அத்தியாயம் – 21
கார்த்திக் இரவு ஃபோனில் மருத்துவர் கூறியதை நினைவு கூர்ந்தான். அவரின் வார்த்தைகள் மீண்டும் காதுகளில் ஒலிப்பது போன்று ஒரு பிரம்மை! “உங்க வைப் டீப் டிப்பிரஷன்ல இருக்காங்க, கார்த்திக். மெண்டலா நிறைய பிரச்சனை பேஸ் பண்ணதுனால, ரொம்ப வெக்ஸாகிட்டாங்க. இந்த விஷயம் இப்போ தெரிய வந்ததால, பழைய ஞாபகங்கள் எல்லாம் அவங்களுக்கு வந்துடுச்சு! ரொம்பவே பயந்தும், குழம்பியும் போயிருக்காங்க! அந்த இன்சிடன்ட் நடந்தப்போ அவங்களுக்கு சுயநினைவு இல்லாம போனதே நல்லது தான். இல்லனா, இன்னும் மோசமா போயிருப்பாங்க மாயா… சோ, அவங்கள ரொம்ப கவனமா பார்த்துக்கனும். இந்த மாதிரி இருக்குறவங்க பெட்ல இருந்து, எழுந்துக்க கூட கஷ்டப்படுவாங்க. அதனால தான் அவங்கள சின்னச் சின்ன வேலை செய்யச் சொன்னேன்.
நீங்களும் கூடவே இருங்க, தனியா விட்டுறாதீங்க…. இன்னொரு விஷயம், மாயா கிட்ட நீங்க எப்போவும் போல நடந்துக்கோங்க. நீங்களும் ஃபீல் பண்றத பார்த்தா, அவங்க கண்டிப்பா சரியாக மாட்டாங்க! ஒருவிதமான பிரோடக்டிவ்னஸ் இருக்குற மாதிரி, உங்க வைப்ப உணர வைங்க. அதுவே போதும்…. கொஞ்சம் கொஞ்சமா தான் சரியாகும். லெட்ஸ் மீட் ஆன் சேட்டர்டே!”
டாக்டர் கீதாஞ்சலி கூறியது போல் தான் நடக்க வேண்டும் என மனதில் நிறுத்திக் கொண்டு, கார்த்திக்கும் படுக்கச் சென்றான். கட்டிலில் படுத்து உறங்கும் தன் மனைவியை பார்க்கப் பார்க்க அவனுக்கு காதலும், அவளுக்கு சரியாக வேண்டுமே என்ற வேண்டுதலும், மனதில் வேரூன்றியது! அதே எண்ணத்துடன் அவன் கட்டிலின் பக்கவாட்டில் கீழே படுத்துக் கொண்டான்.
அடுத்த நாள் விடியலின் போது, கார்த்திக் தான் முதலில் எழுந்தான். மாத்திரையின் விழைவில் மாயா அப்போதும் தூங்கிக் கொண்டிருக்க, சத்தமின்றி கார்த்திக் வேலைகளை செய்தான். காலை உணவாக தனக்கு தெரிந்த உப்புமாவை கிளறி வைத்துவிட்டு, குளித்து மீண்டும் மாயாவின் அருகில் வந்து அமர்ந்தான். சூரியன் மேலே நன்றாக எழும்பியதில், மணியை பார்த்தால் அது எட்டரை என்று கூறியது. இதற்கு மேல் விட வேண்டாம் என்று முடிவெடுத்து மாயாவை எழுப்பினான் கார்த்திக்.
இவனின் திருப்பள்ளியெழுச்சி ஸ்ருதி குறைவாக இருந்ததோ அல்லது மாயா உட்கொண்ட மாத்திரையின் வீரியம் அதிகமாக இருந்ததோ?? மாயாவிடம் அசைவே காணவில்லை…. கடைசியில் அவளை உலுக்கி எழுப்பியவனை, கண்களை கடினப்பட்டு திறந்து பார்த்தாள் மாயா. எல்லாம் ஒரு அரை நிமிடம் தான். கார்த்திக் தன் அருகில் அமர்ந்திருப்பதை பார்த்து, பயம் அப்பிய முகத்துடன் கட்டிலின் மறுப்புறம் சென்றாள் அவனின் மனைவி!
முகத்தில் சுடுநீரை யாரோ ஊற்றியது போல, சரலென கார்த்திக் எழுந்தான் கட்டிலில் இருந்து. “மாயு டைம் ஆச்சு, பிரஷ் பண்ணுமா…. எழுந்து வரியா?”
கணவன் கேட்டதற்கு பதிலாய், மௌனமே விடையாய் தந்தாள் மனைவி. இப்போது எழுந்து சென்று மட்டும் தான் என்ன செய்யவிருக்கிறோம்??? தன்னால் என்ன செய்ய முடியும் முதலில்? ஒன்றுக்கும் உதவாமல், தான் அனைவருக்கும் பாரமாக இருக்கிறோமோ?? இப்படிப்பட்ட கேள்விகள் தான் மாயாவின் மனதில் படையெடுத்தது! அதுவே மருத்துவர் கூறியது போல, கட்டிலிலேயே அவளை தங்கவும் வைத்தது.
கார்த்திக் பல வித்தைகளை காட்டித் தான் அவளை கீழே கால் பதிக்க வைத்தான்! “பாரு கடைசியில நீ டாக்டர் சொன்ன மாதிரி சின்ன சின்ன வேலை எதுவும் செய்யாம இருக்க… நான் நாளைக்கு டாக்டர் பார்க்கிறப்போ சொல்றேன், இதை பத்தி!” இறுதியில் மிரட்டலே வேலை செய்தது…. அந்த படுக்கையறையை ஒட்டி இருந்த குளியல் அறையிலேயே, கஷ்டப்பட்டு பிரஷ் செய்தாள். பின் வெளியே வந்து காபியை மறுத்து, அவன் கொடுத்த உப்புமாவை வாயில் வைத்தாள்.
அவ்வளவு தான்! முகமே அஷ்டகோனலாக மாறியது மாயாவுக்கு… அப்போதும், மனம் தளறாமல் அடுத்த களவு உப்புமாவை வாயில் திணித்துக் கொண்டாள். அவள் சாப்பிட தண்ணீர் எடுத்து வந்து கொடுத்த கார்த்திக், அவளின் தெளிவற்ற முகத்தை பார்த்து என்னவென்று கேட்டான்.
“ஒண்ணுமில்ல….” மாயா எதுவும் சொல்லாமல் மீண்டும் சாப்பிட குனிய, அவளை மீண்டும் கேள்விகளால் துளைத்தான் கார்த்திக். “இல்ல, உப்புமால உப்பு தண்ணில சரியா கலக்கலை. ஒரு இடத்துல உப்பு இருக்கு, இன்னொரு இடத்துல உப்பு இல்ல… அதான்…”
மாயா கூறியதை கேட்ட கார்த்திக்கிற்கு மிகவும் கஷ்டமாக போயிற்று. “சாரிடா, நான் வேற ஏதாவது செஞ்சு தரேன்! கொஞ்சம் வெயிட் பண்றியா??”
“இல்ல இல்ல… நான் இதே சாப்பிடறேன். எனக்கு சக்கரை மட்டும் வேணும். ரொம்ப ஒண்ணும் மோசமா இல்ல…”
மாயா சக்கரை என்று கேட்டதும் சமையறைக்கு சென்று, அவள் கேட்டதுடன் வந்தான் கார்த்திக். ஒருவழியாக அரை மணி நேரம் மிகவும் பொறுமையாக சாப்பிட்டு கை கழுவிய மாயா, மிகவும் சாதாரணமாக கேட்டாள் இத்தனை நாட்களாக அவன் சாப்பாட்டை பற்றி! ஒரு வெற்று முறுவலுடன் தன் வருத்தத்தை மறைத்துக் கொண்டவன், பின் பதிலளித்தான்.
“பெங்களூர்ல முதல்ல வெளிய தான் சாப்பிட்டுட்டு இருந்தேன். ஆனா, ஒரே மாசத்துல ஃபுட் பாய்சன் ஆகி, ஒரு வாரம் ரொம்ப கஷ்டமா போச்சு. அப்போலந்து கஞ்சியே குடிச்சாலும், வீட்டுல தான் எதுவா இருந்தாலும்… பட், மாசத்துல இரண்டு மூணு தடவ ஃபுல் டே வெளிய சாப்பிடுறதும் உண்டு! நெட்ல பார்த்து, கொஞ்சம் கொஞ்சமா சமைக்க கத்துக்கிட்டேன்! ரொம்ப பேஸிக்கான சமையல் தான் தெரியும் இப்போவும்! சென்னைக்கு வந்ததுலந்து ஆபீஸ்ல தான் லன்ச். இங்க நம்ம ஊரு சாப்பாடு செட் ஆகுது.”
[the_ad id=”6605″]
காதல் மட்டுமல்லாமல், நெஞ்சின் வலிகள் கூட மனம் விட்டு மனம் தாவுமா?? கார்த்திக்கின் வலிகள் வார்த்தைகளில் அப்படியே ஒலிக்க, மாயாவின் மனதில் வலியெடுத்தது. அவளையும் அறியாமல் இமைகள் குளம் கட்டியது. இதே நினைப்புடன் கட்டிலில் மீண்டும் விழுந்தாள். சரி சிறிது நேரம் கழித்து அவளை எழுப்பலாம் என நினைத்து, அறையை சிறிது அவளுக்கு ஏற்றவாரு மாற்றி அமைத்து, பொருட்களை ஒதிக்கினான்.
பின் மதியம் வெளியே வாங்கி வரட்டுமா என கேட்டவனை பார்த்து, “நீயே செய் கார்த்தி.” என கூறி ஆச்சரியப்படுத்தினாள் மாயா! ஒரு சின்ன புன்னகையுடன், “அந்த உப்புமா கொடுமைய சாப்பிட்ட அப்புறம் கூடவா தைரியமா கேக்கற??” என்று கேட்டபடி சமைக்க சென்றான்.
சாப்பாடும் படுக்கையறையில் சாப்பிட வேண்டாம் என கூறி, வெளியே ஹாலுக்குச் சென்றனர். அங்கே வேறு பொருட்கள் எதுவும் இல்லாததால், சிறு சத்தமும் பெரிதாக எதிர் ஒலித்தது! உண்ணும் போது மாயா கேட்டேவிட்டாள். “ஏன் வீட்டுல எந்த பொருளும் இல்லை??”
மாயாவிடம் இந்த சமயம் தன் கவலையை காட்டக் கூடாது என பெரும்பாடு பட்டு பேசினான் கார்த்திக். “வாங்கனும்னு தோணல… அவ்வளவு தான். நான் மட்டும் தான? எதுக்கு தேவையில்லாமன்னு விட்டுட்டேன்….”
“டிவி கூடயில்லை… வீட்டுல போர் அடிச்சா என்ன செய்வ??”
“காலையில ஆபீஸ் கிளம்பவே நேரம் சரியா போயிடும். ஈவ்னிங் வந்தா, அதோ அங்க இருக்குற பால்கனில நின்னுட்டு நீ லேகா கூட விளையாடுறதை பார்த்துட்டு இருப்பேன். அப்புறம், கொஞ்ச நேரம் வெளிய நடப்பேன்…. நைட் திரும்ப தூங்குறது. இப்படியே ஓடிரும்!”
கார்த்திக் சொன்னதை எல்லாம் கேட்டு ஒன்றும் செய்யாமல் இருப்பது தான் செய்யும் பாவம் எனவே கருதினாள் மாயா. என்ன செய்யலாம் என, சில மணிநேரங்கள் இதைப்பற்றியும் யோசித்தாள். அதன்பின் பெரிதாக அன்று எதுவும் பேசவில்லை இருவரும். இரவுப்பொழுது மாத்திரையின் துணையுடன் நித்திராதேவியை சரண்யடைந்தாள் மாயா. கார்த்திக் தான் பாட்டுகளை கேட்டபடி வெகு நேரம் முழித்திருந்தான்.
அடுத்த நாள் ஒரு ஐந்து சதவீதம் முன்னேற்றம் தெரிந்தது மாயாவிடம்! கார்த்திக் சொன்னதை ஓரளவுக்கு செய்தாள். அங்கே மைதிலியின் வீட்டை கார்த்திக் தான் சென்று சுத்தம் செய்து விட்டு வந்தான். அடுத்தப்படியாக அன்று மாலை செல்லவிருக்கும் மருத்துவமனையினுக்கு மொபைலில் கால் டாக்ஸி புக் செய்த கார்த்திக்கை புருவ முடிச்சுடன் பார்த்தாள் அவன் மனைவி. அப்போது தான் அவளுக்கு இதற்கு முன் மருத்துவமனை செல்லும்போதும் கால் டாக்ஸியில் சென்றது நினைவிற்கு வந்தது. வீட்டிலிருந்து அவன் வந்ததும் கார், பைக் எதுவும் வாங்கவில்லையா?? மெதுவாக கார்த்திக்கிடம் சென்று அதைப் பற்றி கேள்வி எழுப்பினாள்.
“நீ ஏன் இன்னும் பைக் வாங்கல??”
இக்கேள்வியை கேட்டவுடன் கார்த்திக்கின் முகம் நன்றாகவே மாற்றம் கண்டது. மாயாவிடம், “நான் பைக் ஓட்டுறது இல்ல இப்போ. விட்டுட்டேன். கதிரோட பைக்கும் போயிடுச்சு….” என்று வெற்றுக் குரலில் கூறினான். மாயாவிற்கு மிகவும் ஆச்சரியம், பெரிய அதிர்ச்சி தான்! அவனுக்கு விசையுந்தின் மேல் இருந்த காதலை அவர்களின் முதல் சந்திப்பிலேயே அறிந்தவள் ஆகிற்றே! இப்போது அவன் இருசக்கர வாகனத்தை முழுவதுமாக தன் வாழ்க்கையிலிருந்து நீக்கி விட்டானா??
யாருக்காக?? ஏன் இவன் மட்டும் பிரியப்பட்டவர்களிடம் இவ்வளவு உயிராக இருக்க வேண்டும்…. தான் காலேஜில் பார்த்த விளையாட்டு கார்த்திக்கிற்கும் இவனுக்கும் எவ்வளவு தூரம் வித்தியாசம்?? நினைக்கும் போது மாயாவுக்கே கண்ணீர் சுரந்தது. மீண்டும் அவளை தேற்றும் பொறுப்பை தனதாக்கிக் கொண்டு, அவளை மருத்துவமனை அழைத்துச் சென்றான் கார்த்திக். கீதாஞ்சலி அன்றும் அவளை தன்னுடன் தனியாக அமர்த்திக் கொண்டு, தன் சிகிச்சையை ஆரம்பித்தார்.
இம்முறை அவரிடம் கூடுதலாக தோன்றிய நம்பிக்கைத்தன்மை, மாயாவை கேட்ட கேள்விக்கு சில நிமிடங்கள் எடுத்தாவது பதிலளிக்க வைத்தது. “உனக்கு நடந்ததுக்கு நீ பொறுப்பில்ல மாயா. நீ பொறுப்பில்லாத ஒரு விஷயத்துக்கு, இவ்வளவு கஷ்டப்பட தேவையில்லை. அதை முதல புரிஞ்சிக்கோமா…” இதையே அவர் மூன்று முறை கூறியும், மாயா அதை ஏற்க மறுத்தாள்.
“யார் மேல தப்பு இருந்தாலும், வலியும் அசிங்கமும் எனக்கு தான மேடம்???”
இதையே மாயா வெவ்வேறு சொற்கள் கொண்டு கூற, கொஞ்சம் விட்டுத் தான் பிடிக்க வேண்டும் என முடிவெடுத்து, அழகாக பேச்சை மாற்றினார் அவர். அதன்பின் கார்த்திக்கையும் அழைத்து, ஒரு வாரம் கழித்து அடுத்த சனிக்கிழமை வரச் சொன்னார்.
டாக்டர் சொன்ன அறிவுறைக்கேல்லாம் மண்டையை பூம்பூம் மாடு போல் உருட்டிவிட்டு அவரிடம் விடைப்பெற்றாள் மாயா. போகும் போதே கடையில் மாவு வாங்கிச் சென்று, தோசை சுட்டு சாப்பிட்டு, படுத்தனர் இருவரும். மறுநாள் எழுந்ததும், மாயா கார்த்திக்கிடம் வந்து, “அங்க மைதிலி அக்கா வீட்டுக்கு போகனும் எனக்கு….” என்று கூறவும் தானும் அவ்வீட்டை சுத்தம் செய்யலாம் என நினைத்து, சரியென கிளம்பினான் அவளுடன்.
[the_ad id=”6605″]
அங்கே சென்றதும் ஹாலில் இருந்த சோபாவில் விழுந்தாள் மாயா. கார்த்திக் வேலை செய்துக் கொண்டிருந்தபோது காலிங் பெல் அடித்தது. யாராக இருக்கும் என்ற சிந்தனையுடன் கதவை திறந்த கார்த்திக், கண்டிப்பாக மறுப்பக்கம் ரித்தியா, அபிராமி, தன் தந்தை சுப்பிரமணியத்தை எதிர்பார்க்கவில்லை!!!
அவன் திகைத்து செயலிழந்து நின்றான் என்றால், எதிர்தரப்பில் இருந்தவர்களுக்கு ஒன்றுமே விளங்கவில்லை…. இதில் மாயா வேறு அவளின் அன்னையை பார்த்ததும், ‘அம்மா’ என கூவலுடன் சென்று அவரிடம் அடைக்கலமாக, கார்த்திக் எதுவும் பேசாமல் அவர்கள் உள்ளே வர வழியை விட்டான். சுப்பிரமணியத்துக்கு வெகு மாதங்கள் கழித்து மகனை காணவும் அவன் ஏன் அங்கே இருக்கிறான் என கேள்வி கேட்க கூட வாய் எழவில்லை!
எல்லோரும் உள்ளே வந்து சோபாவில் அமரும் வேளை விநாயகம் உள்ளே வந்தான். வாசல்படியில் அவன் கால் வைக்க, முதலில் அவன் கண்ட காட்சி மாயா அபிராமியின் மடியில் தேம்பித் தேம்பி அழுவதை தான்…. ஒன்றும் புரியாமல் உள்ளே வந்து முதலில் கதவை அடைத்தான். “என்னாச்சு??? ஏன் மாயா அழுவறா??” என விநாயகத்தின் கேள்விகளுக்கு பதிலாய் கார்த்திக் நிற்பதை அப்போது தான் கவனித்தான்.
பார்த்ததும் கோபம் தலைக்கேறியது! “ஹே நீ இங்க என்ன பண்ற??” என்று கோபத்தில் கண்கள் சிவக்க, கார்த்திக்கிடம் விரைந்தவனை மாயாவின் கைகள் பிடித்து தடுத்தன!
“அவன் மேல எந்த தப்புமில்ல… ப்ளீஸ்னா சொல்றதை கேளு.” மாயா கூறியதை கேட்டு அனைவருக்கும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தான்… இருந்தாலும், சொல்லியாக வேண்டுமே. “மாயா எல்லாம் அப்புறமா பேசிக்கலாம். எல்லாரும் ரெஸ்ட் எடுங்க. நான் அப்புறமா வரேன்.”
கார்த்திக் இப்போது எதுவும் கூறத் தேவையில்லை என்ற வேண்டுதலுடன் மாயாவை பார்க்க, அவளோ அதை துச்சமாக நிராகரித்தாள். “கார்த்தி நீயே என்ன நடந்துச்சுன்னு சொல்லு…. ப்ளீஸ், என்னால முடியலை.” மாயா கெஞ்சலுடன் கூறியதை கேட்டு, கார்த்திக்கின் முகத்தை கேள்வியாக கண்டனர் அனைவரும்.
வேறு வழியில்லாமல் கார்த்திக் நடந்ததை அவர்களிடம் ஒப்பித்தான். மாயா நிறையவே தற்போது அபிராமியிடம் ஒன்டிக் கொள்ளத் தொடங்கினாள். கார்த்திக் உண்மையை மண் பானையாய் போட்டுடைக்க, அங்கே இருந்தவர்களின் மனமும் சேர்ந்தே உடைந்தது! எல்லாவற்றையும் கூறிவிட்டு முடிக்கும் தருவாயில், “என்னால எல்லார்கிட்டயும் காரணம் சொல்ல முடியும். ஆனா, உன்கிட்ட நான் மறச்சதுக்கு மன்னிப்பே இல்லப்பா… உன்னால இதையேல்லாம் தாங்க முடியுமா இல்ல, நீ யார்கிட்டயாவது சொல்லிடுவியோன்னு பயம். அதான் சொல்லாம மறைச்சுட்டேன். சாரிப்பா… என்கிட்ட பேசுப்பா….” என்ற மன்றாடலுடன், தந்தையிடம் சிறு பிள்ளையாய் மாறி தஞ்சம் அடைந்தான் கார்த்திக்.
சோபாவில் அமர்ந்திருந்த தந்தையின் கால்களை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தவனை, சுப்பிரமணியமும் அணைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தார்! சில நிமிடங்கள் கழித்து, மகனின் கன்னத்தை துடைத்துவிட்டபடி அவன் நெற்றியில் முத்தமிட்டவர், பின் நெகிழ்ந்து போய் பேசினார். “எனக்கு ரொம்ப பெருமையா இருக்குடா கார்த்தி. கஷ்டமான சூழ்நிலையிலையும் நீ இவ்வளவு யோசிச்சு, நல்ல முடிவா எடுத்திருக்கன்னு என்னால நம்பவே முடியலை… நான் நினைச்சத விட ரொம்பவே மெச்சூர்டா இருக்கடா! அதுவே போதும். இந்த ஒரு வருஷம் நான் மனசுல வைச்சு தவிச்சதேல்லாம் ஒண்ணுமே இல்லைன்ற மாதிரி ஆகிடுச்சு…. நீ நிறைய வருஷம் மாயாவோட சந்தோஷமா இருப்படா. உன்னை அப்பா நம்பாம போயிட்டனேன்னு தான் கஷ்டமா இருக்கு இப்போ!”
“அது நான் அப்படி சொன்னதால தானபா நீ நம்புன?? ஒண்ணும் பிரச்சனை இல்ல விடு”
“இல்லடா நீ என்ன தான் சொல்லி இருந்தாலும், நான் நம்ப பையன் இப்படி பண்ணுவானான்னு யோசிக்கவே இல்லை…. நீ ஹாஸ்பெட்டல்ல ஒழுங்கா முகம் குடுத்து பேசாம போனவுடனே, எனக்கு நீ ஏதோ தப்பு பண்ணிட்டன்னு தோண ஆரம்பிச்சிடுச்சு! அதான்டா கண்ணா… அப்பாவ மன்னிச்சிருப்பா!!”
மேலும் புலம்ப தொடங்கியவரை பெரும்பாடு பட்டு, அடக்கிவைத்து நிமிர்ந்தால் அபிராமியும் ரித்தியாவும் மாயாவின் இருபுறம் இருந்தவர்கள், இவனை பார்த்து கைக்கூப்பினர்! அவர்களிடம் விரைந்துச் சென்று, “என்ன அத்தை இதெல்லாம்??” என்று கூறி கைகளை கீழ் இறக்க வைத்தான். அபிராமியும் சரி ரித்தியாவும் சரி, கார்த்திக்கின் முகம் கூட காணாமல் ஒதுக்கி இருந்தனர், இதுவரை.
இப்போது தங்களின் உயிரை காப்பாற்ற வந்த தெய்வமாக அவன் தோன்ற, அபிராமிக்கு குற்ற உணர்வில் நெஞ்சு குறுகுறுத்தது. கார்த்திக்கிற்கு இதெல்லாம் இப்போதா நடக்க வேண்டும் என்று தோன்றியது. ஏற்கனவே மாயா தான் என்னவோ தியாகம் செய்ததாக நினைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இதையேல்லாம் பார்த்தால், அவள் எப்படி உணருவாளோ??? அதனால் முடிந்த அளவுக்கு சீக்கிரமாக, ரித்தியாவையும் அபிராமியையும் ஓரளவிற்கு சமாளித்து விட்டு, விநாயகத்தை காண கண்களால் தேடினால் ஆளைக் காணோம்! எங்கே சென்றிருப்பான் என வீட்டை சுற்றி வந்த கார்த்திக்கின் கண்களில் விநாயகம் பட்டான்.
[the_ad id=”6605″]
மாயாவின் படுக்கையறையில் சுவரோரமாக காலை சூரியன் வெளிச்சம் படாதவாரு அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தான் விநாயகம். அவனிடம் சென்று, “விநா” என்று அழைத்தது தான் தெரியும் கார்த்திக்கிற்கு. அவன் கூப்பிட்ட உடனேயே திரும்பி கட்டியணைத்து, எரிமலையாக வெடித்து கோபத்தின் ஊடே மன்னிப்பு படலத்தை வாசித்தான் விநாயகம்.
“ஏன்டா ஏன்டா என்கிட்ட சொல்லலை?? நீ சொல்ல வேணாம்னு சொன்னா நான் யார்கிட்டயாவது சொல்லுவேனாடா??? இப்படி பழி மொத்தமும் நீ வாரி சுமந்திட்டு, ஒரு வருஷம் தனியாவே இருந்திட்டியே…. என் மேலயும் தான் தப்பு…. சாரிடா…. அந்த நேரத்துல தாலிய மாயா கழுத்துல பார்த்ததும் யோசிக்காம கோபப்பட்டுட்டேன். மன்னிச்சுருடா!!! ஆனா, எப்படிடா எல்லாத்தையும் விட்டுட்டு இருக்க முடிஞ்சுது உன்னால???”
“என்னிக்காவது கடவுள் மனசு வைச்சு, நீங்க என் கிட்ட வருவீங்கன்னு ஒரு நம்பிக்கையில தான்டா.”
கார்த்திக்கின் பதிலில் விநாயகத்தின் அணைப்பு இறுகியதே தவிர சற்றும் குறையவில்லை!!