மேலே ப்ரியதர்ஷன் போட்ட சத்தத்தில் கீழே இருந்தவர்களும் வந்து பார்த்துவிட்டனர்.
அதற்குள் தரணி ராகவ்வை அழைத்து வந்துவிட முகிலரசன் தானாகவே வெளியே வந்திருந்தார்.
படாரென்று அடித்து மூடிய கதவின் சத்தத்தில் அவமானத்தில் முகம் கருக்க அந்த பெண்கள் எல்லாம் கலங்கிய கண்களுடன் கீழே இறங்கிவர பாதி படியில் அமர்ந்திருந்த அவந்திகாவிற்குமே முகம் கன்றி சிவந்திருந்தது.
“சொன்னேனே கேட்டீங்களாடி? உங்க விளையாட்டு இப்ப என்னவாகிருக்கு பாருங்க?…” என்றாள் அவந்திகா ஆதங்கத்துடன்.
“என்னாச்சு? என்ன நடந்துச்சு?…” என ராகவ் வந்து கேட்க, அனைவரும் கீழே இறங்கி வந்துவிட்டனர்.
“சும்மா விளையாட்டுக்கு கிண்டல் பண்ணிட்டே அவந்தியோட ரூம்க்கு போனோம்….” என்று ஒரு பெண் சொல்ல,
“மாப்பிள்ளை கோவப்படற அளவுக்கு என்ன பேசினீங்க?…” என்ற ராகவ்விடம் அவர்களால் எதுவும் சொல்லமுடியவில்லை.
“என்ன தரணி, நீ பார்க்கலையா?…” என்றான் மனைவியை கண்டனப்பார்வை பார்த்துக்கொண்டே.
“நான் சொன்னேங்க, என்னை கூட வர வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க…” தரணிக்குமே அவ்விடத்தில் தானுமே இன்னும் கொஞ்சம் கண்டிப்பை காண்பித்திருக்க வேண்டுமோ என தோன்றியது.
விளையாட்டிற்கு என்னவோ செய்கிறார்கள் என்று ஒரு அளவுடன் வைத்துக்கொள்ள சொல்லி மட்டுமே அவளால் கூற முடிந்தது.
கலாவே சிறு பெண்கள் என்று விட்டுவிட்டார். அவர் சகஜமாக எடுத்துக்கொண்டு விட்டிருக்க, ‘என்ன செய்து திருமணமான முதல்நாளே அவன் இத்தனை கோபம் கொள்ளும் அளவிற்கு கொண்டுவந்தனர்?’ என்று தெரியவில்லை.
“பேசினதுக்கா இவ்வளோ கோவமா பேசி கதவை மூடிருப்பார்?…” என முகிலரசன் வந்து கேட்க அனைவருமே விழித்தனர்.
“அவந்தி நீ சொல்லு…” என்று கேட்க அவள் இன்னும் பயம் விலகாமல் நின்றாள்.
“யாராச்சும் சொல்லுங்கம்மா…” என கலா கேட்க,
“அவந்தி கையில இருந்த பால் சொம்பை நாங்க வாங்கிட்டோம். அப்படியே ஸார் ரியாக்ஷன் என்னவா இருக்கும்ன்னு பார்க்க வீடியோவும்…” என்று சொல்லவுமே அனைவரும் திகைத்துவிட்டனர்.
“வாட்?…” என்று அதிர்ந்துவிட்டான் ராகவ்.
என்னவோ வயது பெண்கள் அவர்களுக்குள் பேசிக்கொள்கின்றனர், விளையாட்டு என்று நினைத்திருக்க என்ன மடத்தனம் செய்திருக்கின்றனர் இவர்கள் என்று பார்த்தனர்.
“இதுக்குத்தான் நான் அப்பவே…” என்று கலா பேசும்முன் மீண்டும் மாடி கதவு திறக்கப்படும் சப்தம்.
மாடியில் படிக்கட்டிற்கு அடுத்திருக்கும் முதல் அறை என்பதனால் சட்டென அவர்களின் கவனம் அங்கே குவிய, வெளியே வந்து நின்றான் ப்ரியதர்ஷன்.
பட்டுவேஷ்டி சட்டையில் மாப்பிள்ளை அவனின் தோற்றத்திற்கு மாறாக முகத்தில் அத்தனை கடினம்.
“இன்னும் நீங்க கிளம்பலையா?…” என்று அந்த பெண்களை பார்த்து மேல் நின்றே கேட்டவன் தனது வாட்சை பார்த்தான்.
“இது அன்-டைம் வேற. உங்களோட பேரன்ட்ஸ் நம்பர் குடுங்க. கால் பண்ணி வந்து கூட்டிட்டு போக சொல்றேன்…” என்றவன்,
“யாராச்சும் கால் பண்ணினாங்களா வந்து கூப்பிடறேன்னு சொல்லி?…” என்று கேட்க அவர்கள் ‘இல்லை’ என்றனர் அவனிடம்.
“வெரிகுட் பேரெண்ட்ஸ், வெடிங்க்கு போன பொண்ணுங்க அங்க என்ன பன்றாங்கன்னு இதுவரைக்கும் கேள்வியே கேட்காத பேரண்ட்ஸ். குட் குட். அவங்களை கண்டிப்பா நேர்ல பார்த்து பேசியே ஆகனும்…” என்றவன் பார்வை முகிலரசன், கலாவையும் சேர்த்தே பார்த்தது.
நிச்சயத்திற்கும் அவர்களுக்குமே இது அத்தனை தலையிறக்கம் தான். தாங்களுமே கவனிக்கவில்லை என்பதை போல தானே பேசுகிறான் என்றிருந்தது.
அதைவிட தன் வீட்டு மருமகன், முதன்முதலில் இங்கே தங்கும்பொழுது இப்படி ஒரு அவமானம் ஏற்பட்டிருக்க அத்தனை மன அழுத்தமாகி போனது.
அன்றைக்கு தான் திருமணம் முடிந்திருக்க, இப்படி ஒரு பிரச்சனை, அதில் தன் மகளின் எதிர்காலம் என நினைக்கவே இன்னும் படபடத்தது.
ப்ரியதர்ஷன் பேசவுமே அத்தனை பெண்களும் பதறி அழவே ஆரம்பித்துவிட்டனர்.
“ஸாரி ஸார். ப்ளீஸ், பேரன்ட்ஸ்கிட்ட சொல்லவேண்டாம்…” என்று ஆளாளுக்கு கெஞ்ச ஆரம்பிக்க,
“பேரன்ட்ஸ்கிட்ட சொல்லமுடியாத விஷயத்தை பண்ணனும்ன்னு அப்படி என்ன அவசியம்? இன்னொருத்தவங்க பர்சனல்ன்னு உங்களுக்கே இங்கிதம் வேண்டாம்?…” என்று கேட்க இன்னுமே குறுகி போய் பார்த்தனர்.
“நான் பேசறது கடுமையா தான் இருக்கும். ஆனா இப்படி சொன்னேன்னு உங்க பெத்தவங்கட்ட சொல்லுங்க, சரியா தப்பான்னு அவங்க உங்களுக்கு சொல்லித்தருவாங்க….” என்றவன் பார்வை அந்த கும்பலில் மனைவியை தேடியது.
கலாவின் அருகில் கோழிக்குஞ்சாய் நடுங்கிக்கொண்டு நின்றவளை ஒரு பார்வை பார்த்தவன் மீண்டும் அறைக்குள் சென்றுவிட்டான்.
முகிலரசன் முகமே விழுந்துவிட்டது. அந்த நாளை மறக்கமுடியாத அளவிற்கு அல்லவா இந்த பெண்கள் செய்துவிட்டனர் என்று கலாவை பார்த்து முறைத்தார்.
“கலா…” என்று அவர் அழைக்க,
“இப்ப எதுவும் பேசவேண்டாம் மாமா. முதல்ல இவங்க போய் தூங்கட்டும். நாளைக்கு பேசிப்போம்….” என தரணி சொல்லவும் அவந்திகாவின் தோழிகள் அங்கே இருக்கவே முடியாதென்றனர்.
“நாங்க கிளம்பறோம் அண்ணி. போதும், தப்பு எங்க பேர்ல இருந்தாலும் இதெல்லாம்…” என்றவர்களுக்கு ப்ரியதர்ஷனை விமர்சனம் செய்யவே அச்சமாய் இருந்தது.
“என்னம்மா பேசறீங்க? இப்போ எப்படி கிளம்புவீங்க? அதுவும் இந்த ரெண்டு பொண்ணுங்க வீடு இன்னும் தூரமே?…” என்றார் கலா.
“இல்லை நாங்களும் போறோம். இருந்தா எங்களோட பேரண்ட்சை வர சொன்னாலும் சொல்லிடுவார் கமிஷனர் ஸார்….” என்று அழுதுகொண்டே தங்களின் உடைமைகளை எடுத்துக்கொள்ள முகிலரசனுக்கு மனம் கேட்கவில்லை.
“எல்லா விஷயமும் ஜாலிக்கு பன்றதாம்மா? கொஞ்சம் யோசிங்க. முன்னாடியே இப்படி பன்றது தெரிஞ்சிருந்தா நானே தப்புன்னு சத்தம் போட்டிருப்பேன். அவரும் இவ்வளோ கோவப்பட்டிருக்கமாட்டார். சூழ்நிலை அறிஞ்சு நடக்க வேண்டாமா?…” என்ற முகிலரசன்,
“அவ சொல்லத்தான் செஞ்சா மாமா. ஆனா கேட்கிற சூழ்நிலையில இவங்க யாரும் இல்லை. இனியாவது இப்படி எங்கயும் நடந்துக்காம இருந்தா நல்லது…” என்று தரணி சொல்ல,
“ராகவ் இவங்களை ட்ராப் பன்றதுக்கு ஏற்பாடு செய். ட்ரைவரை கூப்பிடு. எல்லாரையும் நம்மளே பத்திரமா கொண்டுபோய் விட்டுடலாம்…” என முகிலரசன் கூற,
“நான் பார்த்துகறேன் ப்பா. நீங்க இருங்க…” என்றவன் அந்த பெண்கள் அனைவரையும் பெரிய காரில் ஏற்றிக்கொண்டான்.
என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்த்த ஓரிரு சொந்தங்களும் கலாவை கடிந்துவிட்டு அவந்திகாவிற்கு அறிவுரை சொல்லிவிட்டு சென்றனர்.
எதுவும் செய்யமுடியாமல் அவந்திகா அப்படியே இருக்கையில் அமர்ந்து தலையை பிடித்துக்கொண்டாள்.
“இங்க வா நீ…” என கலா மகளை உள்ளே அழைத்து வந்தார். உடன் தரணியும்.
“என்ன காரியம் பண்ணிட்டீங்க எல்லாரும் சேர்ந்து?…” என கலா கேட்க,
“ம்மா, என் ப்ரெண்ட்ஸ் வீடியோ எடுத்தாங்கன்றதே எனக்கு அவங்க போனை வாங்கின அப்பறம் தான் தெரியும். என் கூட வரவேண்டாம்ன்னு சொன்னாலும் கேட்கலை…” என்றாள் அவந்திகா.
“எனக்கு புத்தி இல்லை. நானும் சின்ன பிள்ளைங்க, என்னவோன்னு நினைச்சு விட்டுட்டு போனா இங்க குடும்ப மானமே போச்சு. என்ன நினைப்பார் உன் புருஷன்?…” என்று அவர் ஒருபக்கம் புலம்ப,
“ப்ச், அத்தை நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க. இப்படியே புலம்பினா ஆச்சா? அவளே பயந்து போயிருக்கா….” என்ற தரணி,
“நீ முதல்ல கிளம்பு அவந்தி. போய் கொஞ்சம் தன்மையா பேசு. கோவப்பட்டா ஸாரி கேட்டுடு. எல்லாம் சரியாகிடும்…” என்றவள்,
“இன்னைக்கு தான் வாழ்க்கையை ஆரம்பிக்க போறீங்க. இந்தமாதிரி நடந்தது சங்கடம் தான். ஆனா அதையே நினைச்சிட்டு இருக்கறது சரி கிடையாது….” என்றாள்.
முகமெல்லாம் வெளிறி போயிருக்க கிஞ்சித்தும், மகிழ்ச்சியோ, சிரிப்போ இல்லாத அப்பட்டமான சஞ்சலம் கொண்டிருந்தாள்.
“இதெல்லாம் நீ வளரவிட்டது. மத்தவங்களை விடு, உனக்கு தெரியும் தானே? கண்டிச்சு சொல்லவேண்டியது தானே?…” என்ற தரணிக்குமே புரிந்தது அவந்திகாவின் நிலை.
தான் மட்டும் என்ன செய்தோம் என தன்னைக்குறித்தும் அதிருப்தி தான் தரணிக்கு.
தானாவது சொல்லியிருக்கவேண்டும்? ஆனால் சொல்லியும் கேட்கும் நிலையிலா அவர்களும் இருந்தனர்? என தோன்றாமல் இல்லை.
வீட்டிற்கு வந்த தோழிகளை அதற்குமேல் எவ்வாறு கண்டிப்பது? அவர்களின் எல்லை தெரிந்து அவர்கள் இருந்திருக்கவேண்டும்.
தாங்களும் அதனை கண்டுகொள்ளாமல் விட்டது இப்போது எந்தளவிற்கு பிழையை உண்டு செய்திருக்கின்றது என நினைக்கையில் வருத்தமாக இருந்தது.
“அவந்தி முதல்ல நீ மேல போ. அவர் கோவத்தை குறைக்க பார்…” என்ற கலாவிற்கும் அத்தனை பயம்.
இப்படி எந்தவீட்டிலும் நடந்திருக்குமா என நினைக்காமல் இருக்க முடியவில்லை அவரால்.
அதிலும் நடுவீட்டில் நின்று ப்ரியதர்ஷன் பேசிய விதமும், தங்களை பார்த்த விதமும் எப்போதும் மறக்கவே முடியாது.
சகஜமாக இருக்கும் வீடுகளிலேயே மருமகன் என்று வந்துவிட்டால் எத்தனை பரபரப்பும், சங்கோஜமும் இருக்கும்.
இப்போது அவனின் முன்னே தன் மகள் மட்டுமல்லாது, தாங்களுமே மதிப்பிழந்து நிற்கவேண்டிய சூழ்நிலை ஆகிவிட்டதே என ஏகத்திற்கும் சங்கடம்.
“நீங்க போங்க த்தை. நான் அனுப்பி வைக்கறேன்…” என்று சொல்லிய தரணி, கலாவை அனுப்பிவிட்டு மீண்டும் பாலை காய்ச்ச துவங்கினாள்.
“அறிவிருந்தா இதை அந்த பொண்ணு வாங்கியிருக்குமா? நான் உன் கையில தான குடுத்தேன்?…” என்று கண்டிக்கவும் அவந்திகாவிற்கு தானும் அதனை அனுமதித்திருக்க கூடாது என்னும் காலம் தாழ்ந்த ஞானோதயம் பிறந்தது.
அப்போது தான் ப்ரியதர்ஷன் மாடியில் சொல்லியது ஞாபகம் வர தரணியை நிமிர்ந்து பார்த்தவள்,
“முதல்ல கதவை சாத்தும்போது என்னை காபி எடுத்துட்டு வர சொன்னாங்க. அதுக்கடுத்துதான் கதவை திறந்து போன் வாங்கி டெலிட் பண்ணினது….” என்று சொல்ல தலையில் அடித்துக்கொண்டாள் தரணி.
“பாலும் கொண்டுட்டு போ. கூடவே ப்ளாஸ்க்ல காபி தர்றேன். எது வேணுமோ எடுத்துக்கோங்க…” என்று சொல்ல இங்கே அவந்திகா மடமடவென்று தண்ணீரை தொண்டை வரை நிறைத்தாள்.
“தெரியலை. ஒருமாதிரி தலை சுத்துது. நாவெல்லாம் வறட்சியா இருக்கு…” என்றாள்.
முகத்தில் சுரத்தின்றி மிரண்டு இருந்தவளை காணவும் பாவமாக இருந்தது தரணிக்கு.
“சரியாகிடும். அதுவும் உன் கையில தான் இருக்கு…” என்று சொல்லி ட்ரேயை அவளின் கையில் கொடுத்த தரணி அவளோடு வந்தாலும் இரண்டு படிகள் தள்ளி கீழே நின்றுகொண்டாள்.