பிரியா வீடு வந்தது தெரிந்தும் சரண்யா சென்று பார்க்க வில்லை. அவளுக்கும் வேலை இழுத்து கொண்டது. வீட்டை காலி செய்யணும், வேலையை விட்டு நிற்கணும், பிள்ளைகள் பள்ளியை பார்க்கணும், தேவையான பொருட்களை பிரித்து அடுக்கணும்… மனதிலும் தனி குழப்பம் தான். வயிற்றில் பிள்ளையோடு, ஒரு பக்க கன்னம் வீங்கி அழுது வந்தவள். நான்கு வருடம் கழித்து இரு பிள்ளைகள் உடன் திரும்பவும் செல்கிறாள். எப்படி எடுத்து கொள்ள என்று தெரியவில்லை. வெற்றி மீது ஒரு நம்பிக்கை இருந்தாலும், இது சரி வருமா என்ற பயமும் கூடவே இருந்தது.
தன் வீட்டில் என்ன நடக்கும் என்று அறிவாள். தான் ஏன் தலையை கொடுக்க வேண்டும். ஏதேனும் ஒரு முடிவை கொண்டு வரட்டும் பார்ப்போம் என்று ஒதுங்கி கொண்டாள்.
பிரியா ரொம்பவும் அலட்டி கொள்ள வில்லை. எதார்த்தமாகவே சொல்லி விட்டாள், “சரண்யா பேசினது கொஞ்சமும் நியாயமில்லை. அவளை பேச விட்டு நீங்க எல்லாம் வேடிக்கையா பார்த்தீங்க. பெரிய தியாகி மாதிரி பேசிட்டு போயிருக்கா… பொறந்த வீட்டுல ஒரு கஷ்டம்ன்னா அந்த வீட்டு பொண்ணு நகைய கொடுத்து உதவலாம் தான. இது என்ன அவ்வளவு பெரிய விசயமா… அவ மாமனார், புருசன் எல்லாம் வந்தாங்கலாம். அந்த நகை எல்லாம் அவங்களா போட்டது. நம்ம போட்டது, ஒரு கஷ்டதுக்கு அடகு வைக்க கூட உரிமை இல்லையா…”
“ எல்லாம் புருசன் இருக்குற சப்போர்ட் அண்ணி. அவரும் கூடவே தான் வந்தாரு… எங்களுக்கு எவ்வளவு அசிங்கமா போச்சு. கூட பொறந்த அண்ணன், உனக்கு ஒரு பிரச்சனைன்னவும் ஓடி வந்தவரு இவர் தான். உன்னையும், உம் பிள்ளையையும் நான் பாக்குறேன்னு கூட்டி வந்தார். அந்த நன்றியை மறந்து குற்றவாளி மாதிரி நிக்க வச்சு நகை கேக்குறா…” மற்றொரு புறம் ஆதங்கமாக திவ்யா சொல்ல.
“யாரோ மூணாவது ஒரு ஆள நம்பாமல் போகலாம். உன் கூட பிறந்தவன் தான, இப்படியா ஆளை கூட்டி வந்து கறார நகை கேட்கிறது. சரண்யா கல்யாணதப்ப நான் கூட என் நகை அஞ்சு பவுன் கொடுத்தேன். அப்புறம் திருப்பி கொடுத்தாங்க. எல்லா வீட்டுலயும் நடக்கிறது தான்…” என்று சொன்னவள்.
“ பார்த்துக்கமா உன் சின்ன மக லட்சணத்தை… இவளா நாளைக்கு உங்களை பார்த்துக்க போறா, கடங்காரங்க மாதிரி பெத்த தாய், தகப்பன் கிட்ட வசூல் செய்ற… அம்மாடி, இன்னைக்கு தான புருசன் வந்தான். அதுக்கு முந்தி நாலு வருசம் நாம தான பார்த்தோம்…” என்று பிரியாவும் விடாமல் பேச,
சுகந்தி கூட ஒரு நொடி குழம்பி வீட்டார். இவர்கள் சொல்வது சரி தானே, கூட பொறந்த அண்ணன், விட்டு குடுத்த என்னவாம்.
தன் கணவரிடம், “பார்த்தீங்களா, சரண்யா மாறிட்டா… ஏதோ நாம தராம போடுவோம்ன்னு மாமனாரை கூட்டி வந்து, எவ்வளவு அவமானம்…” என்று குமுற
சிவகுமாருக்கு புரிந்தது. தப்பு முழுக்க சரண்யா பக்கம் திருப்பி விட்டார்கள். மனைவியும் நம்பி விட்டாள்.
“சரண்யா நகைக்கு பதில் என்ன?…”
“இப்பத்தான் நாலு லட்சம் கொடுத்தோம், நகை மெதுவா தான் கொடுப்போம். நீங்க சொல்லுங்க” என்றார் சுகந்தி.
“முடியாது சுகந்தி, சம்மந்தி முன்னாடி வாக்கு கொடுத்தாச்சு. உன் பையனை திருப்பி தர சொல்லு… எம் பிள்ளை புருசன் வீடு போகும் போது நகையோடு தான் போகணும்…”
“அவன் கொஞ்சம் கஷ்டபடுறான் போல…”
“ரெண்டு பேரும் வேலை பாக்குறாங்க. அவங்களால முடியாததா… எல்லாம் சமாளிப்பாங்க. மாப்பிள்ளை பத்திரிக்கை வைக்க வரும் போது எல்லாம் கொடுத்து தான் அனுப்பனும். உன் மருமகள் நகை அப்படியே தான இருக்கு…” என்ற கேள்வி வர,
“கொஞ்சம் மட்டும் திருப்பி தாரேன் ப்பா… மீதி கொடுக்க கொஞ்சம் அவகாசம் வேண்டும்.” தயங்கி தயங்கி சுரேன் கேட்க.
பொறுக்க வில்லை சுகந்திக்கு. இரு பெண் பிள்ளைகள் மத்தியில் பிறந்த ஒற்றை மகன். நல்ல படிப்பு, அரசு வேலை என்று பெருமை படுத்திய மகன், மறுகி நிற்க தாங்க வில்லை.
“உன்னால முடிஞ்சது கொடு சுரேன். மத்ததுக்கு என் நகை வச்சு சமாளிக்கலாம்…” என்று சுகந்தி சொன்ன நொடி அப்படி ஒரு கோபம் சிவகுமாருக்கு.
“அறிவு கெட்டவளே… உன் நகையை தூக்கி கொடுக்குறேன்னு சொல்றவ… பிள்ளைகளை கட்டி கொடுத்ததோடு நம்ம கடமை முடிஞ்சு போச்சா. நமக்கு ரெண்டு பொம்பளை பிள்ளைக இருக்கு, அவங்களுக்கும் பிள்ளைக இருக்கு. பிரியாக்கு ஒரு பொண்ணு, சரண்யாக்கு ரெண்டும் பொண்ணுக. அவங்களுக்கும் சீர் செய்யனும். பாட்டி நகை பேத்திகளுகு போகட் டும்…” என்று சொன்னவர், மகன் பக்கம் திரும்பி,
“ இங்க பாரு சுரேன். சரண்யாக்கு எதுவும் பெருசா செய்யலை. இனியாவது எம் பொண்ணுக்கு குறை இல்லாம செய்யணும்ன்னு நினைக்கிறேன். நகைய கொடு, இல்லையா சமயபுரம் இடத்தை மாத்தி விட்டு எம் பிள்ளைகளுக்கு நாங்க செய்றோம். ஆண் பிள்ளைக்கு சொத்து வேணும்ன்னு தான் பொண்ணுக்கு நகை போட்டோம். அதுக்கும் பங்கம் வந்தா, இடத்தை மாத்திட்டு போலாம். யாருக்கும் பாதிப்பு இல்லை…” என்று முடிவாக சிவகுமார் சொல்லி விட,
சுரேன் திகைத்து போய் தந்தையை பார்த்தான். இப்படி ஒரு நிலை வரும் என்று யாரும் நினைக்க வில்லை. எட்டு லட்ச ரூபாய்க்கு அடகு கிடக்கு, தங்கள் உடன் தான் இருப்பாள் என்ற தைரியத்தில் அடகு வைத்தது. எங்கே போவார்கள், மெதுவாக கொடுப்போம் என்ற மெத்தனம்… சரண்யா தனியே சென்ற போதும் நகை பற்றிய பேச்சு வரவில்லை. வெற்றி வந்த பின் எல்லாம் மாறி விட்டது.
வெற்றி ஓரளவு வேலைகளை ஒழுங்கு படுத்தி விட்டான். இரண்டு நாளாக வீட்டுக்கு வரவில்லை. பிள்ளைகளை தான் சரண்யாவால் சமாளிக்க முடியாமல் போனது. அவர்களுக்கு அவன் வேலை பளு பற்றி என்ன தெரியும், கூடவே இருக்கும் தந்தையை காணாத ஏக்கம் மிகுந்தது.
இரண்டு முறை சரண்யா போன் செய்து சொல்லி விட்டாள். அவர்களை தவிர்ப்பவன் கிடையாது வேலை, மிசுங்க முடியாமல் போனது… அன்று இரவு பத்து மணி மேல் தான் வீடு வந்தான். பிள்ளைகள் இருவரும் உறங்காமல் இருக்க, அவனுக்கு ஆச்சர்யம் தான், திரும்பி மனைவியை பார்த்தான்.
“நைட் அப்பா வருவாங்கன்னு சொன்னேன். ரெண்டும் தூங்கவே இல்லை. இன்னும் சாப்பிடவும் இல்லை. அவங்க அப்பா தான் ஊட்டி விடனுமாம்…” என்றாள் அழுத்து போய்,பின்னே பள்ளி விட்டு வந்ததில் இருந்து அப்பா எப்போ வருவார் என்பதை தாண்டி வேற வார்த்தை வாயில் வரவில்லையே…
பிள்ளைகள் அப்பா என்று அணைத்து கொள்ள, வெற்றி தூக்கி கொண்டான். பிள்ளைகளுக்கு, அப்பாவிடம் கதை பேச ஆயிரம் இருந்தது. அஜி, தான் கையை தந்தையிடம் காட்டினாள்.
“அப்பா, எங்க மிஸ் எனக்கு மூணு ஸ்டார் போட்டாங்க…”
“வெரி குட்… எதுக்கு மூணு ஸ்டார் போட்டாங்க…”
“மிஸ், ஃபேமிலி பேர் சொல்ல சொன்னாங்க. நான் கரெக்ட்ட சொல்லிட்டேன். அதான் குட் சொல்லி, மூணு ஸ்டார் போட்டாங்க…”
“அப்படியா, அப்பா கிட்ட ஒரு தடவை திரும்ப சொல்லுங்க…”
கையை கட்டி தன்னை தயார் செய்த அஜி, “அப்பா – வெற்றி வேல், அம்மா – சரண்யா தேவி, பட்டு குட்டி – விஜிதா, லட்டு குட்டி – அஜிதா” என்று பிள்ளை சொல்லி முடிக்க.
கணவன், மனைவி இருவருக்கும் வாய் கொள்ள புன்னகை. வெற்றி மட்டும் தான் செல்ல பேர் வைத்து பிள்ளைகளை அழைப்பது, அதையே சொல்லி பிள்ளைகள் அறிமுகமாக, அப்படி ஒரு சிரிப்பு தந்தைக்கு. இதுவரை இருந்த வேலை அழுத்தம் கூட காணாமல் போனது.
விஜிதா முகத்தை தூக்கி வைத்து தந்தையிடம் புகார் வாசித்தாள். யாரை பற்றி தாயை பற்றி தான்.
“அப்பா, அம்மா என்னை அடிச்சுட்டா… அதுவும் கரண்டி வச்சு…” என்று விஜி சொன்னதும். உண்மையான கோபம் வெற்றிக்கு…
அவன் கேட்கும் முன்பாகவே சரண்யா சொல்லி விட்டாள். “ உங்க பட்டு குட்டி, ஸ்கூல்ல ஒரு பையனை அடிச்சுட்டா…”
அப்போது தந்தை மகளை பார்த்தான், “அவன் என்னை பென்சில் வச்சு குத்துனான்…” தன் நியாயம் சொல்லும் அவசரம்.
“ ம்ம், பார்த்தியா சரண். அவன் மேல தான் தப்பு. நீயா ஃபர்ஸ்ட் அடிச்ச?…”
“நோப்பா, அவன் தான் ஃபர்ஸ்ட் பென்சில் வச்சு குத்துனான். எனக்கு வலிக்கவும், ஸ்கேல் வச்சு அடிச்சேன். மிஸ் என்னை அம்மாட்ட சொல்லி குடுத்துட்டாங்க..” முகத்தை சுருக்கி கொண்டு விஜி விவரிக்க.
“ அப்பாக்கு போன் பண்ண சொல்லலாம்ல பட்டு…”
“ நான் சொன்னேன்ப்பா. எங்க அப்பாட்டா சொல்லுங்க மிஸ், அவர் தான் குட் பாய்… அம்மா கிட்ட வேணாம், அவங்க பேட் கேர்ள் சொன்னேன். அப்புறம் தான் அம்மாக்கு போன் பண்ணிட்டாங்க…” என்று மேலும் முகத்தை சுருக்கி கொண்டு விஜி சொல்ல.
அதில் சிரிப்பு வந்தாலும் அடக்கி கொண்டு, “பார்த்தியா சரண் பட்டு மேல தப்பு இல்லை. அவன் அடிக்க போய் தான் பட்டு அடிச்சுருக்கு. அதுக்கு நீ ஏன் அடிச்ச…”
“அவன் அடிச்சாலும் மிஸ் கிட்ட சொல்ல வேண்டி தான. எதுக்கு உங்க பொண்ணு ஸ்கேல் வச்சு அடிக்கிறா, அதுவும் தடுப்பு விழுற மாதிரி. இது தப்பு தான். அதான் நானும் ஒரு அடி போட்டேன்.”
“அதுக்கு சின்ன பிள்ளையை கரண்டி வச்சு அடிப்பியா, எனக்கு பிடிக்கலை சரண். பிள்ளைக மேல கை வைக்குறது இது தான் கடைசியா இருக்கனும். நீ சொல்லி பாரு, இல்லையா என் கிட்ட விடு…” குரலில் இதுவரை இருந்த சிரிப்பு காணாமல் போக, வாயை மூடி கொண்டாள் சரண்யா.
விஜி எப்போதும் அடி வாங்குவாள். அங்கு இருக்கும் போதும், “உன் பிள்ளை சேட்டை சரண், அடித்து வள…” என்று தான் சொல்வார்கள். யாரும் அடிக்காதே என்று பிள்ளைக்கு ஆதரவு தந்தது இல்லை. இன்று தந்தையின் இளவரசியாக, தாயை போட்டு கொடுத்து விட்டாள்.
பிள்ளைகள் உறங்கிய பின் வெற்றி தன் மனைவியின் அருகில் வந்து, அவள் கையை பிடித்து, “சரண் பிளீஸ்… பிளீஸ் பிளீஸ் முடியாதுன்னு சொல்லாத, நான் ஒரு புரோகிராம் போட்டு இருக்கேன். அது, மதுரைக்கு அவுடர்ல ஒரு ரிசார்ட் இருக்குலா, அங்க ரெண்டு நாள் புக் பண்ணி இருக்கேன். நம்ம பிள்ளைகளுக்காக சரண், முடியாது சொல்லாத…”
அவளுக்கு தெரியும், அங்கு போய் வந்த அஜி பள்ளி தோழி யாரோ சொல்ல, மூன்று நாளாக அந்த பாட்டு தான். அவள் அப்பாவிடமும் போனில் அதையே சொல்ல, பிள்ளையை சமாதான படுத்த தான் போகலாம் என்று சொல்கிறான் என்று இவள் நினைக்க, உண்மையிலே புக் பண்ணி விட்டான்.
“பிள்ளைகளுக்கு ஆயிரம் ஆசை வரும், நம்ம சூழ்நிலை ஒன்னு இருக்கு. வாய் திறந்து கேட்டது எல்லாம் வாங்கி கொடுத்து தான் ஆகணுமா… உங்க போக்கு எனக்கு சரியா படலை, ரொம்ப செல்லம் கொடுக்குறீங்க…”
“நீ ரொம்ப கெடுபிடி, அதான் நான் கொஞ்சம் செல்லம். சின்ன பிள்ளைக தான, ஒத்துக்கோ சரண். நாமளும் அவங்களை எங்கேயும் கூட்டி போகலை. தொழில் தொடங்கிட்டா எனக்கும் நேரம் இருக்காது…” பலவாறு சமாதானம் செய்து தான் சம்மதிக்க வைத்தான்.
சரண்யாக்கு இது எல்லாம் அநாவசிய செலவு… மறு நாள் இரவு அந்த குட்டி குடும்பம் ரிசார்ட் நோக்கி கிளம்பி விட்டது. அவனின் இனோவோ கார் எடுத்துட்டு வந்தான். இது தான் முதல் முறை காரில் செல்வது.
“கார்ல போறோம்மாப்பா… யார் காரு?…”
“லட்டு குட்டி, பட்டு குட்டி காரு…”
என்ன என்று அதிசியமாக பார்த்தவர்கள். “எங்க கார, யார் வாங்குன?…”
“அவங்க அப்பா வாங்கி குடுத்தாங்க…”
“ நியாப்பா… இது நம்ம காரா, நாங்க ஸ்கூல்க்கு கார்ல போகலாமா…”
“ஷ், விஜி ஆடாத, அமைதியா உட்கார்…” என்ற அதட்டல். யாருக்கு என்று தெரியவில்லை. வெற்றி வாயை முடி கொண்டான்.
பிள்ளைகள் காரில் போற குதூகலம், கை தட்டி, ஆடி கொண்டு தான் வந்தார்கள். வெற்றி , மகள்களின் மகிழ்ச்சியை திரும்பி பார்த்து கொண்டே வர,
“ ரோட்டை பார்த்து ஓட்டுங்க…” ஒரு அதட்டல்.
“சரண், சாப்பிட்டு போகலாம். இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். பிள்ளைக பசி தாங்க மாட்டாங்க…” ஒரு ஹோட்டல் முன் நின்றது.
பெரிய, வசதியான ஹோட்டல் அது… குடும்பமாக உள்ளே நுழைய, அங்கே அவள் மொத்த குடும்பமும் இருந்தது. பிரியாவின் கணவன் வந்திருக்க, வெளியில் வந்து இருப்பார்கள் போல… அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி என்று குடும்பமே வந்தது தன்னை தவிர, இதனால் தானே இவள் ஒதுங்குவதும். பெயருக்கு கூட இவளை அழைக்க வில்லை, நாலு தெரு தள்ளி தான் வீடு. இதை தான் இவள் சொல்வதும், எங்கள் தகுதியை நீங்கள் தீர்மானிக்காதீர்கள்.
இவர்கள் ஒரு டேபிள் அமர்ந்து கொண்டு, பிள்ளைகள் உடன் குதூகலமாக உணவை உண்டார்கள். சாப்பிட்டு முடிக்கும் போது தான் கவனித்த வெற்றி,
“சரண், உங்க வீட்டு ஆளுங்க…”
“நான் இதுவரைக்கும் பார்க்காமையா இருப்பேன், விட்டுடுங்க…” கிளம்பி வெளியே வரும் போது தான் சிவகுமார் பார்த்தார். அவர்களும் கிளம்பி விட்டார்கள்.
மகளை பார்த்ததும் வந்து மாப்பிள்ளையிடம் விசாரிக்க, சொல்லி விட்டான். பிள்ளைகளுக்கு லீவு, ரிசார்ட் போகிறோம் என்று…
பிரியா, திவ்யாவின் பார்வை சரண்யா மீது தான். எங்களை தாண்டியா நீ… மெஜந்தா வண்ண சுடிதாரில், பாந்தமாக கணவன் அருகில் நின்று இருந்தாள் சரண்யா. ஒரு அறிமுக பேச்சு மட்டும் தான். யாரும் நகையை பத்தி பேசவில்லை.
சுகந்தி கூட கொஞ்சம் நெகிழ்ந்து போய் தான் இருந்தார். இத்தனை ஆண்டுகள் கழித்து மகள் குடும்பத்துடன் இருக்க, கண் நிறைந்தது. சிவகுமார் தனியே சென்று வெற்றியுடன் பேசி வந்தார். ஏனோ பெண்களுக்கு ஒட்ட வில்லை. சரண்யா உடை, கணவன் அருகில் நின்றது, அவர்களின் கார் என்று பிரியா நெருங்க கூட இல்லை. என்னவோ தடுத்து விட்டது.
வெற்றி குடும்பம் கிளம்ப, பிள்ளைகள் காரிலே உறங்கி விட்டார்கள். சரண்யா, அவள் குடும்பத்துடன் அதிகம் பட்டு கொள்ளாதது போல தோன்ற, கேட்டு விட்டான் வெற்றி.
“அதுவா, நான் படிக்கலை, நீங்களும் பிடிக்கலை… ஆனா, நீங்க தான் உங்க தம்பிய படிக்க வச்சீங்க, உங்க தங்கச்சிக்கு கல்யாணத்துக்கு பார்த்தீங்க. அதே நேரம் உங்களையும் உயர்த்தி கொண்டீங்க. ஆனா, நான் அவங்களை நம்பி, அவங்க ஆதரவுல தான் நாலு வருசம் பிள்ளைகளை வளர்த்தேன். எதுக்கும் அவங்க கிட்ட நிக்குற நிலை தான். ஆனா, இன்னைக்கு… நான் நல்லா இருக்க கூடாது அப்படிலாம் இல்லை. அவங்களை தாண்டி நிக்க கூடாது. இப்போ அவங்களுக்கு ஒரு போட்டியா நான் தெரியுறேன்…” என்று சரண்யா விளக்க. வெற்றிக்கு ஒன்றும் புரியவில்லை. பெண்கள் விசயம் போல, கேட்டு கொண்டான்.
“நான், எம் பிள்ளைக எல்லாம் இப்படி வருவோம்ன்னு அவங்க எதிர்பார்க்கல. எம் பிள்ளைகளுக்கு நான் பார்ப்பேன் தான். ஆனா இன்னைக்கு நாங்க வாழ்ற இந்த வாழ்க்கை உங்களால தான் அந்த நன்றி எனக்கு இருக்கும்…” என்று சரண்யா சொல்லும் போதே, அவள் கையை பிடித்து தடுத்து விட்டான் வெற்றி.
“என்ன நன்றி. என் குடும்பத்தை நான் தான் பார்க்கணும். நான் நல்லா இருக்கேன், நல்ல சம்பாதிக்கிறேன். அதிலிருந்து ஒரு பகுதிய என் தம்பிக்கு குடுக்குறேன், எம் தங்கச்சிக்கு குடுக்குறேன்னு சொல்லலாம். எம் பொண்டாட்டிக்கு ஒரு பகுதி குடுக்குறேன்னு சொல்ல முடியுமா… எனக்கானது எல்லாம் உங்களுக்கு உரியது, உரிமையானது சரண். அதை மனசுல பதிய வை…” அழுத்தமாக சொல்ல, அமைதியாக அவதானித்தாள் சரண்யா.
அங்கிருந்த இரண்டு நாளும் பிள்ளைகள் ஒரே ஆட்டம் தான். பிள்ளைகளுக்கான விளையாட்டு நிறைய இருக்க, ஒன்றையும் விட்டு வைக்க வில்லை. பெற்றோர்களையும் விட வில்லை. சரண்யாக்கு இவர்களோடு ஓட முடியாது, ஒதுங்கி வேடிக்கை மட்டும் தான். வெற்றி தான் பிள்ளைகளுக்கு ஈடு கொடுப்பான். எப்போதும் தாயை ஒன்றும் அஜி கூட மெல்ல தந்தை பக்கம் நகர்ந்து விட்டாள். நல்ல உணவு, உறக்கம் என்று சரண்யாக்கு ரெஸ்ட் தான். வெளியில் பிள்ளைகளுக்கு என்று காட்டி கொண்டாலும், அவள் அழுத்தம் குறைக்கவும் தான்.
சின்ன சின்ன விளையாட்டுகளின் சரண்யாவும் சேர்ந்து கொண்டாள். வெற்றி அவர்களை எல்லாம் போட்டோவாக எடுத்து தள்ளினான். அதை தான் பார்த்து கொண்டு இருந்தாள் அபிராமி.
குடும்பமாக இருக்கும் வெற்றியை பார்க்க, பார்க்க தாள வில்லை. அவன் ஸ்டேட்டஸ் எல்லாம் மனைவி, மகள்கள் மட்டும் தான். ஏனோ தன் காயத்தை ஆற விடாமல், வலியை மட்டும் கொடுத்து கொண்டு இருந்தாள். ஒவ்வொரு போட்டோவாக பார்த்த படி வர, ஒரே ஒரு போட்டோவில் மட்டும் வெற்றியும், சரண்யாவும் தம்பதிகளாக நின்று இருந்தார்கள்.
மெருன் நிற சுடிதாரில் சரண்யாவும், வெள்ளை சட்டையில் வெற்றியும் மனைவியை நெருங்கி நின்று இருந்தான். அதுவரை ஏதோ ஒரு ஆதங்கத்தில் பார்த்து வந்தவள், இருவர் முகத்தில் இருந்த புன்னகை காயத்தில் கத்தியை வைத்து திருகியது போல் இருக்க, காட்டு கத்தலாக கத்த தொடங்கினாள். தடுக்க வந்த யாரையும் விட வில்லை.
“என் வாழ்க்கையை எல்லோரும் சேர்ந்து அழிச்சுட்டீங்க, இது என் இடம் யாரோ ஒருத்திக்கு தூக்கி கொடுத்துடீங்களே…” என்று அரட்ட தொடங்கினாள்.
அன்று இரவு தான் வெற்றி குடும்பம் வீடு திரும்பியது. வரும் வழியில் வெற்றிக்கு ஒரு சவாரி வர, காலையில் கிளம்ப வேண்டும். வீடு வந்தவன் உறங்கும் பிள்ளைகளை படுக்கையில் போட, தாயிடம் இருந்து போன், அவசரம் உடனே வா என்று… மனைவியை பார்த்து கொள்ள சொல்லியவன், அரக்க பரக்க ஊர் திரும்பினான். வீடு செல்ல மணி பன்னிரண்டு,
“என்னம்மா! யாருக்கு என்ன, ஏன் அவ்வளவு அவசரமா வர சொன்ன…” பதட்டமாக வெற்றி கேட்க.
அவர் அழுது கொண்டே, “ஐயோ! வெற்றி இந்த அபி தான்டா…” என்றவர் நடந்ததை சொல்ல.
வெற்றிக்கு அவ்வளவு கோபம். “உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்க, என்னவோன்னு ஓடி வந்தா, அபி அழுகுறான்னு சொல்ற. அவ அழுதா, நான் என்ன பண்ண…” அவ்வளவு கோபம், தூக்கம் கெடுத்து ஓடி வந்தானே…
“என்னடா இப்படி சொல்ற. நீ வந்து அவ கிட்ட பேசு…”
“நான் வந்து பேசவா… என் பொண்டாட்டி என்னை கிழிச்சு எடுத்துடுவா… நான் முன்னவே அபி கிட்ட தெளிவா பேசிட்டேன். இனி என்னை விடுங்க. இதை தான்னு சொல்லி இருந்தா வந்தே இருக்க மாட்டேன்…” எரிச்சலில் கத்தி சென்றான் மகன்.
மூன்று மணிக்கு சவாரி இருக்க, நான்கு மணி நேரமாவது நல்ல உறக்கம் வேண்டும். என்னவோ என்று பயந்து வர, கதை சொல்லும் தாயின் மேல் கடுப்பு எகிறியது. மீண்டும் மதுரை வர மணி இரண்டு. வீடு செல்வோமா என்று தோன்றிய போதும் தொந்தரவு செய்ய மனதில்லை. மனைவி, பிள்ளைகளை பார்க்காமல் செல்லவும் முடியவில்லை. ஆந்திரா செல்ல வேண்டும், வர மூன்று நாள் ஆகும்.
மனைவி போன் செய்ய எடுத்து விட்டான். வீடு வருவதாக சொல்லி விட்டான். வந்த உடன் பிள்ளைகளை பார்த்து கிளம்ப வேண்டும்.
சரண்யா இஞ்சி டீ, பிஸ்கெட், பழம் எல்லாம் எடுத்து வைத்தாள். அவனும் தன்னை தயார் செய்து கொண்டான் . கிளம்பும் மும் பிள்ளைகள் நெற்றியில் முத்தம் வைக்க,
“ காலையில் எழுந்ததும் அப்பா எங்கேன்னு தான் முதல்ல கேட்பாங்க…” என்ற மனைவியை பார்த்து சிரித்தான். ஆயிரம் பத்திரம் சொல்லி கிளம்பினான்.
சாமி படத்தில் இருந்த எலுமிச்சை பழத்தை அவன் பையில் வைக்க, அவன் முகத்தில் ஒரு புன்னகை. வழியனுப்ப வந்தவளை கீழ வர வேண்டாம் என்று தடுக்க, பிடிவாதமாக உடன் வந்தாள் சரண்யா.
“பார்த்து இருங்க, வீடியோ கால் பண்றேன். பிள்ளைக மேல கை வைக்காத சரண். நானும் இல்லை என்ன கேட்டாலும் வாங்கி கொடு, சரியா…” என்ற கணவனை பார்த்தாள் பெண்.
பகல் முழுக்க பிள்ளைகள் உடன் ஆட்டம், அடுத்து அவன் ஊர் சென்று விட்டான், இனி சவாரி செல்ல வேண்டும். தூக்கமே இல்லாமல் ஓடுகிறான் தங்களுக்காக, மனம் கவலைப்பட்டது.
“சரி நான் வாரேன் சரண். பார்த்து, பத்திரமா இருங்க..” என்றவன், ஏதோ வேகத்தில் லேசாக அனைத்து விடு விக்க, அவனே அரண்டு விட்டான். என்ன சொல்வாளோ என்று பார்க்க, அவள் நார்மலாக இருக்கவும் தான் நிம்மதி. அவளை மேலே போக சொல்லி வண்டி ஏற, மாடியில் நின்று பார்த்து கொண்டு தான் இருந்தாள்.
மனைவியை உள்ளே போக சொல்ல, அவள் மறுத்து அவனை செல்லுமாறு சைகை காண்பித்தாள். வாடா புன்னகை கணவன் முகத்தில், கை அசைத்து விடை கொடுத்தான். இதுவரை இருந்த கண் எரிச்சல் மறைந்து உல்லாசம் மிகுந்தது.