வெற்றி மூச்சு விடவும் மறந்தவன் போல தான் இருந்தான். அவனாளவில், மனைவிக்கு செய்த துரோகம் என்று நினைத்தது அவனது காதலை தான். அதை தாண்டி அவள் மனதில் இவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று யோசிக்க கூட இல்லை. தன்னுடைய கடந்த கால காதல் தான் பிரச்சனை என்று எண்ண, அது மட்டுமல்ல நீ தான் முதல் பிரச்சனை என்று சொல்லி விட்டாள்.
சரண்யா முகம் வீங்கி போய் இருந்தது. கண் சிவந்து தடித்து இருந்தது. ஆனால், அவள் பேச்சு மட்டும் நிற்க வில்லை.
“கல்யாணத்துக்கு முந்தி உங்க காதலை நான் கேள்வி கேட்க முடியாது. அப்போ உங்க வாழ்க்கையில நான் இல்லை. கல்யாணத்துக்கு அப்புறம் நான் கேள்வி கேக்கலான எனக்கு வாழ்க்கையே இல்லாம போய்டும். அப்படி கேட்டும் என்ன கிடைச்சது… உங்க மனசுல நான் இல்லை, உங்க காதலுக்கு தான் முதலிடம் சொல்லிட்டீங்க. என்னோட உங்க வாழ்க்கை கட்டாயம், அத்தோட என்னை உங்களுக்கு பிடிக்கவே இல்லை. இதை ஏத்துக முடியாம தான் ஒதுங்கிட்டேன். குடும்ப சண்டை அடிதடி எல்லாம் சாதாரணம். நான் ஒதுங்கி போக அது காரணமில்லை. உங்க மனசுல நான் இல்லை. காதலா கூட வேணாம் மனைவியாவும் உங்களை நான் ஈர்க்கல… இதுக்கு மேல என்ன சொல்ல முடியும்…”
“சரண்யா, உன் நடத்தை சரியில்லை மாத்துன்னு சொன்னா சரி சொல்லலாம். உடை, நடை, பேச்சு, உணவு, சுபாவம் அவ்வளவு ஏன் பிறப்புல வந்த குணத்தை கூட புருசனுக்காக மாத்தலாம்… ஆனா, உன் முகம் சரியில்லைன்னு சொன்னா எப்படி மாத்த முடியும். எங்கப்பாவோட அம்மா மாதிரி நான், உங்களுக்கு பொருத்தமில்லைன்னு என் மூக்கை வெட்டாவா முடியும். என் முகம் சின்னதா தான் இருக்கும். அது பிறவி சிரிச்சா மாதிரி இல்லை, மூஞ்சூறுன்னு உங்கம்மா திட்டுறாங்க. எப்பவும் சிரிச்சா மாதிரி இருந்தா அதுக்கு பேரு பைத்தியம். என் வளத்தி, உடம்பு அவ்வளவு தான். இது எதையும் என்னால மாத்த முடியாது. இல்லாத அழக இருக்குற மாதிரி வேசம் கட்ட நான் ஆளில்லை. எப்பவும் மூணு இஞ்ச் பவுடர்ரோடவே சுத்த முடியாது. என் குடும்பத்து முன்னாடி தான் நான், நான இருக்க முடியும். நமக்கான சுதந்திரம் வீட்டுல தான் இருக்கு… அங்கேயும் என் இயல்பு மீறி, என் குணத்தை மாத்தி, என்னையே இழந்து வாழ தெரியலை. நீங்க எதிர்பார்க்கக்கூடிய வாழ்க்கை எங்கிட்ட இல்லன்னு தான் ஒதுங்கி போய்ட்டேன்…”
தண்ணியை எடுத்து குடித்தாள். வெளியே சென்று முகம் கழுவி, பாத்ரூம் போய் வந்தாள்.
அவளின் செயல்கள் எல்லாம் பார்த்தவன், இருந்த இடத்தை விட்டு அசைய வில்லை. அடுத்து என்ன நடந்தது என்று கேட்கவும் வாய் வரவில்லை. நிச்சயம் கொடுமையாக தான் இருக்கும். இத்தனை உறவுகள் இருக்க, தனியே பிள்ளைகள் உடன் வசிக்கும் போதே புரிந்து கொண்டாயிற்று… சரண்யா நிறுத்த வில்லை. இதுவரை தன் விளக்கம் மட்டும் கொடுத்தவள். முன் பகுதி முடிந்து விட்டாச்சு, பின் பகுதி அவள் வாழ்க்கை பிள்ளைகள் உடன் அல்லவா… அது இன்னும் கொடுமை. தன்னோடு தன் பிள்ளைகள் கடந்த வலி, பெற்ற தாய்க்கு தாள கூடியது அல்லவே…
“ முதல்ல கர்ப்பத்தை அழிக்கிற முடிவுக்கு யாரும் வரலை. உங்க கூட சேர சொல்லி சிலரும், வேண்டாம் அத்து விடுவோம்ன்னு அண்ணானும், மாமாவும் பிடிவாதம். உங்க குடும்பத்து கூட வாக்கு வாதம், சண்டைன்னு ஒரு மாசம் ஓடி போச்சு. அஞ்சு மாச தொடக்கதுல தான் ஸ்கேன் பார்த்தேன். அதுவரை முனுக் முனுக்ன்னு ஒரு அசைவு மட்டும் தான். ஸ்கேன்ல தான் ரெட்டை பிள்ளைகன்னு தெரியும். அந்த குட்டி ரெண்டு உருவத்தை பார்த்து எனக்கு விட மனசு இல்லை. எவ்வளவு சொல்லியும் பிடிவாதமா பெத்துகிட்டேன். அங்க தான் என் கணிப்பு தப்பா போச்சு. என் குடும்பத்துக்கு என் மேல இருக்குற பாசம், என் பிள்ளைக மேல அப்படியே வரும்ன்னு நெனச்சேன். ஆனா, அவங்க எம் பிள்ளைகளை அவங்களுக்கு பிடிக்காத வெற்றி வேல் பிள்ளைகளா மட்டும் தான் பார்த்தாங்க…”
“நான் எவ்வளவு பெரிய பைத்தியக்காரின்னு எம் பிள்ளைக வந்து தான் எனக்கு காட்டி கொடுத்தாங்க… அவங்களை நான் தப்பு சொல்ல மாட்டேன். அவங்க கிட்ட என் எதிர்பார்ப்பு தான் தப்பு. இப்ப இருக்குற உலகத்துல அவங்கவங்க குடும்பம் ஓடுறதே பெருசு. இதுல அடுத்தவங்க குடும்பத்தை எல்லாம் சேர்த்து வச்சு பார்க்க முடியாது. அவங்க எனக்கு செய்ய நினைச்சது உதவி மட்டும் தான். என் யோசனை தான் தப்பா பேச்சு… ஆனா, ஒன்னு மட்டும் நிஜம். பெத்தவங்க மட்டும் தான் பிள்ளைகளுக்கு பெத்தவங்களா இருக்க முடியும். மத்த யாரும் தாத்தா, பாட்டி, அத்தை, மாமா அப்படீன்னு அந்த உறவுக்கான கடமைய மட்டும் தான் செய்ய முன் வருவாங்க…. எனக்கு புரியத்தான் தாமதம் ஆகி போச்சு. அஜி நடக்க லேட் ஆச்சு. ஒன்றை வயசுல தான் தத்துபித்துன்னு எட்டு வச்சா, அடிக்கடி கீழ விழுந்துடுவா. சாதாரணமா சொல்லுவாங்க எங்க அண்ணி, லேசாதான அடி பட்டுச்சு, பெருசா ஒன்னும் இல்லான்னு. ஆனா, எனக்கு தான் அங்கமெல்லாம் பதறும்… விஜிக்கு அடிக்கடி முடியாம போகும், ராத்திரி தூங்கவே மாட்டா, அழுதுட்டே இருப்பா. அழுகை சத்தம் கேட்டு கூட யாரும் வர மாட்டாங்க. தொட்டில தூங்குற அஜிய வச்சுட்டு, தோல்ல விஜியும் வச்சு அவ்வளவு சிரம படுவேன். யாரும் ஒரு நாள் தூக்கத்தை தியாகம் செய்ய தயாராக இல்லை. கொஞ்சம் கொஞ்சமா உலகம் எனக்கு புரிஞ்சது. எம் பிள்ளைக கூடவே நானும் வளர்ந்தேன். அப்படித்தான் சொல்லணும்….”
மனதின் வலி வெளி வரட்டும் என்று வெற்றியும் அமைதி காத்தான்.
“பிள்ளைகளுக்கு விவரம் தெரியவும் தான் பாடு. எனக்கும் நான் வாழும் வாழ்க்கை புரிஞ்சது. ஒரே வீட்டுல இருந்தும் என் அண்ணன் பையனுக்கு இருந்த உரிமை, சுதந்திரம், செல்லம் என் பிள்ளைகளுக்கு இல்லை. கேட்டது எல்லாம் அவனுக்கு கிடைக்கும், என் பிள்ளைக முகம் பார்த்து தான் நிக்கும். சாப்பாட்டை தவிர வேற எதுக்கும் அங்க வழி இல்லை. விவரம் தெரியாத வயசு, எதையும் கேட்டு அழுது, அடம் பண்ணுவாங்க. சமாளிக்க முடியாம நானும் கை வைப்பேன். அப்பல்லாம் என்னை பார்த்தே நான் காறி துப்புவேன். மக்கு, மண்ணாந்தை மாதிரி ஒன்னுக்கும் பிரோஜனம் இல்லாமா,ஏன் ரெண்டு பிள்ளைக பெத்துக்கணும். சில நேரம் ஆட்டோல போகும் போது எல்லாம் நினைப்பேன், இப்படியே ஏதாவது விபத்து நடந்து இந்த வாழ்க்கையில இருந்து எங்க மூணு பேருக்கும் விடுதலை கிடைக்காதான்னு…”
வெற்றி எதுவும் பேச வில்லை. இதற்கு மேல் என்ன வேண்டும். மரணம் கூட இந்த அளவுக்கு வலிக்குமா என்று தெரியாது. சரண்யா கடந்து வந்த வலி அவனை கூறு போட்டது. எப்படி இதை எல்லாம் சரிகட்ட, இவள் முகத்தில் சிரிப்பு என்று வரும்…
“என் குடும்பம் என்னை கை விட்டாங்கன்னு சொல்ல முடியாது. என் பிள்ளைக சுமைய தான் சுமக்க பிடிக்கலை. எனக்கு வேற ஒரு வாழ்க்கை அமைச்சு தாரேன்னு தான் சொன்னாங்க…” அதிர்ந்து போய் மனைவியை பார்த்தான் வெற்றி. உறங்கும் பிள்ளைகள் மீது கண் பாய்ந்தது. தகப்பனும் இல்லாமல், தாயிம் இல்லாமல் தன் பிள்ளைகள் நிலை என்னவாகிருக்கும்.
“மடி தாங்கி பெத்த பிள்ளைகளை ஆசிரமத்தில் விட்டு, என் சுகம் பெருசுன்னா போவேன். அதுக்கு கருவிலே அழிச்சு இருக்கலாம். பிள்ளைகளை விட்டு நல்லது சாப்பிட கூட மனசு வராது, நானா அவங்களை விட்டு கொடுப்பேன். எதுவுமே நடக்காத மாதிரி வேற ஒருத்தனை கை பிடிச்சு, அவனுக்கு பிள்ளை பெத்து, இது தான் என் வாழ்க்கை, கௌரவம், சந்தோசம்ன்னு வாழ என்னால முடியாது. அதுக்கு நாங்க மூணு பேரும் செத்து போகலாம். ஏதோ ஒரு தைரியம், எம் பிள்ளைக்கு நான் இருக்கேன். ஒரு தடவையாவது போராடி தான் பாப்போம். குப்பை அள்ளி, வீட்டு வேலை செஞ்சு, பாத்ரூம் கழுவி கூட பிள்ளை வளக்குறாங்க, எனக்கு என்ன… கையும், காலும் நல்ல தான் இருக்கு. என் தைரியம் எம் பிள்ளைக தான், அவங்க பாதுகாப்பு நான் தான். ஒரு வைராக்கியம் வர, எம் பிள்ளைக கை பிடிச்சு துணிச்சலா தனியா வந்தேன்…”
“போராடி ஒரு வேலை வாங்கி கொஞ்சம் என்னை நிலை படுத்த ஆரம்பிச்சேன். பத்தாயிரம் தான் சம்பளம். வீட்டு வாடகை, கரெண்ட் பில், சாப்பாட்டு செலவு, மளிகை, தண்ணி பில், பிள்ளைக படிப்பு செலவுன்னு கைக்கும், வாய்க்கும் பத்தலை. ஆபரேசன் பண்ணிய உடம்பு மூணு மணி நேரம் நின்னா முதுகு குனிய முடியாம வலிக்கும், அதுலையும் வீட்டு வேலை, பிள்ளைகளை பார்த்து உடம்பு நெருப்பா இருக்கும். ஆனா, அப்படி ஓடியும் படிப்பையும், உணவையும் மட்டும் தான் என்னால தர முடிஞ்சது…”
சரண்யா கண்களில் கண்ணீர் நிற்க வில்லை. “எம் பிள்ளைக” நெஞ்சை நீவி விட்டு கொண்டாள். “அவங்க வயசுக்கு வறுமைன்னா என்னன்னு தெரியுது…” ஒரு பெரிய கேவல் வந்து விட்டது. வெற்றியின் கண்களிலும் கண்ணீர் தான். இருவரின் பார்வையும் பிள்ளைகள் மீதே நிலை குத்தி நின்றது.
“ நாலு வயசு தான் ஆக போகுது. இப்பவே எல்லாம் புரியும். நம்ம அம்மா கஷ்ட படுறாங்க, அவங்க கிட்ட எதையும் கேட்டு அடம் பிடிக்க கூடாதுன்னு தெரிஞ்சிருக்கு. ஸ்கூல் விட்டு வீட்டுக்கு கூட்டி வரும் போது அத்தனை கடை இருக்கும், மத்த பிள்ளைக எல்லாம் அவங்க அம்மா, அப்பா கிட்ட கேட்டு வாங்கும் போது இவங்க முகம் பார்த்து தான் நிப்பாங்க. என் கிட்ட வேணும் வாங்கி குடுங்க ஒரு சொல் வராது. எத்தனை கடைய பார்த்தாலும் வெறும் ஏக்கம் மட்டும் தான் இருக்கும். வாய் வார்த்தை வராது. நானும் அப்படி வாங்கி குடுத்து பழலையே, கேட்டு அடம் பண்ணப்ப அடி தான் போட்டேன். என் இயலாமை அவங்க மேல திரும்பிடுச்சு… சம்பளம் வாங்கும் போது மட்டும் தன் வெளிய கூட்டு போவேன். அந்த மாச செலவு பார்த்து தான் வாங்கி குடுப்பேன். விலை குறைவா, நீண்ட நாள் வர மாதிரி தான் வாங்குவேன். பிளாக் ஃபாரஸ்ட் கேக் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். இதுவரைக்கும் ஒரு நாள் தான் வாங்கி குடுத்தேன். பல தடவை கடைக்கு போனாலும், அதை வாங்கி குடுக்க காசு இருக்காது. அதை வாங்குறது எங்க ஒரு வார ஸ்நாக்ஸ் செலவு. பிள்ளைக வாய் திறந்து கேட்க மாட்டாங்க, ஆனா அதை ஆசையா ஒரு பார்வை பார்ப்பாங்க பாருங்க. எனக்கு நெஞ்சே வலிக்கும். நான் ஏன் தான் பிடிவாதம் பிடிச்சு பிள்ளை பெத்தேனோ… ஆட்டோல போனா அவ்வளவு சந்தோசம். நாங்க தான் அடிக்கடி போக மாட்டோம். நாங்க எங்க போறது, எங்களுக்கு என்ன உறவு இருக்கு. விலை பார்த்து டிரஸ் எடுத்து, விலை பார்த்து சாப்பாடு வாங்கி குடுத்து அவங்களை நான் வறுமைக்கு பழகிட்டேன். எனக்கு தெரிஞ்சவங்க எல்லாம், சரண் உம் பிள்ளைக பரவாயில்லை எந்த அடம், பிடிவாதம் எதுவுமில்லை,நல்ல வளர்ப்பு… அப்படி சொல்லும் போது எம் மனசுக்கு தெரியும். எம் பிள்ளைகளை நான் தான் அடக்கி வச்சு இருக்கேன்…”
வெற்றி மெல்ல பாய் அருகில் வந்து உறங்கும் பிள்ளைகளை தொட்டு பார்த்தான்.
“ஆடம்பர வீடு, நகை எதுவும் வேணாம். ஆசைப்பட்ட உணவையாவது நான் வாங்கி குடுக்கணும் தான… அதுக்கும் எனக்கு வழி இல்லன்னு போது தான், என் தன்மானம், சுய கௌரவம் எல்லாம் அழிஞ்சு போச்சு. நீங்க பிள்ளைகளை தேடி வந்தா, நியாயத்துக்கு செருப்பால அடிச்சு விரட்டி இருக்கணும். ஆனா, என் இயலாமை அதை செய்ய விடலை. என் பிள்ளைக வாழ்க்கைக்கு முன்னாடி என் தன்மானத்துக்கு விலை இல்லை. என் பிள்ளைக வாழணும், அவங்க கண் நிறைய தேங்கி நிக்கிற ஆசை எல்லாம் நிறை வேரணும். மெத்தைல தூங்கனும், வேனுல ஸ்கூல் போகணும், வண்டில ஊர் சுத்தனும், பிடிச்ச ட்ரெஸ் போடணும், கலர் கலரா செருப்பு வாங்கணும், சொந்தம்ன்னு நாலு வீட்டுக்கு போகணும்… இப்படி நிறைய இருக்கு. இது இல்லாம் நிறைவேற என் தன்மானம் தான் தடைன்னா எனக்கு தன்மானம் தேவையே இல்லை. அவங்க நல்லா படிக்கணும், நல்ல வேலைக்கு போகணும், கண் நிறைக்க கல்யாணம் பண்ணி குடுக்கணும். நிறைய கனவு இருக்கு, வெட்டி ரோசம் எதுக்கு எனக்கு. அன்னைக்கு நீங்கா மட்டும் வரலைன்னா, ஒன்னு நான் கெட்டு சீரழிந்து இருப்பேன், இல்லை அவனை குத்தி போட்டு ஜெயிலுக்கு போய் இருப்பேன். இதுல எது நடந்தாலும் எம் பிள்ளைகளுக்கு தான் பாதிப்பு. நானும் இல்லன்னா அவங்க அனாதை. ஒட்டி நிக்க தாய்ன்னு நான் ஒருத்தி இருக்கேன், நானும் போய்ட்டேன் அவங்க நாதியத்து போவாங்க…”
“ நீங்க இப்ப நல்ல வசதி. எம் பிள்ளைக வளமான வாழ்க்கைக்கு முன்ன என் ரோசம் எல்லாம் மக்கி போச்சு. சரண்யா பயந்தவ, புரட்சி பெண் இல்லை. எம் பிள்ளைக நல்லா இருக்கணும். அவங்க அம்மா ஒரு முட்டாள், ஏழை, படிக்காதவ, வெளி உலக அறிவு இல்லாதவ, பழைய சேலையும், அந்த போன செருப்பும், இழுத்து போட்ட சடையும், எலும்பு போர்த்துன உடம்புமா இருக்குற அவ பிள்ளைகள் தலை நிமிர்ந்து வாழணும். என் காலம் போயாச்சு, இந்த வறுமை எனக்கு பழகி போச்சு, எம் பிள்ளைகளுக்கு இந்த வாழ்க்கை கூடாது. அவங்க படிக்கணும் நிறைய படிக்கணும். நான் செத்தாலும் எம் பிள்ளைக வாழணும். அதை தான ஒரு தாய் நினைப்பா. எம் பிள்ளைகளை நான் உங்க கிட்ட கொடுக்கிறேன்…” கண்ணில் நீர் இருந்தாலும் மனதில் வைராக்கியம் இருந்தது.
வெற்றி எதுவும் பேச வில்லை. குனிந்து அவள் காலை பிடித்து அதில் தலை வைத்து கொண்டான்.