அதிகாலை நான்கு மணிக்கே அவளின் வேலை நாள் தொடங்கி விடும். காலை பத்து மணி வரை நிற்காத ஓட்டம் தான். அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி அத்தோடு அவளின் இரு பெண் பிள்ளைகள், அண்ணன் மகன் என்று மொத்த குடும்பத்திற்கும் அவள் தான் ஆதாரம். அதாவது, வீட்டு பராமரிப்பு தொடங்கி, உணவு முதல் குடிக்க கொடுக்கும் தண்ணீர் வரை அவள் பொறுப்பு தான், இல்லையென்றால் அவள் வேலை தான்.
தாய், தந்தை இருவருக்கும் பத்திய உணவு. அண்ணன், அண்ணி இருவருக்கும் காலை, மதிய உணவு மற்றும் மூன்று பிள்ளைகளின் கவனிப்பு என்று நிற்காமல் தான் ஓடுவாள். அவள் சரண்யா தேவி. அந்த வீட்டின் கடை குட்டி செல்லமாக ஒரு காலத்தில் வளம் வந்தவள். ஒரு அக்கா, அண்ணனுடன் பிறந்த மூன்றாவது தங்கை.
படிப்பில் சுமார். அதாவது ரொம்ப, ரொம்ப சுமார். என்னவென்றால் பதினொன்றாம் வகுப்பில் தோற்று வீட்டோடு தங்கி விட்டாள். அப்போது படிப்பின் அருமை தெரியாத தந்தையின் செல்ல சிட்டுக்கு. இன்று ஒவ்வொரு நாளும் அதன் அருமை உணர்ந்து மருகி நிற்கிறாள். என்ன செய்ய?… விதியின் கோலம்… இரு பெண் பிள்ளைகள் உடன் வாழ வெட்டியாக முடங்கி விட்டாள். அவளின் அக்கா பிரியா, நல்ல கணவன், இரு பிள்ளைகள் என்று சென்னையில் வசிக்கிறார். அவளின் அண்ணன் சுரேந்தர், மனைவி திவ்யா உடன் மதுரையில் தான் உள்ளான். அவனுக்கு மூன்று வயதில் ஒரு மகன் சாத்விக். தந்தை சிவகுமார் போக்குவரத்து துறையில் பணியில் இருந்தவர். தாய் சுகந்தி, இல்லத்தரசி.
சரண்யாக்கு ஆரம்பத்தில் இருந்தே படிப்பு சுத்தம் வராது. சிவகுமாரும் சக்திக்கு மீறி தான் மூன்று பிள்ளைகளையும் படிக்க வைத்தார். என்ன போராடியும் சரண்யாவிடம் மட்டும் வேலைக்கு ஆகவில்லை. படிப்பு தான் வரவில்லையே தவிர, பள்ளிக்கு நாள் தவறாமல் சென்று விடுவாள். மூத்தவள் பிரியாவின் கல்யாணம் முடிந்த சமயம், சுகந்திக்கு பக்கவாதம் வந்து படுக்கையில் விழ, வேற வழி இல்லாமல் சரண்யாவின் படிப்பு முடிந்து விட்டது. அன்று அவளுக்கு அவ்வளவு சந்தோசம். ஆனால், இன்று அதை எண்ணி வருந்தாத நாள் இல்லை. பெண் பிள்ளை கல்வி அவசியம் என்று ஏன் சொல்கிறார்கள் என்பதை பட்டு தான் புரிந்து கொண்டாள்.
இவள் கையில் இன்று இரு பெண் பிள்ளைகள். இரட்டை குழந்தைகள் தான். அஜிதா, விஜிதா இருவரும் இவளின் கொஞ்சும் கிளிகள். வயது என்று பார்த்தால் சரன்யாக்கு இருபத்தி மூன்று தான். பத்தொன்பது வயதில் திருமணம். சிறு வயதிலேயே கல்யாணம் என்ற கவலை இல்லாமல் சந்தோசமாகவே செய்து கொண்டாள். படிப்பறிவும், வெளியுலக அனுபவமும் இல்லா பெண். திருமணம் தான் வாழ்வை முழுமையாக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டு நிறைவாகவே கணவனை கை பிடித்தாள்.
யார் கண் பட்டதோ!… சுவற்றில் அடித்த பந்து போல், அடுத்த நான்கு மாதத்தில் தாய் வீடு வந்து விட்டாள். வயிற்றில் மூன்று மாத இரட்டை கரு. கடவுள் இவளிடம் காட்டிய கருணை இது தான் போல… பத்தொன்பது வயதில் சரண்யாவை கட்டி கொடுக்கும் எண்ணம் தந்தைக்கு இல்லை தான். ஆனால், சுரேந்தர் காதலில் உறுதியாக நின்று விட்டான். வேற வழி இல்லாமல் ஊர் சொல்வது போல், வீட்டில் பெண் பிள்ளை இருக்க, ஆண் மகனுக்கு முடிக்க வேண்டாம் என்று எண்ணியவர். சுரேந்தர் நிச்சயத்தை மட்டும் முடித்து விட்டு, மகள் சரண்யாக்கு மாப்பிள்ளை பார்த்தார்.
படிக்காத பெண் என்பதால் பெரிய வரன் ஒன்றும் வரவில்லை. அவசரகதியில் ஜாதகம் மூலம் அமைந்தது தான் திருபுவனம் சம்மந்தம். பன்னிரண்டு வயது வித்தியாசம், கொஞ்சம் உறுத்தல் தான். விதி… முடிந்து விட்டது. சந்தோசமாக தான் சென்றாள், கண்ணீரோடு திரும்பி வந்து விட்டாள். பிள்ளையை கொண்டு சேர்த்து வைக்க எடுத்த முயற்சி எல்லாம் வீணாக தான் போனது. பிள்ளையை கண்டு கூட மாப்பிள்ளை வீட்டு பக்கம் மனம் இறங்கவில்லை. மொத்தமாக முறித்து கொண்டார்கள்.
சரண்யா வாய் துடுக்கு அதிகம் கொண்டவள். பட்டென்று பேசிய விட்டு பின் தான் யோசிப்பாள். அது அவளுடைய ஒரு குறை தான். சூழ்நிலை, இடம், பொருள் என்று எதுவும் பார்க்காமல் நேர் கொண்டு பேசி விடுவாள். நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே!… எனும் ரகம். அது தான் அவள் வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்து விட்டது. காலம் கடந்து யோசித்து என்ன பயன், ஆக வேண்டியதை பார்க்கலாம் என்றால், அடுத்தடுத்து நடந்தது எல்லாம் இதை கொண்டு தான். அ தொடங்கி ஃ வரை, வீட்டில் எல்லாம் இவள் தான் பார்க்க வேண்டும். பதினாறு வயதில் தொடங்கிய வேலை என்பதால் இவளுக்கு பாரமில்லை. ஆனால், இவளும், இவள் பிள்ளைகளும் தான் மற்றவர்களுக்கு பாரமாகி நிற்கின்றனர்.
ஆரம்பத்தில் இலை மறையாக தெரியாமல் இருந்தது. தற்போது வெளிப்படையாக தெரிய தொடங்கியது. இல்லை இவள் தான் தற்போது கவனிக்க தொடங்கினாள் போல… பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி வேலையை தொடங்கினாள். அடுப்படி வேலையை முடித்து விட்டு, அந்த சிறிய அறையை எட்டி பார்த்தாள்.
சரண்யாவின் கொஞ்சும் கிளிகள் ரெண்டும் நல்ல உறக்கத்தில். அஜி குட்டி பாயை நனைத்து கிடக்க, விஜி குட்டி குப்புற கவுந்து கிடந்தாள். முகம் தன்னை போல் மெல்ல புன்னகை பூத்தது. மெதுவாக சென்று உறக்கம் கலையாமல் மகளை அடுத்த படுக்கைக்கு மாற்றி விட்டவள், தலையணை எடுத்து அணை கொடுத்த பின் தான் சென்றாள்.
தாய் வீட்டளவில் தற்போது தான் நடமாடுகிறார். தந்தை ஓய்வு பெற்று மூன்று வருடம் ஆகிறது. விடியல் தொடங்க ஒவ்வொருவராக எழுந்து வர தொடங்கினார்கள். காலை காபி எல்லோருக்கும் கொடுத்தாகி விட்டது. மகள்களுக்கு இரு டம்ளர் பால் விட்டு எடுத்தவள், அண்ணன் மகன் சாத்விக்கு சுண்ட காய்ச்சிய பாலில் சத்து மாவு கலந்து எடுத்து சென்றாள்
இங்கு தொடங்கியது அவள் உறுத்தல். பாதம், பிஸ்தா, முந்திரி என்று பதினெட்டு தானிய பொருட்கள் சேர்த்து அரைத்து பொடியாக்கி வைத்தாள் திவ்யா. அதன் உரிமை அவள் மகனுக்கு மட்டுமே… ஆரம்பத்தில் இது எல்லாம் கவனித்தல் கொள்ள வில்லை. திவ்யா வேலைக்கு செல்வதால், முதல் தொடங்கி சாத்வீக், அவன் அத்தை வசம் தான். அவள் மக்களுக்கும், இவனுக்கும் ஐந்து மாத வேறுபாடு தான் என்பதால் எல்லாம் ஒன்றாக தான் வளர்ந்தது. என்று பிள்ளை தனியாக உணவு பொருட்களை கேட்டு உண்ண தொடங்கியதோ… அன்று ஆரம்பித்தது இந்த உறுத்தல்.
மகள்களை எழுப்பி, பல் துலக்கி விட்டு மெதுவாக பாலை குடிக்க வைத்தாள். அவர்களுடன் அமர்ந்து சிட்டுகள் சொல்லும் கதை கேட்க ஆசை தான். ஆனால், அவளுக்கு நேரம் தோது படாது. காலை வேலைக்கு எழுந்து செல்ல, அவளின் சேலை நுனியை பிடித்து இழுத்தாள் விஜி. என்னவென்று தாய் பார்க்க,
மூன்று வயதை தொட்டவுடன் ஒட்டி கொண்ட சிக்கன் டேஸ்ட், சின்ன குட்டியை இழுத்தது. வாரத்தில் ஒரு முறை மட்டுமே அசைவம் விரும்பும் இவர்களிடம் எவ்வாறு கேட்க.
“அண்ணா… சாத் குட்டிக்கு சிக்கன் வேணுமாம். நேத்து என்கிட்ட கேட்டான்…” என்றாள் மெல்ல, அவளுக்கு தெரியும் மகனுக்காக மட்டும் தான் அவர்கள் தலை அசையும் என்று…
சுரேந்தர் மகனை காண, அவன் கண்களில் ஆசை தெரிந்தது. அதன் தொட்டு அன்று கறி விருந்து. பகலில் வேலை செல்வதால், இரவில் தான் எடுப்பார்கள். அன்று இரவு சமைக்கும் போது யாரும் அறியாமல் ஒரு குட்டி டப்பாவில் கொஞ்சம் சிக்கன் எடுத்து போட்டு வைத்தாள். தாய் இல்லாமல் பிள்ளைகள் உணவு உண்ணாது. இவள் மற்றவர்களை கவனிக்க வேண்டும்.
திவ்யா, இவர்களுக்கு என்று ஒதுக்கும் உணவு, அவர்களுக்கு போதவில்லை. ருசியான உணவை ஆசையாக உண்ணும் பிள்ளைகளுக்கு பத்தாது. அதுவும் அஜி, போட்ட உணவை முழுமையாக உண்டு விடுவாள். மிச்சம் என்று எதுவும் இருக்காது. காய், கீரை, கூட்டு என்று எல்லாம் உண்ணும் வகை தான். இந்த விஜி குட்டிக்கு கொஞ்சம் நாக்கு நீளம், ருசியான உணவு தான் அதிகம் உள்ளே செல்லும். ஒரு நாள் திவ்யா தான்,
“வாய் இருக்கு கோழி குஞ்சு மாதிரி, வயிறு இருக்கு ஊரணி மாதிரி…” என்று அஜி சாப்பிடும் உணவை சொல்லி காட்ட. மனம் சுணங்கி கொண்டாள் சரண்யா. அன்றிலிருந்து பிள்ளைகளுக்கு உணவு தனி தான். சுடு சோற்றில் நெய் பருப்பு விஜிக்கு ரொம்ப இஷ்டம். சாதம் சூடாக இருந்தால் பிள்ளைகள் விரும்பி உண்ணுவார்கள் ஒரு பிடி அதிகம் உள்ளே போகும் என்பதால், சரண்யா சாதம் வடித்த உடனே பிள்ளைகளுக்கு சோறு ஊட்ட தொடங்கி விடுவாள். ஆனால், சாத்விக் அப்படி அல்ல. அவனுக்கு உணவு ஊட்ட ஊரவே சுத்த வேண்டும். அதனால், பசிக்கு உண்ணும் பிள்ளைக்கு முதலில் உணவு கொடுத்தாள் சரண்யா.
அன்றே திவ்யா ஒரு சண்டையை போட்டு விட்டு தான் ஓய்ந்தாள். இப்பொழுது எல்லாம் சுடு சோறு என்றில்லாமல் ஆறிய சாதம் என்றாலும் தனியே தான் கொடுப்பாள். ஆரம்பத்தில் இவளும் பதில் கொடுத்தவள் தான். எத்தனை காலத்திற்கு எதிர்க்க முடியும். கணவன் உடன் இல்லை, தன் சுய சம்பாத்தியமும் இல்லை. தாய், தந்தை நிழலில் தான் வாழ்வு. முதலில் ஆதரவு கொடுத்த தந்தையும் ஒரு கட்டத்தில் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார். உண்மையில் பஞ்சாயத்து பண்ண முடியவில்லை.
வீட்டின் கடை குட்டியாக அண்ணன், அக்கா என்று அனைவரும் விட்டு கொடுத்து, செல்லமாக வளர்ந்தாள் சரண்யா. அதையே காலத்துக்கும் தாய் வீட்டில் எதிர்பார்த்தால் நடக்குமா… உன் இடம் இது என்று தலையில் தட்டி காட்டி கொடுத்தாள் திவ்யா. பிள்ளைகள் வளர, வளர சரண்யாவின் சிறு பிள்ளை தனம் காணாமல் போய், தங்கள் நிலை உறைக்க தொடங்கியது. தனித்து நிற்க பயம் என்பதோடு தனித்து நிற்க தெரியவில்லை. எந்த வேலைக்கும் அடிப்படை தகுதி பன்னிரெண்டாம் வகுப்பு. அது கூட முடிக்கவில்லை. எவ்வாறு வேலைக்கு சென்று இரு பெண் பிள்ளைகளை வளர்க்க… நெஞ்சு முழுக்க பயம் கவ்வியது. அடுப்படியில் கிடந்தவள், தனித்து நிற்க தெரியவில்லை.
ஆனால், காலம் அவ்வாறு விடாதே. எத்தனை காலத்திற்கு அனுசரித்து செல்வது. தன்னை அடக்கும் போது அடங்கி கொண்டவள், தான் பெற்ற பிள்ளைகளுக்கு எனும் போது அடங்கி செல்ல முடியாதே… பொதுவாக பார்க்கும் போது எந்த சிக்கலும் இல்லை. ஆனால், உற்று பார்க்கும் போது கண்டு கொள்வாள்.
அன்று சென்னையில் இருந்து சரண்யாவின் அக்கா வரும் நாள். வீட்டில் விருந்து தடபுடலாக ஏற்பாடு செய்து இருந்தது. இங்கு வந்து தங்கி, இரண்டு நாள் கழித்து குலதெய்வ கோவில் செல்ல ஏற்பாடு ஆகி இருந்தது. எப்போதும் அறை விட்டு வெளிவராத தாய் கூட அன்று வந்து விட்டார். என்றோ வரும் மகள் என்று கவனிப்பு அதிகம் தான். சரண்யாவும் அக்காவின் வரவை ஆவலுடன் தான் எதிர்பார்த்தாள், சில விசயங்களை அவள் மூலம் தான் வீட்டில் சொல்ல வேண்டும். அது வேற ஒன்றும் இல்லை, மகள்களை பள்ளியில் சேர்ப்பது பற்றி தான். இவர்களை விட ஐந்து மாதம் இளையவன் சாத்விக், அவனை பள்ளியில் சேர்ப்பது பற்றி அண்ணன், அண்ணி அலசி எடுக்கிறார்கள். ஒரு ஆறு பள்ளியின் பெயரை வைத்து கொண்டு வீட்டில் தினமும் மாநாடு தான். ஆனால், அவளின் கொஞ்சும் கிளிகளை யாரும் கண்டு கொள்ள வில்லை.
சரண்யாக்கு அண்ணன் மகன் உடன் சேர்த்து படிக்க வைக்க ஆசை. அக்கா மூலம் தான் வீட்டில் சொல்ல வேண்டும் என்று நினைத்தாள். அக்கா கணவன் ரமேஷ் மீது வீட்டில் உள்ளவர்களுக்கு நல்ல மரியாதை. அவன் சொல் எடுபடும் என்று முழுதாக நம்பினாள். வாழ்வின் நிதர்சனத்தை, மனித மனதை காலம் தடையின்றி கற்று கொடுக்குமே!… படிப்பை கண்டு ஓடியவளுக்கு வாழ்வின் படிப்பினையை காலம் கற்று கொடுக்கும் போது எங்கு ஓடி ஒழிவாள்.
மூத்த மகளுக்கு தாய் வீட்டில் பலமான வரவேற்பு தான். நல் வாழ்க்கை வாழும் மகளுக்கு, தாய் வீட்டில் என்றும் செல்வாக்கு தான். ஆசையாக உடன் பிறந்தவளை நெருங்கினாள் சரண்யா.
“சரண்… அக்காக்கு பூந்தி புடிக்கும்ன்னு விநாயகம் கடையில சொல்லி வச்சு இருந்தேன். இப்பத்தான் சூடா போடுவாங்க. சாயங்காலம் ஆறி போகும். ஒரு எட்டு சிரமம் பார்க்காமல் போய் வாங்கி வாடா…” என்ற தாயின் குரலுக்கு, மறு சொல் சொல்லாமல் தலையாட்டி சென்றாள் பெண்.
செல்லும் போது, பிள்ளைகளை பார்த்து கொள்ளுமாறு சொல்லி தான் சென்றாள். ஆனால், கொஞ்ச நேரத்திலேயே தாயை தேட தொடங்கியது அவள் சிட்டுகள். அதிலும் இந்த சின்ன குட்டிக்கு காலைகடன் பழக்க வழக்கங்கள் இன்னும் சரிவர தெரியவில்லை. தாய் எப்போதும் உடன் இருப்பதால், யாரும் பார்த்து கொள்ள வேண்டிய அவசியம் இதுவரை இல்லை. குழந்தைக்கு நேரம் காலம் ஏது?… உடல் உபாதைக்கு சிணுங்க தொடங்கியது. இன்னும் பாத்ரூமில் உட்கார வைத்து பழக வில்லை.
சுகந்தியால் குனிந்து, நிமிந்து வேலை செய்வது கடினம். மருமகளை கேட்கவே முடியாது. மூத்த மகள் என்றால் கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றியது. ஏனென்றால், பிரியாவின் முதல் பிரசவத்தின் போதே சுகந்திக்கு முடக்கு வாதம் வந்து விட்டது. உடன் பிறந்தவளுக்கு துணை நின்றது சரண்யா தான். அதை மனதில் கொண்டு தான், விஜியை பாத்து கொள்ள சொல்லி சுகந்தி சொன்னது.
பெரிதாக மறுப்பு சொல்லாமல் வெளி வராண்டாவில் பிள்ளையை உட்கார வைத்தாள் பிரியா. அவள் கூடவே வந்து விட்டது அஜி குட்டி. குழந்தை என்பதால் கூடவே இருந்து தான் சுத்தம் செய்ய வேண்டும். பிரியா வெளியவே விட்டுவிட்டு உள்ளே சென்று விட்டாள். வேண்டும் என்றெல்லாம் செய்ய வில்லை. சிறு கவன குறைவு, அவ்வளவு தான்.
ஆனால், சேட்டை பிடித்த குட்டி வாண்டு… கை, கால்களில் அப்பி கொண்டது. முதலில் கண்ட திவ்யா தான் பிரியாவை அழைத்து காண்பித்தது.
“அண்ணி… என்ன இது இப்படி சுத்தமில்லாமல் பிள்ளை வளக்குறா உங்க தங்கச்சி. இதை நாம சுத்தம் செய்ய முடியுமா… ஒரு நல்ல பழக்கமும் இல்லை…” என்று வெறுப்பாக திவ்யா சொல்ல.
“நாம ஏன் செய்யணும். அவ பிள்ளைக தான் நாறடிச்சது… அப்ப அவ தான் செய்யணும். நாம உள்ள போலாம்…” என்று பிரியா அகல.
“அப்ப, இதுக ரெண்டையும் உள்ள விட்டா… எல்லா இடத்தையும் அசுத்தம் பண்ணும். நம்ம பிள்ளைகளும் இருக்கு…” என்று திவ்யா இழுக்க.
என்ன செய்வது என்று யோசித்த இருவரும், வெளி கேட்டையும் மூடி, வீட்டு கதவையும் மூடி விட்டார்கள். இடையில் இருந்த வராண்டாவில் பிள்ளைகளை தனியாக விட்டு சென்றார்கள்.
தற்போது தான் சூடாக போட்ட பூந்தியை வாங்கி கொண்டு வேக எட்டு வைத்து நடந்து வந்து கொண்டிருந்தாள் சரண்யா.
இந்த வருட கோவில் திருவிழாக்கும் வர வில்லை என்று சொல்லி விட்டானே… கண்கள் கலங்கி அழுகை முட்டி கொண்டு வந்தது அபிராமிக்கு. அத்தை வீட்டில் தான் அமர்ந்து இருந்தாள். அவளின் சொந்த அத்தை தான் தனம். அவரின் மூத்த மகனை எண்ணி தான் இந்த அழுகை அபிராமிக்கு.
எட்டு வருட காதல். பல கட்ட போராட்டத்திற்கு பின் தற்போது தான் இரு வீட்டார் சம்மதமும் கிட்டியது. தற்போது போது போய் முரண்டு பிடிக்கும் மாமனை எண்ணி கோபம் வந்தது. எத்தனை வருட தவம், எவ்வளவு நாள் காத்திருப்பு இது… அதன் முக்கியத்துவம் உணராமல் முறுக்கி கொண்டு அல்லவா சென்று விட்டான். ஒற்றை ஆளாக இவள் தான் இரு பக்கமும் இழுத்து கொண்டு நிற்கிறாள்.
“சும்மா கண்ணை கசக்காத அபி. உங்க அயித்த நான் எதுக்கு இருக்கேன். நான். எல்லாத்தையும் சரி செய்தேன். அடுத்த தைக்கு உங்க கல்யாணம் தான். அவன் என்ன சாமி ஆடினாலும், நான் மந்திருச்சு விடுறேன். கவலையை விடுத்தா…” என்று சமாதானம் சொன்னார் தனம்.
“அண்ணனுக்கு உம் மேல எம்புட்டு ஆசைன்னு உனக்கு தெரியாதா… அப்படில்லாம் யாரும் தள்ளி வைக்க மாட்டாக. என்னைக்கு இருந்தாலும் எங்களுக்கு மதினி நீ தான் அபி…” சொன்னது தனத்தின் மகள் மாயா.
“இந்த தடவை யாரும் அண்ணனை விட மாட்டோம். கைய, காலை கட்டியாவது உன்கிட்ட சேர்த்து போட்டு தான் வேற வேலையே…” இது தனத்தின் ரெண்டாவது மகன் சக்தி வேல்.
இரு குடும்பத்து ஆதரவும் அவளுக்கு தான் என்ற போதும். அவள் மனம் கொஞ்சமும் அமைதி காண வில்லை. இனம் புரியாத பயம் உள்ளுக்குள் இருந்து கொண்டு தான் இருந்தது. அவனின் நிலைப்பாடு என்னவென்று தான் தெரியவில்லை. ஆனால், அவன் மனதில் அவள் மட்டும் தான் இருக்கிறாள். அது மட்டும் உறுதி… அவனின், அவள் மேல் கொண்ட காதல் தான் அவளின் நம்பிக்கையே.
அவன் வெற்றிவேல். அபியின் மனதில் இருக்கும் மணாளன் அவன் தான். ஆனால், வெற்றி… அவளுக்கு மட்டும் தான் என்றால் பயம் இல்லை. அவன் அபியின் காதலன் மட்டுமல்ல… சரண்யாவின் கொஞ்சும் கிளிகளின் தகப்பனும் அவன் தான்…