அத்தியாயம் 7
இன்று காவேரி வேலைக்கு செல்லும் முதல் நாள். காலையில் ஆறு மணிக்கு டிப்போவில் இருக்க வேண்டும். ஐந்து மணிக்கே தயாராகி விட்டாள். காக்கி சுடிதார் அணிந்து மேலே காக்கி கோட் அணிந்திருந்தாள். காவேரி என்று பெயர் கொண்ட கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தாள். மெதுவாக அதை வருடி பார்த்துக்கொண்டாள். மனதிற்குள் மெல்லிய இதம் பரவியது. காலையிலே சக்கரை பொங்கல் வைத்து பூஜை செய்தார் சுலோ. சங்கரனும் சங்கரியும் அக்காவிற்கு ஒரு பேனா பரிசளித்து வாழ்த்து தெரிவித்தனர். டிரைவர் மாமா அவளை வேலையில் கொண்டு விடுவதற்காக அவரது புல்லட்டை துடைத்து தயாராக இருந்தார். பாரு அத்தையும், பப்பி ஆண்ட்டியும் ஆரத்தி எடுத்து வழி அனுப்பி வைத்தனர்.
மாமாவுடன் சென்று கையெழுத்து இட்டு, தன் முதல் பயணத்தை மகிழிச்சியுடன் தொடங்கினாள். அவளது வேலை நேரம் ஒரு வாரம் காலை ஆறு மணி தொடங்கி மதியம் இரண்டு மணி வரை இருக்கும். மறு வாரம் மதியம் இரண்டு மணி தொடங்கி இரவு பத்து மணி வரை இருக்கும். வாரம் ஒரு நாள் விடுமுறை.
அவள் செல்லும் பேருந்து ஒரு ட்ரிப் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகும். அதாவது டிப்போவில் தொடங்கி கடைசி நிறுத்தம் செல்ல ஒரு மணி நேரம். திரும்பவும் அங்கிருந்து டிப்போவிற்கு வர ஒரு மணி நேரம். இப்படி ஒரு நாளைக்கு நான்கு ட்ரிப்புகள் ஒரு ஷிப்ட்டில் இருக்கும். பள்ளிகளும் அலுவலகமும் அதிகம் உள்ள பகுதி என்பதால் இவர்கள் பேருந்து குறைந்த தொலைவில் அதிக ட்ரிப்புகள் செல்லும் வழக்கமுடையது.
காலையில் முதல் ட்ரிப் முடிந்து மீண்டும் இரண்டாவது ட்ரிப் துவங்கும் இடைவெளி.
“காவேரி, நானும் முன்னே இருந்த நடத்துனரும் தினமும் இங்கு தான் டிபன் சாப்பிடுவோம். நல்லா இருக்கும்” என்று அங்கு இருந்த ஒரு சிறிய இட்லி கடையை காட்டினார் அவர்களது பேருந்து ஓட்டுனர் லிங்கேசன்.
”நீயும் இங்கேயே சாப்பிடுறீயா? ஒரு பத்து நிமிஷம் நேரம் தான் இருக்கும். அதுக்குள்ள வேகமா சாப்பிட்டு வரலாம் வா” என்று அழைத்தபடியே பேருந்தில் இருந்து இறங்கி சென்றார் இட்லி கடை நோக்கி.
லிங்கேசனும், டிரைவர் மாமாவும் நண்பர்கள். தன் மகள் போன்றவள். கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பலமுறை கூறி இருந்தார் டிரைவர் மாமா. சிரித்த முகமும், துரு துரு கண்ணும், குழந்தை முகமும்மாக இருந்த காவேரியை அவருக்கும் மிகவும் பிடித்தது.
“அம்மா டிபன் கொடுத்து விட்ருக்காங்க அண்ணா. நான் அதை கொண்டு வந்து அங்கேயே உங்ககூட சாப்பிடுகிறேன்” என்று அவருடன் சுலோ கொடுத்துவிட்ட டிபன் பாக்சுடன் சென்றாள் பெண்.
காவேரிக்கு அந்த இடம் மிகவும் பிடித்திருந்தது. எப்பொழுதும் வீட்டிலோ கல்லூரியிலோ உண்டு பழக்க பட்டவளுக்கு இது ஒரு புது அனுபவமாக இருந்தது.
வாழ்க்கையை பிடித்து வாழ்ந்தால் ரசிப்பதற்கு எத்தனை எத்தனை விஷயங்கள். எப்பொழுதாவது தோன்றும் தந்தையின் நினைவுகள் இன்று ஏனோ வந்தது. ஏன் அந்த மனிதருக்கு எங்களுடன் வாழ பிடிக்கவில்லை என்று யோசித்தாள். பிறகு அந்த நினைவுகளை புறந்தள்ளிவிட்டு தாய் கொடுத்துவிட்ட தித்திக்கும் பொங்கலை ஆசையாக உண்டுவிட்டு, லிங்கேசன் அண்ணாவுடன் பேசிக்கொண்டே பேருந்திற்கு வந்தாள். பத்தே நிமிடங்கள் கிடைத்த உணவு இடைவேளை புத்துணர்ச்சியாக இருந்தது.
எட்டு இருபதுக்கு அந்த நிறுத்ததில் இருந்து தினமும் புறப்பட்டு விடும் பேருந்து. அங்கு நிறைய பள்ளி மாணவர்கள் ஏறினார்கள். தினமும் பத்து நிமிடங்கள் பேருந்து அங்கு நிற்பது வழக்கமானதால், பள்ளி மாணவர்கள் நிதானமாகவும் உற்சாகமாகவும் அதில் ஏறினார்கள்.
காவேரி அந்த மாணவர்களுக்கு குட் மார்னிங் கூறினாள். சிரித்த முகமாக இருந்த இந்த குட்டி கண்டக்டர் அக்காவை அன்பாக பார்த்து பதில் குட் மார்னிங் கூறினார்கள் மாணவர்கள்.
———————
காலை ஏழரை மணி. கண்மணி வீட்டில் பரபரப்பு. காரணம் குமரப்பன் இன்று முதல் நாள் வேலைக்கு செல்கிறான். வெங்காய சருகு கலரில் சில்க் காட்டன் புடவை. அதன் மடிப்பை சீராக வைத்துக்கொண்டிருந்தார் சிவநேசன்.
”கண்ணு உனக்கு பிடிக்கும்னு முல்லை பூ நேத்து சாயங்காலம் குளிர்பெட்டியில் வைத்திருந்தேனே, வைத்துக்கொள்ளடா” என்றார் காதலாக தன் மனைவியிடம்.
”அம்மா நேத்து நீங்க கேட்ட, பிங்க் கலர் ஹான்ட் பேக் வாங்கிட்டு வந்தேனே. அதை எடுத்துக்கோங்க” என்று வந்தான் குமரப்பன்.
வெளிர் நீல முழுக்கை சட்டையும் கரு நீல கால் சராயும் அணிந்து அலுவலகத்திற்கு கிளம்பி டிப்டாப்பாக வந்தான் குமரப்பன்.
“டேய் அமுதா, நீ சும்மா தானே இருக்க, இந்த பொருட்களை பழைய பேக்ல இருந்து புது பேக்ல மாத்தி கொடு” என்று கல்லூரிக்கு கிளம்பிக்கொண்டிருந்த அமுதப்பனை வழக்கம் போல வம்பிற்கு இழுத்தார் கண்மணி.
”நீங்க எதுக்கு இப்படி கிளம்பிட்டிருக்கீங்க” என்று காலையில் இருந்து நடக்கும் கூத்தை பார்த்து கேட்டான் அமுதப்பன்.
”என்ன அமுதா இப்படி கேட்கிற.இன்னிக்கு குமரப்பனுக்கு முதல் நாள் வேலை அதுக்கு தான்”.
“அது எனக்கு தெரியும். அதுக்கு நீங்க எதுக்கு இப்படி அலும்பு பண்றீங்க”.
“போடா உனக்கு பொறாமை” என்றாள் அசால்டாக கண்மணி.
நான்கு கின்னங்களில் சேமியா கிச்சடியை கொண்டு வந்து வைத்து சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு என்றான் தம்பியிடம் குமரப்பன்.
“இன்னிக்காவது நீங்க சமையல் செஞ்சீங்களா?” என்றான் தாயிடம் அமுதப்பன்.
“டேய்.. என்ன பத்தி உனக்கு தெரியலை. இன்னிக்கு அவன் முதல் முதலா வேலைக்கு போறான்… நல்லபடியா போகணும்ல.. அதான் நான் சமைக்கவில்லை. அப்படி நல்ல மனசுள்ள என்னை பார்த்து நீ கேள்வி கேட்டுட்டியே? அதனால நான் சீக்கிரமா ஒரு கேசரி செய்யவா?” என்றார் மூவரையும் பார்த்து கண்ணடித்துகொண்டே.
அப்புறம் ஏன் மூவரும் பேச வாயை திறக்க போகிறார்கள். வேகமாக உண்டு விட்டு அண்ணனுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு முதலில் கிளம்பிவிட்டான் அமுதப்பன். அவனுக்கு எட்டு மணிக்கு கல்லுரி பேருந்து வந்துவிடும்.
”இந்தாடா..என் சின்ன மீசை.. எங்க அப்பா பெரிய மீசை கூட என்னை இவ்வளவு கேள்வி கேட்டதே இல்லை. சாப்பாடு டப்பாவும் தண்ணீர் பாட்டிலும் விட்டுட்டு போற பாரு” என்று எடுத்து கொடுத்தார் கண்மணி. விளையாட்டு பேச்சுக்கள் இருந்தாலும் கண்மணியின் அக்கரையில் குறை இருக்காது.
“சிவு, நான் போய் குமரனை பஸ் ஏத்தி விட்டு வந்து உங்களை பிக்அப் பண்ணிக்கிறேன்”.
“நானே போய்கிறேன் மா,நீங்க கிளம்புங்க” என்று தவிர்க்க பார்த்தான் குமரன்.
யாருக்கும் அசரும் ஆளா நம் கண்மணி.
”நீ முதல் முதலா பள்ளிக்கு போகும் போது நான் தான் கூட்டிட்டு போனேன். உனக்கு முதல் முதலா நான் தான் வண்டி ஓட்ட சொல்லி கொடுத்தேன். உனக்கு உச்சா போக கூட நான் தானே சொல்லி கொடுத்தேன், இந்த அம்மாவை போய் வர வேண்டாம்னு சொல்றியே” என்று அடுக்கிக்கொண்டே சென்றார் கண்மணி.
குமரப்பனுக்கு கண்ணை கட்டியது.”சரி சரி வாங்க” என்றான் வேறு வழியின்றி.
சிவநேசன் விரைவாக மணைவியின் தலையில் பூவை வைத்து விட்டு வழி அனுப்பினார்.
”அமுதன் சொல்ற மாதிரி யாருக்கு இன்னிக்கு முதல் நாளென்றே தெரியல” என்று முனங்கினான் குமரப்பன்.
“என்ன சொன்ன ? என்னை பார்த்து…” என்று ஆரம்பித்தார் கண்மணி.
“அம்மா டைம் ஆச்சு சீக்கிரம் வாங்க” என்று கேட் நோக்கி சென்றான் மகன்.
“டேய் இரு இரு.. நம்ம அம்முவை எடுக்கிறேன். அம்மூவுல போனால் ரொம்ப அதிர்ஷ்டம்” என்றார் மேலும்.
“அம்மூலயா?”என்று அலறினான் மைந்தன்.
“என்ன என்னவேணுமானாலும் சொல்லு. என் அம்முவை ஏதாச்சும் சொன்ன.. சொன்ன…”
“அம்மா காலையில டென்ஷன் பண்ணாதீங்க. ரெண்டு நிமிஷம் நடந்தா பஸ் ஸ்டாப். அதுக்கு எதுக்கு வண்டின்னு கேட்டேன்… எடுங்க உங்க வண்டியை “
“என்ன டா நீ? சிவுக்கு டாட்டா காட்டு” என்று வேறு அலப்பறையை கூட்டி, பின் அம்முவில் இருவரும் கிளம்பினார்கள்.
எட்டே காலுக்கு வந்துவிட்டனர் பேருந்து நிலையத்திற்கு. காவேரியின் பேருந்து நின்று கொண்டிருந்தது.
”சீக்கிரம் போ குமரா. அந்த பேருந்து தான்” என்று குமரப்பனை இறக்கி விட்டார்.
குமரப்பனும் பேருந்தில் ஏறினான். காவேரி கீழே நின்றுகொண்டிருந்தாள். இன்னும் இரண்டு நிமிடங்கள் இருந்தது.
”அப்புப்பா..அப்புப்பா..” என்று கத்தினார் கண்மணி.
அனைவரும் திரும்பி பார்த்தனர்.
”என்ன மா” என்றான் பேருந்தில் இருந்து தலையை வெளியே நீட்டி.
“முதல் நாள் வேலைக்கு போற அப்புப்பா.. இங்கே இருந்து ஐந்தாவது நிறுத்தம் பார்த்து கரெக்டா இறங்கிடு, சரியா? ஜன்னல் பக்கம் உட்கார்ந்துக்கோ அப்புப்பா. பேக் பத்திரமா வச்சுக்கோ அப்புப்பா” என்று சின்ன குழந்தைக்கு சொல்வது போல கூறி கொண்டே சென்றார் சத்தமாக.
குமரப்பனுக்கு சிரிப்பு வேறு. அம்மா வேண்டும் என்றே வம்பிழுக்கிறார் என்று தெரிந்தது.
உடனே பக்கத்தில் இருந்த ஒரு வாண்டு ”மிஸ் கவலை படாதீங்க. எங்க ஸ்டாப்க்கு முன்னாடி ஸ்டாப் தான். நான் சொல்றேன் மிஸ் என்றான் பதிலுக்கு சத்தமாக.
”பார்த்துகோடா ராஜு, அண்ணா முதல் நாள் போறாங்க” என்றார் அந்த வாண்டிடம் கண்மணி.
காவேரிக்கு சிரிப்பாக வந்தது. பேருந்தை எப்படா எடுப்பீங்க என்று குமரப்பன் ஓட்டுனரை பார்த்தான்.
“கண்டக்டர் மேடம்… கண்டக்டர் மேடம்…” என்றார் கண்மணி இப்பொழுது காவேரியிடம். குமரன் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான்.
”என் பையன், முதல் நாள் வேலைக்கு போறான்.. கருமாரிஅம்மன் கோவில் நிறுத்தம்.. கொஞ்சம் சரியா இறக்கி விட்டுடுங்க” என்றார்.
காவேரி சிரித்து கொண்டே தலையசைத்துவிட்டு ”போலாம் ரைட்.. ரைட் ..” என்று கூறி பேருந்தில் ஏறினாள். பேருந்து கிளம்பியது.
”அப்புப்பா டாட்டா” என்று கண்மணியின் குரலில் பேருந்தில் இருந்த குட்டி பசங்கள் எல்லோரும் டாட்டா காட்டினர்.
தாயின் கலாட்டாவில் மலர்ந்த புன்னகையுடன் அமர்ந்திருந்த குமரப்பனின் தோற்றம் காவேரியின் மனதில் அழகாக படிந்தது.
சுட்டி குழந்தை மாதிரி சுட்டி அம்மா போல என்று கண்மணியை பற்றி எண்ணிக்கொண்டாள்.
நான்காவது நிறுத்தத்தில் இருந்தே அணைத்து மாணவர்களும், பயணிகளும் ஏன் காவேரியும் குறு குறுவென்று குமரப்பனை தான் பார்த்திருந்தனர். காலையில யார் முதல் நாள் வேலைக்கு போறாங்கன்னு கேட்டதுக்கு இந்த அம்மா நம்மள வச்சு செஞ்சுட்டாங்க என்று மனதிற்குள் நொந்துகொண்டான். அனைவரின் குறுகுறு பார்வையில் குமரப்பனுக்கு லேசாக வெட்கம் வந்தது.
“அண்ணா அண்ணா இந்த ஸ்டாப் தான்” என்று மாணவர்கள் கூச்சலிட்டனர்.
காவேரி சத்தமாக சிரித்து விட்டாள்.
அவளை திரும்பி பார்த்தான் குமரப்பன். கருமாரி அம்மன் கோவில் ஸ்டாப், என்று காவேரியும் சத்தமாக கூறினாள். காவேரியின் குரலில் ஒரு விளையாட்டுத்தனம் இருந்தது. அவளது கண்களில் குறும்பு தெரிந்தது. காவேரியின் குறும்பு கண்களும் இயல்பான சிரிப்பும் சாந்தமான தோற்றமும் அவன் அனுமதியின்றி அவன் மனத்திற்குள் நுழைந்தது.