மகளின் முகத்தை தான் அதிர்ந்து பார்த்திருந்தார்கள் பெற்றவர்கள். எப்பொழுதும் அமைதியும், அடக்குமாக இருக்கும் நம் பெண்ணா இது… இதை செய் என்றால் ஒரு வார்த்தை மறுப்பு சொல்லாமல் செய்யும் மகள் மனதில் இவ்வளவு குறை இருந்ததை அறியவில்லையே…
சரண்யா சாதாரண தோற்றம் தான். முந்தியை இடுப்பில் சொருகி, கொண்டை போட்டு, கண் அழுத தடம் தெரிய நின்று இருந்தாள். அந்த தோற்றத்திலும் அவள் முகம் ஒளிர்ந்தது. நீண்ட நாள் மனதில் உறுத்தி கொண்டு இருந்ததை கேட்டு விட்டாள். அந்த நிம்மதி அவள் முகத்தில்….
“சரண், அப்பா உனக்கு அநியாயம் பண்ணலட. விவரம் தெரியாத பொண்ணு, என் கைக்குள்ளே வச்சுகிட்டேன். வெளிய அனுப்ப பயம்…” என்றார் தந்தை.
“எங்களுக்கு அப்புறம் அண்ணன் தான் உங்களை பார்க்கணும், அவன் பொண்டாட்டிக்கு செஞ்சா நாளைக்கு உம் பிள்ளைகளுக்கு செய்வான்னு தான் நினைச்சோம். உம் மனசுல இப்படி பதியும்ன்னு எதிர்பார்க்கலை…” என்று தாய் வருத்தமாக சொல்ல.
“அம்மா, ஒரு வீட்டுல சமையல் வேலை செய்யிறதுக்கு மட்டுமே எட்டாரயிரம் சம்பளம் வாங்குறாங்க… நான், உங்க வீட்டிலே எல்லா வேலையும் செய்யிறேன். எனக்கும் ஏதாவது பணமா கொடுத்து இருந்தா நல்ல இருக்கும் தானே…” என்று சரண் சொல்லி வரும் போதே,
“ நீ என்ன வேலைக்காரியாடி, கோட்டி கழுதை…” என்றார் தாய்.
“மம்ம்… வேலைக்காரியா இருந்தா கூட கையில காசு நிக்கும். நான் ஒரு அடிமை மாதிரி இருந்தேன்…”
“ சரண்யா, என்ன பேச்சுடி பேசுற…” பதறினார்கள் பெற்றவர்கள்.
“உண்மைய தான சொன்னேன். நானும் ரெண்டு பிள்ளை வச்சுருக்கேன். எனக்கும் செலவு இருக்கும் , வாரத்துக்கு ஒரு ஐநூறு ரூபாய் குடுக்கலாம் … பிள்ளைக, பெத்தவங்க கிட்ட காசு கேக்குறதுக்குக்கு தயங்க மாட்டாங்க. அவங்க கிட்ட தான் உரிமையா கேட்க முடியும். ஆனா, நான் தயங்கினேன், ஒவ்வொண்ணுக்கும் உங்க கிட்ட வந்து நிக்க முடியாம தயங்கி நின்னேன். எங்களுக்கு மூணு வேலை சாப்பாடு, வருசத்துக்கு ரெண்டு தடவை எடுக்குற துணி மட்டும் தான் எங்களோட தேவையா?… அதை மட்டும் தான் நீங்க சரியா செஞ்சீங்க. ஆரம்பத்துல உங்க கிட்ட நிறைய எதிர்பார்ப்பு, கோபம் வருத்தம் இருந்துச்சு. அப்புறம் நிதர்சனத்தை நான் புரிஞ்சு கிட்டேன். உங்க மூணு பசங்கள்ளா நான் தான் சோட போனேன். உங்களுக்கு பேர் வாங்கி, பெருமை படுத்துற பிள்ளையா நான் இல்லாம போனேன்…” என்றவள் புறங்கையால் கண்ணீரை துடைத்தாள்.
“எனக்கு சாதகமாக நின்னு, மத்த பிள்ளைகளை பகைக்க முடியாதே… வயசான காலத்தில மகன் ஆதரவு வேணும், அமைதியான வாழ்க்கை வேணும், பேரன், பேத்திகளை பார்த்து நிம்மதி வேணும்… சரிதான். இதுல மாறி போனது நான் மட்டும் தான். என்னால உங்களுக்கு எந்த நிம்மதியும் இல்லை. எனக்கு வாழ்க்கையே புரியலை ப்பா… வீட்டுல கடைசி பிள்ளையா இருந்த என்னை, ஒரு குடும்பத்துல மூத்த மருமகளா போய் விவரம் புரியாம, மனுசங்க பழக்கம் தெரியாம , என் வாழ்க்கைய நானே அழிச்சு போட்டேன். என் புருசன் மனசுல நான் இல்லன்னவும், என்னால அதை தாங்கிக்க முடியலை. ரொம்ப பெரிய ஏமாற்றம், எல்லார் வாழ்க்கையிலும் ஒரு கடந்த காலம் இருக்கும், அதை சரிகட்டி வாழணும் அப்படின்றத மறந்து, முட்டாள் மாதிரி சண்டை போட்டு விசயத்தை பெரிசாக்கி விட்டேன். இந்த மரமண்டச்சிக்கு அன்னைக்கு தெரியலை. பொறந்த வீட்டுல கூட சீல் பட்டு நாத்தியத்து போவேன்னு… எங்கப்பா, எங்கண்ணன் எனக்காக வருவாங்கன்னு திமிரு, மொத்தமா மூலையில முடங்கி போனேன். இப்படி எல்லாம் ஆகும்ன்னு தெரிஞ்சு இருந்தா, என் புருசன் கூடவே அனுசரிச்சு குடும்பம் நடத்தி இருப்பேன்…”
“ஏன் சரண் இப்படி பேசுற, கஷ்டமா இருக்குடி…”
“நிதர்சனத்தை தான் சொன்னேன். அப்படி என்ன திமிரு எனக்கு, வயித்துல பிள்ளையோட வாழ வெட்டியா யாரை நம்பி வந்தேன்… இன்னைக்கு என்ன ஆச்சு அதே புருசன் தான, இப்ப வாய மூடி தான நிக்குறேன். எம் மேல எனக்கு தான் ஆதங்கம். இன்னைக்கு இருக்குற நிதானம் அன்னைக்கே இருந்தா, இவ்வளவு பாடு எம் பிள்ளைகளுக்கு இல்லை…” மனம் வெம்பி போனது சரண்யாக்கு. அன்று இருந்த அதே வெற்றி வேல் தான் இன்றும், இப்போ பிள்ளைகளுக்காகன்னு ஒதுங்கி நின்ற மாதிரி அன்னைக்கே இருந்தால் தன் பிள்ளைகள் அலைகழிக்கபட்டு இருக்க மாட்டார்கள் அல்லவா…
“நாங்க தப்பு பண்ணிட்டோம் சரண்யா…” என்ற தந்தையை பார்த்தவள்.
“இல்லைப்பா நான் தான் தப்பு. ஆணோ, பெண்ணோ ஒரு நிலைக்கு மேல பெத்தவங்க கைய கூட எதிர்பார்க்க கூடாது தான்… கூட பொறந்த இரத்த சொந்தம் பணக்காரங்களா இருக்கலாம், ஒரே வீட்டிலே இருக்குறதால, சொந்தமா இருக்குறதால நாமளும் வசதியானவங்களா பார்க்க படுவோம். ஆனா, உண்மையிலே நம்ம நிலை என்னவோ அது தான் நம்ம பிள்ளைக விதி… என் நிலை ரொம்ப பரிதாபம். ஆனா, எம் பிள்ளைக விதி மாறனும். அவங்க விதிய மாத்த, நான் மாறனும், மாறிட்டேன்…” என்றாள் தெளிவாக.
“உன்னை தப்பு சொல்லலை சரண், எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்க கூடாதா” தயாவாக தான் வந்தது வார்த்தை. வரும் போது இருந்த கோபம் போன இடம் தெரியவில்லை.
“வெற்றி ஒரு புருசனா சரி கிடையாது. ஆனா, ஒரு நல்ல அப்பா… பிள்ளைக பொறுப்பை, கடமையை ஏத்துக்க தயாரா தான் நின்னாரு… இது என்ன தெரியுமா” தன் கையில் இருந்த ஒரு பெரிய பார்சலை எடுத்து காட்டி,
“இது பால் பவுடர், மஸ்கட்ல இருந்து வாங்கி வந்தாங்க. விஜி ஒல்லியா இருக்கா இல்லையா. அதுக்கு தான், நல்ல வெயிட் போடுமாம்… பிள்ளைகளுக்கு வாங்குற எல்லாமே தரமானதா தான் வாங்கி வச்சுருக்காங்க. இப்ப அவங்க போட்டு இருக்குற நைட் டிரஸ் விலை என்ன தெரியுமா, ஆயிரத்து முன்னூறு… ஆனா, அங்க பிள்ளைக பிறந்த நாள் அன்னைக்கு அப்பா ஆயிரம் ரூபாய் கொடுப்பார். அதுல தான் ரெண்டு பேருக்கும் டிரஸ் எடுக்கணும்…”
“சின்ன பிள்ளைகளுக்கு வேற என்ன விலையில எடுக்க முடியும்…” சுகந்திக்கு கொஞ்சம் சடவு, எல்லாத்துக்கும் குற்றம் கண்டு பிடித்தால் எவ்வாறு?
ஆனால், சரண்யா அசர வில்லை. “ உங்க பேரன் முதல் பிறந்த நாளுக்கு தங்க காப்பு போட்டீங்க…” என்றாள் குத்தலாக.
“திவ்யா கிட்ட தப்பிக்க முடியாதுடி… சுரேன் கூட தான் சண்டை போடுவா. அவன் நிம்மதி போயிடும். அண்ணன் பாவம் தான..”
“ ரொம்ப நல்லவங்கம்மா நீங்க, மகன் வீட்டுல சண்டை வர கூடாது. மக என்ன ஆனாலும் பரவாயில்லை. பெரிய மகளுக்கும் எல்லாம் நிறைவா செய்யணும், ஏன்னா சம்மந்தி வீட்டு மரியாதை குறைஞ்சு போயிடும். ஆனா, நான்… எனக்கு கேட்க யாரு இருக்கா, எனக்கு, எம் பிள்ளைகளுக்கு செய்யலைன்னா அது குறையா யாருக்கு தெரிய போகுது. நம்மளை அண்டி தான் இவங்க வாழ்க்கை, அந்த எண்ணம் கொடுத்த தைரியம். தனியா நிக்க மாட்டேன்னு நினைச்சீங்க. உங்களுக்கு மகன்றத விட, ரெண்டு பிள்ளைக்கு அம்மான்ற நினைப்பு வைராக்கியமா போராட வச்சிருச்சு…” என்றவள். தன் தாய், தந்தையை தீர்க்கமாக பார்த்து ,
“சொல்லணும்ன்னா நிறைய இருக்கு, ஒவ்வொண்ணையும் தோண்டி எடுத்து என் நியாயத்தை நான் புரிய வைக்க கூடாது. நான் சொல்லாமவே என் வலி பிரிஞ்சுருக்கணும், உங்களுக்கு புரியலை. இனி புரிய வைக்க எனக்கு விருப்பமும் இல்லை. வெற்றி தப்புன்னு என் பிடியில் நிக்கிறத விட, இன்னும் தப்பாவே இருந்தா என்னால என்ன பண்ணிருக்க முடியும். அவர் விருப்பப்பட்ட வாழ்க்கையை தேட, அவருக்கு எந்த தடையும் இல்லை. ஆனாலும் எங்களுக்காக வந்தார் இல்லையா நான் அதை யோசிக்கணும் தான. வெறும் பணத்தை மட்டும் கொடுத்து ஒதுங்காம, பெத்த தகப்பனா பிள்ளைகளுக்காக நிக்கிற ஒருத்தருக்கு நான் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்..” ஒரு பெருமூச்சு விட்டு,
“வாழ்க்கையில உறைக்கிற மாதிரி நான் படிச்ச விசயம், பிள்ளைகளுக்கு குடும்பம்ன்ற சூழலை பெத்தவங்களாள மட்டும் தான் கொடுக்க முடியும். கொட்டி குடுக்குற பணமும், தாங்கி நிக்கிற உறவு இருந்தும், பெத்தவங்க இல்லைன்னா அந்த பிள்ளைக அனாதை தான். என் பிள்ளைகளை அனாதையா நான் ஏன் வளர்க்கணும். பொறுப்பை தட்டி கழிச்சுட்டு, உரிமைக்கு மட்டும் வந்து மல்லு கட்டுற உங்க கிட்ட கேட்டு எங்க வாழ்க்கைய நான் ஏன் தீர்மானம் செய்யணும்…” முகத்திலடித்தது போல் பேச, வாயடைத்து போனார்கள் பெற்றவர்கள்.
சரண்யாக்கு மேல பேச விருப்பமே இல்லை. இன்று தன் பேச்சை கேட்டு முகம் செத்து கிடப்பவர்கள், நாளைக்கு மகன், மகள் பேச்சை கேட்டவுடன் எல்லாம் மாறி விடும். இன்று ஒரு ஆதங்கத்தில் பேசி விட்டாள், இனி பேச விருப்பம் இல்லை. வெற்றி வந்து விட்டான். அவர்களும் எழுந்து கொண்டார்கள். ஏதேதோ கேட்க வந்தவர்கள், மகளின் ஒரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் முடங்கி கொண்டார்கள்.
வெற்றி, மனைவி முகம் தான் பார்த்தான். அவள் முகத்தின் இறுக்கம்,வாயை மூடி கொண்டான், தனக்கு ஏன் வம்பு… சிவகுமார் தம்பதிகள் கிளம்பி விட்டார்கள். பிள்ளைகள் இருவரும் பெற்றவர்களை ஒட்டி நின்றது, அவர்களின் தலையை வருடியவர்,
“தம்பி, நல்ல படியா பார்த்துக்கோங்க. இதுவரைக்கும் என்னவோ, இனி நாங்க தள்ளி நிக்க மாட்டோம். எந்த நல்லது, கெட்டதுக்கும் எங்களை ஒதுக்காம…” என்று சொல்லும் போதே,
“பழசு வேணாம், விட்டுடுங்க. குடும்பத்துல மூத்தவங்க, உங்களை விட்டு எதுவும் நடக்காது. அடுத்த வாரம் அப்பா உங்களை பார்க்க வாரேன்னு சொல்லிருக்காரு… டிராவல்ஸ் தொடங்குகிறோம், உங்களை விட்டு உங்க மக வீட்டில ஒரு நல்லது நடக்குமா…” என்று அவனும் தன்மையாகவே பேசினான்.
நாடகம் போல தான் சரண்யா பார்த்தாள். “சாத்தான் வேதம் ஓதுது” என்று எண்ணாமல் மட்டும் இருக்க முடியவில்லை.
வெற்றி மதுரைக்கும், திருபுவனதிற்க்கும் மாறி, மாறி அலைந்தான். தொழில் அங்கு இருக்க, குடும்பம் இங்கு இருந்தது. ஊர் வந்த பல மாதம் ஆகிய பின் தான் முறையாக தொழில் தொடங்கினான். தன் வீட்டு நிலவரத்தை ஓரளவு கட்டுப்படுத்திய பின் தொழிலில் இறங்கினான். எத்தனை வேலைகள் இருந்தாலும் இரவில் வீடு வந்து விடுவான். அவர்களை தனியே விட முடியாது என்பதோடு பிள்ளைகள் அவனை தேடுவார்கள். ஆம், அப்பா எங்கே என்று கேட்கும் அளவிற்கு நெருங்கி விட்டான்.
இன்று திருபுவனம், தந்தையோடு ஏதோ பேசிய படி இருக்க வந்தார் வெற்றியின் பெரிய தாய்மாமன் கஜேந்திரன்.
“என்ன மாப்பிள்ளை, டிராவல்ஸ் வைக்க போறயாம். சொந்த தாய்மாமன் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்ல வேண்டாமா…” எதார்த்த பேச்சாக தான் இருந்தது.
“சொல்லாம என்ன மாமா. தாய்மாமன், முறையா அழைக்க வேண்டாமா, வீடு தேடி வந்து சொல்லுவேன்…” தன்மையாக தான் வெற்றியும் தொடங்கினான்.
“இதை சொல்ற நீ, மத்த விசயத்தையும் மாமா கிட்ட கலக்கமா செய்யலாமா… எந்த ஒண்ணுக்கும் மொத சொந்தமா வந்து நிக்கிறது தாய்மாமன் தான் மாப்பிள்ளை…”
“சரி தான் மாமா. உங்களை விட்டு என்ன செஞ்சேன்…”
“உன் வண்டி அடிக்கடி மதுரை போதாம்…”
தன் தாயை திரும்பி பார்த்தான் வெற்றி. யார் வேலை என்று தெரியாமல் இருக்குமா…
மூடு மந்திரம் தேவை இல்லை, “என் குடும்பம் அங்க தான மாமா இருக்கு…” உடைத்தே சொல்லி விட்டான்.
“ எது உன் குடும்பம். அந்த பிள்ளையை ஒதுக்கி வச்சு வருசம் ஆச்சு மாப்பிள்ளை. அதுக்கு நீயும் ஒத்து கிட்டு தான் நடந்தது…”
“ மறுக்கலை மாமா… அன்னிக்கு நிதானம் இல்லை, புத்தி கெட்டு போய் நடந்துச்சு. அதுக்காக ஒதுக்கியே வைக்க முடியுமா!… ஒதுக்கி வைக்க அவங்க யாரோ இல்லை எம் பொண்டாட்டி, பிள்ளைக…”
“உனக்கு நாங்க பொண்ணு பார்த்து பேசி முடிச்சோம் மாப்பிள்ளை…”
“சரி தான் மாமா. நான் நினைச்சது ஒன்னு, நடந்தது வேற… இன்னொரு பொண்ணை தேடி போற அளவுக்கு என் வாழ்க்கை என்ன குறைச்சு போச்சு மாமா. நல்ல பொண்டாட்டி, முத்து மாதிரி ரெண்டு பிள்ளை, புது வீடு, சொந்த தொழில்ன்னு நல்ல வாழ்க்கை தான். இதை தாண்டி வேற எதை தேடி ஓட… எனக்கு நிறைவான வாழ்க்கை தான் மாமா”
“நாலு வருஷத்துக்கு முந்தியே அத்து விட்டாச்சு மாப்பிள்ளை. நீயும் தான் ஒத்து வராதுன்னு சொன்ன…”
“அதான் சொன்னேனே மாமா புத்தி கெட்டு போச்சுன்னு… புருசன், பொண்டாட்டிகுள்ள சண்டை வர தான் செய்யும், கூட குறைய வார்த்தை வந்து விழும். அதுக்காக உறவு இல்லன்னு ஆகுமா மாமா. நீங்களும், அம்மாவும் பதினெட்டு வருசமா பேசலை, போக்குவரத்து இல்லை. எத்தனை வருசம் ஆனாலும் உங்களுக்குள்ள அக்கா, தம்பின்னு உறவு மாறி போச்சா என்ன… அப்படி தான் புருசன், பொண்டாட்டி உறவும். இரத்த சொந்தம் இல்லாததால வெட்டிக்கு போகணுமா… ரெண்டு பிள்ளைய பெத்து வச்சுருக்கேன் மாமா, கண்ணை மூடி ஒதுக்கி தள்ள சொல்றீங்க. உங்க மேல மரியாதை இருக்கு, அதை காப்பாத்திகோங்க…” காட்டமாக சொல்லி விட்டான்.
“அதில்லை மாப்பிள்ளை…” என்று மீண்டும் தொடங்க.
“போதும் நிறுத்துடா… எதுக்குடா சுத்தி வார, உம் தம்பி மகளுக்கு தான. ஊர் உலகத்துல வேற மாப்பிள்ளையே இல்லையாடா… அந்த பிள்ளையும், எம் வீட்டில இருக்குற கிரிக்கியும் பிடிவாதம் பிடிச்சா எல்லாம் ஆச்சா. அவன் தான் பொட்டுல அடிச்ச மாதிரி சொல்றான்ல எம் பொண்டாட்டி, பிள்ளை தான் முக்கியம்ன்னு. உங்க வீட்டு பிள்ளைக்கு புத்தி சொல்லி திருத்தாம, ரெண்டு பிள்ளைகாரன் தான் வேணும்ன்னு தகராறு பண்றீங்க…” என்று வேல்முருகன் சத்தம் போட
தன் அக்காவை முறைத்து பார்த்து எழுந்து சென்று விட்டார் கஜேந்திரன்.
“ஒருத்தன் உறவே வேண்டாம்ன்னு ஒதுங்கிட்டான். இவன் ஒருத்தன் இருந்தான், அவனையும் பேசி அனுப்பியாச்சு. எனக்கு பொறந்த வீட்டு உறவு இல்லாம பண்ணிட்டீங்க அப்பனும், மகனும்…” என்று தனம் குமுற
“ காடு வா வான்னுது… இருக்குற வர பேரன், பேத்திய பார்த்திட்டு ஊர் போய் சேர்வோம்ன்னு இல்லாம, நேத்து தான் வாக்க பட்டு வந்தியாக்கும் பொறந்த வீட்டு உறவு கொண்டாட… வெற்றி, உங்கம்மைக்கு நாலு கொடுத்தா, மத்தவனுங்க தன்னால அடங்கி போயிடுவாங்க…” என்று வேல் முருகன் அதட்ட, அப்போதைக்கு அடங்கி கொண்டார் தனம்.
அந்த வாரத்தில் ஒரு நாள் வேல் முருகன் தன் பேத்திகளை பார்க்க வந்து விட்டார். சரண்யா நல்ல முறையில் தான் வரவேற்றாள். அவரோடு அவளுக்கு எந்த விகள்பமும் இருந்தது இல்லை. ரொம்ப நல்ல மனிதர், பேத்திகளை பார்த்து கண் கலங்கினார். அங்கிருந்த காலத்தில் அவர் தான் இவளுக்கு ஆறுதல். தனத்திடம் இருந்து இவளை காப்பதும் அவர் தான்…
அந்த வாரத்தில் சரண்யாவின் பெற்றோரை பார்க்கணும் என்று சொல்ல, வெற்றி சரண்யா முகம் தான் பார்த்தான். அவளுக்கு ஒன்றும் இல்லை. சாதரணமாக தன் வீட்டு ஆட்களுக்கு சொல்லி விட்டாள். கணவனும், மாமனாரும் வருகிறார்கள் என்று…
வேல் முருகனுக்கு தயக்கம் மில்லை. தான் முன் நின்று செய்த திருமணம், தன் மகன், ஒரு பெண் பிள்ளை வாழ்க்கை வீணாக கெட்டு விட கூடாதே…
வாசல் வரை வந்து வரவேற்றார்கள் சரண்யாவின் பெற்றோர். சுரேந்தர் தான் கொஞ்சம் சங்கடமாக உணர்ந்தான். அப்பா, மகன் இருவரும் அவனை ஒரு பொருட்டாக கூட எண்ணவில்லை.
கடந்ததை தோண்டாமல், உறவை வளர்க்கும் பொருட்டு பொதுப்படையான பேச்சுகள் மட்டுமே… இரு பக்கமும் அந்த எண்ணம் இருந்ததால், பேச்சு நல்ல முறையில் வளர்ந்தது. சாதாரண பேச்சாகவே சரண்யாவை திருபுவனம் அழைத்து செல்லும் பேச்சு வந்தது. வெற்றி அடிக்கடி மனைவி முகம் பார்த்து கொண்டான். சரண்யா வேறொரு சிந்தனையில் இருந்தாள்.
தொழில் தொடங்கும் போது முறையாக வீட்டிற்கு சென்று விட்டு, பிள்ளைகள் பள்ளி முடிந்ததும் மொத்தமாக அழைத்து கொள்வதாக பேச, ஒரு நிமிசம் என்றாள் சரண்யா.
வெற்றிக்கு பதட்டம், எங்கே வர மாட்டேன் என்று சொல்லி விடுவாளோ என்று…
ஆனால், அவள் அதை இழுக்காமல், தன்னை பெற்றவர்களை பார்த்து…
“நாலு வருசம் கழிச்சு, எம் பிள்ளைகளோடு எங்க வீட்டுக்கு போறேன். நான் எப்படி சும்மா போறது. ரெண்டு கட்டை பையில துணி அள்ளி போக என்னால முடியாது. அங்க வாழ வந்த பொண்ணு வேற இருக்கு… ரெண்டு பிள்ளைகளோடு நான் வெறும் கையவ வீசி வராது…” எதற்கோ அடி போட்டாள்.
அப்பனும், மகனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள். என்ன பேச்சு இது…
சிவகுமார் தயங்க வில்லை. “என்ன பாப்பா இப்படி சொல்ற. உன்னை யாரு வெறும் கையா போக சொன்னது. உனக்கு உரியதோட பிள்ளைக்கு, மாப்பிளைக்கு எல்லாம் எடுத்து தான் அனுப்புவோம்…”
“ ஆமா, சரண்யா. மொத நீ நம்ம வீட்டுல இருந்தா, பெருசா செய்ய தேவை இல்லை. உன் புருசன் வீட்டுக்கும் அப்படி அனுப்ப முடியுமா… முறைன்னு ஒன்னு இருக்கு தானா…” என்றார் சுகந்தி.
அன்றே மகள் தங்களை கிழித்து தொங்க விட்டு இருக்க, இனி தவறு நேராதவாரு கவனமாக இருந்தார்கள்.
திவ்யா கூர்மையாக சரண்யாவை தான் பார்த்தாள். தன் வீட்டில் தனக்கு அடங்கி இருக்கும் பெண் இவள் இல்லை என்று புரிந்தது… சுய சம்பாத்தியம் பெரிய பதவியில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தைரியம் கொடுக்குமா என்ன…
“உனக்கு என்ன வேணும்ன்னு கேளு சரண். அப்பா ஒரு குறையும் வைக்காம செய்றேன்…” மகள் மன காயத்தை போக்க நினைத்தார் சிவகுமார்.
வெற்றி மனைவியவே பார்க்க, அவள் கணவன் புறம் திரும்ப கூட இல்லை.
“எனக்கு புதுசா எதுவும் வேணாம்ப்பா. என்னோடது எனக்கு கொடுத்தா போதும். அக்காக்கு அம்பது பவுன் போட்டீங்க, எனக்கு முப்பது போட்டீங்க, பரவாயில்லை. எனக்கு அதுவே போதும்… ஆனா, அதை எல்லாம் அண்ணன் அடகு வச்சிருந்தான். அதுக்குள்ள திருப்பியாச்சா, பரவாயில்லையே…” என்றாள் போலி ஆச்சர்யம் காட்டி.
சங்கடமாக இருந்தது சிவகுமாருக்கு. பிரியாவின் கணவன் அரசு வேலை, சரண்யாவின் கணவன் சாதாரண டிரைவர் தானே…
வேல் முருகன், வெற்றி வேல் முன் மகள் நகையை அடகு வைத்த விசயம் வெளி வர, பெருத்த சங்கடம் தான்.
வேல் முருகன் எப்போதும் தேங்காய் உடைப்பது போல பேசுபவர் தான். அதனால்,
“என்னம்மா சரண். பொறந்த வீட்டுக்கு ஒரு கஷ்டம்ன்னா, அந்த வீட்டு பொண்ணு கொடுக்கணும் தானே. அதை தான நீ செஞ்ச, இதுல என்ன இருக்கு…” என்றார் புரியாமல்.
“நானும் தப்பு சொல்லலை மாமா. எனக்கு குழந்தை பிறக்குறதுக்கு முன்னாடியே நகை எல்லாம் வாங்கிட்டாங்க. அண்ணனுக்கு இடம் வாங்கணுமாம், என் நகைய தான் எடுத்தாங்க. நான் வீட்டோட இருக்கேன் எனக்கு எதுக்கு நகை. அண்ணி வேலைக்கு போறவங்க, அவங்களுக்கு தேவை படும் தான. அதனால, என் நகைய வச்சு தான் அண்ணி பேர்ல இடம் முடிச்சாங்க. நாலு வருசம் ஆச்சு, கல்யாணத்துக்கு போட்டது தான் அப்புறம் ஒரு தடவை கூட போடலை. இப்பவும் கேட்க தான் செய்யிறேன்…” சாதாரணமாகவே சொல்லி விட்டாள்.
“அப்படியா” என்பது போல் வேல் முருகன் பார்க்க, அவமானமாக இருந்தது சிவகுமார் தம்பதிக்கு… அன்று யோசிக்கும் போது சரியாக தான் தோன்றியது. மகன் இடம் வாங்க போகிறான், சரண்யா நகை சும்மா தானே கிடக்கு, இனி தங்கள் ஆதரவில் தான் எனும் போது அண்ணன் ஆதரவு தேவை என்று அவள் பார்க்க நகையை தூக்கி கொடுத்து விட்டார்கள். நாலு வருசம் ஆகியும் நகை பற்றி சுரேந்தர் வாய் திறக்க வில்லை. அதை பெரிதாக எடுத்து கொள்ளவும் இல்லை. இன்று பெரிதாக இருந்தது. மருமகள் பெயரில் இடம் வாங்க, மகள் நகை…
திவ்யா தான், “கொஞ்சம் சிரமம் சரண்யா. அதான் திருப்பி கொடுக்க முடியாம போச்சு, முடிந்த அளவு சீக்கிரம் கொடுக்கிறேன்…” என்று தயவாக சொன்னாள் திவ்யா. உள்ளம் கொதித்தது, எவ்வளவு திமிர், ஊர்ல இல்லாத புருசன் கிடைச்ச மாதிரி சட்டமாக வந்து நகை கேட்கிறாள்.
சிவகுமார் சொல்லி விட்டார். “ நகைய திருப்பி தொழில் தொடங்குற அன்னைக்கு கொடுக்கிறோம் சம்மந்தி. மத்த படி, சரண்யா பொருள் எல்லாம் மேல தான் கிடக்கு…” என்று தொடங்க
தடுத்து விட்டாள் சரண்யா, “அப்பா, எனக்கு குடுத்த தேக்கு கட்டில் அண்ணன் ரூம்ல தான் கிடக்கு. நீங்க உட்கார்ந்து இருக்குற சோபா எனக்கு கொடுத்தது தான். எங்களுக்கு கூட கட்டில் கிடையாது, நாங்க பாய்ல தான உறக்கம் எல்லாம்… டைனிங் டேபிள்ல இருந்து எல்லாம் வீட்டுக்கு போட்டாச்சு. கொஞ்சம் கிடந்த பித்தளை பாத்திரம் எல்லாம் ஆடி, தீபாவளின்னு அக்கா வீட்டுக்கு சீருக்கு போயாச்சு…”
பெருத்த அவமானமாகி போனது சம்மந்தி வீட்டின் முன், மாப்பிளையும் இருக்க, தங்களை பற்றி எண்ண நினைப்பார்கள். மனைவியை முறைத்தார். பெரிய மகள் மீது உள்ள பாசத்தில் சரண்யா பொருட்களை எல்லாம் கடத்தி விட்டார். அங்கு யாருமே சரண்யாக்கு இரு பெண் பிள்ளை இருக்கு என்று எண்ண வில்லை.
“ எல்லாத்தையும் புதுசா வாங்கி கொடுத்துரோம் பாப்பா. பிள்ளைகளுக்கு செஞ்சுருவோம்…” என்றார் சிவகுமார்.
“இவங்க இப்பதான் புது வீடு கட்டுனாங்க. எல்லாம் புதுசா வாங்கி போட்டு இருக்காங்க. எதுவும் வேணாம்ப்பா…” என்ற சரண்யாவை எல்லோரும் ஆச்சர்யமாக பார்க்க.
“நீங்க சீருக்கு பணமா கையில கொடுத்திருங்க. என் நகையே எனக்கு போதும், அதை மட்டும் திருப்பி கொடுத்துறுங்க. அன்னைக்கே பொருள் எல்லாம் மூணு லட்சம் வந்துச்சு. இன்னைக்கு விலைக்கு நாலு லட்சம் வரும். அப்படி கணக்கு போட்டு குடுங்க…” என்று தீர்மானமாக சரண்யா சொல்ல,
“அப்படி போடு அருவாள…” என்று பார்த்தார் வேல் முருகன்.
அங்கிருந்து வந்த பின் வெற்றி கேட்டே விட்டான், ஏன் சரண் இப்படி…
“முதலை வாய்க்குள்ள கை விட்டு எடுக்குற மாதிரி திவ்யா கிட்ட இருந்து நகை வாங்குறது… யார் போனாலும் பேசியே சரி கட்டிடுவா. உங்க அப்பா முன்ன ஒன்னும் செல்லாது. சம்மந்தி வீடு மரியாதை கொடுக்கணும். அத்தோடு, அவர் முன்னுக்கு சொன்னதை செஞ்சு தான் ஆகணும்…”
“நான் பார்க்க மாட்டேன சரண்…
“யார் பார்த்தாலும் எம் பிள்ளைகளுக்கு நான் பார்க்கணும் வெற்றி. எம் பொருள் எல்லாம் எம் பிள்ளைகளுக்கு கொடுக்கணும்ன்னு எவ்வளவு ஆசையா வச்சு இருந்தேன். ஒவ்வொண்ணா போகும் போது எப்படி வலிக்கும் தெரியுமா… நம்ம வாழ்நாள் சொல்ல முடியாது வெற்றி. நான் இல்லாம போனாலும், எம் பிள்ளைக யார் தயவையும் எதிர் பார்த்து நிக்க கூடாது. இங்க தங்கம் ஒரு பெரிய முதலீடு, நாளைக்கு எம் பிள்ளைகளுக்கு உதவும் தான… “ என்று சரண்யா சொல்ல.
“நானும் அதை தான் யோசிச்சேன். நானே இல்லாம போனாலும் என் குடும்பம் யாரையும் எதிர்பார்த்து நிக்க கூடாதுன்னு. அதான், ரெண்டு வண்டிய உம் பேருக்கு மாத்துனேன். அது ரெண்டு தான் என் சுய சம்பாத்தியம். மத்த வண்டி எல்லாம் லோன்…” என்றான் வெற்றி.
கணவனை ஆழ்ந்து சரண்யா பார்க்க, சளைக்காமல் உண்மை தான் என்று பதில் பார்வை பார்த்தான் வெற்றி.