அத்தனை மன்னிப்பு. அவ்வளவு கெஞ்சல். தெரியாமல் வந்துவிட்டது என்று கேட்டு வேறு காண்பித்தனர்.
“பார்த்தியா, அண்ணா பேச போய் சரியா போச்சு. இல்லைன்னா?…” என்று தரணி பெருமை பொங்க பார்க்க,
“மெச்சிக்கோங்க. அது ஒன்னும் டேமேஜ் புடவை இல்லை. த்ரெட் மிஸ்மேட்ச். திரண்டு நிக்குது. அவ்வளோ தான். இதுக்கு போய். அநியாயம் அண்ணி…” என்றாள் அவந்திகா.
“எதுவோ ஒன்னு. ஆனா அண்ணா பேசவும் எப்படி எந்த சின்ன பிசிறலும் இல்லாம புடவை கொண்டுவர முடிஞ்சது?…” என்றாள் அவள்.
“ஒரு புடவை கூட பார்த்து எடுக்கமாட்டியா? டிஸைன் & கலர் பிடிச்சா போதும். அவ்வளோ தான். இல்ல?…” என்று போகிறபோக்கில் அவந்திகாவிற்கு கொட்டு ஒன்று வைத்துவிட்டு சென்றான் ப்ரியதர்ஷன்.
“இதெல்லாம் அடுக்கவே அடுக்காது. என்னவோ எனக்கு எதுவுமே தெரியாத மாதிரி என்ன அண்ணி இதெல்லாம்?…” என்றவளுக்கு இன்னுமே எதிர்காலத்தின் மீதான பயம் பெரிதானது.
அதன்பின் இரண்டொருமுறை ப்ரியதர்ஷன் அழைப்பு விடுத்திருந்தான் அவந்திகாவிற்கு. எண்ணி இரண்டே வார்த்தைகள்.
“இன்விடேஷன் உன் ப்ரெண்ட்ஸ் சர்க்கிளுக்கு தனியா பிரிண்ட் பண்ணனுமா?…” என்று கேட்க,
“நான் அப்பாக்கிட்ட சொல்லிட்டேன்…” என்றாள்.
“ஓகே…” என வைத்தாகிற்று.
இன்னொருமுறை அழைத்து இன்னார் இன்னார் வருவார்கள் என்றும் எப்படி பேசவேண்டும் என்றும் திருமணத்திற்கு இருநாட்களுக்கு முன் பாடம் எடுத்துவிட்டு வைத்தாகிற்று.
அவந்திகாவிற்கு பெரும் சந்தேகமே வந்துவிட்டது. இது திருமணம் தானா என்ன என்று.
வீட்டிலும் முதலிலேயே சொல்லிவிட்டனர், கமிஷனரில் இருந்து இன்னும் ப்ரியதர்ஷன் பக்க சிறப்பு விருந்தினர்கள் வருகை இருக்கும், தோழிகளை எதுவும் கலாட்டா செய்துவிடாமல் இருக்க சொல்லும்படி.
இப்படியாக முழுமையாக சந்தோஷம் இன்றி ஒரு திருமணம். அப்படியும் திருமணத்தின் பின் எப்படியோ என்று பயமிருந்தாலும், பார்த்துக்கொள்ளலாம் என்று கொஞ்சம் தைரியத்துடன் இருந்தாள் அவந்திகா.
விமரிசையாகவே நடந்தது திருமணம். என்ன ஒன்று சுற்றிலும் காவல்த்துறை கண்காணிப்பில் நடந்ததை போலவே ஒரு பிரம்மை.
ப்ரியதர்ஷனை சேர்ந்தோர் அநேகம்பேர் காக்கி சீருடையில் தான் வந்திருந்தனர் திருமணத்திற்கு.
இவனுக்கு இத்தனை நட்புறவுகளா என்று வியக்காமல் இருக்க முடியவில்லை அவந்திகாவால்.
வந்தவர்களை இன்முகத்துடன் ப்ரியதர்ஷன் அறிமுகப்படுத்தவும் மனதிலிருந்த சஞ்சலம் எல்லாம் கரைந்துவிட்டதை போலிருந்தது.
இதுதானே அவள் விரும்பிய ப்ரியதர்ஷன். இந்த ப்ரியனை தான் இத்தனை நாட்களும் தேடி தவித்து, களைத்தது.
அந்த புன்னகை அவளை வசியம் செய்ய மீண்டும் மீண்டும் அவன் முகம் பார்த்துக்கொண்டிருந்தாள் அவந்திகா.
அவனுமே அதனை கவனித்தானா என்றெல்லாம் அவள் யோசிக்கவே இல்லை.
ஆனால் அத்தனை பிடித்தது. இத்தனை நாட்கள் ஏதோ வேலையில், அதன் கடுமையில் தன்னிடம் அப்படி நடந்துகொண்டிருக்கிறான் என்று நினைத்தவளும் மகிழ்ந்துபோனாள்.
எல்லாவற்றிற்கும் மேல் அவனின் கைகளில் திருமாங்கல்யம் வந்து சேர உள்ளுக்குள் பட்டாம்பூச்சி படபடக்க அவனை பார்த்து அவந்திகா புன்னகைக்க, அதன் பிரதிபலிப்பு ப்ரியதர்ஷன் முகத்திலும் அப்பட்டமாய்.
உறவுகள், சுற்றங்கள், நட்புகள் புடைசூழ அனைவரின் ஆசியுடன் அவள் விரும்பும் அந்த முகம்கொள்ளா புன்னகையுடன் அவந்திகாவை திருமதி ப்ரியதர்ஷனாக்கியிருந்தான் ப்ரியன்.
துள்ளளோ துள்ளல் உள்ளுக்குள். என்னென்னவோ பயந்து இன்றைய நாளை எண்ணி தவித்துவிட்டோமே என நினைத்து நினைத்து பூரித்திருந்தவளின் மகிழ்ச்சி வெகுநேரம் நீட்டிக்கவில்லை.
வீட்டினர் முன்பே சொல்லியும் அவந்திகாவின் தோழிகள் சிலர் மேடையில் கேலியும், கிண்டலுமாக இருக்க, சிலநேரங்களில் வார்த்தைகள் எல்லை மீறவும் பார்த்தது.
அவர்களின் பேச்சில் ப்ரியதர்ஷன் மீண்டும் கடுமையாக மாறுவதை அதிர்வுடன் உள்வாங்கினாள் அவந்திகா.
“என்ன பேசறாங்க இவங்க? நான்சென்ஸ்…” என்று அவந்திகாவிடம் பல்லை கடித்துக்கொண்டு அவன் எச்சரிக்க மீண்டும் பழையநிலை அவந்திகாவிற்கு.
“நான் சொல்றேங்க…” என்று தடுமாறியவள் தன் முகத்தை இயல்பாய் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியம். ஆனாலும் பேச்சுக்கள் எல்லை கடந்தது.
‘அடங்குங்கடி. அநியாயம் பன்றீங்க. நானே இந்த மனுஷன்கிட்ட அவ்வளவா பேசமாட்டேனே?’ என சிரித்து சமாளித்தவள் ப்ரியதர்ஷனை காண அவன் பெரிதும் பொறுமையை கையாள்கிறான் என்று புரிந்தது.
போதாததிற்கு அவனிடம் அவந்திகாவை பற்றிய கேள்விகளை தொடுக்க மேடையில் இருந்தவன் வலிந்து புன்னகைத்து,
“அதை தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க? இது அவந்திகா தெரிஞ்சுக்க வேண்டியது. நாங்க பேசிப்போம்…” என்று முடித்துக்கொண்டான் ப்ரியதர்ஷன்.
ஒருவழியாய் மற்ற சம்பிரதாயங்கள் முடிந்து இரவு சடங்கு பெண்ணின் வீட்டில் ஏற்பாடாகி இருக்க அவந்திகா தான் சிவந்து கலங்கி போய் அமர்ந்திருந்தாள்.
சுற்றி அவளின் தோழிகள். அவர்களின் பேச்சை தடுக்கவும் முடியவில்லை. கண்டித்தும் முடியவில்லை.
இன்னும் ப்ரியதர்ஷனை பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை என்று கவலையாய் போனது.
அடுத்து அவர்கள் செய்யவிருக்கும் செயலில் மிரண்டு தான் போனாள் அவந்திகா.
“வேணாம்டி, இதெல்லாம் சரிவராது…” என்று சொல்லி மறுக்க,
“இது என்னம்மா? அவருக்கு பிடிக்காதோ என்னவோ. அதுவுமில்லாம நமக்கும் ஒத்துவராது…” என்று தரணியும், கலாவும் கூட சொல்லிப்பார்த்தனர்.
“இப்ப இதுதான் ஆன்ட்டி ட்ரென்ட். அதுவும் நாங்க என்ன சோஷியல் மீடியாவுலையா போட போறோம்? சும்மா ஒரு ஜாலி…” என்ற பெண்களை அதற்குமேலும் கடிய முடியவில்லை.
ராகவ்வும், முகிலரசனும் அறைக்குள் சென்றுவிட மற்ற சொந்தங்களும் இதனை வேடிக்கையாக பார்க்க,
“நீங்க போங்க ஆன்ட்டி. நாங்க பார்த்துக்கறோம்…” என்றவர்கள் அவந்திகாவின் கையில் இருந்த பால் சொம்பை வாங்கிக்கொண்டனர்.
“அடிப்பாவி, அவர் ஜாலி பெர்சன் இல்ல. என்ன பண்ண போறீங்க?…” அவந்திகாவின் தோழிகள் அனைவரும் நிற்க கண்டு பேந்த பேந்த விழித்தாள்.
“இந்த பால் சொம்போட நாங்க முன்னால போறோம். உன் புருஷன் எப்படி அசடு வழியறாருன்னு பார்க்க வேண்டாமா?…” என அனைவரும் ஆராவாரம் செய்ய,
“அவந்தி, அவங்க தான் சொல்றாங்க இல்ல. எப்ப பார்த்தாலும் சீரியஸா இருக்காங்க மாமா. இன்னைக்கு என்ன தான் நடக்குதுன்னு பார்ப்போமே?…” என அவளின் பெரியம்மா மகளும் சொல்ல,
“கலவரம் கன்பார்ம்…” அவந்திகா விழித்தாள்.
அத்தனைபேரும் சேர்ந்து மாடிக்கு செல்ல, அவர்களுக்கு நடுவில் அவந்திகா வந்தாள்.
“மொத்தமா போறோம். பொண்ணை எங்கடான்னு கேட்க போறார். ஏமாந்து போக போறார்…” என்றபடி அப்படி ஒரு சிரிப்புடன் சென்று கதவை திறக்கவும்,
“நான்சென்ஸ், அறிவில்ல. அவன் பேண்டை கழட்டி ஜட்டியோட லாடம் கட்டுங்கய்யா. ஒன்னொன்னும் சொல்லனுமா உங்களுக்கு? தோலை உரிச்சு உப்பு தடவுங்க. தன்னைப்போல வாய திறப்பான்….” என பிரியதர்ஷன் இரைந்ததில் பேயறைந்து போய் வாசலில் நின்றுவிட்டனர் அனைவருமே.
பேசிக்கொண்டே அவர்களை திரும்பி பார்த்தவன், அவந்திகாவின் தோழியின் கையில் இருந்த பால் சொம்பையும் அவர்களையும் பார்த்துவிட்டு முறைத்தபடி அறை வாசலுக்கு வந்து நின்று அவந்திகாவை காணுமென்று தேட அவள் பயத்தின் மாடிப்படியில் கீழே அமர்ந்துவிட்டாள் அவன் பார்வையில் படாமல்.
மனைவியை காணவில்லை என்றதும் வந்து நின்ற பெண்களை பார்த்தவன் பார்வையில் கண்டிப்பும், கண்டனமும்.
“நீங்க எல்லாம் இங்க என்ன பன்றீங்க? இன்னுமா வீட்டுக்கு கிளம்பலை?…” என கேட்டுக்கொண்டே அந்த பெண்ணின் கையில் இருந்த பால் சொம்பை பார்த்தவன்,
“அவந்திகாவை காபி கொண்டுவர சொல்லுங்க. கோ…” என்று சொல்லிவிட்டு பட்டென்று கதவை அறைந்து சாற்றினான் ப்ரியதர்ஷன்.
என்ன நடந்தது என்று உணர்ந்து திரும்பும் முன் மீண்டும் கதவை திறந்தா ப்ரியதர்ஷன் அவந்திகாவின் தோழிகளை பார்த்து,
“நில்லுங்கம்மா…” என்றான் உக்கிரத்துடன்.
“என்ன ஸார்?…” என திடுக்கிட்டு அவர்கள் கேட்க,
“உங்க மொபைல் குடுங்க…” என்றதும் அவர்களுக்கு இன்னும் பதறியது.
“ஸார்…” என்று பயந்து, பார்க்க ப்ரியனின் முகத்தில் கடுமை.
கைப்பேசியை கேட்டு நீட்டிய கையை அவன் எடுக்கவே இல்லை. பார்வையில் அத்தனை கண்டிப்பு கொடுத்தாகவேண்டும் என்பதை போல.
“அது எதுவும்…” என அதுவரை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த அந்த பெண் பேச,
“ஷட்அப். மொபைல்…” அழுத்தமாய் பல்லை கடித்தான்.
அந்த கடுகடுப்பில் தூக்கிவாரி போட, ஒன்றும் பேசாமல் அந்த பெண் மொபைல் தர வாங்கி பார்த்தவன் கண்கள் இடுங்கியது.
கீழே அவந்திகாவை அழைத்து வருவதில் இருந்து அவர்களின் பேச்சுக்களோடு ப்ரியதர்ஷன் அறை திறக்கும்வரையும், இறுதியாய் அவன் பேசியதும் கூடவே பதிவு செய்திருந்தனர்.
“வாட் த…” என்றவன் சட்டென வார்த்தைகளை அடக்கி, பல்லை கடித்து எதுவும் சொல்லாது அந்த வீடியோவை நீக்கிவிட்டு,
“இனிமே கொஞ்சமாச்சும் மேனர்ஸோட நடந்துக்கங்க. எல்லாமே கேலிக்குரிய விஷயம் இல்லை. புரியுதா?…” என சொல்லி மற்றவர்களை பார்க்க யார் யார் இதை வீடியோவாக பதிவு செய்தனரோ அனைவரும் அவன் சொல்லாமலே அழித்துவிட்டு,
“டெலிட் பண்ணிட்டோம் ஸார்…” என்றனர்.
“இது என்னோட பர்சனல். டோன்ட்…” என்று விரலசைத்து எச்சரித்தவன் செல்லும்படி சொல்லி, விட்டு மீண்டும் கதவு படாரென்று அடிபட்டது
அரண்டுவிட்ட அவந்திகா மீண்டும் அந்த அறைக்கு செல்லவே பயந்து மாடிப்படியிலேயே அமர்ந்துவிட்டாள்.