தேன் நிலவு முடிந்து வந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிற்று. இயல்பாக சென்றது வாழ்க்கை. அன்று காலை கார்த்தி காலை உணவு செய்யும்போது காளிதாஸன்
“கார்த்தி! இங்க வாம்மா” என்று ஹாலில் இருந்து குரல் கொடுத்தான். அவள் வரவும்
“ராஜீவ் உங்கிட்ட பேசனுமாம், பேசு” என்றவன் மனைவியின் தோளை சுற்றி கைகளைப் போட்டுக்கொண்டான். ஆசையாக இல்லாமல் ஏதோவொரு அழுத்தம் அதில். நானிருக்கிறேன் என்ற வகையிலானது.
“இவன் கால் பண்ணினதுக்குதான் இத்தனை கத்தா? காலையில என்னவாம்?” என்று பேசிக்கொண்டே கணவனிடம் போனை வாங்கி கார்த்தி
“சொல்லுடா! என்ன அதிசயம்? காலையில உன் மாமா நம்பர் கூப்பிட்டிருக்க..?” என்றாள். அந்த பக்கம் அமைதி.
“ராஜீவ்! பேசுடா” என்று கார்த்தி சொல்ல
“எதுனாலும் நான் இருக்கேன் கார்த்திம்மா உனக்கு” என்றான் காளிதாஸன் அழுத்தமாக.
“என்ன தாஸ்?” என்ற கார்த்தியின் குரலிலும் ஒரு பதட்டம் தெரிய, அந்த பக்கம் ராஜீவ் சொன்ன செய்தியில் அதிர்ச்சி. பதில் பேசவே முடியவில்லை. என்ன முயன்றும் கார்த்திக்கு அழுகை வந்தது, காளிதாஸன் அவளை அணைத்துக்கொண்டான்.
அவள் அப்பா ராஜரத்னம் இறந்துவிட்டார். அதை சொல்லத்தான் ராஜீவ் அழைத்திருந்தான். காளிதாஸனுக்கு மனைவியிடம் அதனை சொல்லும் மனநிலை இல்லை.
தேர்தல் முடிவுகள் வந்தபின் செல்வரத்னத்தின் செய்கைகளினால் ராஜரத்னம் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். செல்வா அவருக்குப் பிடித்த மகன்தான். அதற்காக மற்ற பிள்ளைகளை அவரால் விடமுடியாதே, ஏற்கனவே மகள் தன்னை விட்டு சென்றதே பெரிய அடி அவருக்கு. செய்த பாவமெல்லாம் செல்வாவினால் வடிவம் கொண்டது.
தேர்தல் தோல்வியைத் தாங்கமுடியாதவனுக்கு அவ்வளவு ஆத்திரம். தேர்தலுக்காக என்று நிறைய பணம் செலவளித்திற்க, தோல்வியை மறக்கவேண்டும் என்று குடித்தே அழிந்தான் அவன். ராஜரத்னம் கண்டித்தும் கேட்கவில்லை, கண்டிக்கும் காலமும் முடிந்திருக்க, அதற்கான தகுதி இல்லாத ஒருவர் சொல்வது எப்படி செல்லுபடியாகும்?
தொழிலும் சரிவு! செல்வா தொழில் கவனமின்றி தோல்வி தந்த கோபத்தில் இருந்தான். அதுவும் நாளுக்கு நாள் காளிதாஸனுக்குக் கட்சியில் உயரும் பதவியும் வெவ்வெறு பதவிகளும் அவனை கொதிக்க வைத்தது.
“பாருய்யா! அப்பன் இல்லாத புள்ள, அவன் எலெஷன்ல ஜெயிச்சிட்டான். அந்த மகாதேவன் ஜெயிக்க வைச்சான். நீ அப்பனு இருந்தும் என்ன செஞ்ச எனக்கு? முதல் தேர்தல்ல என்னை தோக்க வைச்சிட்டியே?” என்று அந்த ஆளிடம் எகிறினான். அவரோ
“அவன் தானா ஜெயிச்சான்டா, நான் சொல்றதைக் கேட்காம தறிகெட்டு அலைஞ்சிட்டு என்னைப் பேசுறியா நீ?” என்று அவரும் எகிறினார்.
“நீ பெரிய யோகியம்? உன் பொண்ணு வீட்டுக்கு அடங்காம ஓடிப்போய்தான்யா எனக்குக் கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்தா, ஓடுகாலி…..” என்று மோசமாய் கார்த்தியாயினியைப் பேச, ராஜரத்னம் மற்றதில் எப்படியோ அவரின் மகள் என்றால் அவருக்கு உயிராற்றே! மகன் என்றும் பார்க்காமல் அடித்துவிட்டார்.
“உன் பொண்ணுக்கு ஒழுக்கமில்லய்யா..” என்று இன்னும் மோசமாக பேச, அப்பாவிற்கும் மகனும் பயங்கர சண்டை. மூன்று மக்கள் இருந்தும் மூத்தவனின் கூடா நடத்தை, அதைத் தட்டிக்கேட்காத தந்தையின் செயலால் மொத்தமாக மற்ற இருவரும் விலகி இருந்தனர். செல்வாவின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரிக்க, சொத்தையெல்லாம் பிரித்து எழுதினார்.
அதுவரை வீட்டிற்குத் தெரியாமல் இருந்த அனைத்தும் தெரிய வந்தது. சொத்தைப் பிரித்து எழுதியது தெரிந்த செல்வா வீட்டிற்கு வந்து கலாட்டா செய்துவிட்டான். ராஜீவ் அண்ணனிடம் சண்டையிட
“என்னையே எதிர்த்துப் பேசுறியா? அவளோட சேர தைரியமா உனக்கு? அவளாலதான் குடும்பத்தோட மானம் போச்சு, கட்சியில பெயரு போச்சு” என்று செல்வா தங்கையைப் பேச,
“வாயை மூடுடா! அக்காவால குடும்பம் மானம் போச்சா? உன்னாலதான் எல்லாம். நீ ஒழுக்காம இல்லை, அப்பா உன்னை அப்படி வளர்க்கல. நீ செஞ்ச கேவலமான விஷயத்தாலதான் டா காது வீட்டை விட்டுப் போனா” என்று கத்திவிட்டான்.
அதனைக் கேட்ட விசாலாட்சி “ராஜா, என்ன சொல்ற?” என்று பதறிக்கொண்டு சின்ன மகனைக் கேட்க
“என்னன்னு இப்போ கேளுங்க, அக்கா பேச வந்தா அடிச்சு விரட்டி அடைச்சு வைச்சிட்டு, அவ கல்யாணமே வேண்டாம்னு சொல்றான்னா ஏன்னு யோசிக்க மாட்டீங்களா? நம்மை எல்லாரையும் விட்டு அந்த மனுஷன் பின்னாடி போனாளே? ஏன்னு யோசனை வேண்டாம். பாசமா இருக்கலாம், ஆனா முட்டாளா இருக்கக் கூடாது” என்றான் கோபத்தில்.
“என்ன என்ன பேசுற ராஜீவ்?” என்று கயலும் பயத்தில் கேட்டாள். மனதில் அவ்வளவு பயம். ஏதோ சொத்துக்காக, உரிமைக்காக பேசுகிறான் என்று பார்த்தவளுக்கு பெரிய அதிர்ச்சி.
இன்றையை சூழ் நிலை அவளுக்குப் பெரும் தவிப்பையும் அழுத்தமும் தர
“என்னைக் கேட்காதீங்க? உங்க புருஷனைக் கேளுங்க?” என்று கத்தியவன் அண்ணனிடம் திரும்பி
“இவ்வளவு நேரம் அக்காவை வாய் கூசாம பேசுனியே? நீயும் அப்பாவும் எல்லா தப்பு செஞ்சும் நம்ம வீட்டு பொண்ணை அவர் எப்படி வைச்சிருக்கார் தெரியுமா? இப்போ பேசுடா! கேட்கிறாங்க இல்லை பேசு” என்றான் செல்வாவை முறைத்துக்கொண்டு.
“ஏய்! என்னடா என்னை மிரட்டிப் பார்க்குறியா? எவளுக்கும் பதில் சொல்லணும் எனக்கு அவசியமில்லை” என்றான் எடுத்தெறிந்து. கார்த்தி ஒருத்தியாக தாங்கிய பாரத்தை அன்று மொத்த குடும்பமும் தாங்கியது.
“நீயெல்லாம் என்ன மனுஷன் டா? வீட்டுப் பொண்ணையும் மதிக்கிறதில்ல, வெளியிலயும் பொண்ணுங்களை நிம்மதியா வாழவிடுறதில்லை” என்று செல்வாவை ராஜீவ் பேச, விசாலாட்சிக்குக் கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. கயல் கணவனைக் கேள்வி கேட்க
“ஹே! என்னடி என்னை எதிர்த்துப் பேசுறியா?” என்று அவளின் கன்னத்தில் அறைந்தான்.
குடும்பமே நிலைக்குலைந்தது. அடுத்த சில நிமிடங்களில் கயல் அவளின் அப்பா வீடு சென்றாள். எல்லாம் சேர்ந்து ராஜரத்னத்தை அழுத்த, ஹார்ட் அட்டாக்கில் உயிர் பிரிந்தது.
கார்த்தி கணவனின் நெஞ்சில் சாய்ந்து மௌனமாய்க் கண்ணீர் விட்டாள். என்ன இருந்தாலும் இவள் அவரின் மகளாகிற்றே, துடித்தது நெஞ்சம்.
காளிதாஸ் “கார்த்தி! நம்ம போகனும், வா” என்றான்.
காளிதாஸ் அவள் வீட்டிற்கு எப்படி வருவான் என யோசித்தாள். யோக்கியனோ அயோக்கியனோ அவளின் அப்பாவாகப் போய்விட்டார். மகளாக அவள் செல்லவேண்டும், ஆனால் கணவன்??
“என் கட்சி சார்பா நான் போய்த்தான் ஆகனும்” என்று பெருமூச்சுவிட்டவன்
“வாம்மா” என்று அவளை இழுத்துக்கொண்டு போனான். அங்கு போனதும் வாலி மாலையை எடுத்து வந்து தர, கண்ணாடி பாக்ஸில் இருந்த ராஜரத்னத்திற்கு மாலையைப் போட்டவன் ராஜீவிடம் சொல்லிவிட்டு வெளியே போய்விட்டான். கார்த்தி அழும் அம்மாவைப் பார்த்தவளுக்குக் கால்கள் அவரிடம் போக நினைக்க, கண்ணீருடன் நின்றாள். வேறு யாரும் கார்த்தியின் கண்ணில் தெரியவில்லை. இவளைக் கண்டதும் செல்வா சண்டையிட எழ, கட்சிக்காரர்கள் அவனைப் பிடித்து வைத்தனர்.
காளிதாஸன் வெளியே செல்லவும் அவன் பின்னே வந்துவிட்டாள் கார்த்தி.
“கார்த்தி, நீ இருக்கணும்னா இருந்துட்டு வா. வாலியை இருக்க சொல்றேன்மா” என்றான். அதிலே அவனின் விருப்பமின்மை தெரிந்துவிட, கடைசியாக ஒருமுறை அப்பாவைப் பார்த்துவிட்டாள். அதற்கு மேல் அங்கிருக்க கார்த்திக்கும் விருப்பமில்லை.
“இல்லைங்க, உங்க கூடவே வரேன்” என்று கார்த்தி சொல்ல காளிதாசன் மறுக்கவில்லை. விஷயம் கேள்விப்பட்டு சிவகாமி மருமகளைப் பார்க்க வந்துவிட்டார்.
“நான் வந்தது உனக்காக கார்த்திமா, என் மருமகளுக்காக” என்றார் அழுத்தமாக.
எப்படியான மனிதி இவர்? இப்படி சொல்லவும் மனம் வேண்டுமே? ஆனால் தன் வீட்டினர்??
அன்று முழுவதும் கார்த்தியுடன் சிவகாமி இருக்க, கார்த்திக்கு உணவு இறங்கவில்லை. தலை குளித்தவள் மௌனமான அழுகையுடன் அன்றையை நாளை ஓட்டினாள்.
ஒரு வாரம் கார்த்தி அப்பாவின் மறைவில் துவண்டிருந்தாள். உண்பது, உறங்குவது கூட ஒழுங்கற்றுப்போனது. காளிதாஸன்தான் அவளைத் தேற்றினான்.
அதுவும் கூட கார்த்திக்குக் கஷ்டமாக இருந்தது.
“இப்படி ஒரு அப்பாவுக்காக ஃபீல் பண்றேன், அழறேன் நினைக்கிறீங்களா? கொஞ்சமும் என் மேல கோவமில்லையாங்க உங்களுக்கு?” கார்த்தி குரல் கம்ம கேட்க
அவளை ஆதரவாக அணைத்தவன் “கண்ணா! உன் அப்பா எப்படி வேணும்னாலும் இருந்திருக்கலாம். யார்னே தெரியாதவங்களுக்காகக் கூட அவங்க இடத்துல இருந்து ஃபீல் செய்ற எம்பதி உங்கிட்ட இருக்கு. சில எமோஷனஸ் மத்தவங்களைப் பாதிக்காத வரைக்கும், சரியா தப்பான்னு ஆராய்ச்சி செய்றதை விட அமைதியா அதை உணர்ந்து கடந்திடனும்”
“உன்னோட அப்பா இல்லை, அவர் எப்படியோ இத்தனை நாள் அப்பான்னு பூமியில இருந்தார். இப்ப இல்லைனும்போது ஏத்துக்க கஷ்டமாத்தான் இருக்கும். நான் உன்னை ஜட்ஜ் பண்ணுவேன்னு நீயே நினைச்சு, உன்னோட உணர்வுகளை அடக்காத” என்று சொல்ல இன்னும் உடைந்துதான் போனாள். கண்ணீருடன் அவன் நெஞ்சில் சாய,
அவனின் பேச்சில் மிகப்பெரிய ஆறுதலை உணர்ந்தாள் கார்த்தி, கொஞ்சம் கொஞ்சமாய்த் தன்னை மீட்டுக்கொண்டாள்.
வாழ்க்கை இயல்புடன் சென்றது.
கார்த்தி காளிதாஸன் திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. சட்டசபை கூட்டம் அன்றுடன் நிறைவுபெற்றிருந்தது. காளிதாஸன் அதனால் அரசியல் வேலை எல்லாம் ஒதுக்கி, அவன் அலுவலக வேலையை வீட்டில் இருக்கும் அறையில் பார்த்தான். ராஜீவ் அவனைப் பார்க்க வந்தான்.
“வா ராஜீவ்!” என்று வரவேற்றவன்
“கார்த்தி வீட்லதான் இருக்காப்பா, நீ பேசிட்டு இரு. ஆபிஸ் வொர்க் கொஞ்சம் இருக்கு முடிச்சிட்டு ஜாய்ன் பண்றேன்” என்றான் காளிதாஸன்.
ராஜீவ் அப்பா இறந்த பின் அவனுக்கென அவர் எழுதிய வீட்டில் அம்மாவுடன் தனியாக இருக்கிறான். செல்வா அவர்கள் வீட்டில் இருந்தான். விவாகரத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டனர் கயலின் வீட்டினர். கயல் கணவனை மன்னிக்கத் தயாராகவே இல்லை, அதுவே செல்வாவிற்குப் பெரிய அடி! அப்போதும் கூட அவன் திருந்தவில்லை. இன்னும் அதே போல் சுற்றினான்.
கட்சியில் தன் இடத்தைத் தக்கவைக்க முயன்றான், அதற்காக நிறைய நிறைய செலவுகள். ஃபினான்ஸ் செல்வாவின் பொறுப்பு, அவனின் பொறுப்பில்லாத நடவடிக்கையால் அது மோசமான நிலைமைக்குச் சென்றுகொண்டிருந்தது.
“அதை கார்த்திட்ட சொல்லலாமே ராஜீவ், வை மீ?” என்றான் மேஜை மீது கைகளை ஊன்றி.
“அவ நீங்க சொன்னா கேட்பா…” என்று ராஜீவ் இழுக்க
“நோ ராஜீவ்! எப்பவும் கார்த்தியோட முடிவுகளை நான் எடுக்கிறதில்லை.. பட்..” என்று நிறுத்தியவன் சிறு இடைவெளிக்குப் பிறகு
“கார்த்தியோட ஷேர்ஸ் அவளுக்கு வேண்டாம். நீ உன் பெயருக்கு மாத்திக்கோ, இல்லை என்னவும் செய்” என்றதும் ராஜீவ் எழுந்துவிட்டான்.
“மாமா?! உங்க எண்ணம் புரியுது. ஆனா இது அக்காவுக்கு நியாயமா சேர வேண்டியது. அப்பா அவ பெயர்லதான் எழுதினார். கூடவே அவளோட உழைப்பு இதுல இருக்கு” என்ற ராஜீவின் பேச்சில் காளிதாஸன் மறுப்பாகத் தலையசைத்தான்.
“நோ ராஜீவ்! அநியாயமா சேர்த்த சொத்துல என்ன நியாயமான பங்கு இருக்கப்போகுது? I may sound rude to you! பட் நோ சாய்ஸ் மேன். காளிதாஸ் மனைவி மட்டும்தான் கார்த்தி. என் மனைவிக்குத் தேவையான எல்லாம் நானே செய்வேன். ஆஃப்கோர்ஸ் ஃபினான்ஸியலி உங்க வீடு அளவு என்னால முடியாது. தேவையுமில்லை, கார்த்தி எங்கிட்ட அதெல்லாம் எதிர்ப்பார்க்க மாட்டா” என்று அவன் முடிவில் காளிதாஸ் உறுதியாக இருந்தான்.
“உன்னோட உறவு கூட நியாயமானவன்றதால மட்டும்தான் ராஜீவ், புரிஞ்சிக்கோ” என்று காளிதாஸ் சொல்ல ராஜீவுக்குப் புரிந்தது.
“ஓகே மாமா! அப்பா சொத்து வேண்டாம். அம்மாவோட அப்பா கொடுத்த டெக்ஸ்டைல்ஸ் இருக்கு. அது அக்கா பெயர்ல இருக்கு” என்று சொல்ல, காளிதாஸனுக்குப் பிடிக்கவில்லை.
“ராஜீவ்! எனக்குக் கார்த்தி மட்டும் போதும். இதுல கூட எனக்கு இஷ்டமில்லை, உனக்கு வேணும்னா கார்த்தியோட முடிவைக் கேட்டுக்கோ” என்றான்.
ராஜீவ் அமைதியாக நிற்க “ஹே! மேன் போ. நான் கோவமா எல்லாம் சொல்லல. இது என் முடிவு மட்டும்தான். உங்க அக்கா நீ வந்தது சொன்னா எதாவது ஸ்பெஷலா செய்வாங்க” என்றான் புன்னகையுடன்.
தன்னை காளிதாஸன் இலகுவாக்க முயல்வது ராஜீவுக்குத் தெரிய
“என்ன ஸ்பெஷல்?” என்ற குரலில் திரும்ப ராஜீவ் நின்றான்.
“டேய்! ராஜா எப்போ வந்த?” என்று கார்த்தி உற்சாகமாக நலம் விசாரிக்க
“இப்போதான் மாமா கூட பேசிட்டு இருந்தேன்” என்றான்.
“என்ன காது செய்ற? இது ஆபிஸ் டைம் இல்ல?”
“ஆபிஸ்ல வேலை இல்லை. இருந்தாலும் அவர் வீட்ல இருக்கும்போது நான் ஓபி அடிச்சிருவேன் டா” என்றாள் ரகசியமாக. அதில் ராஜீவ் சிரிக்க
“என்ன பாட்டெல்லாம் பலமா இருக்கு? எப்போ வந்தாலும் பாட்டு அதிருதே” என்று ராஜீவ் கேட்க
“எல்லாம் அவரோட செலெஷன்தான், செமயா வைச்சிருப்பார். பழசு புதுசுன்னு. டேய்! என் வீட்டுக்காரர் ட்ரண்டிங்க்ல இருக்க பாட்டெல்லாம் வைச்சிருக்கிறார்னு தானே பார்க்கிற?” என்றாள் அவனிடம் கையை நீட்டி. அதில் கத்தி இருக்க
“காது! கத்தியை வைச்சிட்டு பேசு” என்றான் ராஜீவ் பின்னால் நகர்ந்து.
“ஹாஹா! மறந்துட்டேன்டா!” என்றவள்
“அம்மா எப்படி இருக்காங்க?” என்று கேட்டாள்.
“நல்லா இருக்காங்க. உன்னைக் கேட்டாங்க, ஒரு தடவ வாக்கா நீ” ராஜீவ் வருந்தி அழைக்க
“அவங்களை வந்து என்னைப் பார்க்க சொல்லு. எனக்கு ஒன்னும் அவசியமில்லை” என்றாள் கார்த்தி பட்டென.
“சரி என்ன விஷயமா வந்த? செல்வா ப்ரச்சனை பண்றானா?” என்றவளின் குரலில் காரம்.
லெதர் ஃபாக்டரியில் ராஜீவ், கார்த்தி, விசாலாட்சி, முகில் என நால்வருக்கும் பங்குகள் கொடுத்தவர் செல்வாவை அதில் சேர்க்கவில்லை. ராஜீவ் அவனை சேர்க்காமல் இருக்க கட்சி ஆட்களை வைத்து குடைச்சல் கொடுத்தான். ராஜீவ் காளிதாஸீடம் சொல்ல, அவன் ஆளுங்கட்சி என்பதால் சுமூகமாக முடித்துக்கொடுத்தான்.
“இல்லை, நெக்ஸ்ட் வீக் லெதர் ஃபாக்டரில போர்ட் மீட்டிங்” என்று சொல்லி அக்காவின் முகம் பார்த்தான். கார்த்தியோ
“அந்த வீட்டை விட்டு வந்தப்பவே எல்லாத்தையும் உதறிட்டுத்தான் ராஜா வந்தேன் நான்” கார்த்தி அழுத்தமாகச் சொன்னாள்.
“காதுக்கா?” என்று ராஜீவ் அதிர்ந்து பார்க்க
“லைஃப்ல என்னோட மிகப்பெரிய அஸெட் என் ஹஸ்பண்ட்தான், எனக்கு அவரோட மனைவியா இருக்கிறது மட்டும் போதும்! வேறெதுவும் வேண்டாம், புரிஞ்சதா?” என்று கார்த்தி தம்பியின் முகம் பார்க்க
“எனக்குப் புரியுது. லெதர் ஃபாக்டரி வேண்டாம், பட் தாத்தா கொடுத்த டெக்ஸ்டைல்ஸ்கா.? உனக்குன்னு ஏதாவது இருக்கணும்ல” என்றான் தயக்கத்துடன்.
“எனக்குன்னு என் விட்டுக்கார் இருக்கார், உங்களவு பெருசா இல்லைனாலும் எங்களுக்கும் கம்பெனி இருக்கு” என்றாள் கார்த்தி.
“ஏன் காது பிரிச்சுப் பேசுற?” ராஜீவ் தாங்கமுடியாமல் பேச
“ப்ளீஸ் ராஜா! எதுவும் வேண்டாம்னு சொன்னா புரிஞ்சிக்கோ. இது பத்தி பேசாத” என்று சொல்லும்போதே காளிதாஸ் வந்தான்.
“என்ன கண்ணா? இன்னும் முடிக்கலையா? ராஜீவ்கு என்ன செஞ்ச ஸ்பெஷலா?” என்று காளிதாஸ் கேட்க கார்த்தியோ படபடவென்று கணவனிடம் எல்லாம் சொன்னவள்
“நீங்க நம்ம லாயரை வர சொல்லி இந்த ஷேர்ஸ் மாத்த என்ன ப்ரோசிஜர் கேட்டு வைங்க, நான் இவனுக்கு மாத்திடுறேன்” என்றதும் ராஜீவின் முகம் சுருங்கினாலும் மறுக்கவில்லை. அவன் பார்த்து வளர்ந்த அக்கா இல்லை இவள், இவள் காளிதாஸன் மனைவி! எப்படியோ சந்தோஷமாக இருந்தால் சரியென நினைத்தான்.
காளிதாஸோ மனைவியை முறைத்தவன் “சாப்பிடுற நேரமாச்சு, இப்ப இதை பேசனுமா? அவனுக்குப் பிடிச்சதா செஞ்சியா இல்லையா கண்ணா?” என்று கேட்க ராஜீவ் உடனே
“எங்கக்கா கண்ணுக்கு நானெல்லாம் தெரிய மாட்டேன் மாமா, அந்தம்மாவுக்கு நீங்க மட்டும் போதுமாம்” என்றான் கிண்டலாக. உள்ளே கொஞ்சம் வருத்தம் இருந்தது.
“அப்படியெல்லாம் இல்லை, நீ வா சாப்பிடலாம்” என்றான் சிரிப்புடன்.
மூவருமாக உண்டு முடித்த பின், கடைசியாக கார்த்தியிடம் கேட்க அவள் பதிலில் மாற்றமில்லை.
“மாமா அப்பவே சொன்னார், நீ இதைத்தான் சொல்வன்னு” என்றான் அலுத்துக்கொண்டு. காளிதாஸனிடம்
“அப்படின்னு யார் சொன்னா? அவர் சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்” என்றாள் பிடிவாதமாக.
“அம்மா பார்க்கனும் சொல்றியே, அவங்களுக்கு செல்வா செஞ்சதெல்லாம் ஷாக்! கூடவே அண்ணி முகிலோட சிங்கப்பூர் போயிட்டாங்க அவங்க அண்ணன் வீட்டோட இருக்க. அப்பாவும் இல்லை, அவங்க பேசுறது கூட இல்லை” என்றான் உணர்ச்சிவசப்பட்டு.
“நான் கார்த்தியை அனுப்பி வைக்கிறேன் ராஜீவ்” என்ற கணவனை முறைத்தாள். அதிலே அவன் வரமாட்டான் என்று தெரிந்தது கார்த்திக்கு. ராஜீவ் கிளம்பிவிட,
“உனக்கு அம்மாவைப் பார்க்கனும்னா போய்ட்டு வா கண்ணா, என்னைப் பார்க்காத” என்றான் காளிதாஸன். அவனால் என்றுமே அவர்கள் வீட்டோடு ஒட்ட முடியாது. விசாலாட்சி நல்லவராக இருக்கலாம், ஆனால் மாமியார் வீடு சென்று உறவாடும் எண்ணமெல்லாம் எள்ளளவுமில்லை.
“இல்லை, எனக்குத் தோணல. விடுங்க” என்றாலும் கார்த்தி உண்மையில் கணவனுக்காகப் பார்த்தாள்.
“இந்த செல்வாவை ஏன் வெளியே விட்டு வைச்சிருக்கீங்க? அவன் எவ்வளவு ப்ரச்சனை பண்றான்? பாவம் அண்ணி நாட்டை விட்டு போற அளவு பண்ணிட்டான். ஆளுங்கட்சியா இருந்துட்டு இது கூட செய்யலன்னா எப்படி?” என்று கேட்டாள்.
“ஆளுங்கட்சின்றதால தான் யோசிச்சு செய்யனும். எது செஞ்சாலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி சொல்லிடுவாங்க. சரியான நேரத்துல அவனைக் கவனிக்கிறேன்” என்றான் காளிதாஸன் உறுதியாக.
கணவன் இல்லாத நேரமாக தம்பிக்கு அழைத்த கார்த்தி
“உனக்கு அறிவிருக்கா டா ராஜீவ்?” என்று திட்டினாள்.
“என்னாச்சு காது? நான் என்ன செஞ்சேன்?” என்று ராஜீவ் பதறி கேட்க
“எதுக்காக நீ என்னை அம்மாவைப் பார்க்க வர சொன்ன? இதுல அவரை வேற கூப்பிடுற?” என்று கத்த
“ஏன் அதுல என்ன தப்பு? மாமா எதாவது சொன்னாரா?” என்று கேட்டான்.
“அவர் ஒன்னும் சொல்ல மாட்டார். ஆனா அவர் எப்பவும் நம்ம வீட்டு மாப்பிள்ளையா வர மாட்டார், அதை உன் மனசுல பதியவை”
“அவர் வந்தாதானே நீ வருவ, அதான் சொன்னேன். ஏன் நான் அவர் மச்சான் தானே? எனக்குக் கூப்பிட உரிமையில்லையா? நான் என்ன தப்பு செஞ்சேன்” என்று ராஜீவ் உணர்ச்சிவசப்பட்டான்.
“இதான் உன் பிரச்சனை! அவங்க இடத்துல இருந்தும் யோசிடா, நம்ம அப்பா இறந்தப்ப அவர் நல்லவரோ கெட்டவரோ மனசு கஷ்டமா இருந்ததுதானே? அப்படியிருக்கும்போது அவரோட அப்பா இறக்கும்போது அவருக்குப் பதினைஞ்சு வயசு. அவர் அப்பா சாக காரணமா இருந்த வீட்டோட எப்படி அவரால உறவு கொண்டாட முடியும்?”
“அவர் நல்லவர்தான், அதுக்காக அவரோட உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுக்கனும் ராஜா. அவங்க அப்பாவைப் பத்தி பேசும்போது அவர் குழந்தை மாதிரி ஆகிடுவார்டா. அப்படி இருக்கும்போது என்னால எப்படி குற்றவுணர்வு இல்லாம நம்ம வீட்டுக்கு வர முடியும்? உன்னை அவர் வேற மாதிரியா நடத்துறாரு? அன்பா இருக்கார்தானே. அம்மாவுக்கு வேணும்னா இங்க அழைச்சிட்டு வா, நான் பார்த்துக்கிறேன். நீ எப்ப வேணும்னாலும் வா, அவரை விட்டு நான் எப்பவும் வரமாட்டேன்”
“எத்தனையோ பொண்ணுங்க அவங்க புருஷனுக்கு அது பிடிக்காது இது பிடிக்காதுன்னு நிறைய விட்டுக்கொடுத்துப் போவாங்க, அப்படி இருக்கும்போது இப்படி ஒருத்தருக்காக நான் இந்தளவு விட்டுக்கொடுக்கலனா எப்படிடா?” என்று அக்கா கேட்க அதில் இருந்த நியாயம் புரிந்தது.
“இல்லைக்கா, மாமா நிஜமா நல்ல டைப். எங்கிட்ட நல்லா பேசவும் உரிமையா கேட்டுட்டேன்” என்று ராஜீவ் சொல்ல
“அவரை எனக்குத் தெரியும், அப்படி நிஜமா அவருக்கு இஷ்டம்னா அவரே என்னை அழைச்சிட்டு வருவார். எனக்காக தான் என்னைப் போக சொன்னது கூட! அவர் ஒன்னும் உங்களை இங்க வர கூடாது சொல்லலையே? புரிஞ்சிக்கோ ராஜா” என்றாள் கார்த்தி.
“சரிக்கா, இனி கேட்கல. தப்புதான்”
“மாமா ஒன்னு சொன்னார், நீ காளிதாஸ் மனைவி மட்டும்னு. நீயும் ப்ரூவ் பண்ற. நல்ல ஜோடி போ!” என்று சந்தோஷமாக ராஜீவ் சொல்ல
“ஒன்ஸ் மோர் சொல்லுடா! கேட்க எவ்வளவு நல்லாயிருக்கு” என்ற கார்த்தியின் குரலிலும் சந்தோஷம் மட்டுமே!