வெற்றியால் அபியை மறக்கவும் முடியவில்லை, சரண்யாவை மனைவி என்று ஏற்கவும் முடியவில்லை. நேற்று ஒரு நாள் அவன் திட்டமிட்ட படி இருந்தால் அபிராமி இன்று அவன் மனைவி… அந்த தைரியத்தில் தான் திருமணம் வரை மெளனம் காத்தான். ஆனால், அதன் பின் நடந்தது விதி தான். சரண்யா தன் மனைவி ஆக கூடும் என்று நொடி கூட நினைக்க வில்லை. இன்று அவன் கையால் தாலி வாங்கி, அவன் அருகில் அவன் மனைவியாக… கண் கலங்கியது. இன்று அபிராமியின் மனம் என்ன பாடுபடும் என்று அவன் அறிவான்.
சரண்யாவிடம் சாதரணமாக கூட முகம் கொடுத்து பேச வில்லை.உறவுகள் இருந்த வரை தெரியாத ஒன்று அவர்கள் சென்ற பின் குழம்பி போனாள். எப்போது வீடு வருகிறான், போகிறான் என்று தெரியவில்லை. அவள் கையால் தண்ணி கூட வாங்கி குடிக்க மாட்டான். கல்யாணமான புது பெண்ணுக்கு கணவன் தான் நெருக்கம், இங்கு அவன் தான் அன்னியமாக தெரிந்தான். வீட்டில் யாரும் அவளோடு பெரிய அளவில் ஒட்ட வில்லை. ஏதோ அபியின் இடத்தை சரண்யா தட்டி பறித்தது போல் ஒரு எண்ணம்… நெருக்கம் தான் இல்லையே தவிர வீட்டு வேலை எல்லாம் அவள் தலையில் தான். அது அவளுக்கு சிரமாமகவும் இல்லை. அவர்கள் வீட்டிலும் இந்த வேலை தான் செய்தவள் என்பதால் எளிதாக மாமனார் வாயில் இருந்து நல்ல பெயர் வாங்கி கொண்டாள்.
மற்ற யாருக்கும் அபியின் இடத்தில் சரண்யா வந்தது தான் பிடிக்க வில்லையே தவிர தனிப்பட்ட விரோதம் என்று எதுவுமில்லை. ஆனால், தனலட்சுமிக்கு மட்டும் சரண்யா வேப்பங்காய் தான்… அவள் என்ன செய்தாலும் பிடிக்க வில்லை, குத்தி கொண்டே தான் இருந்தார்.
திருமணம் முடிந்த பத்து நாளில் சுகந்தியும், பிரியாவும் பார்க்க வந்தார்கள். சரண்யாவை தனியே தள்ளி கொண்டு வந்த பிரியா..
“என்னடி, எல்லாம் ஓகே தான…”
“என்னக்கா…” என்றாள் புரியாமல்.
“அதான், ராத்திரியில சந்தோசமா இருக்கீங்க தான…”
“அது வந்து… அவருக்கு என்னை பிடிக்கல போல, என் கிட்ட முகம் கொடுத்து கூட பேசலை. இங்க யாருமே என்கிட்ட ஒட்டலை, தள்ளியே வைக்கிறாங்க…” தன் மன குறையை, கூட பிறந்தவளிடம் இறக்கி வைக்க.
“அப்போ ராத்திரி…” என்று பிரியா இழுக்க.
“என் முகமே பார்த்து பேசலை…” என்று முகம் வாடி சரண்யா நிற்க. ஆத்திரம் தான் பிரியாக்கு.
இங்கு தனம், “உங்க மக கல்யாணம் ஆகி நாலு நாள் தான் வீட்டுக்கு தூரம் ஆகிட்டா… அது பரவாயில்லை. ஆனா வயிறு வலின்னு தரையில படுத்து உருளுறா… அவ வயித்தை பிடிக்கிறத பார்த்தா பிள்ளைக்கு பாடு தான் போல… உங்க மக உடம்புக்கு ஒன்னும் இல்லையே… எனக்கு தலை மகன் வெற்றி, அதுக்கு தான் கேட்டேன்…” என்று சுகந்தியிடம் பேசி கொண்டிருக்க,
பிரியா கொதித்து கொண்டு வந்தாள், “ அதை நாங்க தான் அத்தை கேட்கணும். உங்க மகன் உடம்புக்கு ஒன்னும் குறை இல்லையே…” என்று ஒரு போடு போட.
அரண்டு போய் பார்த்தார் தனம். இங்கு பெண்ணை குறை சொல்வது போல ஒரு ஆணை எளிதாக குறை சொல்ல முடியாதே.
“பிரியா, என்னடி பேசுற…” பதறி போய் சுகந்தி தடுக்க.
“அட, நீ சும்மா இரும்மா… இவங்க மகன் முகம் கொடுத்து கூட சரண் கிட்ட பேச மாட்டானாம். அவ கிட்ட கூட வந்தது இல்லையாம். அப்புறம் எதுக்கு கல்யாணம்?…” என்று பிரியா மல்லுக்கு நிக்க.
சக்தி, மாயா என்று எல்லோரும் வெளியில் வந்து விட்டார்கள். தனமும் தன் பங்குக்கு ஏதோ பேச, கொஞ்சம் கலவரம் தான். வேல் முருகன் வந்து தான் பெண்கள் ஓய்ந்தார்கள்.
“ ஏம்மா, இப்போலாம் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசி புரிஞ்சு தான் வாழ்க்கைய தொடங்குறாங்க… இதை போய் பொதுவுல வச்சு பேசுறீங்க…” அவர் சத்தம் போட.
பிரியா, “இனிமே, மாப்பிள்ளை பார்க்கும் போது நல்ல வேலை, சம்பாத்தியம், படிப்பு, குடும்பம்ன்னு பாக்குற மாதிரி இதையும் பார்க்கணும் போல…” குத்தலாக சொல்லி செல்ல.
தனத்தின் கோபம் முழுக்க மருமகள் மீது தான் திரும்பி விட்டது. சரண்யா ஒடுங்கி போய் அமர்ந்து விட்டாள். வெளியே கூடத்தில் தான் கத்தி, கத்தி பேசினார்.
“ஒன்னும் தெரியாத ஊமை மாதிரி இருந்துகிட்டு, மறைமுகமா காரியம் சாதிக்கிற… எம் மகன் மேல எம்புட்டு பெரிய பேச்சு வர விட்டுட்டா…” என்று நெஞ்சை தடவி கொண்டு பேச,
நடுங்கி கொண்டு நின்றாள் சரண்யா. அவர்கள் இஷ்டத்திற்கு பேசிவிட்டு, இவளையும் இங்கேயே விட்டு சென்று விட்டார்கள். மாட்டி கொண்டது சரண்யா தான்…
“இது மூஞ்சிக்கு ஆசை வேற வருமா… நல்லா கத்திரிக்காயை அடுப்புல வச்சு சுட்ட மாதிரி ஒரு மூஞ்சி, சித்திரைன்னு கூட சிரிக்க தெரியாதவ… ராசா கணக்கா எம் மகனை தூக்கி கொடுத்துட்டானே இந்த வீட்டு பெரிய ஆம்பிளை…” தெருவுக்கே கேட்கும் அளவுக்கு பேச, சரண்யா கண் முழுக்க நீர் தான்.
மாயாக்கும் இரண்டு வயது இளையவள் தான். ஒருவரின் உடல் அமைப்பை கேலி செய்யும் வார்த்தை எந்தளவிற்கு வலி கொடுக்கும் என்று அறிந்தாலும் யாரும் வாய் திறக்க வில்லை.
வெற்றி வெளிநாடு போக ஒப்பந்தம் போட்டு விட்டான். முன்பே நினைத்தது தான். தற்போது தப்பித்து கொள்ளும் முயற்சி… சரண்யாவோடு சேர முடியவில்லை. அபியை தாண்டவும் முடியவில்லை. ஏதோ சொந்த காரர்கள் வீட்டில் வைத்து இருந்தவளை நேற்று தான் அழைத்து வந்தார்கள்.
குல தெய்வக் கோவிலுக்கு சரண்யாவை அழைத்து செல்லும் போது, வெளி வாசலில் நின்று கண்ணீர் மல்க பார்த்த முகம் நெஞ்சை கசக்கி பிழிந்தது. நடந்ததை மாற்றும் அளவுக்கு தைரியசாலி இல்லை. இப்போதைக்கு இந்த வலியில் இருந்து ஒதுங்கி கொள்ள தான் நினைத்தான். அதன் படி தந்தையிடம் சொல்ல, அவர் வானத்துக்கும், பூமிக்கும் குதித்தார்.
“நான் பார்த்த பிள்ளைக்கு என்னடா குறைச்சல். எதுக்குடா அந்த பிள்ளையை ஒதுக்கி வைக்குற…”
“அப்பா, எனக்கு கொஞ்சம் நேரம் வேணும். என்னை புரிஞ்சுக்கப்பா… ரொம்ப ஆசைப்பட்டுட்டேன், மறக்க முடியலை…” என்று தயவாக வெற்றி சொல்ல.
“உம் நினைப்பு என்ன மகனே, இன்னும் அந்த கடங்கார பய மவ வேணுமா… உன்னை பெத்த தகப்பன், என்னை எம்புட்டு பேச்சு பேசினான். அவன் வீட்டு புள்ளை எம் மருமகளா?…” கொதித்து போய் கேட்க.
“அப்பா, நான் மறந்து வாழ எனக்கு நேரம் வேணும். அஞ்சு வருச நினைப்பு மறக்க முடியலைப்பா…”
“என்னடா மறக்க முடியலை. உன்னை நம்பி வீட்டுல ஒரு புள்ளை இருக்கு, சட்டம் பேசுற… என்ன பெரிய காதல், ரோமியோ ஜூலியட் காதல். புடலங்கா… போய் பொழப்பு பாருடா வெட்டி பயலே.” என்றவர்,
“ இங்க பாரு மகனே… மருமக வீடு கொஞ்சம் வசதி தான். உனக்கு நல்லா செய்வாங்க. அந்த புள்ளை நகை கூட இருக்கு வச்சு தொழில் பண்ணு…” என்று பொறுமையாக வேல் முருகன் சொல்ல.
“என்னால எதுவும் முடியாது. நடந்த கல்யாணம் நடந்தது தான். என்னை கொஞ்ச நாளுக்கு விடுங்க. நான் வெளிநாடு போயே ஆகணும்…” பிடிவாதமாக வெற்றி சொல்ல.
“அட என்னடா கிறுக்கு பயலே!… குடும்பம் நடத்தவே நீ லாயக்கு இல்லைன்னு பேசுறாங்க. இதுல உன்னை வெளிநாட்டுக்கு அனுப்பி வச்சா, உறுதியே பண்ணிடுவாங்க. எம் மருமக கூட நீ நல்லா வாழ்ந்து காட்டு, அப்புறம் பார்ப்போம் வெளிநாட்டு ஆசைய… அதை தாண்டி ஏதாவது திருகல் வேலை பார்த்த, கருப்பனுக்கு போலி போட்ருவேன்…”
வெற்றி நொந்து போனான். அபியை வைத்து கொண்டு சரண்யாவை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை. அவளை கடந்து, மறந்து வாழவே தெரியவில்லை. அவனுக்கு தேவை தனிமை. அதை தான் யாரும் கொடுக்க வில்லை.
வெற்றி வீடு வர, ஒப்பு வச்சு கொண்டிருந்தார் தனம். மகனை பார்த்ததும் கத்தி கத்தி பேச, விவரம் புரிந்த வெற்றி அதிர்ந்து போய் சரண்யாவை பார்த்தான். தனம் தனக்கு தக்க பேச, கோபம் சரண்யா மீது திரும்பி விட்டது.
வெற்றிக்கு மூச்சு முட்ட தொடங்கியது. வாழ்க்கை பெரும் அழுத்தத்தில் நின்றது. தினமும் ஏதேனும் ஒரு வழியில் அபி முகத்தை பார்த்து விட குற்ற உணர்வில் குறுகி போனான். தன் அருகில் உறங்கும் மனைவி மீது எரிச்சல் வந்தது. யாரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. அபியின் பின் செல்லும் மனதை அடக்கவும் தெரியவில்லை.
தன்னை குறித்தே பயம் எழ, மனைவியை நெருங்கி விட்டான். எல்லா பிரச்சனைக்கும் தீர்வு இது தான் என்று நினைத்தான் போல… பிரியாவும்,
“காலகாலத்தில் ஒரு பிள்ளையை கையில் பிடி சரண். இல்லை, உம் புருசன் உம் பிடியில் நிக்க மாட்டான். உனக்கு அந்த வீட்டுல எந்த ஆதரவும் இல்லை. ஒரு பிள்ளையை பெத்து, உன் இடத்தை நிலை படுத்திக்க… உம் மாமியார்லாம் மலடின்னு முத்திரை குத்திடுவாங்க…” என்ற போதனையில் பயந்து போன சரண்யா, கணவனை ஒட்டி கொண்டாள்.
அடுத்தடுத்து வீடு வரும் சொந்தங்கள், புது மருமகளிடம் இதை ஒரு வார்த்தையாக கேட்க, சந்தோசமாகவே தலையாட்டினாள்.
வெற்றி வெளிநாடு போற வேலையை தொடங்கி விட்டான். சரண்யா உடன் தான் வாழ்க்கை என்று தெரிந்து விட்டது. ஆனால், தடுமாறும் மனதை அடக்க வழி தெரியாமல் ஓட நினைத்தான். அதற்கு வழி செய்வது போல, அடுத்த மாதம் சரண்யா உண்டாகி விட்டாள்.
அக்காவுடன் தொடர்பிலேயே இருப்பதால், இருவத்தி எட்டு நாளிலே அறிந்து கொண்டாள். சந்தோசமும், பூரிப்புமாக வீட்டில் சொல்ல, அவள் எதிர்பார்த்த வரவேற்பு தான் யாரிடமும் இல்லை.
“கட்டாய படுத்தி புருசன் புடிச்சவ…” என்ற மாமியாரின் குத்தல் சொல்லில் முடங்கி கொண்டாள்.
இன்னும் ஆறு மாதத்தில் வெற்றி வெளிநாடு கிளம்பி விடுவான். உள்ளூரில் இருக்கும் நர்ஸ்ஸிடம் உறுதி படுத்தி கொண்டது தான். பெரிய ஆஸ்பத்திரி போக அஞ்சு மாசம் ஆகட்டும் என்று தனம் சொல்லி விட, அதற்கு மேல் சொல்லுவது யார்…
மசக்கையில் புரண்டாலும் யாரும் கண்டு கொள்ள வில்லை. சரண்யா எதிர்பார்த்தது போல், பிள்ளை உண்டான பின்பும் கணவனிடம் ஒரு அங்கீகாரமும் கிடைக்க வில்லை. ராத்திரியில் கிட்டும் ஒரு ஆதரவும் பத்து நாளோடு போச்சு, நடு ராத்திரியில் கூட வாந்தி நிற்காமல் வர, அசையாமல் உறங்குவான் வெற்றி. பிள்ளை வயிறுக்கு ருசியான உணவு என்று ஒன்றும் இருக்காது. கவுச்சி வாசம் குமட்டுது என்றால், வாரத்தில் ஐந்து நாள் கறி, மீன் தான். மீன் வாடை சுத்தமாக ஆகாது சரண்யாக்கு.
வெற்றி வாரம் ஒரு முறை பழம் வாங்கி வருவான். சரண்யா கை சேரும் முன் தனம் கைக்கு வந்து விடும். வெற்றி கண்ணில் அகப்படாத ஒரு நாள், மாமனாரிடம் மாம்பழம் ஆசையில் ஒரு வார்த்தை விட,
ஒரு கூடை நிறைய மாம்பழம் வந்தது. வீட்டின் தலை பேர பிள்ளை ஆசையில்… ஒன்றை தான் கழுவி கையில் எடுத்தாள்.
“பிள்ளை வயித்த காட்டி புருசனை புடிக்க தெரியலை, மாமனாரை புடிக்க பாக்குறா…” எல்லாம் ஜாடை பேச்சு தான். மற்றவர் அறியாமல் நாசுக்காக சொல்லி முடித்து விடுவார்.
சரண்யா மூலையில் ஒடுங்கி கொண்டாள். கணவனின் ஆதரவு இல்லா பெண், ஒடுக்கி தான் விடுவார்கள். வெற்றியை பொறுத்த வரை சரண்யா தன் மனைவி, அது மாறாது. அவ்வளவு தான், அதை தாண்டி தன் வலியே பெரிது…
மூணு மாசம் முடியும் போதே வயிறு உப்பி கொண்டு நின்றது. ஆனால், அதை யாரும் உத்து கவனிக்க வில்லை. நாள் செல்ல, வெற்றியின் அம்மத்தா, தனத்தின் தாய், அபிராமி அப்பத்தா தவறி விட. குடும்பம் பரபரப்பாகி விட்டது. கோபத்தை இழுத்து பிடிக்கும் வேல் முருகன் கூட, “நல்லதுக்கு ஒதுங்கி போனாலும், கெட்டதுக்கு துணை நிக்கணும் தனம்…” என்று வேல் முருகன் கிளம்ப, குடும்பமே தயாராகியது.
சரண்யாவை எங்கு விட முடியும். சுரேன் கல்யாணத்திற்கு பத்திரிக்கை அடிச்சாச்சு, அவர்கள் வர மாட்டார்கள். வெற்றி தான் கூட்டி கொண்டு வந்தான். கணவன், மனைவியாக பைக்கில் வந்திறங்கும் வெற்றி, சரண்யா மீது தான் அபியின் பார்வை முழுக்க,
காரியங்கள் அடுத்தடுத்து நடக்க, அன்றே எல்லா ஆர்ப்பாட்டமும் முடிந்தது. ஒரே அழுகை சத்தமும், ஓலமும், தெரியாத முகங்களும் சரண்யாவை பயமுறுத்த, கணவனை விட்டு நகரவில்லை. அங்கு அவள் துணை அவன் மட்டும் தானே…
அடுத்த நாள் எல்லாம் அடங்க, வெற்றி கல்யாணம் விமர்சனம் ஆகியது.
“சொந்தத்தில பொண்ணு இருக்க, வெளிய எடுத்துதீக மதினி… அப்படி ஒன்னும் அழகி இல்லை…”
“ம்கூம், அம்மாசையும் , பௌர்ணமி மாதிரி தான் பொருத்தம் இருக்கு. தலைபாடா அடிச்சேன், உங்கண்ணன் எம் பேச்சை கேக்கலையே… என் தம்பி மக கால் தூசி பெறதவ, எம் மருமக… ஊரவே சொன்னேன் எங்க ராசிய பார்த்தியா, எம் மகன் புண்ணியம் பண்ணலை…” என்று தனம் மூக்கை சிந்த,
அவருக்கு ஆறுதல் சொல்ல என்று ஆரம்பித்த பேச்சு வெற்றி காதலில் வந்து தான் நின்றது. அனைத்தையும் கேட்டு உடைந்து போனாள் சரண்யா. கணவனின் ஒதுக்கம், பாரமுகத்தின் காரணம் விளங்கியது.
வெற்றி அங்கம் கலக்க சென்று இருக்க, வீடே இவர்கள் பேச்சு தான். காதலை இழந்த அபிராமி பாவமாகவும், வெற்றியை கட்டி கொண்ட சரண்யா வில்லியாகவும் பார்க்க பட்டாள்.
பசியில் சோர்ந்து போய் படுத்து விட்டாள் சரண்யா. வெளி சாப்பாடு தான், வெற்றி வாங்கி வர, சரண்யாவை யாரும் எழுப்ப வில்லை. மாயாவை அழைத்த வெற்றி, “ சோர்ந்து போய் கிடக்கா, அவளை சாப்பிட வை மாயா…” என்று சொல்ல.
அவனை பார்த்து கொண்டே சரண்யாவை எழுப்பினாள். மாலை நேரம் ஒரு பழச்சாறு கொண்டு வந்தவன், மாயாவிடம் கொடுத்து சரண்யாவிடம் சேர்த்தான்.
அப்போது இருந்தே சரண்யா பாத்ரூம் போக பார்த்து நின்றாள். தெரியாத, அடுத்த வீட்டில் இது ஒரு பஞ்சாயத்து… முகம் கழுவி, பாத்ரூம் போய் வந்தவள், சேலையை மாற்றி நைட்டியை அணிய அங்கிருக்கும் அறைக்குள் நுழைந்தாள்.
உடை மாற்றி விட்டு திரும்பி பார்க்க, வெற்றியை அனைத்து அபி அழுக, வெற்றி கண்களிலும் நீர் நிறைந்து நின்றது.