பெற்றவர்களின் அமைதியை பார்த்த சரண்யா, கணவன் புறம் திரும்பி பால் இல்லை என்றாள், அவனுக்கு புரிந்தது, பிள்ளைகளை அழைத்து கொண்டு வெளியே சென்று விட்டான்.
“ சொல்லுங்கப்பா… என்ன விசயம். காரணமில்லாம என் வீடு தேடி வர மாட்டீங்களே…” என்ற மகளின் பேச்சு சிவகுமாருக்கு சுருக் என்று தைத்தது.
காரணத்தோடு தான் வருவோமா, இது மகள் வீடா… சுற்றியும் பார்த்தார். தாங்கள் வாழும் வீட்டின் வசதியில் கால் வாசி கூட இல்லை. இதை யாரும் நினைக்க வில்லை. சரண்யா முடிவு பிடிக்க வில்லை. தங்களை தாண்டி சென்ற மகள், பட்டு வரட்டும் என்று காத்திருக்க, வறுமையோடு போராட்ட வாழ்வை வாழ துணிந்து விட்டாள்.
சுகந்தி கேட்டு விட்டார், “எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலை சரண். அவ்வளவு நாங்க அன்னியமா போய்ட்டோமா…” என்றார் ஆதங்கமாக.
“நேரமில்லை ம்மா…” என்றாள் பட்டு கொள்ளாமல்.
“நேர மில்லையா, என்னங்க பேசுறா இவ… இது ஒரு காரணமா சரண்யா…”
“நிஜமா, வீட்டிலே இருக்குற உங்களுக்கு நாலு தெரு தள்ளி இருக்குற மகளை பார்க்க நேரமில்லை. நான் வேலைக்கு போறேன், இதுல ரெண்டு பிள்ளை இருக்கு, எனக்கு உண்மையாவே நேரமில்லை. வீடு வரவே ராத்திரி ஒன்பதரை ஆகிறது. அதுக்கப்புறம் தான் நான் பிள்ளைக சாப்பாடு பார்க்கணும். நான் ஒரு அன்னாடகாட்சி, உங்க மக, மகன் மாதிரி கவர்மெண்ட் உத்தியோகம் இல்லை. ஞாயத்து கிழமை கூட வேலைக்கு போனா தான் எம் பொழப்பு. இதுல எனக்கு எங்க நேரமிருக்கு…” சாதாரண வார்த்தையாடல் தான்.
குத்தயது பெற்றவர்களுக்கு…
“என்ன பேசுறா பார்த்தீங்களா?… உன் பிடிவாதத்துக்கு வீம்பு போட்டு தனியா வந்த, நாங்க உன் கூட வரணுமா… நல்லா இருக்கே. நீயா தான் தனியா வந்து வேலைக்கு போன, நம்ம வீட்டிலே இருந்தா உனக்கு இவ்வளவு கஷ்டம் தேவையா…” என்றார் தாய் கோபமாக.
சரண்யா அலட்டி கொள்ளவே இல்லை, “தனியா வந்ததுல என்ன குறைச்சல். கஷ்டம்ன்னு சொல்லவே இல்லையே, நேரமில்லைன்னு தான் சொன்னேன். உங்களுக்கு தான் புரியலை… அதே நேரம் ஒன்ன நான் மறுக்க மாட்டேன். நானா தான் வெளிய வந்தேன். என் வேலை, என் வாழ்க்கை எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு…”
“என்ன பெரிய நிம்மதி. பெரிய கலெக்டர் வேலை பாக்குற, பார்த்தாலே தெரியுது உன் நிம்மதிய… பத்துக்கு பத்து ரூம்ல, ஒத்த வசதியும் இல்லாம தான் வாழ்ற, இதுல என்னத்தை பெரிய நிம்மதிய கண்ட…” என்றார் எகத்தாளமாக.
தங்களையே சுற்றி வந்த பெண், தங்களை தாண்டி செல்வதை ஏற்று கொள்ள முடியாத ஒரு பிடிவாதம்.
தன் போராடி பெற்ற வேலை, வாழ்க்கையை உதாசினமாக பேசும் தாய் மீது கோபம் வந்தது சரண்யாக்கு.
“அப்போ, நான் அங்க மட்டும் நல்லா வாழ்ந்தேனா…” போட்டு வாங்கும் சொல் தான்.
“ஆமா, அங்க உனக்கு என்ன கஷ்டம், வீட்டு வேலை மட்டும் தான். மத்தபடி உம் பிள்ளைக கூட நிம்மதியா தான் இருந்த… இப்படி உன்னை முதுகு உடைய கஷ்ட பட நாங்க சொல்லலை, உன் வீம்புக்கு நீ தேடிகிட்ட…” என்றார் முகத்தில் கோபம் தெறித்தது.
சரண்யா அசராமல் தந்தையை ஒரு பார்வை பார்த்தவள்…
“வீட்டு வேலை மட்டும் தான, சரிதான்… நீங்க சொல்ற மாதிரி சும்மா எளிதான வீட்டு வேலையை தூக்கி போட்டு முதுகு உடைய நான் ஏன் வேலைக்கு போனேன்… சின்னதா நாலஞ்சு விசயம் மட்டும் சொல்றேன்…” என்க.
தந்தை நிமிரவே இல்லை. அவருக்கு தங்கள் தவறு புரிந்தது. ஆனால், அதை தாண்டி பல வலிகளை அவள் கடந்ததை யாரும் அறியவில்லையே…
பத்துக்கு பத்து ரூம் தான். ஆனா, அதுல எனக்கு இருக்குற சுதந்திரமே வேற… கால ஆட்டிட்டு நான் தூங்குனாலும், யாரும் என்னை கை நீட்டி கேட்க முடியாது. அஞ்சு மணிக்கு எந்திரிக்கணும், அப்பாக்கு டிகாஷன் கலக்கணும், அம்மாக்கு கசாயம் வைக்கணும், அண்ணனுக்கு இஞ்சி டீ போடணும், அண்ணிக்கு சுடு தண்ணி காய வச்சு, பாத்ரூம்ல கொண்டு போய் கொடுக்கணும், குட்டிக்கு சத்து மாவு, காலை டிபன், மதிய சாப்பாடு பார்க்கணும், இடையில ஜூஸ், வீட்டை கூட்டனும், துணி துவைக்கணும், வடாகம் போடணும், வத்தல் செய்யணும், துணி மடிக்கணும், அதை தேச்சு கொடுக்கணும், பின் பக்க தோட்டத்தை சரி பார்க்கணும், கடைக்கு போய் காய் வாங்கணும், மசால் அறைக்கணும், மாவு அறைக்கணும், சாயங்காலம் டீ, வடை, சுண்டல், அத்தோடு இரவு டிஃபன், ராத்திரி மஞ்சள் பால் எல்லோருக்கும் ரூம்கே கொண்டு போய் கொடுக்கணும். இதுல எம் பிள்ளைக ரெண்டு, நைட் ஃபுல்லா அழுவாங்க, கண் முழிச்சு தொட்டி ஆட்டனும்… அடுத்து கை, கால் வலி தூங்க முடியாம சாய்ஞ்சு கிடப்பேன். வலி குறைஞ்சு மூணு மணிக்கு தான் நல்ல தூக்கம் வரும். ஆனா, அஞ்சு மணிக்கு கரெக்ட்ட நீங்க தான் கதவ தட்டி எழுப்புவீங்களே…” மூச்சு வாங்கியது சரண்யாக்கு.
வாயடைக்க பார்த்து நின்றார்கள் சரண்யா பெத்தவர்கள். அவள் விட வில்லை.
“இந்த ஒத்த வீட்டுல நான் எப்ப வேனா எழுந்துகளாம். என்னை ஒருத்தர் கேட்க மாட்டாங்க. ஏன்னா, இது என் வீடு. ரொம்ப முடியலையா முப்பது ரூபாய் ஆறு இட்லி, எங்களுக்கு ராத்திரி சாப்பாடு சரியா போகும். கொஞ்சம் அசதியா இருந்தா ஒரு கப் மாவு பதினஞ்சு ரூபாய் தான் பத்து தோசை வரும்… ஏன் துணி மடிகல, வீடு கூட்டலை, பாத்திரம் கழுவல, சாப்பாடு ஏன் லேட் அப்படி யாரும் என்னை கேட்க முடியாது. என் விருப்பம் தான். இந்த ஒத்தை ரூம்ல எம் பிள்ளைக என்ன செஞ்சாலும் ஒருத்தரும் கேட்க மாட்டாங்க. அங்க மாதிரி இத தொடாத, கட்டில் ஏறாத, ஊஞ்சல் போகாத, தண்ணிய கொட்டாதா… இப்படி பயந்து போய் பிள்ளை வளர்க்க வேணாம். அங்க நாள் முழுக்க வேலை செஞ்சாலும் பத்து ரூபாய் உங்க கிட்ட தேறாது. ஆனா, இங்க மாசம் ஒன்னா தேதி வந்தா பத்தாயிரம் கை நிறைய நிக்கும். என்ன சமைக்கணும், எப்ப தூங்கணும், எப்படி வேலை செய்யணும்ன்னு எனக்கு ஆர்டர் போட ஆள் இல்லை. என் வீடு என் விருப்பம். இதுக்கு மேல எம் பிள்ளைக, அவங்க யாருக்கும் பயப்பட தேவை இல்லை. யாரை பார்த்து ஏங்கவும் தேவை இல்லை. யாருக்கும் கட்டுப்பட்டு இல்லாம என் சம்பாத்தியத்தில் நான் சாப்பிட்டு, நிம்மதியா எம் பிள்ளைக கூட இருக்கேன்… இப்ப சொல்லுங்க, இந்த கஷ்டம் எனக்கு தேவை தான…”
பேச்சே இல்லை பெத்தவர்களிடம்… சுகந்திக்கு கண்ணீர் வந்தது. சிவகுமாருக்கு தன் தவறு முன்பே தெரியும் என்பதால் பதில் பேச முயலவில்லை. என்றோ உணர்ந்து விட்டாரே…
“வீட்டு பொம்பளைக எல்லாரும் செய்ற வேலை தான சரண்யா. அதை பெருசா பேசுற?…” என்றார் சுகந்தி.
“அப்போ அந்த வீட்டு வேலையை உம் மருமகள் ஏன் செய்யலை…. வீட்டுக்கு வந்த உம் மக ஒருநாளாவது செஞ்சிருப்பாளா?…”
“ புரியமா பேசதடி. திவ்யா வேலைக்கு போறா, அவளை சொல்ல முடியுமா? அக்கா என்னைக்கோ ஒரு நாள் தான் வார, அவளை வேலை செய்ய சொல்ல முடியுமா. அவ பாவம் இல்லையா…” என்றார் புரியாமல்.
“அப்போ நான் பாவமில்லையாம்மா? நான் மட்டும் வீட்டு வேலை செய்யவா பிறந்தேன்…”
“என்னடி சரண். நம்ம வீட்டு வேலை, நம்ம வீட்டு ஆட்களுக்கு தானா…”
“ அப்படி என்னை யாரும் நினைக்க விடலையே. நம்ம வீடு அப்படி நினைச்சு தான், என்னை பெத்த உங்களை நம்பி தான் வந்தேன். ஆனா, நான் ஒரு விருந்தாளின்னு எல்லாரும் காட்டி கொடுத்துதாங்க…”
“ என்னை காட்டினாங்க. உன்னை தான் உங்க அப்பா, அண்ணன், அக்கா எல்லாம்.யோசிச்சாங்க… எல்லா பொண்ணுங்களும் தான் வீட்டு வேலை செய்யிறாங்க, யாரும் குறை சொல்லலை…” என்றார் சுகந்தி.
“அப்படியா… நான் வந்துட்டேன், வேலை எல்லாம் திவ்யா தான பாக்குறாங்க. அவங்க மட்டும் தான் பாக்குறாங்க, நீ வேலையே செய்யல அப்படியா!… நாலு தெரு தள்ளி தான வீடு எல்லாம் எனக்கும் தெரியும். அடுப்படியில் நீயும் வேலை செய்யிரயாம், அப்பா தான் காய்கறி வாங்க, கரெண்ட் பில் கட்ட, கறி எடுக்க ஓடுறாரு எல்லாம் தெரியும்…” என்றாள் நக்கலாக.
சுகந்திக்கு வாய் திறக்க முடியவில்லை.
“எனக்காக யாரு யோசிச்சா… சரண்யா, உனக்கு என்ன தேவை, உன் விருப்பம் என்னன்னு யாராவது ஒரு வார்த்தை கேட்டாங்களா… அவங்களை விடுங்க, நீங்க என்னை பெத்தவங்க தான. ரெண்டு பிள்ளைக வச்சு தனியா இருக்க, உன் எதிர்காலம் என்னன்னு நீங்களாவது கேட்டீங்களா…”.
“ உங்களை நம்பி தானே நான் வந்தேன். உங்க மேல கை வச்சாங்கன்னு தான தாலிய கலட்டி எரிஞ்சேன். எங்கப்பவோட மரியாதைக்கு, என் வாழ்க்கையே தூக்கி போட்டேன். கடைசில, எம் மரியாதை தான் காத்துல போச்சு… அத்தனை வருசம் வளந்த வீடு உரிமை இல்லாம போச்சு. என்னைக்காவது என்னை டைனிங் டேபிளில் உட்கார வச்சு சாப்பிட விட்டீங்களா…” என்று அவள் கேட்ட உடன், அதிர்ந்து போனவர்கள் “சரண்யா” அதிர்ச்சியாக கேட்க.
“உண்மை தான். நீங்க எல்லாம் சாப்பிடும் போது சரண், நீயும் கூட உட்கார்ந்து சாப்பிட்டுன்னு இதுவரைக்கும் சொல்லி இருப்பீங்களா… எனக்கு புடிச்சது ஒரு நாள் வாங்கி கொடுத்து இருப்பீங்களா…” கண்களில் நீர் மண்டியது.
“ சரண்யா, என்னடா இது. நீ என்ன சின்ன குழந்தையா…” என்றார் சுகந்தி.
“உங்க பெரிய மக மட்டும் குழந்தையா ம்மா… அவ வரும் போது எல்லாம் அவளுக்கு பிடிச்சதை அப்பா வாங்கி வந்து கொடுப்பாங்க. அவ பிள்ளைகளுக்கு தனியா வரும். ஆனா, எனக்கு?… நான் எதிர் பார்த்தேன்ம்மா… எனக்கு ரெண்டு பிள்ளைக இருந்தாலும், எங்கப்பாக்கு நான் இளவரசி தான்னு ஒரு எண்ணம். அது எல்லாம் உடைஞ்சு போச்சு… எனக்கு பிடிச்ச மாதிரி சேலை, நகை கேட்கல. எனக்கு பிடிச்ச சாப்பாட்டை வாங்கி கொடுக்கணும்ன்னு நான் எதிர் பார்த்தேன்…” என்றாள் கண்ணீரோடு.
“என்னங்க, என்ன சொல்ற இவ… எனக்கு மயக்கம் வருது…” சிவகுமாருக்கு தான் என்றோ புரிந்து விட்டதே.
“அந்த வீட்டுலே நான் இருக்குறதால எனக்கு இது போதும்ன்னு நினைச்சுட்டீங்க. எனக்கும் கொஞ்ச நாள்ல விவரம் புரிஞ்சு போச்சு. ஒரு பொண்ணுக்கு கழுத்துல தாலி ஏறிட்டா பெத்த வீடு அன்னியமா போகும் போல… அதுவரைக்கும் எனக்கு தேவையானது எல்லாம் நீங்க தான் பாத்தீங்க. ஒருத்தன் கைல புடிச்சு கொடுத்துட்டா உங்க கடமை, பொறுப்பு எல்லாம் அவனுக்கு உரியது தான். அதுக்கப்புறம் பெத்த பிள்ளைக்கு செய்யிற செலவு சுமை தான் போல… இதுல நாங்க மூணு பேரு, அநாவசிய சுமை தான்.”
“சரண், அப்பா அப்படிலாம் நினைக்கலடா…” என்றார் தந்தை தயவாக.
“ நிதர்சம் அது தான் ப்பா. அப்பப்ப வந்துட்டு போற மக மேல மரியாதை, அன்பு எல்லாம் இருக்கு. நான் கூடவே இருக்கேன். காலத்துக்கும் உங்க காலுக்கு கீழ தான். அப்படின்னு நெனச்சு தான், மூணு வேளை சோறு மட்டும் போதும்ன்னு நினைச்சீங்க போல… ஏன்னா, அது மட்டும் தான் எங்களுக்கு அந்த வீட்டுல கிடைச்சது…” என்க.
கதறி விட்டார் சுகந்தி. “என்ன வார்த்தைடி பேசுற. நம்ம கூடவே இருக்கவதானன்னு ஒரு அசால்ட்டு. அது கூட தப்புன்னு புரியுது. அதுக்காக இப்படி பேசாத…”
விரக்தி சிரிப்பு சரண்யா இதழ்களில், “நம்ம அப்பத்தா வீட்டில ஒரு ஆடு இருக்கும். ஞாபம் இருக்காப்பா… அது போட்ட நாலு குட்டில ஒன்னு நொண்டி. அது அப்பத்தா மடி மேலேயே தான் கிடக்கும். வெளிய கூட அப்பத்தா விடாது. யாருக்கும் விக்க கூட இல்லை. மேய்க்க கூட மலை பக்கம் விட மாட்டாங்க. நொண்டி ஆடு கஷ்டம் படும்ன்னு. அந்த நொன்டி ஆடு மாதிரி தானப்பா நானும், எனக்கும் எந்த விபரமும் தெரியாதே. படிக்காதது என் கொழுப்பாவே இருக்கட்டும். அதுக்கப்புறம் எதுலயாவது என்னை சேர்த்து விட்டிருக்கலாம் தான. அம்மாக்கு முடியலை, பார்த்துக்க ஆள் இல்லன்னு அடுப்படியிலே கிடந்துட்டேன். வெளி உலகமே எனக்கு தெரியலை. அண்ணன், அக்கா எல்லாம் படிச்சாங்க, வேலைக்கு போய் வெளி உலக அனுபவம் கத்து தான் கல்யாண வாழ்க்கையில வந்தாங்க. எனக்கு ஒண்ணுமே தெரியலை. வீட்டை தாண்டி போக கூட இல்லை. பத்தொண்பது வயசுல கல்யாணம், மூணு மாச வாழ்க்கை, வாழ வெட்டி, ரெண்டு பிள்ளை. என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சு. உங்க மகன், மக எல்லாம் நல்லா இருக்காங்க. நிஜமா, நான் கஷ்ட படுறேன். எனக்கு கை கொடுக்கலாம் தான…”
“அப்பா, நீங்க நாப்பதாயிரம் பென்சன் வாங்குறீங்க. எனக்கு ஒரு ஐயாயிரம் ஒதுக்க கூடாதா… நான் வாங்குற காசு, உங்க பணத்துல பாதி கூட கிடையாது. வளத்து வெட்ட போற ஆட்டுல கூட குறைய இருக்குற ஒன்னு கவனம் பெறுது. நான் நீங்க பெத்த பொண்ணு, என்னை ஏன் விட்டீங்க…”
“ சரண்யா” என்றார் தவிப்பாக.
“கடந்த பேச வேணாம்” என்று முகத்தை அழுத்தி துடைத்து, முடியை கொண்டை போட்டவள்.
“என் புருசன் கூட சேர்ந்தது ஏன்?… இது தான உங்க கேள்வி. உங்க கையில இருக்குறது குடுங்க…” அன்று அதை வாங்கியவள் திறந்து பார்த்தாள்.
பிரெட், முறுக்கு, பிஸ்கெட், மிக்ஸர் என்று நீண்ட நாள் வகை உணவு பண்டம் இருந்தது. அதை வைத்து விட்டு உள்ளே சென்றவள், வெற்றி வாங்கி வந்த அனைத்தையும் அள்ளி வந்தாள்.
“பாருங்க, அவங்க அப்பா அவங்களுக்கு வாங்கி வந்ததை. என் பிள்ளைகளுக்கு வாங்கி வந்ததை உன் பெரிய மக வீட்டுக்கு வாங்கி போவீங்களா?… இத தான் சொல்றேன். எங்க தகுதி என்னன்னு நீங்க முடிவு செய்யாதீங்க…”