வெற்றி அரண்டு போய் நெஞ்சில் கை வைத்து கொண்டான். நான்கு வருடம் கழித்து மனைவியை பார்க்கும் போது கூட இந்த அளவுக்கு அதிர்ச்சியாக வில்லை. நம்ப முடியாமல் சரண்யாவை பார்த்தான். அவள் முகம் தெளிவாக தான் இருந்தது.
“சரண்… என்ன சொன்ன?…”
“தெளிவா தான் சொன்னேன். எனக்கு முத்தம் கொடுங்க. அதுவும் இங்கிலீஷ் கிஸ் தான் வேணும்…”
“ நானா, நான் எப்படி…”
“நீங்க தான். எப்பவும் சொல்லுவீங்க , நான் சரண்யா வெற்றி வேல்ன்னு. எம் பேருக்கு பின்னால இருக்குற வெற்றி வேல் எனக்கு யாரு எனக்கு அப்பாவா?… புருசன் தான. புருசன், பொண்டாட்டிகுள்ள இதெல்லாம் சகஜம் தான. நான் எதுக்கு இவ்வளவும் விளக்கம் கொடுக்கணும், நமக்கு இது ஒன்னும் புதுசு கிடையாதே…”
“உன்னை நீயே ஏன் சரண் காயப்படுத்திகிற?…”
“ அந்த வலி வேணும் வெற்றி. இல்லைன்னா உங்க போலி தனத்தை எம் மனசு உண்மைன்னு நம்பிருமே…”
“என்ன போலிதனம்?…” அவன் குரலில் சிறு கோபம் இருந்தது.
“அப்ப முத்தம் கொடுங்க…”
“எனக்கு ஒன்னும் இல்லை. உனக்கு தான் பாதிப்பு…”
“நான் ஏற்கனவே பாதிக்க பட்டவ தான். இல்லாமா எப்படி ரெண்டு பிள்ளை வரும்…”
“அப்ப சரி…” என்று அவளை நெருங்கி நின்றான்.
அவளும் சலிக்காமல் பார்த்தாள். அவள் முகம் அருகே தன் முகம் கொண்டு சென்றவன், தன் மூச்சை இழுத்து பிடித்து கொண்டான். நொடி கூட ஒட்டி நிற்க முடியவில்லை. அங்கிருந்த சுவற்றில் ஓங்கி அடித்தான்.
சரண்யா பதட்ட படவே இல்லை. அவன் நிலை தான் அவள் அறிவாளே… அவனுக்கு தன்னை குறித்தே தாழ்வான எண்ணம் தோன்றியது. கட்டிய மனைவி தானே, இரண்டு பிள்ளை பெற்றவன். அவளை நெருங்கவும் முடியவில்லையே, ஏன்?…
சரண்யாவை பார்க்கவும் சங்கடமாக இருந்தது. அவள் எண்ண நினைப்பாள். தயக்கமாக அவளை நிமிர்ந்து பார்க்க, சரண்யாவிடம் எந்த மாறுதலும் இல்லை. நிர்மலமான முகத்தோடு தான் அவனை பார்த்தாள்.
“நான் உங்க பொண்டாட்டி தான வெற்றி, என்னை நெருங்க என்ன தயக்கம் உங்களுக்கு?… அப்படி தயக்கம் இருந்தா அதுக்கு அர்த்தம் நான் உங்க பொண்டாட்டியே இல்லன்னு…” சொல்லும் போதே அவள் வாயை மூடி விட்டான்.
“இதை தான் நான் உங்களுக்கு புரிய வைக்க நினைச்சேன். எங்களை தேடி, எங்க நினைப்போடா நீங்க இந்த ஊருக்கு வந்தீங்க. உங்க நினைப்பு என்னவோ எனக்கு தெரியாது. ஆனா, உங்க பொறுப்பை, கடமையை ஏத்துக்க முன் வந்தீங்க. நானும் அப்படி தான். அதை தாண்டி வெற்றி வேல், சரண்யா ரெண்டு பேரும் யாரு?… நமக்குள்ள என்ன இருக்கு… இது வரைக்கும் ஒரு நாள் உட்கார்ந்து யோசிச்சு இருக்கீங்களா?…”
தலை குனிந்து கொண்டான்.
“என்னோட மூச்சு காத்த ரெண்டு நிமிசம் கூட சகிக்க முடியாத நீங்க எப்படி எனக்காக காலத்துக்கும் நிப்பேன்னு வந்து சொல்றீங்க. பிள்ளைகளுக்காக நான் வந்தேன்னு சொல்லுங்க அதுல ஒரு நியாயம் இருக்கு. அதை விட்டு, எனக்கு நியாயம் செய்யிறத நினைச்சு எந்த பைத்தியக்காரதனமும் பண்ண வேண்டாம். நீங்க வாங்கி கொடுத்த புடவை விலை என் ஒரு மாச சம்பளம். உங்க பிள்ளைகளுக்கு சாக்லெட் கொடுத்து ஆசையா காட்ற மாதிரி, எனக்கு சேலையை கொடுத்து வளைக்க பாக்குறீங்க. இப்பவும் நீங்க தோத்து தான் போனீங்க. ஒரு பொண்டாட்டி கிட்ட நகை, புடவை, பணம் கொடுத்தா வந்து விழுவான்னு நினைக்கிறீங்களா?…”
“ஐயோ! இல்லை சரண்யா…” வெற்றி பதறி போய் சொல்ல.
“அப்புறம் எதுக்கு விதவிதமா சேலை, அதோ அது என்ன நகை, மல்லிகை பூ, அப்புறம் இது என்ன?…” என்று கேட்க.
அது ஒரு பத்திரம். இரண்டு வண்டி ஒரு குட்டி யானை வெற்றி பேரில் இருக்க. ஒரு டபேரா, ஒரு குட்டி யானை சரண்யா பேரில் இருந்தது. அது தான் அவளை கொதிப்படைய செய்தது.
“ முன்ன இருந்த சரண்யாவா இருந்தா பூரிச்சு போய் இருப்பா… ஒரு நாள் உங்க பைக்குல கூட்டி போன, அன்னைக்கு முழுக்க குதிச்சு, கும்மாளம் போடுற சரண்யா இல்லை இது… வாழ்க்கையோடு நெளிவு, சுழிவ காலம் நல்லாவே கத்து கொடுத்துருச்சு. உங்க மனசுல நான் இல்லை வெற்றி. அப்போ என்ன நினைப்புல இத எல்லாம் நான் வாங்குவேன். பத்தாயிரத்துக்கும் சேலை நான் பாக்கதவ இல்லை. வாழ வெட்டியாக இருக்குற நான் பந்தாவ வாழ முடியுமா… பிள்ளைகளுக்கு நீங்க என்னவும் பாருங்க, என்னை நெருங்காதீங்க…” முகத்திலாடித்தது போல சொல்லி விட்டாள்.
குறுகி போனான் வெற்றி. தன் பொருட்டு அவள் வாழ்க்கை சீரழிந்து போனதே என்று தான் குற்ற உணர்வில் குறுகினான். மற்றவர்கள் முன் தலை நிமிர்ந்து வாழ வைக்க நினைத்து தான் நகை, புடவை என்று வாங்கி வந்தது. ஒரு நொடியில் தன்னை ஆப் பண்ணி விட்டாள். அவள் சொல்வது சரிதான். மனதளவில் நெருங்கி நிற்காமல் வெளி பார்வைக்கு பந்தா எதுக்கு…
“சாரி சரண்யா…” குன்றலாகவே சொன்னான்.
“உங்களை குத்தி காட்ட சொல்லலை வெற்றி. உங்களை வச்சு மட்டும் என்னை யோசிக்காதீங்க. நான் தப்பு பண்ணிட்டேன், திருந்தி வந்துருக்கேன், எனக்கு எம் பொண்டாட்டி, பிள்ளைக வேணும், அப்படி வந்தா அதுல ஒரு நியாயம் இருக்கு. இன்னும் அபிராமியோட மிச்சங்கல்ல வாழ்ற மனுசன் எனக்கு வேண்டாம். உங்களுக்கு எம் மேல எந்த உணர்வும் இல்லை வெற்றி. ஆனா, ஒருகாலத்தில எனக்கு இருந்துச்சு. எம் புருசன்னு பெரிய நினைப்பு இருந்துச்சு. உங்களை நினைச்சு தாலியும், குங்குமமும் வைக்கிறது பெரிய பாக்கியமா நினைச்சேன்…” என்று ஒரு பெருமூச்சு விட்டவள்.
“எனக்கு புருசன் கூட இல்லை. நான் தனியா ரெண்டு பிள்ளைக கூட இருக்கேன்னு சொல்றதுல ஒரு நேர்மை, நியாயம் இருக்கு. ஆனா, இப்போ நாம சேர்ந்து இருக்கோம் பிள்ளைகளுக்காக… அந்த கடமையும், பொறுப்பையும் மட்டும் நாம தாங்கி நிப்போம், போதும்…” என்று முடிக்க.
அவளை புரியாமல் பார்த்தான்.
“அப்புறம் ஏன் உங்களை உள்ள விட்டேன்னு தான பாக்குறீங்க. என்ன பண்ண, நான் வாழ்ந்து கொண்டிருக்க சமூகம் அப்படி… இங்க தான் ஆண் துணை இல்லாத பெண்கள் எல்லாம் பொது சொத்துன்னு நினைக்கிற கூட்டம் இருக்கே… இன்னாரோட வப்பாட்டிக்கு இருக்குற பாதுகாப்பு கூட, வாழ வெட்டிக்கு இல்லையே… என் விதிய தான் நொந்துக்கணும். பிள்ளைகளுக்காக நீங்க வந்தீங்க, அது உங்க அன்பு, பாசம், கடமை… எனக்கும் அந்த பொறுப்பு, எம் பிள்ளைக மேல பாசம் இருக்கு. எனக்கு நியாயம் செய்ய நீங்க என்னை நெருங்காதீங்க. அது எனக்கு அநியாயம்…” என்றவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்து…
“என் உணர்வுகளோடு, என் உணர்சிகளோட விளையாடதீங்க வெற்றி. நான் ஒன்னுமே இல்லாம ஒடைஞ்சு போயிருவேன். என் மனசுக்கு நான் போட்ட கட்டுப்பாட்டை உடைக்காதீங்க. எனக்கு உங்க கிட்ட எந்த எதிர்பார்ப்பும் இல்லை வெற்றி. உங்க காதல் எப்படி இருக்கும்ன்னு எனக்கு தெரியும். நான் உங்க கிட்ட எந்த நியாயத்தையும் எதிர்பார்க்கலை. எனக்கு அது தேவையும் இல்லை. நீங்க வாங்கி கொடுக்குற சேலை, நகை, சொத்து எதுவும் எனக்கான நியாயமும் இல்லை…” என்று தெளிவாக சொல்ல, வெற்றிக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை.
ஆண் மனம் நினைத்தது வேறு, பெண் மனம் யோசித்தது வேறு… அவள் கஷ்டத்தில் இருந்து விடுவித்து அவளை மகிழ்விக்க கணவன் என்ன, ஆடம்பர பொருட்களில் என் மகிழ்வு இல்லை என்று பெண் நிரூபித்தாள்.
குழப்பத்தோடு அவன் நகர, “ஒரு நிமிசம், நமக்கு கல்யாணமாகி, உங்க மனைவியாக நான் வந்து, புருசனா உங்களை மனசுல பதிய வச்ச வெற்றி, வெறும் டிரைவர், பதிமூனாயிரம் சம்பளம் தான்…”
என்ன சொல்ல வருகிறாள் மனைவி, பிடிக்கிறது என்றா, பிடிக்கவில்லை என்றா, ஒன்றும் புரியவில்லை. உறவில்லாமல் உரிமை எடுக்காதே என்று விட்டாள். அப்போ உறவோடு வந்தாள்?அவளை கணிக்க முடியவில்லை. சண்டை, கோபம் எதுவும் கிடையாது, யாரோ ஒருவனாக ஒதுக்கி வைக்கிறாள். அதே நேரம் உன்னை நினைத்தேன் என்கிறாள். அவளின் காயம் அதிகம், எப்படி சரி செய்ய… ஏதோ ஒன்று மனைவி தன்னை நேசித்தாள் என்ற சொல், அவனை சிலிர்க்க தான் செய்தது. முதலில் அவனுக்கு தான் நேரம் வேண்டும் போல, மனைவியை நேசி, பின் யாசி… நிச்சயம் யாசிக்க தான் வேண்டும்.
பிள்ளைகளை வெற்றி இழுத்து கொண்டான். காலை நேர அவள் பரபரப்புக்கு, பிள்ளைகள் பொறுப்பை எடுத்து கொண்டு உதவி செய்தான். அதில் எல்லாம் ஒன்றும் சொல்ல வில்லை, என் வறுமைக்கு அனுதாப பட்டு என்னை நெருங்காதே… அது தான் அவள் வாதம்…
பண்டிகை வருவதால் இன்று மீட்டிங், பெரிய கடையில் தான். விசாலா, தேவி அக்காவுடன் பேச்சு வார்த்தை நடக்கும். கிட்டத்தட்ட இருபது பேர் உடன் மீட்டிங், தன்னை நேர்த்தியாக பார்த்து கொண்டாள். மரகத பச்சையில் சின்ன கரை வைத்த காட்டன் சேலை, அவளுக்கு பாந்தமாக இருந்தது.
பிள்ளைகள் வெற்றி பொறுப்பு என்பதால், அவள் கிளம்பி விட்டாள். வெளி வாசலில் ஆட்டோவுடன் வெற்றி நிக்க, கேள்வியாக பார்த்தாள் சரண்யா.
“கோவில் போகணும் சரண். புது தொழில் மாட்டேன்னு சொல்லிறாத, ரொம்ப கஷ்டப்பட்டு, லோன் போட்டு தொழில் தொடங்குகிறேன். யாரையும் கூப்பிடலை. பிள்ளைகள் கூட நாம போய்ட்டு வரலாம்…” அதிகப்படி பணிவில் யோசனையாக பார்த்தாலும், சம்பளத்தில் இருந்தவன் முதலாளியாக அமர போகிறான், தான் அபசகுணமாக சொல்ல வேண்டாம் என்று நினைத்தவள், ஆட்டோவில் ஏறி விட்டாள்.
பிள்ளைகளை மடியில் வைத்து இருவரும் அமர்ந்து கொள்ள, புது உல்லாசம் தான் வெற்றிக்கு… முதன் முதலில் குடும்பமாக ஒரு இடம் செல்கிறார்கள். நீண்ட நாள் சென்று புடவை அணிந்த மனைவியை ரசித்தவன், அவள் கழுத்தில் இருக்கும் ஒற்றை மஞ்சள் கயிறும் இல்லாமல் போக, அரண்டு போனவன்.
“சரண் உன் கழுத்தை பாரு…” என்றான்.
தடவி பார்த்தவள், “ எங்க காணம், எங்க விழுந்துச்சுன்னு தெரியலையே… சரி, போற வழியில வாங்கி மாட்டிகிறேன்…” என்று சாதரணமாக சொல்ல.
“ எதே! போற வழில வாங்குவியா…” கேட்க வாய் துறுதுறுத்தாலும் அடக்கி கொண்டான். ஏதாவது கேட்டு, குத்து பெற விருப்பம் இல்லை.
குடும்பமாக சந்நிதியில் கண் மூடி வணங்க, கழுத்தில் கணமாக ஏதோ விழுந்தது, பதறி போய் குனிந்து பார்த்தாள் சரண்யா. தாலி சரடு, வெற்றி தான் அணிந்து இருந்தான். நான் கேட்டேனா என்று சரண்யா முறைக்க,
“வாழ்த்துக்கள். ஐந்தாம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துகள் சரண்யா. இனி வார எல்லா வருடமும் நாம குடும்பமாக சேர்ந்தே இருப்போம்…” மலர்ந்த முகமாக வெற்றி சொல்ல.
அன்று திருமண நாள் என்பது நினைவே இல்லை. ஒரு வருசமும் நினைவு வைக்கவும் இல்லை. அவனை அசால்டாக பார்த்தவள்,
“அந்த கருமத்தை கிடப்பில் போட்டு நாலு வருசம் ஆச்சு…” என்றாள் எகத்தாளமாக.
“என்னை பாதிக்கவே இல்லையே…” என்றான் பின் வாங்காமல். அவள் சொன்ன உடன் நானும் தான் என்று சொல்லி இருந்தால், நிலமை தீவிரம் தான். அவள் வலியில் விடும் வார்த்தைகளை பொறுத்து கொள்ள கற்று கொண்டான்.
“அம்மா கழுத்துல என்ன ப்பா…” என்றாள் அஜி.
“ அது வந்து… அது சங்கிலி செல்லம்…”
“எனக்கு…” என்றது விஜி தான்.
“ அப்பா, உங்களுக்கு வேற வாங்கி தாரேன். நாம மூணு பேருக்கும் ஒரே மாதிரி, அம்மா பேட், அவளுக்கு வேணாம்…”
“அப்ப சரி. அம்மா, உனக்கு இல்லை… எங்களுக்கு மட்டும் தான்.” என்று அஜி சொன்ன போதும் அவளிடம் எந்த எதிர் வினையும் இல்லை.
வெற்றி இப்படி செய்வான் என்று அவள் எதிர்பார்க்க வில்லை. நான் இது தான் என்று ஒரு வட்டம் போட்டு வாழ, அதை உடைத்து கொண்டு இருந்தான். உரிமை இல்லாத பொருளை சுமப்பதாக ஒரு எண்ணம். அதே நேரம் கலட்டி தூக்கி எறியவும் மனதில்லை. முன்பு இவள் தான் தாலியை கலட்டி கொடுத்தாள். இன்று அவ்வாறு செய்ய இயல வில்லை. ஆனால், தங்க சரடை சுமக்கவும் முடியவில்லை. நேற்று இரவு அவ்வளவு சொல்லியும், சீதைக்கு ராமன் சித்தபன்னு சொல்லிட்டான். அவனை மனதில் நல்லா திட்டி விட்டு, வேலைக்கு செல்ல. பிள்ளைகள் சமத்தாக டாட்டா காட்டியது.
அதில் கூட மனம் சுணங்கி கொண்டாள். முன்பு தாய் தங்களை விட்டு வேலைக்கு செல்கிறாள் என்றால் அழுக தொடங்கும் பிள்ளைகள், இன்று சமத்தாக டாட்டா காட்டுகிறது. கட்டுப்பாடு விதிக்கும் தாயை விட, கேட்டது எல்லாம் வாங்கி கொடுக்கும் தந்தை உசத்தியாகி விட்டது போல… கொஞ்சம் வருத்தம் தான். இவர்களே உலகம் என்று இருந்து விட்டாள், தள்ளி நிறுத்தி பார்க்க முடியவில்லை.
வேகமாக கடைக்கு வந்த சரண்யாவை எதிர்கொண்ட அகி, “என்ன மேடம், எப்பவும் வேர்த்து போய் ஓடி வருவ, இன்னைக்கு சூப்பரா வந்து இருக்க…” என்று கேட்க.
“அது, பசங்களை அவங்க அப்பா பார்த்துகிறாங்க, நான் மட்டும் கிளம்பி வந்தேன். அதான் அலைச்சல் குறைவு…”
“ஏய்… சரண் கழுத்துல என்ன, புது தாலி கொடி. அண்ணன் வாங்கி கொடுத்தாங்களாடி, ஒத்தை வார்த்தை சொல்லல…” என்ற அகிக்கு.
“அஜி அப்பா தான், எனக்கே சொல்லலை. இதை போடவே சங்கடமா இருக்கு… என்னவோ பிடிக்கலை…” என்றாள் மறைக்காமல்.
“ அடிச்சேன்னா பாரு, என்ன பிடிக்கல. கட்டைல போற வர கழுத்துல கிடக்கணும்ன்னு எம்புட்டு பேரு தவம் கிடைக்க, கை தாண்டி போன ஒன்னு கை வந்து சேர்ந்ததுக்கு சந்தோசபடுல… பழச பிடிக்காத சரண், ஏதோ குடும்ப சண்டை கோவிச்சு அம்மா வீடு வந்த, புருசன் தேடி வந்தாச்சு, போய் வாழ்ற வழிய பாரு… வீம்பு பிடிக்காத, வெட்டியா போவ…” என்று அகி ஒரு பிடி பிடிக்க.
அழுகை வந்தது சரண்யாக்கு, “ஓ… புருசன் வந்து கூப்பிட்ட உடனே பொண்டாட்டி போயிரனும். மன்னிப்புன்னு ஒரு வார்த்தை சொன்ன உடனே மன்னிச்சிரனும்… சரிதான். அப்ப என் வலி, நான் பட்ட காயம் , எம்புட்டு வேதனையா காலத்தை ஓட்டினேன், சாகுற வரை போனேனே அகி அதெல்லாம் ஒன்னுமே இல்லை. என் கஷ்டத்தை சின்ன கோபமா கூட காட்ட கூடாது. யாரையும் நான் சொல்லலை, நான் தான் தப்பு. போதுமா… நாலு வருஷம் விட்டுட்டு போனவன், வந்தவுடன் எல்லாத்தையும் உதுத்துட் டு அவன் வாங்கி கொடுத்த சேலை, நகைன்னு அள்ளி போட்டு அலப்பி திரியனும். என்ன செய்ய கொஞ்ச நாளா சொந்த காசுல சாப்பிடுறேன்லா அந்த கொழுப்பு போல… இனி குறைஞ்சுடும். வக்கத்து கெடந்தவ நல்ல வாழ்க்கை வந்தா கைல கெட்டியா புடிச்சுக்கனும், நான் தான் வெட்டி ரோசம் பாக்குறேன்…” என்றாள் விம்மலோடு…
“ஏட்டி சரண், என்ன புள்ளை… ஏதோ என் மனசுல பட்டத சொன்னேன். அதுக்கு போய் அழுகுற…” என்றாள் வருத்தமாக.
“சேசே, உன்னை சொல்லலை அகி. பொதுவா, எல்லோரும் நினைக்கிறது இது தான். இப்பவும் நான் தான் அணுசரிச்சு போகணும். என் உணர்ச்சிகளை கோபமா வெளிப்படுத்துனா, அத்தோட பாதிப்பும் எனக்கும் தான். எல்லாத்தையும் அடக்கி மனசுல வச்சு, சாதாரணமா வாழ கத்துக்குறேன்…” என்று சோகமாக சரண் சொல்லவும், அகிக்கு வருத்தம் தான். ஆனால், எதுவும் செய்ய முடியாதே, நிதர்சனம் இப்படி தான் உள்ளது.
“உன் வலி புரியுது சரண். உன் காயத்துக்கு நியாயம் கேட்டு, திருந்தி வந்துருக்க மனுசனை பாதிக்க கூடாதுல்லா… திரும்ப ஒரு நிலையில்லாத வாழ்க்கைய நீயோ, பிள்ளைகளோ வாழ கூடாது சரண். அந்த ஆதங்கம் தான்…” என்று அகி புரிய வைக்க.
“எனக்கு புரியுது அகி. கொஞ்ச நாள் போனா சரியா போகும்…” என்று சரண்யா சொல்ல, தேவி அக்கா உள்ளே வந்தார்.
“குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை சரண்யா…” என்று தேவி சொல்ல.
“அக்கா” என்று இருவரும் எழுந்து நின்றார்கள்.
“இந்த காலம் ரொம்ப மோசமானது சரண்யா. ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாமோ அப்படீன்னு நம்மையே யோசிக்க வைக்கும். அப்படி காலம் கடந்து யோசிக்கும் முன்னே, ஒரு வாய்ப்பை உன் புருசனுக்கு நீ கொடுத்துடு… தோல்வி நமக்கு புதுசு இல்லன்னு போது தயங்காத… ஓட்டம் வெற்றி பெற்றால், உன் பிள்ளைக நிமிர்ந்து வாழ்வாங்க சரண்யா. எல்லாரும் சொல்றது தான், தப்பானவனா இருந்தா தேடி வந்துருக்கு மாட்டான். நிதானம், தெளிவு ரெண்டு பேர் கிட்டையும் இல்ல, அதான் அலங்கோலமாக போச்சு… உங்க வாழ்க்கைக்கு நீங்க யோசிச்சு, உங்களுக்கு நீங்களே ஒரு வாய்ப்பு கொடுங்க. தப்பு செஞ்சு திருந்தி கை வந்த வாழ்க்கை, தப்பி தவறி கூட கை விட மாட்டாங்க.”
“சரிங்க அக்கா…” முதலாளி என்ன சொல்ல முடியும். அகி அவள் தோழி மனசுல இருக்குறது கொட்டி ஆறுதல் தேட முடியும். இவரிடம் ஆகாதே…
“உன் வயசுல, உன் தெளிவு கூட என் கிட்ட கிடையாது. எனக்கு குழந்தை இல்லன்னு சொல்லி என் தங்கச்சிய தான் என் வீட்டுக்காரருக்கு கட்டி வச்சாங்க. அழுது, புலம்பி அடிமை மாதிரி கூடவே இருந்தேன் தவிர, துணிஞ்சு நிக்கல. நாப்பத்தி ரெண்டு வயசுல தான் எனக்காக நான் போராடினேன். ஆனா, நீ உனக்காக, உம் பிள்ளைகளுக்காக இருவத்தி மூணு வயசிலே உலத்தை எதிர்க்க துணிஞ்சுட்ட… நீ ஏற்கனவே வெற்றி பெற்றுட்ட, அதுக்கான பலன் தான் இந்த வாழ்க்கை. இளைப்பாற நேரம் கிடைக்கும் போது அப்பாடான்னு உட்கார்ந்திரனும். என் கஷ்டத்துக்கு பதில் என்னன்னு கடவுள் கிட்ட கேட்க கூடாது…” என்று சரண்யாவின் குழம்பிய மனதை தேவி தெளிவாக, ஒரு ஆறுதல் வந்தது சரண்யாக்கு.
“இந்த சேரி உனக்கு அழகா இருக்கு சரண்யா. எப்பவும் இப்படியே இரு, நேர்த்தியான உடை கூட நல் சிந்தனையை விதைக்கும். உன்னை தப்புன்னு விமர்சனம் செய்றவங்களை உறவா இருந்தாலும் தள்ளி வை, நேர்மறை சிந்தனை கொண்டவங்களை பழக்க படுத்திக்க… உன் முகம், உடல் உனக்கு குறையா தெரியலை தானே… உனக்கு உன்னை புடிச்சு இருக்கு, உம் பிள்ளைகளுக்கு, உம் புருசனுக்கு புடிச்சு இருக்கு… வேற என்ன வேணும். சத்தமா குரைச்சாலும் என் காது செவிடுன்னு போ… உனக்கு ஒரு யோசனை சொல்லவா, பெரிய பதவில இருக்குறவங்களை அடிமட்ட ஆட்கள் எல்லாம் விமர்சனம் செய்வாங்க. டிவி, பேப்பர் எல்லாம் பார்க்கலாம், கண்ட மாதிரி பேசி, எழுதுவாங்க. ஆனா, அதுக்கு அந்த பெரிய ஆளுங்க யாரும் பதில் சொல்ல மாட்டாங்க. நீ எனக்கு ஒரு பொருட்டே இல்லன்னு தான் நடந்துப்பாங்க. இது ஒரு ராஜாக்கான குவாலிட்டி. ராஜா எல்லாருக்கும் பதில் சொல்ல மாட்டார்… நாம எல்லாம் இராணிக, நமக்கு குவாலிட்டி இருக்கு, அது அமைதிய கடந்து போறது…” என்று தேவி விளக்கம் கொடுக்க.
சரண்யாக்கு ஒரு தைரியம் வந்தது. நம்மை போல தான் எல்லோரும், அடி பட்டு தான் மேலே வருகிறார்கள். நாமும் அடி பட்டோம் இனி மேலே வருவோம்…
வெற்றி பிள்ளைகள் உடன் அமர்ந்து போன் பார்த்து கொண்டு இருந்தான். யாரோ வரும் அரவம் தெரிய, சரண்யா என்று எண்ணி நிமிர்ந்து பார்க்க, வந்திருந்தது சரண்யா அல்ல, அவள் பெற்றோர்.
பெரும் தயக்கம் தான் இரு பக்கமும்… மருமகன் என்று பாராமல் இவர் கை வைக்க, அவர்களும் வைக்க அடிதடி தான். அதில் தான் உறவு முழுதாக முடிந்தது.
மாசமா இருக்கும் பெண், முழுதாக ஒதுக்க முடியாது என்று வெற்றி மனைவி வீடு வந்தான் தான். கழுத்தை பிடித்து வெளியே தள்ளியது தாங்கள் தான். என் மகளுக்கு நான் நிற்பேன் என்று விட்டு, இன்று நிற்கதியாக விட்ட குற்ற உணர்வு தலை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.
வெற்றிக்கும் அதே சங்கடம் தான். பிடிக்குதோ, இல்லையோ அவர்கள் வளத்தார்கள், தான் ஒதுக்கி அல்லவா விட்டோம். அந்த குற்ற உணர்வு, தலை குனிந்தான். எவ்வளவு நேரம் இப்படியே இருக்க முடியும், வாங்க என்று மொட்டையாக வரவேற்றவன், அமர சேர் எடுத்து போட்டான்.
அவர்களும் தலையசைத்து அமர, அடுத்து என்ன பேசுவது என்று யாருக்கும் தெரியவில்லை. பிள்ளைகள் துணை கொண்டு அருகில் அழைக்க, ஒட்டி வரவில்லை.
அஜி அருகில் வந்து சுகந்தி தூக்க, முட்டி கொண்டு வெளி வந்து தந்தை அருகில் நின்று கொண்டது. மருமகன் முகம் பார்க்க சங்கடமாக இருந்தது. ஒரே வீடு, நாலு வருசம், ஒட்டி வரவில்லை பிள்ளைகள்…
சிவகுமார் தன் கையில் இருக்கும் தின்பண்டங்களை காட்டி விஜியை அழைக்க, அந்த குட்டி வாண்டு கிட்ட கூட செல்ல வில்லை. என்னவோ ஒரு வீட்டில் இருந்து அவர்களுடன் வராத நெருக்கம், தந்தையுடன் வந்து விட்டது போல…
அப்போது தான் சரண்யா வந்தாள். அங்கு தன் பெற்றோரை எதிர்பார்க்க வில்லை. அதிர்ச்சியாக இருந்த போதும், நல்ல முறையில் வரவேற்றாள்.
ரொம்பவும் சாதரணமாக இருந்தாள். தப்பு செய்து விட்டோம், மறைத்து விட்டோம் என்ற எந்த உணர்வும் இல்லை தெளிவாக இருந்தாள்.
சிவகுமார் நிமிர்ந்து மகள் முகம் பார்த்தார். சளைக்காமல் நின்றாள், அவள் கண் பார்த்து கேள்வி கேட்கும் தைரியம் இல்லை.
சுகந்தி, சிவகுமார் பார்வை மகள், பேத்திகள் மீது தான் படிந்தது. மகள் கழுத்தில் கிடக்கும் தங்க சங்கிலி தாண்டி பேத்திகளே கவனம் பெற்றார்கள். பெற்றோர் வளர்ப்பு என்பது தனியாக தெரிந்தது.
சந்தன கலர், பேபி பிங்க் கலரில் ஒரே போல பூ வேலை பாடுகள் செய்த டிசர்ட் மற்றும் முட்டி வரை வரும் இரவு உடை அணிந்திருந்தார்கள். குட்டி போனிடைல், பூ வைத்த கிளிப், அதே போல குட்டி பூ போட்ட செருப்பு என்று படு நேர்த்தி தான். கழுத்தில் தங்க ஜெயின் கிடந்தது. தான் அவர்களை எவ்வாறு வைத்து இருந்தோம் என்ற நினைவும் வந்தது.
சுகந்திக்கு தான் ஆதங்கம். தங்களிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே என்று… தற்போது கோபம், வெறுப்பு எதுவும் மருமகன் மீது இல்லை. நீங்கள் நன்றாக வாழ்ந்தால் போதும் என்ற எண்ணம் தான். தங்களிடம் ஒரு வார்த்தை சொன்னால், கௌரவமாக அனுப்பி வைக்கலாமே…
சுகந்தி தொடங்கினார், “எப்படி இருக்க சரண்?…”
“பார்த்த எப்படிம்மா தெரியுது?…”
“நல்லா தான் தெரியுது” என்று சுகந்தி இழுக்க.
“அப்ப நான் நல்லா தான் இருக்கேன்…” என்று பதில் கொடுக்க.
பெற்றவர்கள் முகம் பார்த்து கொண்டார்கள். வெற்றி என்ன இது என்று தான் பார்த்தான்.