அத்தியாயம் 6
பள்ளியில் இருந்து வீடு திரும்பிய கண்மணி கண்டது மிகவும் கவலையாக அமர்ந்திருந்த குமரப்பனை தான்.
“என்ன குமரா? ஏன் ஒரு மாதிரி இருக்க?”
“ஒண்ணுமில்ல மா”
“காபி குடிக்கிறியா?தலை வலிக்குதா?”
“நீங்களே இப்ப தான் வரீங்க. போங்க போய் ரெப்பிரேஷ் ஆயிட்டு வாங்க. நான் ரெண்டு பேருக்கும் டீ போடறேன். மொட்டை மாடிக்கு போய் குடிக்கலாம்” என்று அம்மாவை அனுப்பிவிட்டு தேநீர் தயாரிக்க சென்றான் குமரப்பன்.
பிறகு, கண்மணியும் குமரப்பனும் மொட்டை மாடிக்கு சென்று தேநீர் பருகினார்கள்.இஞ்சி வாசத்தோடு தேநீரும் குளிர்ந்த காற்றும் சற்றே இதமாக இருந்தது.
“அம்மா, இன்னிக்கு நடந்த நேர்காணலிலும் நான் செலக்ட் ஆகலை” என்றான் குமரப்பன் மெதுவாக.
கடந்த சில வாரங்களாக அவனது கல்லூரியில் வளாக நேர்காணல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இரண்டு மூன்று பெரிய மென்பொருள் நிறுவனங்களில் அவன் தேர்ச்சி பெறவில்லை. இன்றைய நேர்காணலுக்கு நன்றாக தயார் செய்து சென்றிருந்தான். இதிலும் அவன் இரண்டாவது சுற்றில் தேர்ச்சி பெறவில்லை. மிகவும் ஏமாற்றமாக உணர்ந்தான்.
“இது கிடைக்கலை என்றால் அடுத்தது கிடைக்கும், விடுடா. இதுக்கெல்லாம் வருத்தப்படக்கூடாது”
“நல்லா தயார் செய்திருந்தேன் அம்மா”
“அதான் சொல்றேன், பரவாயில்லை விடு. முயற்சி எடுக்காமல் இருந்தா அது உன் தப்பு. முயற்சி செய்து கிடைக்கலைனா நீ என்ன பண்ண முடியும். இன்னிக்கு என்ன தவறு செய்தேன்னு யோசிச்சு பாரு, அடுத்த முறை அதை சரி செய்ய முயற்சி பண்ணு.”
“இருந்தாலும் கஷ்டமா இருக்கு மா. படிச்சு முடிச்சு வெளியே வந்துட்டா வேலை கிடைக்கறது கஷ்டம் அம்மா”
“நான் ஒன்னு சொல்றேன். நல்லா மனசுல வச்சுக்கோ, சரியா?”
“சொல்லுங்க அம்மா”
“கிடைக்கிறது கிடைக்காம இருக்காது. கிடைக்காம இருக்கறது கிடைக்காது, முத்து படத்துல ரஜினிகாந்த் சொல்வாரு”
குமரப்பன் பேசாமல் அமைதியாக அன்னையை பார்க்கவும், மீண்டும் கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கறது கிடைக்காது என்று சினிமா பாணியில் கூறினார் கண்மணி.
குமரப்பனுக்கு அதற்கு மேல் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. லேசான மனநிலையில் கீழே இறங்கி வந்தனர் இருவரும்.
அன்று மாலை கண்மணி வீட்டில் கொண்டாட்டம். குமரப்பனுக்கு ஒரு தனியார் வங்கியில் உதவி மேலாளர் வேலை கிடைத்திருந்தது. இன்று மகனின் வெற்றியை கொண்டாட கேசரி செய்ய களத்தில் இறங்கி விட்டார் கண்மணி . வேண்டாம் என்று சொன்னால் கேட்கும் ரகமில்லை. அதனால் சிவநேசன் சென்று கடையில் மிக்சர், மைசூர் பாகு, குளிர் பானங்கள் என்று வாங்கி வந்தார். அவர்களது கொண்டாட்டம் பெரும்பாலும் அவர்கள் வீட்டில் தான். சிற்றுண்டியுடன் குடும்பமாக அமர்ந்து தொலைக்காட்சி பார்த்து, அரட்டை அடித்து கொண்டாடுவது தான் அவர்களுக்கு மிகவும் பிடித்தமானது. சிவநேசன் நீளிருக்கையில் அமர்ந்திருந்தார். அவரின் மடியில் தலை வைத்து கண்மணி படுத்திருந்தார். ஒரு கால் மேலே ஒரு காலை வைத்து ஆட்டிக்கொண்டே மிக்சரை தின்றுகொண்டிருந்தார். குமரப்பனும் அமுதப்பனும் ஆளுக்கொரு பக்கமாக தரையில் அமர்ந்திருந்தனர்.
”ஏன் மா, சமையலில் முதல் படியே கேசரி தான். அந்த கேசரியை இவ்வளவு சுமாராக செய்றதுக்கு உன்னால தான் முடியும்” என்று நக்கலடித்தான் அமுதப்பன்.
”போடா…போடா… உனக்கு என் அருமையும் தெரியலை, என் கேசரி அருமையும் தெரியலை, சிவு நீங்க சொல்லுங்க… எப்படி இருக்கு கேசரி?” என்று தன் கணவரை துணைக்கிழுத்தார்.
நல்லா இல்லை என்று சொன்னால் மனைவி கோவப்படுவாள். நல்லா இருக்குனு சொன்னா அமுதப்பன் இன்னும் கொஞ்சம் கேசரி வைத்து சாப்பிட சொல்லிடுவான். அய்யோ இன்னும் கொஞ்சம் கேசரியை எப்படி சாப்பிடறது என்று யோசித்து எல்லா பக்கமும் மண்டைய ஆட்டினார். அவர் மண்டயை ஆட்டியதை பார்த்து மூன்று பேரும் விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கினர்.
”கேசரி எப்படி இருந்தா என்ன? நீங்க எனக்காக செஞ்சது தான் அம்மா பெருசு. கொஞ்சம் நெய் சேர்த்து ஊத்தி, இன்னும் கொஞ்சம் ரவையை வறுத்திருந்தால், இப்படி ஒட்டாமல் நல்லா இருக்கும். நாளைக்கு நான் செஞ்சு தரேன். இப்ப மைசூர் பாகு சாப்பிடுங்க” என்றான் குமரப்பன்.
சிவநேசனின் தாய் இருக்கும் வரை அவர் தான் சமையல். மருமகளிடம் அவருக்கு ஒரு குறையும் இருந்ததில்லை. அவருக்கு மருமகள் என்றால் மிகவும் செல்லம். கண்மணி சமையலில் சுமார் ரகம். அதனால் காய் வெட்டுவது அரைப்பது என்று எல்லா உதவியும் செய்வார். தாயின் இறுதி நாட்களில் சிவநேசனும் குமரப்பனும் அவருக்கு துணை நின்றனர். மருமகளிடம் சமையல் பொறுப்பை அப்பொழுதும் அவர் கொடுக்கவில்லை. குமரப்பனுக்கு தாயை தாயாய் தாங்கும் பாங்கும் மனமும் இருந்தது. அவனே விரும்பி பாட்டியிடம் சமையல் கற்றுக்கொண்டான். விரைவாகவும் சுவையாகவும் சமையல் செய்ய கற்றுக்கொடுத்தார் பாட்டி. அவர்களின் வீட்டில் கண்மணியின் கலாட்டாவோடும், சிவநேசனின் உதவியுடனும் குமரப்பனின் கைவண்ணத்தாலும் சமையல் பொழுதுகளும் உணவு நேரங்களும் சுவையாகவும் சுகமானதாகவும் இருக்கும்.
“சிவு எனக்கொரு சந்தேகம்” என்று கேட்டார் கண்மணி.
”சொல்லு கண்ணு”என்றார் ஆசையாக மனைவியின் தலையை வருடிவிட்டபடி.
”நம்ம குமரப்பன் உங்கள மாதிரி எவ்வளவு ஸ்வீட்டா இருக்கான்.இந்த அமுதப்பன் மட்டும் எங்க அப்பா மீசை மாதிரி விறைப்பாவே இருக்கானே ஏன்?” என்றாள் மிகவும் தீவிரமான குரலில். அமுதப்பன் அம்மாவை முறைத்துக்கொண்டு அமைதியாக இருந்தான்.” அது கண்ணு வாழ்க்கைல எல்லா சுவையும் இருக்கனும். இப்ப பாரு வெறுமனே மைசூர் பாகு மட்டும் சாப்பிட்டால் திகட்டிவிடும் இல்லையா? கொஞ்சம் மிக்சர் சேர்த்து சாப்பிட்டால் நல்லா இருக்கு இல்லையா? அது மாதிரி கொஞ்சம் இனிப்பு கொஞ்சம் காரம் இரண்டும் கலந்து இருந்தால் தான் வாழ்க்கை நல்லா இருக்கும். அது தான் கடவுள் நமக்கு ஒரு பிள்ளை கொஞ்சம் இனிப்பாகவும் ஒரு பிள்ளை கொஞ்சம் காரமாகவும் கொடுத்திருக்கார். என்ன கண்ணு நான் சொல்றது?” என்றார் பெரிய விளக்கமாய்.
”சிவு நீங்க சொல்லி எதாவது தப்பா இருக்குமா? இப்ப எனக்கு நல்லாவே புரியுது” என்றார் குறும்பாக.
”என்ன புரிஞ்சுது இப்ப உங்களுக்கு?” என்றான் அமுதப்பன்.
”அதுவா, நம்ம குமரன் மைசூர் பாகு மாதிரி. நீ மிக்சர் மாதிரி டா, என் செல்ல மிக்சரு” என்று வடிவேலு பாணியில் கூறினார்.
கடுப்பாகி எழுந்து தனதறைக்கு சென்றுவிட்டான் அமுதப்பன்.
”ஏன்மா அவனை வம்பிழுத்துகிட்டே இருக்கீங்க” என்று மென்னகையுடன் கேட்டான் குமரப்பன்.
இன்னும் ஒரு மாதத்திற்கு பிறகு தான் அவன் வேலையில் சேர வேண்டும். அதுவரை விடுமுறை. இந்த ஒரு மாதமும் அனைவருக்கும் விதவிதமாக சமைப்பதும் வீட்டை பார்த்து கொள்வதும் தான் அவனின் வேலை. அதை மிகவும் மகிழ்ச்சியுடன் செய்வான். அடுத்த பத்து நிமிடத்தில் மீண்டும் கண்மணிக்கும் அமுதப்பனுக்கும் பெரிய வாக்குவாதம்.
”டேய் அண்ணா, நாளைக்கு எனக்கு பிரியாணி தான் வேணும் லஞ்ச் பாக்ஸிற்கு”
“குமரா, நான் போன வாரமே கேட்டேன். எனக்கு பிஸிபேளாபாத் தான் வேண்டும். ஆசையா இருக்கு எனக்கு”
“நான் சின்ன பையனா? நீங்களா? பிரியாணி தான்.”
“நான் அம்மாவா? நீயா? என்ன சமைக்கறதுன்னு அம்மா தான் முடிவெடுக்கணும்”
“அடேங்கப்பா.. எம்மா யார் கிட்ட? யார் சமைக்கிறாங்களோ அவங்க முடிவெடுக்கலாம். நீங்களா சமைக்க போறீங்க? டேய் அண்ணா நீயே முடிவு சொல்லு..தம்பியா? அம்மாவா?”
இவர்கள் சண்டைக்கு நம்மளை ஊறுகாய் போட்ருவாங்கனு காய் வாங்கி வருவதாக சென்றுவிட்டார் சிவநேசன்.
“யாரு காலையில் முதலில் எழுந்து காபி போடுறீங்களோ அவங்க சொல்ற லஞ்ச் தான் நாளைக்கு. இப்போ போய் வேலையை பாருங்க இரண்டுபேரும்” என்று தீர்ப்பு வழங்கிவிட்டு சென்றுவிட்டான் குமரப்பன்.
காலையில் தினமும் கண்மணி ஆறு மணிக்கு தான் எழுவார். அதனால் அமுதப்பன் ஐந்து ஐம்பதுக்கு அலாரம் வைத்து விட்டு படுத்தான். கண்மணி மறைந்திருந்து அதை கவனித்து விட்டு ஐந்து நாற்பதுக்கு அலாரம் வைத்து விட்டு நிம்மதியாக தூங்க சென்றார். எப்போதும் போல மனைவியை செல்லமாக மனதிற்குள் ரசித்து விட்டு, குமரனுக்கு ஐந்து முப்பது என்று குறுஞ்செய்தி அனுப்பி வைத்தார்.
அடுத்த நாள் அப்பாவும் மகனும் முதலில் எழுந்து காபி கலந்து இருவரும் அருந்தி மற்ற இருவருக்கும் குடுவையில் ஊற்றி வைத்தனர். உதவிக்கு வந்த தந்தையை கட்டாயப்படுத்தி நடைபயிற்சிக்கு அனுப்பி விட்டு அடுக்களைக்குள் நுழைந்து சமைக்க தொடங்கினான். பின் எழுந்த தாயும் தனயனும் இது செல்லாது என்று பஞ்சாயத்தை கூட்டினார். பேசாமல் கிளம்பினால் ஒழுங்கான டிபன் வரும். இல்லை என்றால் ஓட்ஸ் கஞ்சி தான் என்று மிரட்டல் விடுத்தான் குமரப்பன். பின் கப் சிப் இருவரும். காலையில் குழிப்பணியாரமும் காரசட்னியும். மதியத்திற்கு மிளகு சாதமும் சுட்ட அப்பளமும். இப்படி குமரப்பன் அன்றைய நாளை சுபமாக தொடங்கி வைத்தான்.
இன்னும் ஒரு வாரமே இருந்தது, குமரப்பன் வேலைக்கு சேர்வதற்கு.