அங்கை திகைத்து நின்றது ஒரு நொடிதான். சட்டென சுதாரித்தவர் முகத்தில் புன்னகை மீண்டது.
அவந்திகாவிற்கு அவரின் திகைப்போ, அதிர்வோ எதுவுமே கருத்தில் பதியவில்லை.
தன் மாமியார், நாத்தனார் குடும்பத்துடன் வந்திருக்க அத்தனை மகிழ்ச்சி அவளுக்கு.
பார்க்கும்விதம் சரியாக இருந்தால் அனைத்தும் சரியே என்பதை போல அங்கையை பார்க்கும் விதம் அவந்திகாவின் மனதில் நேர்மறையாகவே இருக்க அங்கையின் பார்வை கூட எந்த யோசனையையும் தரவில்லை அவளுக்கு.
ப்ரியதர்ஷனை பார்த்த பார்வையும், இப்போது அவன் நடந்துகொள்ளும் விதமும், தான் கேள்விப்பட்டதுமென்று இப்போதுதான் அந்த வட்டத்திலிருந்து விலகி யோசித்தவளுக்கு வேறு எந்தவித சந்தேகங்களும் தோன்றவில்லை.
“துளசி…” என்று அமலாவின் மகளை அணைத்துக்கொண்டவள்,
“எங்களோட அன்னைக்கு கார்ல வந்திருக்கலாம்ல. செம்ம ஜாலியா இருந்துச்சு…” என்று அவந்திகா சொல்ல,
“நம்பிட்டோம்…” என்றான் நளன்.
“அப்படி சொல்லுங்கண்ணா, நாங்க வந்த கதை தான் உங்களுக்கு தெரியுமே…” என ராகவ் சேர்ந்துகொள்ள,
“இனி அண்ணனையும், தம்பியையும் கைல பிடிக்கமுடியாது…” என்று அலுத்துக்கொண்டாள் அமலா.
“நீங்க வாங்கக்கா. உள்ள போவோம்…” என்ற தரணி,
“துளசி தம்பி உள்ள தூங்கறான். வா வா…” என அவளையும் கூட்டிக்கொண்டு தாங்கள் இருந்த அறைக்குள் நுழைந்தாள் தரணி.
“என்ன அவந்தி, அத்தையை பார்த்ததும் அப்படியே சந்தோஷத்துல நின்னுட்ட? உள்ள கூட்டிட்டு போ…” என்ற கலா,
“வாங்க சம்பந்தி…” என்றார் அங்கையிடம்.
“என்ன சம்பந்தி, உங்க முகமே வாட்டமா இருக்கு?…” என முகிலரசன் கேட்க, தரணியும் வெளியே வந்தாள்.
“உடம்புக்கு எதுவும் முடியலையா த்தை?…” என்றாள் அவந்திகா அக்கறையுடன்.
“அதெல்லாம் இல்லைம்மா. நீ உக்காரு இப்படி…” என மருமகளை தன் அருகில் அமர்த்திக்கொண்டார் அங்கை.
“ம்மா, முதல்ல முகம் கழுவிட்டு வாங்க. சூடா டீ சாப்பிடலாம். ப்ரஷாகிடுவீங்க…” என தரணி அழைக்க,
“இருக்கட்டும். இப்பத்தான வந்திருக்கேன்…” என்றவர் பார்வை மகனை தேடியது.
“அவங்க குளிச்சிட்டிருக்காங்க த்தை. வேலைக்கு கிளம்பனும்ல…” என அவந்திகா சொல்ல,
“சரி, நீங்க பேசிட்டிருங்க. நாங்க டிபன் பன்றோம்…” என்ற கலா,
“சாமந்திக்கு ஒரு போனை போடு அவந்தி. எலுமிச்சை பழம் வாங்கிட்டு இப்ப வந்திடறேன்னு போனா. இன்னும் காணும்…” என சொல்லிக்கொண்டே உள்ளே செல்ல தரணியும் பின்தொடர்ந்து சென்றாள்.
“வாங்கண்ணே, நாமளும் ஒரு வாக் போய்ட்டு வருவோம். கேம்பஸ் வெளில சூப்பர் டீ ஷாப் இருக்கு. ஒரு டீ அடிச்சிட்டு வருவோம்…” என ராகவ் நளனை அழைக்க,
“வீட்டுல அண்டாவா டீ போட்டு வச்சாலும் கடையில ஒரு டீ குடிக்கலைன்னா அன்னைக்கு பொழுது உங்களுக்கு ஓடவே செய்யாது. அதான?…” தரணி எட்டிப்பார்த்து ராகவ்வை முறைத்தாள்.
“நீ டீ போட ஆரம்பிச்சு டிகாஷன் கொதிக்கிறதுக்குள்ள நான் வந்திருவேன்….” என ராகவ் கேலி பேச,
“முதலுக்கே மோசமா போக போகுதுடா தம்பி. அப்பறம் இங்கினவே செல்லுல தூக்கி வச்சு முட்டிக்கு முட்டி தான். எப்பேன்னாலும் மச்சான் கருணையே காமிக்கமாட்டான். பார்த்துக்கோ. இங்க மெஜாரிட்டி அவங்க தான்…” என்று நளன் எச்சரிக்க,
“நீங்க அப்படி சொல்றீங்களா? அண்ணன் உடையான் படைக்கு அஞ்சான்னு உணர்ச்சிவசப்பட்டுட்டேன்…”
“அது தம்பிடா தம்பி. சரி விடு. நமக்கென்ன புதுசா இதெல்லாம். பார்த்துக்குவோம்…” என்ற நளன்,
“தரணிம்மா, இந்த ஏரியா எனக்கு புதுசு. என் தம்பியோட உலக நடப்பை தெரிஞ்சுட்டு வர்றேன்…” என்று சொல்லி ராகவ்வை இழுத்துக்கொண்டு செல்ல,
“சேட்டையை பார்த்தீங்களா? இனி ரெண்டுபேர் கலாட்டாவை நிப்பாட்டவே முடியாது…” என தம்ளரில் பாலை ஆற்றிக்கொண்டு வந்தாள் தரணி.
“அமலாக்கா, துளசிக்கு பால் காய்ச்சிட்டேன். குடுக்கறீங்களா?…” என கேட்க,
“அப்ப இந்த பால் துளசிக்கு இல்லையாம்மா?…” என்றார் அங்கை.
“இல்லைம்மா, அமலாக்கா தான் அவ பாத்ரூம் போய்ட்டு வரவும் குடுப்போம்னு சொன்னாங்க. அதான் பிள்ளைங்களுக்கு காய்ச்சி வச்சிட்டேன். இது அவந்திக்கு…” என்று சோபாவில் அமரவும் அங்கை மருமகளை பாத்தார்.
“பாலா? நீ காபி குடிச்சிட்டியா அவந்தி?…” என்றார் அவளிடம்.
“இல்லைத்தை, டாக்டர் காபி இப்போதைக்கு குடிக்க வேண்டாம்ன்னு சொல்லிருக்காங்க….” என சொல்ல,
“டாக்டரா? அப்படி ஒன்னும் சொல்லலையே ம்மா….” என்றவர்,
“அதுவும் நீ காபி குடிக்கிறதே ஒரு நேரம் தான். அதான் கேட்டேன்…” என்றார்.
“நேத்து இங்க உள்ள ஹாஸ்பிட்டல்ல செக்கப் போனோம் த்தை. அங்க தான் சொன்னாங்க. அதோட ஒருநேரம் குடிச்சாலும் நான் ரொம்ப ஸ்ட்ராங்கா காபி குடிக்கறேன் இல்லையா? அதான் வேண்டாம்ன்னு சொல்லியிருக்காங்க…” என்று சொல்ல,
“ஓஹ், அப்படியா?…” என்றவர் அந்த வீட்டை சுற்றி பார்த்தார்.
மனதில் இனம்புரியாத ஒரு வலியும், சுமையும். என்னவென்றே சொல்லமுடியாமல் சுற்றிலும் பார்த்தவர்,
“இங்க எப்போ வந்தானாம்?…” என்றார் அவளிடம்.
அதற்கு அவள் பதில் சொல்லும்முன் எழுந்து வீட்டை சுற்றி பார்த்த அங்கை ஆங்காங்கே மாட்டப்பட்டிருந்த குடும்ப புகைப்படங்கள், ப்ரியதர்ஷன், அவந்திகாவின் திருமண புகைப்படங்களை எல்லாம் பார்த்தபடி அடுக்களைக்குள் நுழைந்தார்.
அங்கை எழுந்துகொண்டதும் தானும் எழுந்து நின்ற அவந்திகா அவரை பின் தொடர,
“நீ எங்க போற அவந்தி?…” என்றாள் தரணி.
“அத்தை வந்ததுல இருந்து எதுவுமே சாப்பிடலையே. இந்த நேரத்துக்கு மூணு காபி, இல்ல டீ குடிச்சிருப்பாங்க அண்ணி. அதான் போட்டு தரலாமேன்னு…” என அவந்தி கூற,
“நீ நடத்து. தனிக்குடித்தனம் வரவும் தன்னைப்போல பிள்ளைக்கு தன் வீடு, தான் கவனிக்கனும்ன்ற எண்ணம் வந்திருச்சு…” என்றாள்.
“அத்தை என்னை எப்படியெல்லாம் பார்த்துக்கிட்டாங்க. அப்போ நானும் கவனிக்கனும்ல அண்ணி…” என்றவள் வயிற்றை பிடித்துக்கொண்டு அங்கையின் பின்னே செல்ல அவர் அடுக்களைக்குள் நின்றிருந்தார்.
“வீடு நல்லா இருக்குல சம்பந்தி. நான் கூட வெளில பார்த்ததும் என்னவோன்னு நினைச்சேன். ஆனா வீட்டுக்குள்ள நல்ல அமைப்பா, வெளிச்சமா காத்தோட்டமாவும் விசாலமாவும் இருக்கு….” என்றவர்,
“நீங்க ஒத்த ரூம்ன்னு சொல்லவும் என்னவோன்னு நினைச்சிட்டேன்…” என்றார் கலா.
“ஹ்ம்ம்…” என்றவருக்கு பேச்சே வரவில்லை.
கலா என்ன செய்கிறார் என்று அங்கை பார்த்துக்கொண்டு நிற்க அடுப்பில் காலை உணவுகள் தயாராகிக்கொண்டிருந்தது.
“ஹ்ம்ம், சரிங்க சம்பந்தி…” அங்கை மெல்லிய குரலில் சொல்ல,
“துளசிக்கு பூரி தான புடிக்கும். அதான் அவந்தி செய்ய சொன்னா. அதுவும் இல்லாம எல்லாரும் இங்க முதல்தடவை வந்திருக்கோம். இது கூட செய்யலைன்னா எப்படி?…” என்றவர் பரபரப்பாய் வேலை செய்துகொண்டே பேச,
“நீங்க ரெஸ்ட் எடுங்க சம்பந்தி. நான் செய்யறேன். இப்படி வாங்க…” என கலாவிடமிருந்து ரவை வறுக்கும் கரண்டியை வாங்க முயன்றார் அங்கை.
“அட இருக்கட்டும் சம்பந்தி. இனிமேயாச்சும் நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க…” என்ற கலா,
“என்ன அவந்தி, காபியை கேட்டுட்டு தான் போடுவியா? போட்டு குடு…” என்றார் மகளிடம்.
“சரிம்மா…” என்றவள் காபி பாத்திரத்தை எடுத்து வைத்தாள்.
“நீ இங்கிட்டு வா அவந்திம்மா. அத்தை போடறேன். உன்னை ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்காங்க இல்ல?…” என்று அங்கை வாங்க பார்த்தார்.
“அச்சோ அத்தை. அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். அதுவுமில்லாம எது எங்க வச்சோம்ன்னு நீங்க தேட வேண்டியதா இருக்கும். அங்க நம்ம வீட்டுல உங்க கை வசத்துக்கு வச்சதா சொல்லுவேங்க இல்ல. அதான், இங்க நேத்தே அம்மா என்னை எனக்கு எடுக்கற மாதிரி வைக்க சொல்லிட்டாங்க…” என்றவள்,
“நீங்க உக்காருங்க. நான் கலக்கறேன்…” என்று சொல்லியவள் சிரிப்புடன் காபிக்கு தயார் செய்ய,
“அவ செய்யட்டும் சம்பந்தி. இங்க நேத்தே டாக்டர்கிட்ட கேட்டாச்சு. கொஞ்சம் கொஞ்சமா வேலை செய்யலாம்ன்னு சொல்லியிருக்காங்க. அப்பத்தான் அவளுக்குமே நல்லதுன்னு…” என கலா சொல்லிவிட அங்கைக்கு என்னென்னவோ செய்தது.
“அதுவும் இல்லாம ரெண்டுமூணு நாள் நாம பார்த்துப்போம். அடுத்து அவ தானே கவனிச்சிக்கனும். புருஷனையும் பார்த்து அவளுக்கும் அவ பார்த்துக்கிட்டா தான தைரியமா இருக்கும்….” என்ற கலா,
“முன்னாடி ரொம்ப தலைசுத்தல் வாமிட் இருந்துச்சு. அதனால படுத்தே இருந்தா. இப்ப தான் குறைஞ்சிருச்சே? அதுவுமில்லாம முதல்லையே இங்க தனியா வந்திருந்தா முடியுதோ இல்லையோ அவ தான செஞ்சாகனும்? நாம கூடவே இருக்க முடியுமா?….” என்று பேசிக்கொண்டே கேசரியை கிண்ட ஆரம்பித்துவிட்டார்.
“ரவை கேசரியா? துளசிக்கும், அமலாவுக்கும் சேமியா கேசரி தான் புடிக்கும்…” என்றார் அங்கை.
“அதுக்கென்ன? இப்ப ரவை செஞ்சிருவோம். அதோட மருமகனுக்கு ரவை கேசரி ரொம்ப இஷ்டம் போல. நேத்து ஹாஸ்பிட்டல் போய்ட்டு வரும்போது ஒரு ஹோட்டல்ல ரவை கேசரி வாங்கிட்டு வந்தார். அதான் அவந்தி செய்ய சொன்னா…” என்றார் கலா.
“இந்தாங்க த்தை…” என்று அவந்திகா காபி கப்பை நீட்டி, தன் மாமியாரின் முகத்தையே அப்படி ஆவலுடன் பார்த்தாள்.
புகுந்தவீட்டில் சுடுதண்ணீர் வைக்க கூட அங்கை அவளை அனுமதித்ததில்லை. முதன்முதலாக தன் கையினால் அவருக்கு ஒன்று செய்தவளுக்கு அங்கை என்ன சொல்வாரோ என்ற பார்வை தான்.
“காபி வாசம் தூக்குதே. எனக்கெல்லாம் இல்லையா காபி?…” என்று அமலாவும் வந்துவிட,
“போட்டிருக்கேன் அண்ணி…” என்று அவளுக்கும் கொடுத்த அவந்திகா,