அபியால் எதையும் நம்ப முடியவில்லை. அத்தோடு நடப்பதை ஏற்று கொண்டு விதி இது தான் என்று கடந்து செல்ல முடியவில்லை. கிட்டத்தட்ட எட்டு வருட காதல். நிலையாக மனதில் சுமந்ததை வலியோடு இறக்கி வைக்க மனம் வரவில்லை. எத்தனை வரன் வந்தும் வெற்றியை தாண்டி யோசிக்க வில்லை. அவனை தான் திரும்பி பார்த்தேன், அவனை மட்டும் தான் மனதில் நினைத்தேன், அவனோடு மட்டும் தான் என் வாழ்வு என்று காத்து நின்றவளுக்கு, வெற்றியின் மாற்றம் பெரிய ஏமாற்றம் தான்.
அவளை பெரிதாக எதுவும் குறை சொல்ல முடியாது. வெற்றியின் நிலை இல்லா மனம் தான், அபியின் நிலையான நம்பிக்கைக்கு அஸ்திவாரம் போட்டது. சரண்யா உடனான திருமணத்தின் பின்னும் வெற்றியின் ஏக்கம் சுமந்த விழிகளும், தன்னை பார்த்து தடுமாறுவதும், சரண்யாவை துளியும் கண்டு கொள்ளாமல் ஒதுங்கி செல்வதும் என்று அவனது திருமண வாழ்க்கையை அத்தை தனம் ஒளிபரப்ப , அபிக்கு ஏதோ ஒரு ஆறுதல்.
என்னை பிரிந்து, என் காதலை துறந்து உன்னால் மனைவியுடன் வாழ முடியவில்லையே என்ற கர்வம் வந்தது. அவளை பார்த்ததும் தடுமாறும் வெற்றி, அவளுக்கு ஒரு சுவாரஸ்யம். தன் இடத்துக்கு வந்து விட்டாள் என்ற சரண்யா மீது சொல்ல முடியாது கோபம், வெறுப்பு இருந்தது. நடந்ததில் அவள் தவறு எதுவுமில்லை என்றாலும் வெற்றி கட்டிய தாலியை சுமக்கும் சரண்யா என்றும் அபிக்கு எதிர் தான்.
காதலித்தோம், விதி வசத்தால் பிரிந்தாயிற்று… இனி அவரவர் வாழ்க்கை என்ற முடிவை யாரும் எடுக்க வில்லை. சரண்யா உடன் அபியை ஒப்பிட்டு நூறு குறை தனம் தினமும் சொல்ல, தான் எந்த விதத்தில் குறைந்தவள் என்ற எண்ணம் அபியின் மனதில். வெற்றியும், அபியை கண்டு மருகி நிற்க, காதல் கொண்ட மனம் கரை சேர துடித்தது. அதுவும் தனம் சொன்ன, தாம்பத்திய வாழ்க்கையும் கட்டாதாயத்தில் நடந்தது தான் என்ற வார்த்தை அபியின் மனதில் ஆழ பதிந்தது. சரண்யா உடன் வெற்றியின் திருமண வாழ்வு வெறும் நான்கு மாதங்கள் தான். இருவரும் சேர்ந்து வாழ்ந்த நாட்கள் விரல் விட்டு எண்ணக் கூயவை தான்.
வெற்றியின் திருமண வாழ்க்கை வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் அமைந்து விட்டது. அபியின் மீது கொண்ட பாசம், சரண்யாவை யாரும் நெருங்க விடாமல் செய்ய, குடும்ப பிணைப்பு உடைந்தது. ஏதோ ஒரு அழுத்தத்தில் நான்கு மாதம் வாழ்ந்த சரண்யாவும் ஒதுங்கி கொண்டாள். தன் மனைவி என்று வெற்றியும் தடுக்க வில்லை. நடந்தவை எல்லாம் அபிக்கு பெருத்த நம்பிக்கையை கொடுத்தது. அடுத்தடுத்து நடந்த பேச்சு வார்த்தையின் போதும் வெற்றி, தனக்கு சம்மதம் என்று வாய் திறக்கவில்லையே தவிர தடுக்க வில்லை. அமைதியாகி கொண்டான். அந்த தைரியம் தான் அபிராமியை வெற்றியின் மனைவியாக நினைக்க வைத்தது.
சீரியல், சினிமா மாதிரி எந்த வில்லி வேலையும் அபிராமி செய்யவே இல்லை. தன்னை போல் கணவன், மனைவி பிரிந்து போக, கதைகளில் வருவது போல தன் காதல் கை கூட காலம் வழி விட்டதாக நினைத்தாள். சுய விருப்பத்தின் அடிப்படையில் தான் வெற்றி, சரண்யா பிரிவு நடந்தது என்பதால், எந்த அவசரமும் இல்லாமல் காதல் கை கூட காத்து நின்றாள்.
காதலியாக அபிராமியும் சரி, மனைவியாக சரண்யாவும் சரி, ஒரு நிலையில் வெற்றியை நிறுத்த முடியவில்லை. ஆனால், அவன் பிள்ளைகள் எந்த தூண்டுதலும் இல்லாமலே அவனை பிடித்து வைத்தார்கள். “அப்பா” என்ற ஒரு வார்த்தையை உதிர்க்காமலே அந்த ஸ்தானத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டான். சரண்யாக்கு கணவனான வெற்றி மேல் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால், அபிக்கு ஆயிரம் ஆசை, எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், விதி அவளுக்கு தோல்வியை கொடுக்க, தாங்கி கொள்ள தான் முடியவில்லை.
அபி அறிவாள் வெற்றி பிள்ளைகளை மட்டும் எடுத்து கொள்பவன் அல்ல. பிள்ளைகளின் தாய் சரண்யாவின் சேர்த்து தான். அவர்கள் எல்லாம் ஒரு குடும்பம் என்றால் உன்னையே நினைத்து வாழும் நான் யார்?… உன் அகராதியில் எனக்கு என்ன பதில்?… என்று சட்டையை பிடிக்கும் அவேசம் தான். ஆனால், அதற்கு முன் அவன் மனம் அறிய தான் அந்த கேள்வியை கேட்டது.
“ உங்க பிள்ளைகளுக்கு நான் தாயாக இருக்கிறேன்…” என்று சொன்னதும் அதிர்ந்து பார்த்தவன். பின் தெளிந்து கொண்டான்.
அபியின் முகத்தில் இருந்த உக்கிரம், தன் மனதை அறிந்து விட்டாள் என்று காட்டி கொடுத்தது. ஒரு பெருமூச்சு விட்டு தன் நிலையை எடுத்து சொல்ல தொடங்கினான்.
“அபி, நான் சொல்றது உனக்கு கோபம், வெறுப்பு, விரக்தி கூட வரலாம். ஆனாலும், நிஜம்ன்னு ஒன்னு இருக்கு… இது வேணாம் அபி…” சொல்லியே விட்டான்.
அபியின் கண்களில் நீர் நிற்காமல் வந்தது. முன்பே ஊகித்தது தான். வெற்றி வாயால் கேட்கும் போது வலித்தது.
“உங்களை நான் ரொம்ப நேசிச்சேன் மாமா. நீங்க வேற யாரோ ஒருத்திக்கு புருசன் ஆனா பின்னும் மறக்க முடியாத அளவுக்கு நேசிச்சேன். உங்களை பிரிச்சு பார்க்கவே தோணலை. அதனால் தான் உங்க தனிப்பட்ட வாழ்க்கையை நினைக்காம விட்டேன். உங்க மேல உண்மையா பாசம் வச்சதுக்கு நல்லா கிடைச்சது…”
“எனக்கு என்ன மாமா பதில்?”
“நீ நல்லா வாழ்வ அபி. என்னைக்கு வலிக்கும், பின் ஒரு காலத்தில இது தான் சரின்னு உனக்கு தோணும். உன் காதல் உண்மை தான் அபி. அன்னைக்கு நீ நேசிக்கும் போது வெற்றி வெல், உன் அத்தை பையன் மட்டும் தான். ஆனா, இன்னைக்கு ரெண்டு பிள்ளைகளுக்கு தகப்பன். மரபு மாறி போகும் அபி… நான் உனக்கு மட்டும் தான் துரோகியா இருக்கேன். அந்த வலி மட்டும் போதும் அபி… ஒரு தகப்பானா என் பிள்ளைகளுக்கு துரோகியா நிக்க நான் விரும்பலை அபி…”
“உங்க பிள்ளைக உங்க இரத்தம், அதான் துடிக்குது. என் வலி புரியவே இல்லையா மாமா?…”
“கடந்து வந்துரலாம் அபி. கஷ்டம் தான் ஆனா, கடக்க முடியாதது இல்லை. தயவு செஞ்சு என்னை வெறுத்து ஒதுக்கி வையேன். வெற்றி அவ்வளவு நல்லவன் இல்லைமா… ஒரு காதலனா உனக்கும் சரி கிடையாது, ஒரு புருசனா சரண்யாக்கும் சரி கிடையாது. ஒரு தகப்பனா நான் சரியில்லாம போன, வாழவே தகுதி அத்து போவேன். சாமி மாதிரி ரெண்டு பெண் பிள்ளைக, என் கண்ணு முன்னாடி நிக்க, எதுவுமே நடக்காத மாதிரி கடக்க தெரியல அபி. அவங்களை பார்க்கும் போது என் இரத்தம் துடிக்குது. நிச்சயம் நான் என் பிள்ளைகளுக்கு மட்டும் தான் அபி…” என்றவனை அமைதியாக பார்த்தாள் அபிராமி.
“அங்க நான் வேலை செய்யும் போது ஒரு நியூஸ் பார்த்தேன். பத்தொன்பது வயசுல ஒரு பொண்ணு தீவிரவாத கும்பல்ல சேர்ந்துச்சு. ஒரு நாள் பிடிபட்டு கைதியா நிக்கும் போது எல்லோரும் தூக்குல போட சொல்லி கோசம் போட்டாங்களாம். அந்த பொண்ணு சிரிச்ச முகமா பேசிய வார்த்தை என்னன்னு தெரியுமா… “என் தப்பை பார்த்த நீங்க, அதுக்கு பின்ன இருக்க வலிய யாரும் பார்க்கலையே. பத்தொன்பது வயசுல இப்படி வாழணும்ன்னா அதுக்கு பின்ன எனக்கு வாழ்க்கை எப்படி ஒரு வலியை கொடுத்து இருக்கும். என்னோட நாலு வயசுல எங்கப்பாவால நானும், எங்கம்மாவும் துரத்தி அடிக்க பட்டோம். சாப்பாடு இல்லை, இருக்க வீடு இல்லை, நல்ல படிப்பு, நிம்மதியான தூக்கம் கிடையாது. என்னோட பத்து வயசுல எங்கம்மாவ யாரோ பலாத்காரம் பண்ணி கொலை செஞ்சுட்டாங்க. நான் அனாதை ஆனேன். அப்புறம் என் வாழ்க்கையே போராட்டம் தான், சமூகத்தோடு மற்றொரு கோர முகத்தை பார்த்தேன். எனக்கு கோபம், யார் மேல? இந்த சமூகத்து மேலே. இங்க எனக்கு என்ன கிடச்சதோ, அதை தான் திரும்ப கொடுத்தேன். மரணம் எனக்கு ஒரு விடுதலை தான்…” இப்படி சொன்ன அந்த பொண்ணோட பேட்டிய பார்த்த பின்னாடி எனக்கு தூக்கமே போச்சு. முகம் காணாத எம் பிள்ளைக முகம் தான் நெஞ்சு முழுக்க…” கண்ணில் நீர் திரண்டது வெற்றிக்கு.
“ எம் வலி உனக்கு புரியாது அபி, என்னை விட்டு விடு. முகம் பார்க்கல, தொட்டு தூக்கலை, தகப்பனா எதுவும் செய்யலை… திரும்பி கூட பார்க்காம, கொஞ்சமும் கண்டுக்காம இருந்துட்டு, இன்னைக்கு எம் பிள்ளைகன்னு உரிமை குரல் தூக்குறது அதிர்ச்சியா தான் இருக்கும். என் தப்பு எனக்கு இப்பதான புரியுது. எம் பிள்ளைகளை பார்க்கும் போது மனசுல அந்த பொண்ணு நினைப்பு தான். எம் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான, நம்பிக்கையான வாழ்க்கைய கொடுக்காம வெறும் காசு, பணத்தை கொடுத்து கடமையை முடிக்க நான் தயாரில்லை. என்னால, என் மூலமா இந்த உலகத்துக்கு வந்தவங்களுக்கு நான் தான் பொறுப்பு. அதை நான் தட்டி கழிக்க மாட்டேன். ஒரு தாயா சரண்யா வழி நடத்த நின்னா, தந்தையா நான் தூக்கி சுமக்க தயாரா நிக்கணும். இதுல நான் மாறி நின்னா எம் பிள்ளைக வழி மாறி போவாங்க… ஒரு தலைமுறை சரியா வளர சமூகம் சரியா இருக்கனும். இந்த சமூகத்தை நாம சரி பண்ண முடியாது. குடும்பத்தை சரி பண்ணலாம், குடும்ப தலைவன் சரியா இருந்தா குடும்பம் சரியா தான் இருக்கும். நான் சுயநலமாக வழி தப்பி நின்னு எம் பிள்ளைகளுக்கு மோசமான முன்னுதாரணமா இருக்கமாட்டேன்…”
“அப்போ நான்?” என்றால் அபிராமி.
“ என்னை மன்னிக்க முடிஞ்சா மன்னிச்சு விடு. மனசு கொதிச்சு சாபம் விட்டாலும் எனக்கு மட்டுமே கொடு…”
“நான் உங்களுக்கு ஒன்னுமே இல்லையா மாமா?…” கண்களின் நீர் நிற்பேன என்றது.
“ எல்லாமா இருந்த அபி. எல்லாம் மாறி போச்சு. நான் காதலிச்சேன், உண்மையா உன் ஒருத்திய காதலிச்சேன். நிறைய கனவும் கண்டேன். யார குத்தம் சொல்ல!… ஒரு நாள்ல எல்லாம் மாறி போச்சு. என் தலையெழுத்து தலை கீழ போச்சு. அபியோட காதலனாவும், சரன்யாவோட புருசனாவும் குழம்பி, நிலை தடுமாறி, நிலை நிக்காம போனேன். அதான் எம் பிள்ளைகளுக்கு நிலையான இடம் இல்லாமா போச்சு… இனி என் பாதை வேற அபி. என் குடும்பம் அப்படின்ற இடத்துல இருக்குறது சரண்யாவும், பிள்ளைகளும் தான். உனக்கு வாழ்க்கை தொடங்கவே இல்லை. நான் எல்லாம் கடந்து நிக்குறேன். சேரவே முடியாது. எல்லாம் புரிய தான் லேட் ஆகி போச்சு. நிச்சயம் வலி தான். மறக்க, கடக்க கஷ்டம் தான். வேற வழி கிடையாது…”
“நான் உங்களுக்கு அவ்வளவு தான் இல்லையா?… திரும்பி போக உங்களுக்கு குடும்பம் இருக்கு, எனக்கு யாருமே இல்லை மாமா?…”
“வாழ்க்கை மாறும் அபி. மாறாம ஒரு இடத்தில நிக்காது. நிக்குறது வாழ்க்கையும் கிடையாது. வலியோட கடந்தா தான் வாழ்க்கை. பெத்தவங்களை, கூட பிறந்தவங்களை விட்டு காதலிக்காக நிக்கலாம். பலர் நின்னும் இருக்காங்க… பொண்டாட்டி, பிள்ளைகளை விட்டு காதலிக்காக நின்னா? அதுக்கு பேரு என்ன அபி. நாம காதலிச்சோம், கரை சேரல. அவ்வளவு தான். நினைச்சு பார்க்க ஒரு காதல் இருக்கு. அந்த காதலை அடுத்த கட்டத்துக்கு நகட்டி, கொச்சை படுத்தாத…”
“ உங்க மனசுல எனக்கான இடம்?…”
“அதுனால உனக்கு ஒரு பிரோஜனமும் இல்லை அபி. பொதச்சத தோண்டாத…”
“ நீங்க தெளிவாகீட்டீங்க, நான் ஒன்னும் இல்லாம போனேன்…”
“உனக்கு வாழ்க்கையே இனிமே தான் அபி. நிச்சயம் நீ நல்லா இருப்ப…”
“அதை நீங்க சொல்லாதீங்க…” வெடித்தாள் அபி. இயலாமை கொதிக்க செய்தது.
“என்னை ஏமாத்திடீங்க. உங்களை நான் உயிரா நினைச்சேன். எம் முகத்தில் முழிக்காதீங்க. உங்களை பார்க்கவே பிடிகலை…” கதறினாள் அபி.
ஆறுதல் சொல்லாமல் கை கட்டி கொண்டான். ஆறுதல் சொல்லி அவளுக்கு திரும்பவும் ஒரு நம்பிக்கையை தர முடியாது. அழுகட்டும், அழுத்தம் வெளியேற தெளிவு பிறக்கும் என்று நினைத்தான்.
அபியிடம் முழுதாக சொல்ல வில்லை. அன்று இரவு தன் மனைவியும், பிள்ளைகளும் இருந்த நிலை, இன்றும் உயிர் துடிக்கும். ஒரு விவரமும் தெரியாமல் அழுது கொண்டு தன் பிள்ளைகள் நின்ற நிலை, கண் கொண்டு பார்க்க முடியாதது. இவர்கள் சொல்வது போல் காசு, பணத்தில் சரி செய்ய முடியாதது.
இந்த சமூகம் சீர் கெட்டது. ஐந்து வயது பெண் குழந்தையும் சரி, அறுவது தாய்மாரும் சரி நல்ல கண்ணோட்டத்தில் பார்க்க பட மாட்டார்கள். என் காதல் வாழ்க்கைக்காக என் பிள்ளைகளின் எதிர் காலத்தை ஒரு தந்தையாக பழி கொடுக்க மாட்டேன்.
அபிக்கும், சரண்யாக்கும் ஹீரோவாக வேண்டாம். நிச்சயம் என் பிள்ளைகளுக்கு ஹீரோவாக நான் இருக்க வேண்டும். உடன் இருந்து நான் கொடுக்காத பாதுகாப்பை என் பணம் கொடுக்காது.