மெல்ல படி ஏறி மேலே செல்ல, பிள்ளைகள் சத்தம் மட்டுமே கேட்டது. ஒரு யோசனையோடு தான் உள்ளே சென்றாள். அங்கு பிள்ளைகள் தாயை கண்டதும் ஓடி வந்தார்கள். அவள் ஒரு கையில் மாவு இருக்க, மற்றொரு கையில் டீ கேக் இருந்தது. தாயிடம் இருந்து வேகமாக வாங்கியவர்கள், ஒரு இடத்தில் அமர்ந்து பிரித்து உண்ண தொடங்கினார்கள். பசி போல, மனம் கலங்கியது தாய்க்கு. இவர்கள் இப்படி எத்தனை நாள் பசியில் தனியே விட முடியும். ஒரு யோசனையும் வர மாட்டாது.
இந்த தெருவில் வேற டியூசன் இல்லை. பக்கத்து தெரு என்றாலும் இவர்கள் வயதுக்கு எடுக்க மாட்டார்கள். தனியே ஆள் வைத்து கவனித்து கொள்ளும் அளவுக்கு வசதி இல்லை. இவள் வீட்டில் இருந்து பிள்ளைகளை பார்க்க வறுமையும் விடாது. சோர்ந்து போய் திரும்பி பார்க்க, அங்கு ஒரு மூலையில் அமர்ந்து இருந்தான் வெற்றி வேல்.
அவனை பார்த்ததும் ஒரு பெருமூச்சு வந்தது. கையில் இருந்த மாவை உள்ளே வைக்க போக, காலில் பல தட்டு பட்டது. குனிந்து பார்க்க, நிறைய பொருட்கள். எல்லா வகை சாக்லெட், இனிப்பு, கேக், பிஸ்கெட், பழம் வகை, கார வகை அத்தோடு விளையாட்டு பொருட்கள். பெண் பிள்ளைகள் விளையாடும் அனைத்தும் இருந்தது. அதற்கு அடுத்து உடைகள் சிதறி கிடந்தன. எப்படியும் இருபது உடைகளுக்கு மேல் இருக்கும். அன்று பிள்ளைகள் உடையை பார்த்ததில் கவனம் வைத்து ஒரே மாதிரி வேற கலரில் எடுத்து வந்துள்ளான் போல…
என்ன இதெல்லாம் என்பது போல் பார்க்க, பாவமாக இருந்தான் வெற்றி வேல். அவனை கடந்து உள்ளே அடுப்படி சென்றவள், வாங்கி வந்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைக்க, அதிர்ந்து பார்த்தான் வெற்றி.
‘ஏன் வந்தாய்? என்ன வேண்டும்? வெளிய போ, என் முகத்தில் முழிக்காததே…” என்று பலதும் எதிர் பார்த்து தான் வந்தான். ஆனால், சரண்யா அவனை ஒரு பொருட்டாக கூட எண்ண வில்லை. வீட்டில் இருக்கும் நாற்காலி போல், நாற்காலி மீது அமர்ந்து இருப்பவனையும் நினைத்தாள் போல…
பிள்ளைகள் தங்கள் செயலில் மூழ்கி இருக்க, வேகமாக அடுப்படி சென்று ஒரு பாத்திரத்தில் மாவை ஊற்றி வைக்க, பூனை நடை போட்டு அருகில் வந்தான் வெற்றி வேல். அவள் உடலில் ஒரு இறுக்கம், கண்களில் எச்சரிக்கை உணர்வு வர, ஜாக்கிரதையாக அவனை திரும்பி பார்த்தாள்.
வெற்றி சங்கட பட்டு போனான். வெளி ஆட்களிடம் தான் கவனம் வேண்டும், வீட்டு மனிதர்களிடம் என்ன எச்சரிக்கை, பயம். இதை சொல்ல முடியாது, தன் செயலும் அப்படி தான். நான் வெளி ஆளா என்று கேட்டால், ஆமாம் என்று தயங்காமல் சொல்லுவாள். அவள் முகத்தில் உஷ்ணம் ஏறியது, தான் நெருங்கி நின்றதில் தான் என்று புரிந்து தள்ளி நின்று கொண்டான். தன் வாசம் அருகில் செல்வதை கூட அவள் விரும்ப வில்லை, புரிந்தது. ஆனாலும், தள்ளியே நிற்க முடியாது. வாழ்க்கையை சரி செய்தே ஆகவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உண்டு. தற்போது விவரம் அறியா பிள்ளைகள், விவரம் அறியும் போது குடும்பமாக தான் நிற்க வேண்டும். அப்பா, அம்மா என்ற கூட்டுக்குள் தான் பிள்ளைகள் வளர வேண்டும். அதற்கான கடமை, பொறுப்பு இருவருக்குமே உண்டு.
அவள் கையை கட்டி கொண்டு அழுத்தமாக திரும்பி அவனை பார்க்க, சங்கடமாக தன் கையை அவள் முன் நீட்டினான். கையில் இரத்த காயம், நன்றாக வீங்கி சிவந்து போய் இருந்தது. பதற்றமெல்லாம் எதுவுமில்லை கேள்வியாக தான் பார்த்தாள். உன்னோடு எனக்கு என்ன பேச்சு…
“அது, விஜி குட்டி தான் கடிச்சு வச்சிருச்சு…” என்றான் தயங்கி.
அதிர்ந்தவள் , புருவத்தை நெறித்து ஏன் என்று பார்த்தாள். சேட்டை கார பெண் தானே தவிர இதுவரை யாரையும் கடித்தாள் என்று ஒரு புகாரும் வந்ததில்லை. பள்ளி செல்லும் குழந்தை, பள்ளியில் கூட யாரிடமும் அவ்வாறு நடந்து கொண்டது இல்லையே…
“அது, நான் தூக்குனேன்… அதான் பயந்து அலறி”
சரண்யா பார்வை கூர்மை பெற்றது. அதற்காகவே இரத்தம் வரும் அளவு கடிக்க போகிறாள்.
அவளின் சந்தேக பார்வையில் முழுதாக உடைந்தவன் கண்களும் கலங்கியது. “நான் அவங்க அப்பா…” என்று பல்லை கடித்தவன்.
“ஸ்கூல் யூனிஃபார்ம் தான் போட்டு இருந்தாங்க. எல்லாம் மண்ணு, அதான் உடம்பு கழுவி வேற உடுப்பு போட ட்ரெஸ மாத்த போனேன்…” என்றான் சோர்ந்து, அதற்கு பிள்ளைகள் பண்ணிய ஆர்ப்பாட்டம் கணக்கில் கொள்ளாது. அவனின் இடத்தை அவனுக்கு புரிய வைத்து விட்டார்கள்.
தலையில் அடித்து கொண்டாள் சரண்யா. மாலை கடைக்கு செல்லும் அவசரத்தில் உணவு பொருட்களை வாங்கி கொடுத்தவள் உடை மாற்றி விட மறந்து விட்டாள். அத்தோடு தினமும் பிள்ளைகளுக்கு அவள் சொல்லி கொடுப்பது தான், நாடு இருக்கும் சூழலில் குட் டச், பேட் டச் என்று பிள்ளைகளுக்கு புரியும் படி தினமும் விளக்கி விடுவாள். தானும் வேலைக்கு செல்கிறோம், பிள்ளைகளை பார்த்து கொள்ள உடன் யாரும் இல்லை எனும் போது வயதுக்கு மீறிய பக்குவத்தை புகுத்த முயன்றாள். வேற வழியும் இல்லையே, ஏதேனும் நடந்த பின் கதறி அழுதாலும் பயன் என்ன?…
அதை யோசித்து தான் பிள்ளைகளுக்கு காரண காரியத்தோடு விளக்க முடியாது புரிய வைக்க முயன்றாள். அதன் படி, “ அம்மா, ஆயம்மா, பாட்டி தவிர வெற யாராவது உங்க ட்ரெஸ கலட்டா வந்தா, கையை நல்லா கடிச்சு வச்சு, சத்தமாக அழுகணும். இல்லைன்னா, அந்த பூச்சாண்டி உங்களை தூக்கிட்டு போயிடுவாங்க…” என்று பிள்ளைகள் மனப்பாடம் செய்யும் அளவு சொல்லி வைத்திருந்தாள்.
அவர்களுக்கு எந்தளவு புரிந்தது என்பது அவளுக்கு டவுட் தான். தற்போது தெரிந்து விட்டது. எந்தளவு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று… நேற்று உறவு கொண்டாடி வந்து, இன்று உரிமை எடுத்தால், சின்ன பிள்ளைகளுக்கு எவ்வாறு தெரியும். இவன் தான் உங்கள் தந்தை என்று சரண்யா சொல்லவே இல்லையே. அவனும் தான் சொல்லவில்லை, சொன்னாலும் அவர்களுக்கு என்ன புரியும் என்று தெரியாது… தங்கள் கூடவே இல்லாமல் என்றோ ஒரு நாள் வருபவன் எவ்வாறு அப்பா என்று ஆவான். குடும்பமாக நில்லாமல் குழந்தைகளுக்கு புரியாது தான்…
“அவங்களுக்கு நீங்க தான் அப்பான்னு தெரியாது…” நிதானமாக மனைவி சொல்ல.
என்ன மறைத்தும் ஒரு துளி கண்ணீர் வந்து விட்டது. என் பிள்ளைகள் என்று மார்தட்டிக் கொண்டேனே, உறவு இருந்தும், உரிமை இருந்தும் நெருங்க முடியாது. நான் தான் உங்கள் அப்பா என்றால் ஓடி வந்து கட்டி கொள்வார்களா!… மாட்டார்கள். அவர்களுக்கு அப்பா என்ற ஒருவன் இருக்கிறான் என்று தெரியும். அதன் முக்கியத்துவம் உணர வில்லை. தந்தை என்ற ஒருவனின் தேவையை அறியும் போது தந்தையாக அவர்கள் உடன் நான் இருக்க வேண்டும், இருப்பேன்.
நல்ல வளர்ப்பு சரண்யவோடது… அவ்வளவு பண்டங்கள் அவன் வாங்கி வந்து தாவு கிடக்க, தொடக்கூட இல்லை. அவன் ஆசையாக தூக்கி கொடுத்தும் கை நீட்டி வாங்க வில்லை. நிச்சயம் பசி தான், தாய் கையில் இருக்கும் ஒரு துண்டு கேக்கை அவசரமாக உண்ணுபவர்கள், தான் அள்ளி கொடுத்தும் முகரவில்லை.
குழந்தைகள் வளர்ப்பில் சாதரணமாக சொல்வது தான். அடுத்தவர்கள் யார் எது கொடுத்தாலும் வாங்க கூடாது என்று… சாத்வீக் பொருட்களை எடுக்கிறார்கள் என்று திவ்யா கடுமையாக சாடிய பின், சுள்ளென்று போட்டு சரண்யா பழகிய பழக்கம். இங்கு அடுத்தவர் என்று சொல்லி ஒதுக்குவது அவர்களின் தந்தை என்பது தான் விந்தை போல…
தளர்ந்து போய் நடந்து சென்றவன், பழைய இடத்திற்கே போய் அடைந்து கொண்டான்.
“நீங்க போய் டிடி போடுங்க. நல்ல காயம்…” என்ற சரண்யா தன் வேலையை பார்க்க போய் விட்டாள்.
எண்ணி அளந்து தான் வார்த்தை வரும். முகத்தில், பாவனையில் மரியாதை துளி இருக்காது. அவள் அழுத்தி சொன்னால் செய்ய தான் வேண்டும். வீட்டை விட்டு கீழ இறங்க, அவனை கண்டு கொள்வார் யாரும் இல்லை. அம்மா, பிள்ளைகள் எல்லாம் அவர்கள் வேலையில்…
அடுத்த கால் மணி நேரத்தில் திரும்பி வந்து, பழைய இடத்திலேயே அடைந்து கொண்டவனை, அதிர்ந்து பார்த்தாள் சரண்யா. “இவன் போகவே மாட்டானா… ஒரு கப் மாவு, ஒரு டம்ளர் பால் என்று சிக்கன வாழ்க்கை எங்களது, அதற்கும் பங்குக்கு வந்து நிற்கிறானே… தங்களையே உத்து பார்க்கும் ஒருவனை விட்டும் உண்ண முடியாது..”
அவசரமாக கறிவேப்பில்லை சட்னி அரைத்து, தோசை ஊற்றி சாப்பிட அமர, வந்து விட்டான். இனி என்ன செய்ய, அவனுக்கும் ஒரு தட்டு வைத்து தோசை கொடுத்தாள். கூச்சமெல்லாம் இல்லை, சாப்பிட அமர்ந்து விட்டான். சரண்யா கை ருசி தனி தான், இன்று ஏனோ உப்பு, காரம் எதுவுமில்லாமல் மழுப்பலாக இருந்தது. அவன் முகத்தை தான் பார்த்தாள் சரண்யா.
அவனுக்கு கொடுத்த உணவை பயபக்தியாக உண்டு கொண்டு இருந்தான். தன்னை பார்த்து கொண்டாள் சரண்யா. வேலைக்கு சென்று ஓடி வந்த அலுப்பு முகத்தில் தெரிய, அடுப்படி வேலை பார்த்ததில் உடல் சலசலவென வேர்த்து இருந்தது.
பொதுவாகவே சரண்யா உடல் அப்படித்தான். பத்து நிமிசம் காத்து வரவில்லை என்றால் சலசலவென வேர்த்து போவாள். திருமணம் முடித்த புதிதில் அடுப்படியில் நின்று தோசை ஊத்தி கொண்டிருந்தாள். கொஞ்சமல்ல மாமனார், மாமியார், கொழுந்தன், நாத்துனார், கணவன் என்று குடும்பத்திற்க்கே தோசை ஊத்தனும். நாலு தோசையில் போதும் என்று சொல்லும் ஆள் வீட்டில் யாரும் இல்லை. ஒரு மணி நேரம் ஆனது, தனக்கு என்று மூன்று தோசை வைத்து கணவன் அருகில் வந்து அமர்ந்தாள். கதை பேசும் ஆர்வம் தான், புது மண தம்பதிகள் அல்லவா… ஆனால், அவள் வேர்த்து இருந்த உடலை அருவருப்புடன் பார்த்து ஒதுங்கி சென்றான் கணவன்.
இன்றும் அதே வேலை தான். வந்தவள் இன்னும், குளிக்க கூட இல்லை. வீட்டு வேலை எல்லாம் முடித்து, துணியும் துவைத்து தான் குளிப்பாள். அப்போது தான் வேலை செய்த உடல் அசந்து தூங்கும். அன்று முகம் சுளித்து ஒதுங்கியவன், இன்று எந்த வேறுபாடும் இல்லாமல் சாப்பிடுகிறான். அவள் கொண்டு வந்து கொடுத்த நீரை கூட குடிக்க யோசித்தான், இன்று மடங்கி போகிறான். ஆராய்ச்சியாக பார்த்தாள். பின் கண்டு கொள்ள வில்லை.
தன் உணவை முடித்து கொண்டு, பாத்திரம் ஒதுங்க வைத்து, துணி துவைக்க வெளி சென்று விட்டாள். அதுவரை மனைவியை தான் பார்த்து நின்றான், காலையிலிருந்து இரவு வரை நின்று கொண்டே இருக்க வேண்டும். அதன் பின் ஓட்டமாக வீடு வந்தால், இங்கும் வேலை தான் காத்து நிக்கும். கொஞ்சமும் சோர்ந்து போகாமல், முகம் சுளிக்காமல் வேலை செய்யும் மனைவியை தான் வியந்து பார்த்தான்.
இரவு பத்தரை, வேலை எல்லாம் முடித்து உள்ளே வந்தாள் சரண்யா. அப்போதும் நிலை மாறாமல் தான் அமர்ந்து பிள்ளைகளை பார்த்து இருந்தான். விஜியாவது அவனை கடித்து வைத்தாள், அஜி சின்னது தொட்டு பழக்கம், மூச்சு விடாமல் அழுவாள். ஆசையாக வெற்றி தூக்க கால் மணி நேரமும் சத்தமில்லாமல், திறந்த வாய் மூட வில்லை. பயந்து போய் வாயில் ஊதி விட்டவன் தான் பின் அஜி பக்கம் கூட போக வில்லை.
பிள்ளைகள் தூக்கத்திற்கு சிணுங்க, பாயை எடுத்தவள் படுக்கை விரிக்காமல் அவன் முகம் பார்த்து நின்றாள். வெற்றிக்கு புரிந்தது, நாசுக்காக வெளியேற சொல்கிறாள். இது என்ன அமைதியா, அடமா, அழுத்தமாக நிற்பது. பிள்ளைகளை பார்த்தவன், அவர்கள் அழுகை அதிகமாகவும் வெளியேறினான். வெற்றி திரும்பி பார்க்க, பாய் விரித்து தாய், மக்கள் படுக்க தயார் ஆனார்கள். அவனுக்கு இடமில்லை என்று சொல்லாமல் சொல்கிறாள். ஆனால், சட்டையை பிடித்து சண்டை போடவும் இல்லை, அவள் வீட்டில் சொல்லி பிரச்சனை பண்ணவும் இல்லை.
வீட்டை விட்டு வந்தவன், வெளியே நின்று இருந்த அவன் காரில் படுத்து கொண்டான். பிள்ளைகளை உறங்க வைத்து, தானும் படுத்த சரண்யாவிற்கு தூக்கம் எட்ட வில்லை. வெற்றி தன்னை தொடரும் பாதை கண்டு கொண்டாள். அதை எவ்வாறு அணுக என்று தான் தெரியவில்லை.
தற்போதைய அவள் நிலை பெரும் கவலைக்கிடம். பொட்டை கோழி கூவி பொழுது விடியாத… சரிதான் போல. தன்னால் முடியவில்லை என்ற ஆதங்கம் மனதில் நிறைந்து நின்றது. நீ, எனக்கோ, என் பிள்ளைகளுக்கோ தேவையில்லை என்ற முடிவை நான்கு வருடம் முன் துணிந்து எடுத்து விட்டாள். ஆனால், தான் ஒன்றுமே இல்லை என்று அவன் காட்டி விட்டான்.
தன்னை வேண்டாம் என்ற ஒருவனை தூக்கி எறிய முடியாமல், பல்லை கடித்து சகிக்கும் நிலை அவளது… இந்த வீடு, இந்த வேலை, பிள்ளைகளுக்கு பள்ளி, இந்த பாதுகாப்பான சூழல் என்று தங்கள் கூட்டை அவள் அவ்வளவு எளிதாக உருவாக்க வில்லை. சின்னதாக தங்கள் வாழ்க்கை அமைப்பு இருந்தாலும், அதை கொண்டு வர அவள் பட்ட பாடு கடவுளுக்கு தான் தெரியும். குடும்ப தலைவன் என்ற பெயர் மட்டும் தான் வெற்றிக்கு. அந்த பெயரை கொண்டு இவன் இடத்தை நிலை நிறுத்தி கொண்டது, தான் ஒன்னுமே இல்லை என்ற உணர்வு தான் அவளுக்கு… கடவுள் தனக்கு நியாயம் செய்ய வில்லையே என்று மருகி போனாள்.
பொண்டாட்டி, பிள்ளைகளை விட்டுட்டு போய் விட்டான் அயோக்கியன் என்றது போய், என்ன இருந்தாலும் பொண்டாட்டி, பிள்ளை மட்டும் போதும்ன்னு வந்துட்டான், நியாஸ்தன் தான் என்ற பெயர் வந்து விட்டது. அப்போ பெண், அவள் யார்?… இத்தனை வருடம் ஏந்தி, தூக்கி சுமந்தவள் ஒன்றுமே இல்லையே… முதல் உரிமை அவனுக்கு என்றால், இடுப்பு எலும்பு உடையும் வலியை மூச்சடக்கி பிள்ளை பெற்ற என் உரிமை தான் எங்கே?…
தலையணை ஈரமானது தான் மிச்சம். வெற்றிக்கும் தூக்கம் துளி இல்லை தான். தகப்பன் என்ற ஒத்தை அடையாளத்தை கொண்டு வலுக்கட்டாயமாக அவர்கள் கூட்டில் நுழைந்து கொண்டான். தவிர்க்க முடியாத அளவுக்கு நிலை நிறுத்தி கொண்டான். ரொம்ப மெனக்கெட வேண்டாம், என் பிள்ளைகள் பொறுப்பு எனக்கு தான். குடும்பமாக சேர்ந்து வாழ விரும்புகிறேன் என்று சொன்னால் போதும், ஊர் இவனுக்கு சாதகமாக தான் பேசும். இரு பெண் பிள்ளைகளை வைத்து கொண்டு சரண்யா படும் பாட்டை அறிந்தவர்கள், அவள் தன்மானத்தை உதுத்து இவனோடு சேர தான் விடுவார்கள்.
அவளுக்கு என்று நேரடியான குடும்ப துணை கிடையாது. தனியே இரு பெண் பிள்ளைகளை வளர்ப்பது சுலபம் அல்ல. பொறுப்பை தனதாக்கி சேர்ந்து வாழ நினைக்கும் கணவன், நிச்சயம் மற்றவர்கள் பார்வைக்கு நல்லவனாக தான் தெரிவான். சுய மரியாதை பேசி, தன்மானம் பார்த்து, தனியே சுமை தூக்கி நிக்க தயாராகும் பெண், மற்றவர்கள் பார்வைக்கு நன்மதிப்பு இருக்காது. அத்தகைய நன் மதிப்பு இன்றி இந்த சமூகத்தில் வாழ முடியாது.
சரண்யா முழுக்க, முழுக்க தன்னை சுற்றி இருக்கும் சுற்றத்தார் வைத்து தான் அடி எடுத்து வைக்கிறாள். அவர்களிடம் மதிப்பிளக்க முடியாது. வேற துணை இன்றி திக்கற்று நிற்கும் பெண்ணை வளைக்கிறான். இதை எல்லாம் உதறி புதிதாக தொடங்கும் அளவுக்கு பெலன் அற்ற பெண் தான் சரண்யா. அதை தான் தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறான்.
ஐந்து மணிக்கே எறியும் விளக்கை கண்டு, மனைவி எழுந்து விட்டாள் என்று அறிந்து கொண்டான். மெல்ல மேலே ஏறி சென்றான். பிள்ளைகள் இன்னும் உறக்கத்தில் தான். எப்போதும் காலையில் தனக்கு என்று டீ வைத்து கொள்வாள். அது எல்லாம் விழி தெளிந்து நாள் ஓடாது. முன் வராண்டாவில் குட்டி நடை போடுவாள், மனதில் அடுத்து என்ன என்ற கணக்கீடு ஓடி கொண்டு இருக்கும். சமையல் வேலை துவங்க நேரம் ஓடியது, வெற்றி ஆஸ்தான இடத்தில் அமர்ந்து கொண்டான். இன்று என்னவோ பிள்ளைகள் எழுந்து கிளம்ப தாமதம் ஆனது.
சரண்யா என்னவும் செய்து பார்த்து விட்டாள். அசைய கூட இல்லை, நேரம் ஓடி கொண்டே இருந்தது. வேற வழி இல்லாமல் முதுகில் சுள்ளென்று ஒன்று விழ, பதறி துடித்து எழுந்து கொண்டார்கள். வெற்றிக்கு கொஞ்சம் கோபம், தானும் இருக்க பிள்ளைகள் மீது கை வைத்து விட்டாளே… ஓடி சென்று தூக்க, வில்லாக வளைந்து அவனிடமிருந்து திமிறியது, அடித்தாலும் தாய் தான் வேண்டும் என்று…
ஒரே குடும்பமாக இருந்தால், அம்மா அடிக்க அரவணைப்பை அப்பாவிடம் தேடி இருக்கும். ஆனால், தன்னை கிட்ட கூட சேர்க்க மாட்டேன் என்கிறார்கள். அதற்கு காரணம் தெரியும், சரண்யா பார்வையில் தான் பிள்ளைகள் தொடரும். இன்னும் அவன் வாங்கி வந்த ஒன்றையும் தொடவில்லை. ஒரு மூலையில் தான் கிடக்கின்றது. இது வேண்டும், அது வேண்டும் என்று அம்மாவிடம் அடம் தானே தவிர, அவன் கொண்டு வந்ததில் கை கூட வைக்க வில்லை.
பிஸ்கெட் வைக்க குக்கிஸ் கேட்டு ஒரு பாடு அழுகை. தலை வலித்தது சரண்யாவிற்கு. தனி ஆளாக அவள் போராடுவதை பார்த்து கொண்டு தான் இருந்தான். ஷூ போடவாது தன்னை விடலாம் என்ற அளவிற்கு நினைத்தும் அவனை அருகில் கூட விட வில்லை. பெயரளவில் இருந்தவன், ஆள் அளவில் இருந்தான்.
அவசரக்கதியில் பிள்ளைகளை இழுத்து ஓடி கொண்டு இருந்தாள். மெளனமாக பார்த்து நின்றான் வெற்றி. தன்னிடம் மூன்று கார் இருக்க, பள்ளி வேனுக்கு இரண்டாயிரம் கட்ட வழி இல்லாமல், பிள்ளைகளை தரதரவென இழுத்து கொண்டு ஓடினாள். அவளின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறி நடந்தாள் அஜி…
தன் வீட்டுக்கு வந்தவனை தான் வீட்டில் எல்லோரும் பார்த்து நின்றார்கள். எங்கு போய் வருகிறான் என்று தெரியாது. பிள்ளைகளை பார்க்க தான் என்று ஒரு எண்ணம் உண்டு. அவனின் செயலை யாரும் கேட்காமல் இருக்க, தந்தை கேட்டு விட்டார்.
“நாம நாலு பேரை கூட்டு போய் பேசுவோம் வெற்றி. நீ மட்டும் போய் வராது சரி வராது. பொதுவான ஆளை வச்சு பேசுவோம்…”
“வேண்டாம்ப்பா , நானே பார்த்துக்கிறேன். நாலு பேர் சமாச்சாரமே வேண்டாம். ரெண்டு பிள்ளைக இருக்குது, பஞ்சாயத்து, பிரச்சனைன்னு இழுக்க முடியாது. வெளி நாட்டுல இருந்து வந்த மாதிரியே இருக்கட்டும். பேச போனா பிரச்சனை தான் பெருசாகும். இனி எம் பொண்டாட்டி, பிள்ளைக கூட தான் என் வாழ்க்கை. வேற எண்ணத்தை விட்டு உங்க பொழப்பு பாருங்க…” தாயை பார்த்து சொள்ளியவன் ,சென்று விட்டான்.
மறுநாள் சரண்யாவுக்கு வார முடிமுறை, ஓய்வாக இருக்க வந்து விட்டான் எரிச்சல் மண்டியது. வெளி வராண்டாவில் பிள்ளைகள் விளையாட பார்த்து நின்றான், இப்போது தான் தெரிந்த முகமாக பார்த்து வருகிறார்கள். இனி என்று தந்தையாக அன்பை பெற…
பிள்ளைகள் கண் பார்வையில் தாய் இருந்தாள் போதும், மத்தபடி தேட மாட்டார்கள். அம்மா என்ற அழைப்பிற்கு, கண் தாயை பார்த்தால் போதும், எந்த தொந்தரவும் செய்யாமல் விளையாட தொடங்கி விடுவார்கள்.
பிள்ளைகள் தன் வேலையில் இருக்க, நழுவி உள்ளே சென்றான். காய் வெட்டி கொண்டிருந்தாள் சரண்யா. எப்பவும் போல அமர்ந்தவன் , மெதுவாக ஆரம்பித்தான்.
“சரண்யா…” என்ற சத்தம் அவளுக்கு இறுக்கத்தை கொடுத்தது. இத்தோடு இரண்டு, மூன்று முறை தான் பேர் சொல்லி அழைத்து இருக்கிறான்.
“ நான் பிள்ளைகளுக்காக தான் வந்தேன்னு நீ நினைக்கலாம். ஆனால், உன் நினைப்பும் எனக்கு இருந்தது. இந்த நாலு வருசம் உன்னை நினைக்காத நாள் இல்லை…”
சரண்யா முகம் கடுமையாக மாறியது. பிள்ளைகளுக்காக சுத்தி வரும் போது அமைதியாக கடந்தவள், தன்னை குறித்த பேச்சு வெறியை கிளப்பியது.
“ நிஜம் சரண்யா. நாம பிரஞ்சு நின்ன இத்தனை வருசத்துல நான் உணர்ந்தேன். எனக்கு… எனக்கு , உன்னை ரொம்ப பிடிக்கும் சரண்யா. ஆஆஅஅ…” என்று கத்தி விட்டான். கத்தி குத்தியதில்.
ஆம், கத்தியை கொண்டு தான் குத்தி விட்டாள். தரையில் அமர்ந்து அவள் காய் வெட்ட, சற்று தள்ளி சேரில் அமர்ந்து இருந்தான். அவன் சொன்ன வார்த்தையில், உண்டான கோபத்தில் கத்தியை தூக்கி அவனை நோக்கி எறிய,
மொட்டிக்கு கீழ குத்தி நின்றது. கெண்டை காலில் கத்தி குத்தி நிற்க, கை வைத்து கூட தொட முடியாமல் உயிர் வலி…