பூங்கா நகரம் என்று அழைக்கப்படும் பெங்களூரு மாநகரம். சூரிய பகவான் நல்ல மனநிலையில் இருந்தார் போல. மேனியை வருடும் இளம் கதிரலைகளை வீசிக்கொண்டிருந்தார். கருமையான நெடிய சாலை. சாலையின் இருபுறத்திலும் குல்மோஹர் மரங்கள். சற்றே நிமிர்ந்து பார்த்தால் என்னே ஒரு அதிசயம்! மரங்களில் இலைகளை அதிகம் காண இயலவில்லை. மாணிக்க சிவப்பில் மரங்கள் முழுவதும் பூத்து குலுங்கிற்று குல்மோஹர் பூக்கள். அந்த சாலையில் இரண்டு மிதிவண்டிகளில் இரண்டு பெண்கள் சென்று கொண்டிருந்தனர். பள்ளி சீருடைகளில் இன்று தங்கள் பி.யு.சி கடைசி பரீட்சையை முடித்துவிட்டு லேசான மன நிலையில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
“ஏண்டி காவேரி, ஒரு வழியாக பரீட்சை முடிந்து விட்டது. நீ எங்கே கல்லுரி சேர்ந்தாலும் நானும் அங்கே தான் சேர்வேன். இப்பவே சொல்லிட்டேன். என்னை விட்டுட்டு எதுவும் செய்யக்கூடாது” என்று மிகவும் கண்டிப்பான குரலில் கூறினாள் கஸ்தூரி. கடந்த மூன்று மாதங்களாக தினமும் இதை கூறி கொண்டிருக்கிறாள் கஸ்தூரி.
காவேரியும் கஸ்தூரியும் ஒன்றாம் வகுப்பில் இருந்து ஒன்றாக படிக்கின்றனர். இருவரும் மிகவும் நெருங்கிய தோழிகள். இருவருக்கும் வேறு நெருங்கின தோழிகள் இல்லை.
காவேரி! கற்றையான ஒற்றை பின்னல், கருவண்டு விழிகள், பூசினாற்போன்ற உடல் வாகு, யாரையும் பார்வையாலே தூரம் நிறுத்திவிடும் திறன், படிப்பில் மிகவும் கெட்டிகாரி, படிப்பை விட விளையாட்டில் மிகவும் திறமைசாலி, கம்பீரமான அழகு, உற்சாகமான பெண். அரசு பள்ளியில் படித்தாலும் ஆங்கிலம், தமிழ், கன்னடம், ஹிந்தி என்று நான்கு மொழிகளிலும் ஞானம் பெற்றவள். பாரதியார் கண்ட புதுமை பெண்.
கஸ்தூரி கன்னடத்து பைங்குயில். காவேரியுடன் சிறுவயது முதல் பழுகுவதால் தமிழ் நன்றாக பேசுவாள். இவர்கள் வசிக்கும் இடத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் நான்கு தலைமுறை முன்னமே தமிழகத்தில் இருந்து இங்கே குடிபுகுந்தவர்கள். கன்னடம் கலந்த தமிழ் பேசுவார்கள் பெரும்பாலும்.படிப்பில் சுமார் ரகம் கஸ்தூரி.
“நான் பி.எஸ்சி கணிதம் படிக்கலாம் என்று இருக்கேன்.நீயும் கணக்கும் நீரும் நெருப்பும் போல. நெருப்பு மாதிரி நான் சொல்லி கொடுத்தாலும், தண்ணீ ஊத்தி அதை அணைச்சிடுவ. தயவு செய்து நீயும் எடுத்துடாத டீ. பி.யூ .சி. வரைக்கும் கஷ்டப்பட்டு பாஸ் பண்ற அளவுக்கு சொல்லி கொடுத்துட்டேன். உனக்கு கணக்கு சொல்லி கொடுத்தால் நான் செத்தே போய்டுவேன். என்னை விட்ருடீ” என்று ஏறக்குறைய கதறினாள் காவேரி.
“ரொம்ப பண்ணாத. இரண்டு பேரும் ஒண்ணா படிக்கலாம்னு தானே கேட்டேன்” என்று முறுக்கி கொண்டாள் கஸ்தூரி.
“ஹா ஹா ஹா. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் உனக்கு கன்னடம் தான் நல்லா வரும். நீ பி.ஏ கன்னடம் படிடி. அப்புறம் இரண்டு பேரும் பி.எட் படிக்கலாம். ஒரே பள்ளியில் ஆசிரியராக சேரலாம். நான் கணக்கு டீச்சர், நீ கன்னட டீச்சர். ஓகேவா?” என்று தன் பல நாள் யோசனையை கஸ்தூரியின் முன் வைத்தாள்.
“சூப்பர் டி காவ்ஸ். முன்னாடியே யோசிச்சு இருந்தியா? என்கிட்ட சொல்லவே இல்லை.”
“சொன்னா மூனும் ஆறும் முப்பத்தாருன்னு சொல்லி கணக்குல கும்மி அடிச்சிருப்ப. அதான் எக்ஸாம் முடிஞ்சதும் சொன்னேன்”
இருவரும் ஒரே காலனி தான். அடுத்தடுத்த தெருவில் அவர்களது வீடு. ஐந்து கிலோமீட்டர் தினமும் மிதிவண்டியில் சென்று வருவர் பள்ளிக்கு. இருவரும் மிகவும் ரசித்து அனுபவிப்பர் இந்த மிதிவண்டி பயணத்தை. இன்றோடு இதற்கு கடைசி நாள் என்பது சிறிய வருத்தத்தை கொடுத்தது. ஆனாலும், பக்கத்தில் தானே இருக்கிறோம், அடிக்கடி பார்த்துக்கொள்ளலாம் என்று மனதை தேற்றி கொண்டு அவரவர் வீட்டிற்கு சென்றனர்.
“அம்மா… அம்மா..“, என்று கூவிக்கொண்டே மிதிவண்டியை அந்த காம்பௌண்ட் உள்ளே விட்டாள் காவேரி. எத்தனை தடவை சொன்னாலும் தெருவிலே கூவ ஆரம்பிச்சிடுவா என்று சலித்துக்கொண்டே வந்தார் சுலோச்சனா. காவேரியை போன்ற அதே தோற்றம். பார்த்தால் காவேரியின் அம்மாவை போல இல்லாமல் அக்காவை போலத்தான் இருந்தார் சுலோச்சனா.
”பரீட்சை எப்படி செய்தாய், காவேரி? நல்ல மதிப்பெண் வருமா? கஷ்டமா இருந்துதா? விடைத்தாளை சரி பார்த்தியா?” என்று வரிசையாக கேள்விகளை அடுக்கினார்.
“அம்மா கேள்வியின் நாயகியே! முதலில் கொஞ்சம் தண்ணீர் கொடு. சும்மா கேள்வியா அடுக்கிகிட்டு. அங்க இருந்து மிதி மிதின்னு மிதிவண்டியில் வந்திருக்கேன்” என்று வீட்டினுள் நுழைந்து கீழே விரிக்கப்பட்டிருந்த பாயினில் காலை நீட்டி அமர்ந்தாள். குடிக்க தண்ணீரும் கூடவே எலும்பிச்சை சாரும் கொடுத்தார் மகளை அறிந்த அன்னையாக.
“எக்ஸாம் எல்லாம் ரொம்பவே நல்லா செய்திருக்கேன். நல்ல மதிப்பெண் நிச்சயம் வரும்மா” என்றாள் மென்னகையுடன். சுலோச்சனாவிற்கும் மகிழ்ச்சி.
”இன்னும் ரெண்டு வாலுங்களும் வரவில்லையா?” என்று கேட்டாள் தன் தம்பி தங்கையை. சங்கரன்… சங்கரி… இரட்டையர்கள். நான்காம் வகுப்பு படிக்கின்றனர். ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளி அவர்கள் வீட்டிற்கு அருகிலே இருந்தது. ஆறாம் வகுப்பில் இருந்து காவேரி செல்லும் பள்ளிக்கு செல்ல வேண்டும்.
”இருவரும் வர நேரம் தான். நீ கொஞ்சம் படுத்து எழுந்துக்கோ. காலையில் சீக்கிரமா எழுந்தியே” என்று தன் வேலையை தொடர்வதற்கு சென்று விட்டார் சுலோச்சனா.
சுலோச்சனா பேரிளம் பெண். மணி மணியாக மூன்று பிள்ளைகள். மூத்தவள் காவேரிக்கு பிறகு எட்டாண்டுகள் சென்று பிறந்தனர் இரட்டையர்கள். ஆண் ஒன்று பெண் ஒன்று. கார்த்திக், அவரின் கணவர். பத்தொன்பது வயதில் காதல் திருமணம். எதை பார்த்து வந்தது இந்த காதல் என்று அவருக்கு இன்றும் புரியவில்லை. கார்த்திக் நல்லவர். ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. வசீகர தோற்றம் கொண்டவர். புத்திசாலியும் கூட. ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்கராக பணி ஆற்றிவந்தார். அவர்களது குடும்பம் பரம்பரையாக மளிகை கடை நடத்தி வந்தனர். கார்த்திக்கிற்கு மளிகை கடையில் அழுக்கு உடையில் இருப்பது பிடிக்கவில்லை. அதனால்தான் இந்த உத்யோகம். அவர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள கோவிலுக்கு அடிக்கடி சுலோச்சனா வருவார். கோவிலில் தொடங்கியது அவர்களது காதல். அதே கோவிலில் யாருக்கும் தெரியாமல் நடந்தது அவர்களது திருமணம். இருவரது வீட்டிலும் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்து, தன் காதலின் மேல் கொண்ட நம்பிக்கையில் கார்திக்கின் கை பிடித்தார் சுலோ.
சொல்லிக்கொள்ளும் படி பெரிய வருமானம் இல்லை. ஆனால் இருப்பதை கொண்டு சுலோச்சனா சிறப்பாக குடும்பத்தை செலுத்தினார். வாழ்க்கையை ரசித்து வாழ்பவர் சுலோ. ஆனால் கார்த்திக்கின் ஒரே குறை, குறை சொல்வது தான்.அவருக்கு எதிலும் திருப்தி என்பதே இருக்காது. இது தான் எனக்கு விதித்ததா? என்று சலித்து கொள்வார். முதலில் அழகான மணைவி என்று கர்வமாக தான் இருந்தார். பிறகு காதலித்து மணந்ததால் அவர்கள் வீட்டில் ஆதரவு இல்லை. தன் அண்ணன் மனைவி வசதியான வீட்டுப் பெண். தன் தம்பிக்கும் வசதியான வீட்டில் திருமணம் நிச்சயம் செய்த செய்தி கேள்வி பட்டு வருந்தினார். சுலோ வீட்டிலும் தங்களை சேர்த்து கொள்ளவில்லை.யாரோட ஆதரவின்றி நானே குடும்பத்தை இழுக்க வேண்டுமா? என்று சலிப்பு தட்டியது கார்த்திக்கிற்கு.
அதில் இந்த திருமணம் தப்பு என்ற எண்ணம் தோன்ற தொடங்கிவிட்டது. சுலோ எவ்வளவோ அவரை உற்சாகமாக வைத்துகொள்ள முயற்சி செய்தார். காலம் தான் மருந்து, காத்திருப்போம். நம்மளை நம் குடும்பம் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பிக்கையாக பேசுவார் சுலோ. சில சமயம் கார்த்திக்கும் மகிழ்ச்சியாக தான் இருப்பார். பிறகு மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறின கதை தான்.
காவேரி பிறந்தவுடன் இரு குடும்பங்குளுடன் ஒரு சுமூக உறவு தொடங்கியது. அனைவரையும் அனுசரிக்கும் குணம் கொண்ட சுலோவை புகுந்த வீட்டில் எல்லோருக்கும் பிடித்து விட்டது. தாயைப் போன்றே இருந்த காவேரி அனைவருக்கும் செல்லம். ஆனாலும் ஒரே வீட்டில் எல்லாம் இருக்கவில்லை. விசேஷம் என்றால் ஒன்று கூடும் அளவிற்கு வந்தது. அதுவும் கார்த்திக்கிற்கு குறையாக இருந்தது. அண்ணனுக்கும் தம்பிக்கும் செலவு குறைவு. அப்பாவுடன் ஒன்றாக இருப்பதால் அப்பா பார்த்துப்பார். நமக்கு தான் செலவு என்று சலித்துக்கொள்வார். சிலரை மாற்ற முடியாது என்ற எதார்த்தத்தை சுலோ ஏற்றுக்கொண்டார். கார்த்திக்கை அவர் இயல்புடனே ஏற்றுக்கொண்டார். அவர் எவ்வளவு முகம் சுணுங்கினாலும் சிரித்த முகமாகவே இருப்பார் சுலோ.
கார்த்திக்கிற்கு ஒரு அண்ணனும் ஒரு தம்பியும்.அவர்கள் அவர் தந்தையுடன் பல வருடங்களாக மளிகை கடையில் இருந்தனர். அவர்கள் இருவரின் கடின உழைப்பினால் தொழில் நன்கு வளர்ந்தது. ஆளுக்கு ஒரு கிளையும் தொடங்கினர். இந்த தொழிலில் கார்த்திக்கிற்கு பங்கு கொடுக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை. ஆனால் பூர்விக வீடும் சில நிலங்களும் தனக்கு பிறகு தன் மூன்று பிள்ளைகளுக்கும் சம பங்கு உண்டு என்று கூறி இருந்தார் கார்த்திக்கின் தந்தை. கார்த்திக்கிற்கு அதில் மிகுந்த வருத்தம். அவசர பட்டு காதல் திருமணம் செய்ததால் தான் இந்த நிலைமை, தொழில் பங்கு இல்லாமல் போய்விட்டது என்று எப்பொழுதும் கூறுவார். சுலோ அதை காதில் போட்டுக்கொள்ள மாட்டார். நடந்த திருமணத்தை திருப்பவா முடியும் என்று கடந்துவிடுவார். முழுதாக படிப்பு முடியும் முன் திருமணம் செய்துக்கொண்ட தன் மடத்தனத்தை தான் எண்ணி வருந்துவார்.
காவேரிக்கு மூன்று வயது ஆனவுடன், தனக்கு பிடித்த தையல் கலையை தொழிலாக தொடங்கினார். மிகுவும் சிறப்பாக இருக்கும் அவர் தையல். விரைவில் நிறைய வாடிக்கையாளர்களை தந்தது. வருமானமும் கணிசமாக இருந்தது. கார்த்திக்கிற்கு கொஞ்சம் மகிழ்ச்சி. மணைவி தனக்கு உதவுவது அவருக்கு பெருமையாக இருந்தது. வீட்டையும் மிகவும் அழகாக வைத்திருப்பார். சமையலும் மிகவும் ருசியாக இருக்கும். வருமானமும் மூவருக்கும் போதுமானதாக இருந்தது. அலை அலையாக மகிழ்ச்சி இல்லா விட்டாலும் தெளிந்த நீரோடை போல சென்றது வாழ்க்கை.
காவேரிக்கு எட்டு வயதிருக்கும் போது மீண்டும் கருத்தரித்தார் சுலோ. இன்னொரு குழந்தை நமக்கு தேவையா என்று கார்த்திக் யோசித்தார். தன் அண்ணனுக்கும் தம்பிக்கும் ஆளுக்கொரு ஆண் குழந்தை மட்டுமே. பிறகு தனக்கும் ஒரு மகன் வரட்டும் என்று அமைதியாகி விட்டார். சுலோவும் காவேரியும் ஆவலாக குழந்தைக்காக காத்திருந்தனர். எட்டு வயது காவேரி மிகவும் புத்திசாலி. தன் தாயை தன்னால் முடிந்த அளவு சந்தோசமாக வைத்திருந்தாள். கார்த்திக்கும் பெரிதாக மகிழாவிட்டாலும் அமைதியாக இருந்தார். குறைந்த செலவில் ஆரோக்கியமான உணவை சமைப்பார் சுலோ, கேப்பை, கம்பு, கீரை என்று. சுலோவின் பெற்றோர்கள் காலமாகி விட்டனர். அவரின் தம்பியும் தம்பி மனைவியும் முடிந்த போது வந்து சுலோவை பார்த்துக்கொண்டனர். அவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை.
சுலோ பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒரு பிள்ளை வேண்டுமா என்று யோசித்த கார்த்திக்கிற்கு கடவுள் இரண்டு பிள்ளைகளை பரிசளித்துவிட்டார். செவிலியர் வந்து “சார் ட்வின்ஸ் .. ஒரு ஆண்.. ஒரு பெண்..மூணு பேரும் நலம் “ என்று வாயெல்லாம் பல்லாக கூறி சென்றாள்.
கார்த்திக்கிற்கு அதிர்ச்சி. கார்த்திக் இந்த பொறுப்பை எண்ணி கவலை கொள்ள தொடங்கினார். எப்படி மூன்று பிள்ளைகளை வளர்ப்பது. இரண்டு பெண் பிள்ளைகளை எப்படி கரை சேர்ப்பது. என் வாழ்க்கை இதற்கே போய்விடுமே? என யோசித்து கொண்டே மருத்துவமனையிலிருந்து வெளியே சென்றார். சென்றவர் சென்றவர் தான். பிறந்த குழந்தைகளின் முகங்களையும் பார்க்கவில்லை. பிரசவித்த மனைவியையும் பார்க்க வில்லை.