்லா ரெண்டுவருஷமாவது என்ஜாய் பண்ணிட்டு தான் குழந்தை பெத்துப்பேன்…” என்றாள் சரிகா.
“ஆமாமா, நீ கனவு கண்டுட்டே இரு. இப்ப போய் அம்மாவை பாரு. கூப்பிடறாங்க…” என்று அனுப்ப பார்த்த தரணி,
“பிடி அவந்தி. பொட்டு எடுத்து வை. முகமே டல்லா இருக்கு…” என்று சொல்லி ஹேண்ட்பேக் தந்துவிட்டு அமர்ந்துகொண்டவள் தங்கையிடம் பேச,
இருவரும் பேசிக்கொண்டிருக்க அவந்திகா தன் கைப்பையில் இருந்து ஒவ்வொன்றாய் எடுத்தாள்.
ஸ்டிக்கர் பொட்டு பாக்கெட்டை தேடி எடுத்தவள் அதனை நெற்றியில் வைக்க, பொட்டுடன் கணவனின் நினைவும் நெஞ்சத்தில் ஒட்டிக்கொண்டது.
கண்கள் இரண்டும் தன் நெற்றிக்கிடையில் வட்டமாய் அமர்ந்திருந்த பொட்டின் மீது பதிந்திருக்க மெல்ல மெல்ல விரல்கள் அடுத்த தேடலை கைப்பையினுள் தொடங்கியது.
தேடியது கிடைக்காமல் ஒவ்வொன்றாய் எடுத்து வைத்தவள் கைப்பையே காலியாகிவிடும் போல் அனைத்தையுமே கட்டிலில் கொட்ட அவள் தேடிய கோபுர பொட்டுடன், ப்ரியதர்ஷனின் புகைப்படமும் சேர்ந்தே வந்து விழுந்தது.
“என்ன அவந்தி, எல்லாத்தையும் எடுத்து வச்சிருக்க?…” என தாரணி கேட்க,
“ஹேய் அவந்தி க்கா, அண்ணா போட்டோவா?…” என்று அதனை பட்டென்று எடுத்துவிட்டாள் சரிகா.
“செம்ம ஹேண்ட்சம்ல அண்ணா. இது அவங்க ட்ரெய்னிங் போறதுக்கு முன்னாடி எடுத்ததோ?…” என்று அந்த புகைப்படத்தை பார்த்து புகழ, பதிலின்றி அவந்திகா தன் நெற்றியில் ஒட்டியிருந்த வட்ட பொட்டினை எடுத்துவிட்டு கோபுரப்பொட்டை ஒட்ட தரணியின் முகத்தில் சிறு புன்னகை.
“கொஞ்சநாளா நீ இதை வைக்கிறதில்லைல. நான் கூட கவனிக்காம விட்டுட்டேன். ஏன் அவந்தி?…” என்றாள் தரணி.
“தோணலை அண்ணி. கல்யாணம் முடிஞ்சு இங்க இருந்து போறப்போ அங்க எடுத்துட்டு போன எல்லாம் தீர்ந்ததும் அத்தை ரவுண்ட் ஸ்டிக்கர் தான் வாங்கி தந்தாங்க. அதுதான் என் முகத்துக்கு நல்லா இருக்குன்னு…” என மெல்லிய குரலில் அவந்திகா கூற,
“மாமியார் சொல்லவும் மாத்திக்கிட்ட…” என்ற தாரணி,
“பார்த்து கத்துக்கோ சரிகா. இங்க இருந்தவரைக்கும் அவந்தியோட ஸ்டிக்கர் பொட்டு கலெக்ஷன் அவ்வளோ இருக்கும். கோபுரத்துல டிஸைன், டிஸைனா வாங்கி வச்சிருப்பா. பார்க்க ஒன்னொன்னும் அழகா இருக்கும். அப்படி தேடி தேடி வாங்கறவ இப்ப மாமியார் சொல்லவும் மெரூன் ரவுண்ட் ஸ்டிக்கர் மட்டும் வைக்க ஆரம்பிச்சிருக்கா…” என தன் தங்கையிடம் கேலி பேசினாள்.
“நான் என் புருஷன் சொன்னாலே கேட்கமாட்டேன். இதுல மாமியார் சொல்லனுமா? ஆளை விடுங்க…” என்ற சரிகா,
“நீங்க சொல்லுங்க அவந்தி க்கா. இந்த போட்டோ பார்த்ததும் உங்களுக்கு எப்படி இருந்துச்சு? பார்த்ததுமே பிடிச்சதா? என்ன சொன்னீங்க வீட்டுல?…” என்று ஆர்வமானாள்.
“சரிகா…” தரணி அதட்ட,
“ப்ச், போ க்கா, இதுக்கு முன்னாடி கேட்டா சின்ன பிள்ளைன்னு அதட்டி வச்சிருவீங்க. இப்ப எனக்கும் கல்யாணம். நானும் தெரிஞ்சுக்கனும் இல்ல…” என்ற சரிகா,
“நீங்க சொல்லுங்க அவந்தி க்கா. அப்படியே உங்க பொண்ணு பார்த்த விசேஷம் பத்தியும் சொல்லுங்க. நானும் எப்படி பேச என்னன்னு தெரிஞ்சுக்கறேன்…” என்று கேட்க தரணி குபீரென்று சிரிக்கவும், அவந்திகா பாவமாய் பார்க்கவும் சரிகாவிற்கு புரியவில்லை.
“சரிகா, இங்க வா…” என்று அவளின் தாய் அழைக்க,
“இந்தம்மாவை, ப்ச். இப்ப வர்றேன்….” என்று எழுந்து சென்றாள் சரிகா.
“ஏய், அந்த போட்டோவை குடுத்துட்டு போடி…” என தரணி வாங்கி அவந்திகாவிடம் தர, சரிகாவும் வெளியேறினாள்.