அடுத்த நாள் காலையில் கார்த்தி கணவனுடன் கீழே இறங்கி வர ஹாலில் ராஜீவ் நின்றிருந்தான். கார்த்தி காளிதாஸைப் பார்க்க
“உன்னோடு பேசணும் சொன்னான்” என்றதும் தம்பியைப் பார்த்தவளுக்குத் தானாய்க் கண்ணில் நீர் நிறைந்தது.
அக்காவின் கண்ணீரைப் பார்த்த ராஜீவ் சட்டென கார்த்தியை அணைத்துக்கொண்டு “சாரி காதுக்கா, ஐ அம் ரியலி சாரி” என்றான் வேதனையுடன்.
கார்த்திக்குத் தம்பியின் செயலில் கண்ணீர் வந்தது. ராஜீவ் வருந்தி மன்னிப்புக் கேட்க, கணவனைப் பார்த்தாள்.
“அழாத கண்ணா” என்று சொன்ன காளிதாஸ்
“நீங்க பேசிட்டு இருங்க, நான் வரேன்” என்று சொல்லி அவர்கள் பதில் சொல்லும் முன்னே அவனின் அலுவலக அறை இருந்த கதவைத் திறந்து சென்றுவிட்டான்.
அக்காவும் தம்பியும் அந்த கண்ணாடி அறையின் சோஃபாவில் உட்கார்ந்திருந்தனர்.
“நீ எங்கிட்ட சொல்லியிருக்கலாமே காது, ஏன் தனியா கஷ்டப்பட்ட? அப்பாவும் அண்ணாவும் தானே தப்பு. நாங்க இல்லையா உனக்கு?” என்றான் வேதனையுடன்.
“சொல்லி உங்களைக் கஷ்டப்படுத்தக் கூடாது நினைச்சேன், அதைவிட இப்போ நான் சொல்றது உனக்குக் கஷ்டமா இருக்கும். பட் இப்படி ஒரு வீட்ல பொண்ணா பொறந்திருந்தா அப்போ என்னோட நிலைமை உனக்குப் புரிஞ்சிருக்கும் ராஜா, என்னால யாரையும் நம்ப முடியல. உன்னையும் கூட!” என்ற அக்காவின் பேச்சில் பெரிதாக அடிவாங்கினான் ராஜீவ்.
“அக்கா?!” என்று ராஜீவ் கார்த்தியைப் பார்த்த பார்வையில் அவனின் வலி தெரிந்தது.
“அப்பாவையும் செல்வாவையும் எவ்வளவு நம்பினேன் தெரியுமா? இவர் அவ்வளவு சொல்லியும் என்னோட அப்பா, என் அண்ணான்னு கொஞ்சமும் நான் சந்தேகப்படல. இவர் எப்படிப்பட்டவர்னு தெரியாத போது கூட என் அப்பாவை தப்பா பேசுவாரா இவர்னு ப்ரூவ் பண்ணவே ரிஸ்க் எடுத்து போனேன் ராஜா, ஆனா என்னோட நம்பிக்கை மொத்தமும் உடைஞ்சுப்போச்சு. உனக்குத் தெரியுமா அந்த டைம்ல நான் செத்துடலாம் நினைச்சேன்”
“அக்கா.. ஏன் இப்படி பேசுற?” என்று ராஜா பதறினான்.
“இல்லை, எனக்கு அப்போ அவ்வளவு வலிச்சது. இவங்களா இப்படினு ஏத்துக்கவே முடியல. பொய்யை அவ்வளவு ஈசியா நம்பி வாழ்ந்த என்னால உண்மையை அப்படியே ஒத்துக்க முடியல. நான் அந்த நாள் கேட்டது பார்த்தது எல்லாம் பொய்யா இருந்திடக் கூடாதான்னு பைத்தியக்காரி மாதிரி நினைச்சிருக்கேன். ஆனா இவங்களாம் சந்தர்ப்பவசத்தால தப்பு செஞ்சவங்க இல்லைடா, அடுத்தவங்க எப்படி கஷ்டப்பட்டாலும் அவங்க சந்தோஷம் மட்டும் முக்கியம் நினைக்கிறவங்க” என்றாள் கசப்பான உணர்வுடன்.
அவர்களைக் குறித்துப் பேசும்போதே உள்ளம் நொந்து கசந்து போனது.
“இத்தனை நாள் கழிச்சு இப்போ மட்டும் எப்படி உனக்கு அவங்களைப் பத்தி தெரியும்?” கார்த்தி கோபத்துடன் தம்பியிடம் கேட்க
“ரொம்ப நேரம் மழுப்பினார், நிறைய சண்டை எனக்கும் அவருக்கும். சொல்றீங்களா இல்லை நானும் மீடியா முன்னாடி போய் என் அக்கா சொன்னதெல்லாம் உண்மை அப்படினு சொல்வேன்னு மிரட்டினேன். எல்லாம் சொல்லிட்டார்” என்று சொல்லும்போது ராஜீவ் குரலில் அவ்வளவு வலி.
“அண்ணாவைக் கண்டிக்காம ஏன்பா இருந்தீங்க கேட்டா, கொஞ்சம் கூட குற்றவுணர்வே இல்லாம, பணம் இருக்கு அப்படியே வளர்ந்துட்டான்னு சொல்றார். முடியலக்கா” என்றான் வருத்தமாக.
“அவங்களைப் பத்தி பேசினா நமக்கு வேதனைதான் மிஞ்சும் ராஜீவ், அவங்க செயலுக்கு நம்ம பொறுப்பாக முடியாது. நம்மால முடிஞ்ச நல்லதை செய்யவேண்டியதுதான்” என்றவள்
“இந்த ஆட்டமெல்லாம் ஆட்சி, அதிகாரம் இருக்கவரைதான். இதெல்லாம் இவங்களை விட்டுப் போகற அன்னிக்கு நாமே நினைச்சாலும் உண்மையை மறைக்க முடியாது, கூடவும் கூடாது. கண்டிப்பா இவங்களுக்குத் தண்டனை கிடைக்கனும். அம்மா தாங்கிட்டுதான் ஆகனும்” என்றாள் கார்த்தி பெருமூச்சுடன்.
அம்மாவைப் பற்றி விசாரித்த கார்த்தியிடம் “உன்னை நினைச்சு ரொம்ப அழறாங்க, நீ பேசுறியா?” என்று கேட்க
“இல்லைடா! அவங்களை நம்பி செல்வா பத்தி சொல்ல நினைச்சேன், நீயும் ஊர்ல இல்லை. என்னைக் கொஞ்சமும் நம்பல அவங்க. இப்போ பேசினா தாஸ் பத்தி தப்பா பேசிட்டா நிச்சயம் என்னால தாங்க முடியாது, டாலரேட் செய்ய மாட்டேன். இனி காளிதாஸ் மனைவி மட்டும்தான் நான். நீ என்னோட எப்ப வேணும்னாலும் பேசு, என்னால இனி யார்கூடவும் உறவு கொண்டாட முடியாது” என்றாள் முடிவாக.
சில நிமிடம் அமைதிக்குப் பின், ராஜீவ்
“இவங்க மேல உள்ள கோபத்துல நீ ஏன் காது இப்படி ஒரு முடிவெடுத்த? நானும் அன்னிக்கு இருந்தேனே, என்கிட்ட கூட ஒன்னும் சொல்லாம நீ காளிதாஸ்கிட்ட போய்ட்ட” என்றதும் கார்த்தி முறைத்தாள்.
“என்னாச்சு காது?” ராஜீவ் புரியாமல் பார்க்க,
“அவர் என்னோட ஹஸ்பண்ட்” என்றாள் அழுத்தமான குரலில்.
“நான் அவரைத் தப்பா சொல்லவே இல்லையே, அன்னிக்கு ஹாஸ்பிட்டல்ல அம்மாவுக்கு அப்படியாகிடுச்சுன்னு கோவம் எனக்கு. காளிதாஸ் நல்லவர்னு எனக்குத் தெரியுது. ஆனா அவர் யாரோதானே? அவரை நம்பின உன்னால உன் தம்பி என்னை நம்ப முடியல” என்று வருத்தமும் கோபமும் கலந்த குரலில் ராஜீவ் சொன்னபோதும் முறைத்தாள் கார்த்தி.
“இப்படி பார்த்தா என்ன அர்த்தம்?” ராஜீவ் கொஞ்சம் கோபத்துடனே கேட்க,
“என் புருஷனைப் பெயர் சொல்லுவியா நீ?” என்று கார்த்தி கோபத்தில் கேட்கவும், அதுவரை இருந்த அத்தனை இறுக்கங்களுக்கும் தற்காலிகமாய் ஒரு விடுதலை தம்பியிடம்.
“இனிமே சொல்ல மாட்டேன். இப்போ உன் லவ் ஸ்டோரி சொல்லு” என்றான் இலகுவாகவே.
தம்பியின் பேச்சில் கார்த்திக்கும் புன்னகை வந்தது.
“லவ் இருக்குடா, ஸ்டோரி எல்லாம் இல்லை” என்றவள் காளிதாஸன் கடத்திச் சென்றது முதல் அவனை திருமணம் செய்தவரையில் எல்லாம் சொன்னாள்.
“இவங்க செஞ்ச காரியத்தால எனக்கு வாழனும், கல்யாணம் செய்யனும்னுன்ற எண்ணமெல்லாம் கொஞ்சமும் இல்லை. எல்லாமே காளிதாஸ் என் லைஃப்ல வரவரைக்கும்தான். அவரால வாழனும்னு எண்ணம் வந்த எனக்கு, அவர் கூட வாழனும்னு எண்ணம் வந்துச்சு. ப்ரஸ் பீப்பிள் கேட்கவும் அது உண்மையா இருக்கணும் தோணிச்சு. உண்மையாவும் ஆகிடுச்சு” என்றபோது கார்த்தியின் கண்களில் காதல் மின்னியது.
“எப்படி காது? ஜஸ்ட் ஒரு மாசம் இருக்குமா அதுக்கு முன்னாடி ஒரு நாள், அவரை இவ்வளவு பிடிக்குது உனக்கு?” என்றான் ஆச்சரியமாக. நவீனுடன் திருமணம் பேசியபோது கூட இவ்வளவு ஆவல், காதல் இல்லையே அக்காவிடம்.
“ப்ச், அதான் முன்னாடியே இந்த மனுஷனைப் பார்த்திருக்கக் கூடாதா இருக்கு” என்றபோது குரலில் மறைந்திருந்தது வெட்கம். இவ்வளவு ரசித்து பேசுபவளா தன் அக்கா என்று பார்த்திருந்தான் ராஜீவ்.
இருந்தும் “எனக்காக நீ சொல்லலதானே? ரியலி ஆர் யூ ஹேப்பி வித் ஹிம்?” என்று கேட்டான்.
“அவர் கூட சந்தோஷமா இல்லைன்னா வேற யார் கூடவும் இருக்க முடியாதுடா” என்ற கார்த்தியின் குரலில் காதலின் ஆழம்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது காளிதாஸ் க்ளாஸ் டோரைத் தட்டி
“சாப்பிட வாங்க இரண்டு பேரும்” என்றான்.
“இல்லை, நீங்க போங்க. நான் சாப்பிட்டேன்” என்றான் ராஜீவ்.
“டேய்! நான் காலை சாப்பாடே இன்னும் சாப்பிடல, ஒழுங்கா கம்பெனி கொடு. எங்க வீட்ல சாப்பிட மாட்டியா நீ?” என்றவள் கணவனை அழைத்தாள்.
“இவனை சாப்பிட சொல்லுங்க” என்று அவனிடம் சொல்ல,
“சாப்பிட வா ராஜீவ்” என்ற காளிதாஸைப் பார்க்க இன்னும் ஆச்சர்யம் கூடியது.
“ஃபீவர்டா, இப்ப ஓகே. நீ வா” என்று தம்பியின் கைப்பிடித்து அழைத்து வந்தாள்.
ராஜீவ்விற்கு தடுமாற்றமாய் இருந்தது. சட்டென ஒட்டவும் முடியவில்லை. அக்காவைப் பார்க்க அவள் முகத்தில் அத்தனை சந்தோஷம். நிச்சயம் அதனை சாத்தியமாக்கியவன் மீது நிறைய மரியாதை வந்தது. மூவரும் உண்டு முடிக்க,
“நான் நம்ம ஆபிஸ் போய்ட்டு வரேன் கார்த்தி, நீங்க இருந்துட்டுப் போங்க ராஜீவ்” என்று காளிதாஸ் சொல்ல
“இல்லை, நான் கிளம்புறேன்” என்றவன் அக்காவின் முறைப்பில்
“கிளம்புறேன் மாமா” என்றதும் காளிதாஸ் கார்த்தியைப் பார்க்க, அவள் புன்னகையுடன் கணவனைப் பார்த்தாள். வார்த்தைகளின்றி வாத்சல்யம் நிறைந்த பார்வை இருவருக்குள்ளும்.
ராஜீவ்வுக்கு அதனை விளக்கத் தெரியவில்லை. தங்களால் தமக்கைக்குக் கொடுக்க முடியாத நம்பிக்கையை நேசத்தை காளிதாஸ் என்பவன் கொடுத்திருக்கிறான் என்பது தெள்ளத்தெளிவாய்ப் புரிந்தது, ஒரு பக்கம் வருத்தம் இருந்தது தங்களை எண்ணி.
இருவரையும் பார்த்தவன்
“அன்னிக்கு ஏன் காது அழுத?” என்று கேட்டுவிட்டான்.
“என்னிக்கு?” என்று யோசிக்க,
ராஜீவ் முகத்தைப் பார்த்த காளிதாஸ் “இனிமே சண்டை போட மாட்டோம் ராஜீவ், நீ ஃபீல் பண்ணாத” என்றான் அவன் தோளில் தட்டி.
“ஹலோ பாஸ்! சண்டைப் போட கூட நீங்க வீட்ல இல்லைன்னுதான் சண்டையே” என்றவள் கணவனை முறைத்தபடி பார்த்தாள், முகம் முறைத்தாலும் இதழில் ஒரு ரகசிய சிரிப்பு ஒட்டிக்கொண்டிருந்தது. கார்த்தியை அப்படி பார்க்க பார்க்க ராஜீவுக்கு அத்தனை நாள் மனதினை அரித்த கவலை எல்லாம் அகன்ற உணர்வு.
அதனுடனே சட்டென காளிதாஸை அணைத்துக்கொண்டவன்
“தேங்க்ஸ் மாமா! தேங்க்ஸ் ஸோ மச். அண்ட் ஸாரி, அன்னிக்கு உங்களைப் பேசிட்டேன். காதுவை எப்பவும் இப்படி சந்தோஷமா வைச்சிக்கோங்க. எங்க அக்காவை நாங்களே தொலைச்சிட்டோம், எப்படியோ அவ உங்ககிட்ட வந்துட்டா, அவளை நல்லா பார்த்துக்கோங்க” என்று சொல்ல,
“ஹே! மேன்! ரிலாக்ஸ். நான் எங்க உன் அக்காவைப் பார்க்கிறது, மேடம்தான் என்னை பார்த்துட்டே இருப்பாங்க, இப்பவும் பாரு சைட் அடிச்சிட்டே இருக்காங்க. கொஞ்சம் தள்ளி நில்லு. அவ என்னை முறைக்கிறா” என்றான் விளையாட்டாகவே. கார்த்தி முறைக்கவெல்லாம் இல்லை, கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்க நின்றாள்.
கணவனின் பேச்சில் “என்ன கலாய்க்கிறிங்களா?” என்று அவன் தோளில் அடித்தாள்.
“உனக்குக் கோவமில்லையா கண்ணா?” என்று கேட்டவன்
“அப்போ வா ராஜீவ்” என்றவன் அவனை அணைத்து விடுவித்து
“கார்த்தி completes me மேன்! சண்டையில கிழியாத சட்டை இல்லை, அடிச்சாலும் பிடிச்சாலும் உன் அக்காதான் எனக்கு எல்லாம்” என்றான் புன்னகையுடன்.
ஒரு வார்த்தை ராஜீவிடம் அவன் அப்பா, அண்ணனைப் பற்றி பேசவில்லை காளிதாஸ். அவன் அலுவலகம் சென்றுவிட அக்காவிடம் கேட்டேவிட்டான்.
“எங்கிட்டவும் அவங்க செஞ்சதை ஒருவார்த்தை சொல்லிக் காட்ட மாட்டார். முன்னாடி யாரோவா இருந்தபோதும் அப்படிதான், இப்ப நான் காளிதாஸ் வைஃப், அதுமட்டும்தான், அப்படித்தான் எங்கிட்ட நடப்பார்” என்றாள் கார்த்தியாயினி.
“இத்தனை வருஷம் சிங்கிளா இருந்தவர் எப்படி உன்னை அக்செப்ட் பண்ணினார்கா? , நிஜமா நீங்க முன்னாடி லவ் பண்ணவே இல்லையா?” என்று சந்தேகமாகவே கேட்டான்.
“அப்படியே உடனே அக்செப்ட் பண்ணிட்டார் பாரு, கடுப்பைக் கிளப்பாத. அவருக்கும் எனக்கும் நிறைய டிஃப்ரன்ஸ் சொன்னார். லெக்சர் கொடுத்தார் அப்படி!” இப்போதும் அதை நினைத்தால் கொஞ்சம் கோபம் வரும் கார்த்திக்கு.
“அப்புறம் எப்படிக்கா?”
“தட்ஸ் கார்த்தி! எங்கிட்டதான் சிக்கனும்னு அவருக்கு எழுதி இருக்குடா” என்றாள் சிரிப்புடன். ராஜீவ் அப்பாவைப் பற்றியோ அண்ணாவைப் பற்றியோ வேறு பேசவே இல்லை, அக்காவின் சந்தோசம் கெட விரும்பாதவன் அவனும் ஒரு மகிழ்வான மன நிலையில் வீடு சென்றான்.
எல்லாம் தேர்தல் முடிவு வரும்வரைக்குமே! அதுவும் வந்தது.