“நீ போய் பேசிட்டு வா அவந்தி. நாங்க இங்க இருக்கோம்….” என தரணி சொல்ல அதற்குள் ப்ரியதர்ஷனும் வெளியே வந்துவிட்டான்.
“தரணி இங்க மூணு பெட்ரூம் இருக்கு. நீயும் ராகவ்வும் அந்த ரூம் எடுத்துக்கோங்க. மாமாவும் அத்தையும் இதை எடுத்துக்கட்டும்…” என்று இரண்டு படுக்கை அறைகளை காண்பித்தவன்,
“நிலவனுக்கு என்ன வேணும்ன்னு பாருங்க. இப்ப வந்திடறேன்…” என்றவன் மனைவியை பார்வையால் அழைத்து சென்றான்.
“போ அவந்தி. கூப்பிட்டா உடனே போகமாட்டியா? திரும்ப வந்து சொல்லிட்டு போறாங்க. என்னன்னு போய் கேளு நீ…” என்று கலாவும் சொல்ல அவந்திகா கணவன் சென்ற அறைக்குள் நுழைந்தாள்.
“வா…” என்று அழைத்தவன்,
“இதுதான் நம்ம ரூம்….” என்று அறையை காண்பிக்க தலையசைத்தவள்,
“நல்லா இருக்கு…” என்றாள் அவனிடம்.
“ஆனா நீ பேசறது நல்லா இல்லையே…” என்று அவன் நறுக்கென்று கூற எதை சொல்கிறான் என புரியாமல் பார்த்தாள்.
“சாமந்திக்கிட்ட பேசினதை சொல்றேன். இங்க நான் என்னோட பொசிஷனுக்கு தகுந்த மாதிரி தான் நடந்துக்கனும். கன்சர்ன், கருணை எல்லாம் சட்டுன்னு பார்க்க கூடாது. நம்ம மேல மத்தவங்களுக்கு மரியாதையும், பயமும் முக்கியம்…” என்றவன்,
“நான்னா அதுக்குள்ள நீயும் சேர்த்தி தான். நான் தனி கிடையாது. அவங்க உனக்கு குடுக்கற ரெஸ்பெக்ட் என் மனைவிக்கானது. எனக்கானது. புரிஞ்சதா?…” என்று கேட்டதும் வேகமாய் தலையாட்டினாள்.
“இப்படி முட்ட முட்ட முழிச்சிட்டு பார்த்துட்டே இருந்தா பால் பொங்கி தம்ளருக்கு வந்திருமா?…” என்றவன் முகத்தில் சட்டென்ற வானிலை மாற்றம்.
கேலியாய் அவளிடம் கேட்டவனின் குரலில் சற்றே தன்மை வந்திருந்ததோ என்பதை போல பார்த்தவள்,
“அப்போ நான் போகட்டுமா?…” என்றாள்.
“நீ என்ன ஸ்கூலுக்கா போற? போகவா வரவான்னு என்கிட்ட பர்மிஷன் கேட்க. இது நம்ம வீடு. டிசிஷன் அத்தாரிட்டி உனக்கானது. அதையும் உனக்கு நான் சொல்லனுமா?…” என்றான் ப்ரியதர்ஷன்.
அவந்திகாவின் மனதெல்லாம் அங்கையின் வார்த்தைகள் தான் இப்போது சூழ்ந்து நின்றது.
“இது நம்ம வீடா இருந்தாலும் எது எங்க இருக்குன்னு உனக்கு தெரிஞ்சாலும் உனக்கு நான் செய்யறப்போ வர்ற சந்தோஷமே வேற அவந்தி. என்கிட்ட கேட்கவேண்டியது தானே? நான் வந்து எடுத்து தருவேன்ல…” என்று தான் அவளிடம் சொல்லி அதுவே அவளின் வழக்கமாகவும் மாறியிருந்தது.
“நான் இங்க தான இருக்கேன்? எங்க போனேன்? நீ இரு. நான் பன்றேன். எனக்கு சும்மா துணைக்கு இருந்தா போதும். இந்த பொறுப்பெல்லாம் எடுத்துக்க இன்னும் நாள் இருக்கு. இப்போ நீ சந்தோஷமா இரு…” என்று வாஞ்சையுடன் பேசுவார்.
அப்போது அவரின் அன்பில் அவர் தன்னை அதிக அன்புடன் பார்த்துக்கொள்கிறார் என்றே நினைத்திருக்க இப்போது கணவன் சொல்லியவை எல்லாம் உள்ளுக்குள் என்னவோ செய்தது.
“லக்கேஜ் எல்லாம் உள்ள வச்சிட்டு வந்துட்டேன் நான். நிலவனை தூக்கிட்டு ராகவ்வும், தரணியும் உள்ள போயிருக்காங்க. உன் அம்மா முகம் கழுவிட்டு வர்றேன்னு அந்த ரூம்ல இருக்கா…” என்று சொல்லியவர்,
“சரி நீ வா…” என்று ப்ரியதர்ஷன் அவந்திகாவை அடுக்களைக்கு அழைத்து செல்ல அங்கே பால் பாக்கெட், புது பாத்திரம் என எல்லாம் தயாராய் இருந்தது.
“சாமியை கும்பிட்டு பாலை ஊத்தி அடுப்புல ஏத்துங்கம்மா…” என்ற சாமந்தி பின்வாசல் பக்கம் வந்து நின்றுகொண்டார்.
“எல்லாரும் வாங்க…” என்ற ப்ரியதர்ஷன்,
“அவந்திகா…” என மனைவியை பார்க்க அதிலேயே புரிந்துகொண்டவள்,
“வாங்கப்பா, ம்மா வாங்க. வா ண்ணா…” என்றவள் தரணி வர கண்டு,
“வாங்கண்ணி…” என்றழைத்தாள்.
கிட்டத்தட்ட புதிதாய் திருமணம் முடித்து, புது வீட்டிற்கு வருவதை போலிருந்தது அந்த சூழல்.
பெற்றவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சி. அதிலும் கலா முகத்தில் சந்தோஷத்திற்கு குறைவே இல்லை.
அவந்திகா பாலை காய்ச்சிக்கொண்டு நிற்க மற்றவர்களும் அருகில் பேசியபடி இருக்க, ப்ரியதர்ஷன் விலகி வெளியே வந்து சின்னதாய் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பூஜை அறையை தயார் செய்துவிட்டான்.
“என்னங்க மாப்பிள்ளை இதையெல்லாம் செய்யறார்?…” என கலா கேட்க,
“நீ பேசாம இரு. எதையாச்சும் பேசி வச்சு திரும்ப பிரச்சனை ஆகிடாம. இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு…” என்று முகிலரசன் சொல்லவும் கப்பென்று வாயை மூடிக்கொண்டார் கலா.
அதனை முடித்துவிட்டு ப்ரியதர்ஷன் வந்து நிற்கவும் பால் பொங்கி வரவும் சரியாக இருந்தது.
அவந்திகாவை விளக்கேற்ற சொல்லி பாலை குடித்துக்கொண்டு அமர காலை உணவும் வந்துவிட்டது அவர்களுக்கு.
“வரும்போது தானே மாப்பிள்ளை சாப்பிட்டோம்…” என முகிலரசன் சொல்ல,
“ஏழுமணிக்கு லைட்டா சாப்பிட்டது. இப்ப பசி எடுக்குமே. சாப்பிடுவோம்…” என்று சொல்ல மறுக்க முடியவில்லை.
காலை உணவை முடித்துவிட்டு அமர, ப்ரியதர்ஷன் உடை மாற்றி கிளம்பி வந்துவிட்டான்.
இப்படி அவன் கிளம்பிவிடுவான் என இவர்கள் யாருமே நினைக்கவில்லை. திகைத்து போய் பார்த்திருக்க,
“என்னவோ இங்க வந்து பர்ச்சேஸ் பண்ணனும்ன்னு நீங்க சொன்னதா அமலா சொல்லிட்டிருந்தா. வெளில போறதா இருந்தா கார் வீட்டுல தான் இருக்கும். எடுத்துட்டு போய்ட்டு வாங்க. ட்ரைவர் வேணும்னா ஒரு கால் பண்ணுங்க. அனுப்பறேன்…” என்றான்.
“சரிங்க மாப்பிள்ளை…” என்றுவிட்டார் கலா.
“வேற எதுவும்ன்னா கால் பண்ணுங்க….” என்று சொல்லியவன் மனைவியை பார்த்தான்.