அவனுக்கு இங்கே தங்கை குடித்தனம் செய்வதில் எவ்வித வருத்தமோ கவலையோ இல்லை.
சொல்லப்போனால் தங்கைக்கு இது இன்னும் பாதுகாப்பானதும் கூட என்று தோன்றியது.
“ஆனா செம்ம ஸ்பீட் பாருங்களேன். ஒன்பது மணிக்கெல்லாம் வந்து சேர்ந்துட்டோம். நான் கூட லேட்டாகும்ன்னு நினைச்சேன். நாலுமணிக்கு கிளம்பி அதுக்குள்ள திருச்சி ரீச்சாகிட்டோம்….” என்றான் தந்தையிடம்.
“ஆமாடா, நாம கிளம்பினது சீக்கிரம். ரொம்ப ட்ராபிக் இல்லை. நல்ல ட்ரைவர். அதான் சீக்கிரம் கொண்டுவந்துட்டாங்க…” என்ற முகிலரசன்,
“எவ்வளோ நேரம் இப்படி நின்னுட்டே பார்க்க? வா உள்ள போவோம்…” என்று அழைக்கவும் அவர்கள் அவந்திகாவை நெருங்கினார்கள்.
அதற்குள் ப்ரியதர்ஷன் தங்களின் பெட்டிகளை எல்லாம் கீழே இறக்கிவிட்டு ட்ரைவருக்கு காரை நிறுத்துமிடத்தை காண்பித்துவிட்டு திரும்பினான்.
சுற்றிலும் வீடுகள் இருந்தாலும் அவனுக்கென தரப்பட்டிருக்கும் அந்த இல்லம் மற்றதை விட சற்று பெரிதாகவும் சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் போல கம்பிகள் கட்டப்பட்டும் இருந்தது.
அதற்குள் நிறைய காலி இடங்களும், அதில் பூக்கள், செடிகள் என்று எல்லாம் இருந்தது.
“இதுதான் நம்ம வீடுங்களா மாப்பிள்ளை?…” என முகிலரசன் மருமகனிடம் கேட்க,
“ஆமா மாமா. வாங்க உள்ள…” என அவன் அழைத்ததும்,
“வாங்க ஸார். வாங்க மேம்…” என்று வேகமாய் ஒருவர் ஓடி வர அவருடன் இன்னொரு பெண்மணியும் சேர்ந்தே வந்தார்.
“இவர் பழனிச்சாமி….” என ப்ரியதர்ஷன் அவரை அனைவருக்கும் அறிமுகம் செய்துவைக்க,
“வணக்கம்ங்க. நான் தான் ஸார்க்கு ட்ரைவர்…” என்று சொல்லியவர்,
“இது சாமந்தி, வீட்டு வேலைக்கு ஒத்தாசைக்கு இருக்கும்ங்க…” என்றார் அவரே அந்த பெண்மணியையும் அறிமுகம் செய்தார்.
“வணக்கம்ங்க…” என சாமந்தியும் சொல்ல,
“நின்னுக்கிட்டு இருக்காம மொத பெட்டியெல்லாம் தூக்கு சாமு…” என்று பழனிச்சாமி சாமந்தியை விரட்டியபடி, சாவியை எடுத்து வீட்டின் கதவை திறந்தார்.
“பால் பாக்கெட் வாங்கிட்டேன் ஸார். அப்படியே நீங்க சொன்னமாதிரி எல்லாமே வாங்கி வச்சாச்சு…” என பழனிச்சாமி சொல்ல,
“சரி, நீங்க புறப்படுங்க. நான் பார்த்துக்கறேன்…” என்றான் ப்ரியதர்ஷன்.
அதற்குள் அவர்களின் மற்ற பொருட்கள் எல்லாம் ஒன்றாக உள்ளே வந்துவிட்டது.
வேடிக்கை பார்த்துக்கொண்டே அவந்திகா வீட்டினுள் நுழைய போக அவளின் கை பிடித்து நிறுத்திய ப்ரியதர்ஷன்,
“வெய்ட் பண்ணு. சேர்ந்து போகலாம்…” என்றான்.
என்ன என்று மற்றவர்கள் பார்க்க, அதற்குள் சாமந்தியும் ஆரத்தி தட்டுடன் வெளியே வந்துவிட்டார்.
“தரணி…” என்றவன் கை காண்பிக்க,
“இதோ அண்ணா…” என்றவளுக்கு அத்தனை சந்தோஷம்.
ஒவ்வொன்றையும் மறக்காமல் செய்கிறானே என்று. முகிலரசனும், கலாவும் கூட புன்னகையுடன் பார்த்திருக்க,
“மாப்பிள்ளைக்கு இன்னொரு சைட் இருக்கும் போலவே?…” என்றான் ராகவ் மெல்லிய குரலில்.
“சைட்டா?…” என கலா திடுக்கிட்டு மகனை பார்க்க,
“ம்மா, நீங்க வேற. அவருக்கு இன்னொரு பக்கம் இருக்குமோன்னு சொன்னேன். நாம சும்மா கோவத்தை மட்டும் தான பார்த்தோம். பார்த்தீங்களா? இதெல்லாம் நீங்க சொல்லனும். நீங்க என்னடான்னா?…” என்று ராகவ் ஆதங்கத்துடன் அவரிடம் சொல்ல,
“இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை. நாம எல்லாம் செஞ்சுட்டு வந்து தப்புன்னு ஒத்துக்கறோம். அட போங்கம்மா…” என்றவன் தரணியை பார்த்தான்.
ஆரத்தியை சுற்றிவிட்டு இருவருக்கும் பொட்டு வைத்தவள் அதனை எங்கே ஊற்ற என்று பார்க்க,
“எங்கிட்ட குடுங்கம்மா…” என்று வாங்கிக்கொண்டார் சாமந்தி.
“இப்ப உள்ள வா…” என்றவன் அவளின் கை பிடித்து உள்ளே செல்ல மற்றவர்களும் பின் தொடர்ந்தனர்.
வீட்டினுள் நுழைந்ததும் தான் கலாவின் முகத்தில் பெரிதாய் தெளிவு. வெளிப்பக்கம் இருந்ததை போலவெல்லாம் உள்ளே இல்லை.
அதற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாததை போல வீடு அத்தனை பாந்தமாய் அழகாய் இருந்தது.
“சின்ன வீடுன்னு நினைச்சேன். உள்ள நல்ல விசாலமா தான் இருக்கு தரணி. எல்லா திங்க்ஸுமே இருக்கு பாரேன்…” என்றார் அவர்.
“அம்மா, வாங்க பாலை காய்ச்சுங்க…” என்று சாமந்தி சொல்ல, வீட்டை சுற்றி பார்த்துக்கொண்டிருந்த அவந்திகா அவரை பார்த்தாள்.
“நீங்க வந்ததும் பால் காய்ச்சனும்ன்னு ஸார் வாங்கி வைக்க சொன்னாங்க. வாங்க…” என சாமந்தி அழைக்க,
“சும்மா பேர் சொல்லியே கூப்பிடுங்க. இந்த வாங்க போங்க எல்லாம் வேண்டாம்…” என்று அவந்திகா சொல்ல,
“அவந்திகா…” என்று உள்ளிருந்து ப்ரியதர்ஷனின் குரல்.
சுற்றி பார்த்தவளுக்கு எந்த அறையில் அவன் இருந்து அழைக்கிறான் என்று தெரியவில்லை.
அருகில் இருந்த ஒரு அறையை எட்டி பார்க்க அங்கே அவனில்லை. அவள் அடுத்த அறையில் தேடும்முன், தள்ளி இருந்த இன்னொரு அறையிலிருந்து எட்டி பார்த்தான் ப்ரியதர்ஷன்.