வெற்றி ஒரு நிலைக்கு வந்து விட்டான். அதாவது பிள்ளைகளை கொண்டு ஒரு நிலைக்கு வந்து விட்டான். சரண்யா விசயத்தில் என்ன முடிவு என்றால்… தெரியாது என்ற பதில் தான் வரும். கண்ணால் காணதவரை எப்படியோ!… தன் கண்ணால் இரு பிள்ளைகளையும் பார்த்த பின் மனம் நிற்க வில்லை. ஒளிச்சு, மறைச்சு செய்யவும் விரும்பாமல், தன் வீட்டில் சொல்லி விட்டான். என் பிள்ளைகள் எனக்கு வேண்டும் என்று…
வீட்டில் யார் முகத்திலும் ஈயாடவில்லை. இத்தனை வருடம் சென்று, இப்படி ஒரு திருப்பத்தை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. சரண்யா என்ற ஒருத்தி அவர்கள் நினைவில் கூட கிடையாது. அபியோடு திருமணம் பேசி வைத்திருக்க… இவன் என்னவென்றால் பொண்டாட்டி, பிள்ளை என்று ராகம் போட்டு வாரான்… யாருக்கும் என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க, எல்லோரையும் விட தனம் முகம் தான் கவனிக்க தக்கதாய் இருந்தது. அவரிடம் அப்படி ஒரு அதிர்ச்சி, ஆத்திரம், நம்ப இயலா தன்மை என்ற முகத்தில் பல மாறுதல்…
வேல்முருகன் தான், “என்னையா சொல்ற… வெற்றி நெசம் தானா?… இரட்டை பிள்ளையாலே, நம்ப முடியலையே, நாம ஒன்னிமே தெரியாமா இருந்திருக்கோம் பாரேன்… நினைக்கவே இல்லைவே. சமாதானம் பண்ண போன அன்னைக்கும் பிள்ளை வேணாம்னு தான் பேசினாங்க, அதான் வேற யோசிக்காம போனேன்…” வருத்தமாக வேல்முருகன் சொல்ல
அமைதியாக பார்த்தான் வெற்றி. பல முறை தம்பி வீட்டில், தங்கை வீட்டில் பிரச்சனை வந்துள்ளது. தாய், தந்தையே சமரசம் பேச முன் வந்து உள்ளார்கள். எந்த இடத்திலும் உறவை முறிக்க விடவில்லை. ஆனால், தன் விசயத்தில் அப்படியில்லை, ஆரம்பம் தொட்டு சரண்யாவை யாருக்கும் பிடிக்க வில்லை. அபியின் இடத்தை தட்டி பறித்தாள் என்று அவளிடம் ஒதுக்கம் தான் காட்டினார்கள். நாளடைவில் சரியாகி இருக்கும், கெடுத்து கொண்டது வெற்றி தான். கணவன், மனைவி சண்டை குடும்ப பிரச்சனையாகி அது பங்காளி சண்டையாக மாறி போனது.
வெற்றிக்கு இரண்டு பிள்ளை இருக்கு, சரண்யா தனி மரமாக தான் இருக்கிறாள் என்று அறிந்த பின் அபியுடன் வெற்றியின் திருமணத்தை யாரும் பேச வில்லை. இரண்டு பெண் பிள்ளை எனும் போது வேற யோசனை எப்படி வரும்!… ஆனால், தனம் அமைதியாக இருக்கும் ஆள் அல்லவே…
“ வெற்றி… நடந்தது மாத்த முடியாத. இனி என்ன செய்யலாம்னு இருக்க?…” என்ற தாயை பார்த்தவன்
“என்ன செய்யன்னா ? என்னத்தை சொல்ல. பிள்ளைகளை பத்தி தான் யோசிக்கணும். அவங்க தான் எனக்கு முக்கியம்…” என்ற மகனின் பதிலில் அதிர்ந்த தனம்.
“பெண் பாவமா?… அப்போ சரண்யாக்கு என்னம்மா பதில், அவளும் பெண் தானே. எம் பிள்ளைக, அவங்களை நான் யோசிக்க வேணாமா… பெத்த தகப்பனா , என் பிள்ளைகளுக்கு என்னை துரோகம் செய்ய சொல்றீங்களா?…” நிதானமாக தான் கேட்டான்.
“அப்போ அபிராமிக்கு என்ன வழி. என்னைக்கு இருந்தாலும் நீ கட்டிக்குவன்னு உன் நினைப்ப தான் மனசுல வச்சு நிக்கிறா… அவளுக்கு என்னாலே பதில் சொல்ல போறா… நம்ம சொந்த பந்தம் எல்லாருக்கும் தெரியும். இப்போ போய் என்னன்னு சொல்ல?… அவளை செத்த நேரமாது நெனைச்சியால… ரொம்ப சுயநலமா இருக்க கூடாது வெற்றி…” விரக்தியும், கோபமுமாக கேட்டார் தனம்.
“அப்போ என் பிள்ளைகளுக்கு என்னம்மா வழி… அவங்களை நான் என்ன செய்ய? கண்ணார பாக்காதது வேற, என் ரெண்டு கண்ணால் என் பிள்ளைகளை பார்த்தேன். நான் தான் உங்க அப்பான்னு சொல்ல முடியல. நெஞ்சு முழுக்க பயம் அடைஞ்சு கிடக்கு. பெத்த பிள்ளைகளை ஒதுக்கி வச்சு ஊர், உலகத்துக்கு முன்னாடி வேசம் போட என்னால முடியாதும்மா…”
“ஏன் ஒதுக்கி வைக்கணும். உன் நினைப்பு இது தான பெரியவனே… உம் பிள்ளைகளை நீ ஒதுக்க வேணாம் சாமி, நிறைவா செய். பிள்ளைகளை படிக்க வை, நகை நட்டு எடுத்து போடு, கல்யாணம் காச்சின்னா எல்லோரும் முன்ன நின்னு செய்வோம். அதுக்கும் உன் கல்யாணத்துக்கு என்னாலே சம்மந்தம். அபி கூட உன் வாழ்க்கை நல்லா இருக்கும் வெற்றி…”
“நீங்க என்ன சொல்ல வாறீங்க, தெளிவா சொல்லுங்கம்மா?…” புரிந்தும், புரியாமலும் வெற்றி கேட்க.
“பிள்ளைக அவ ஆத்தாகிட்டவே வளரட்டும். அவங்களுக்கு என்ன உதவி தேவையோ அதை நாம செய்வோம். அத்து விட்ட எல்லா வீட்டுலையும் நடக்கிறது தான். பெத்தவன் காசு, பணம், சொத்து மட்டும் தான் குடுப்பாங்க. அதையே நாமளும் செய்வோம். ஒரு குறையும் இல்லாம படிக்க வச்சு, கட்டி கொடுப்போம். வேற என்ன வேண்டும் அவங்களுக்கு?…” என்று தனத்தின் பேச்சில் வீட்டின் உள்ளே இருந்தவர்கள் அனைவரும் வந்து விட்டார்கள்.
வெற்றியின் கண்ணில் அனல் தெறித்த போதும், முகம் அமைதியாக தான் இருந்தது. பார்த்தவர்கள் தான் பதறி நின்றார்கள். வெற்றி தெளிவாக தன் முடிவை சொல்லியும், தேவையில்லாத பேச்சை தாய் ஏன் எடுத்தார்கள் என்று தான் மற்ற மக்கள் பார்த்தார்கள்.
“பெத்தவ சூது சொல்லுவனாலே… உன் மனசு எனக்கு தெரியாதா, அபி மேல உனக்குள்ள பிரியம் எனக்கு தெரியாததா. நான் சொல்றத கேளு, அபி கூட உம் கல்யாணம் நடக்கட்டும், உம் பிள்ளைகளை நீயே பார்த்துக்க…” என்று சுலபமாக தீர்வு சொல்லி கொடுத்தார்.
“என்னம்மா சொல்றீங்க, அப்போ சரண்யா?… நீங்க எனக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு தர நினைக்கிற மாதிரி, அவளை பெத்தவங்களும் நினைப்பாங்க தானே… அப்போ என் பிள்ளைக அனாதை மாதிரில ஆகி போகும்…” வெற்றியின் கேள்வி, அவன் ஆழம் பார்க்கிறான் என்று மற்றவர்களுக்கு புரிந்தது.
“ அப்போ நானும் தாம்மா அசிங்கம். சரண்யா மட்டும் ரெட்டை பிள்ளை பெறுவதற்கு அவ என்ன குந்தி தேவியா… உம் மகனும் ரெட்டை பிள்ளை , அதுவும் பொம்பளை பிள்ளை பெத்தவன் தான். எனக்கு மட்டும் ரெண்டாம் கல்யாணம் தேவையா… நீ சொல்ற மாதிரி அசிங்கம் தானம்மா. அதுமட்டுமா, பொண்டாட்டி, பிள்ளைன்னு நல்ல வாழ்க்கை இருக்க, வேற பொண்ணு பின்னாடி போனான்னு ஊர் பேசும், எம் மதிப்பு, மரியாதை எல்லாம் போயிடும்…” ஊரை காரணம் காட்டி பேச்சை முடிக்க பார்த்தான்.
“அது எப்படி!… என்ன இருந்தாலும் நீ ஆம்பிளை வெற்றி. பொம்பளை தான் ரெண்டு கல்யாணம் பண்ண யோசிப்பா… பொம்பளைக்கு ரெண்டு பொழப்பா வெற்றி. அது மருவாதியா..” என்றார் முகத்தை ஒரு மாதிரி வைத்து.
“அப்போ நான் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிலாம். அதுல எனக்கு பிரச்சனை இல்லை. நீங்க சொல்றத கேக்குறேன். ஆனா, எனக்கு எம் பிள்ளைக வேணும். அவங்களை நான் விட்டு கொடுக்க மாட்டேன். என் கூட தான் இருப்பாங்க…”
“அது எப்படி வெற்றி. ரெண்டாந்தாரமா அபி வாரதே பெருசு. இதுல உன் பிள்ளைகளையும் பார்க்கணும்ன்னா எப்படி சரியாகும். பெத்தவ என்ன கிழிக்கிறா… அபிக்கு என்னடா தலையெழுத்து இதுகளை தூக்கி சுமக்கணுன்னு… இது சரி கொடி கிடையாது பெரியவனே!…” என்ற தாயை அழுத்தமாக பார்த்தவன்.
“அப்போ நீங்க பாருங்க. இந்த குடும்பத்தோட மூத்த வாரிசு. அவங்களை எப்படி விட்டு கொடுக்குறது…”
“நான் எப்படி வளர்க்க முடியும். அதுவும் ரெண்டும் பொம்பளை பிள்ளைக, நிச்சயம் முடியாது. எனக்கும் வயசாகி போச்சு…”
“அப்போ நான் பார்த்துக்கிறேன். என் பிள்ளைகளை நான் பார்த்துக்கிறேன். நான் பெத்தேன், நான் வளக்குறேன். யாருக்கு என்ன சிரமம்…” என்று வெற்றி முடிக்க.
எல்லோருக்கும் ஆச்சர்யம் தான். அவனுக்கு இரு பிள்ளைகள் இருப்பதே இப்போது தான் தெரியும். தொட்டு தூக்காத, உணராத பிள்ளைகள் மீது அவ்வளவு பாசமா… நான்கு வருடாமாக மனைவியை அறியாதவன். பிள்ளைகளை தன்னோடு சேர்த்து கொள்ள துடிக்கிறான். தன் உயிர் கொடுத்து அந்த பிள்ளைகளை உலகுக்கு தந்த ஒருத்தியை அவன் நினைக்க வில்லை.
“இது ஆகாத பேச்சு வெற்றி. அவ என்ன நம்மளை கேட்டா பிள்ளை பெத்த. உன் வாழ்க்கைய இழந்து காலத்துக்கும் அவ பிள்ளைகளை பார்க்கணுமா… உனக்கு என்னடா தலையெழுத்து. இம்புட்டு பெரிய வீட்டை கட்டி, வாரிசு இல்லாம போகணுமா… அரசனத்து போகவா நான் உன்னை பெத்தேன். முடியாது, நான் ஒத்துக்க மாட்டேன். அவ பிள்ளைகளுக்கு செய்யிறதா இருந்தா வெளிய வச்சு செய்வோம். அவ அதை ஏத்துக்குவா, வெறும் பத்தாயிரம் சம்பளத்துக்கு வேலைக்கு போறவ, பிள்ளைக செலவை நாம பர்த்துக்கிறோம்ன்னு சொன்னா, வேனாம்ன்னா சொல்லுவா… யாரும் ஒதுக்கி வைக்கல. உம் பொறுப்பை, கடமையை தட்டி கழிக்க சொல்லல. அதுக்காக உம் வாழ்க்கையை இழந்து நிக்கனுமா…” என்றார் ஆவேசமாக.
எத்தனை சொல்லியும் மகன் புரிந்து கொள்ள மறுக்கிறான் என்ற ஆதங்கம் நிறைந்து நின்றது. அத்தோடு பிள்ளைகளை காரணம் காட்டி சரண்யா திரும்ப உள் வருவதை அவர் விரும்பவில்லை.
வெற்றி நிதானமாக, தெளிவாக தன் தாயை பார்த்தான். வெகு நிதானமாக தன் வார்த்தைகளை கோர்த்தான்.
“அப்போ என்ன சொல்றிங்க அம்மா… பிள்ளை பெத்தவ தான் வளர்க்கணுமா. அப்போ நான் யார்?… பத்து மாசம் அவ தான் சுமந்தா, எல்லா உரிமையும், கடமையும் அவளுக்கு மட்டும் தான் இருக்குன்னு என் பொறுப்பை தட்டி கழிக்க சொல்றீங்க…”
“அப்படி சொல்லலை வெற்றி. நீ என்ன தேவையோ செய்…” என்றவரை மேல ஒரு வார்த்தை பேசவிடவில்லை.
“காசு, பணம் கொடுத்தா என் கடமை முடிஞ்சது. அவங்க தேவையை நான் கவனிச்சா மட்டும் போதும். நான் நல்ல அப்பா, அவ்வளவு தானா. அவங்க வாழ்க்கையில வெறும் பேருல மட்டும் தான் நான் நிக்கேன். என்னை நேரில பார்த்தும், நான் தான் அப்பான்னு அவங்களுக்கு தெரியலை. யாரோ போல பாக்குறாங்க. இதை எதையும் நான் கண்டுக்காம, என் வாழ்க்கைய மட்டும் நான் பார்க்கணும். அவ்வளவு சுயநலவாதியா நான்?…” என்று கேட்டவன் தன் தம்பி, தங்கையை பார்த்தான்.
“இவங்க யார் எனக்கு?…” என்று தாயை பார்த்து கேட்டவன்.
அவர் பதில் சொல்லும் முன்பே, “ என் கூட பொறந்தவங்க. சரிதானா, இவங்களுக்காக தான் நான் வெளிநாடு போனேன். கல்யாண வயசுல தங்கச்சியும், படிக்கிற தம்பியும் கஷ்டப்பட கூடாதுன்னு வேகாத வெயில்ல நான் பாடு பாட்டேன். நான் இங்கேயே இருந்து இருந்தா, என் பிள்ளைக பொறப்பு எனக்கு தெரிஞ்சு இருக்கும். தகப்பன் இருந்தும் அனாதையா நிக்க மாட்டாங்க. கூட பொறந்தவங்களுக்கு நான் செய்யணும், எம் பிள்ளைகளுக்கு நான் செய்ய கூடாதா. இவங்க உரிமையா இங்க இருக்கணும், எம் பிள்ளைக ஒதுங்கி போகணுமா… நல்லா இருக்கு உங்க நியாயம். வெறும் பத்தாயிரம் சம்பளத்துக்கு வேலைக்கு போறவன்னு சரண்யாவை சொல்றிங்க தான. அம்மா, குடும்பகஷ்டத்துக்கு நீங்க என்னை வேலைக்கு அனுப்பவும் போது என் சம்பளம் வெறும் ஆறாயிரம் தான். அதை வச்சு நாம வாழலை…”
“நான் உங்களை நல்லா தான பாக்குறேன். எம் பிள்ளைக மேல உங்களுக்கு என்ன கோபம்? கண்ணார பாக்காத போதே இவ்வளவு வெறுப்பா… ஏன்? மாயா மகனுக்கு மொட்டை எடுக்கு நான் வரல. அப்போ நீ என்ன சொன்ன, தாய் மாமன் உறவு காலத்துக்கும் நிலை நிக்குறது, பெத்த தகப்பனுக்கு சமம்ன்னு சொன்னீங்க தான. தங்கச்சி பிள்ளைய தங்குறேன். என் பிள்ளைகளை தள்ளி வைப்பேனா… கூட பொறந்தவங்களை ஒதுக்கி வைக்காத நான் என் பிள்ளைகளை ஒதுக்கி வைப்பேனா. இந்த ஓட்டமும், சம்பாத்தியமும் யாருக்கு?…” என்றவன்.
தன் தாயை பார்த்து, “அது எப்படி, சரண்யா மூலம் எனக்கு பிறந்த பிள்ளைகளுக்கு உரிமை இல்லை. அபிய கல்யாணம் செஞ்சா அவளுக்கு பிறக்கிற பிள்ளைக்கு உரிமை இருக்கு. அப்படியா!… என் ரெண்டாம் தாரத்து பிள்ளைகளுக்கு தான் உரிமைன்னா, அப்படி ஒன்னு நடக்கவே நடக்காது. வேல் முருகன் மகன் வெற்றி வேல் மாறி போச்சு. நான் எம் பிள்ளைகளுக்கு தகப்பன் மட்டும் தான். அவங்களுக்கு பின்னாடி தான் யாரும், எந்த உறவும். நானும், எம் பொண்டாட்டியும் தான் பிரிஞ்சு இருக்கோம். எம் பிள்ளைக இல்லை. என் மக்க என் கூட தான். இது எப்பவும் மாறாது. உங்களுக்கு பிடிகலைன்ன, நான் ஒன்னும் செய்ய முடியாது… எம் பிள்ளைகளுக்கு அம்மா தான் எனக்கு பொண்டாட்டி” என்று உள்ளே சென்றவன். பார்வையாக கூட தன் உடன் பிறப்புகள் பார்க்க வில்லை.
எவ்வளவு செய்து இருப்பேன். வாய் வார்த்தையாக கூட தன் பிள்ளைகளை விசாரிக்க வில்லையே. யாரையும் குற்றம் சொல்ல முடியாது. முதல் குற்றவாளியே தான் அல்லவா…
மனசு வெதும்பி வெற்றி படுத்து கிடக்க, விசயம் அபியின் காதை எட்டி விட்டது. ஆவேசமாக வெற்றி வீடு வந்தவள். அவனை நேர் கொண்டு பார்த்து,
“எனக்கு சம்மதம் வெற்றி மாமா. உங்க பிள்ளைகளுக்கு தாய இருக்க எனக்கு சம்மதம்” என்று சொல்லி அவனை அதிர வைத்தாள் அபிராமி.