சரண்யா குடும்ப கட்டுப்பாடு செய்ய தன்னை தயார்படுத்தி கொண்டாள். மூன்றாம் குழந்தை வேண்டாம் என்று கணவன் சொன்ன காரணம் அவளை முடிவு எடுக்க செய்து விட்டது. அதிலும் மாமியாரின் பேச்சு அவளை உடைத்து விட்டது என்றே சொல்லலாம். அவரை எந்த ரகத்தில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. தன் தாயிடம் கூட முகம் காட்டி விடுகிறாள். இவரை என்னவும் சொல்ல முடியவில்லை. திரும்பவும் மூன்று நாள் பயணமாக வெற்றி விஜயவாடா சென்று இருக்கிறான்.
கணவன் உடன் தன் வாழ்க்கையை தொடங்கிய பின் அவனின் பிரிவு அவளை அசைத்து பார்த்தது. தொடர்ந்து சுடு மணலில் நடந்து வந்தவளுக்கு கிடைத்த இளைப்பாறுதல் நிலைக்குமா என்ற பயம் வந்தது. அவன் வேலை இது தான் என்று தெரிந்தாலும், நல்ல படியாக அவன் வீடு வரும் வரை நிம்மதி இருக்காது. அடிக்கடி போன் செய்தால் முகம் காட்டுவான். சென்னை தாண்டி விட்டால் டவர் அவ்வளவு எளிதாக கிடைக்காது. முக்கியமாக ராத்திரியில் உறக்கம் அண்டாது. ஏதேதோ கனவு வந்து பயமுறுத்தும்.
சரண்யாக்கு கணவன், பிள்ளை என்று முழுமையாக தூங்கினாள் தான் உறக்கம் கிட்டும். கணவன் இன்றி தாங்கள் மட்டும் உறங்க மனம் வராது. முட்டாள்தனமாக இருந்த போது அன்பு அளவு கோல் அறியாது. ஏ.சி ஓடி கொண்டிருக்க, பிள்ளைகள் மெத்தையில் உறங்கி கொண்டு இருந்தார்கள். தாங்கள் அனுபவிக்கும் இந்த சுகத்திற்கு, கணவன் தன் உறக்கம் தியாகம் செய்து, முதுகு வலிக்க வண்டி ஓட்டி கொண்டு இருக்கிறான். எங்கோ ஒரு மூலையில் உடல் வலியையும் பொருட் படுத்தாது, உறங்காமல் வண்டி ஓட்டும் கணவனை நினைத்து சரண்யா உறங்காமல் முழித்து கிடப்பாள்.
மூன்று, நான்கு நாள் கழித்து வரும் தந்தையை பார்க்க ஆவலாக பிள்ளைகள் வாசலில் ஆளுக்கொரு துணை பிடித்து நின்று இருந்தார்கள். சரண்யா நல்லெண்ணெய் சுடு தண்ணீர் வைத்து, நல்லி எலும்பு சூப் எடுத்து வைத்து கொண்டு இருக்க, கார் ஹாரன் அடித்தது. மனைவி முகத்தில் ஒரு புன்னகை. தான் வந்து விட்டதை அறிவிக்கிறான். பிள்ளைகள் ஓடி போய் கேட் திறக்க, மலர்ந்த முகமாக வண்டியில் இருந்து இறங்கியவன், பிள்ளைகளை இரு பக்கமும் தூக்கி கொண்டான். வெங்காய கலர் சேலை அணிந்து வந்தவள், மூவருக்கும் திருஷ்டி எடுத்து தான் உள்ளே அனுப்பி வைத்தாள்.
தனம் அங்கு தான் இருந்தார். வெற்றி உடன் இல்லாத போது இவர்கள் துணைக்கு…
“உம் பொண்டாட்டி ஆந்தை மாதிரி ராத்திரி முழுக்க முழிச்சு கெடக்குற மகனே, என்னன்னு நீ தான் கேளு… எம்புட்டு வருசம் வேலை பாக்குற, உன்னை பாக்க உனக்கு தெரியாது. இங்க முழிச்சு, அங்க உன்னை காவ காக்குறா…” என்று அவள் பயத்தை, பரிதவிப்பை கேலி பேசி சென்றார்.
“ஏன் சரண். நான் ஒன்னும் குழந்தை இல்லை. என் குடும்பத்துக்கு நான் எவ்வளவு முக்கியம்ன்னு தெரியும். என்னை நான் ஜாக்கிரதையா பார்த்துபேன்…” வெற்றி விளக்கம் சொன்னான்.
சரண்யாக்கு அவள் மனதை சமாதானம் செய்ய தெரியவில்லை. தாங்கள் இங்கு சுகமாக இருக்க, எங்கோ கண் காணாத இடத்தில் கணவன் நல்ல உறக்கம், உணவு இன்றி பாடுபடுகிறானே… அந்த நினைவு தான் வாட்டுது. அது போக நாளாகும். இங்கு இவள் உறங்காமல் இருப்பதால் எதுவும் மாற போவது இல்லை. அவனை நினைத்து அமர்ந்து இருப்பது ஒரு நிம்மதி…
அன்று ஒரு விசேஷ வீடு, எல்லோருக்கும் முன் தயாராகி நின்றது நம்ம விஜிதா தான். வீட்டில் என்ன தான் விதவிதமாக சமைத்து வைத்தாலும், விசேஷ வீட்டு சாப்பாடு என்பதில் கொள்ளை பிரியம். அதுவும் மதுரை பக்கம் சொல்லவே வேண்டாம், அசைவம் இல்லாத விசேஷம் கண்டு பிடிக்க முடியாது. இந்த பழக்கத்தை ஏற்படுத்தி விட்டது தனம் தான்.
“நோஞ்சானா இருக்கு, விசேஷ சாப்பாடு நல்லா சாப்பிடுது” என்று அவர் செல்லும் விசேஷ வீட்டிற்க்கு எல்லாம் தவறாமல் அழைத்து சென்று விடுவார்.
அப்படி தான் ஒருநாள், வெற்றி உறவினர் ஒருவர் இறந்து விட. ஒரே ஊர் பங்காளி என்பதால் சரண்யாவும் பிள்ளைகள் உடன் செல்ல வேண்டிய நிலை. அப்பாவின் மடியில் அமர்ந்து இருந்த பட்டு குட்டி, “அப்பா, ரேடியா போட்டாங்க. வாங்க போய் சாப்பிடுவோம்…” என்று சொல்ல, அரண்டு போனவன்.
“என்னடி இது, என்ன சொல்லி பிள்ளை வளக்குற…” என்று மனைவியிடம் பாய.
“நான் என்ன பண்ண. எல்லாம் உங்க அம்மா தான். அவங்க கிட்ட என்னால ஒரு வார்த்தை பேச முடியுமா…” தப்பித்து கொள்வாள் சரண்யா.
பட்டு குட்டிக்கு விசேஷ வீடுகளின் கலகலப்பு, பாட்டு, செல்லம் கொஞ்சும் உறவுகள் எல்லாம் அவளை ஈர்க்கும். அன்றைய விசேசத்திற்க்கு அபிராமியும் வந்து இருந்தாள். வெற்றி வர வில்லை. மனைவி, பிள்ளைகளை மட்டும் அனுப்பி வைத்தான். அவனுக்கு இந்த கூட்டம் எல்லாம் ஆகாது. சரண்யா,, அபிராமி ஒருவருக்கொருவர் பார்த்தாலும் அமைதியாக கடந்து விட்டார்கள். எதிரியாகவும் இல்லை, நண்பன் என்றும் இல்லை.
வெற்றி தன் குடும்பத்தை அழைத்து செல்ல மட்டும் வந்து இருந்தான். நல்ல கூட்டம் வாசலில் நின்று எட்டி பார்க்க, வந்தது அபிராமி. அவன் ஒதுங்கிந்தான் நின்றான். அவன் வருகையை அறிந்து அபிராமி தான்.
“பின் பக்கம் இருக்காங்க மாமா. குட்டி பாப்பா அழுகவும், அவங்க தூக்கிட்டு போனாங்க…”
“ஓ… சரி அபி. நான் போய் என்னன்னு பாக்குறேன். விசேசத்துக்கு தனியாவா வந்த…”
“இல்லை மாமா, அம்மா கூட தான் வந்தேன்…” தயங்கி தான் சொன்னாள். வெற்றிக்கு தெரியும் ஏதோ வரன் பார்க்கிறார்கள் என்று… சம்மந்தம் முடிய கடவுளிடம் வேண்டி கொண்டவன். தலையசைத்து நகர, மனைவி வந்து விட்டாள். எந்த விகல்பமும் இல்லாமல் சின்ன சிரிப்பில் அவரவர் பாதையில் கடந்து விட்டார்கள். அபிராமிக்கு முன்பு இருந்த ஆதங்கம், கோபம் எதுவுமில்லை. நிதர்சனம் பொட்டில் அடித்தது போல் புரிந்தது. சின்ன வலி இன்றும் இருக்கு. ஆனால் கடக்க முடியாதது அல்ல…
அன்றிரவு பிள்ளைகள் சிணுங்கி கொண்டே தான் இருந்தார்கள். என்ன செய்தும் தூக்கம் இல்லாமல் அழுது கொண்டே இருக்க. பெற்றவர்கள் இருவரும் தான் மாத்தி மாத்தி தோலில் போட்டு தட்டி கொடுத்து கொண்டு இருந்தார்கள். ஒரு மணி நேரம் நடந்து, தொட்டிலில் போட்டு ஆட்டி, கதை சொல்லி என்று பல பாடு பட்ட பின் தான் கண் சொருகியது.
“அம்மா பாட்டு…” என்று அஜி ஆரம்பித்து விட்டாள். அவள் அப்பத்தா பழகிய பழக்கம். இவளுக்கு தாலாட்டு எல்லாம் தெரியாது. சினிமா பாட்டு தான்.
“என்னங்க…” என்று கணவனை பார்க்க.
“என்னை ஆள விடுப்பா சாமி… நீ பாடு நான் பின்னாடி வாரேன்…”
மகளே உன்னை தேடி நின்றாளே மங்கை, இந்த மங்கள மங்கை!….
வருவான் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை, உன் மழலையின் தந்தை!…
நான் காதல் எனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே!…
அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேல…
வெற்றிக்கு சிரிப்பு வந்தது. முன்பெல்லாம் இவன் தான் மனைவியை சுற்றி வந்து பாடி கொண்டு இருப்பான். இப்போது எல்லாம் மனைவியையும் தன் கூட்டில் இழுத்து விடுகிறான்.
வெற்றிக்கு தொழில் நன்றாக தான் போனது. ஓரளவு சேமிப்பு கையில் நிக்க, முதல் செய்த வேலை, அம்மாக்கு நகை எடுத்தது தான். மயில் வைத்த முகப்பு சங்கிலி தனம் நீண்ட நாள் ஆசை. காலத்துக்கும் மனைவி, பிள்ளைக்கும் தான் சேர்க்க போகிறோம். அம்மா ஆசையை நிறைவேற்ற வேண்டி தாயை அழைத்து சென்று தான் வாங்கினான்.
சரண்யாக்கு இதில் எந்த குறையும் இல்லை. அவள் கணவனை அவள் தான் நன்கு அறிவாளே… தனத்துக்கு பெருமை பிடி பட வில்லை. அவ்வளவு சந்தோசமாக இருந்தது. ஆனால், தீயாக இருக்கும் அடுப்பில் நீர் விட்டு அணைப்பது போல, வெற்றி, மனைவியின் கையில் கொடுத்து அம்மாக்கு போட சொல்ல, புகை மண்டியது தனம் மனதில். சரண்யா சந்தோசமாக வாங்கி மாமியார் கழுத்தில் போட…
தனத்திற்கு, நாம் பார்த்து கொண்டு வந்த மருமகள் கையால் வாங்கியது ஏதோ அவருக்கு மனம் ஒப்ப வில்லை.
“உங்க மதினிய பார்த்தியா மாயா. முகம் சுண்டி போச்சு… நமக்கு செய்யாம, அவங்க ஆத்தாக்கு செய்றான்னு பொறாமை…” தனம் தன்னை ஆற்றி கொண்டார்.
“சும்மா இரும்மா… மருமக என்ன செஞ்சாலும் குத்தம் காணாத. இப்படில்லாம் யாரும் செய்ய மாட்டாங்க…” மகள் எடுத்து சொல்ல தாய் மனம் கேட்க வில்லை.
வேல் முருகன் பார்த்தவர், “அடி பைத்தியகாரி… மருமகளுக்கு என்ன பொறாமை இருக்க போகுது. டிராவல்ஸ்சே மருமக பேருல தான் இருக்கு. வெற்றியும் ஒரு டிரைவர் மட்டும் தான். எதுவும் புரியாம பெருமை பேசுறா…” என்று நினைத்து கொண்டார்.
தனம் கொடுக்கும் செல்லம் பிள்ளைகள் இடம் பிரதிபலிக்க, இன்று ஒரு பஞ்சாயத்து தான்… இரவு வீடு வந்த வெற்றி. மூவரையும் பார்த்து என்ன என்று விசாரிக்க.
“பிள்ளைக எனக்கு பயப்படவே மாட்றாங்க… அங்க இருந்த வரைக்கும் அம்மா அடிப்பாங்கன்னு பயன் இருந்துச்சு. இங்க சுத்தமா இல்லை. இன்னைக்கு நீங்க மிரட்டியே ஆகணும். சின்னதா ஒரு அடி குடுங்க. அப்பா மேல ஒரு பயம் வரட்டும்…” மனைவியின் கோரிக்கையை பார்த்தவன், பிள்ளைகளை அழைத்து,
“எதுக்கு சேட்டை பண்றீங்க… அம்மா கவலை படுறாங்க. அடி வேணுமா ரெண்டு பேருக்கும்…” வெற்றி கொஞ்சம் மிரட்ட.
“சாரி ப்பா…” என்று அவனின் கிளிகள், அப்பாவின் கன்னத்தில் முத்தம் வைக்க. அதற்கு மேல் யார் கோபத்தை காட்ட முடியும்.
“சரி விடுங்க. அம்மா சொன்ன கேட்கணும். அவ சொல்லை மீற கூடாது. அப்புறம் அப்பா உங்களுக்கு சப்போர்ட் பண்ண மாட்டேன்…”
“என்கிட்ட சாரிலாம் கேட்கவே மாட்டாங்க. என்ன சொன்னாலும் சண்டைக்கு தான் நிக்குறாங்க… எப்படி இருந்தவங்க தெரியுமா… நீங்க தான் செல்லம் கொடுத்து கெடுக்குறீங்க…” சரண்யா கணவனை சாட.
“எப்பவாவது கோப பட்டா தான் மதிப்பு இருக்கும். நீ காலையில எழுந்தா ராத்திரி தூங்குற வர கத்துற… அவங்களுக்கு பழகி போச்சு…” என்று வெற்றி சொல்ல
“என்ன செய்ய, என் விதி. எனக்கு மட்டும் பிள்ளை, புருசன் எல்லாம் தப்பா இருக்காங்க. நீங்க சும்மாவாது கைய ஓங்கி இருக்கணும். கொஞ்சம் பயம் இருக்கும்…”
“கோபமா கிட்ட போனா சிரிக்கிறாங்க. எனக்கு அடிக்கவே மனசு வரலை சரண்…” வெற்றி சொல்ல.
“உங்க பிள்ளைகன்னா மட்டும் கை ஓங்க மாட்டிங்க. அடுத்த வீட்டு பிள்ளைன்னா கை ஓங்கி அடிப்பீங்க…” மனைவி குறையாக சொல்ல.
“நான் யாரடி அடிச்சேன்…”
“என்னை தான்…”
“இந்த பொண்டாட்டிகளே இப்படி தான். என்னைக்கோ நடந்து முடிஞ்சு போனதை இன்னைக்கு நடந்த மாதிரியே பேசுவாங்க…”
“என்னைக்கு நடந்தா என்ன, நீங்க என்னை அடிச்சிங்க தான…”
“அதுக்கு தான் உங்கண்ணணை கூட்டி வந்து பதிலுக்கு அடிக்க விட்டையே. அப்படி பார்த்த நான் நல்லவன் தான். தினமும் ராத்திரி பூனை மாதிரி முதுகு முழுக்க பிராண்டி வைக்கிற. எங்க அம்மா கிட்ட சொல்லவா செஞ்சேன்…”
“ஐயே! பேச்சை பாரு… ராத்திரி பிள்ளைக உறங்கின பின்ன பூனை மாதிரி என் பக்கத்துல வாரது யாராம்…”
“அதுக்கு முன்ன என்னங்க mன்னு எனக்கு சிக்னல் கொடுக்கிறது யாராம்…”
“என்ன சொல்லி காட்டுறீங்க. நான் மட்டும் தான் உங்க பின்ன வாரேனா?…” சரண்யா எகிற.
“நானும் தான். நாம ரெண்டு பேரும் தான்…” வெற்றி ஒத்து கொள்ள.
“நீங்க தான் நீங்க மட்டும் தான். ஒரு நாள் ராத்திரி கூட எனக்கு ரெஸ்ட் கிடையாது…”
“என்னடி எல்லாத்தையும் என் பக்கம் திருப்புற… உனக்கு ஆசை இல்லை…”
“பொம்பளைக அப்படி தான். இதை எல்லாம் புருசனாவே இருந்தாலும் ஒத்துக்க மாட்டோம்…”
அந்த மாத கடைசியில் சரண்யா குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டாள். சுற்றி இருக்கும் சொந்தம் எல்லாம் வந்தது. ஆனால், இரவில் அவள் உடன் தங்கி பார்த்து கொள்ள தான் ஆள் இல்லை. வெற்றி தான் உடன் இருந்தான். இரண்டு நாள் வைத்து தான் அனுப்புவோம் என்று ஹாஸ்பிடலில் சொல்லி விட, துணைக்கு என்று கணவன் தான்.
சுகந்தி வந்தார் தான். ஒரு வாரம் முன்பே சரண்யா சொல்லி விட்டாள். பிள்ளைகள் இருக்க, அவளுக்கு துணை வேண்டுமே…
“திவ்யா ஊருக்கு போய் இருக்கா சரண். அப்பாக்கு சாப்பாட்டுக்கு கஷ்டம், அண்ணன் வேற இருக்கான். சுகர், பிரஸர், ஸ்ட்ரோக் இருக்கு, நான் வந்து உனக்கு என்ன உதவ முடியும். ஒரு நாள் உன்னை பார்த்து ஒன்பது நாள் நான் படுத்துக்குவேன் சரண். உன் மாமியார் வீட்டுக்கு உன் புருசன் தானா எல்லாம் பாக்குறாரு. ஒரு நாள் ராத்திரி அவங்க துணை இருக்கட்டும். பகல்ல நான் வாரேன்…” தாய் சொல்ல
“உன் பிறந்த வீட்டில் எதிர்பார்ப்பே வைத்து கொள்ளாதே மனமே என்று முடிவு எடுத்து பல மாதம் ஆனாலும், மனதில் ஒரு ஆசை இருந்தது தான். பெரிதாகவா இரண்டு நாள் தானே… அடுத்து தேறி கொள்வேன் அல்லவா…”
தனம் எட்டி கூட பார்க்க வில்லை. “எம் பேச்சை கேட்காம புருசன் சொல்லு கேட்டு ஆபரேசன் பண்றா… அவ கெடக்கட்டும். எனக்கு என்ன வந்தது. குடும்ப கட்டுப்பாடு எல்லாம் சாதாரணம்…”
வெற்றி யாரையும் குறை சொல்ல வில்லை. இவர்கள் தோதுக்கு நான் பிள்ளை பெற முடியுமா… இன்று சரண்யாக்கு என்னவோ அது தானே நாளை எனக்கு… இருபத்தி ஐந்து வயதில் அம்மாவை நாடுகிறாள். அதுவே நாப்பது வயதில் கணவனை மட்டும் தானே நாடுவாள். அதை இன்றே நான் பார்க்க மாட்டேனா… அதை மனைவியிடம் சொல்லவும் செய்தான்.
“அடி என்னடி மூஞ்சிய தூக்கி முகட்டுல வச்சு இருக்க. இங்க பாரு சரண், நம்மளை பெத்தவங்களும் சரி, நாம பெத்தவங்களும் என்னைக்கும் நமக்கானவங்க கிடையாது. கட்டையில போற வரை கை பிடிச்ச உறவு தான் நிரந்தரம். உனக்கு நான் பார்க்க மாட்டேனா சரண். ஆசைக்கு மட்டுமா உன் கிட்ட வர்ற ஆம்பிளை நான்…” கணவன் சத்தம் போட்ட பின் தான் திடம் பெற்றாள்.
பிள்ளைகள் மாயா பொறுப்பில் இருந்தார்கள். வேல் முருகன் துணைக்கு இருந்தார். இரண்டு நாள் முழுதாக ஆஸ்பித்திரியில் தான் இருந்தாள். பார்க்க நிறைய உறவுகள் வந்தார்கள்.
“மூணாவது ஒன்னை பார்த்து இருக்கலாம். உங்க மாமியார் கோபம் நியாயம் தான். தம்பிக்கு நல்ல சம்பாத்தியம் இருக்கு, அப்ப ஒன்னை பார்க்க வேண்டி தான… ஜான் பிள்ளைன்னாலும் ஒத்தை ஆண்பிள்ளை வேணும்ல…” எல்லோரும் சொல்லி செல்ல, வெற்றி வெறுத்து போய் பார்த்து இருந்தான்.
“குடும்ப கட்டுப்பாடு செஞ்ச பின்னாடி ஆம்பிளை பிள்ளை அவசியம் தெரிஞ்சு நாங்க என்ன செய்ய போறோம்…”
“ஏற்கனவே ஒல்லி உடம்பு அதுல இவ்வளவு பெரிய தழும்பு…” நைட்டி மாற்றி விட்டு கொண்டே வெற்றி கேட்க.
“ம்ம், எல்லாம் உங்க பிள்ளைக கொடுத்த வீர தழும்பு தான்…”
“பார்த்தேன் தான். ஆனா, அப்ப நோக்கம் வேற…” கூச்சமின்றி வெற்றி சொல்ல.
“சீ, என்கிட்ட மட்டும் இதை தான் பேசுவீங்களா… கொஞ்சம் கூட வெட்கமில்லை…” முகத்தை சுறுக்கினாள் சரண்யா.
“என் பொண்டாட்டி கிட்ட எனக்கு என்ன வெட்கம். உன்கிட்ட மட்டும் தான் இப்படி எல்லாம் ஆலோசனை பண்ண முடியும்…”
“ஆலோசனை பண்ற மூஞ்சிய பாரு…”
“ தினமும் ராத்திரி நாம ஆலோசனை தான பண்றோம்…” சரண்யா முகத்தை திருப்பி கொண்டாள். எத்தனையோ இரவை கடந்து விட்டாச்சு. காதலில், கணவனின் மோகத்தில் வெளிப்படும் மனைவியின் கூடல் வேறு, அதை வெட்ட வெளிச்சமாக பேசினால் எப்படி… கட்டியவன் முகத்தை கூட காண முடியவில்லை.
சரண்யா வீடு வந்த பின் சுகந்தி, சிவகுமார் இருவரும் ஒரு நாள் வந்தார்கள்.
“உன்னை பெத்தவங்க நல்லா இருந்தா பார்க்காம விடுவோமா…. நாங்களே நோயாளி, எட்ட தான் நிக்க வேண்டி இருக்கு. அதுக்குன்னு ஒதுங்கி போவியா… ரெண்டு வாரத்துக்கு ஒரு முறையாவது வந்து எட்டி பார்க்க கூடாதா… உங்க அக்கா அதை விட, நீ அதையெல்லாம் விட…”
“நேரமில்லைம்மா…” முடித்து கொண்டாள்.
“உங்க அக்காவும் அப்படி தான் சொல்றா. அவளுக்கு பெரிய பிள்ளைக உனக்கு என்ன…”
“நிஜமாவே வேலை இருந்துச்சு…”
“எங்க மேல கோபமா சரண்யா. நீ அங்க வந்தா நாங்க உன்னை நல்லா பார்த்துபோம். இங்க வந்து இருக்க தான் தோது இல்லை…”
“இவர் குணம் இப்படி தான். என்னைக்கும் இவருக்கு அடுத்தவர்களை புரியாது…” நினைத்து கொண்ட சரண்யா, நல்ல முறையில் செய்து அனுப்பினாள். ஆனால், மதுரை மட்டும் செல்லவே இல்லை. என் வீடு தான் என் சுதந்திரம்…
அடுத்த ஒரு வாரத்தில் தனமும் வந்து விட்டார். என் மகன் வீடு எனக்கு உரிமையானது. வெற்றி கோபத்தில் ஒதுங்கி போக, இழுத்து வைத்து பேசினார். அவர் ஆற்றாமை தீர்ந்த பின் அவராகவே வந்து ஒட்டி கொண்டார்.
அன்று வெற்றி வெளியே சென்று இருக்க, பிள்ளைகள் பள்ளிக்கு… மாமியார் வர நேரமிருந்த போதும் கதவை சாத்தி மட்டும் தான் வைத்து குளிக்க சென்றாள். கிராமம் என்பதால் எந்நேரமும் கதவு அடைத்தே இருக்க கூடாது. வெளி கேட் திறந்து, வீடு வந்து, கூடம் தாண்டி பெட்ரூம் வர மாட்டார்கள் என்பதால் கதவை மட்டும் சாத்தி விட்டு குளிக்க சென்றாள்.
ஏதோ வேலையாக வெற்றி வீடு வந்தவன், அறைக்கு வர, கட்டிலில் அவளின் மாற்று உடைகள் இருந்தது. குளிக்க சென்று இருக்கிறாள் என்று புரிந்தவன், வந்த வேலையை தொடர,
பாத்ரூம் கதவை திறந்தாள் சரண்யா. என் வீடு, என் அறை என்று சரண்யா சுதந்திரமாக வெளியே வர, அரைகுறையாக பார்த்த வெற்றிக்கு மூச்சடைத்து போனது. ஒரு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது. அவள் உடல் நலன் கருதி தள்ளி நிக்க, இன்று முழுதாக கட்டவிழ்ந்து விட்டான். சரண்யா படக்கென்று கதவை மூடி கொண்டாள். கட்டிய கணவன் தான் என்ற போதும் பகலில் இப்படி வர அவளுக்கு முடியவில்லை. கதவோடு ஒன்றி நிக்க, வெற்றிக்கு கொண்டாட்டம் தான். கரடியாக பிள்ளைகள் கூட உடன் இல்லையே.
“சரண்யா எவ்வளவு நேரம் உள்ள நிப்ப, அடிக்கிற வெயிலுக்கு வேர்த்து போவ, வெளிய வா…”
“நீங்க போங்க நான் வாரேன்…”
“உன்னை நான் என்ன செய்ய போறேன். சவாரி போகணும் வெளிய வா…”
“நிஜமா ஒன்னும் செய்ய கூடாது…”
“ஏய் எனக்கு வேலை இருக்குடி, பாத்ரூம் போகணும்…”
“சத்தியமா…”
“சத்தியம் செய்யணுமா!… சரி சத்தியம் வெளிய வா… எனக்கு டீ வேணும். நான் போறேன்…”
அதன் பின் சரண்யா நிற்க வில்லை. கதவை திறந்து வெளியே வர, பின் பக்கம் இருந்து அணைத்து கொண்டான்.
“திருட்டு பூனை…”
“ஆமா…”
“சத்தியம் பண்ணீங்க…”
“அப்பவே காத்துல ஊதி விட்டேன்…”
“பிளீஸ் எனக்கு ஒரு மாதிரி பகல்ல, தள்ளி போங்க…”
“இன்னும் எத்தனை ராத்திரி கடந்தா, உனக்கு ஒரு மாதிரி எல்லாம் போகும்…” என்றவன் தன் தேவையை நிறைவு செய்த பின் தான் அவளை விட்டான்.
“லேட் ஆச்சு சரண். ஒரு முக்கிய வேலை, மறந்துட்டேன்…” அவசரமாக குளித்து, உடை மாற்றி ஓடினான். ஒரு பெருமூச்சு விட்டு எழுந்தாள் சரண்யா. “முரடன்” செல்லமாக சொல்லியும் கொண்டாள்.
வெற்றி வெளி வாயில் வர, தனம் வந்தார். அப்பாடா என்றவன் நடக்க, ”என்ன மகனே தலை முடி எல்லாம் ஈரம்…” என்று தன் சேலை கொண்டு துவட்ட, “அவசரம்மா…” ஓடி வந்து விட்டான் வெற்றி.
தனம் உள்ளே வர, சரண்யா தலை துவட்டி கொண்டு வந்தாள். அவளை மேல் இருந்து பார்த்தவர், “ஒத்த ஆம்பிளை பிள்ளை பெக்க வக்கு இல்லாதவ, ஒன்பது நாளும் தலைக்கு குளிக்கிறா…” முனங்கி விட்டு சென்றார். சரண்யா அவரை கண்டு கொள்ளவே இல்லை.
வெற்றி கையில் பெட்டியும், தோலில் அஜியையும் தூக்கி நிக்க, பக்கத்தில் விஜியை பிடித்த வண்ணம் சரண்யா. வைகை எக்ஸ்பிரஸில் தங்களுக்கான இடம் பார்த்து அமர்ந்தார்கள். சரண்யா வேண்டுதல் பெயரில் திருச்செந்தூர் முருகன் பார்க்க செல்கிறார்கள். இரவு ரயில் காலை ஐந்து மணிக்கு சென்று சேரும்.
பிள்ளைகளுக்கு ஒரே சந்தோசம் தான். தூக்கமே இல்லை இருவருக்கும்… இதுவரை எங்கு சென்றாலும் கார் தான். இது தான் பிள்ளைகள் முதல் முறை ரயில் பயணம் செய்வது.
சரண்யா ஜன்னல் ஓரம் அமைதியாக அமர்ந்து விட, வெற்றி பிள்ளைகளை சுற்றி கொண்டு இருந்தான். கணவனை பெருமையாக பார்த்தாள் சரண்யா. இவர்கள் வீட்டில் ஆண் வாரிசு இல்லாத குடும்பம் இவர்கள் தான்… எல்லோரும் ஏதோ ஒரு வகையில் குறையாக சொல்லிய போதும், ஒரு நாளும் வெற்றி வருந்தியது இல்லை. என் மகள்கள் என் ராணிகள் என்றதில் இருந்து துளி கூட மாற வில்லை.
ரயிலில் எல்லோரும் உறங்கும் வரை பிள்ளைகளுக்கு கொண்டாட்டம் தான். நடுராத்திரி மேல் அஜி உறங்க, விஜி இன்னும் சுற்றி கொண்டு தான் இருந்தாள். சரண்யா வெளியே தெரியும் இருளை வெறித்தாள்.
பிள்ளைகளுக்கு எட்டு மாதம் இருக்கும் போது அவர்கள் குடும்பத்தோடு திருச்செந்தூர் வந்தாள். அன்று வெற்றியோடு அவள் உறவு முடிந்து விட்டது. அழும் பிள்ளைகளை கை மாத்த கூட ஆள் இல்லாமல் மடியில் ஒன்றும், தோலில் ஒன்றுமாக போட்டு கொண்டு இந்த இருட்டை தான் பார்த்து கொண்டு இருப்பாள். அப்போது எல்லாம் வெளி உலகம் பயமாக இருக்கும். முனுக்கென்று கண்ணீர் வரும், சில்லென்ற காற்றை அனுபவிக்க கூட தெரியாது. பாவமான, நிரதரவான தோற்றம் தான். சுற்றி நடக்கும் எதையும் கவனிக்க தோன்றாமல், பிள்ளை குறும்பில் கூட வாய் விட்டு சிரிக்காமல் இருப்பாள்.
தன் உடையை குனிந்து பார்த்தாள். சந்தன நிறத்தில் இலகுவான உடை… பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்க நூறு ரூபாய் இல்லாமல் நின்றது நினைவு வந்தது. என்னவோ கடவுள் கிருபை மீண்டு கொண்டாள். தன்னை போல எத்தனையோ பெண்கள் இந்த வலியோடு வாழ்கிறார்கள். கல்யாணம், கணவன், குழந்தை, குடும்ப அமைப்பு தான் வாழ்க்கை என்று வளர்க்க படும் பெண்களுக்கு, அவ்வாறு இல்லாமல் காலம் தோல்வியை கொடுத்தால். பலர் துவண்டு தான் போகிறார்கள். பிள்ளைகளை கொண்டு ஒரு வாழ்வை அமைத்து இறுகி போய் வலியோடு தான் காலத்தை கடக்க வேண்டும். இவர்களுக்கு எல்லாம் எதார்த்த குடும்ப வாழ்க்கை கூட கனவாக தான் நிற்கும். சரண்யாக்கு கண்ணீர் வந்தது. பெரிதாக இல்லை புருசன், பிள்ளை என்ற பலரின் சாதாரண வாழ்க்கை தான், இவள் எதிர்பார்ப்பும். அதற்கு எத்தனை வலிகளை கடந்தோம்.
தனியாக நிற்கவா இந்த வாழ்க்கை. நிச்சயம் துணை வேண்டும். எந்த வயதிலும், எல்லா நிலையிலும், சின்ன சின்ன அனுசரணையோடு கை கோர்க்க வாழ்க்கை துணை வேண்டும் தான்.
சரண்யா பார்வை கணவனை தேடியது. விஜியை தோலில் போட்டு தட்டி கொடுத்த படி நடந்து கொண்டு இருந்தான். புது இடம் உறக்கம் வரவில்லை போல… அஜி குட்டி அம்மா மடியில். பிள்ளை உறங்கிய பின் மெல்ல வந்து படுக்கையில் சாய்த்தவன், மனைவியை பார்க்க முகம் ஒரு மாதிரி சோர்ந்து கிடந்தது.
“என்ன சரண் சோர்ந்து போய் இருக்க… ஒரே மாதிரி காலை மடக்கி வச்சு கால் வலிக்குதா…” என்றவன் அவள் மடியில் இருந்த பிள்ளையை தூக்கி கொண்டு, “பாத்ரூம் போய் முகம் கழுவி வா…” என்று அனுப்பி விட்டான்.
அவளுக்கும் பிள்ளையை மடியில் வைத்து ஒரே மாதிரி அமர்ந்திருந்தது வலியை கொடுக்க, எழுந்து சென்றாள். பக்கத்து பெட்டில் இருக்கும் ஒரு நடுத்தர வயது பெண்மணி,
பாத்ரூம் போய் முகம் கழுவி வெளி வர, ஈர காற்று முகத்தில் மோதியது. மனதின் அழுத்தம் குறைந்து இதமாக இருக்க, அங்கேயே நின்று கொண்டாள். வெற்றி மூன்று முறை எட்டி பார்த்து விட்டான்.
சரண்யாக்கு புன்னகை விரிந்தது, கணவன் அருகில் வந்து அமர்ந்து கொண்டவள்… வெற்றி டீ வாங்கி வந்து கொடுத்தான். கொஞ்சம் தெம்பாக இருந்தது. பணமும், நகையும் தாண்டி. அன்றாட வாழ்வின் கணவன், மனைவிக்குள் சின்ன சின்ன அக்கறை, சில ஆறுதல் வார்த்தை மட்டுமே தாம்பத்தியத்தை இழுத்து பிடிக்கும்
“நீங்க நல்லவர் தான் போல… எங்களை நல்லா பார்த்துகிறிங்க…” குறும்பு கலந்து சரண்யா சொல்ல.
அவள் தோளில் கை போட்டு தன் பக்கம் இழுத்து கொண்டவன், “ஒரு புருசனா எம் பொண்டாட்டி, பிள்ளைகளை பார்த்துகிறது என் கடமை, என் பொறுப்பு சரண்யா. நான் சாதாரண மனுசன் தான். ஹீரோ மெட்டீரியல் எல்லாம் இல்லை…”
“ஆனா,அந்த சாதாரண மனுசனுக்கு உரிய பொறுப்பையும், கடமையையும் கூட பலர் செய்றது இல்லை. குடும்பத்தை தள்ளி வச்சோ, இல்ல ஒரே குடும்பமா இருந்தும் ஒதுங்கி நின்னு தன் பொறுப்பை, கடமையை தட்டி கழிக்குறங்க. அதனால் தான் என்னை மாதிரி பல பெண்கள் உருவாகி, உங்களை மாதிரி ஆளுக எல்லாம் ஹீரோவாகிடுறாங்க…” என்ற சரண்யா கணவன் முகத்தை பார்க்க, இஞ்சி திண்ட குரங்காக இருக்கவும், சிரிப்பு வந்தது.
“சும்மாங்க கேலி…” என்று அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். வாழ்க்கை பிரகாசமாக இருக்க, வெளியில் தெரிந்த இருட்டு ரசனையாக மாறியது.