இப்போதாவது அவனின் பேச்சுக்களை, அவன் கூறும் வார்த்தைகளை கவனிக்கவேண்டும் என்றிருந்தவள் கவனமெல்லாம் அவனின் களவாடலில் காற்றில் கரைந்த கற்பூரமாகி போக உறக்கம் என்பதும் தள்ளி போனது.
கருமேகமழை பிறை நிலவினை முழுதாய் குளிர்வித்திருக்க, உள்ளம் கொண்ட வெம்மையின் தாக்கங்கள் மட்டும் குறைவதாய் இல்லை.
மெல்ல கண்ணயர்ந்தவள் அலாரத்தின் சத்தத்தில் விழித்துக்கொள்ள ப்ரியதர்ஷன் அயந்த உறக்கத்தில் இருந்தான்.
மெதுவாய் அவனை விட்டு விலகி என்று குளித்து வெளியே வரும்நேரம் எழுந்து அமர்ந்திருந்தான் அவளின் கணவன்.
அவனை பாராமலே இங்கும் அங்குமாய் அறையில் எதையேனும் செய்தபடி இருக்க,
“சும்மாவே பார்க்கமாட்டா. இப்ப சுத்தம்…” என்ற முணுமுணுப்பு தான் அவனிடம்.
எத்தனை நேரம் தான் தயாராவதை போல நேரத்தை கடத்த என்று பார்த்தவள் அவனிடம் திரும்பி,
“நீங்க குளிச்சிட்டு வாங்க….” என்று ஒருவாறாய் சொல்லிவிட அந்த விழிகள் காண்பித்த உணர்வில் இன்னும் முதல்நாள் தாக்கத்திலிருந்து அவள் வெளிவரவில்லை என்று புரிந்தது.
எதுவும் பேசாமல் அவளை ஆராயும் பார்வை பார்த்தவனின் விழிகளின் துளைப்பில் சங்கடமானவள்,
‘திரும்பவுமா?’ என்று மனம் அதிர பார்த்தவள் கீழே செல்லவேண்டுமே என கதவையும் பார்க்க,
“ஒன்னும் பண்ணலை. வா…” என்று சொல்லவும் தான் அவனின் அருகிலேயே சென்றாள்.
அவளின் முகம் பற்றி இங்குமங்கும் திருப்பி பார்த்தவன் பார்வையில் என்ன செய்கிறான் என புரியாமல் பார்த்தாள்.
மனைவியின் பார்வையிலும், பயத்திலும் ப்ரியதர்ஷன் புன்னகை உள்ளுக்குள் அமிழ்ந்து வர, தனது கழுத்தோரம் ஒட்டியிருந்ததை எடுத்தவன் அவளின் நெற்றியில் வைத்தான்.
“இதுக்கு தான் கூப்பிட்டேன்…” என்று சொல்ல அவந்திகா தன் நெற்றியை தொட்டு பார்த்தாள்.
“உன் பொட்டு தான். நேத்து நீ ஒட்டிக்கிட்ட மாதிரி உன் பொட்டும் என்னோட ஒட்டிருச்சு…” என்று கூற அப்போதும் அதனை அவன் ரசனையுடன் கூறுகிறான் என்று நினைக்க முடியாதவிதத்தில் முகத்தின் விரைப்பும், அவன் குரலும் தடைவிதித்தது.
‘நான் எங்கடா ஒட்டிக்கிட்டேன்? விட்டா தான விலகி இருக்க? என்னை இழுத்து புடிச்சிக்கிட்டு’ என்று உள்ளுக்குள் புலம்பியவள் எதுவும் கூறாமல் அவனை பார்த்தாள்.
“இப்போ போ….” என்றவன்,
“திரும்பவும் ஒன்னும் பண்ணலைன்னு சொன்னா நம்பி வரவேண்டாம். இனிமே நான் சொன்னதை செய்யாமட்டேன்…” என்று சொல்லி அவளின் கன்னம் தட்டிவிட்டு குளிக்க சென்றுவிட அவன் சொல்லியதை கிரகிக்கவே சில நொடிகள் பிடித்தது.
அதற்குள் அடுத்த அலாரம். சட்டென சுதாரித்து படுக்கை விரிப்புகளை மாற்றி அறையை சுத்தம் செய்து என கடகடவென்று வேலையை முடித்தவள் ப்ரியதர்ஷன் வரும்முன் கீழே சென்றிருந்தாள்.
அங்கே ராகவ்வும், தரணியும் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க இருவரின் முகத்திலும் கவலையும் யோசனையும்.
கலா வேறு உள்ளிருந்தே எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்தார் மகள் வந்துவிட்டாளா என்று.
முகிலரசன் பேப்பர் படிப்பதை போலிருக்க ஒவ்வொருவரையும் விழிகளால் அளந்தவள் தான் எடுத்துவந்த பால் சொம்பு, ப்ளாஸ்க் எல்லாவற்றையும் அடுக்களையில் போட தரணியும் வந்துவிட்டாள்.
“நீங்க பேசிட்டிருங்கம்மா. நான் வந்திடறேன்…” என்று கலா நாசூக்காய் வெளியேற,
“ம்மா…” என அவந்திகா அழைத்தும் நிற்கவில்லை.
“என்ன வேணும் அவந்தி? என்கிட்ட கேளு…” என அவளை அழைக்க,
“அவங்க குளிக்கிறாங்க அண்ணி. காபி வேணும். அதான்…” என்றவள் தானாகவே பாலை காய்ச்ச,
“ஆமா இன்ஸ்டன்ட் காபியா? பில்ட்டரா?…” என கேட்டாள் தரணி.
“எங்கண்ணி காபி பில்டரை காணும்? இன்னும் யாரும் காபி குடிக்கலையா என்ன?…” என்றாள்.
“எல்லாரும் குடிச்சாச்சு அவந்தி…” என்று சொல்ல,
“சரி, நான் புதுசா டிக்காஷன் இறக்கறேன்…” என்றவள் மீண்டும் பில்ட்டரை தேடி,
“ம்மா…” என்று சத்தமிட்டாள்.
“அடடா, இரு. இங்க தான் இருக்கு…” என அதனை தன் கையிலிருந்து எடுத்து தர,
“ஒளிச்சு வச்சிருந்தீங்களா?…” என்று முறைத்து பார்த்தாள் அவந்திகா.
“நீ என்ன பன்றன்னு பார்க்க தான். எல்லாம் ஓகேன்னா இதோ நீ இப்போ தேடி தேடி அண்ணாவுக்கு காபி கலக்க பார்க்கற. ஓகே இல்லைன்னா போனா போகுதுன்னு இன்ஸ்டன்ட் பவுடரை தான் எடுத்திருப்ப. அப்போ நேத்து பழம் தானே?…” என்றாள் தரணி கண் சிமிட்டி.
“அண்ணி…” என சங்கோஜத்துடன் பார்வையை திருப்பியவள் பாலை காய்ச்ச,
“சொல்லு அவந்தி. நேத்து உன் அண்ணா வீட்டுக்கு வரும்போது உன் வீட்டுக்காரர் வெளில பால்கனில நின்னு பேசிட்டிருந்ததை பார்த்தாங்களாம். ஒரே புலம்பல்…” என்று சொல்லி,
“உன் ப்ரெண்ட்ஸ் பேசினதுக்கு எதுவும் சொன்னாங்களா?…” என்றாள்.
“தப்பு என் மேலையும் இருக்கு அண்ணி. நானும் ஸாரி கேட்டேன். ஆனா அக்ஸப்ட் பண்ணின மாதிரி தெரியலை. அதை க்ராஸ் பண்ணி அடுத்த பேச்சுக்கு வந்துட்டாங்க…”
“கோவமா? சண்டை எதுவுமா?…” என்று பதற,
“அப்படின்னு சொல்லமுடியாது. ஆனா பைனலி…” என்று சொல்லிக்கொண்டிருக்க வெளியே,
“வாங்க மாப்பிள்ளை, உட்காருங்க…” என முகிலரசன் பேசும் குரல்.
“வந்துட்டாங்க போல….” என்று எட்டி பார்த்த அவந்திகா ப்ரியதர்ஷன் ஹாலில் அமர்ந்திருக்க கண்டு காபியை எடுத்துக்கொண்டு வேகமாய் சென்றாள்.
“காபி…” என்று அவனிடம் நீட்ட, நாளிதழை பார்த்துக்கொண்டிருந்தவன் பார்வை அவளிடம் உயர்ந்தது.
“உனக்கு காபி எங்க?…” என்றான் அவன் அதனை வாங்காமல்.
அனைவருமே இருக்க அவனின் சத்தமும் அந்த ஹாலில் பெரிதாகவே கேட்க எல்லோருமே கவனித்தனர்.
“நீங்க குடிங்க. நான் உள்ள போய்…” என்றவளை முறைத்தவன்,
“உட்கார்ந்து குடி. நீ குடிச்சிட்டு எடுத்துட்டு வா…” என்றான் அதட்டலாய்.
மற்றவர்கள் எல்லோரும் ஒதுங்கி இருந்து பார்க்கும்படியாய் இருந்தது அவனின் தோரணையே.
அதைவிட முந்தையநாளின் நிகழ்வு வேறு இலகுவாய் அவனிடம் பேச இடமளிக்கவில்லை.
அவன் அதை பற்றி எதுவும் பேசவில்லை என்றாலும் சட்டென சகஜநிலையே மாறியிருந்தது.
அவர்களின் இல்லத்திலேயே சங்கடத்துடன் அந்நியமாய் நிற்பதை போலிருந்தது.
“அவர் தான் சொல்றார்ல. உக்கார்ந்து குடி. நான் போய் அவருக்கு கொண்டுட்டு வர்றேன்…” என கலா சொல்ல வேறு வழியின்றி அவந்திகா அவனருகே அமர்ந்துகொண்டாள்.
அத்தனை சூடாய் இருந்தது காபி. சட்டென குடிக்க முடியவில்லை. கையில் வைத்துக்கொண்டு அவள் சுற்ற,
அதன்பின் நேரம் சென்றதே தெரியவில்லை. அவனிடம் கலகலப்பாய் பேசவும் ஆளில்லை. பாதிநேரம் அவனாக வெளியே செல்லவேண்டிய கட்டாயம்.
முக்கிய வழக்கில் அவன் தலையிட்டிருக்க வேலை விஷயமாய் இங்குமங்குமாய் சுற்றவேண்டிய அவசியம்.
மனைவியோடு செலவு செய்த நேரங்கள் குறைவென அவனுக்குமே தெரிந்தாலும் பத்துநாட்களில் திருச்சி சென்றுவிடுவோமே என்று நினைத்திருக்க குலதெய்வம் கோவிலுக்கு போய்விட்டு வந்ததில் இருந்து காய்ச்சல் கண்டுவிட்டது அவந்திகாவிற்கு.
அழைத்தும் செல்லமுடியாத சூழ்நிலை. அந்தமாத இறுதியில் தாலி பெருக்கி போடவேண்டிய விசேஷம் உள்ளதென அங்கை சொல்லிவிட அதனை முடித்துவிட்டு அழைத்துக்கொள்ளலாம் என நினைத்தவனுக்கு காலம் கடந்து சென்று அதுவும் இப்போது தான் கனிந்திருந்தது.
“அவந்தி, அவந்திகா…” என்று பாதத்தை தட்டி எழுப்புபவனின் குரலில் மெல்ல விழி திறந்தவள் கண்கள் அத்தனை மணிநேர உறக்கத்தில் நன்றாய் சிவந்திருந்தது.