வெற்றி அரண்டு போய் சரண்யா முகத்தை தான் பார்த்து நின்றான். அவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நிச்சயமாக இந்த வேலையை அவன் செய்ய வில்லை. அவன் குடும்பத்தில் யார் செய்தார்கள் என்றும் தெரியவில்லை. முதலில் பிள்ளைகளை நெருங்கி தான் அவர்களின் தந்தை என்று பதிய வைத்து, அதன் பின் தங்கள் கூட்டில் சரண்யாவை இழுத்து, குடும்பமாக சேர வேண்டும் என்று பல கனவு கண்டவனை ஒரு நொடியில் கண்ணில் விரலை விட்டு ஆட்டி விட்டார்கள். என்ன விளக்கம் கொடுக்க முடியும். தயக்கமாக சரண்யாவை பார்த்தான்.
அவள் எழுந்து கொண்டாள். இதற்கு மேல் முடியும் என்று தோன்ற வில்லை. பிள்ளைகளுக்கு இவனுடன் இருக்க பயமில்லை, அதை தெரிந்து வேலைக்கு கிளம்பி விட்டாள். வெற்றிக்கு தெரியும் மாலையில் பிள்ளைகள் தனி தான் என்று… அதன் பொருட்டு எத்தனை வேலை இருந்தாலும் கிடப்பில் போட்டு விட்டு வீடு வந்து விட்டான். அவன் வருவான் என்பதை சரண்யாவும் அறிவாள். கொஞ்சம் நிம்மதி, பிள்ளைகள் குறித்த பயம் இன்றி வேலை செய்யலாம். இல்லையென்றால் பிள்ளைகள் நினைவு தான் வாட்டும். இன்றும் பிள்ளைகளை அழைத்து வர, வீட்டில் வெற்றி இருந்தான்.
பிள்ளைகளுக்கு பால் காய வைத்தவள் தான். அதை என்னவென்று கூட பார்க்காது, செருப்பை மாட்டி கொண்டு ஓடி வந்து விட்டாள். வெற்றி தலையில் அடித்து கொண்டான். நல்லா சொதப்பியாச்சு போ…
உயிருடன் இருக்கும் நபர்களின் போட்டோ கூட கிழிக்க விட மாட்டார்கள் அபசகுணம் என்று… அவ்வளவு ஏன் வெற்றி மீது அவ்வளவு வெறுப்பு இருந்தும், போடா என்று தூக்கி போட்டும் அவனின் போட்டோ அவளிடம் பத்திரமாக இருக்கிறது. நிச்சய ஆல்பம் பெண் வீட்டு செலவு என்பதால் அவள் கையில் தான் வைத்து இருக்கிறாள். அதை திரும்பி பார்க்க வில்லையே தவிர அதை தூக்கி போட மனதில்லை.
உதாசீனம், அவமதிப்பு எல்லாம் எவ்வளவு பெரிய கொடுமை. தன் இடம் எதுவென்று காட்டி கொடுத்து விட்டார்கள். இவனை நம்பி திரும்பவும் ஒரு வாழ்க்கையில் இறங்க தான் வேண்டுமா…. தலை வலித்தது, வேகமாக இறங்கி வர, பொத்தென்று இடித்து கொண்டாள். வேற எதில் வெற்றியின் பல்சரில் தான். கருப்பு கலர் பல்சர்… பார்த்தவுடன் தடுத்தும் ஒரு துளி கண்ணீர் வெளியேறி விட்டது.
இந்த பைக் அவளுக்கு அவ்வளவு இஷ்டம். பொண்ணு பார்க்க வரும் போது இந்த வண்டியில் வந்தவனை, பார்த்தவுடன் மனதில் படம் பிடித்து கொண்டாள். கல்யாணம் ஆகா போகிறது என்று தான் புது வண்டி எடுத்தது, புது பொண்டாட்டி கூட போய் வர… ஆனால் சரண்யா இதில் இரண்டு முறை தான் ஏறி இருப்பாள். ஒன்று திருமணம் முடிந்த மறுநாள் கோவில் செல்வதற்கு, அடுத்து கர்ப்பத்தை உறுதி செய்ய ஆஸ்பத்திரி செல்வதற்கு மட்டும் தான். ஆனால், இந்த வண்டி அவளுக்கு அவ்வளவு இஷ்டம். தினமும் துடைத்து சுத்த படுத்தி கொண்டே இருப்பாள்.
வெற்றியை பார்க்கும் போது கூட அவன் துரோகம் தான் முன் நின்றது. நான்கு வருடம் கழித்து இந்த சின்ன பொருளை கண்டதும், அவள் காதல் நெஞ்சம் விம்பியது. எத்தனை ஆசை, கனவோடு கை பிடித்தாள், எல்லாம் காணல் நீர்… முயன்று தன்னை மாற்றி கொண்டாள்.
அங்கு வெற்றி பிள்ளைகள் உடன் போராடி கொண்டு இருந்தான். தான் ஒரு உங்கள் அப்பா என்று சொன்னாலும், ஒரு வார்த்தை வாங்க முடியவில்லை. அவர்களுக்கு புரியாமலும் இல்லை. தினமும் தங்கள் கூடவே இருக்கும் தங்களின் அப்பா தான் என்றளவில் புரிந்தது. ஆனால், அதை வாய் வார்த்தையாக சொல்ல வர வில்லை. இன்னும் அவனை பார்த்து சிரிப்பு மட்டும் தான் தொடர்கிறது.
தனம் கொதித்து கொண்டு அமர்ந்து இருந்தார். தன்னை உதாசீனப்படுத்தி பேசி செல்லும் மகன் புதிதாக இருந்தான்.
“ஏய்! மாயா… புது பொண்டாட்டி பவுசுலே புருசனை புடிக்க தெரியாதவ, எப்ப எப்படி கைகுள்ள போட்டா… அந்த எலும்பு கூடு உசுர் புடிச்சிருச்சோ. செத்தேன், பொழச்சேன்னு திரிவா, இவ எப்படி ரெட்டை பிள்ளை பெத்தா… பொட்டை கழுதைய பெத்துட்டு உங்கண்ணன் பவுசு மச்சு தூக்குது போ…”
“செத்த நேரம் கம்முன்னு இரும்மா… நீ இப்படி பேசுறது தான் அண்ணனுக்கு பிடிக்க மாட்டாது. உன் வாய்க்கு தான் அவன் ஒதுங்கி ஓடுறான். எங்களை கூட திரும்பி பார்க்கல. எம் மகனை கூட தூக்கலை. அவன் பிள்ளைகளை போய் பார்க்கணுமோ.”
“அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை. கழுத்து சுளுக்குன மாதிரி வெட்டிக்கு திரிஞ்சா திரியட்டும். நமக்கு என்ன? என் வயித்துல பிறந்துட்டு எங்கிட்ட மூஞ்சிய திருப்புன, அவன் ஆத்தா நான், எனக்கு எம்புட்டு இருக்கும். அந்த நாடககாரி இங்க தான வந்தாகணும். அப்ப பார்த்தா போதும், எம் மகன் மாதிரி இருந்தா தான் தூக்க கூட செய்வேன். அவளை மாதிரி இருந்தது, சீந்த கூட மாட்டேன்…”
“இப்படி ஏதாவது பேசி, கூட பொறந்த எங்களை பிரிச்சு விட்று…” என்றாள் காட்டமாக.
“ உங்கண்ணன் தான் ரெண்டும் பொம்பளை பிள்ளை வச்சுருக்காங்க. உறவு வேணும்ன்னு உன் வீட்டு படி தான் அவன் வருவான். நீ தலைக்கு மேல ஆம்பிளை பிள்ளை பெத்துருக்க, உனக்கு என்ன… நானும் ரெண்டு ஆம்பிளை பிள்ளை தான் பெத்தேன். உனக்கும் முத பிள்ளை ஆப்பிளை பிள்ளை தான், சக்திக்கும் அப்படித்தான். இவ என்னடி வித்தியாசமா பொம்பளை பிள்ளை, அதுவும் ரெண்டு வச்சுருக்கா… அவ ராசி அப்படி…” என்றார் எகத்தாளமாக.
சரண் இரவு உணவை தயார் செய்து கொண்டு இருந்தாள். வெற்றி மெல்ல தயங்கி தான் அருகில் வந்தான். அவன் அரவம் உணர்ந்து திரும்பி பார்க்க,
“சரண் பிள்ளைக என்கிட்ட பழக மாட்றாங்க. அப்பான்னு கூட சொல்லலை…” என்றான் பாவமாக.
ஒரு பெருமூச்சு வந்தது. உன்னை அங்கீகரிக்கிறேன் என்று சொன்ன பின் ஒதுக்கி வைத்து என்ன பண்ண… இவனை உள்ளே விட்டதே பிள்ளைகளுக்காக தான. சாதரணமாக பிள்ளைகளிடம் இவர் தான் உங்க அப்பா, வெளிநாடு வேலைக்கு போய்ட்டு திரும்ப வந்துட்டாங்க… ஒற்றை வரியில் முடித்து கொண்டாள்.
ஓட்டலில் மறு சோறு கேட்டது போல ஒரு ரியாக்ஷன் கொடுத்து சொல்லிட்டு போறா… இவர்கள் என்னை அப்பா என்றே அழைக்க மாட்டார்கள் போல… நொந்து கொண்டான் வெற்றி. இதுவரை சொல்லி கூப்பிடாத உறவு என்பதால் சட்டென்று வரவில்லை. அவனும் குரளி வித்தை முதற்கொண்டு காட்டி விட்டான். ஒன்னும் கதையாக காணம்.
அன்றும் அவன் அள்ளி வந்த உணவு பண்டங்கள், பொருட்கள் எல்லாம் மூலையில் தான் கிடந்தது. பிள்ளைகள் திரும்பி கூட பார்க்க வில்லை. சரண்யா இவர் தான் உன் அப்பா என்ற பின் பிள்ளைகள் உடன் ஒரு நெருக்கம் மட்டும் வந்து இருந்தது.
மறுநாள் ஸ்நாக்ஸ் டப்பாவில் வெளிநாட்டு சாக்லெட் இடம் பெற்றது. சரண்யாக்கு தெரியும், பிள்ளைகள் புது உணவுகளை எவ்வளவு விரும்பி உண்ணுவார்கள் என்று… அம்மாவின் அடிக்கும், மிரட்டலுக்கும் பயந்து தான் தொட கூட இல்லை. அப்பா என்ற உறவு பிள்ளைகளுக்கு வேண்டும் என்று தான் சரண்யா நினைத்தது, அதை ஏன் தடுக்க வேண்டும். ஆனால், பிள்ளைகளின் அன்பை பெறுவது அவன் சாமர்த்தியம் தான்.
வீட்டில் வெற்றி துணிகள் இடம் பெற்றது. தங்களோடு உறங்கி எழும் அப்பாவை பிள்ளைகள் நெருங்க தொடங்கினார்கள். இந்த பக்கம் சரண்யாவும், அந்த பக்க ஒரு மூலையில் வெற்றி படுத்து கொள்வான்.
அன்று ஒரு விடுமுறை நாளில் பிள்ளைகள் சொப்பு சாமான் வைத்து விளையாடி கொண்டு இருக்க, உடன் அமர்ந்து வெற்றி பார்த்து கொண்டு இருந்தான்.
விஜி ஒரு டம்ளர் நிறைய தண்ணீரில் மண்ணை அள்ளி போட்டு கலந்து கொண்டு இருந்தாள். கேட்டால் டீ போடுகிறாளாம். மண் கலந்த ஒரு டம்ளரை வெற்றி இடம் கொடுத்து குடிக்க சொல்ல, அரண்டு விட்டான்.
“குடி, டீ குடி…”என்று விஜி தொனத்த, அவன் மறுத்து கொண்டு இருந்தான்.
“ம்ச்ச், ப்பா குடி, டீ குடிப்பா…” என்று விஜி அதட்ட, அதிர்ந்து போனவன். திரும்ப கேட்க. பிள்ளைக்கு புரியவில்லை.
அவன் சிரித்து கொண்டே டீ கேட்க. திரும்ப எதார்த்தமாக வந்து விட்டது அப்பா என்ற சொல். வேற என்ன! அந்த மண்ணு கலந்த டம்ளரை மகிழ்வோடு குடித்து கொண்டிருந்தான். பத்து டம்ருக்கு மேல் காலி செய்து விட்டான், அப்பா என்ற ஒரு வார்த்தைக்காக. அஜியும் மெல்ல நெருங்கி வர, அவர்களுக்கு சமமாக விளையாட தொடங்கினான்.
அவர்களோடு இணைந்து அவர்கள் போலவே சிரித்து, ரியாக்ட் செய்து அவர்கள் வட்டத்தில் தன்னை இழுத்து கொண்டான். அப்ப அப்ப அப்பா என்ற வார்த்தை பிள்ளைகள் இடம் வந்து விழும். சரண்யா கண்டு கொள்ளாதது போல இருந்து கொள்வாள். அவர்களுக்கு பைக்கை காட்டி ஆசையை ஏற்படுத்தி முதலில் அந்த தெரு முழுதும் சுற்றி வர தொடங்கினான். பின் அங்கிருந்த கடை, பேக்கரி என்று பிள்ளைகள் உடன் முன்னேறி கொண்டான். அவன் மனதில் உறுத்தும் விசயம் எல்லாம் சரண்யா தான். என்ன செய்தும் அவள் மட்டும் ஒட்டவே மாட்டேன் என்கிறாள். நான்கு மாதத்தில் திருபுவனம் செல்ல வேண்டும். கார் வாங்கி கிடக்க, பூஜை போட்டு தொழில் தொடங்க வேண்டும். சரண்யா வருவாளா என்று தெரியவில்லை. அவள் வந்தாள் தாங்கள் குடும்பமாக சேர்ந்தது அறிவிப்பு செய்ய தேவை இல்லை.
பிள்ளைகளுக்கு செய்யும் போது அமைதியாக கடந்து செல்பவள், வீட்டிற்க்கு எனும் போது தவிர்த்து, தடுத்து விடுவாள். பழங்கள் வீணாக போகிறது ஃப்ரிட்ஜ் இல்லை, ராத்திரியில் துவைப்பதை குறைக்க வாஷிங் மெசின் இல்லை, பிள்ளைகளுக்கு மெத்தை இல்லை, ஸ்டடி டேபிள் இல்லை, டிவி வாங்கணும், பிள்ளைகள் தூங்க மெத்தை வாங்கணும். இப்படி பலதும் இருக்க, சரண்யா நெருங்க விட வில்லை. அவனும் முயற்சி செய்து கொண்டு தான் இருந்தான்.
பிள்ளைகள் பள்ளிக்கு சென்று, தான் அஜி, விஜி அப்பா என்று அறிமுகம் செய்து கொண்டு பிள்ளைகளை கூட்டி வரும் பொறுப்பை எடுத்து கொண்டான். தற்போது மாலையில் சரண்யா வீட்டுக்கு வருவதில்லை. வெற்றி இருக்க, வேலை மிச்சம். அன்று பிள்ளைகள் உடன் பேக்கரி சென்றான்.
முன் பக்கம் விஜி, பின் பக்கம் அப்பாவை கட்டி கொண்டு அஜி. தங்கள் தெரு தாண்டி மெயின் ரோடு செல்லும் வழியில் தான் பிள்ளைகளை கவனித்தார் சரண்யா அப்பா. யாரோ தூக்கி செல்வதாக பயந்து போன அவர், வண்டி ஒரு பேக்கரியில் நுழையவும் பின்னே சென்றார். தலை கவசம் அணிந்து இருந்த வெற்றியை தெரியவில்லை. பேக்கரி உள் சென்றதும் தான் நன்றாக முகம் பார்த்தார். அப்படி ஒரு அதிர்ச்சி, அதிர்ந்து நெஞ்சில் கை வைத்து கொண்டார்.
சரண்யா அன்று ஏதோ ஒன்று நிலையில்லாமல் இருந்தாள். மனைவி அருகில் சென்ற வெற்றி, அவளிடம் ஒரு பையை கொடுத்தான். சேலை தான், எல்லாம் விலை உயர்ந்தவை. அவளின் ஒரு மாத சம்பளம் ஒரு புடவையின் விலை.
“பிடிச்சு இருக்க சரண். உனக்காக ஆசையா வாங்கி வந்தேன். இந்த பேபி பிங்க் கலர், உனக்கு சூப்பரா இருக்கும்…”
கணவனை நிமிர்ந்து பார்த்தவள், “ வெற்றி கிஸ் மீ…” என்றாள்.