அவந்திகா அவன் பேசுவதையே வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்க கண்டவன் தலையசைத்து வெளியே அழைக்க,
“வர்றேன்…” என்று சொல்லியே அவள் வெளியே வந்தாள் அவனுடன்.
“நல்ல முன்னேற்றம். நல்ல மாற்றமும் கூட…” என்று வந்தவளை பாராட்ட,
“என்ன?…” என்று பார்த்தாள்.
“எதுவுமில்லை. நீ ரெஸ்ட் எடு. ஏதாவது வேணும்னா சாமந்திக்கிட்ட சொல்லு. இல்லையா எனக்கு கால் பண்ணு. நான் ஏற்பாடு பன்றேன்…” என்றவன்,
“நீ ஓகே தானே? எதுவும் அன்-ஈஸியா இருக்கா?…” என்றான் அவளிடம்.
“இல்ல ஓகே தான். அப்படி எதுவும் இல்லை…” என்று சொல்ல, அவந்திகாவின் பாதத்தை குனிந்து பார்த்தான் ப்ரியதர்ஷன்.
“அப்பப்ப கால்ல நீர் காட்டுதுன்னு அமலா சொன்னா…” என்றதும் தானுமே தன் காலை குனித்து பார்க்க லேசாய் வீக்கம் வைத்திருந்தது.
“ஹாட் வாட்டர்ல வச்சா சரியாகிடும். ரொம்ப நேரம் அசைக்காம காலை லேசா மடக்கி வச்சிருந்தேன். அதான்…” என்று சொல்ல கேட்டவன் தலையசைத்துக்கொண்டான்.
“ஓகே, நீ உள்ள போ. மத்தியானம் என்ன வேணும்ன்னு சொன்னா சாமந்தி சமையல் செஞ்சிருவாங்க. உனக்கு என்ன புடிக்குமோ செய்ய சொல்லு…” என்றவன்,
“அப்பறம் இந்த சேரியை மாத்திக்கோ. எப்பவும் நீ வீட்டுல போடற மேக்சியை போட்டுக்கோ. அன்ட் ஈவ்னிங் டாக்டர் அப்பாயின்மென்ட் இருக்கு. உன்னோட மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் எல்லாம் எடுத்து ரெடியா வச்சிக்கோ. ஓகே…” என்று மடமடவென்று சொல்லிவிட்டு செல்ல அவந்திகா அப்படியே நின்றுவிட்டாள்.
ப்ரியதர்ஷன் வெளிகேட்டை பூட்டவும் அவனுக்கான வாகனம் தயாராய் வந்து நின்றிருக்க அதில் ஏறி அமர்ந்தவன் திரும்பி பார்க்கையில் அவன் மனைவி, அவனின் வீட்டு வாசலில்.
ப்ரியதர்ஷன் மனதெல்லாம் சொல்லமுடியாத வகையில் ஒருவித மகிழ்ச்சியில் கூத்தாடியது.
அவந்திகாவிடம் தலையசைத்துவிட்டு திரும்பிக்கொண்டவனை தன் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்துக்கொண்டே நின்றாள் அவந்திகா.
“இன்னும் எவ்வளோ நேரம் இங்கயே நிப்ப அவந்தி?…” என தரணி அழைக்க,
“ஹாங், சும்மா தான் அண்ணி. இந்த இடத்தை சுத்தி பார்த்தேன்…” என்று சமாளித்தாள் அவள்.
“சரி, சரி உள்ள வா…” என்று உள்ளே அழைத்துக்கொண்டு வரும்பொழுதே,
“உனக்கு பிடிச்சிருக்கா அவந்தி? இந்த இடமும் வீடும் எப்படி இருக்கு? நீ எதுவுமே சொல்லலையே?…” என்றாள் அவளோடு சோபாவில் அமர்ந்தபடி.
“இப்படி ஒரு வீட்டை பிடிக்கலைன்னு சொல்லமுடியுமா என்ன? அதுவும் அவளுக்கு பிடிச்ச மாதிரியே இருக்கு இந்த வீடு. யாரும் உள்ள வந்து பார்த்தா குவாட்டர்ஸ்ன்னு சொல்லவே மாட்டாங்க. அப்படி இருக்கு…” என்றார் கலா.
“ஆமாமா, ஆனா வெளில தான் என்னவோ. சரி அதை விடுங்க. ஆமா, இத்தனை வாங்கி வச்சிருக்காரே மாப்பிள்ளை. நாம என்ன வாங்கறது? எனக்கு புரியலையே?…” என்றார் கவலையுடன் கலா.
“ம்மா, அதான் கல்யாணத்தப்பவே நிறைய செஞ்சுட்டீங்களே. இப்பவும் எதுக்கு? விடுங்க…” அவந்திகா கூற,
“அது எல்லாம் உன் மாமியார் வீட்டுல இல்ல இருக்கு. முதல்லையே நீ இங்க வர்றதா இருந்திருந்தா எல்லாத்தையும் இங்க அனுப்பி வச்சிருந்திருக்கலாம். உன் மாமியார் என்னன்னா எல்லாத்தையும் வாங்கி வச்சிட்டு அவ போறன்னைக்கு கொண்டுபோகட்டும்ன்னு சொல்லிட்டாங்க. சும்மா இருக்கேன்னு எனக்கு தான் கவலையா இருக்கு….” என்று கலாவிற்கு இன்னுமே மனத்தாங்கல்.
“ம்மா அதுக்குன்னு நீங்க வாங்கி தருவீங்கன்னு அவர் உக்கார்ந்திருப்பாரா? அதோட அவரும் இங்க தான் இருக்கார். அவருக்கு தேவையிருக்கும்ல. விடுங்க. கெட்டு போற பொருளா என்ன?…” என்றான் ராகவ்.
“ப்ச், எலெக்ட்ரிக்கல் பொருள் எல்லாம் இருக்குல. இவ என்னைக்கு அதை எடுத்து பழக? அதுக்குள்ள ஓல்ட் மாடலாகிரும்…” என்று சொல்ல,
“அம்மா மதியத்துக்கு என்ன சமைக்கட்டும்?…” என்று வந்தார் சாமந்தி.
“உங்களை மறந்துட்டேன் பாருங்க. ஆமா இங்க நீங்க தான் சமையலா?…” என கலா அவரிடம் பேச,
“இல்லைங்க. எப்பவாச்சும் தான் சமைப்பேன். வாரம் ஒருக்கா வந்து வீட்டை நல்லா சுத்தம் பண்ணிட்டு போயிருவேன். மத்தபடி எல்லாம் ஸார் தான் செஞ்சுப்பார்…” என்றார் சாமந்தி.
கேட்டவர்களுக்கு நம்பமுடியாத திகைப்பு. அங்கையும், அமலாவும் இங்கே ஆள் இருப்பதாக சொல்லியிருக்க இங்கே விஷயமே வேறாக இருந்ததே?
“என்ன வேணும்ன்னு சொன்னீங்கன்னா போய் கடையில வாங்கிட்டு வந்திருவேன். சமையலையும் வச்சிடுவேன்…” என்று சாமந்தி கேட்க,
“சமையல் நாங்க பன்றோம். கடை எங்க இருக்கு?…” என்று கேட்ட கலா தேவையானவற்றை சொல்லி பணம் தர,
“பணம் ஸார் குடுத்துட்டு போயிருக்கறார். அதுவே இருக்குங்க…” என்று சாமந்தி சொல்லிவிட, கலாவும் தலையசைத்துக்கொண்டார்.
“சரி அவந்தி, நீ போய் கொஞ்சநேரம் ஹாட்வாட்டர்ல காலை வச்சுக்கோ. இல்லைன்னா ஹாட்பேக் வச்சுட்டு காலை நீட்டி படு. நான் அப்பறமா எழுப்பறேன்….” என மகளை அனுப்பிய கலா தரணியை பார்க்க,
“நானும் இவனுக்கு சாப்பாட்டை ஊட்டறேன் அத்தை. சாப்பிட்டு ஒரு தூக்கம் தூங்கினானா நாம நிம்மதியா வேலையை பார்க்கலாம்…” என்று தரணி மகனை தூக்கிக்கொண்டு வெளியே செல்ல உடன் ராகவ்வும் பின்னே சென்றான்.
“நீங்க என்ன? போய் கொஞ்சம் படுக்கலாம்ல…” என்றதும் முகிலரசனும் தலையை ஆட்டிவிட்டு எழுந்து சென்றார்.
அனைவரும் சென்றுவிட வீடே காலியாக இருந்தது. ஜனசந்தடி அதிகமில்லாத ஒரு அமைதி அந்த இடத்தில்.
உண்மைக்கும் அந்த அமைதி கலாவிற்கு மனதிற்கு நிம்மதியளிக்க எழுந்து பின்னே வந்தார்.
அடுக்களையை தாண்டி பின் பக்கமும் இடமிருக்க அங்கே துவைக்க கல், துணி உலர்த்த கயிறு என எல்லாம் இருந்தது.
அதனை பார்த்துவிட்டு உள்ளே வந்தவர் சமையலுக்கு என்னென்ன இருக்கிறது என்று கவனிக்க அவரின் கைப்பேசி இசைத்தது.
சத்தம் கேட்டு வெளியே வந்து அதனை எடுத்து பார்க்க அங்கை தான் அழைத்திருந்தார் அவருக்கு.
அழைப்பை ஏற்றதும் அங்கையின் முகம் முழுதாய் தெரிய பார்த்ததுமே புன்னகைத்தார் கலா.
“எப்படி இருக்கீங்க சம்பந்தி?…” என கேட்க,
“எனக்கென்ன? நான் நல்லா இருக்கேன். நீங்க சௌக்கியமா ஊருக்கு போய் சேர்ந்தாச்சுங்களா?…” என்றார் அங்கை.
“அதெல்லாம் சௌகரியமா வந்துட்டோம் சம்பந்தி. என்ன ஒன்னு நீங்க வராதது தான் சங்கடமா இருந்துச்சு…” என்றதும்,
“அதுக்கென்ன நாளைக்கு வந்துட்டு போறேன். ஆமா, வீடெல்லாம் வசதியா இருக்குங்களா சம்பந்தி….” என்றவர்,
“ஒத்த ரூம் தான் இருக்கும். எப்படி சமாளிக்க போறீங்களோ?…” என்றார் அவர் கலாவிடம்.
“ஒத்த ரூமா? இல்லையே சம்பந்தி. வீடு நல்லா பெருசா விசாலமா இல்ல இருக்கு. அதுவும் மூணு பெட்ரூம் இருக்கே…” என்று சொல்ல அங்கையின் முகத்தில் வியப்பு.
“அப்படியா? வீடு மாறிட்டானா என்ன?…” என்றார் நம்பமுடியாமல்.
“ஏன் உங்களுக்கு தெரியாதுங்களா?…” என்ற கலா,
“இங்க பாருங்களேன்…” என்று வீட்டின் முன்னிருந்து அவரிடம் காண்பித்துக்கொண்டே பின்பக்கம் வந்துவிட்டார்.
“ரூம்ல எல்லாம் படுத்திருக்காங்க. நாளைக்கு தான் நீங்க வந்திருவீங்களே. வாங்க…” என்று சொல்ல,
“சரிங்க சரிங்க…” என்ற அங்கைக்கு என்னவோ போலானது.
“நான் கூட இங்க வந்து அவந்திக்கு தேவையான எல்லாம் வாங்கி வைக்கனும்ன்னு நினைச்சேன் சம்பந்தி. ஆனா மாப்பிள்ளையே அதுக்கு அவசியமில்லாம பண்ணிட்டார்…” என்றவர்,
“இப்போதைக்குள்ள நீங்க இங்க வரலையோ?…” என்றார் கலா.
“இல்லைங்களே. இவங்க கல்யாணம் முடிஞ்சதும் மருமக வந்ததும் நமக்கு எங்க போக நேரம் அமைஞ்சது. அவந்தியை பார்த்துக்கவே சரியா போச்சு. இதுல அங்க அவன் என்ன பண்ணிருக்கான்னும் கேட்கலை நான். எப்படியோ சந்தோஷமா இருந்தா சரி…” என்றவர்,
“சரிங்க சம்பந்தி, நான் வச்சிடறேன். நீங்க அங்க வேலைய பாருங்க. கிளம்புபோது கூப்பிடறேன்…” என்று வைத்துவிட்ட அங்கைக்கு மருமகள் கூட தனக்கு அழைத்து பேசவில்லையே என்ற வருத்தம் மேலோங்க ஆரம்பித்தது.
இங்கே அவந்திகா அவர்களின் அறையில் மாட்டப்பட்டிருந்த அவர்களின் திருமண புகைப்படத்தினை பார்த்துக்கொண்டிருந்தாள்.
திருமண ஆல்பமும் ஒருமுறை பார்த்ததோடு சரி. எங்கே இருக்கிறதென என்று கூட அறிந்துகொள்ளவில்லை.
அறிந்துகொள்ளும் விதமாய் அவளின் உடல்நிலையும், சூழ்நிலையும் இருக்க இப்போது அங்கிருந்த வாட்ரோப்பில் இருந்து ஆல்பத்தை வெளியில் எடுத்து வைத்தாள் அவந்திகா.
முதல் பக்கத்திலேயே பெரிதாய் இருந்தது இருவரின் புகைப்படம்.
அவளை கொள்ளை கொள்ளும் புன்னகையுடன் கொள்ளை சிரிப்போடு ப்ரியதர்ஷன் விழிகள் மின்ன அவந்திகாவின் கழுத்தில் திருமாங்கல்யத்தை பூட்டியவாறு அவளை தான் பார்த்திருந்தான் அதில்.
அன்றைக்கு இதனை உணர்ந்திருந்தாளா என்று இப்போது யோசிக்க தெரியவில்லை.
ஆனால் இந்தநிமிடம் உணர்ந்தாள். தலையை லேசாய் கவிழ்த்தபடி குறுஞ்சிரிப்புடன் அவந்திகாவும், அவளின் முகம் பார்த்தபடி ப்ரியதர்ஷனும் இருக்க, இருவரின் மீதும் அட்சதை பூக்கள் தூவப்பட்டு அதுவும் அழகாய் படமாகியிருந்தது.
அவந்திகாவின் விரல்கள் மெலிதாய் அதனை வருடி பார்த்து உள்ளம் சிலிர்ப்பதையும் உள்ளார்ந்து ரசித்தாள்.