காலையில் எழுந்ததில் இருந்து பிள்ளைகள் தந்தையை தான் கேட்கிறார்கள். இரண்டு நாளாக தந்தை தோலிலே தொத்தி கொண்டு கிடந்தார்கள். தூங்கி எழுந்து அப்பா இல்லையேன்றது, ஒரே அழுகை தான். சரண்யா சமாளிக்க முடியாமல் திணறி தான் போனாள். டிரைவிங்ல இருப்பான், நம்ம நேரத்துக்கு போன் செய்ய முடியாது.
ஒருவழியாக காலை பத்து மணிக்கு தான் வீடியோ கால் வந்தது. இந்தா பிடித்து கொள் என்று பிள்ளைகளிடமே கொடுத்து விட்டாள். அவன் சாப்பிடும் நேரம், அப்பா வா என்று சிணுங்கிய குழந்தைகளிடம் என்ன சொல்லி சமாதானம் செய்தான் தெரியவில்லை. அஜி முகம் முழுக்க புன்னகையோடு தாயிடம் போன் கொண்டு வந்து கொடுத்தாள். சற்று தயக்கம் தான் சரண்யாக்கு, இதுவரை வீடியோ கால் செய்து பேசியதில்லை.
தயங்கி தான் போனை வாங்கினாள். எங்கோ நின்று கொண்டு இருந்தான், பார்த்ததும் இருவர் முகத்திலும் சிறு புன்னகை தன்னை போல் மலர்ந்தது.
“சாப்டீங்களா?… ஒன்னும் பிரச்சனை இல்லையே?… இப்போ எங்க இருக்கீங்க?” என்ற மனைவியின் கேள்வியில் பல் தெரியும் அளவுக்கு புன்னகை விரிந்தது வெற்றிக்கு.
பிள்ளைகள் , “அப்பா வா, பென்சில் வேண்டும், கலர் புக் வாங்கி தா, சிக்கன் வேணும்” என்று வகையாக பட்டியல் போட்டார்கள். அவர்களுக்கு வாங்கி கொடுக்க சொல்லி தான் மனைவியை அழைத்தது. ஆனால், பார்த்ததும் மனைவி கேட்ட அக்கறையான வார்த்தைகள் மனதில் இனித்தது. பெத்தவர்கள், உடன் பிறந்தவர்கள், தான் பெத்த பிள்ளைகள் என்று அவர்களுக்கான கடமை கொண்டு ஓடுபவனுக்கு, தன்னை தேடும் ஒரு உறவு, தன் நலம் கருத்தும் ஒரு உறவு மனைவி தான…
அவனும், மனைவியை கேட்டு போன் செய்ய வில்லையே. பிள்ளைகளை மனதில் கொண்டு தான் போன் செய்தது. மனைவியின் வார்த்தை அவனை கவனிக்க வைத்தது…
“நீ சாப்பிட்டையா சரண்?…”
“ இனி தாங்க, இப்பதான் பசங்க சாப்டாங்க. சப்பாத்தி தான் போட்டேன்.”
“சரி, நீயும் சாப்பிடு. இன்னைக்கு வேலை இருக்கா…”
“இல்லை வீட்டுல தான். ஏன்? என்னங்க?…”
“பிள்ளைகளை மால் கூட்டி போறயா?…”
“என்ன மால், அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். ரெண்டு நாள் போட்ட ஆட்டம் பத்தாத உங்க பிள்ளைகளுக்கு, அநாவசிய செலவுக்கு நான் ஆள் இல்லை…” என்று காட்டமாக சொல்ல.
“பிளீஸ் சரண், முடியாதுன்னு சொல்லாத, நானும் இல்லை பிள்ளைக ஏங்கி போவாங்க. நான் வர மூணு நாள் ஆகும். பேனா, பென்சில், புக் எல்லாம் என்னைக்கும் யூஸ் ஆகும்..” என்று மனைவியை தாஜா செய்தான்.
ரொம்பவும் சிக்கனம் பார்க்கும் சரண்யாக்கும், பிள்ளைகள் கேட்டது எல்லாம் வாங்கி கொடுக்கும் வெற்றிக்கும் சில நேரம் ஒத்து போகாது…
“இங்க பாருங்க, உங்க பிள்ளைக ஐ லவ் யூன்னு ஒத்த வார்த்தை சொன்னதுக்கு நீங்க மயங்குங்க. உங்க தாஜாவுக்கு மயங்குற ஆள் நான் இல்லை…” என்று மனைவி கறாராக பேச.
சத்தமாக சிரித்தான் வெற்றி, ஐ லவ் யூ அன்பான வார்த்தை, பெற்றோரிடம் சொல்லலாம் என்று பள்ளி ஆசிரியர் சொல்லி கொடுத்திருப்பார்கள் போல… தெரிந்ததில் இருந்து அப்பா ஐ லவ் யூ தான். இதை சொன்னால் வெற்றி முழுதாக விழுந்து விடுவான். அடுத்து பிள்ளைகள் என்ன கேட்டாலும் வாங்கி கொடுத்து தான் ஓய்வான். சரண்யாவிடம் மட்டும் கதை ஆகாது. எப்பவும் கண்டிப்புடன் தான் செலவு இருக்கும்.
வெற்றி விடவில்லை, “சரண் பிளீஸ், உன் அக்கவுண்ட்க்கு பணம் அனுப்பிட்டேன், கூட்டி போய்டு வா… எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சென்னை வந்தாச்சு… மால் போய் கால் பண்ணுங்க…” என்று வைத்து விட்டான்.
சரண்யாக்கு தான் குழப்பம். தனியாக இரு பிள்ளைகளை இழுத்து கொண்டு மால் போய் வருவது எல்லாம் சாதாரண காரியமா… இவள் பள்ளி தோழிகள் எப்போவாது கெட் டூ கெதர் மாதிரி போடுவார்கள். இவள் போகவே மாட்டாள். என்னவென்று அங்கு போவது, ஒதுங்கி கொள்வாள். இதை வைத்து போவோமா என்று யோசனை ஓட, அகி போன் செய்து விட்டாள். நானும் வாரேன், நீ வந்து விடு என்று… அகி வந்தால் பிரச்சனை இல்லை, பிள்ளைகளை சமாளித்து விடலாம்.
“அப்பா வரலை, கார் யார் ஓட்டுவ?…” என்றது பட்டு குட்டி.
“கார?… ஆட்டோல போகலாம்” என்று சரண்யா சொல்ல.
“ மாட்டேன், கார் வேணும்” என்றது லட்டு குட்டி.
“கார் அப்பா எடுத்துட்டு போய் இருக்காங்க…” என்ற தாய்க்கு,
“நம்ம மூணு கார் வச்சிருக்கோம்ன்னு அப்பா சொன்னாங்க…” என்றது பட்டு குட்டி.
“சரியா போச்சு, உங்க அப்பா மூணு கார் வச்சிருந்தாலும், உங்கம்மாக்கு சைக்கிள் கூட ஓட்ட தெரியாது. அப்போ ஆட்டோ தான்…” என்று பிள்ளைகளை தள்ளி கொண்டு சென்றாள்.
ஆட்டோ ஏற மெயின் ரோடு போகணுமே யோசனையோடு கீழ வர, வாசலில் சிவப்பு நிற ஸ்கொடா நின்று இருந்தது.
ஐ… அப்பா கார் என்று பிள்ளைகள் குதிக்க. அவர்களிடம் வேலை செய்யும் பையன் தான் நின்று இருந்தான்.
“அக்கா, அண்ணன் தான் நீங்க வெளிய போக அனுப்பி வச்சாங்க…” என்றான் செல்வம்.
ஒரு பெருமூச்சு விட்டவள், பிள்ளைகள் உடன் ஏறி கொண்டாள். பிள்ளைகள் பேசி கொண்டு வந்தார்கள்…
“ நான் சொன்னால அம்மா புவர் ஸ்டூடண்ட், கார் ஓட்டவே தெரியலை… அப்பா தான் பிரில்லியன்ட்” என்று அவர்கள் தந்தை புகழ் பாட,
இவ்வளவு சௌகரியம் பண்ணி கொடுத்தால், இந்த பேச்சு வர தான் செய்யும்… மால் வந்த உடன் பிள்ளைகளை கையில் பிடிக்க முடியவில்லை. அவர்களுக்கு தக்க ஈடு கொடுத்து ஓடவே முடியவில்லை. அகி வந்த பின் தான் கொஞ்சம் சமாளிக்க முடிந்தது.
அவர்கள் குரூப் ஏலு பேர், அதில் சிலர் வேலையிலும், இரண்டு பேர் கல்யாணம் சகி இருந்தது, மற்ற எல்லோரும் மேற்படிப்பில் இருந்தார்கள். நீண்ட வருடம் சென்று சரண்யா இணைவதால் எல்லோர் கவனமும் அவள் மீது தான்…
“ஹே சரண், எப்படி இருக்க?…”
“உம் பிள்ளைகளா ஹப்பி வரல, உன் வீட்டுகாரர் என்ன பண்றாங்க…”
“டிராவல்ஸ் ஓனரா, செம்மைய செட்டில் ஆகிட்டா…” என்ற கேள்விக்கு,
“யாரு நானு, கிழிஞ்சது போ…” என்று மனதில் நினைத்து கொண்டு வெளியே சிரித்து வைத்தாள்.
அவர்கள் யாருக்கும் குழந்தை இல்லாததால், சரண்யா பிள்ளைகளை பார்த்து கொண்டார்கள். அதுவரை அவளுக்கு திருப்பி தான். மதியத்திற்கு மேல் தான் ஆரம்பித்தது சோதனை. எல்லோரும் சுற்றி பார்க்க செல்ல, கடையையே எழுதி கேட்கும் போல வெற்றியின் பட்டு குட்டி…
சரண்யா ரொம்ப கெடுபிடி காட்ட, “எங்கப்பா இருந்தா என்ன கேட்டாலும் வாங்கி கொடுப்பார் அத்தை…” என்று அகியிடம் புகார் வாசித்தது லட்டு குட்டி.
“அப்பா போன் பண்ண, அம்மா ஒன்னுமே வாங்கி தரலைன்னு சொல்லுவேன்…” மறைமுக மிரட்டலில் சின்ன வாண்டு குதிக்க. அப்போது பார்த்து தந்தையிடம் வீடியோ கால் வர, ரெண்டும் போட்டி போட்டு கொண்டு புகார் சொல்ல ஆரம்பித்தது.
கணவனிடம் நன்றாக வாங்கி கட்டி கொண்டு, பிள்ளைகளை கடைக்கு அழைத்து சென்றாள். அப்போது அங்கு வந்தார்கள் சுரேன், திவ்யா, பிரியா, அவள் கணவன் என்று…
முகம் பார்த்த பின் தட்ட முடியாது என்று சிரித்து வைக்க, பேசினான் பிரியாவின் கணவன். பிள்ளைகள் இருவரும் அவர்களுக்கு பிடித்ததை கை கொள்ள எடுத்து வைத்திருந்தார்கள். பில் போட வரிசையில் நிற்க, கார்ட் வத்து பணம் செலுத்தினாள் சரண்யா.
“கார்ட் எல்லாம் வச்சுருக்கியா சரண்…” ஆச்சர்யமாக கேட்டாள் பிரியா.
“வைக்காம என்ன, மால்ல ஷாப்பிங் பண்ற அளவுக்கு பெரிய ஆள் இல்ல…” என்றாள் திவ்யா.
நேற்று தான் பேசி முடிவு செய்தார்கள். திவ்யா நகை வைத்து சரண்யா நகையை மீட்க. அந்த கடுப்பு…
அவர்களுக்கு பெரிதாக பதில் அளிக்காமல் நகர்ந்து விட்டாள். உங்களுக்கான மரியாதை இது தான் என்பது போல…
“காசு வந்துட்டா திமிர் வந்துடும் போல…”
“புது பணக்காரன், கொஞ்ச நாள் ஆட தான் செய்வாங்க…” என்றாள் திவ்யா.
வெளியே வரும் நேரம் பிரியாவின் கணவன்,
“ சரண் தனியாவா வந்த, எப்படி போவ?…” என்று கேட்க.
“இல்லை மாமா, கார்ல தான் வந்தேன்…” என்ற சொல்லி முடிக்க, கார் வந்து நின்றது.
“இது யார் சரண்?…” என்ற கேள்விக்கு.
“எங்க டிரைவர், இவங்க அப்பா வெளிய போய் இருக்காங்க…” சரண் சொல்லும் போதே, செல்வம் வந்து கார் கதவை திறந்து விட, தலையசைத்து ஏறி கொண்டாள்.
“அற்பனுக்கு வாழ்வு வந்தா…” அப்படி தான் இருக்கு என்று பிரியா சொல்ல.
“நீ ஏன் பிரியா உன் தங்கச்சி கிட்ட பேசலை. உன் அண்ணன் தான் நகை அடகு வச்சான். அவன் திருப்பி குடுக்குறான், அது அவன் பாடு. உனக்கும், உன் தங்கச்சிக்கும் என்ன?… நல்ல விதமா பழகு…” என்று கண்டிப்பான குரலில் சொன்ன கணவனை ஆழ்ந்து பார்த்தாள் பிரியா.
மூன்று நாள் கழித்தும் வெற்றி வரவில்லை, வேற ஏதோ சவாரி வந்து விட்டதாம். சரண்யா பிள்ளைகள் உடன் தனியாக தான் இருந்தாள். அப்பா, கூட இல்லாமல் பிள்ளைகள் தவித்து தான் போனார்கள். வீடியோ காலில் மட்டும் தான் பார்த்து கொண்டார்கள்.
அந்த வாரத்தில் அகியின் அக்கா திருமணம். அகிக்காக கட்டாயம் போக வேண்டும். ஆனால், போக தான் தயக்கம். கல்யாணம் நடப்பது திருப்புவனத்தில்… அங்கு செல்லவே மனதில்லை. முன்பு என்றால் வேறு, தற்போது கணவன் உடன் இருக்க, வீடு தேடி வந்து பத்திரிகை வைத்தார்கள். அகியை மனதில் கொண்டு தான் செல்ல வேண்டும். கணவனிடம் சொல்லியும் விட்டாள். வெற்றி உடன் இல்லாவிட்டாலும் எதையும் மறைப்பதில்லை. அவனும் விட மாட்டான், எல்லாவற்றையும் கேட்டு விடுவான். இன்று என்ன உணவு என்பதில் தொடங்கி, பிள்ளைகள் எத்தனை மணிக்கு உறங்கினார்கள் என்பது வரை கேட்டு விடுவான். தனியாக இருக்கிறார்கள் என்று அவ்வளவு கவனம் எடுப்பான்…
சிவகுமார் தான் நகைகளை கொண்டு வந்து கொடுத்தார். வேற யாரும் உடன் வர வில்லை. அவள் அதை பெரிதாக எடுக்கவும் இல்லை. இவர்களுக்கு யோசித்தால், என் பிள்ளைகள் வாழ்வு என்னாவது… ஒவ்வொரு முறையும் கொடுத்தே உறவுகளை நிலை நிக்க வைக்க முடியாது, என்றாவது அறுந்து விடும் இன்று போல…
ஒரு கஷ்டத்தில் உதவும் உறவு அவர்களுக்கு பெரிதாக படவில்லை, கொடுத்ததை திருப்பி கேட்கும் போது விரோதியாக்கி கொண்டார்கள். கொடுப்பது விஷயமில்லை, கேட்டது தான் விசயம் போல…
திருமணத்தன்று காலையில் நீல கலரில் மெஜந்தா கலர் பார்டர் வைத்த பட்டு புடவை, மாங்காய் வைத்த ஆரம் என்று சிறப்பாக கிளம்பி விட்டாள். பிள்ளைகளும் பட்டு பாவாடை சட்டையில் அம்சமாக இருந்தார்கள்.
மண்டபம் வந்ததில் இருந்து அகி உடன் தான் இருந்து கொண்டாள். இந்த ஊர் மறக்க கூடியது அல்ல, இன்னும் சில நாளில் இங்கு தான் வர வேண்டும். பிள்ளைகள் உடன் ஓரிடத்தில் அமர, நேர நின்றது தன லட்சுமி. உடல், முகம் எல்லாம் இரும்பாக இறுக, வேற பக்கம் முகம் திருப்பி கொண்டாள். விளையாட கூட பிள்ளைகளை விட வில்லை. அடுத்தடுத்து சொந்தங்கள் வர, கண்டு கொண்டாள் அவள் கொழுந்தன், நாத்துனார் என்று அனைவரும் வருவதை..
மாயாவிடம், “அந்த சீமை சித்திராங்கி வந்திருக்கா மாயா… என்ன ஒரு தளுக்கு, குலுக்கு, எல்லாம் எம் மகன் காசு தான்.” என்று பொருமினார்.
“அம்மா, வாய மூடு. அண்ணனுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான். அவனுக்காகவாது பொறுத்து போ…”
“யாருக்கு நான் பயப்படனும். எனக்கு என்னைக்கும் அவளை பிடிக்காது. ஒட்டடை குச்சி மாதிரி இருந்து, ரெட்டை பிள்ளை எப்படி பெத்தா?… எனக்கு அவளை பார்த்தாலே பச்சை மிளகாய் கடிச்ச மாதிரி இருக்கு…” எரிச்சல் மிகுந்து இருந்தது அவள் குரலில்.
சரண்யா முகூர்த்தம் முடிய கிளம்பும் நிலையில் இருந்தாள். வெற்றி வீட்டு ஆட்கள் தன்னையே சுத்தி வருவது போல ஒரு எண்ணம்…
முகூர்த்தம் நெருங்க மண்டபத்தில் கூட்டம் சேர்ந்தது… பிள்ளைகள் அகியிடம் இருக்க இவள் சற்று தள்ளி வந்தாள். தாலி கட்டும் வரை தான் இந்த கூட்டம். அதன் பின் கல்லெறிந்த காக்கா போல பறந்து விடும். சரண் சுற்றி முற்றி பார்க்க, கூட்டத்தில் ஒரு வளர்ந்த தலை. கணவனும் இந்த உயரத்தில் தான் இருப்பான் என்று எண்ணும் போதே, என்ன!… ஐயோ! அது யாரு என்று எட்டி பார்க்க, அவள் கணவன் தான். வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் போட்டு இவளை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான்.
ஒரு வாரம் ஆச்சு, பார்த்தும் முகம் புன்னகையில் பூத்தது. அவனையே கண்கள் அகல பார்த்து நின்றாள். பிள்ளைகள் அகியிடம் இருப்பதை அறிந்தாலும் வெற்றியின் கால்கள் என்னவோ மனைவியை நோக்கி தான் சென்றது. தன்னை பார்த்ததும் ஆச்சர்யத்தில் விரிந்த முகத்தை கிட்ட பார்க்க ஆசை வந்தது.
கணவன் அருகில் வந்தும் அவனையே பார்த்து நிக்க, “வேற யாரோ எல்லாம் இல்லை. உன் புருசன் தான்…” என்று வெற்றி சொல்ல.
சிரிப்பு விரிந்தது சரண்யாக்கு. “சொல்லவே இல்லை…”
“ சர்ப்ரைஸ்…” என்றவன் பிள்ளைகளை தூக்கி கொண்டான்.
கல்யாண கலகலப்பில் இருந்தவர்கள் தந்தையை பார்த்ததும் ஒரே கொண்டாடம் தான். ஒரு இடத்தில் தன் குடும்பத்தோடு வெற்றி அமர்ந்து கொண்டான். பிள்ளைகளை மடியில் வைத்து பெற்றவர்கள் அமர்ந்திருக்க, அங்கிருக்கும் சொந்தங்கள் பார்வை வட்டத்தில் விழுந்தார்கள்.
வெற்றி ஊர் திரும்பியது சரண்யா விசாரித்து கொண்டு இருக்க, பதில் சொல்லி கொண்டு இருந்தான் வெற்றி. தோல் உரசி அருகருகே அமர்ந்திருக்க,
“நேத்து கல்யாணம் முடிச்சவ மாதிரி ஒட்டியே இருக்கா…” என்ற தனம்.
“அடியே, அந்த பெருசு அப்படியே வெற்றி மாதிரி இல்லை. கண்ணு, மூக்கு, வாய் , முடி கூட வெற்றி தான். அந்த ரெண்டாவது அப்படியே அவளை மாதிரி… அடையாள பிள்ளை பெத்து வச்சுருக்கா…”
“அம்மா, அண்ணன் இருக்கான் வாய மூடு…”
“நான் ஏன் வாய மூடனும். உங்கண்ணனுக்கு இருக்கு, என்னை பார்க்காம அவ பின்னாடி போறான். வீட்டுக்கு வரட்டும்…”
முகூர்த்தம் நல்ல படியாக முடிய, சாப்பிட அமர்ந்தார்கள். வெற்றி வந்த பின் எழுந்து ஓடும் உணர்வு இல்லை. சாதரணமாக இருந்து கொண்டாள்.
தனத்திற்கு அஜியை தூக்கி கொள்ள ஆசை வந்தது. தன் தலை மகன் போல இருக்கும் பிள்ளை மீது ஒரு பாசம்… மாயாவை அதட்ட தொடங்கினார், பிள்ளையை தூக்கி வர சொல்லி…
ஆரவாரம் கொஞ்சம் குறைந்த பின், வெற்றி எழுந்து கொண்டான்.
“சரண், கார் செட்க்கு போய் ஒரு பார்வை பார்த்திட்டு, வீட்டுக்கு போகலாம்…” என்ற கணவனுக்கு சரி என்று தலையசைத்தாள். வெற்றி கார் எடுக்க வெளியில் செல்லும் சமையம், மாயா வந்து அஜியை நெருங்க,
பார்த்த சரண்யா கொதித்து போனாள். “ஏய், எம் பிள்ளை மேல கைய வச்சா, அவ்வளவு தான் மரியாதை…” என்று சரண்யா ஒரு அதட்டல் போட.
முகம் கலங்கி போனது மாயாக்கு. அழுத முகமாக கலங்கி போய் வந்த மகளை பார்த்து பதறிய தனம் என்னவென்று விசாரித்தார். மகள் சொன்னதில் கொதித்தது போனவர், செல்வத்தை அழைத்து விசாரிக்க, வெற்றி சென்றது தெரிந்தது.
“வாடி, எம் மகளவே அரட்டி வைப்பாளா… இன்னைக்கு இருக்கு அவளுக்கு…” ஆவேசமாக நடக்க தொடங்கினார்.
அங்கு தான் வேல் முருகன் இருக்க, எல்லோரும் பேசி கொண்டிருந்தார்கள்.
“ஏய் சரண்யா, வாடி வெளிய… எம் மகளை என்ன சொன்ன?…” என்று கத்த, எல்லோரும் வந்து விட்டார்கள்.
“உம் மகளை எம் மக பார்க்க வந்ததுக்கு, தொட கூடாதுன்னு சொல்லிருக்க உம் பொண்டாட்டி…” என்று கத்த.
“ என்ன சரண்?…”
“ஆமா, எம் பிள்ளைய அவங்க தொட கூடாது…” என்றால் தீர்மானமாக.
“ஏன்… எந்தங்கச்சி, நீ எப்படி தொட வேணாம்னு சொல்லுவா, இது தப்பு…” என்று அவர்களுக்கு சாதகமாக வெற்றி பேச
சரண்யாக்கு கோபம், “ எது தப்பு… குழந்தைக பிறந்து இருவது நாள், உங்களை தேடி உங்க வீட்டுக்கு வந்தேன்…”
வெற்றி அதிர்ந்து போய் சரண்யாவை பார்த்தான்.
“என்ன சொல்ற சரண்?…”
“ஆமாங்க, பிள்ளைகளை தூக்கிட்டு தனியா வந்தேன். சண்டை வேணாம், என் புருசன் கூட சேர்ந்து வாழ்வோம்ன்னு வீடு வந்தேன். நீங்க வெளிநாடு போனது எனக்கு தெரியாது. வீட்டுக்குள்ள பச்சை பிள்ளைகளோடு கால் எடுத்து வச்ச என்னை, பிள்ளையோட சேர்த்து வெளிய தள்ளி கதவை அடிச்சாங்க. இதுக்கு உங்க தம்பி, தங்கச்சி உடந்தை. நம்ம அண்ணன் பிள்ளைகன்னு கூட பார்க்கலை…” என்று சரண்யா சொன்ன நொடி, அதிர்ந்து நெஞ்சில் கை வைத்தான் வெற்றி.
அப்போது அவனும் சரண்யா உடன் சேர்ந்து வாழும் எண்ணத்தில் தானே இருந்தான். முகம் வெளுத்து போய் தாயை பார்க்க,
“ நீ சொன்னா எம் மகன் என்னை ஒதுக்கி வைப்பானா… என்ன சிண்டு முடிஞ்சு விடுறையா. நானே சொல்றேன், எனக்கு உன்னை என்னைக்கும் பிடிக்காது. எங்க என் மகன் கிட்ட என்னை பிரிச்சு விடு பாப்போம். இந்த பிள்ளை மேல எனக்கு உரிமை இருக்கு…” என்று சரண்யா கையில் இருந்த அஜியை வலுக்கட்டாயமாக தூக்கி கொள்ள, பிள்ளை பயத்தில் கதற தொடங்கியது.
“அம்மா, தொடாத எம் பிள்ளையை…” என்று வெற்றி கத்த.
“அப்படி தாண்டா தொடுவேன். என்ன செய்வ..”
“ஐயோ! அஜி… பிள்ளையை கொடுங்க… நீங்க தூக்க கூடாது…” என்று சரண்யா கத்த
“எதே, நான் தூக்க கூடாதா… பிள்ளை எம் மகனுக்கு பொறந்தது தான, அப்ப எனக்கு தான் உரிமை இருக்கு…”
“அடியே சண்டாளி , என்ன பேச்சுடி பேசுற…” பதறி போய் வேல் வர,
“ஆமா, அவங்காத்தா வீட்டுல இருந்து வரும் போதே பிள்ளையோடா வந்தா… இது எம் மகன் வாரிசு தான்னா, அவனை பெத்தவ எனக்கு தான் முதல் உரிம… வெற்றி, நான் உன்னை பெறலன்னு சொல்லு, இல்லை உனக்கு பொறக்கலன்னு சொல்லு, நான் தூக்கல…” ஆவேசமாக தனம் பேச, கீழ இறங்கி அவரை போல் பேச வராமல் வாயடைத்து போனார்கள் கணவனும், மனைவியும்…