எப்போது உறங்கினோம் என்று தெரியாமலே இருவரும் உறங்கி போனார்கள். அதிகப்படியான அழுத்தம் தூக்கத்தை கொடுத்தது போல… சரண்யா தான் முதலில் எழுந்தது, அவள் எழுந்த பின் தான் வெற்றி கண் விழித்தான். பெற்றவர்கள் பார்வை பிள்ளைகள் மீது தான் நிலைத்து நின்றது.
பிள்ளைகள் இருவரும் நல்ல தூக்கத்தில், விஜி பாய் விட்டு தரைக்கு வந்து இருக்க, மெல்ல நகட்டி பாயில் படுக்க வைத்தான் வெற்றி. இருவரின் பார்வையும் சந்தித்து கொண்டது. கணவன், மனைவியாக அறிய பட்டவர்கள் தான். ஆனால், கணவன் மனைவியாக உணர்ந்து ஒரு பொழுதும் வாழ வில்லை. இன்று இரு பிள்ளைகளின் பெற்றோர், வேடிக்கை தான். தாங்கள் சரியாக இருந்தால் தங்கள் பிள்ளைகளின் வாழ்வு சிறப்பாக அமையும். அது மட்டும் தான் அவர்கள் மனதில் நின்றது. இவர்களால், இவர்களை கொண்டு, இவர்களின் மறுபதிப்பாக இவ்வுலகை காண வந்தவர்கள். இப்பிள்ளைகளின் முழு பொறுப்பும், பெற்றவர்களாக இவர்கள் இருவருக்கும் உள்ளது. ஆண் வருமானத்திற்கு, பெண் பிள்ளை பராமரிப்புக்குக்கு மட்டும் தான் என்றெல்லாம் கிடையாது. பிள்ளை வளர்ப்பில் பெற்றோர் இருவரும் சரிசமம் தான். குழந்தைகளின் எதிர்காலம் என்பது நல்ல குடும்ப சூழலை அடிப்படையாக கொண்டது. அதன்படி ஒரு குடும்ப தலைவனாக தன் பொறுப்பை, தன் பங்கை, தன் கடமையை நிறைவேற்ற முன் வந்து விட்டான். இதுவரை எப்படியோ, இனி தன் குடும்பம் என்ற கூட்டில் முதலில் இருப்பது சரண்யா, பிள்ளைகள் தான் என்பதில் உறுதியாக நின்றான்.
சரண்யா காலை கடன் முடிக்க வெளியில் சென்று விட்டாள். வெற்றி பிள்ளைகளை நெருங்கி மீண்டும் படுத்து விட்டான். அவர்களின் அருகாமையை உணர்வதற்காக… நேற்று இரவு அழுத அழுகையையும், வலியையும் நீர் கொண்டு கழுவி, தன்னை திடப்படுத்தி கொண்டாள். அன்றைய நாளுக்கான தேவை ஓட தொடங்கியாச்சு… பால் வாங்க கீழ வரும் போது, “வீட்டுல இருக்குற தம்பி யாரு?… சொந்தமா சரண்யா…” எதிர்வீட்டு குரல்.
சின்ன சிரிப்போடு, “அஜி அப்பா ஊருல இருந்து வந்து இருக்காங்க…” என்றதோடு முடித்து கொண்டாள். எல்லோருக்கும் தெரியும் தான், இருந்தும் ஒரு கேள்வி இவள் வாயில் இருந்து என்ன வரும் என்று…
பாலை காய்ச்சி தனக்கு டீ போட்டு கொண்டவள், வெளி வராண்டாவில் அமர்ந்து கொண்டாள். அவளுக்கான நேரம், வெளி வரும் சூரிய உதயத்தை பார்த்தபடி டீ குடித்தாள். அதன் பின் பரபரப்பு தான். பெரிய மெனு என்று இல்லை ஒரு கலவை சாதம், காய், தோசை, சட்னி. இவள் வீட்டு வேலை முடியாமல் பிள்ளைகளை எழுப்ப மாட்டாள். இரண்டையும் ஒன்றாக பார்க்க முடியாது.
சரண்யா அரவத்தில் வெற்றி முழித்து கொண்டான். ஆனால், எழுந்து கொள்ளவில்லை. மனம் கொஞ்சம் அமைதியாக, நேற்றைய அழுத்தம் குறைந்து இருந்தது. சரண்யா முகம் ரொம்ப தெளிவு… இந்த அழுகையும், தெளிவும் புதிது இல்லை போல…
அடுத்து என்ன பிள்ளைகள் உடன் மல்லு கட்டி குளிக்க வைத்து, உடை மாற்றி, இருக்கும் கொஞ்சம் முடியை கிளிப்பில் அடக்கி, தோசை எடுத்து வைத்து ஊட்ட தொடங்கினாள். எல்லா வேகம், பரபரப்பு தான். வெற்றி பார்த்து மட்டும் தான் இருந்தான். அவள் தோதுக்கு பிள்ளைகள் இழு பட்டது போல வெற்றிக்கு தோன்றியது. தன் பிள்ளைகள் பாவம் என்று கூட எண்ணினான். அதை வாய் திறந்து மட்டும் தான் சொல்ல வில்லை.
அவள் பாடு அவளுக்கு… இரு பிள்ளைகள் பைகளை எடுத்து கொண்டு நாலு தெரு நடக்க வேண்டும். அதன் பின் அவள் வேலைக்கும் நடை தான், ஓட்டம் தான். ஆட்டோ செலவை மிச்சம் செய்கிறாள். இன்னும் நான்கு மாதத்தில் பிள்ளைகள் பிறந்த நாள் வர இருக்கிறது. அவர்கள் ஆசை பட்ட கேக் வாங்கி கொடுக்கும் எண்ணம்…
வெற்றியும் இவர்கள் உடன் கிளம்பி விட்டான். பிள்ளைகள், அவனை வெறிக்க, வெறிக்க பார்த்தார்கள். ஆனால் நெருங்கி வரவில்லை. தற்போது அறிமுகமான முகமாக தோன்றியது. ஒரு சின்ன சிரிப்பு மட்டும் தான், ஒட்டி வர மாட்டார்கள். வெற்றிக்கு இது மட்டும் போதும் என்று தோன்ற வில்லை. தன் பிள்ளைகள் தன்னோடு இணையவே விரும்பினான். ஆனால், பிள்ளைகள் தான் எது ஒன்றுக்கும் தாய் முகம் பாத்தே நின்றார்கள்.
இரு பிள்ளைகளுக்கு குளிக்க வைக்க, உணவு ஊட்ட சிரமப்படும் போது ஒரு பிள்ளையை தன்னிடம் கொடு என்று சொல்ல ஆசை வந்தது. மனைவியுடன் சேர்ந்து பிள்ளைகள் தேவையை கவனிக்க விருப்பம் தான். ஆனால், யாரும் விட தான் மாட்டேன் என்கிறார்கள். தள்ளி வைத்தார்கள் என்று சொல்ல முடியாது, காபி, டிபன் எல்லாம் ஆச்சு. ஆனால், தந்தையாக, குடும்பத்தில் ஒருத்தராக இணைக்க தான் மாட்டேன் என்கிறார்கள். கண் பார்க்க வீட்டில் தேவை நிறைய இருக்கிறது, வெற்றி கையில் பணமும் இருக்கிறது, உரிமையாக செலவு செய்யாமல் தள்ளி நிக்கிறான். சரண்யா மேல் கொஞ்சம் மனத்தாங்கல் இவள் ஒரு வார்த்தை உங்கள் தந்தை இவர் தான் என்று சொல்லலாமே… வாய் திறந்து அவளிடம் கேட்க வில்லை. தன் பக்கம் என்ன நியாயம் இருக்கு, மனைவியை கேள்வி கேட்க.
குடும்பமாக கீழ சென்றார்கள். பிள்ளைகள் இருவரும் தாயை விட்டு நகரவில்லை. தெருவில் இறங்கும் போது சரண்யா கையில் இருந்த பிள்ளைகள் பையை வாங்கி கொண்டான். மற்றவர்கள் பார்க்க சரண்யா வாக்குவாதம் செய்ய மாட்டாள் அல்லவா… விஜி இடுப்பிலும், அஜி கையிலும் இருக்க, மனைவியை ஒட்டி நடந்தான் வெற்றி வேல். அவன் கார் சற்று தள்ளி தான் இருந்தது. அவர்களை அதில் கூட்டி செல்ல ஆசை தான். ஆனால், சரண்யாவை ரொம்பவும் சீண்ட கூடாது என்று அமைதி காத்தான். பிள்ளைகளை பள்ளியில் விட்ட இருவரும், அவரவர் திசையில் சென்று விட்டார்கள்.
வெற்றி அவசரமாக தன் வீட்டிற்க்கு வந்தான். இப்போது எல்லாம் வீட்டில் முன் மாதிரி யாரோடும் கலப்பது இல்லை. தேவைக்கு மட்டும் வந்து செல்கிறான். யாருக்கோ காத்திருப்பதாக பட்டது தனத்திற்கு. மகன் தான் எந்த விவரமும் பகிர மாட்டேன் என்கிறானே… கொஞ்ச நேரத்தில் ஒரு வெளிநாட்டு பார்சல் வந்தது, அதில் நிறைய சாக்லெட், நட்ஸ், குக்கீஸ் அத்தோடு விதவிதமான உடைகள், கலர் கலரான செருப்பு, குழந்தைகள் சோப்பு, சாம்பு, லோசன் என்று வகையாக இருந்தது. பெரிய பார்சல் தான். அங்கிருக்கும் தன் நண்பர்களிடம் கொடுத்து விட கேட்டு கொண்டான். முன்பும் கொண்டு வந்தான் தான், அது எல்லாம் தம்பி, தங்கை பிள்ளைகளுக்கு என்று எடுத்து வந்தது. அப்போது தான் தனக்கு பிள்ளைகள் இருக்கு என்று தெரியாதே… பார்சலை பிரித்து பையில் அடுக்க,
பார்த்திருந்த தனம், “மாய வெளிய வா… உங்கண்ணன் என்னவோ நிறைய வாங்கி வந்து இருக்கான். வந்து பாரு குட்டி பையனுக்கு தேவையானதை எடுத்துவை, சக்தி எங்க அவனையும் வர சொல்லு…” என்று கத்தி சொல்ல.
இரு குடும்பமும் வந்து விட்டார்கள். ஆனால், வெற்றி யாரையும் கண்டு கொள்ள வில்லை. உடைகளை பிரித்து அடுக்க தொடங்கினான். எல்லாம் நல்ல தரமான துணிகள், பார்த்தாலே தெரிந்தது.
“எல்லாம் பெருசா இருக்கே. கொஞ்சம் சின்னதா பார்த்து வாங்க கூடாது. இவங்களுக்கு ரொம்ப லூசா இருக்கும்…” என்றார் தனம்.
வெற்றி தாயை பார்த்தவன், “நான் இவங்களுக்கு வாங்கலையே?…”
“வேற யாருக்கு. நம்ம வீட்டு பிள்ளைக இவங்க தானே…” என்று யோசனையாக இழுக்க.
“உங்களுக்கு இவங்க மட்டும் பேர பசங்களா இருக்கலாம். எனக்கு நான் பெத்த ரெண்டு பிள்ளைக இருக்கு தான. அவங்களுக்கு தான் வாங்குனேன்…” என்று அழுத்தி சொல்ல.
இவன் இதை விடவே இல்லையா. தன்னால் ஒரு காலமும் சரண்யாவை, அவள் பிள்ளைகளை ஏற்று கொள்ள முடியாது.
நிதானமாக எழுந்தவன், “அம்மா, அபிக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. நாங்களே பேசி தீர்த்துட்டோம். இன்னைக்கு என் நெஞ்சுல நிக்குறது எம் பிள்ளைக தான். அவங்களை தாண்டி நான் யோசிக்க மாட்டேன்…”
“பெத்தவ பார்த்துப்பா வெற்றி…”
“நானும் பெத்த தகப்பன் தான். நானும் எம் பிள்ளைகளை பார்த்துப்பேன்…” கோபம் எகிறியது.
“அப்ப என்ன சொல்ல வார பெரியவனே. அவ இங்க தான் வருவாளா…” தனத்திற்கு கோபம், அத்தோடு சரண்யாவை எதிர்கொள்ள கொஞ்சம் பயமும் இருந்தது.
“ஆமா, என் பொண்டாட்டி, பிள்ளைக என் வீட்டுக்கு தான வருவாங்க. பிள்ளைகளுக்கு இன்னும் அஞ்சு மாச ஸ்கூல் இருக்கு. அது முடியவும் தான் இங்க கூட்டி வரணும்…”
“அதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன் வெற்றி. அவ இங்க வர கூடாது. எனக்கு அவளை நினைச்சாலே பத்திக்கு வருது. அவளும் அவ மூஞ்சியும்… இந்த வீட்டுல அந்த ஒட்டாடு ராஜியம் பண்ணுமோ…”
“அம்மா” என்று கத்தி விட்டான். இதற்கு முன் சரண்யாவை பல தடவை சாடி இருக்கிறார். அப்போது எல்லாம் மெளனமாக கடந்து விடுவான். நேற்று அவள் வலியை அறிந்த பின் தாய் பேச்சை கேட்க முடியவில்லை. கேலியாக கூட ஒருவரின் பிறப்பை குறை சொல்ல கூடாது தானே… அதுவும் தங்கை, தம்பி, அவன் மனைவி என்று இருக்கும் போது சரண்யாவை பேசியது அவனை குத்தியது. தம்பி மனைவியிடம் ஒரு நாள் கூட அவ்வாறு நடந்து கொண்டதில்லை. தன் மனைவி என்றால் இளப்பமா!…
தாயை பார்த்தவன், அவரை காயப்படுத்தும் என்று தெரிந்தாலும் “ இந்த வீடே அவ வீடு தான். அவளுக்கு தான் முதல் உரிமை. உங்களுக்கு பிடிச்சாலும், பிடிக்காம போனாலும் எம் பேருல இருக்குற வீடு, சொத்து எல்லாம் அவங்களுக்கு உரிமையானது தான். ஒன்னவே இருந்தாலும் இவங்க யாரும் உரிமை கொண்டாட முடியாது. தள்ளியே நின்னாலும் எம் பிள்ளைக தான் உரிமையானவங்க. ஒரு வேளை நானே இல்லாம போனாலும், இது எல்லாம் தான்னால அவங்களுக்கு தான் போகும். இது தான் சட்டம்…” என்றவன். தன் தம்பி, தங்கையை காட்டி,
“சட்டதுக்கு முன்னாடி இவங்க எல்லாம் என் சொந்தம் மட்டும் தான். என் குடும்பம்ன்னா அது என் பொண்டாட்டி, பிள்ளைக தான் முத வருவாங்க. ஏன்னா, அவங்க தான் சரண்யா வெற்றி வேல், அஜிதா வெற்றி வேல், விஜிதா வெற்றி வேல்…” என்று அழுத்தமாக சொன்னவன், அவர்களை விட்டு நகர்ந்து விட்டான்.
பிரம்மை பிடித்தது போல் நின்று இருந்தார் தனம். “ஏலே சின்னவனே என்னாலே சொல்றான் உன் அண்ணகாரன். அந்த சீக்கு வந்த கோழிக்கும், அவ பெத்ததுக்குமா இந்த சொத்து எல்லாம்… மூஞ்சில முள்ளு வச்சா மாதிரி தான் இருப்பா, அவ கூட எப்படி நாம இருக்குறது. ரெண்டும் பொட்டைய பெத்தவளுக்கு சொத்து ஒன்னு தான் கேடு…கடைசில பிள்ளையை காட்டி மயக்கிபிட்டாளே. அரசனத்து, கொள்ளி போட கூட ஆள் இல்லாம இருக்கவா, தலை மகனா இவனை பெத்தேன். யாருமே பிள்ளை பெறலையா, காணாதத கண்ட மாதிரி துள்ளிகிட்டு திரியிரான். கூறு கெட்டவன்… பொட்டை பிள்ளைக்கு இம்புட்டு பகுமானமா… தனம் யாருன்னு மறந்து இந்த வீட்டு படி ஏறுவாள, அதையும் பார்ப்போம்…” அகங்காரமாக சொல்ல.
மாயா, சக்தி இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு தங்கள் தவறு புரிந்தது. அதன் தொட்டே அண்ணனை விட்டு தள்ளி நிற்கிறார்கள்.
வெற்றிக்கு கோபம் குறைய வில்லை. தம்பி, தங்கை என்று எவ்வளவு பார்த்தான். தனக்கு பிள்ளைகள் இருக்கு என்று தெரியாமலே அவர்கள் தன் வீட்டு வாரிசு என்று அவ்வளவு செய்தான். தனக்கு இரு பிள்ளைகள் இருக்கு என்று சொல்லியும், ஒரு வார்த்தை இதுவரை கேட்க வில்லையே. அம்மாக்கு சரண்யாவை தான் பிடிக்காது, பேத்தி என்ற பாசம் கூடவா இல்லை. தந்தை மட்டும் தான் பார்க்க வரவா, ஆட்களை வைத்து பேசவா, பேத்தியை பார்க்கணும் என்று தினமும் சொல்கிறார். என் பிள்ளைகள் நினைப்பு இவர்கள் யாருக்கும் இல்லையே…
சரண்யா மதிய உணவு வேளையில் எல்லாவற்றையும் அகிலாவிடம் சொல்லி விட்டாள்.
“நான் தப்பு பண்ணிட்டேனா அகி. எனக்கு வேற வழி தெரியலை. முடிவு எடுத்து சொல்லிட்டாலும், மனசு சரியில்லை. பிச்சை கேட்ட மாதிரி இருக்கு…”
“லூசு சரண் உன்னை நீயே ஏன் தாழ்த்திகிற. நீ ஒன்னும் அவரை தேடி போய் எனக்கு வாழ வழி இல்லன்னு சொல்லலையே. அவர் தானே வாழ்க்கைய தேடி உன்கிட்ட வந்தாரு. உம் முடிவு சரி தான் சரண். அவர் தான் பிள்ளைக அப்பா, அப்போ அவர் தான் எல்லாம் பார்க்கணும். அவரும் விட்டு குடுக்கலை, நீயும் தாழ்ந்து போகல. நீ கேட்காமவே செய்யிறது அவர் கடமை சரண். அவர் பெத்த பிள்ளைகளுக்கு அவர் செய்யட்டும். இதுல பெருசா யோசிக்க ஒன்னுமே இல்லை. மொத நீ மாறு, பிள்ளைக உனக்கு மட்டும் உரியவங்க கிடையாது. அவருக்கும் சம உரிமை இருக்கு, பொறுப்பு இருக்கு, கடமை இருக்கு. நீ மடங்கி போகாத, தலை நிமிர்ந்து நில்லு சரண்யா. இது அவர் பிள்ளைக தான, அவர் கிட்ட தான பெத்த… அப்போ அதை சொல்ல என்ன தயக்கம். தைரியமா சொல்லு வெற்றி வேல் தான் அப்பான்னு… எம் பிள்ளைக அப்பன் இல்லாத பிள்ளைக இல்லை. குத்து கல்லு மாதிரி ஒருத்தன் இருக்கான்னு சொல்லு…”
அவள் முகம் தெளியாததை கண்டு,
“சரண், சரண். என் ஆசையே உன்னை எல்லாரும் வியந்து பார்க்கணும். அஞ்சுக்கும், பத்துக்கும் கஷ்ட பட்டவள கார்ல போறான்னு வியந்து பார்க்கணும். மத்தவங்க முன்னாடி உன் நிலை உயரணும். அப்ப உன் அண்ணிகாரி மூஞ்சிய நான் பார்க்கணும்…” என்று அகி சிரிக்க.
“சும்மா இரு அகி. என் வலி உனக்கு புரியலை தானே. என் இடத்துல இருந்து யோசி அகி…” என்று சரண்யா வேதனை தாளாமல் சொல்ல.
“அப்போ உன் ரோசம் பெருசுன்னு இந்த கூட்டுக்குள்ள தான் அடைய போறயா… இங்க பாரு சரண். உன் உரிமையா, உன் வாழ்க்கைய ரோசம் பார்த்து நீ விட்டு குடு. ஆனா, எக்காரணம் கொண்டும் உம் பிள்ளைக உரிமையை மட்டும் விட்டு கொடுக்காத. வெற்றி வேல் பிள்ளைக மட்டுமல்ல வெற்றி வேல் வாரிசாவும் அஜி, விஜி தான் இருக்கணும். உன் வலிக்காக அவங்க உரிமையா, அவங்க வாழ்க்கைய, அவங்க உறவுகளை விட்டு கொடுக்க வைக்காத. பாதி பேரு உன்னை மாதிரி தான். புருசன் மேல உள்ள கோபத்துல பிள்ளைகளையும் பிரிச்சு கூட்டி போயிடுவாங்க. நம்ம நாட்டுல எந்த ஆம்பிளை தனியா வாழ்வான். வெற்றி அண்ணனும் கொஞ்ச வருசம் உம் பின்ன சுத்துவாங்க. அப்புறம் அவங்க வீட்டு ஆளுகளே வேற கல்யாணம் பண்ணி வச்சுருவாங்க. ஒரு கட்டத்துல அவருக்கே துணை தேவை படலாம். அப்புறம் அவருக்கும் குழந்தை பிறக்கும். அந்த குழந்தை தான் உரிமையான வாரிசா வளரும். நிச்சயம் உம் பிள்ளைக ஒதுக்கி வைப்பாங்க. அது இன்னும் கொடுமை சரண். உரிமை இருந்தும் ஒதுங்கி நிக்கணும். உம் பிள்ளைக உரிமைய நீ விட்டு கொடுக்காத. யோசிச்சு பாரு…”
நெருங்காத பிள்ளைகளை நெருங்க வைக்க வெற்றி ஒரு வழியை கண்டான். அது தான் அவனின் திருமண ஆல்பம். இருவரும் ஜோடியாக நின்றதை பிள்ளைகளுக்கு காட்டி தான், தான் அப்பா என்று புரிய வைக்க முயன்றான்.
அப்போது தான் வேலை முடித்து வந்தாள் சரண்யா. அவள் பார்வையிலும் பட்டது. முழுதாக பத்து பக்கம் தான் திருப்பி இருப்பான். பிள்ளைகள் ஆர்வமாக பார்த்தார்கள்.
அடுத்த பக்கத்தை புரட்டி எடுக்க, சரண்யா முகம் கிழிக்க பட்டு இருந்தது. அதிர்ந்து போனவன் அடுத்தடுத்து பார்க்க எல்லா போட்டோவிலும் சரண்யா முகம் மட்டும் கிழிக்க பட்டு, பேனா வைத்து அடித்து, முகத்தை மறைத்து என்று பலதும் இருக்க, அரண்டு போனான் வெற்றி வேல். சரண் பார்வை அந்த ஆல்பத்தில் தான் நிலைத்து நின்றது.