தனது காரில் ப்ரியதர்ஷன் வர அதில் பின்னால் நன்றாக படுக்கும் விதமாய் படுக்கை செய்து அங்கே அவந்திகா உறங்க ஏற்பாடு செய்துவிட்டான்.
மற்றொரு வாகனத்தில் மற்ற அனைவரும் சேர்ந்து வர ஏற்பாடு செய்திருந்தான் அவன்.
“நாங்க எங்க கார்லயே வர்றோமே மாப்பிள்ளை…” என்று முகிலரசன் சொல்லியும்,
“இல்ல மாமா, அது சரிவராது. நானுமே என் காருக்கு ட்ரைவர் அரேஞ்ச் பண்ணியிருக்கேன். ரிட்டர்ன் வர்றப்போ ப்ளைட்ல வந்திடுங்க. இப்ப நான் ஏற்பாடு செஞ்சதுல வாங்க. இல்ல இன்னும் வசதியா வேற வண்டி வேணுமா?…” என்றதுமே,
“அதெல்லாம் வேண்டாம் மாப்பிள்ளை. இதுவே ஓகே. இருக்கட்டும்…” என்றுவிட்டான் ராகவ்.
அவந்திகாவிற்கு தனியாய் வரவேண்டுமே என்பது ஒருபுறமும், குடும்பத்தினரும் வருகையில் தனித்தனியாகவா செல்வது என்று இன்னொருபுறமும் மனதில் அழுத்தியது.
ஆனாலும் எதுவும் அவனை மீறி செய்துவிடமுடியாது. எல்லாவற்றிற்கு ஒரு காரணம் வைத்திருப்பான் என ஆயாசத்துடன் காரில் ஏறியதும் சாய்ந்துகொண்டாள் அவள்.
பின்பக்கம் அவந்திகா வந்ததுமே அவளுக்கு இடம் போதுகிறதா என அவளின் வசதிகளை எல்லாம் பார்த்தவன்,
“ஏதாவது வேணும்னா கேளு அவந்தி. படுக்க முடியலைன்னா கால் நீட்டி சாய்ஞ்சு உட்கார். உனக்கு தேவையான தண்ணி, ப்ரூட்ஸ் எல்லாம் என்கிட்ட இருக்கு. அடிக்கடி இதைவிட்டு இறங்க வேண்டாம். அவசரத்துக்கு வேணும்னா எனக்கு சொல்லு. வாஷ்ரூம் போய்க்கலாம்…” என வரிசையாய் சொல்லிவிட்டு பின்னிருந்த காரையும் பார்த்து கையசைத்து தானும் தன் காரில் ஏறிக்கொண்டான்.
“நான்…” என்றவருக்கு சட்டென வருகிறேன் என்று சொல்ல தோன்றவில்லை.
அவர் பார்த்துக்கொண்டே திகைத்து நின்ற விதத்தில் ப்ரியதர்ஷன் முகம் மாறிவிட,
“நீங்க யாரும் பார்த்துக்கனும், பார்த்துப்பீங்கன்னு ஒன்னும் நான் என் பொண்டாட்டியை கூட்டிட்டு போகலை. அதனால யாரோட ஹெல்ப்பும் தேவை இல்லை….” என்றான் அவன்.
“சரிப்பா, சரிப்பா…” என்று ஒதுங்கிக்கொண்டார்.
நிச்சயம் அவரால் அங்கே சென்று இருக்கமுடியும் என்று தோன்றவில்லை. ஒவ்வொன்றிற்கும் மீண்டும் மகனின் கட்டுப்பாட்டினுள் நிற்க வேண்டும்.
அதுவே அவரை மூச்சு முட்ட செய்யும் என்று அவனுடன் செல்வதை பற்றி நினைக்கவே இல்லை.
அவரை பற்றி மட்டுமே அவரின் யோசனை. இத்தனை வருடங்கள் ஒருவரின் கட்டுக்குள் இருந்தாகிற்று.
இனியும் அதே போல் இருக்க அவரால் முடியும் என்று தோன்றவில்லை என்பதனால் மகனின் வட்டத்திற்குள் இருக்க பிரியப்படவில்லை அங்கை.
“இப்ப இல்லைன்னாலும் எப்படியும் அம்மா வருவாங்க தான் தர்ஷன். நீ எதையும் நினைச்சுக்காத…” என்றாள் அமலா.
அவளுக்குமே தாயின் இந்த செயலும், பேச்சும் இப்போது எரிச்சலை தந்திருந்தது.
இத்தனை மாதங்கள் சூழ்நிலையால் அவந்திகா அங்கே தன் தம்பியுடன் செல்ல முடியவில்லை.
ஆனால் இப்போது அவள் செல்லுகையில் இந்தநேரத்தில் தான் அங்கையின் அருகாமை அவளுக்கும் தேவை. இதை புரிந்துகொள்ள மறுக்கிறாரே என்று கோபம்.
“நீ பார்க்காம உன் மகனையும், மருமகளையும் யார் பார்ப்பா? போய் இருக்கவேண்டியது தானேம்மா?…” என்று முதல்நாள் இரவு சொல்லியும்,
“நான் பார்க்கமாட்டேன்னு எப்போ சொன்னேன் அமலா? மகராசியா என் மருமகளுக்கு எல்லாமே நானே செய்வேன். அவ இங்க இருக்கட்டுமே? யார் வேண்டாம்ன்னு சொன்னா?…” என்று அதற்கொரு பதில் சொல்ல,
“பார்த்துக்கிட்டே இரு. உன் மகனும் இங்க ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வர போறான். நீ எங்க ஓடறன்னு பார்ப்போம்…” என்று கேலி செய்ய,
“அன்னைக்கு பார்ப்போம்…” என்று சொல்லிவிட்டார் அங்கை.
இப்போது ப்ரியதர்ஷன் காரில் ஏறி அமர்ந்ததும் வாகனம் கிளம்ப நளனும் அழைத்துவிட்டான் அவனுக்கு.
“புறப்பட்டாச்சா மச்சான்?…” என கேட்க,
“இப்ப தான் மூவாகறோம் மாப்பிள்ளை….” என்றவன்,
“வேற ஏதாவது?…” என்று கேட்க,
“இல்லை இல்லை. நீங்க போய்ட்டு சொல்லுங்க. பத்திரம்…” என்று சொல்லி வைத்துவிட்டான் நளன்.
பின்னால் இருந்த காரில் வந்துகொண்டிருந்தவர்களுக்கு கொஞ்சம் மன சங்கடமும் இருந்தது.
“எல்லாரும் சேர்ந்து போயிருந்தா அது எப்படி இருந்திருக்கும்? இப்ப பாருங்க, ஆளுக்கு ஒரு கார். என்னவோ போங்க…” என்றார் கலா.
“அவந்திக்கு வசதிப்படனுமே கலா. அதையும் பார்க்கனும்ல. ஒரே கார்லன்னா அவளால உக்கார்ந்தே வர முடியாது. விடு இப்ப என்ன?…” என்று முகிலரசன் கூற,
“ம்மா, இதுவுமே ஓகே தான். ஒரே வண்டின்னா ஆளாளுக்கு மூஞ்சியை பார்த்துட்டு வரனும். இல்லன்னா உன் மருமகன் பன்ற விசாரணைக்கு கை கட்டி பதில் சொல்லனும். புண்ணியத்துக்கு ப்ரீயா வர முடிஞ்சதே?…” என்றான் ராகவ்.
“ஏன்டா சொல்லமாட்ட? நீயும் உங்கப்பாவும் தான இந்த மாப்பிள்ளை தான் வேணும்ன்னு பார்த்தீங்க. உன் தங்கச்சிக்கு பிடிச்சதும் முடிச்சாலே ஆச்சுன்னு சொன்னீங்க…” ஆதங்கத்துடன் கலா சொல்ல,
“அதுல இப்ப என்ன குறை? அண்ணா நல்லவர் தானே?…” என்றாள் தரணி.
“குறைன்னு சொல்லலை தரணி. ஆனா இவன் பன்றதை பாரேன்? நான் கூட சொன்னேன், போலீஸ், அவங்க வேலை இதெல்லாம் பார்த்து யோசிச்சேன். இவங்க தான் என்னை சரிக்கட்டி முடிப்போம்ன்னு சொன்னது…” என்று சொல்லியவர்,
“என்னவோ கல்யாண வேலை ஆரம்பிச்சதுல இருந்து அவந்திக்கு அப்பப்ப முகமே வாடிரும். அதுவும் கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கு நடந்துச்சே?…” என சொல்லியவர் தலையை உலுக்கிக்கொண்டார்.
“இப்படியே அவந்திக்கிட்டையும் பேசுங்க. அவ்வளோ தான்…” என்ற தரணி,
“அன்னைக்கு நடந்ததுல எனக்கு எந்த தப்பும் தெரியலை. அண்ணா பண்ணினது சரிதான்….” என்றாள் தரணி.
“எஸ், எனக்கும் அதுதான் தோணுச்சு. அவந்தி ப்ரெண்ட்ஸ்னு தான் ஒன்னும் சொல்ல முடியலை. ரொம்ப சங்கடமா போய்ருச்சு….” என்றான் ராகவ்.
“இப்ப எதுக்கு இதெல்லாம்? பேசாம வாங்க…” என முகிலரசன் அதட்டவும், நிலவன் விழித்து அழவும் சரியாய் இருந்தது.
“அத்த, அத்த…” என்று சொல்லி அழ,
“இவன் வேற நேரம் காலம் இல்லாம பாசத்தை பொழிவான்….” என்று அதட்டிய தரணி,
“அத்தை ஊசி போட போயிருக்காடா. போனா உனக்கும் போட்டுடுவாங்க…” என்று மிரட்டவும் கொஞ்சம் அடங்கினான்.
“பாதி தூக்கத்துல எழுந்துட்டான்ல. அதான்…” என ராகவ் மகனை தன்னிடம் வாங்கி மடியில் போட்டுக்கொண்டே சொல்ல,
“ஹ்ம்ம், இவ்வளோ சீக்கிரம் நான் எதிர்பார்க்கவே இல்லை. நாலரைக்கு அலாரம் வச்சிருந்தேன். எழுந்து இட்லி ஊத்தி வச்சிட்டு, நைட் செஞ்ச தக்காளி தொக்கை அதுக்கு எடுத்துப்போம்ன்னு. எங்க முடிஞ்சது?…” மீண்டும் கலா புலம்பல்.
“ப்பா நான் வேணா முன்னாடி வரவா? நீங்க பின்னால வந்து படுத்துக்கோங்களேன்?….” ராகவ் கேட்க,
“அதெல்லாம் வேண்டாம். நான் பார்த்துக்கறேன். அப்பறமா நீ வா…” என்றுவிட்டார் முகிலரசன்.
“ம்க்கும், இனி திருச்சி போற வரைக்கும் முன் சீட்டை உனக்கு குடுத்துட்டு தான் மறுவேலை பார்ப்பார் உன் அப்பா. போடா…” என கலா சொல்ல,
“அதுவும் சரிதான்…” என்று ராகவ் சிரிக்க,
“ப்ச், கொஞ்சநேரம் சைலன்ட்டா வாங்க. இவன் வேற முழிச்சிட்டே இருக்கான்…” என தரணி சொல்லவும் அனைவரும் அமைதியாகினர்.
ப்ரியதர்ஷன் காரில் அவ்வப்போது பின்னால் திரும்பி மனைவியை பார்த்துக்கொண்டான்.
அத்தனை தூரம் பயணம். படுத்துக்கொண்டே மட்டும் செல்லமுடியாது. ஆனாலும் வம்படியாய் கூட்டிக்கொண்டு கிளம்பியிருந்தான்.
சாலையில் கடக்கும் வாகனங்களின் வெளிச்சம் காரினுள் ஊடுருவ அந்த வெளிச்சத்தில் மனைவியின் முகம் பார்த்தான்.
கன்னமெல்லாம் பொங்கி பூரிப்புடன் இருந்தது. நெற்றியில் இப்போது கோபுரப்பொட்டு.
பார்த்தவன் இதழ்கள் மெலிதாய் வளைய, விழிகள் அவளின் முகம் தாண்டி கீழ் இறங்கியது.
போர்வையை போர்த்தாமல் சுருண்டு படுத்திருந்தாள் அவந்திகா. அதனை பார்த்துவிட்டு ஏசியை குறைத்து வைத்தவன் முன்னிருந்தே போர்வையை விரித்து அவள் மேல் போர்த்த சட்டென்று விழித்துவிட்டாள்.
அவளின் வார்த்தையில் அவனின் இதம் மறைந்து சட்டென்று முறைப்பு. கூடவே கடுமை.
ஒன்றும் சொல்லாமல் முன்னால் திரும்பிக்கொள்ள அவந்திகாவிற்கு ஒன்றும் புரியவில்லை.
எதுவும் சொல்லாமல் தலை சாய்ந்தபடி அவனின் பக்கவாட்டு தோற்றத்தை பார்த்துக்கொண்டே இருக்க, அவளின் விழி தீண்டலில் மனம் குறுகுறுக்க மீண்டும் மனைவியின் முகம் பார்த்தான் ப்ரியதர்ஷன்.
அவன் திரும்பியதுமே சட்டென கண்களை மூடிக்கொண்டவள் ஓரிரு நொடிகள் சென்று லேசாய் ஒற்றை கண்ணை திறந்து பார்க்க இப்போதும் அவன் பார்த்துக்கொண்டு தான் இருந்தான்.
“என்ன? என்ன வேணும்?…” என்னும் அதட்டல் வேறு.
“ம்ஹூம்…” என்றதும்,
“அன்டைம்ல எழுந்துட்ட. தூங்கு….” என அவன் சொல்லவும் சட்டென லேசாய் அசைந்து படுத்து போர்வையை நன்றாக மூடிக்கொண்டாள் அவந்திகா.
அக்கறை தான். சொல்லும் விதம் தான் கடுமை கலந்து இருக்கிறது என்று புரிந்தாலும் மனதோரம் முந்தைய நிகழ்வுகளில் உண்டான அச்சம் மட்டும் குறையவே இல்லை.
அதுவும் தன் திருமணத்தின் பின் இன்றளவும் தன் தோழிகள் அவளிடம் பழகுவதையே நிறுத்தியிருந்தனர்.
கண்களை மூடியிருந்தவள் மனதிற்குள் திருமணமும், அதற்கு முன்னுமான நிகழ்வுகள் வலம் வர, அதனை தவிர்க்க நினைத்தாலும் முடியவில்லை.
பெண் பார்த்துவிட்டு சென்றதில் இருந்து ப்ரியதர்ஷன் தன்னிடம் பேசியதை நினைத்து தரணியிடம் புலம்பி தள்ளிவிட்டாள் அவந்திகா.
“பட்டுன்னு கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி ஆகிடுச்சு அண்ணி. ஒருமாதிரி அசிங்கமா போச்சு தெரியுமா?…” என்று புலம்ப,
“சரி விடு அவருக்கு என்ன வேலையோ? பார்த்த தான வந்ததும் போன் வந்து நீ வெளில வரும்போது கூட அவரால இருக்க முடியலை…”