யாரும் எதிர்ப்பார்க்கவில்லை சிவகாமி அப்படி கை நீட்டுவார் என.
நித்தி உடனே “அத்த, என்ன செய்றீங்க?” என்று அவரை அதட்ட
“நீ பேசாத நித்தி” என்று அவளை அடக்கியவர் அழுத்தமாய் நின்ற மகனைப் பார்த்தார்.
“அவங்க எப்படிப்பட்டவங்களா இருக்கட்டுமே, அவங்க அளவுக்கு நீயும் இறங்கினா அப்போ நம்ம அவங்களை மாதிரி ஆகிட மாட்டோமா? இதுதானா கண்ணா எங்க வளர்ப்பு?” என்றார் கோபமாக, அதனைவிட என் மகன் இப்படி செய்திருக்கக் கூடாதே என்ற எண்ணம் மட்டும் தீவிரமாய் இருந்தது சிவகாமியிடம்.
“செய்ற செயல்ல இருக்க நேர்மை, அதுக்கான வழியில கூட இருக்கணும். வழி தவறி செஞ்சா அதுல என்ன நேர்மை இருக்கு, பொண்ணைக் கடத்துறது, ச்ச! ஒருவேளை நீயும் ஒரிஜினல் அரசியல்வாதி ஆகிட்டியோ?” என்றார் இளக்காரமானக் குரலில். அதுவரை அம்மாவின் அடி கொடுத்த அதிர்விலும், அவனுக்குமே மனதோரம் குற்றவுணர்வும் இருக்க, அமைதியாக இருந்தான். ஆனால் இந்த பேச்சு, சுத்தமாய்ப் பிடிக்கவில்லை.
“அம்மா!” என்று அதட்டி அழைத்தவன்
“போற வழியை டிசைட் பண்றது அந்த பிரச்சனைதான். நம்ம இல்லை, காந்தி அஹிம்சை வழி போனார்னா அவர் முன்னாடி இருந்தது வெள்ளைக்காரன். இதே ஹிட்லர்கிட்ட அஹிம்சை ஜெயிச்சிருக்குமா சொல்லுங்க? ஒவ்வொரு ப்ரச்சனையும் ஒவ்வொரு வகையில தீர்க்கனும். எல்லாத்துக்கும் ஒரே வழி சரியா இருக்காது. முதல்ல நீங்க நம்புங்க, உங்க மகன் தப்பு செய்ய மாட்டான்னு. சும்மா கடத்துன்னேன்ற வார்த்தையெல்லாம் நீங்க யூஸ் செய்யக் கூடாது, நான் பேசிதான் இவங்களை இங்க அழைச்சிட்டு வந்தேன்” என்றான் கண்டிப்புடன்.
“அப்புறம் ஏன் இந்த பொண்ணு மயங்கியிருக்கு?” என்று சிவகாமி முறைப்புடன் மகனைக் கேட்க
“பின்ன, அப்பாவும் அண்ணாவும் உத்தமனுங்கன்னு அவ்வளவு நம்பினாங்க. அவனுங்க பேசினதை இங்க அப்படியே லைவ் வீடியோ போட்டோம். அதைப் பார்த்து அந்த ஸ்ட்ரெஸ்ல மயங்கியிருப்பாங்க” என்றான்.
இவர்கள் பேசுவதையே நித்திலா கேட்டிக்கொண்டிருக்க,
“நீ டீரிட்மெண்ட் பார்ப்பியா மாட்டியா? டீரிட்மெண்ட் பார்க்கறதுக்கு முன்னாடியே மாமா, அம்மான்னு ஊரையே கூப்பிட்டுட்ட, பேசாம நான் கவினைக் கூப்பிட்டிருக்கனும்” என்று அவளின் கணவனை சொல்ல
“ஏன் போய் அவரைக் கூப்பிட்டுக்கோயேன், யார் வேண்டாம்னா?” என்றாள் கடுப்பாக.
“இரண்டு பேரும் குழந்தைங்க மாதிரி சண்டைப் போடாம இந்த பொண்ணைக் கவனிங்க” என்று சிவகாமி சத்தம் போடவும் நித்திலா கார்த்தியைக் கவனித்தாள்.
வாலியை முறைத்த சிவகாமி,
“நீயும் இவனுக்கு உடந்தை இல்ல, கவனிச்சுக்குறேன் உன்னை! அவங்க போலீஸ் போயிருந்தா தெரிஞ்சிருக்கும் இரண்டு பேருக்கும். அதுவும் பொண்ணுக் கடத்தின்னு வந்திருந்தா மானமே போயிருக்கும்” என்றவர் அங்கிருந்த திவானில் உட்கார்ந்து கொண்டார்.
“panic attack தான். கொஞ்சம் நேரம் ஆச்சுனா அவளே முழிச்சிடுவா” என்று சொல்ல
“அப்போ நீங்க கிளம்புங்க” என்றான் காளிதாஸன்.
“இந்த பொண்ணு கண்முழிக்கட்டும், அப்புறம் போறோம்” என்று சிவகாமி மறுத்துவிட, காளிதாஸன் பதில் பேசாமல் அம்மாவின் அருகே உட்கார்ந்தான்.
மயங்கி விழுந்து கிட்டதட்ட இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு கார்த்தியாயினி கண்விழித்தாள். அவளின் அழுகை சத்தம் கேட்டு நால்வரும் அவள் அருகே செல்ல,
“ரிலாக்ஸ்மா, உனக்கு ஒன்னும் இல்லை. ஜஸ்ட் அதிர்ச்சிதான்” என்று நித்திலா அவளின் கைப்பற்றி ஆறுதலாய் சொல்ல, சத்தம் குறைந்தாலும் இன்னும் அவள் நடந்த நிகழ்வில் இருந்து வெளிவரவில்லை.
அவள் அப்பாவின் பதவி போய், பணம் போய் நடுத்தெருவில் நின்றிருந்தால் கூட அவள் இவ்வளவு வேதனைக் கொண்டிருக்க மாட்டாள். குடும்பம் என்ற ஒன்று இருக்கிறதே! பணம் தானே பார்த்துக்கொள்வோம் என்று சமாதானப்படுத்தியிருப்பாள். ஆனால் குடும்பத்தைத் தாங்கிய நம்பிக்கை சிதைந்ததை தாளவே முடியவில்லை. தனக்குத் தெரிந்து பூஜா, தெரியாமல்? அந்த எண்ணம் இன்னும் வலி தர, விழிகள் அதனை அப்பட்டமாய்ப் பிரதிபலித்தது
ஷார்ட் டாப்ஸ், பட்டியாலா பேண்ட் அணிந்திருந்தாள், முகம் அழுது அழுது ஈரமாய் இருக்க, கண்களில் பயங்கர சோர்வு. கூடவே மனதின் வலி விழிவழி தெரிய, தொண்டை வலிக்க
“த..தண்ணீ வேணும்” என்றாள் கார்த்தி.
வாலி தண்ணீரை நீட்ட, நித்திலா அதனை வாங்கி மெல்ல குடிக்க வைத்தாள். மகனை முறைத்த சிவகாமி “கண்ணா! பட்டினி போட்டு வைச்சிருக்கியா நீ?” என்று கத்த
“ஷ் ம்மா! சத்தம் போடாதீங்க” என்று சீறியவன்
“அவங்கதான் சாப்பிட மாட்டேன் சொன்னாங்க” என்றான். அதற்கும்
“ஆமா, இப்படி தனியா அழைச்சிட்டு வந்து சாப்பிடக் கொடுத்தா எப்படி பயமில்லாம சாப்பிட முடியும்?” என்று மகனைக் கடிந்தவர்
“நீ அண்ணன் கிட்ட சொல்லி இந்த பிரச்சனையைப் பார்த்துக்கோ, நானும் நித்தியும் இந்த பொண்ணை அவங்க வீட்ல விட்டுடுறோம்” என்று சிவகாமி கட்டளையிட்டார்.
“அதெல்லாம் முடியாது!” என்று அவரை விடவும் உறுதியாய் சொன்னான் காளிதாஸன். எத்தனை ரிஸ்க் எடுத்து அவன் இதை செய்திருக்க, அம்மாவின் பேச்சு பிடிக்கவில்லை.
“காளிதாஸ்! இந்த பொண்ணைப் பார்த்த இல்ல, சின்னப்பொண்ணுடா, இன்னொரு அறை வாங்காத!” என்று சிவகாமி அழுத முகத்துடன் இருந்த கார்த்தியைப் பார்த்தபடி மகனிடம் பேச
காளிதாஸன் மறுத்துப் பேசும் முன் “இல்ல, நான் இங்க இருக்கேன்” என்று மெல்ல பதில் சொன்னாள் கார்த்தி.
உண்ணாமல் இருந்தது அவளின் தவறு! இப்படி இவனை இந்த நிலைக்குத் தள்ளியது அப்பா, அண்ணன் செய்த பிழை. இதில் காளிதாஸன் மீது எந்த தவறுமில்லை என்று தெளிவாய்க் கார்த்திக்குப் புரிய, அம்மா மகனின் பேச்சு வார்த்தை காதில் விழ, அதுவும் தனது அப்பா, அண்ணன் பற்றி தெரிந்தும் கூட தன்னை அவர்கள் வீட்டுப்பெண்ணாய் நினைத்து பேசும் சிவகாமி மீது மரியாதை தோன்றியது. கூடவே சொல்லொண்ணா வலி!
இப்படித்தானே தன்னுடையை அப்பாவையும் அண்ணனையும் நினைத்தாள். ஆனால் அவர்கள் வீட்டுப்பெண் என்றால் ஒரு வேஷம், வெளியே துவேஷம் என வாழ்ந்திருக்க, இத்தனை ஆண்டு வாழ்க்கையும் நொடியில் பொய்யாய் போன நிலை.
தானும் இவர்கள் வீட்டுப் பிள்ளையாய் இல்லாமல் இருந்திருந்தால், தனக்குமே பூஜாவின் நிலைதான், அதனையும் விட மோசமாய் இருந்திருக்கலாம். சின்ன வயதில் இருந்தே விசாலாட்சி பிள்ளைகளை மரியாதை முக்கியம் என்று சொல்லியே வளர்த்திருந்தார்.
“நமக்கு ஏதோ அதிர்ஷ்டம் அதனால இப்படி வசதி, மரியாதைன்னு வாழ்றோம். எல்லாருக்கும் அது அமையறதில்லை காதும்மா, அதுக்காக நம்ம மேல அவங்க கீழனு நினைக்க கூடாது. டிரைவர் அண்ணான்னுதான் சொல்லணும். இதே அவங்க இடத்துல நீ இருந்து உன்னை இப்படி நடத்தினா யோசிச்சுப் பாரு” என்று பத்து வயதில் இவள் டிரைவரை அப்பாவைப் போல் பெயர் சொல்லி அழைத்திருக்க அம்மா சொன்ன அறிவுரையை என்றும் கடைப்பிடிப்பவள்.
இப்போதும் பூஜா இடத்தில் தன்னை நினைக்க, சுருக்கென வலித்தது நெஞ்சம். பூஜா இவளை விடவும் சின்னப்பெண், இருபத்தொன்றுதான், இவளின் அண்ணனுக்கு என்ன இல்லை? அன்பான மனைவி, மகன் என அழகான குடும்பம் இருக்க, எப்படி இப்படியொரு இழிபுத்தி? நினைக்க நினைக்க ரணமாய் வலித்தது. இதே காளிதாசன் போல் இல்லாமல், அண்ணன் செய்த செயலுக்குப் பழிவாங்க வேறு யாராவது தன்னைக் கடத்தி இருந்தால் இப்படியே விடுவார்களா என்று நினைக்க இன்னும் பெருகியது கண்ணீர்.
கார்த்தியின் பதிலை எதிர்ப்பாராத சிவகாமி “கண்ணா! இந்த பொண்ணு பெயர் என்ன?” என்று மகனிடம் கேட்க
“கார்த்தியாயினி” என்றான்.
“அம்மன் பெயரை வைச்சிட்டு இப்படி அழலாமா கார்த்திம்மா? பொண்ணுங்கன்னா தைரியமா இருக்கணும். நீ பயப்படாத, நான் உன்னை உங்க வீட்ல விட்டுடுவேன்” என்று சிவகாமி அவளின் கைப்பிடித்து வாஞ்சையாய்ப் பேச தடுக்க முடியாமல் இன்னுமே கண்ணீர் வெள்ளம் கார்த்தியின் கண்களில்.
“இல்லைமா, நான் இருக்கேன். உங்களுக்கு அவங்களைத் தெரியாது. இவர் சொல்றதுதான் ரைட், என்னை அனுப்பிட்டா இவரை சும்மா விடமாட்டாங்க” என்றவள் காளிதாசனைப் பார்த்து
“நீங்க என்ன செய்ய நினைச்சாலும் செய்ங்க. நான் எப்பவும் உங்க பக்கம்தான் இருப்பேன்” என்று வாக்குத் தந்தவளை மெச்சுதலாய்ப் பார்த்தவன்
“கேட்டாச்சு இல்லை, கிளம்புங்க” என்று சொல்லி சிவகாமியை அனுப்ப பார்க்க, அவர் அடமாய் இருக்க நித்திலாவைப் பார்த்தவன்
“ஒழுங்கா அழைச்சிட்டுப் போ நித்தி, இவங்க இருந்தா எனக்கு டிஸ்டர்ப் ஆகும். நான் பத்திரமா இவங்களை அனுப்பிடுவேன், ஐ ப்ராமிஸ்” என்று சொல்ல நித்திலா சிவகாமியை சமாதானம் செய்து அழைத்துப்போனாள்.
“கண்ணா! சீக்கிரமே கார்த்தியாயினியை வீட்டுக்கு அனுப்பிடு” என்றவர் வாலியைப் பார்த்து “அந்த பொண்ணு பத்திரம்” என்று மிரட்டிவிட்டு போனார்.
அவர்கள் சென்ற பின் காளிதாஸன் கார்த்தியை அழைக்க, அவள் நிமிரவில்லை. இன்னமும் நடந்ததை நம்பவே முடியவில்லை. எல்லாம் கனவாய் கானலாய் இருந்துவிடக் கூடாதா என்று கனவு கண்டாள் கார்த்தி.
“கார்த்தி மேடம்!”
“கார்த்தி!” என்று அவன் அழைக்க, எதிலும் கவனம் பதியவில்லை. முட்டியில் முகம் புதைத்து மௌனமாய் ஒரு அழுகை.
இன்று தந்தையாலும் தமையனாலும் கூனிக்குறுகிப்போனாள், அவர்களின் செயல் அப்படியொரு அருவெறுப்பைத் தர, எல்லாவற்றையும் போட்டுடைக்கும் வேகம். தன்னையே அழிக்கும் அளவு தணல் ஒன்று கனன்றது!
“கார்த்தியாயினி!” என்று அவன் இன்னும் சத்தமாய் அழைக்க அவனைப் பார்த்தவளின் விழியில் கண்ணீர்த் தேங்கி நிற்க,
அவன் சொன்ன நிதர்சனம் புரிய, அய்யோ அம்மாவுக்கு இதெல்லாம் தெரிந்தால் தாங்கவே மாட்டார்கள் என்று நினைக்க நினைக்க அழுகை வெடித்தது. அதனையும் விட அண்ணி?!
கயல்விழி கார்த்திக்கு சகோதரி இல்லாத குறைத் தீர்க்க வந்தவள். கணவனை அதிகமாய் நம்புவாளே? என்று அம்மா அண்ணியைப் பற்றி எண்ண எண்ண, அந்த எண்ணம் அவளைத் தின்னத் தொடங்க, தலையே சுற்றுவது போல் இருந்தது. தலையை அவள் பிடித்துக்கொள்ள, கீழே நித்திலாவையும் சிவகாமியையும் வழியனுப்ப சென்றிருந்த வாலியை அழைத்தவன் ஜூஸ் எடுத்துவர சொன்னான்.
கார்த்தி மறுக்க,
“எனக்கு நல்லது செய்யனும்னு நினைச்சா குடிங்க இதை. அப்பா அண்ணா சரியில்லன்னு நினைச்சா நாட்டுல எத்தனையோ பேர் அப்படி இருக்காங்க. அதுக்கெல்லாம் நம்மை தண்டிச்சிக்க முடியாது. உங்க வீட்டுக்குப் போகற வரைக்கும் நீங்க மயங்காம இருக்கணும். அதுக்காச்சும் குடிங்க” என்றவன் அவனும் அவள் முன்னே ஜூஸை ஊற்றி குடித்தான்.
கார்த்திக்கு உணவெல்லாம் நினைவிலேயே இல்லை. உயிர் மட்டும் இருக்க, உயிர்ப்பற்ற ஒரு நிலை. ஆனால் காளிதாசனின் சொல்லுக்காக ஜூசைப் பருகினாள்.
“கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க, எதையும் யோசிக்காதீங்க” என்று சொல்லி காளிதாஸன் வெளியேறிவிட்டான்.
செல்வா அவன் அப்பாவைக் கத்திக்கொண்டிருந்தான்.
“இங்க பாருங்க கண்டவன் மிரட்டுறான்னு எல்லாம் என்னால எதையும் செய்ய முடியாது” என்று.
“டேய்! அவன் என் பொண்ணை வைச்சு ஆட்டங்காட்டுறான். நீயும் என்னை வெறுப்பேத்திப் பார்க்குறியா? கூத்தடிக்கிறவன் ஏன் டா குடும்ப பொண்ணுங்களைத் தொடுற? பணமா இல்லை, நீ செஞ்சு வைச்ச வேலையாலதான் இவ்வளவும். உன்னோட அவசரப்புத்தியால வந்த வினை. என் பொண்ணு எங்கிட்ட வரட்டும், அவங்க அப்பன் போன இடத்துக்கே அவனை அனுப்பி வைக்கிறேன்” என்று சபதமெடுத்தான் ராஜரத்னம்.
காளிதாசன் சொன்ன நேரத்திற்கெல்லாம் அப்பா, மகன் இருவரும் மீண்டும் கெஸ்ட் அவுஸ் சென்று, அவன் கேட்டது அனைத்தையும் ஒப்படைத்தனர். பூஜா அவர்களிடம் வாங்கியிருந்த லோன் பத்திரம் கிழித்துப்போடப்பட, ஏற்கனவே வாலி தயார் செய்துவைத்திருந்த பத்திரத்தில் பூஜா லோனை செலுத்தியதாகவும் வீடு அவர்களுக்கே உரியது என்றும் செல்வாவிடம் கையெழுத்து வாங்கினான்.
செல்வாவின் அலைப்பேசி, லேப்டாப் என்று எல்லாவற்றையும் எடுத்து வர சொல்லியிருக்க, எல்லா குப்பைகளையும் அழித்து, மீண்டும் அதனை ரெகவரி செய்யமுடியாதபடி செய்தான் வாலி.
“இது இல்லாம நீ வேற போன் வைச்சிருக்கன்னு எனக்குத் தெரியும் செல்வா. ஐ அம் not fool, ஆனா இதுதான் கடைசி!” என்று செல்வரத்னத்தை காளிதாஸ் எச்சரிக்க,
“எல்லாம் செஞ்சாச்சு, என் பொண்ணை அனுப்பு” என்று ராஜரத்னம் கேட்க
“அப்பா, பாருங்க இவன் கேம் விளையாடுறான். இங்க எல்லா எவிடன்ஸ் அழிச்சிட்டு கார்த்தியை வைச்சு இன்னும் நம்மைப் பழிவாங்கப் பார்க்கிறான்.” என்று செல்வா கத்த
“ஸ்டாப் இட் you bloody scoundrel! உன் தங்கச்சி உனக்கு முன்னாடி இருப்பாங்க. தட்ஸ் இட்! அப்படி இல்லைன்னா என்னை வந்து கேளு. நான் என் வீட்லதான் இருப்பேன்” என்றான் காளிதாசன் கணீரென்ற கட்டளைக்குரலில்.
“செல்வா, அவன் சொல்றான் தானே வா போகலாம். இல்லைன்னா இருக்கு இவனுக்கு” என்று காளிதாசை குரோதத்துடன் பார்த்தபடி ராஜரத்னம் சென்றார்.
அவர்கள் போகவும், அவனே அவளை அழைத்துச் சென்று வீடு இருக்கும் தெருவில் விட்டான். வேகமாகவே சென்றான், அவர்களுக்கு முன் போக வேண்டும் என்று.
இறங்கும் முன் கார்த்தியிடம் அவளின் கார் சாவி கொடுத்தவன்
“உங்க கார் கீ, அதுல உங்க போன் இருக்கு. அப்புறம் எடுத்துக்கோங்க” என்ற காளிதாஸ்
“எனக்குப் புரியுது இது ரொம்ப பெரிய ஷாக். ஆனா உங்க வீட்ல உள்ளவங்களை நீங்கதான் பார்க்கனும். இப்படி இருந்தா பயந்துடுவாங்க” என்றவனுக்கு அடுத்து என்ன பேசவென்று தெரியவில்லை.
“தேங்க்ஸ், என்னை நம்பி வந்ததுக்கு. அண்ட் டேக் கேர்” என்று சொல்லி அவன் போய்விட, கார்த்திக்கு அந்த பத்தடி தூரம் கடப்பதற்குள் உயிர் போனது. வாசலில் அவளின் அம்மா இருக்க, அவரைப் பார்த்தவள் கதறிவிட்டாள்.
கடத்தியிருப்பதால் மகள் பயந்துவிட்டாள் என்று விசாலாட்சி நினைத்தவர் அவருக்குமே மகளைக் காணவில்லை என்ற பதட்டம் நீங்க கண்ணீர் பெருக, கயல்விழிதான் பேசினாள்.
அவளின் அழுகைக் கண்டு பயந்துதான் போனார்கள் வீட்டினர். அதுவும் பெண்ணைக் கடத்தியிருக்க கற்பனைகள் தாறுமாறாய் ஓட,
கயல்விழியும் கூட பயத்துடன் “காது, என்னாச்சுடா? உங்கிட்ட எதாவது தப்பா நடந்தாங்களா?” என்று அவளும் தயங்கி தயங்கிக் கேட்க அப்பாவிடம் பேசிவிட்டு வந்த ராஜீவ் காதில் இது விழ
“அக்கா! பயப்படாத, எதுவானாலும் சொல்லு. யார் உன்னைக் கடத்தினா? அவனை உயிரோட விடமாட்டேன்” என்று சத்தம் போட அதில் சுயம்பெற்றாள் கார்த்தி.
அழுகையை அடக்கியவளுக்கு அடக்க முடியாத ஒரு ஆத்திரம். ரௌத்திரம்! இருந்தும் அதை மனதில் வைத்தவள்
“ம்மா, அது உங்களைப் பார்த்த சந்தோஷத்துல அழுதுட்டேன்” என்றவளை ராஜீவ் சந்தேகமாய்ப் பார்த்தான்.
“காது, உண்மையை சொல்லு” என்று அவன் அதட்ட
உண்மையை சொன்னால் தாங்குவீர்களா என்று நினைத்த நொடி, ராஜீவும் அப்படியோ என்று மின்னலாய்த் தாக்கிய எண்ணத்தில் இடிந்து போனாள் அந்த வீட்டின் இளவரசி. தம்பி அப்படி இல்லை என்று நினைத்தாலும் கூட மொத்தமாய் நம்பிக்கையற்ற அந்த நிமிடத்தில் வீட்டின் ஆண்களை நம்பவே தோன்றவில்லை.
“என்ன உண்மை? ஏதோ பணம் வேணும் கடத்தினாங்க. அப்பா கொடுத்துட்டார் போல, என்னை விட்டுட்டாங்க” என்று தம்பியிடம் எரிந்துவிழுந்தாள்.
“ம்மா, என்னைக் கொஞ்சம் தனியா விடு” என்று அம்மாவிடமும் கத்த அவர் கலக்கமாய் மகளைப் பார்க்க கயல்விழியைப் பார்த்தவள்
“அண்ணி! எனக்கு ஒன்னுமில்ல. எப்படி போனேன்னு அப்படியேதான் வந்திருக்கேன். ஒரு பயம், அவ்வளவுதான். அதான் அழுதுட்டேன், எனக்கு ரெஸ்ட் வேணும். பணம் மட்டும்தான் அவங்க மோடீவ், நான் இல்லை. கண்டபடி நினைச்சு என்னை டென்ஷன் செய்யாம கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க” என்றவள் அறைக்குள் போய் அடைந்துகொண்டாள்.
கார்த்தி வீடு வந்த அரைமணி நேரத்தில் ராஜரத்னம் வர,
“என்ன சொன்னா கனிம்மா? எப்படி இருக்கா?” என்று பதறினார்.
கயல்விழி பொறுமையாக எல்லாம் சொல்ல, அப்பாவிற்கு ஒரு ஆசுவாசம்.. மகளிடம் தன்னைப் பற்றிய பிம்பம் உடையவில்லை என. செல்வரத்னம் அதனை எல்லாம் கருத்தில் கொள்ளவில்லை.
அறைக்குள் நுழைந்த கார்த்தி பாத்ரூம் சென்றுவிட்டு மெத்தையில் அப்படியே விழுந்தாள். அப்பா, அண்ணனை நினைக்க நினைக்க கொல்ல வேண்டும் என்ற வெறியே வந்தது. தொலைக்காட்சியில் இது போல் செய்திகள் வந்தால்
“இவனுங்க எல்லாத்தையும் துடிதுடிச்சுக் கொல்லணும்ணா” என்று எத்தனை முறை அண்ணனிடமே சொல்லியிருக்கிறாள். அவனின் செயலை நினைக்க நினைக்க, போராட்டம் மனதில். ராஜரத்னம் மகளைக் கண்ணாரக் காண தவித்தார்.
“கனிம்மா!” என்று அறையின் முன் நின்று அழைக்க,
“மாமா, அவ டயர்டா இருக்கு சொன்னா. அப்புறம் அவளே வருவா இருங்க” என்று கயல்விழி சமாதானம் சொல்ல
“இல்லைம்மா கயல், எனக்கு என் பொண்ணைப் பார்த்தாதான் மனசு ஆறும்” என்று சொல்லி மீண்டும் மீண்டும் கதவைத் தட்ட, எரிச்சல் தாளாமல் கதவைத் திறந்தாள்.
‘கனிம்மா’ என்று தலையை வருட வந்த தந்தையை நாசுக்காக விலக்கியவள்
“நான் நல்லா இருக்கேன், தூக்கம் வருது” என்று சொல்லி கதவடைத்தாள் மகள்.
மகள் நன்றாக இருக்கிறாள் என்று கண்ணாரக் கண்ட மனிதர் அவளைத் தொந்தரவு செய்யாதீர்கள் என்று உத்தரவிட்டு வேலையைப் பார்க்க போனார்.
அன்று இரவு உணவு உண்ணவில்லை கார்த்தி. அடுத்த நாள் முழுவதுமே பட்டினிக்கிடந்தவள் இரவு கோவிலுக்குச் சென்றுவிட்டு அம்மா வந்தபோதும்
“நான் ஆர்டர் பண்ணி சாப்பிட்டேன்மா” என்று பொய் சொன்னாள்.
அடுத்த நாள் வழக்கம்போல் தம்பியுடன் லெதர் ஃபாக்டரி சென்றவள் அவனுடனும் பெரிதாய்ப் பேசவில்லை. அப்பாவும் அண்ணனும் இருக்கும்போது அறையை விட்டு வெளிவராமல் இருந்துகொண்டாள். மீறி பார்த்தாலும் அப்பா , அண்ணன் என்ற அழைப்பின்றி பொதுவாய் இரண்டு வார்த்தைகளுடன் பேச்சை முடித்தாள். இதில் நவீன் வேறு அவளை டின்னருக்கு அழைத்திருக்க, அவனுமே கசந்தான்.
அப்பா பார்த்த மாப்பிள்ளை என்று திருமணத்திற்கு ஒத்துக்கொண்டவளுக்கு, அவன் அப்பாவின் தேர்வு என்பதாலயே இப்போது பிடிக்காமல் போனது.
ஜீவனுள்ள ஜடமானாள் பெண்! வாழ்க்கையில் நாம் பார்க்கும் சில மனிதர்கள், கடக்கும் சில நொடிகள் சில நிமிடங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும். அப்படியான மனிதனாக காளிதாசன் ஆகிப்போனான். அவனுடனான சந்திப்பு நிகழ்ந்திருக்கவே வேண்டாம் என்று துடித்தாள். உண்மை இத்தனை வலி தரும் என்று நினைத்தே பார்த்ததில்லை அவள்.
யாரிடமும் பகிரவும் முடியாமல், அவர்களை எதிர்க்கவும் முடியாமல் ஒரு இறுக்கமான மன நிலையுடன் சுற்றினாள். மொத்தமாய் தன்னிலை இழந்தாள் கார்த்தி.
இப்படியே இரண்டு நாள் செல்ல, வெளியே உண்டேன் என்று சொல்லி சொல்லி பட்டினி கிடந்து மயங்கி விழுந்தாள். மன அழுத்தம், பசி எல்லாம் சேர மருத்துவமனை வாசம் கார்த்திக்கு.