பிள்ளைகள் நல்ல தூக்கத்தில், நடுவில் பாய் விரித்து தூங்க போட்டு இருந்தாள். அதன் அந்த பக்க சுவற்றில் சரண் சாய்ந்து அமர்ந்திருந்தாள். அவளின் மறு பக்கம் வெற்றி சாய்ந்து அமர்ந்து இருந்தான். நல்ல காயம், வலி உயிர் வலி தான். தாங்கி கொண்டு அமர்ந்து இருந்தான். தூக்கம் பொட்டுக்கும் வரவில்லை. சரண்யா முகத்தை விட்டு பார்வையை விளக்க வில்லை. இன்னும் இருவரும் உண்ண வில்லைதான், உணவும் இறங்காது. மூடு மந்திரம் வெளி வர தான் வேண்டும். பேச்சு வார்த்தை தவிர்த்து இருவரும் ஓடி கொண்டு இருக்க, பேசியே ஆகவேண்டிய நிலை.
வெற்றி உறங்கும் பிள்ளைகளையும், ஓய்ந்து இருந்த மனைவியையும் தான் பார்த்து இருந்தான். தன் குற்றம் முழுதாக தெரிந்தது. தான் மட்டும் சரியாக நின்று இருந்தால், தன் வாழ்க்கை அலங்கோலமாக சிதறி கிடக்காதே. உரிமையான உறவு, நெருங்கவும் உரிமை இல்லை. தன் மனைவி, தன் பிள்ளைகள் கை தொடும் தூரம் தான். ஆனால், வாழ்க்கை கை எட்டா நிலையில் அல்லவா இருக்கிறது.
சரண்யா நினைவு இங்கு இல்லை. சிந்தனை வேற எங்கயோ இருந்தது. கரு விழியை அசைத்து கண்ணீரை கட்டு படுத்தினாள். பேசி விடு சரண்யா ஒரு தெளிவு வரும்…
“உங்களுக்கு என்னை பிடிக்கும், இல்லையா?…” என்று தன் முதல் வார்த்தையை தொடங்கி வைத்தாள்.
அவளின் பேச்சு சத்தத்தில் நிர்ந்து பார்த்தவன், தலை குனிந்து கொண்டான். அவள் பார்வையை நேர் கொண்டு சந்திக்க முடியவில்லை. குற்ற உணர்வு நெஞ்சை குத்தியது.
சிறு மெளனம், “எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்…” என்ற சரண்யாவின் வார்த்தையில் நிமிர்ந்து மனைவி முகம் பார்த்தான். அது அவன் நன்றாக அறிந்த ஒன்று. அதை கொண்டு தான் திரும்ப அவளை நெருங்க முயன்று, கத்தி குத்து வாங்கி கொண்டு இருக்கிறான்.
கண்களில் நீர் தெப்பமாக நிறைந்து நின்ற போதும், இமை தாண்டி வெளி வரவில்லை.
“இவர் தான் உன்னை கட்டிக்க போறவங்கன்னு சொல்லி, நிச்சயம் பண்ணி, உங்க கூட ஜோடியா நின்ன அப்புறம் தான். உங்களை எம் மனசுல பதிய வச்சேன்… ரொம்ப ஆழமா நின்னு போனீங்க…”
மறு சொல் சொல்லாமல் அமைதியாக கேட்டு அமர்ந்திருந்தான். அவன் கண்களும் கலங்கியது, மனைவியின் மனம் தான் அவன் அறிவானே… அவளுக்கு தான் கொடுத்தது மிக பெரிய ஏமாற்றம்.
“நீங்க தான் எனக்கு, காலத்துக்கும் உங்க கூட தான் வாழ்க்கை, என் உலகம். எனக்கானவர் நீங்க தான். இப்படி நிறைய கனவு. படிப்பறிவு இல்லாததால கல்யாணம் தான் வாழ்க்கையை முழுமையாக்கும்ன்னு நம்புனேன். தோத்து போவோம்ன்னு நினைக்கவே இல்லை…”
கை நடுங்கியது, “உங்களுக்கு உள்ள ஒரு காதல் இருக்குன்னு தெரியாமவே, உங்களை உள்ள வச்சு காதலிச்சேன். நீங்க ரொம்ப அழகு, அதனால இல்லை. உங்க இடத்தில யார் இருந்தாலும் கட்டிக்க போறவங்க, என் புருசன்னு ஆசை, அன்பு இருக்கும் தான். நிறைய, நிறைய எதிர்பார்ப்போடு தான் என் கல்யாணம் நடந்துச்சு…”
முகம் சுருங்கி போனது வெற்றிக்கு. மனைவியானவளை அவன் நடத்திய விதம் தான் தெரியுமே…
“புதுசா கல்யாணம் ஆன புருசன், பொண்டாட்டி மாதிரியே நாம இல்லை. ஆசையா ஒரு பேச்சு, சிரிப்பு எதுவும் கிடையாது. நான் பக்கத்துல வந்தாலே தள்ளி போவீங்க… எனக்கு எதுவுமே தெரியலை. ஏன் பேசலை? ஏன் என்னை ஆசையா பார்க்கலை? ஒரு கோவில், கடை, ஹோட்டல், சினிமா எதுவும் கிடையாது… எல்லோரும் புது பொண்டாட்டிய தாங்குவாங்க, எனக்கு ஏன் இப்படி எதுவும் நடக்கலன்னு யோசிச்சு குழம்பி போனேன். அப்ப கூட உங்களை நான் தப்பா யோசிக்கல, கல்யாணம் ஆகாத தம்பி, தங்கச்சி இருக்க, நம்ம கிட்ட நெருக்கம் காட்ட தயக்கம் போலன்னு உங்களுக்கு சாதகமாக யோசிச்சேன்…”
“உங்க வீட்டுலையும் யாருக்கும் என்னை பிடிக்கல, அதை விட என்னை நெருங்கவே இல்லை. என்னை ஒதுக்கி தான் வச்சாங்க. நானும் அவங்களை நெருங்க வீட்டு வேலையில இருந்து சமையல் வேலை வரை இழுத்து போட்டு செஞ்சாலும், என்னை ஒரு ஆளா ஏத்துக்கவே இல்லை. உங்க அம்மா என் கூட மல்லுக்கு தான் நிப்பாங்க. நீங்க எனக்கு ஆதரவா ஒரு நாளும் பேசலை. என்ன காரணம் எதுவும் தெரியாம முழிச்சு நின்னேன். வாழ்க்கை அப்படியே போனா கூட என்னால உங்களை அடையாளம் காண முடிஞ்சு இருக்கும். ஆனா விதி, அப்படி விடலை. அடுத்த மாசமே மாசமா ஆகிட்டேன். கல்யாணம் ஆன பொண்ணுங்க மாசமா இருக்குறது சகஜமான ஒன்னு தான்னு நினைக்காமா, ஏதோ சாதனை செஞ்ச மாதிரி பூரிச்சு போனேன். எனக்கான அங்கீகாரம் கிடைச்ச மாதிரி அம்புட்டு சந்தோசம். கல்யாணம் ஆன உடனே குழந்தை, நீங்க இடம் வாங்குனிங்க, உங்க தங்கச்சிக்கு கல்யாணம் அமஞ்சுச்சு… எல்லாம் எனக்கு ஒரே பெருமை. கல்யாணம், குழந்தை, தொழில், சொத்து எல்லாம் கை சேர, என்னை பிடிக்க முடியலை…” என்றவள் விரக்தியாக சிரித்த கொண்டாள்.
“எல்லாம் நல்லா போன விதி எதுக்கு… உங்க பாட்டி இறந்து, ஊருக்கு போனோம். போகமாவே இருந்து இருந்தா என் வாழ்க்கை விளங்கி இருக்குமோ… உங்க காதல் கண்டேன். நெஞ்சுல நெருப்பு வச்ச மாதிரி இருந்துச்சு. நீங்க, உங்க குடும்பம் என்னை ஒதுக்கி வச்ச காரணம் புரிந்தது. ஆனா, தெளிவு இல்லையே. எல்லா பொம்பளைக மாதிரி புருசன் வேணும்ன்னு நினைச்சு, காரணமில்லாமல் அபி மேல கோபம். எனக்கு தெரிஞ்சு நான் செஞ்ச தப்பு அபிய பேசுனது மடும் தான். வேற என்ன பண்ண, கல்யாணம் பண்ணி, பிள்ளையும் வயித்துல வாங்கின பின்னாடி ரோச பட்டு புருசனை விட தெரியலை. புடிச்சு வைக்க தான் நினைச்சேன்…”
நெஞ்சை நீவி விட்டு கொண்டாள். அடுத்து பேச வாய் வரவில்லை.
வெற்றிக்கு புரிந்தது. “சரண்யா என்னை மன்னிச்சிடு, இதை தவிர வேற எதுவும் என்கிட்ட இல்லை…” என்றான் கை கூப்பி. அன்று கோபத்திலும், ஆதங்கத்தில் வார்த்தையை விட்டான். அதிர்ந்து போய் மனைவி பார்த்த பார்வை தான் நாலு வருசமாக உயிர் கொள்ள உறுத்துகிறது.
அவன் மன்னிப்பை அவள் காதிலே வாங்க வில்லை. தன் போக்கில் மனதை கொட்டினாள்.
“எல்லாத்தையும் கடக்க தாங்க நினைச்சேன். உங்க காதலை ஜிரணிச்சு, கடந்து நமக்கான ஒரு வாழ்க்கையை வாழ தான் நினைச்சேன். ஆனா, அதை மறக்க தான் நீங்க நினைக்கலை. உங்க காதல் உங்களுக்கு பெருசா தெரிஞ்சது. காதலி கண்ணீர் விடும் போது கை பிடிச்சு தங்குன நீங்க, தாலி கட்டுன பொண்டாட்டி கதறி துடிக்கும் போது ஆதரவா கூட பேசலை. என் உணர்ச்சிக்கு, கோபத்துக்கு மதிப்பு கொடுக்கல. உங்க காதல் தோத்து போனா, அதுக்கு நானா காரணம். செத்து கூட உங்க காதலை நீங்க நிரூபிக்க வேண்டி தான, ஏன் என்னை சகடிச்சீங்க வெற்றி…”
“கடந்த காலம்ன்னு மறக்க நீங்க நேரம் கேட்டிருந்த பரவாயில்லை. நான் நிக்க, நீங்க அபிய பார்த்து மருகி நிக்க, என்னை ஒதுக்கி வைக்க, உதாசீன படுத்தன்னு அபிய தான் திருப்தி படுத்தி இருக்கீங்க. அப்போ எனக்கு கோபம் வர தான செய்யும். என்னோட கோபத்துக்கு நீங்க பதில் கொடுத்தீங்க பாருங்க. நான் செத்தாலும் என் கட்டை வேகாது…”
ஓடி வந்து அவள் வாயை பொத்தினான். தன் தப்பு தெரிந்தாலும், அவள் சொல்லும் போது வலித்தது. அவன் கையை தட்டி விட்டவள்.
என் கழுத்துல தாலி கட்டி, என் கூட வாழ்ந்து குழந்தை வந்த பின்னும் உங்க காதல் மனசு முழுக்க நிறஞ்சு நிக்குது. என்ன சொன்னீங்க, கோபத்துல விட்ட வார்த்தையா… என் கூட வாழ்ந்தது ஒரு கட்டாயம்ன்னு சொன்னீங்க. அந்த ஒரு வார ராத்திரியும் யாரோ பிடிச்சு தள்ளி தான் நடந்துச்சுன்னு சொல்லும் போது என் உடம்பெல்லாம் தீ புடிச்ச மாதிரி வலி… தாம்பத்தியம் புருசன், பொண்டாட்டிக்குள்ள இருக்குற ரகசியம். ஆம்பளைக வெளிப்படையாக பேசுற மாதிரி, பொம்பளைக மனசு விட்டு சொல்ல மாட்டோம். ஜாடை மாடையா தான் எங்க பேச்சு இருக்கும். ஒரு பொண்ணோட அந்தரங்க, அவளோட ஆசை, உணர்ச்சி, எதிர்பார்ப்பு எல்லாம் இருட்டுல புருசன் மட்டுமே அறிஞ்சது. என் புருசன், எனக்கானவன், இந்த ஆசைய என் புருசன்கிட்ட மட்டும் தான் எதிர்பார்க்க முடியும். என்னையும் என் புருசன் கிட்ட மட்டும் தான் வெளிப்படுத்த முடியும். அப்படி நினைச்சு தான் உங்களை ஆசை, அன்பு, காதல் எல்லாம்… சொல்ல முடியலை, நான் ஆசைல நெருங்க, நீங்க அருவருப்பை பாத்திருக்கீங்க. என்கிட்டையே எனக்கு அவமானமா இருந்துச்சு. ரொம்ப அலையிறன்னு தான்ன நெனச்சு இருப்பீங்க…” இப்போதும் அழுகை முட்டியது.
“சரண்யா வேண்டாம். இந்த பேச்சு வேண்டாம். நம்ம பிள்ளைகளை பாரேன்… நம்ம ரெண்டு பேருக்குமே வலி தான். இதொட நிப்பாட்டு பிளீஸ்…” கை பிடித்து கெஞ்சினான் வெற்றி.
“எப்படி மறக்க முடியும். என்னை நானே அடிச்சு கொடுமை படுத்துற அளவுக்கு கோபம் எம் மேல… இதுக்கப்புறம் உங்க கூட வாழ்க்கை எனக்கு வலி தான். அதையே ஜீரணிக்க முடியாம தவிச்சு நின்னேன். அதோடவாது விட்டீங்களா… அழகுன்றது என்ன?… அதுக்கு என்ன வரையறை இருக்கு?… உங்களுக்கு என்னை பிடிக்கலை. முழுசா என் முகம், கை, கால் எதுவும் பிடிக்கலை. அதை சொல்லி கல்யாணத்தை நிறுத்தி இருக்கலாம் இல்லையா… இந்த ஓணான் மூஞ்சி, ஒட்டடை குச்சி உடம்பு, தாட்டான் மண்டை, மூஞ்சூறு முகத்தையும் எவனோ ஒருத்தன் ஆசையா கல்யாணம் செஞ்சு இருப்பான் தானா…”
வெற்றி துடித்து போனான். அன்று குடி போதையில், காதலை இழந்த வலியில் வார்த்தை சிதறி விட்டது. அதன் பாதிப்பு சரண்யாவை வாட்டும் என்று நினைக்கவே இல்லை.
“ஆம்பளை கருப்பா இருந்த அழகு, கட்டை மீசை அழகு, தாடி அழகு, எப்படி இருந்தாலும் அழகு தான். ஆனா, பொம்பளை… குட்டை, நெட்டை, ஒல்லி குச்சி, பப்ளிமாஸ், குந்தானி, உதடி, கருவாச்சி, வெள்ளச்சி… ஏதாவது ஒரு குறை கண்டு பிடிச்சு கேலி பேசுவாங்க. என்னை யாருமே பேசலையான்ன, நிறைய பேசி இருக்காங்க. ஒல்லி குச்சி, கருவாச்சி, ஆமை மாதிரி நடக்குற, எலி, உதடு தூக்கி இருக்குன்னு உதடின்னு அதெல்லாம் நெறைய வாங்கி இருக்கேன். அவ்வளவு ஏன் உங்க நண்பர் சரவணன் இருக்கார்ல, எப்பவும் என்னை கேலி செய்வார். காத்து பலமா அடிக்குது வெளிய போகாத, தூக்கி போயிடும், எங்கக்கா மக முகம் ஒளி விசுது. பார்க்கும் போதெல்லாம் கேலி தான். உங்களோட என் கல்யாணம் நிச்சயம் ஆனா பின்னாடி தான் சரவணன், எம் முறை பசங்க எல்லாம் கேலி பன்றத நிப்பாட்டுனாங்க… கல்யாணத்துக்கு முந்தி அத்தை மகன்னு கேலி பேசுறவங்க கூட அடுத்தவனுக்கு சொந்தமான மரியாதையா தான் பார்ப்பாங்க. ஆனா, உங்கம்மா நாலு பேரு மத்தியில என்னை விமர்சிச்சாங்க. அதுக்கும் மேல நீங்க… மத்தவங்க கேலி, கிண்டல் செய்யும் போது நான் தூசி மாதிரி தட்டி விடுவேன். இந்த கருப்பு முகத்தையும், ஒட்டடை குச்சி ஓடம்பையும், சுருட்டை முடியையும் ரசிக்க, பிடிக்க ஒருத்தன் வருவான். உங்க பேச்சு என்னை பாதிக்காதுனு தள்ளி போயிருவேன். ஆனா, நீங்களும் என்னை அப்படி சொல்லும் போது தான் துடிச்சு போனேன்…”
“நீங்க என்னை பார்க்கணும், என்னை ரசிக்கணும், என்னையே சுத்தி வரணும், நல்ல சேலை கட்டுனா அழகா இருக்கன்னு சொல்லணும், என் சமையலை பாராட்டனும், ஒரு பேனா வாங்குன கூட என் கிட்டா ஒரு வார்த்தை சொல்லணும், எனக்கு பூ, வளையல் எல்லாம் போட்டு அழகு பார்க்கணும். உங்க கண்ணுக்கு நான் அழகா தெரியணும்… எவ்வளவு எதிர்பார்ப்பு தெரியுமா… ஆனா, நீங்களும் சொன்னீங்களே, என்னைக்காவது எனக்கு மறக்குமா…” அழுகை பொங்கியது சரண்யாக்கு.
அவளை தொட வந்தவன் சட்டையை கொத்தாக பற்றியவள், “இடுப்புல கூட சத்து இல்லாதவ தான் இடுப்பு ஒடையும் வலியையும் பொறுத்து உங்களுக்கு ரெண்டு பிள்ளை பெத்தேன். சரியான வயசுல வயசுக்கு வந்தேன், கல்யாணம் பண்ணின உடனே கர்ப்பம் ஆனேன், பிள்ளையும் பெத்தேன், பிள்ளைக ஒன்றை வயசு வரை தாய் பால் கொடுத்தேன். சொல்லுங்க நான் பெண் இல்லாம வேற யாரு பெண்…”
வாய் வர வில்லை வெற்றிக்கு. அவ்வளவு ஆக்ரோஷம் சரண்யா முகத்தில்.
“இவ்வளவு வெறுப்பு இருக்க, அப்புறம் ஏன் உங்களை வீட்டுக்குள்ள விட்டேன். உங்களை நம்பி தான் உங்க வீட்டுக்கு வந்தேன். உங்களை நம்பி தான் பிள்ளை சுமந்தேன். ஆனா, உங்களை நம்பி நான் பிள்ளை பெத்துகல. என்னை முழுசா நம்பி தான் பிள்ளைகளை சுமந்தேன். ஆனா, நான் தோத்து போனேன்…” என்று அழுது அரட்ட தொடங்கினாள் சரண்யா.