மணி இரவு ஏழு, வேக நடை போட்டு வீடு நோக்கி வந்து கொண்டு இருந்தாள் சரண்யா. மனம் எல்லாம் பயம் அடித்து கொண்டது. பிள்ளைகளை தனியாக வீட்டில் விட்டு வந்திருந்தாள். தற்போது அமுதா அக்காவிடம் டியூசன் அனுப்பவில்லை. வேலை பார்க்கும் கடையில் தான் இந்த மூன்று நாட்களும் இருந்தார்கள். எத்தனை நாட்கள் அப்படி கூடவே வைத்திருக்க முடியும். இரு பிள்ளைகள், அவர்கள் கூடவே திரியும் படி தான் இருந்தது. அதுவும் சின்ன குட்டி, குடோனில் இருந்த புது உடையில் தண்ணியை கொட்டி விட்டது. நல்ல வேளை தேவி அக்கா ஒன்றும் சொல்ல வில்லை. ஆனால், சரண்யாக்கு பயம் தான். அந்த வேலை வைத்து தான் அவர்கள் மூவரின் வாழ்க்கையும்… வேலையில் நேர்த்தி அவசியம்.
தேவி அக்காக்கு பிள்ளைகள் இல்லை. சரண்யா பிள்ளைகள் மீது கொள்ளை பிரியம். அஜிதா எப்போதும் அவர் மடியில் தான். சேட்டை கார சின்ன வாண்டு தான் ஏதேனும் ஒன்றை இழுத்து வைக்கும். சரண்யாக்கு சலுகை கொடுத்தாலும், அதிகப்படியாக பயன்படுத்த விரும்பாதலால் மூன்று நாட்கள் மட்டுமே பிள்ளைகளை தன்னுடன் வைத்து கொண்டவள். இன்று தான் பள்ளிக்கு அனுப்பி வைத்தாள். மாலையில் வீடு வந்தவள், பிள்ளைகள் தேவையை கவனித்து விட்டு, கொஞ்சம் பண்டங்களை அதிகம் கொடுத்து விளையாட விட்டு வந்தாள். ஓனர் பாட்டியை பார்த்து கொள்ளுமாறு கேட்டு கொண்டாள். சிடுசிடுவென இருந்தாலும் சில உதவிகள் செய்வார். பிள்ளைகள் தனியே இருக்கும் காரணத்தில் ஏழு மணிக்கே வீட்டுக்கு கிளம்பி விட்டாள். தேவி அக்காவும் நிலை புரிந்து கொஞ்சம் சலுகை கொடுத்தார்.
இனி என்ன செய்ய, மாலை வேளையில் பிள்ளைகளை யாரிடம் விட, யார் பார்த்து கொள்வார்கள். தன் தாய் வீட்டை நினைக்க கூட முடியாது. நேற்று தான் நீண்ட நாட்களுக்கு பின் சென்று வந்தாள். வெற்றி இவர்கள் வாழ்வில் வராமல் இருந்து இருந்தால் போய் நின்று இருக்க மாட்டாள்.
சுகுமார், வெற்றி வேல் இருவரையும் யோசித்தால், நிச்சயம் ஒரு பாதுகாப்பு தேவை. உறவு என்று தான் போய் வந்து கொண்டிருந்தாள், மற்றவர்களுக்கு தனியாக இருக்கிறாள் என்ற எண்ணம் தோன்றாதே. அப்பா, அண்ணன் என்று ஆண் துணை பக்கத்தில் இருக்கும் போது யாரும் நெருங்க தயங்குவார்கள் அல்லவா… அதை கணக்கில் கொண்டு தான் தாய் வீடு சென்றாள்.
தற்போது தன் மேல் வெறுப்பு காட்ட திவ்யாக்கு காரணம் இல்லையே… மகிழ்ச்சியாக தான் வரவேற்றார்கள். அண்ணன் இல்லை மற்ற அனைவரும் இருந்தார்கள். தாய் மட்டும் குறை பட்டு கொண்டார்.
“ரோசகாரி, ஒரு தடவை கூட வீம்பை விட்டு பெத்தவங்களை பார்க்க வந்தா என்னவாம். அப்படி என்ன அழுத்தம்?…”
அதே அழுத்தம் உங்களுக்கும் இருந்ததே. நாலு தெரு தள்ளி இருக்கும் வீடு, ஒரு நாள் கூட வந்து பார்க்க வில்லை. இரண்டு பெண் பிள்ளைகளை வைத்து கொண்டு, வேலைக்கும் போய் மகள் எப்படி சமாளிக்கிறாள் என்று பார்க்க நினைக்க வில்லை தானே… அவள் வீம்புக்கு, அவள் அனுபவிக்கட்டும் என்ற எண்ணம் தானே… மனதில் நினைத்தாலும் கேட்க வில்லை.
திவ்யா மகனுடன் வெளியே சென்றாள், மதிய உணவுக்கு வந்துவிடுவதாக சொல்லி சென்றாள். மதிய உணவுக்கு வருவதா… யார் சமைக்க? என்ற கேள்விக்கு தாயே பதில் சொன்னார்.
“ஆட்டு கறி வாங்கி இருக்கு, பிரியாணி வச்சு கொடு சரண். உன் கையால சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு. நீ வாரேன்னு சொல்லவும் அண்ணன் எடுத்து வந்தான்…” என்ற தாயின் பதிலில் ஒரு நொடி முகம் மலர்ந்தவள் திரும்பி பார்க்க,
“ரெண்டு பேரும் வேலைக்கு போறவங்க, நல்லது செஞ்சு சாப்பிட முடியலை. உன் கை பக்குவம் திவ்யாக்கு வரலை. எனக்கும் நிதானம் மாறி போச்சு. சரண்யா கை பக்குவம் யாருக்கும் வராதுன்னு அண்ணன் சொல்வான். நீ வாரேன்னு சொன்னேன், காலையிலே போய் கறி, மீன் எல்லாம் வாங்கி வந்துட்டான். திவ்யாவை வச்சு கிட்டே சொல்றான் ஒரு நாளாவது நல்ல சாப்பாடு வேணுமாம். ரொம்ப வருசமா உன் கையால சாப்பிட்டு பழகின உங்கப்பாக்கு வேற சாப்பாடு ருசிக்கலை…” சிரித்த முகமாக சொன்ன தாய்க்கு, மறுமொழி எதுவும் சரண்யா சொல்ல வில்லை.
மகள் முகத்தை தான் பார்த்திருந்தார் தந்தை. அவள் மனநிலை அவருக்கு புரிந்தது. தன் சின்ன மகளை விட்டு விட்டோமோ என்ற உணர்வு எழுந்து வந்தது.
“என்ன சரண் நீ அமைதியா இருக்க?…” என்ற தாயை தான் பார்த்தாள்.
அவருக்கு புரியவில்லை. மகளை தானே பாராட்டினேன். அவளுக்கு புரிந்தது, பிரிவு கூட அவர்கள் தேவையை தான் உணர்த்தியது, தன் தேவையை உணர்த்த வில்லை.
“என்னம்மா சொல்லணும். ஒரு யோசனை தான். இவ்வளவு நாள் கழிச்சு வந்தும், அடுப்படி தான் எனக்கு போல… அதை தான் யோசிச்சேன்…” என்று அடுப்படி சென்று விட்டாள்.
சுகந்தி திரும்பி கணவனை பார்க்க, “பேச தெரியலை சுகந்தி உனக்கு… இம்புட்டு நாள் கழிச்சு வார பிள்ளைக்கு நாம ஆசையா எதுவும் எடுத்து வைக்கலை…”
அந்த குறை தான் சரண்யா மனதிலும், ஏன் எங்களை பார்க்க வில்லை அல்லது யோசிக்கவே இல்லை. நான் வருகிறேன் என்று தெரிந்தும் அண்ணன் வெளியில் சென்று விட்டான். என் பிள்ளைகளை பார்த்து மூன்று மாதம் இருக்கும். பார்த்து விட்டு சென்று இருக்கலாம் தானே… நீ வருகிறாய் என்று உனக்காக தான் அண்ணன் வாங்கி வைத்தான் என்ற சொல்லை தான் எதிர்பார்த்தாள்.
மதிய சமையல் வேலையை சரண்யா தொடங்க, உடன் உதவி செய்தார் சுகந்தி. மருமகளை பற்றி ஓராயிரம் குற்ற பத்திரிக்கை… ம்ம் என்று கேட்டு கொண்டாள் சரண்யா. அவர் சொல்வது எல்லாம் முன்பே இவள் யுகித்தது தான்.
சரண்யா இருந்த வரை அவள் வேலை சமையல், வீட்டு வேலை எல்லாம் அவள் தான். சுகந்தி உடம்பு முடியாமல் போனதில் இருந்தே வீட்டு வேலையை இழுத்து கொண்டது இல்லை. எல்லாவற்றிற்கும் மகள் இருக்க, எந்த சங்கடமும் நேர வில்லை.
ஆனால், திவ்யா வேலைக்கு செல்கிறவள். சரண்யா போல சமையல் மட்டுமே என்று இருக்க முடியாதே… காலை ஒரு டிபன், மதிய ஒரு காய், குழம்பு, தேவை என்றால் தான் ரசம். இரவு ஏதேனும் ஒன்று என்று தான் நாட்களை கடத்துவாள். அதை மீறி தேவை என்றால் புருசன், குழந்தையோடு வெளியே சென்று விடுவாள். மாமனார், மாமியார் சாப்பாட்டு வழக்கம் அவள் அறியாதது. சரண்யா இருக்கும் போது கவலை என்பது இல்லை.
தற்போது உணவில் தான் நிறைய மாறுதல். எந்த குழம்பு வைத்தாலும் ரசம் வேண்டும் தந்தை சிவ குமாருக்கு. மாலை காபியோடு சுண்டல், பச்சை பயிறு, வேர்கடலை அவித்து தேங்காய் துருவல் இருக்க வேண்டும். இரவில் மிளகு பால் வேண்டும்.
காலை நேர பரபரப்பு திவ்யாக்கு. தானும் கிளம்பி, பிள்ளையையும் கிளப்பி, உணவையும் செய்ய வேண்டும் எனும் போது சிடுசிடுவென தான் சுத்துவாள். சரண்யா இருந்து சௌகரியத்துக்கு பழகியவள், நிற்காத வேலை எரிச்சலை கிளப்பியது. இதில் ஆறு மணிக்கே டிகாஷன் காபிக்கு காத்திருக்கும் மாமனாரை கவனிக்க தோது இல்லை.
சாப்பாடு செய்யும் போது மாமியார் உடன் இருக்க வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லி விட்டாள். தன் அவசரத்திற்கு சிறு சிறு உதவிகள் செய்யலாம் அல்லவா… மகனை பார்த்தால், “ வேலைக்கும் போய் சமையலும் பார்க்கிறா, கூடமாட உதவி செய்ங்கம்மா…” என்பான். ஒன்றும் பேச முடியாது.
சரண்யா இருக்கும் போது எல்லாம் தாய், தந்தையை என்ன வேண்டும் என்று ஒரு வார்த்தை கேட்காமல் சமையல் தொடங்க மாட்டாள். திவ்யா சமையல் சுமார் தான். ஏதாவது சொன்னால் நீங்க பார்த்துக்கோங்க என்று ஒதுங்கி விடுவாள். அதன் கொண்டு மருமகளிடம் வாய் திறக்க முடியாது. வேலைக்கு செல்லும் மகன் ஒரு வார்த்தை சொல்லாமல் சாப்பிட, தாங்கள் குறை சொல்ல முடியாதே…
அவரவர் துணிகளை அவரவர் தான் துவைத்து கொள்ள வேண்டும். வீட்டு வேலைக்கு மாமியார் உடன் இருந்தால், ரேசன் வாங்க, காய் வாங்க, கடைக்கு போக மாமனார். பலர் வீட்டில் இந்த மாதிரி சின்ன சின்ன வேலையை பெரியவர்கள் செய்வார்கள் தான். சரண்யா எல்லாவற்றையும் பாத்து கொள்ள, முழு ஓய்வில் இருந்தவர்களுக்கு சிரமமாகி போனது.
மகளிடம் கேட்பதற்கும், மருமகளிடம் சொல்வதற்கும் நிறைய வித்தியாசங்களை உணர்ந்தார்கள். “சரண்யா சாப்பாடு எடுத்து வை” என்பதற்கும், “திவ்யா, சாப்பாடு ஆச்சாமா, சாப்பிட வரவா” என்பதற்கும் பொருள் வேறு தானே. மகளிடம் ஒரு உரிமை,ஒரு அதட்டல் இருக்கும். மருகளிடம் தயவு மட்டுமே வரும்.
சரண்யா வெளியே போனது சுகந்திக்கு தான் பாடு அதிகம். சிவக்குமார் எப்போதும் வெள்ளை சட்டை, வேட்டி தான். மிஷினில் போட முடியாது, சரண்யா எப்போதும் கையில் துவைத்து விடுவாள். திவ்யாவிடம் சொல்ல முடியுமா, அதுவும் வேலைக்கு போகும் மருமகள்… சுகந்தி தலையில் தான் விழுந்தது. அத்தோடு கூடுதல் வேலையாக,
“அத்தை, உங்க பேரன் துணியை மட்டும் சேர்த்து துவச்சு போடுங்க. அவன் டிரஸ் எல்லாம் மண்ணு, கைல துவச்சா தான் அழுக்கு போகும்…” நயமாக கொடுத்து செல்வாள்.
முடியாது என்று எப்படி சொல்ல, அவர்கள் துணியை கொடுக்க வில்லை. பேரன் துணி தான். மறுத்தால் மகனிடம் விசயம் செல்லும், சின்ன குழந்தை உடையை துவைக்க கூட வீம்பா… மகன் பார்வையில் தரம் இறங்கி போவதை விரும்பாம்மல், எல்லாவற்றையும் இழுத்து போட்டு செய்யும் நிலை தான்.
சட்னி அரைக்க வேண்டும் என்றாலும், தேங்காய் துருவ மாமியார் வேண்டும். காய் வெட்ட, வெங்காயம் அரிக்க, அளவு சொல்ல கூட சுகந்தி வேண்டும். தாய் முடியாதவர் என்று எல்லா வேலையும் சரண்யா பார்த்து கொள்வாள். திவ்யா அப்படி அல்ல, “பெரிய வேலை செய்ய சொல்லலை தானே, சின்ன சின்ன வீட்டு வேலை செய்யட்டும்” என்று யாரும் மறுப்பு சொல்ல முடியாத வகையில் தான் அவள் வாதம் இருக்கும்.
மதிய சமையல் முடிக்க, வந்து விட்டார்கள் அண்ணன் குடும்பம். சரண்யா அண்ணன் முகத்தை தான் பார்த்தாள். ஒரு சிரிப்பில் நல விசாரித்தவன் சாப்பிட அமர்ந்து விட்டான்.
மூன்று மாதம் பின் பார்க்கும் தங்கை மக்களுக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட் கூடவா வாங்கி தர முடியாது. எல்லாவற்றையும் கண்டிக்க மாட்டாள் திவ்யா. தன் பிள்ளை தான் முதன்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பாள் தவிர, தங்கை மக்களுக்கு சிறு சிறு பொருள் வாங்கி கொடுப்பதை தடுத்தது இல்லை.
அதுசரி சரண்யா, உன்னை பெற்றவர்கள் மட்டும் என்ன வாங்கி கொடுத்தார்கள். ஆசையாக உண்டார்கள், இதில் அண்ணன் வேறு, “சரண் சண்டே மட்டுமாது வீட்டுக்கு வாயேன். உன் சாப்பாட்டை ரொம்ப மிஸ் பண்றேன். உன் கை ருசி அம்மாக்கு கூட வர மாட்டது…” என்று சிரித்தபடி சொல்ல, தந்தை தான் சங்கடமாக மகள் முகம் பார்த்தார்.
“இன்னும் என்னை பைத்தியகாரனாவே நினைக்கிறாயா…” என்று லுக்கு விட்டு பார்த்து நின்றாள் சரண்யா.
ஒரு சேர் முழுக்க தந்தையின் துவைக்காத உடைகள் குவிந்து கிடந்தது. தாய் கொஞ்சம் தயங்கி தான் கேட்டார்.
“சரண், அப்பா துணியை மட்டும் துவைச்சு குடேன். ஒரு பக்க கை ரொம்ப வலி, அம்மாக்கு முடியலை சரண்…” நயந்து தான் கேட்டார். வந்ததில் இருந்து நிற்காத வேலை தான் அவளுக்கும். பிள்ளைகளை உறங்க வைத்தவள், துவைக்க தொடங்கினாள்.
எல்லா வேலையும் முடிக்க மாலை ஐந்து மணி. திவ்யா வந்தவள் , “உருளை கிழங்கு போண்டா போடுவோமா சரண். உங்க அண்ணாக்கு, மாமாக்கு இஷ்டம். எனக்கு தான் நேரம் கிடைக்காது…” என்று அடுத்த வேலையை செய்ய முடக்கினாள்.
முன்பு என்றால் ஒரு அதட்டல் வரும், தற்போது குரல் கொஞ்சம் நைந்து வருகிறது. ஆனால், பொருள்… அது ஒன்று தான்.
“நீ இருக்க தான் சரண், நான் மதிய தூக்கம் போட்டேன். இல்லைன்னா, துணி துவைக்க, மடிக்க, ஒதுங்க வைக்க ஏதாவது வேலை இருந்துக்கே இருக்கும்…” என்ற தாயை அமைதியாக பார்த்தாள் சரண்யா.
“நான் எப்போது உறங்க, எனக்கும் ஒரு நாள் தானே வார விடுமுறை. அந்த ஒருநாளில் அக்காடா என்று காலை நீட்டி வைத்து மதிய தூக்கம் போட மனம் விரும்பாத என்ன!…” வெளியில் எதுவும் சொல்லி கொள்ள வில்லை. ஆறு மணிக்கு தன் வீட்டுக்கு கிளம்ப, பிள்ளைகளை தயார் செய்தாள்.
“சரண், இப்போ நீ வீட்டுக்கு நடந்து போய், பிள்ளைகளை பார்த்து, நைட் சாப்பாட்டு வேலையையும் பார்க்கணும். அதுக்கு ஒரேதா சாப்பிட்டு போங்க. மாவு இருக்கு இட்லி ஊத்துவோம், கொஞ்சம் சப்பாத்தி போட்டுகலாம்…” என்று திவ்யா ஆரம்பிக்க, சுகந்தி பிடித்து கொண்டார்.
எல்லா வேலையும் முடித்து கொண்டு கிளம்பும் போது மணி எட்டு, தூக்கத்திற்கு சிணுங்கும் சின்ன குட்டியை தோலில் போட்டு கொண்டு இறங்க, தனியாக செல்லாதே துணைக்கு வாரேன் என்றோ, வீட்டில் விடவா என்றோ யாரும் கேட்க வில்லை.
திவ்யா ஒரு கவரில் சில உணவு பண்டங்களை போட்டு கொண்டு வந்து கொடுத்தாள். வாங்க தான் மனதில்லை சரண்யாக்கு. இது எதற்கு, செய்த வேலைக்கு கூலியா இல்லை அடுத்த வாரமும் வர சொல்லும் சலுகையா. அப்படியா நாங்கள் காய்ந்து போய் கிடக்கோம். தற்போது வசதி தான் இல்லை, வறுமை போய் விட்டது.
“ வாரம், வாரம் வந்து விடேன் சரண்யா. நீ வந்த தான் வீடு கலகலன்னு இருக்கு…” என்ற அண்ணிக்கு ஒரு மாதிரி சிரித்து வைத்தாள்.
பிள்ளைகள் கையில் ஆயிரம் ரூபாய் கொடுக்க போன தந்தையை தடுத்து விட்டாள் சரண்யா.
“காசு கொடுத்து பழகாதீங்க அப்பா… வெளி ஆட்கள் கிட்டையும் எதிர்பார்ப்பாங்க. அது நல்ல பழக்கம் இல்லை…” சங்கடமாக மகளை பார்த்தார் தந்தை. கண் கலங்கும் போல இருந்தது.
அவள் சொல்வதின் அர்த்தம் புரிந்தது. மதியம் விளையாடும் போது வீட்டில் இருந்த பெரிய ரிமோட் காரை பிள்ளைகள் பார்த்தார்கள். திவ்யா சொல்லி விட்டாள்,
மாமா தான் வாங்கி கொடுத்தார் சரண். ஒத்த பேரன் இல்லையா, கேட்டதும் வாங்கி கொடுத்துட்டார். பென்சன் வருதுல, விலை பதினைந்து ஆயிரம்…” என்று பெருமையாக சொன்னாள். அதை ஈடு கட்ட, தன் பிள்ளைகள் கையில் ஆயிரம் ரூபாய்.
வாயில் வார்த்தை எக்கு தப்பா வந்தது, அடக்கி கொண்டாள். ஆரம்பத்தில் இருந்தே சரண்யா கோபம் கொள்வதும் அதற்கு தான். என் பிள்ளைகள் தகுதியை நீங்கள் எப்படி தீர்மானிக்கலாம். இவர்களுக்கு இதுவே போதும், இதுவே பெரிது என்று… எங்களுக்கு பெரிய, அவசியமான தொகையாக இருந்தாலும் தேவை இல்லையே.
மனம் வலித்தது. தன் நிலையை மீண்டும், மீண்டும் சொல்லி காட்டுகிறார்கள் என்று…
“அடுத்த மாசம் பென்சன் வரட்டும் சரண். பிள்ளைகளுக்கு பிடிச்சதை வாங்கி கொண்டு வாரேன்…” என்றார் சிவகுமார்.
“வேண்டாம்ப்பா… உங்க தேவைக்கு வைங்க, என் பிள்ளைகள் தேவைக்கு நான் இருக்கேன். அடுத்த மாசம் அக்கா மகன் பிர்த்ட் டே வருது. அவங்களுக்கு செய்யணும். எங்களுக்கு செய்யணும்ன்னு அவசியம் இல்லை. ஏன் செய்யலைன்னு நான் கேட்கவும் மாட்டேன்… காஸ்ட்லி பொருள் வைக்கிற அளவுக்கு என் வீடு பெருசும் இல்லை…” என்று சொன்னதோடு, நடந்து விட்டாள்.
அதிர்ந்து போய் கணவரை பார்த்தார் சுகந்தி. “என்னங்க, இந்த சரண் என்னவோ பேசிட்டு போறா… இவளுக்கு எப்பவும் இப்படித்தான். என்னை பார்க்கலை, என் பிள்ளைகளை பார்க்கலன்னு குறை தான் சொல்லுவா… சொந்த அண்ணன் பையன் தானே, அவளுக்கும் செய்வோம் தான, புரிஞ்சுக்கவே மாட்ட. நல்லா வீம்பு…”
மனைவியை பார்த்த சிவ குமார், “ காலையில இருந்து எல்லா வேலையும் சரண் தான் பார்த்துச்சு. மருமகளுக்கு கூட ஒத்தாசை செய்யிற, மகளுக்கு ஏன் செய்யலை?”
“அவளுக்கு எல்லாம் தெரியும்ன்னு தான்…” என்று இழுக்க.
“ பார்த்தியா உனக்கு தோணவே இல்லை, எனக்கும் தான். எப்பவும் செய்யிற வேலை தான்னு ஒரு எண்ணம். இதுவே பிரியா வந்தப்பா, இப்படியா வேலை சொன்ன…”
“அவ அங்க தனியா எல்லா வேலையும் செய்யணும். அம்மா வீட்டுக்கு வாறதே ஓஞ்சு உட்கார தானே…” என்று சொல்லி கொண்டு வந்தவர் கப்பென்று வாய் மூடி கொண்டார்.
“உனக்கு இப்பாத்தான் புரியுது. எனக்கு என்னைக்கோ புரிஞ்சு போச்சு. நம்ம அறியாமவே, நம்ம பிள்ளைகள் கிட்ட வேறுபாடு காட்டி இருக்கோம். பிரியா, சுரேந்தர் கஷ்டத்தை புரிஞ்சுகிட்ட நம்ம, சரண்யா கஷ்டத்தை பிரிஞ்சுக்கலை தானா… நம்ம கூடவே இருந்ததால நமக்கு தெரியலை போல… சரண்யாவும் வேலைக்கு போற பொண்ணு தானே, தனியா வேலை, வீடு, பிள்ளைகன்னு எவ்வளவு அலைச்சல், கொஞ்சமும் யோசிக்காம இங்க வந்ததும் வேலை ஏவுற… இனி சரண்யா இங்க வரும்ன்னு தோணலை… மகள் மாதிரி யாரும் வர முடியாது. நமக்கு ஒண்ணுன்ன ஓடி வர இடத்துல இருக்குறது சரண்யா தான். அதை கெடுத்துக்காத…”
“ சின்ன மக சொன்னது சரி தான் சுகந்தி. பேரனுக்கு வாங்குன்ன நாம, பேத்திய யோசிக்கலை பாரு… பிரியா வரும் போது எல்லாம் எவ்வளவு செய்றோம். சரண்க்கு நாம என்ன செஞ்சோம். யோசிக்க, யோசிக்க நெஞ்சு வலிக்குது. நான் பெத்த பிள்ளைக்கு எவ்வளவு அநியாயம் செஞ்சுட்டேன். இவன் வேணாம், காலத்துக்கும் அப்பா உன்னை வச்சு பாக்குறேன்னு சொல்லி கூட்டிட்டு வந்துட்டு, நாட்டாத்துல விட்டுட்டோம்…”
சுகந்தி அதிர்ந்து போய் தான் நின்று இருந்தார். இவ்வளவும் யோசிக்கவே இல்லை. திகைத்து கணவனை பார்க்க,
“எம் பிள்ளைக்கு என்ன வயசு. தனியா உலகத்தை பார்க்குது. அந்த ஒத்த வீட்டில ரெண்டு பிள்ளைகளை வச்சுகிட்டு உறங்கும் போது மனசு எம்புட்டு வேதனை படும். ஆசை, எதிர்பார்ப்பை அடக்கி வைக்கிற வயசா அதுக்கு… பிரியா வீட்டுக்கு உன்னை அனுப்ப எனக்கு மனசு இல்லை. நீ இல்லாம எனக்கு ஒத்த வேலையும் ஓடாது. ஆனா, சரண்… எல்லாத்தையும் தனி ஆளாக சமாளிக்க எம்புட்டு போராடும். நியாயமா நாம என்ன செய்யனும், கஷ்டப்படுற பிள்ளைக்கு துணை நிக்கானும். ஆனா, நாம பெருமைக்கு மத்த பசங்க பிள்ளைகளை பாக்குறோம். சரண்யா கிட்ட எதையும் எதிர்பார்க்கிற தகுதி இருக்கா நமக்கு, யோசிச்சு பாரு…” என்றவர். தளர்ந்த நடையுடன் உள்ளே சென்றார்.
பிள்ளைகளை கூட்டி கொண்டு வீடு வரும் போதே, அமுதா அக்கா வீடு வந்ததை கண்டு கொண்டாள். இனி தயக்கமில்லை, தனியே அழைத்து நடந்ததை சொல்ல,
“ புருசன் இல்லாம, ரெண்டு பிள்ளைகளை வச்சு தனியா இருக்கன்னு கூடமாட உதவி செஞ்சா, என் வீட்டுகாரரையே தப்பு சொல்லுவியா… அன்னைக்கு ராத்திரி உன் வீட்டுக்கு வேற ஒருத்தன் வந்தானாம். அதை பார்க்க போய் கீழ விழுந்து அந்த மனுசனுக்கு கால் உடைஞ்சு போச்சு… அக்கம்பக்கம் உண்மையா இருந்ததுக்கு நல்ல பேரு தான். உனக்கு புருசன் இல்லன்னா, வேற யாரும் புருசன் கூட வாழ கூடாதா. நல்ல எண்ணம் தான் உனக்கு. இனி உம் பிள்ளைகள் என் வீடு வரக்கூடாது…” படபடவென்று கொட்டி விட்டு சென்றாள் அமுதா.
திகைத்து போய் பார்த்த சரண்யா, பின் புரிந்து கொண்டாள். ஏனெனில் அடுத்த இரண்டு நாளும் அமுதா வீட்டில் சண்டை தான். கண்டு கொள்ளாமல் இருக்க பழகி கொண்டாள்.
அந்த தெருவில் வசிக்கும் எல்லோரும் நடுத்தர வர்க்க மக்கள் தான். வாடகை வீடு, தண்ணி பிரச்சனை இல்லை. நிறைய சௌகாரியம் இருந்தது. குறைந்த வாடகையில் மதுரையில் வீடு கிடைப்பது அரிது. அத்தோடு அமுதா, இந்த ஊர் பக்கம் கிடையாது. பிழைக்க வந்தவர்கள். ஆனால், சரண்யா இந்த ஊர் தான். அக்கம் பக்கம் எல்லாம் இவர்கள் ஆட்கள் தான்.
சுகுமார் மீது தான் தவறு என்று தெரிந்தால் சும்மா விட மாட்டார்கள். வீட்டை காலி செய்யணும், பேர் கெடும், இப்படி ஒரு பேர் வாங்கிய பின் வீடு கிடைப்பது எளிது அல்ல… பிள்ளைகள் படிப்பு இருக்கு, பலதும் யோசித்து, தவறு தன் கணவர் பக்கம் தான் என்று தெரிந்தாலும், சரண்யாவை குற்றவாளியாக்கி விட்டார். வேற வழி, அங்கு குடியிருந்தாக வேண்டுமே…
ராக்காம்மாவை யாரோ வச்சுருக்கானாம்… பேர் நொடியில் வந்து விட்டது.
வீட்டு ஓனர் பாட்டியிடம் பதில் சொல்ல வேண்டும். இல்லையென்றால் வீட்டை காலி செய்வது இவளாகி போவாள். சரண்யாக்கு தயக்கம் எல்லாம் இல்லை. வந்தது அஜி அப்பா தான் என்று சொல்லவும் செய்வாள் தான்.
விவாகரத்தான தம்பதிகளாக இருந்தாலும், பிள்ளைகள் பொது தானே… பார்க்க தடை சொல்ல முடியாது. பிள்ளைகளை பார்க்க தான் வந்தார் என்று முடித்து விடலாம். யாரும் ஒன்றும் சொல்ல முடியாது.
ஆனால், அதற்குள் சரண்யா பேசு பொருள் ஆனாள். இது தான் அவளை எரிச்சல் படுத்தும் பேச்சு. கணவன் உடன் இல்லை, இள வயது வேறு. தவறாக தான் போய் இருப்பாள் என்று எளிதாக எண்ணுகிறார்கள். இவளை பார்த்ததும் கமுக்கமாக தங்களுக்குள் பேசுபவர்களை கண்டு அவ்வளவு எரிச்சல் வரும்.
“எங்கள் ஆசை எல்லாம் கட்டவிழ்ந்த காளைமாடா, கணவன் இல்லை என்றதும் கண்ட இடத்துக்கும் போய் விடுவோமா… எங்களுக்கு எல்லாம் ஆசைகளை அடக்கி ஒழுங்காக வாழ தெரியாதா!… புருசன் உடன் இருக்கும் பெண்கள் யாரும் தப்பே செய்யாதவற்களா?… நாங்கள் தான் முழு தப்பையும் குத்தகைக்கு எடுத்து இருக்கோமா… எங்களிடம் ஏதற்கு கண்ணகி, மாதவி, நளாயினியை தேடுகிறீர்கள். உங்கள் வீட்டு பெண்களை பாருங்கள். இந்த மாதிரி கூட்டத்தால் தான் சரியில்லாத புருசனை கூட எதிர்க்க முடியாமல் அடங்கி போய் விடுகிறார்கள். இந்த நரி கூட்டத்திற்கு, கணவன் என்ற ஒரு கயவனை அனுசரித்து சென்று விடலாம் அல்லவா…” வார்த்தையால் விளாச தோன்றும், தலை குனிந்து சென்று விடுவாள்.
சரண்யாக்கு மட்டும் ஆசையா என்ன?… தலை நிறைய பூ வைக்க கூட யோசனை செய்யும் படி தான் நிலைமை. குடும்பம் துணை நிற்கும் என்று தான் நினைத்தேன். இப்படி நட்டாத்தில் நிற்போம் என்று தெரிந்தால், வாயை மூடி அவன் கூடவே இருந்து இருப்பேன்.
பெரிதாக ஒன்றும் இல்லை. கண் இருந்தும் குருடாக, காது இருந்தும் செவிடாக, வாய் இருந்தும் ஊமையாக இருந்தால் போதும் எப்படிபட்ட கணவன் கூடவும் குடும்பம் நடத்தி விடலாம்.
பெண் மனதில் ஆயிரம் யோசனை ஓடினாலும், தனியாக இருக்கும் பிள்ளைகளை நினைத்து ஓடி வந்தாள். கையில் மாவு பாக்கெட் இருந்தது. கால் மணி நேரத்தில் உணவு வேலை முடிந்து விடும். யாரையும் பார்க்காமல் வீடு வந்தவள், மாடி படியில் கால் வைக்கும் போது,
“சரண்யா …” ஓனர் பாட்டியின் சத்தம்
“கிழிஞ்சது போ…”
“ஏண்டி, அன்னைக்கு ராத்திரி மேல் வீட்டுக்கு ஒருத்தன் வந்தனாம். ஒரு வார்த்தை சொல்லலை நீ… நாங்க என்னன்னு கேட்க மாட்டோமா… பெரியவங்க எங்களை தான் வச்சு பேசணும்…” என்க.
புரியாமல் சரண்யா பார்த்தாள்.
“ஊர்ல பேச்சு வேற மாதிரி போச்சு தெரியுமா. அப்புறம் நான் தான் சொன்னேன். அது யாரோ ஒருத்தன் இல்லை. அவன் சரண்யாவோட புருசன் தான்னு. பொண்டாட்டிய விட்டுட்டு போனவன், பிள்ளைகளை பார்க்க வந்திருக்கான். வெளிநாட்டுல இருந்தானாம், இப்பத்தான் ஊருக்கு வர, பிள்ளைகளை பார்க்க ஓடி வந்துட்டான். நான் தான் புரிய வச்சேன்…”
ஓ என்றாள் சரண்யா. யாரை விட்டுட்டு போனான் பொண்டாட்டியை, யாருக்காக வந்தான் பிள்ளைகளுக்காக. பேச்சு சாமர்த்தியம் தான். எப்படியோ ராக்கம்மா, யாரோ ஒருத்தனை வைக்கல, அந்த ஒருத்தன் அவள் புருசன் . சரிதான் என்று நினைத்தவள்.
“உங்களுக்கு?…” என்று ஆரம்பிக்க.
“ உம் புருசன் தான் பேசுனாப்ள… மேல தான் இருக்கான். செத்த முன்ன தான் வந்தான். நல்ல பையன், வாட்ட சாட்டமா அஜித் குமார் மாதிரி இருக்கான். பிள்ளைகளுக்காக வந்தான், கெட்டியா புடிச்சுக்கிட்டு ஊர் போற வழிய பாரு. உன் அக்கா, அண்ணன் எல்லாம் நல்ல பொழப்பு பொழைக்க , நீ ஏன் பாடு படனும். புருசன் கிட்ட ரோசம் பார்த்தா பொம்பளை யாரும் காலம் தள்ள முடியாது பார்த்துக்க. வந்தது உன் புருசனா இருக்கவும் சரியா போச்சு, இல்லைன்னா… எனக்கு கூட கோடாரி தைலம் கொண்டு வந்தான். எம் பேத்திக்கு சாக்லெட் குடுத்தான். நல்ல பையனா தான் தெரியுறான்….” என்ற பாட்டிக்கு தலையாட்டி படி ஏறினாள்.