“வெளில போயிருக்காங்க. இப்ப வந்திருவாங்க…” என்ற அமலா,
“லீவ் இல்லையா?…” என்றாள் தன் தம்பியிடம்.
“இஷ்டத்துக்கு லீவ் குடுக்கனும்ன்னா டிப்பார்மென்ட்டை நாம தான் நடத்தனும்….” என்று சொல்லிவிட்டு,
“அவந்தி டிபன் ரெடியா?…” என்றான் மனைவியிடம்.
“ரெடியாகிருச்சுங்க. உக்காருங்க வர்றேன்…” என்று சொல்லவும் தலையசைத்து சென்றான் ப்ரியதர்ஷன்.
அங்கே நடக்கும் ஒவ்வொன்றையும் பார்த்தபடி அமைதியாய் நின்றுவிட்டார் அங்கை.
“லீவ் இல்லையான்னு கேட்டா பேச்சை பாரு…” என அமலா சலிப்புடன் காபியை குடிக்க,
“அவன் தான் சாதாரணமா கேட்டாலும் கோவப்படுவான்னு தெரியும்ல. அப்பறம் எதுக்கு இதெல்லாம் கேட்டுட்டு இருக்க அமலா?…” என்று மகளிடம் எரிச்சலாக,
“அச்சோ அத்தை. அவங்க கோவப்படலை. சாதாரணமா தான் சொன்னாங்க…” என்று அவந்திகா சொன்னதுமே அங்கைக்கு மயக்கம் வராத குறை தான்.
இதுவரை தன் பேச்சிற்கு மறுபேச்சு பேசாத அவந்திகா இன்று அவரின் பேச்சை திருத்தி சொல்ல அவளை பார்த்தபடி நின்றுவிட்டார்.
“அவங்களுக்கு தெரியாதா அவந்தி? கிளம்புபோது எதுக்கு இப்படி கேட்கனும்ன்னு தான் அமலாக்கிட்ட சம்பந்தி சொன்னாங்க. நீ பேசிட்டே நிக்காம டிபனை கொண்டுபோய் வை…” என்று மகளின் கையில் உணவு பாத்திரங்களை எடுத்து தர,
“நான் வைக்கறேன். அவளை ஏன் வேலை வாங்கறீங்க சம்பந்தி?…” என்றார் அங்கை.
“இத்தனை நாள் தான் நாம பார்த்துட்டோம். அவ பார்க்கட்டுமே சம்பந்தி. அதுவுமில்லாம மாப்பிள்ளை வர சொல்லிட்டு போயிருக்கார். அவளே வைக்கட்டும்…” என்று மகளிடம் கொடுத்து அனுப்பியவர்,
“அவந்தி, பூரி போடறேன். அதனால இட்லி சுருக்கமா மட்டும் வை…” என்று எண்ணெய் பாத்திரத்தை தஅடுப்பில் ஏற்ற அங்கைக்கு எரிந்தது.
“அத்தை அப்படியே எனக்கும் கேசரியை ஒரு கிண்ணத்துல போடுங்க. சூடா சாப்பிடுவோம்…” என்றாள் அமலா.
“துளசிக்கும் ஊட்டு அமலா….” என்று கலா அவளுக்கு போட்டு தர,
“அவ சேமியா கேசரி தான் சாப்பிடுவா சம்பந்தி…” என்றார் அங்கை மீண்டும்.
“பிள்ளைங்க இதுதான் சாப்பிடுவாங்கன்னு நாம செஞ்சு குடுத்துட்டே இருந்தா அதை மட்டும் தான் சாப்பிடுவாங்க சம்பந்தி. இதை ஊட்டி பார்க்கட்டும். வேண்டாம்ன்னா விட்டுடலாம். ஈவ்னிங் துளசிக்கு பிடிச்சதா செய்வோம்…” என்று சொல்லிவிட,
“அதுவும் சரிதான்…” என்று அமலா சென்றுவிட அங்கை காபியை குடிக்காமல் அங்கே வைத்தார்.
“என்னாச்சு சம்பந்தி குடிக்கலையா?…” என கலா கேட்க,
“ரொம்ப சூடா இருக்கு. அதான். அப்பறமா குடிச்சுக்கறேன்….” என்று சொல்லிவிட்டு அங்கை செல்ல, கலாவின் மனதிற்கு என்னவோ சரியாய் படவில்லை அவரின் முகபாவனை.
அங்கை ஹாலுக்கு வந்தமர அமலா பேசியபடி அமர்ந்திருக்க துளசி கேசரியை தானே எடுத்து சாப்பிட, தரணியும் அருகில் மகனை வைத்துக்கொண்டு அமலாவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
அவரின் சத்தத்தில் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த அவந்திகாவும், ப்ரியதர்ஷனும் திரும்பி பார்க்க,
“ஏன் ம்மா? நான் தான் துளசிக்கு எடுத்து சாப்பிட சொல்லி குடுத்தேன். சிந்தாம அழகா சாப்பிடறாளே?…” என்றாள் தரணி.
“அவ குழந்தைம்மா. நாம தான் குடுக்கனும். அப்ப தான் வயிறும் நிறையும்…” என அங்கை சொல்ல,
“அஞ்சு வயசாக போகுது தானே ம்மா. ஸ்கூல்ல எல்லாம் அவளே சாப்பிடனுமே?…” என தரணி சொல்ல அங்கை தொண்டைக்குழிக்குள் என்னவோ சிக்கிக்கொண்ட உணர்வு.
இதில் மகன் வேறு அவரையே பார்த்துக்கொண்டிருக்க, அவனருகில் இலகுவாய், இயல்பாய் மருமகள். பார்த்தவர் துணுக்குற்று போயிருந்தார்.
“நீங்க சாப்பிடலையா ம்மா? வந்து சாப்பிடுங்க. மாத்திரை போடனும்ல….” என ப்ரியதர்ஷன் அழுத்தமான குரலில் அழைத்துவிட்டு உணவில் கவனமாக அவந்திகாவின் பார்வை இப்போது அங்கையிடம் குழப்பமாய் பாய்ந்தது.
“நீ சொல்ற, கேட்கிற என்னை அக்கறையா விசாரிக்கிற நான் சாப்பிட்டாச்சான்னு. ஆனா ஒருநாள்பொழுது அம்மாவாச்சே, சாப்பிட்டீங்களான்னு கேட்டிருப்பானா? என்னவோ போ. நான் மாத்திரை மருந்து எடுக்கறது கூட தெரியுமோ என்னவோ?…” என்று ப்ரியதர்ஷன் வரும் ஒவ்வொருமுறையும் அவந்திகாவிடம் அவர் பாடும் பாடல் இவை.
“ம்மா உங்களை தான்…” இப்போது ப்ரியதர்ஷன் குரல் உயர்ந்துவிட்டது.
“இதோ வர்றேன்….” என்று எழுந்துகொண்டவர் அவன் மேலும் பேசும்முன் வந்தமர்ந்துவிட்டார்.
அமலாவுமே இதனை பார்த்தபடி தான் இருந்தாள். கலாவும் பூரியை எடுத்துக்கொண்டு வந்துவிட,
“அவந்தி நீயும் சாப்பிடு. ஒவ்வொருத்தரா சாப்பாட்டு வேலையை முடிங்க…” என்றவன் அங்கையை பார்த்துவிட்டு வேகமாய் உண்டவன் எழுந்து கை அலம்ப சென்றுவிட்டான்.
அங்கைக்கு உணவு இறங்கவே இல்லை. தட்டை அளந்துகொண்டு இருக்க அவந்திகாவும் சாப்பிட்டு முடித்துவிட்டாள்.
“என்ன அவந்தி? அதுக்குள்ள போதுமா? இன்னும் ரெண்டு இட்லி வச்சுக்கோ…” என்றவர்,
“இங்க என்ன நீ இப்படி சாப்பிடற? இப்படி இருந்தா சரியா? பிள்ளைதாச்சி பொண்ணு வேற…” என்று அங்கை அவளுக்கு பரிமாற பார்க்க,
“இல்லத்தை, டாக்டர் தான் சொன்னாங்க. பசிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டுக்க சொல்லி. ஒரேநேரமா நிறைய சாப்பிடறதால கூட வாமிட்டிங் இருக்குமாம். மூணுவேளை சாப்பிடறதை அளவை குறைச்சு அஞ்சு வேளையா கூட சாப்பிட்டுக்கலாமாம்….” என்று சொல்லிவிட்டு தானும் எழுந்து சென்றுவிட ப்ரியதர்ஷன் தங்களின் அறைக்குள் நுழைந்துகொண்டான்.
அங்கைக்கு சுத்தமாய் உணவு இறங்கவில்லை. இருந்ததை மட்டும் சாப்பிட்டுவிட்டு வந்து அமர்ந்துகொண்டார் சோபாவில்.
கைகழுவி விட்டு அவந்திகா தன்னிடம் பேச வந்துவிடுவாள் என்று பார்க்க அவள் ப்ரியதர்ஷனின் அழைப்பில் அங்கே சென்றுவிட்டாள்.
“டேப்லெட் போட்டுட்டியா? கால்ஷியம் டேப்லெட் வாங்கனுமே உனக்கு?…” என வாட்ரோப்பை திறந்து வைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தான் ப்ரியதர்ஷன்.
“மனசாட்சி இல்லைல. எப்படி உனக்கு தூக்கம் வந்துச்சு?…” என்று பல்லை கடித்துக்கொண்டு குரலை தழைத்து அவன் கேட்க,
“நீங்க தான தூங்குன்னு…” என்று அவனின் கோபத்தில் விழித்தாள் அவந்திகா.
ஏன் இத்தனை கோபம் என்று யோசித்தபடி அவனை பார்க்க அவளை முறைத்தபடி சென்று கதவை சாற்றியவன்,
“முதல்ல சில விஷயங்களை ஞாபகம் வச்சுக்கோ அவந்தி. இனிமே நான் மட்டும் ரூம்ல இருக்கும்போது, வீட்டுல மத்தவங்க இருக்கும்போது நீ வரும்போதே கதவை சாத்திட்டு வரனும். புரியுதா?…”
“புரியுது…” என்று சொல்லும்பொழுதே அவனின் இரு கைகளும் அவளை வளைத்துக்கொண்டது.
“மதியம் நான் வரமுடியாது. வருவேன்னு இருந்தா நானே இடையில கால் பண்ணுவேன். உன்கிட்ட சொல்லாம வரமாட்டேன். இது புரியுதா?…”
“ஹ்ம்ம், புரியுது…” என்றவள் அவன் அடுத்து என்ன சொல்வான் என்று எதிர்பார்ப்புடன் முகம் பார்த்தவள் சிலநொடிகள் ப்ரியதர்ஷன் எதுவும் கூறாமல் நிற்க,
“ஹ்ம்ம், அப்பறம்…” என்றாள் அவந்திகா.
அவள் கேட்டதும், கேட்ட விதமும் ப்ரியதர்ஷானின் பார்வையில் ரசனையை விதைக்க,
“அப்பறம் எல்லாம் வந்து பேசலாம். இப்ப இதை தெரிஞ்சுக்கோ. போ…” என்றவன் பேச்சில் தலையாட்டி நகர பார்க்க,
“போன்னா அப்படியே போறதா…” என்றவன் அவளின் கைபிடித்து நிறுத்தி கன்னங்களை நிறைத்துவிட்டு தானும் வெளியேறினான்.
உண்மைக்கும் அதுவொரு அழகான காலை இருவருக்குமே. சிரித்தபடி அவந்திகாவும், இயல்பாய் ப்ரியதர்ஷனும் வெளியே வர ஹாலில் தரணியுடன் பேசிக்கொண்டிருந்தார் அங்கை.
“கிளம்பறேன்…” என்றுமட்டும் பொதுவாய் சொல்லிவிட்டு அவன் செல்ல பின்னோடே அவந்திகாவும் தானாய் சென்றாள்.
“என்ன அவந்தி?…” என்றவரின் கேள்வி கூட அவளுக்கு கேட்கவில்லை.
“இங்க வா அவந்தி. உன்னோட பேச கூட முடியலை…” என்று தன்னருகில் அமர வைத்துக்கொண்டவர் மீண்டும் அவளின் கையை இறுக்கமாய் பிடித்துக்கொண்டார்.
முதலில் தரணிக்கு அது வித்தியாசமாக தோன்றவில்லை. ஆனால் இப்போது அவசரமாய் அழைத்து தன் கை பொம்மையை விட்டுத்தர விருப்பமில்லாததை போல் அங்கை அவந்திகாவை பிடித்து வைத்திருக்க கண்டு தரணியின் முகத்தில் யோசனை.
“உனக்கு இங்க பிடிச்சிருக்கா அவந்தி? நீ தனியா சமாளிச்சிடுவியா?…” என்று கேட்டவர்,
“எல்லாரும் கிளம்பிட்டீங்க. அங்க எனக்கு தூக்கம் கூட வரலை. கைக்குள்ளையே நீ இருந்துட்டியா. அதான்…” என்றவர் கலக்கத்துடன் அவந்திகாவை பார்த்தார்.
“இங்க பிரச்சனை எதுவும் இல்லைத்தை. எனக்கு வீடு பிடிச்சிருக்கு…” என்றாள் அவந்திகா.
“சரி வீடு பிடிச்சது. என் பையன் கோவப்படாம நடந்துக்கறானா உன்கிட்ட? பட்டு பட்டுன்னு பேசுவான். நாங்க இருக்கறதனால அமைதியா இருக்கானோ என்னவோ? என் கவலை எல்லாம் அதுதான்…” என்றதும் தரணிக்குமே திடுக்கிட்டது.
“நீங்க தான் த்தை சொல்றீங்க. நானுமே அப்படித்தான் நினைச்சேன். ஆனா பாருங்க. நல்லா தான் இருக்காங்க…” என்று அங்கையின் வாயடைத்தவள்,
“ஏன் த்தை, அவங்க உங்ககிட்ட சாப்பிட கூட கேட்கமாட்டாங்கன்னு சொன்னீங்க. நீங்க டேப்லெட் எடுக்கறது எல்லாம் கரெக்ட்டா சொல்றாங்களே?…” என்று கேள்வி எழுப்ப, பதறும் மனதுடன் அங்கை பதிலின்றி அவந்திகாவை பார்த்தார்.