அத்தியாயம் 5
தேர்வு முடிவுகள் வெளிவந்தது. தன் விருப்பப்படியே காவேரி இளங்கலை கணிதமும் கஸ்தூரி இளங்கலை கன்னடமும் பெங்களூரு அரசு கலைக் கல்லுரியில் சேர்ந்தனர்.
இருவரும் அவர் அவர் விரும்பிய பாடத்தை படிக்கவும், மிகவும் இனிமையாக சென்றது அவர்களின் கல்லூரி வாழ்க்கை. கல்லூரிக்கு காவேரியும் கஸ்தூரியும் அரசு பேருந்திலே சென்று வந்தனர். தோழிகள் இருவரும் சல சலவென பேசிக்கொண்டே செல்வார்கள்.
அந்த ஆண்டு காவேரியின் பதினெட்டாம் பிறந்தநாள் வந்தது. காவேரி ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நாள். காரணம், அவள் டிரைவர் மாமாவிடம் தனக்கு வண்டி ஓட்ட கற்றுக்கொடுக்க கேட்டுக்கொண்டிருந்தாள். அவர் இவளுக்கு பதினெட்டு வயது முடியவும் கற்றுக்கொடுப்பதாக கூறியிருந்தார்.
டிரைவர் மாமா முதலில் அரசு பேருந்து ஓட்டிக்கொண்டிருந்தவர். பணி ஓய்விற்கு பின் சிலவருடங்களாக கூப்பிடுபவர்களுக்கு ஒரு நாள் டிரைவராக செல்கிறார். நிதானமான அவரது ட்ரைவிங்கால் வழக்கமான வாடிக்கையாளர்கள் உண்டு. அவரிடம் ஒரு புல்லட் வண்டி இருந்தது. அதை தான் காவேரிக்கு கற்றுக்கொடுப்பதாக கூறியிருந்தார்.
அதனால் காலை ஆறு மணிக்கே அவர்கள் வீட்டில் இருந்தாள் காவேரி. அவளுக்கு தையல் கலையில் நாட்டம் இல்லை. மிகவும் சுமாராக இருக்கும் அவளது தையல் வேலை. அதனால் சுலோ அவளை அதில் பழக்க படுத்தவில்லை. அவளுக்கு எதில் விருப்பமோ அதை செய்யவே ஊக்குவிப்பார்.
அருகில் இருந்த மைதானத்தில் மாமாவும் மருமகளும் சென்று புல்லட் கற்றுக்கொள்ள தொடங்கினர். காவேரி மிகவும் அருமையாக மிதிவண்டி செலுத்துவாள். அதனாலோ என்னவோ ஒரே நாளில் புல்லட்டை மிகவும் லாவகமாக ஓட்டினாள். டிரைவர் மாமாவிற்கு பெருமை பிடிபடவில்லை. யாரும் இவ்வளவு குறைந்த நேரத்தில் வண்டி ஓட்ட பழகி அவர் பார்த்ததே இல்லை. தினமும் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டனர் இருவரும்.
அவளது திறமையை பார்த்து, அடுத்த வாரமே தன் நண்பரிடம் கார் வாங்கி வந்து அதையும் ஓட்ட சொல்லி கொடுத்தார்.
அடுத்த ஆறாம் மாதம் டிரைவர் மாமாவுடன் சென்று ஓட்டுனர் உரிமமும் பெற்றுவிட்டாள் காவேரி.
முதலாம் ஆண்டு தேர்வுகளும் வந்துவிட்டது.நன்றாக படித்து மிகவும் சிறப்பாக தேர்வுகளை எழுதினாள் காவேரி. கஸ்தூரியும் நன்றாக எழுதி இருப்பதாக கூறினாள்.
“காவேரி இந்த விடுமுறையில எங்கயாச்சும் போலாமா டீ?” என்றாள் கஸ்தூரி.
“அடுத்த வாரம் தான் சின்னத்துகளுக்கு பரீட்சை. அவங்களுக்கும் லீவ் விட்டதும் அம்மாகிட்ட கேட்டு எங்கயாச்சும் போலாம்” என்றாள் காவேரியும்.
விடுமுறையில் வீட்டில் இருக்கும் பொழுதுதான் கவனித்தாள் தாயின் சோர்வை. எப்பொழுதும் போல வேலைகளை செய்தாலும் அவரிடம் ஒரு சோர்வு தென்பட்டது. உடல் எடையும் சற்று குறைந்திருந்தது. நாற்பது வயதில் எதற்கு இந்த சோர்வு என்று அவளுக்கு புரியவில்லை. அன்னையிடம் கேட்டபொழுது அடிக்கடி மாதவிடாய் தொந்திரவும் இருப்பதாக கூறினார் சுலோ. மெனோபாஸாக இருக்கும் என்று அவரே காரணம் கூறிக்கொண்டார்.
பிறகு இருவரும் மருத்துவரை சந்திப்போம் என்று முடிவு செய்தனர். சுலோ தன் உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம் கொள்ள மாட்டார். பிரசவம் பார்த்த அதே மருத்துவரிடம் சென்றனர் இருவரும்.
அவருக்கு சுலோவை நன்றாக நினைவில் இருந்தது. ’இரட்டை குழந்தைகள், காணாமல் போன கணவன்’ என்று.
அனுபவம் வாய்ந்த அந்த மருத்துவர் அவரின் பிரச்னையை விரைவில் கண்டுபிடித்து விட்டார். கர்ப்பப்பையில் கட்டி இருப்பதாகவும் உடனே அறுவை சிகிக்சை செய்து கட்டியை நீக்க வேண்டும் என்றும் கூறிவிட்டார். தாய் மகள் இருவருக்கும் அதிர்ச்சி.
காவேரி தான் முதலில் சுதாரித்தாள். “எப்படி அம்மாவிற்கு இப்படி ஆனது டாக்டர்? அவர்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருப்பார்களே? ஏன் இப்படி?” என்று பரிதவித்தது பெண்.
மருத்துவருக்கு சின்ன பெண்ணின் கேள்வி மனதை நெகிழ்த்தியது.
“காரணம் என்ன என்று சரியாக சொல்ல முடியாது. சொல்லிவிட்டு நோய்கள் வருவதில்லை மா. குழந்தைகள் பிறந்த பின் பெண்களுக்கு ஓய்வு தேவை. எனக்கு தெரிந்து உன் அம்மா உன் சகோதரர்கள் பிறந்து ஒரு வாரத்திற்கு மேல் ஓய்வு எடுக்கவில்லை. அதிகநேரம் உட்கார்ந்தே வேலை செய்வது கூட ஒரு காரணமாக இருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும், இப்ப தீர்வு நாம் உடனே எடுக்க வேண்டும்” என்று முடித்து விட்டார்.
”எவ்வளவு செலவாகும்? எவ்வளவு நாட்களுக்குள் அறுவை சிகிக்சை செய்ய வேண்டும்? எத்தனை நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும்? பிறகு எவ்வளுவு நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும்?” என்று தெளிந்து, கேள்விகளை மருத்துவர் பதில் சொல்ல இடைவெளி இன்றி அடுக்கினார் சுலோ.
எப்பொழுதும் போல கேள்வியின் நாயகியே என்று தான் காவேரிக்கு தோன்றியது. பிரச்சனைகளை கண்டு பயப்பட கூடாது. அதை சமாளிக்க வேண்டும் என்பதை தன் தாயிடம் மீண்டும் கற்றுக்கொண்டாள் காவேரி.
“ஓரிரு மாதத்திற்குள் செய்ய வேண்டும். பிறகு ஒரு நான்கு மாதம் கட்டாய ஓய்வு வேண்டும். இப்பொழுதிற்கு இந்த மருந்துகளை எடுத்து கொள்ளுங்கள். ஒரு முப்பதாயிரம் வரை செலவாகலாம்” என்று கூறினார் மருத்துவர்.
அமைதியாக வீட்டிற்கு வந்தனர் இருவரும். பள்ளியில் இருந்து வந்த சங்கரனுக்கும் சங்கரிக்கும் தமக்கையின் வாடிய முகமும் தாயின் கலங்கிய முகமும் ஏதோ பிரச்சனை என்று உணர்த்தியது. பொறுப்பறிந்த பிள்ளைகள். எப்பொழுதும் தொந்தரவு செய்தத்தில்லை சுலோவை. பிறகு மெல்ல தாயிற்கு உடல் நிலை சரியில்லை அறுவை சிகிக்சை செய்ய வேண்டும் என்று கூறினாள் காவேரி.
விரைவில் அறுவை சிகிக்சை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். இரு வீட்டிற்கும் தகவல் கூறினார்கள். எல்லோரும் உதவ முன் வந்தார்கள்தான். ஆனால் காவேரி தங்களிடம் இருக்கும் சேமிப்பு இப்பொழுது போதுமான அளவு உள்ளது. மேற்கொண்டு தேவை பட்டால் வாங்கி கொள்கிறேன் என்று கூறிவிட்டாள். யாரும் கூறாமலே அந்த குடும்ப பொறுப்பை தன் கையில் எடுத்துக்கொண்டாள் காவேரி. சுலோவிற்கு உடல் மிகவும் சோர்வாக இருந்தது. அதனால் மகளிடம் கிடைத்த ஆறுதலில் தன்னை கொஞ்சம் இளைப்பாற்றி கொண்டு அமைதியாகிவிட்டார் அந்த பேரிளம் பெண்.
இவர்கள் வேண்டாம் என்று கூறினாலும் உறவுகள் பக்கபலமாய் நின்றனர். மருத்துவமனையில் துணை இருப்பது, உணவு கொண்டு வருவது என்று தங்களாலான உதவிகளை செய்தனர். பப்பி ஆண்ட்டியும் பாரு அத்தையும் சிறியவர்களை பார்த்துக்கொண்டனர்.
கஸ்தூரி காவேரியுடனே நின்றுகொண்டாள் அவளுக்கு துணையாக.
அறுவை சிகிக்சை முடிந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தார் சுலோ.
“நான் உங்கள் தையல் வேலையை தொடரட்டுமா?” என்று கேட்டாள் காவேரி அன்னையிடம்.
அந்த நிலையிலும் சுலோ வாய்விட்டு சிரித்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு கேட்கும் தாயின் சிரிப்பு. பிள்ளைகள் மூன்றும் கண்ணீருடன் பார்த்தனர். மிகவும் பயந்துள்ளார்கள் என்று புரிந்தது சுலோவிற்கு.
“கலங்க கூடாது. பிரச்சனைகள் எல்லோருக்கும் வரும். கொஞ்ச நாள் தான். அப்புறம் எனக்கு சரி ஆகிவிடும். நான் என்னை சீக்கிரம் தேற்றிக்கொள்வேன். கவலை படாதீங்க செல்லங்களா” என்று ஆறுதல் கூறினார் சுலோ. அம்மாவின் வார்தைகள் பிள்ளைகளுக்கு நிம்மதியை தந்தது.
“உனக்கு வராத வேலையை எப்படி செய்வாய்?” என்றார் மலர்ந்த சிரிப்புடன்.
“நீ படிப்பை முடி. தாத்தாவிடம் உதவி கேட்போம் ஒரு நான்கைந்து மாத்திற்கு” என்றார் சுலோ.
கையில் இருந்த சேமிப்பின் பெரும் பகுதி வைத்தியத்திற்கு செலவாகி விட்டது.
”இல்லை அம்மா. உங்கள் இத்தனை வருட வைராக்யத்திற்கு பிரயோஜனம் இல்லாமல் போய்விடும். நான் வேலைக்கு போறேன். ஒரு வருடம் பிரேக் எடுத்துகிறேன். முடிந்தால் தொலைதூர கல்வி மூலம் இரண்டாம் ஆண்டு தொடர்ந்து படித்துக்கொள்கிறேன். அப்புறம் நீங்கள் சரி ஆன பிறகு படிப்பை தொடர்கிறேன்” என்றாள் பெண் முடிவாக.
மகளின் அன்பினால், அங்கீகாரத்தினால் முதல் முறையாக கலங்கியது அவரது கண்கள். என் பெண் என்னை புரிந்திருக்கிறாள். என் வைராக்கியத்தை போற்றுகிறாள் என்று அவருக்கு கர்வமாக இருந்தது.
என்ன வேலைக்கு செல்ல முடியும் என்று இருவரும் யோசித்தனர். பி.யு,சிக்கு என்ன வேலை கிடைக்கும் என்று சிந்தனையுடனே அந்த நாள் முடிந்தது.
காவேரி அடுத்த நாள் காலையில் டிரைவர் மாமா வீட்டிற்கு சென்று தன் முடிவை பற்றி கூறினாள். பார்வதி, இப்படி தங்கமான பிள்ளையை சுலோவிற்கு கொடுத்த கடவுளுக்கு மனதார நன்றி கூறினார். சில நிமிடங்கள் யோசித்து, பெண் ஆக்டிங் டிரைவர் வேண்டும் என சில வாடிக்கையாளர்கள் கேட்கிறார்கள், இப்பொழுதிற்கு நீ அதற்கு போகிறாயா? ஒரு வாரம் யோசித்து வேறு வேலை தேடுவோம் என்றார் டிரைவர் மாமா. காவேரிக்கு மிகவும் மகிழ்ச்சி. அந்த வாரம் கிடைத்த சவாரிக்கு சென்றாள் பெண். ஆனாலும் இதை நிரந்தர வேலையாக நினைக்க இயலவில்லை. வேறு என்ன என்று யோசித்து கொண்டிருந்தனர்.
அரசு பேருந்து நடத்துனர் வேலைக்கு ஆள் எடுப்பதற்கான செய்தி தினசரியில் பார்தவுடனே காவேரியை விண்ணப்பிக்க கூறினார் டிரைவர் மாமா. சுலோவிற்கோ பாருவிற்கோ அவ்வளவு விருப்பம் இல்லை. பெங்களூரில் பெண் நடத்துனர்கள் நிறைய உண்டு. காவேரிக்கு பிடித்திருந்தது.
முதல் தகுதி ஓட்டுனர் உரிமம் இருக்க வேண்டும். நடத்துனர் வேலை கிடைப்பது அவ்வளவு சுலபம் இல்லை. மூன்று சுற்றுகள் தேர்ச்சி பெற வேண்டும்.
அவள் அதிர்ஷ்டமா? திறமையா? தெரியவில்லை மூன்று சுற்றுகளிலும் தேர்வாகி பணி நியமனமும் இரண்டு வாரங்களில் கிடைத்தது விட்டது.
டிரைவர் மாமாவின் சிபாரிசில் பெங்களூரில் போஸ்டிங்கும் கிடைத்து விட்டது.
தினமும் நடத்துனர்களுக்கு ஏற்பட கூடிய பிரச்சனைகள், சவால்கள், அதனை கை ஆளும் முறைகள் என்று முழு நேர பயிற்சி அளித்தார் டிரைவர் மாமா. காவேரியும் நிறைய சந்தேகங்கள் கேட்டாள். இருவரும் ஒரு தனி உலகத்தில் இருந்தனர் என்று தான் சொல்ல வேண்டும்.
இவர்கள் செய்த கலாட்டாவை பார்த்து சங்கரன் சங்கரிக்கு கூட நடத்துனர் ஆகும் ஆசை வந்து விட்டது. கால் காசு என்றாலும் அரசாங்கத்து வேலை என்று எல்லோர் வாயையும் அடைத்து விட்டனர் மாமனும் மருமகளும்.
தினமும் காலை ஆறு மணிக்கு டிப்போவில் ரிப்போர்ட் செய்ய வேண்டும். பிறகு இவள் ரூட் பேருந்தில் செல்ல வேண்டும். டிரைவர் மாமா பணியில் சேரும் முன்னரே, சில முறைகள் அந்த வழி பேருந்தில் காவேரியை அழைத்து சென்று அந்த பகுதிகளை பழக்கப் படுத்தினார்.
இதற்கிடையில் கஸ்தூரி குட்டிகர்ணமே அடித்தாள், தான் மட்டுமே கல்லூரி செல்ல முடியாது என்று. காவேரி கெஞ்சி கொஞ்சி உருட்டி மிரட்டி கஸ்தூரியை கல்லூரிக்கு தொடர்ந்து அனுப்பினாள்.
சுலோவின் அறுவைசிகிச்சைக்கு பிறகு, எவ்வளவு மறுத்தும் காவேரியின் தாத்தா மளிகை சாமான்கள் அனுப்பி வைத்தார். உங்கள் கடை இது என்று மறுக்க முடியாத கட்டளை இட்டு விட்டார். காவேரி வேலைக்கு செல்வதையும் எதிர்த்தார். ஆனால் காவேரி வேலைக்கு சேர்வதில் மட்டும் பிடிவாதமாக நின்று விட்டாள்.
இன்னும் ஒரு வாரமே இருந்தது,காவேரி வேலைக்கு சேர்வதற்கு.