வெற்றி நெஞ்சில் கை வைத்து அசையாமல் நின்று விட்டான். தன் குடும்பமா தனக்கு இப்படி ஒரு காரியத்தை செய்தது, நம்பவே முடியவில்லை. பின் இருந்த தம்பி, தங்கையை பார்க்க, மெளனமாக தலை குனிந்து கொண்டார்கள்.
தன்னை நோக்கி கை நீட்டி அழும் பிள்ளையை தூக்க கூட நினைவில்லை. தன் மனைவி பிள்ளைகளோடு தன்னை தேடி வந்தாள் என்ற சொல் கொன்றது. அவனுக்கும் சரண்யாவை விட்டு விடும் எண்ணம் இல்லையே. அன்றைய கோபத்தில் தான் வீட்டை விட்டு வெளியே அனுப்பியது. அதன் பிறகு அவளை தேடி வீட்டிற்கு செல்ல பெரிய கலவரம் தான். முன்பே வெளிநாடு செல்ல ஒப்பந்தம் போட்டதால் தவிர்க்க முடியாமல் சென்று விட்டான். அவனளவில் சரண்யா தான் கருவை அழித்து ஒதுங்கி கொண்டாள் என்று நினைத்து இருந்தான். அவளும் சேர்ந்து வாழும் எண்ணத்தில் இருந்தாள் என்று தெரியாது… எத்தனை பெரிய சண்டையாக இருந்தாலும் பிள்ளையோடு வந்தவளை எவ்வாறு ஒதுக்க முடிந்தது. தன்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். நாலு வருசம் கழித்து கூட பொண்டாட்டி, பிள்ளை என்று இருப்பவன், தன்னை தேடும் மனைவியை ஒதுக்கியா வைக்க போறான். அன்று மட்டும் தனக்கு தெரிந்து இருந்தால், கை விட்டு இருக்க மாட்டான். தன் குடும்பமும் இவ்வளவு கஷ்ட பட்டு இருக்க மாட்டார்கள்.
வேல் முருகன் தான் பிள்ளையை பிடிங்கி கொண்டு “கேடுகெட்ட வேலை பாத்திருக்க, என் குடும்பத்தையே அழிக்க வந்த படுபாவி… பெத்த புள்ளை வாழ்க்கையே கெடுத்திட்டையே, நீயெல்லாம் ஒரு தாயா?…” என்று அவர் கை ஓங்கி வர,
“சும்மா நிறுத்துயா… எம் மகனுக்காக தான் பண்ணினேன். எனக்கு என்ன இவளா பார்த்து பயமா… எம் பிள்ளைக்கு தான் இவளை பிடிக்கவே இல்லை. எப்படியாவது அபி கூட சேரணும்ன்னு குடிச்சுட்டு புலம்புனான். எப்படி அழுதான் தெரியுமா!… அவன் மனசு முழுக்க அபி தான் இருந்தா, அவளை மறக்க முடியாம தான் வெளிநாடு போனான். ஒத்த நாள் கூட இவளை பொண்டாட்டின்னு அவன் நினைக்கல. வெற்றி, இவளை கட்டிகிட்டும் அபி நெனப்பு தான் மனசுல…” என்றவர்,
“வேண்டாம்ன்னு போனவ அப்படியே போக வேண்டிய தான. அவ அண்ணனை விட்டு எம்புட்டு பஞ்சாயத்து பண்ண, கடைசில ஒன்னும் தெரியாத மாதிரி பிள்ளையை பெத்து தூக்கி வருவாளா… அன்னைக்கு வயித்துல இருக்குற பிள்ளையை காட்டி பிடிக்க முடியலை, இன்னைக்கு வளந்து நிக்கிற பிள்ளையை காட்டி எம் மகனை பிடிச்சுட்டா. எம் மகன் இல்லாமையா இவளுக்கு புள்ளை வந்துச்சு…” அடங்குவேனா என்று தனம் பேச,
சரண்யா, மாமனார் கையில் இருந்த பிள்ளையை வாங்கியவள், ஏதோ பேச போன கணவனை தடுத்து, “எனக்கு இங்க வேணாம், நான் போகணும்…”
வெற்றி அரண்டு போனான். “சரண்யா” என்று மெல்ல அழைக்க.
“விஜி உள்ள தூங்குறா போய் தூக்கிட்டு வாங்க, போகலாம். எனக்கு இங்க இருக்க பிடிக்கலை…” என்ற வார்த்தை கேட்ட பின் தான் வெற்றிக்கு உயிரே வந்தது.
எங்கே தாய் சொன்ன அபியை தான் நினைக்கிறான் என்ற வார்த்தையை பிடித்து கொண்டு தன்னை ஒதுக்கி விடுவாளோ என்று பயமாக இருந்தது. அவ்வாறு இல்லாமல் தன்னையும் சேர்த்து வீட்டிற்க்கு போகலாம் என்ற சொல், உண்மையில் போன உயிர் திரும்ப வந்தது. இனி இவர்கள் இல்லாமல் அவன் எவ்வாறு வாழ்வது…
பிள்ளைகள் உடன் இருவரும் கிளம்பி விட்டார்கள். அவர்கள் சேர்ந்து போன பின் தான் வேல் முருகன், மாயா, சக்திக்கு நிம்மதி வந்தது. முன்பு வந்த சண்டையும் அபியை கொண்டு தான் என்பதால், அபி பற்றிய பேச்சு சரண்யாவை காயப்படுத்தும் என்று எண்ணி இருக்க, அவ்வாறு இல்லாமல் குடும்பமாக சேர்ந்து சென்றது அவர்களுக்கு அவ்வளவு நிம்மதி. அதை வேல் முருகன் சொல்ல,
“ஏன் போக மாட்ட… ஏறுனா காரு, இறங்குன வீடுன்னு எம்மகன் தாங்குறான். அவனை விட மனசு வருமா…” அப்போதும் எகத்தாளம் பேசினார் தனம்.
“நீ பேசு, இன்னும் எம்புட்டு பேசனுமோ பேசு… கடைசில உம் தலை மகனை இழந்துட்டு நிக்க போற… அது உனக்கு இப்போ புரியாது…” என்றவர், தன் மற்ற மக்களை பார்க்க,
அண்ணனுக்காக தான் என்றார்கள். வேற என்ன சொல்ல முடியும். சரண்யா உடன் திருமணத்தின் பின்பும் அபி என்று உருகியது வெற்றி தான். அவனை கொண்டு மட்டுமே உடன் பிறந்தவர்கள் சிந்திக்க, சரண்யா நியாயம் ஒதுக்க பட்டு போனது.
காரில் வரும் போதும் சரண்யா அமைதியாக தான் வந்தாள். ஒரு இடத்தில் இறங்கி பிள்ளைகளுக்கு உணவு ஊட்டி விட்டவள், தான் உண்ண வில்லை, வெற்றியும் உண்ண வில்லை. மனைவியின் எண்ணம் குறித்த பயம் தான் வெற்றிக்கு… திரும்ப ஒரு சண்டை, பிரிவு என்றெல்லாம் யோசிக்க கூட முடியாது. பிள்ளைகள் உறங்கி விட, வீடு வந்ததும் அவர்களை தான் கவனித்தார்கள். பிள்ளைகள் உடன் வெற்றியும் படுத்து கொள்ள, கணவன் உண்ண வில்லை என்று அவள் அறிவாள். அப்படியே விட தான் மனதில்லை. ரவை உப்புமா செய்து அவனுக்கு கொடுத்து, தானும் உண்டாள்.
சுய விளக்கம் அவசியமா என்று வெற்றி யோசித்தான். பிள்ளைகளுக்காக சேர்ந்து வாழலாம் என்றாலும் அபி பற்றிய பேச்சு மனைவியை எந்தளவு காயப்படுத்தும் என்று வெற்றி அறிவான். கல்யாணத்துக்கு முன் அவன் காதலுக்கு, கல்யாணத்திற்கு பின் மனைவியிடம் அவன் என்ன விளக்கம் கொடுக்க முடியும். ஆனால்,சரண்யா அவனை புரிந்தவள் மாதிரி, “புதைச்சதை தோண்டுன நாத்தம் வரும், வேண்டாம் விட்டுடுங்க…” என்றவள் போய் படுத்து விட, அவளை ஆச்சர்யமாக பார்த்தான் வெற்றி.
சரண்யாக்கு தெரியும், ஒரு தந்தையாக வெற்றி எப்படி என்று… தற்போது அவன் மனம் அன்பு, பாசம் எல்லாம் யார் மீது என்று அவள் நன்கு அறிவாள். அன்று திருமணம் ஆன புதிதில் கணவன் காதல் தனக்கு இல்லையே என்று கோபப்பட்ட சரண்யா இன்று இல்லையே… நிறைய பக்குவபட்டாச்சு, இன்னும் புத்தி வராமல் இருந்தால் எப்படி… தன்னுடைய கோபம், அவசரம் தன் அழகான கிளி கூட்டை அழிக்கும் எனில் நிதானமே பிரதானம். இனி நான் எடுக்கும் முடிவு என் பிள்ளைகள் எதிர்காலத்தை மனதில் கொண்டு மட்டும் தான், என் சுய விருப்பத்திற்கு என்னை ஆட்படவிட மாட்டேன் ஒரு தெளிவு கண்ட பின் தான் உறக்கமே…
வெற்றிக்கு தான் தூக்கம் தூர போனது. யார் மீதும் கோபம் கொள்ள முடியவில்லை. தாய், தம்பி, தங்கை என்று யாரை கை நீட்டினாலும், அடுத்த நிமிடம் தப்பு தன் பக்கம் திரும்பி விடுகிறது. குடும்ப சூழல் கொண்டு தான் படிப்பை பாதியில் நிறுத்தினான். அங்கிருந்த டிரைவரிடம் கிளினாரக வேலைக்கு சேர்ந்து, பின் அந்த நிறுவனத்தில் மினி பஸ்ஸில் டிரைவர் ஆக வேலை செய்தான். அப்போது கண்டது தான் காதல். அதே பஸ்ஸில் தினமும் ஏறும் அபிராமி மீது முதலில் மாமன் மகள் என்று இருந்த பாசம், அடுத்தடுத்து காதலாக உரு மாற்றம் அடைந்தது. சொந்த தாய்மாமன் மகள், பெரிதாக என்ன பிரச்சனை வரும். அப்படியே வந்தாலும் அதை சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையில் தான் உண்மையாக இருவரும் காதலித்தார்கள். தன் அளவில் தம்பி, தங்கையை படிக்க வைத்து ஒரு நிலை நிறுத்திய பின் தான், தன் கல்யாண பேச்சை எடுத்தான். தனத்திற்கு தம்பி மகள் மீது கொள்ள ஆசை. ஒற்றை பெண், படித்தவள், அழகி, வசதியிலும் குறைவில்லை. சிறு வயதிலேயே பேசி வைத்தது. இடையில் வந்த மாமன், மச்சான் தகராறில் மொத்தமாக ஒதுங்கி கொண்டார்கள். இந்த சம்மந்தம் மூலம் மீண்டும் இனைய கனவு கண்டார். ஆரம்பத்தில் கோபப்பட்ட வேல் முருகனும் மகனுக்காக ஒத்து கொள்ளவே செய்தார். கட்டி கொள்ளும் முறையும் இருக்க, தயங்காமல் தான் பெண் கேட்டு சென்றார்கள்.
ஆனால், அங்கு அவமான படுத்த பட்டது வெற்றி வேல் அல்ல வேல் முருகன்… அவரின் தன்மானத்தை சீண்டும் விதமாக அவர்களின் வறுமையை குறி வைத்து பேச, பொங்கி கொண்டு வந்தார் வேல் முருகன். தங்களை தூக்கி போட்ட சொந்தத்தின் முன்னே தன் மகனின் திருமணத்தை ஜம்மென்று நடத்த விரும்பி, தீவிரமாக பெண் தேடினார். சரவணனின் அப்பா மூலம் தான் சரண்யா வீட்டு சம்மந்தம் கிடைக்க, படிக்காத டிரைவர் வேலை பார்க்கும் மகனுக்கு வசதியான வீட்டு பெண் முப்பது சவரன் நகையோடு கிடைக்க, கை நழுவ விடாமல் பேசி முடித்து விட்டார்.
வீட்டில் கலவரம் தான், எல்லோரும் வெற்றியின் காதலுக்கு ஆதரவு தெரிவிக்க, யாரின் சொல்லையும் காதில் ஏற்றாமல் நாள் குறித்து விட்டார். வேல் முருகன் வளர்ந்த மகன் என்றெல்லாம் பார்க்காமல் கை ஓங்கும் ரகம் கொண்டவர். முதல் நாளே அடித்து, மிரட்டி தான் பூ வைக்க அழைத்து சென்றார். தட்டை குச்சி மாதிரி இருக்கும் பெண்ணை பார்த்த முதல் பார்வையிலேயே தனத்திற்கு பிடிக்க வில்லை. ஏதேனும் பேச போனால் கை தான் நீளுகிறது. தந்தையை எதிர்க்க முடியாமல் வெற்றி மனதில் வேறொரு திட்டம் இருக்க, மெளனமாக எல்லாவற்றிக்கும் தலையாட்டி கொண்டான். இதை அறியாமல் சரண்யாவும் மனதில் பல ஆசைகளை வளர்த்து கொண்டாள்.
திருமணத்திற்கு முதல் நாள் இரவு, குடும்பத்தார் துணையோடு தான் அபியை கூட்டி கொண்டு ஓடி விட்டான். ஆனால், அவன் கெட்ட நேரம், ஒரு அரசியல் தலைவரின் இறப்பால் போக்குவரத்து நிறுத்த பட, மதுரை கூட தாண்ட வில்லை மாட்டி கொண்டான்.
இரு வீட்டிலும் அடிதடி, கலவரம் தான். யாருக்கும் சேர்த்து வைக்கும் எண்ணம் துளி இல்லை. வேல் முருகன் கொதித்து போய் கிடந்தார். விடிந்தால் கல்யாணம், மணமகன் ஓடி போனான் என்றால் எவ்வளவு அசிங்கம். மனமே போய் சந்தி சிரித்து விடும். வெற்றியை பிரித்து எடுத்து விட்டார்.
“ஏலே வெற்றி, காலையிலே அந்த பிள்ளை கழுத்துல தாலி கட்டலை. உங்காத்தா கழுத்துல தாலி இருக்காது…” என்று மிரட்ட, முழுதாக மடங்கி போனான். அபியை ஊரிலே வைக்காமல், வேறெங்கோ கூட்டி கொண்டு சென்று விட்டார்கள். வெற்றிக்கு உதவி செய்த தாய், தம்பிக்கும் அடி தான்.
மறுநாள் காலை பெண் வந்த உடன் அரசியல் தலைவர் இறப்பை காரணம் காட்டி ஒரு கோவிலில் சத்தமில்லாமல் நெருங்கிய சொந்தத்தை கொண்டு திருமணத்தை முடித்து விட்டார் வேல் முருகன்.