“இருக்கலாம் அண்ணி. ஆனாலும் கொஞ்சமும் என்னை கவனிச்ச மாதிரியே இல்லை. இதுக்கா நான் இப்படி பார்த்து பார்த்து ரெடியானேன்?…” என்றவளுக்கு அழுகையே வரும்போலானது.
எத்தனை ஆசையாய் இவன் தான் என்று முடிவெடுத்து பெற்றோர் காண்பித்திருக்க அவனிடம் தான் கொண்ட எதிர்பார்ப்பு பொய்த்து போனதில் மனமெல்லாம் குமைச்சல்.
மனதோரம் அவனுக்கு தன்னை பிடிக்கிறதா இல்லையா என்னும் கேள்வி வேறு.
“பிடிக்காமலா பொண்ணு பார்க்க வந்திருப்பாங்க? என்ன அவந்தி? நாம ஒன்னும் பொண்ணு பார்க்க வர சொல்லிட்டு ஜாதகம் பார்க்கலை. ரெண்டுபேரோட போட்டோவும் குடுத்தாச்சு. ஜாதகம் எல்லாம் பொருந்தி வந்து கல்யாணம் எல்லாம் பேசி முடிவான பின்னாடி சம்பிரதாயத்துக்கு பார்க்க வந்திருக்காங்க…” என்றாள் தரணி.
“அட போங்க அண்ணி…” என தரணி என்ன சொன்னாலும் அவள் மனம் சமாதானம் ஆகவில்லை.
“இப்ப என்ன? ஒரு கால் பண்ணி பேசு. உன் அண்ணன்கிட்ட நம்பர் இருக்கு…” என்று சொல்ல,
“நிஜமாவே பேசவா? எனக்கு ஒருமாதிரியா இருக்கு அண்ணி…”
“என்னவாம்? வெட்கமா?…”
“ம்க்கும், எனக்கே என்னை கண்டுக்காம போய்ட்டாங்கன்னு அவமானமா போச்சு. இதுல வெட்கம் வேறையா? அட போங்க அண்ணி…” என்று நொந்துகொள்ள,
“அடடா, அதை விட்டு நீ வெளில வா…” என தரணி கூற,
“ஹ்ம்ம், நீங்க சொல்றதும் சரிதான் அண்ணி. ஒருவேளை அவங்களுக்கு என்ன ப்ரஷரோ?…” என்றவள்,
“என் ப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லியிருந்தேன். பொண்ணு பார்க்க வரும்போது ரெண்டுபேரும் செல்பி எடுத்து போடறோம்ன்னு. மாப்பிள்ளை யாருன்னு சொல்லாம சொல்லியிருந்தேன். பிக்சர் பார்த்துட்டு ஷாக்காகட்டும்ன்னு. இப்ப எனக்கே ஷாக். எல்லாரும் கேட்பாங்களே?…”
இன்னும் குறையாத தலையில் கைவைத்து கவலையுடன் அமர்ந்துவிட்டாள் அவந்திகா.
“நான் போய் உன் அண்ணாக்கிட்ட நம்பர் வாங்கிட்டு வர்றேன்…” என்று சொல்லி எழுந்து செல்ல அவந்திகா சோர்ந்து அமர்ந்துவிட்டாள்.
தரணி நம்பர் வாங்கிவந்து தந்துமே இரண்டு நாட்களுக்கு பேசவே தோன்றவில்லை அவளுக்கு.
எங்கே தான் பேசியும் அவன் இப்படி பட்டென்று தன்னை அலட்சியம் செய்துவிட்டால் தாங்க முடியும் என்று தோன்றவில்லை.
“இன்னும் பேசலையா அவந்தி?…” என தரணி கேட்க,
“இல்லையே, நான் அவங்க நம்பர் வாங்கி இருக்கற மாதிரி தானே அவங்களும் என் நம்பர் வாங்கியிருப்பாங்க? பார்ப்போம் அண்ணி. கூப்பிடறாங்களான்னு…” என்றாள் அவந்திகா.
ஒருவாரமாகியும் அவனிடமிருந்து அழைப்பு என்று எதுவும் வரவில்லை. அங்கை, அமலா, துளசி இவர்கள் தான் மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
அவர்களுமே ப்ரியனிடம் பேசினாயா இல்லையா என அதனை பற்றி எதையும் கேட்டுக்கொள்ளவில்லை.
பொறுமையாய் இருந்து பார்த்தவளுக்கு தானே அழைத்துவிடுவோம் என்று தோன்ற அவனின் எண்ணிற்கு அழைப்பு விடுத்து காத்திருந்தாள் அவந்திகா.
முதல் அழைப்பு செல்ல ஆரம்பிக்கவுமே இதயமெல்லாம் தடதடக்கும் ஓசை அத்தனை சப்தமாய் கேட்டது.
அவன் தன் அழைப்பை ஏற்கும் முன் இங்கே மீண்டும் அவந்திகா அத்தனை ஒத்திகை பார்த்துவிட்டாள் எப்படி பேச ஆரம்பிக்கவேண்டும் என்று.
ஒருவேளை எடுக்காமலே போய்விட்டால் என்றும் நினைக்க அழைப்பு நிற்கும் தருவாயில் அவனின் குரல்.
“அவன தலைகீழா கட்டி தொங்கவிடுங்க ஏட்டையா. வந்து பின்னாடி இழுக்குற இழுப்புலயே சாவட்டும்…” என்று அவந்திகா இணைப்பில் இருக்கையில் இத்தனை பேச, குப்பென்று வியர்த்து வெடவெட என்று நடுங்கி போனாள் அவந்திகா.
அவனின் அந்த கோபத்தை, அந்த குரலை தான் பார்த்த புகைப்படத்துடன் ஒப்பிட்டு பார்க்கவே முடியவில்லை.
போலீஸ் தான் என்று தெரிந்திருந்தாலும் என்னவோ அந்த கோபம் அவளை பலமாய் பாதிக்க பயத்தில் அழைப்பை துண்டித்துவிட்டாள்.
இன்னும் உடலில் நடுக்கம் மிச்சமிருக்க கால்களை கூட்டி கைகளினால் கட்டிக்கொண்டவள் கண்ணை மூடி காலில் முகம் புதைத்தாள்.
பத்துநிமிடம் கூட இருக்காது. அதற்குள் அவந்திகாவின் கைபேசிக்கு அழைப்பு. ப்ரியதர்ஷன் தான் அழைத்திருந்தான்.
சந்தோஷத்தில் குதூகலிப்பதற்கு பதில் உள்ளுக்குள் பரவும் நடுக்கத்தை அவளால் மறைக்க முடியவில்லை.
எடுப்பதா வேண்டாமா என்னும் யோசனை வேறு இடையிட அவனின் மிரட்டல் குரல்.
பதட்டமாய் கைப்பேசியை எடுத்துவிட்டாள் அவந்திகா. எங்கே தான் எடுக்காவிட்டால் அதற்கு எதுவும் பேசிவிடுவானோ என்று.
“ஹல்லோ…” என சாதாரணம் போல பேச நினைக்க,
“கால் பண்ணியிருந்தியே அவந்திகா. என்ன விஷயம்?…” என்றான் அவன்.
என்ன சொல்ல முடியும்? அவன் குரலை தாண்டி அங்கே யாரோ பெரிதாய் வலியில் அலறும் குரல்.
‘அக்யூஸ்ட்ட வேற எப்படி ட்ரீட் பண்ணுவாங்களாம்? லூஸா நீ?’ என அவளின் மனசாட்சியே அவளை சாட, இணைப்பில் அவளுடன் இருந்தவன் பொறுமை பறந்தது.
“ப்ச், அவந்திகா. கேட்டா பதில் சொல்ல தெரியாதா? எனக்கு வேலை இருக்கு….”என சற்றே கடுகடுத்து பதில்.
“இல்லல்ல, சும்மா…” என்று அவனின் கோபத்தில் நா உலர பதில் கூறினாள்.
“விஷயம் இருந்தா மட்டும் கால் பண்ணனும். சும்மா பேச எனக்கு டைம் இல்லை. காட் இட்…” என்றான் ப்ரியதர்ஷன்.
அவனை பொறுத்தவரை அவன் பேசியது அதிகபட்ச தன்மையான குரலில். ஆனால் அவந்திகாவிற்கு அதுவே உட்சபட்ச கோபம் போலிருந்தது.
“ஹ்ம்ம், ஸாரி…” என்று சொல்லி வைத்துவிட்டாள்.
இனி அவனாக அழைத்தாலும் பேசுவதாய் இல்லை என்ற முடிவிற்கே வந்தவளுக்கு தன் எதிர்காலம் குறித்தான பயம் பெரிதாய் பிடித்துக்கொண்டது.
அவனை பிடிக்கும். அவனை மட்டுமே அத்தனை பிடிக்கும். ஆனால் இந்தவகையான அவனின் கோபமும், குரலும் சுத்தமாய் அவளால் ஏற்க முடியவில்லை.
தங்களுடைய வீட்டில் யாரும் குரல் உயர்த்தி கூட கடிந்து பேசியதில்லை. அப்படியிருக்க மென்மையாகவே வளர்ந்தவளுக்கு, வளர்க்கப்பட்டவளுக்கு இவை எல்லாம் ஜீரணிக்க முடியாததாக இருந்தது.
‘போலீஸ் வேலைன்னா என்ன வொய்ட் காலர் ஜாப் மாதிரியா? அன்டர்ஸ்டேன்ட் அவந்தி’ என தன்னை தானே சமாதானமும் செய்ய முற்பட்டாலும் தரணியிடம் சொல்ல மறுக்கவில்லை.
“அவர் ஏதாவது விசாரணைல இருந்திருப்பார். நீ கூப்பிட்டிருக்க. இது ஒரு விஷயமா அவந்தி?…” என்றாள் அவள்.
“பயமா இருக்கு அண்ணி. அவங்களுக்கு ரொம்ப கோபம் வருது. சும்மா பேச கூப்பிட்டேன்னு சொல்ல கூட பயமா இருக்கு….” என்றாள் மனதில் மூண்ட கலவரத்துடன்.
தரணியின் குரலை கேட்டவள் சரி சரி என தலையசைத்தாலும் திருமணத்திற்கு நாள் நெருங்க நெருங்க அத்தனை பயம்.
அந்தநேரங்களில் எல்லாம் அவள் ப்ரியதர்ஷன் புகைப்படத்தை எடுத்துவைத்துக்கொண்டு அமர்ந்துவிடுவாள்.
வலி தீர்க்கும் நிவாரணி போல அவளின் பயம் போக்கும் மருந்தாய் ப்ரியதர்ஷனின் புன்னகை முகம்.
திருமணத்திற்கான வேலைகள் ஜரூராக நடந்துகொண்டிருக்க அடுத்ததாய் முகூர்த்தப்பட்டு எடுக்கும் நிகழ்வு.
சுத்தமாய் ப்ரியதர்ஷன் வரவேண்டும் என்னும் எண்ணம் அவளிடம் இல்லவே இல்லை.
ஆனால் வந்து நின்றான் ப்ரியதர்ஷன். அவனின் வருகையை எதிர்பார்க்கவே இல்லை அவந்திகா.
“இங்க டிபார்ட்மென்ட் வேலையா வந்தேன். அம்மாவும் வந்திருக்கிறதா சொன்னாங்க. அதான் பார்த்துட்டு போகலாமேன்னு வந்தேன்…” என முகிலரசனிடம் சொல்லியவன் அவந்திகாவை பார்த்து தலையசைத்தான்.
சிரித்தானா இல்லையா என்று கூட தெரியாத அளவிற்கு அவள் அவனின் முகம் பார்க்கவே தயங்கி நின்றாள்.
“எல்லாம் எடுத்தாச்சா? முடிஞ்சதா?…”என்று கேட்க,
“மத்த பட்டு சேலைங்க எடுத்தாச்சு மாப்பிள்ளை. உங்களுக்கும், அவந்திக்கும் முகூர்த்த துணி எடுக்கனும். வாங்க…” என்று சொல்லி ராகவ் அழைத்து செல்ல அங்கே அதற்குமேல் அவந்திகா பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடப்பார்க்கும் அளவிற்கு செய்துவிட்டான்.
“சத்தியமா இப்படியெல்லாம் உங்க கல்யாணத்துல நாங்க எடுக்கவே இல்லை அண்ணி. இதென்ன எந்த சேரி எடுத்தாலும் பார்த்துட்டு இது சரியில்லை, அது சரியில்லைன்னு சொல்றாங்க…” என்றவள்,
“ரொம்ப பிடிச்சு ஒன்னு எடுத்தேன். நூல் பிசுறு தட்டுதுன்னு எல்லாம் ரிஜெக்ட் பன்றாங்க. அந்த புடவை எவ்வளோ அழகு தெரியுமா?…” என்றாள் வருத்தமாய்.
“அவந்தி, இப்படி முகத்தை வச்சுக்காத. ப்ளீஸ் நார்மலா இரு…” என தரணி அவளை இலகுவாக்க படாதபாடு பட்டுவிட்டாள்.
“புடவை பொண்ணுக்கு பிடிச்ச மாதிரி வேணும் தானே? அவ எடுத்துக்கட்டுமே தர்ஷன்…” என அமலா சொல்ல,
“பிடிச்சா மட்டும் போதுமா? கல்யாணத்துக்கு எடுக்கறது. இந்தமாதிரி சின்ன சின்ன அட்ஜஸ்ட்மெண்ட் எல்லாம் சரிவராது…” என்றான் ப்ரியதர்ஷன்.
“அது முகூர்த்த புடவை இல்லையே? கல்யாணம் முடிஞ்சு நம்ம வீட்டுக்கு வரும்போது கட்டிக்க எடுக்கறது…” என்று அங்கை சொல்ல,
“அதுவும் முக்கியம் இல்லையா? சாதாரணமா கட்டறதா இருந்தாலும் காசு குடுத்து தானே எடுக்கறீங்க? எதுவானாலும் பிசிறு இருந்தா டேமேஜ் தான். அதுக்குன்னு அந்த காசை குறைச்சிட்டா விற்பனை செய்யறாங்க…” என்றவன்,
“இதுதான் நீங்க கஸ்டமர்ஸ கவனிக்கிறதா? போலீஸ்க்காரன் என்கிட்டையே டேமேஜ் பீஸ் விற்க பார்க்கற நீ?…” என்று துப்பாக்கி முனையில் நிறுத்தாத குறையாய் கேள்விகளை எழுப்ப அவர்கள் கவிழ்ந்தேவிட்டனர்.