அத்தியாயம் 4
அச்.. அச்.. அச்..
மூக்கை உறிஞ்சிக்கொண்டே, வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தார் சிவநேசன்.
“சொன்னா கேளுங்க சிவு, இப்படி
தும்மிகிட்டே எப்படி வேலைக்கு போவீங்க?” என்று கூறினார் கண்மணி.
அச்.. அச்..அச்..
கோடை விடுமுறை என்றாலும், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் இருக்கும். அதனால் சிவநேசனுக்கு ஒரு வாரம் மட்டுமே விடுமுறை கிடைக்கும்.
“இல்லடா கண்ணு, இன்னிக்கு பசங்களுக்கு டெஸ்ட் சொல்லிருக்கேன். நான் போலேனா, படிக்காம விட்டுடுவாங்க. மாத்திரை போட்டிருக்கேன் தானே சரியாயிடும். போயிட்டு வந்திடுறேன்”
“அப்பா, இந்தாங்க, இந்த கஷாயத்தை குடிச்சிட்டு போங்க” என்று வந்தான் குமரப்பன்.
“ஒரு வாய் குடித்ததும், சிவநேசனுக்கு அவர் அன்னையின் ஞாபகம் வந்து விட்டது. அதே ருசி. பின் அவர் கற்றுக்கொடுத்தது தானே?
மதியத்துக்கு கொள்ளு ரசம் விட்டு சாதம் வச்சிருக்கேன் என்று டிபன் காரியரையும் கொடுத்தான்.
“சரி , நான் வந்து விடுறேன்” என்று கிளம்பினார் கண்மணி.
“ஒன்னும் தேவையில்லை. நேத்து நீங்க கூட்டிட்டு வர போய் தான் அப்பாக்கு சளி பிடிச்சதே. நீங்க இருங்க. அவரே போய்ப்பார்” என்றான் அமுதப்பன்.
“டேய், எனக்கும் என் வீட்டுக்காரர்க்கும் நடுவுல நீ ஏண்டா வர.”
“கண்ணு, எனக்கு நேரமாச்சு. இன்னிக்கு ஆட்டோல போய்கிறேன். நீயும் ரெஸ்ட் எடு. சண்டை போடாம இருங்க ரெண்டு பேரும்” என்று கூறிவிட்டு கிளம்பிச் சென்றார்.
குமரப்பனுக்கு கல்லூரிக்கு சப்மிட் செய்ய வேண்டிய ப்ராஜெக்ட் வேலை இருந்தது.
“அம்மா நான் ப்ராஜெக்ட் ஒர்க் பண்ண போறேன். ரசமும் சாதமும் இருக்கு. சாப்பிடும் போது ஆம்லெட் போட்டுக்கலாம்” என்று கூறிவிட்டு தனதறைக்கு சென்றான்.
நேற்று சிவநேசனை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வர தன் அம்முவுடன் சென்றிருந்தார் கண்மணி. வரும்பொழுது மழை பெய்யத் தொடங்கியது.
கண்மணி, ”சிவு எனக்கு ஒரு ஆசை” என்றார்.
“சொல்லு கண்ணு, வண்டிய அந்த பஸ் ஸ்டாப் கிட்ட நிறுத்து.அப்புறம் சொல்லு, மழை பெருசா வரப்போகுது“ என்றார்.
“இல்ல சிவு, நீங்க என்னை எவ்வளவு காதலிக்கிறீங்க?”
“அதுக்கு அளவே இல்லையே கண்ணு.”
“அப்ப நாம இன்னும் நிறைய காதலிக்கனும் “
“கடைசி மூச்சு இருக்கற வரைக்கும் காதலிப்போம் கண்ணு”
“கொஞ்சம் சுவாரசியமா காதலிக்கனும், சிவு”
போச்சு, என்ன வம்பை இழுக்கபோறாளோ என்று அலெர்ட் ஆனார் சிவநேசன்.
“ நம்ம இரண்டு பேரும், இப்படியே மழையில நனைஞ்சுகிட்டே, ஒரு ரைடு போவமா?”
“மழையிலயா?
“ஆமா சிவு, எத்தனை படத்துல பார்த்திருப்போம். ரொம்ப தூரம் போய், ஒரு டீ கடையில சூடா டீ குடிக்கணும்.”
அவரது கண்ணு கேட்டு இல்லை என்று சிவநேசனால் எப்பவும் சொல்ல முடியாது.
“சரி கண்ணு போலாம்” என்றார்.
இருவரும் மிதமான வேகத்தில், ஜில்லென்ற தென்றல் காற்றில், மெல்லிய சாரல் மழையில் சுகமாக நீண்ட தூரம் பயணித்தனர்.
“வழி நெடுக காட்டுமல்லி…” என்று கண்மணி பாட்டு வேற பாடிக்கொண்டு வந்தார்.
பின் கண்மணி சொல்லியது போலவே, தேநீரும் குடித்துவிட்டு வீடு திரும்பினார்கள்.
அடுத்த நாள் காலையில் இருந்து தும்மிக்கொண்டிருக்கிறார் சிவநேசன்.
சிவநேசன் சென்றதும் அமுதப்பன் டிவி பார்த்துக்கொண்டிருந்தான். கண்மணி ரிமோட்டை எடுத்து வேறு நிகழ்ச்சியை மாற்றினார்.
“நான் தான் பார்த்துட்டு இருக்கேன் இல்ல?”
“அதுக்கு? இப்ப நான் பார்க்கனும்”
“நீங்க என்ன சின்ன பாப்பாவா? நேத்து மழையில நனைய வச்சு அப்பாக்கு முடியல. இப்ப என்கூட டிவிக்கு சண்டை போடுறீங்க? எப்ப தான் வளர்வீங்க?”
“போடா போடா, பொடிப்பயலே, நான் எல்லாம் எங்க அப்பா பெரிய மீசைக்கே பயப்படமாட்டேன். நீயெல்லாம் குட்டி மீசைடா” என்று அசால்டாக கூறிவிட்டு இளையராஜா பாடலை ஒலிக்கவிட்டார்.
அமுதப்பன், அறைக்குள் சென்று தன் நைனா மீசை முருகேசனுக்கு அழைத்துவிட்டான். அம்மாவின் வேலையையும், மழையில் நனைந்ததால் அப்பாவிற்கு முடியவில்லை என்றும், அண்ணன் தான் கஷாயம் வைத்து ரசம் வைத்து அப்பாவை பார்த்துக்கொண்டான் என்றும் கூறிவிட்டான்.
குமரப்பன் சிவநேசனின் அம்மா செல்லம் என்றால், அமுதப்பன் கண்மணியின் அப்பா செல்லம்.
“நான் என்னன்னு கேக்கறேன் அமுதப்பா.. நீ கவலை படாதே” என்று அமுதப்பன் அழைப்பை துண்டித்துவிட்டு கண்மணியின் கைபேசிக்கு அழைத்தார்.
“ஹலோ, சொல்லுங்க அப்பா”
“ஆள் மட்டும் வளைர்ந்தா போதுமா?அறிவு இருக்கா? இல்லையா?”
“அப்பா, வேற யாருக்கோ அழைக்கணும்னு எனக்கு கால் பண்ணிட்டீங்க போல , நான் உங்க செல்ல பொண்ணு கண்மணி“
“உனக்கு தான் கால் போட்டேன். மாப்பிளையை மழையில நனைய வச்சிருக்கியே”
“அய்யோ அப்பா, அது அப்படி இல்ல பா, ஒரு ரொமான்டிக் டிரைவ். உங்களுக்கு புரியாது”
“வந்தேன்னு வை, தோலை உரிச்சிடுவேன். என்ன வயசாகுது உனக்கு. பசங்க வளர்ந்துட்டாங்க, பொறுப்பு வேணுமா வேணாமா?”
“——-”
“உடம்பு முடியாத மனுசனுக்கு வாய்க்கு ருசியா சமைச்சாவது கொடுத்தியா? படிக்கிற புள்ளை சமைச்சு கொடுத்து விட்டிருக்கு”
“——”
இந்த குட்டிச்சாத்தான் போட்டு கொடுத்திருச்சு போலயே? என்று மனதிற்குள் திட்டிக்கொண்டார் .
“என்ன பதிலே காணும்”
“பதிலுக்கு பதில் பேசுனா உங்களுக்கு பிடிக்காதுல, அதான்”
“உன்ன… இரு நானும் அம்மாவும் கிளம்பி வரோம். வந்து பேசிக்கிறேன்”
“—–”
காதில் ரத்தம் வர வரைக்கும் திட்டிவிட்டு, அறிவுரைகளை அள்ளிவீசிவிட்டு அழைப்பை துண்டித்தார் மீசை முருகேசன்.
“டேய், அமுதா.. எங்க டா இருக்க?“ என்று கொலைவெறியில் தன் இளைய மகனை தேடினார். இன்னிக்கு நீயா நானா பார்த்திடலாம் என்று அவனை துறத்தினார் கண்மணி.
இருவரும் வீட்டிற்குள்ளே ஓடினார்கள்.
அமுதப்பன் டைனிங் டேபிள் மேலே ஏறி நிற்கவும், கண்மணியும் மேலே ஏறினார். அவன் கீழே குதிக்கவும், கண்மணியும் குதிக்க ஒரு காலை தூக்கினார்.
“மணி, மணி..” என்று பக்கத்து வீடு மாமி உள்ளே வந்தார்.
இடுப்பில் துப்பட்டாவை கட்டிக்கொண்டு, தலை முடியை அள்ளி கொண்டை போட்டு, ஒரு காலை அந்தரத்தில் வைத்து டேபிள் மேலே நின்றுகொண்டிருந்த கண்மணியை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கினார், மாமி.
அந்த இடைவெளியில் தனதறைக்குள் புகுந்து கதவை சாத்திக்கொண்டான் அமுதப்பன்.
“வாங்க மாமி”, என்று கூறிக்கொண்டே மெதுவாக கீழே இறங்கி வந்தார் கண்மணி.
“நல்ல பொண்ணு மா, எதுக்கு இப்படி கலாட்டா பண்ணுற?“ என்றார் மாமி.
“ஹி ஹி ஹி” என்று அசடு வழிந்தார் கண்மணி.
கண்மணியின் கன்னத்தை வாஞ்சையாக தடவிவிட்டு, “சரி, இந்த சேனைக்கிழங்கு வறுத்தேன். அமுதனுக்கு பிடிக்குமேன்னு கொண்டு வந்தேன்” என்று கொடுத்துவிட்டு சென்றார் மாமி.
அதற்குள் குமரப்பனுக்கு அழைத்துவிட்டார் முருகேசன்.
“சொல்லுங்க நைனா”
“அம்மா ரொம்ப கலாட்டா பண்றாளா குமரப்பா”
“இல்லையே நைனா”
“சும்மா, உங்க அம்மாக்கு பரிஞ்சு பேசக்கூடாது, அப்பாக்கு உடம்புக்கு முடியலயாமே?”
“ஜலதோஷம் தான் நைனா.. பெருசா ஒன்னும் இல்ல.”
“உங்க அம்மாவால தானே?”
“ஹா ஹா ஹா.. உங்க செல்ல பேரன் சொன்னான்னா? விடுங்க நைனா “
“இரு உன் அம்மாச்சி பேசணுமாம்”
“கொடுங்க நைனா”
“குமரா, அம்மாச்சி வரட்டுமா? உனக்கு நிறைய வேலையா? நீ தான் சமையல் எல்லாம் பண்றியாமே? படிக்கிற பையன செய்ய விட்டு உன் அம்மா என்ன செய்றா? நான் வரட்டுமா?”
“அம்மாச்சி, சும்மா அம்மாவை சொல்லாதீங்க? அம்மா தான் நிறைய வேலை செய்றாங்க. நான் கொஞ்சம் ஒத்தாசை செய்றேன், அவ்வளவு தான். அவ்வா இருந்த வரைக்கும் அவங்க செஞ்சாங்க. இப்ப அம்மா தனியா எப்படி செய்ய முடியும்?”
“உங்க அவ்வா, செல்லம் கொடுத்து தான் கெடுத்துவிட்டுட்டாங்க. இப்ப நீ அந்த வேலைய செய்ற. உங்க அம்மாவை என்னைக்கு விட்டுக்கொடுத்திருக்க?”
அவர் குரலில் பெருமிதமே அதிகமாக இருந்தது.
“சரி குமரா, நைனா அங்கே வரலாம்னு சொல்றாரு. நாளைக்கு வரோம்”
“இப்ப அறுவடை சமயம் தானே அம்மாச்சி, அங்க பாருங்க. இங்க ஒன்னும் கஷ்டம் இல்லை. காலையில வர்ர, செல்வி அக்கா இப்ப சாயங்காலமும் வர்ராங்க. நாங்க பாத்துகிறோம். அங்க வேலைய முடிச்சிட்டு வாங்க. இல்லனா அங்கேயும் இங்கேயும் அல்லாடுவீங்க” என்றான்.
“சரி குமரா. ஏதாச்சும்னா கூப்பிடு, வந்துடறோம்” என்று கூறிவிட்டு அழைப்பை அமர்த்தினார்.
இந்த அம்மாவையும் அமுதனையும் தனியா விட்டா அவ்வளவு தான். ஊர்ல இருக்கறவங்கள எல்லாம் கிளப்பிட்டு இருக்காங்க, என்று புலம்பிக்கொண்டே வந்தான்.
இருவரும் அமைதியாக அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தனர். ஒருவர் தோளில் மற்றொருவர் கை போட்டுகொண்டு வேறு அமர்ந்திருந்தனர்.
“அட பாவிங்களா?” என்று அவர்களை பார்த்தான் குமரப்பன்.
இப்படி இவர்கள் நாட்கள் அழகாக சென்றது.
குமரப்பனுக்கு கடைசி ஆண்டு எம்.பிஏ வும், அமுதப்பனுக்கு இரண்டாம் ஆண்டு கல்லூரியும் தொடங்கியது.