“ஓடிடுங்க. வெறுப்பேத்தாம…” என்ற அவந்திகா, அவனின் புகைப்படத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டு,
“இதுல இந்த சிரிப்புல தான் ஏமாந்துட்டேன்…” எனவும்,
“நீ போட்டோவோட பேசிட்டே இரு. நான் போய் என் வேலையை பார்க்கறேன்…” என தரணியும் எழுந்துகொள்ள,
“நாளைக்கு யார் யார் வர்றதுன்னு பேசியாச்சா அண்ணி?…” என்றாள் அவந்திகா.
“அதென்ன யார் யார்? அதுவும் இப்போ நீ கிளம்பும்போது பர்ஸ்ட் டைம் உனக்கு. யாரும் வராம எப்படி இருப்போம்? எல்லாரும் தான் வருவோம்…”
“அண்ணி…” என்றவளுக்கு கண்கள் கலங்க,
“ப்ச், இதென்ன சின்னபுள்ளை மாதிரி. கல்யாணம் முடிஞ்ச பத்துநாள்ல நீ கிளம்பியிருக்க வேண்டியது. இவ்வளோ நாள் தள்ளி தள்ளி இப்போ தான் முடியுது. சந்தோஷமா கிளம்பனும்….” என்றவள்,
“நீயா ஒரு இமேஜ் வச்சிட்டு அதை யோசிக்காம பிளாங் மைண்ட்செட்டோட புறப்படு. இதோ இப்போ கொஞ்சம்நேரம் முன்னாடி பார்த்தியே இந்த போட்டோவை. அதே ரசனையோட உன் வாழ்க்கையை பாரு. உனக்கு பிடிச்ச மாதிரியான வாழ்க்கை இருக்கலாம். இல்லைன்னாலும் இருக்கறதை உனக்கு பிடிச்சதா அக்சப்ட் பண்ணிக்கோ. அந்த அக்சப்ட் மட்டும் தான் வாழ்க்கையை ஜெயிக்க வைக்கும். வாழ வைக்கும்…” என்று சொல்லி வெளியேறினாள் தாரணி.
அவந்திகாவிற்கும் புரியத்தான் செய்தது. தரணி சொல்லியவற்றை எல்லாம் நினைத்தபடி மீண்டும் கைப்பையினுள் அனைத்தையும் எடுத்து வைத்தவள் கடைசியாய் அவள் முன்னிருந்த அவனின் புகைப்படத்தை உள்ளே வைக்க தோன்றாமல் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
அவள் முகத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் புன்னகை இலகுவாய் விரிய ஆரம்பித்தது.
புகைப்படத்தில் ப்ளூ ஷர்ட், ஜீன்ஸ் அணிந்திருந்த ப்ரியதர்ஷன் கைகள் பேண்ட் பாக்கெட்டினுள் இருக்க யாரிடமோ பேசி சிரித்தபடி இயல்பாய் நின்றிருந்தான்.
அவனறியாமல் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது பார்த்ததும் புரிந்தாலும் அத்தனை அழகாய் கண்டதுமே அவன் பால் அவளின் மனதை சுண்டி இழுத்துக்கொண்டான் அந்த புன்னகையில்.
அதனை பார்த்ததில் இருந்து பிடிக்காத நீல வண்ணம் கூட அவளின் பிடித்தத்தில் முதலாவதாக இடம் பெற்றதை அவன் அறிந்திருக்கவில்லை.
எத்தனை அழகாய், ஆசையாய் அவனை நேரில் பார்க்கும் கனவுடன் அவள் காத்திருக்க அதே ஷர்ட் வேறொரு நிறத்தில் இன் செய்யப்படாமல் வந்திருந்தவனை பார்த்து பார்த்து ரசித்ததெல்லாம் கனவு போலிருந்தது இப்போது.
அவளை பெண் பார்க்க வந்த அன்று அவள் அடித்த லூட்டிகள் சொல்லி மாளாது.
“அநியாயம் பன்றா உங்க தங்கச்சி. அத்தனை ட்ரெஸ் எடுத்து வச்சிருக்கா. இதுல மாப்பிள்ளை வரும்போது என்ன ட்ரெஸ் போட்டிருக்காரோ அந்த கலருக்கான சேரியை மாத்திடுவாளாம். அராஜகம்…” என சொல்லிய தரணி தன் மகனுக்கும் அவந்திகா அதையே செய்ய,
“இதுக்கு மாப்பிள்ளையே லாஸ்ட்ல வரலை, வீட்டுல மட்டும் தான் வர்றாங்கன்னு சொல்லனும். என்ன பண்ணுவன்னு பார்க்கறேன்…” என தரணி சொல்லவும்,
“இன்னைக்கு உங்க வாய்ல சானிடைசர் வச்சு நான் கிளீன் பண்ணலைன்னா பாருங்க…” என்று சுற்றி வர, அவளிடமிருந்து தப்பிக்க தரணி பட்டபாடுகள் ஏராளம்.
எந்த உடைக்கும் பொருத்தமாய் இருப்பதை போன்றான மேக்கப் செய்து தன்னை தயார் நிலையில் வைத்திருந்தாள்.
“ம்மா இது ஓகே வா? இந்த ஜ்வெல்ஸ் எல்லா சேரிக்கும் ஆப்ட்டா இருக்கும்ல….” என்றவள்,
“அண்ணி, பூவை இப்படி வைக்காம நான் சொல்ற மாதிரி வைங்க…” என்று தயாராகி இருந்தவள்,
“நீங்க எல்லாம் என்ன அண்ணி? இந்தநேரத்துக்கு அவங்களோட அக்கா கூட ப்ரெண்ட்ஷிப் பாண்ட் க்ரியேட் பண்ணியிருக்கலாம்ல. பண்ணிருந்தா அவங்ககிட்ட சும்மா கிளம்பியாச்சா, பேமிலி போட்டோ அனுப்புங்கன்னு கேட்டிருக்கலாம். நானும் இன்னும் ரிலாக்ஸா கிளம்பி இருப்பேன்…” என்று புலம்ப வைத்துவிட்டாள்.
“நானும் தான் எனக்கு பொண்ணு பார்க்க வர்றப்போ எதிர்பார்ப்போட இருந்தேன். ஆனா எதையாச்சும் காமிச்சிக்கிட்டேனா? அம்மாப்பா சொன்ன மாதிரி அமைதியா வந்துட்டு, போய்ட்டேன். எந்த பொண்ணையும் இப்படி பார்த்ததில்லை….” என கேலியாய் கூட சொல்லியாகிற்று.
“இதோ இப்போ நீங்க ஃபீல் பன்றீங்களே மிஸ் பண்ணிட்டோம்ன்னு. அதுமாதிரி பண்ணிட கூடாதுல. எனக்கு பிடிச்ச என் லைஃப். என்னோட டேஸ்ட்க்கு ஏத்தது மாதிரி மாப்பிள்ளை. அவங்க என்னை பர்ஸ்ட் டைம் பார்க்கும் போது நானும் பார்த்ததும் பிடிக்கிற மாதிரி இருக்கனும்ல அண்ணி…” என்றவள்,
“பர்ஸ்ட் இம்ப்ரெஷன் பெஸ்ட் அண்ணி. பாருங்க, போட்டோல எப்படி இருக்காங்கன்னு. சோஷியல் மீடியால கூட பெருசா போட்டோஸ் ரொம்ப இல்லை. இருந்தாலும் இப்ப இருக்கற யூனிபார்ம்ல இருக்காங்க. நேர்ல எப்படி வருவாங்கன்னு தெரியலை…” என்று பேசிக்கொண்டே இருந்தாள்.
கண்களில் கனவுகள் மின்ன அவளின் ஆசைகள் ஒவ்வொன்றையும் கேட்கையில் தரணிக்கு சிரிப்பு தான் வரும்.
“உன்கிட்ட இல்லாத கலர் ஷர்ட் போட்டிருந்தா என்ன பண்ணியிருப்ப?…” என்றதும்,
“மல்ட்டி கலர் சேரி இருக்கே? அந்த புடவை கட்டிப்பேன்…” என்று கொள்ளை புன்னகையோடு புருவம் உயர்த்த,
அவந்திகா நினைத்ததை போல வேறொரு நிறத்தில் தான் வந்து சேர்ந்தான் ப்ரியதர்ஷன்.
அவன் வந்ததை மாடியிலேயே பார்த்துவிட்டவள் அவன் அணிந்திருந்த நிறத்திலான புடவையை சட்டென எடுத்து மாற்றிவிட்டாள்.
“அண்ணி மடிப்புல ஸ்ட்ரெய்ட்னர் வச்சு அயர்ன் பண்ணி விடுங்க….” என்று கண்ணாடியை பார்த்தவளுக்கு தான் அழகாய் அவனுக்கு பொருத்தமாய் இருப்பதை போலிருக்க உள்ளுக்குள் ஜில்லென்ற உணர்வு.
“லைட் லாவெண்டர் கலர் கூட அவங்களுக்கு சூப்பர்ல. இந்த சேரியும் கலரும் எனக்கு ஓகே தானே?…” என்றவள்,
“லிப்ஸ்டிக் நியூட் ஷேட் மாத்திடறேன்…” என அவனுக்காகவே அவனுக்கானவளாய் தயாராய் அவன் முன்னே செல்வதற்கு இருந்தாள்.
“உன்னை கூட்டிட்டு வர சொன்னாங்க அவந்தி…” என்று தரணியும் அழைக்க வந்துவிட்டாள்.
அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்க தன்னை பார்த்ததும் அவன் என்னவிதமாய் மனதில் நினைப்பான் என்னும் எதிர்பார்ப்புடன் கூடத்திற்கு செல்ல அங்கே ப்ரியதர்ஷன் இல்லை.
ஒருநொடி அவனை தான் கண்டதெல்லாம் நிஜம் தானோ என்று தோன்றிவிட மனதிற்குள் சுணக்கம்.
“உக்காரும்மா…” என்று அங்கை அவளை அமர சொல்லி அவளுடன் பேசியபடி,
“ஒன்னு மறந்துட்டேன்…” என மீண்டும் வீட்டினுள் ஓடிய அவந்திகாவை தானும் பின் தொடர்ந்தவன் அங்கே பார்த்தது தனது புகைப்படத்தை எடுத்து கைப்பையினுள் அவள் வைத்துக்கொண்டிருந்ததை தான்.
“இப்போ போலாம்…” என்றவளின் கணவனுடனான அந்த பயணம் விடிகையில் திருச்சியில் உதயமாகியது.