அபிராமி பார்வை முழுக்க வெற்றி மீது தான். அவன் திருமண வாழ்வின் லட்சணத்தை தனம் ஒன்று விடாமல் சொல்லி விட்டார். நொடியில் தன்னை மறந்து, மனைவியோடு வாழ்கிறான் என்றால் கோபம் வரும், மனம் ஆறும் மட்டு சாபம் விடலாம். ஆனால், பார்க்கவே பரிதாபமாக, நொந்து போய் திரிந்தான். அவனோடு பேச, தோலில் சாய்ந்து ஒரு மூச்சு அழுது கரைய மனம் உந்தியது. கண்ணோடு கண் கலந்து ஒரு பார்வை பார்க்க எண்ணம் பிறந்தது. பைத்தியக்காரதனம் என்றாலும் அந்த காதல் பார்வைக்கு மனம் ஏங்கியது. இதை விட்டால் வாய்ப்பு இல்லை. மாயாவை பிடித்து தான் வெற்றியை அறைக்கு வர வைத்தாள்.
என்னவோ என்று வந்தவன், அபிராமியை எதிர்பார்க்க வில்லை. ஒரு நொடி மனதில் சரண்யா முகம் தான், நெஞ்சில் பயம் கவ்வியது. அபிராமி கண்களுக்கு வெற்றி அவள் அத்தை மகன், காதலனாக மட்டும் தான் தெரிந்தான். ஆனால், வெற்றி மனதில் முன் நின்றது சரண்யா தான். அபிராமியை மறக்க முடியவில்லையே தவிர, மனைவியாக மனதில் நின்றது சரண்யா தான்.
“அபி…” குரலில் பயம் கொட்டி கிடந்தது.
“மாமா…” காதலும், அதை இழந்த வலியும் முன் நின்றது.
“ வலிச்சாலும் கடந்திடு அபி. உனக்கு துரோகம் செஞ்சவன், கோபப்படு, சாபம் விடு. ஆனா, உன் வாழ்க்கையை பாரு… திரும்ப மீள முடியாத பாதையை தொட்டாச்சு. இனி அதை கடக்க தான் பார்க்கணும். நீ நல்லா வாழனும், நல்லா தான் வாழ்வ, நல்லா இரு…” கண்கள் கலங்கியது. அவள் தலையில் கை
வைத்து தடவியவன், நகர போக…
“மாமா…” என்ற கேவலில் தோல் சாய்ந்தாள்.
பதறி போய் அவளை பிரிக்க பார்க்க, முடியவில்லை. ஒரு நொடி தான் என்றாலும் அவன் கண் காதலை, நேசத்தை கொட்டி விட்டது. அந்த நேரம் தான் சரண்யா உள்ளே வந்தது. அவள் வந்ததை அறியாத வெற்றி, கண்ணில் காதல் தளும்ப அபியை பார்த்து நின்றான்.
சரண்யாக்கு இரத்தம் மொத்தமும் உறைந்து போனது. நேற்று இருந்து நடந்ததை ஜீரணிக்க முடியாமல் திணறி கொண்டு இருக்க, இவர்கள் இருக்கும் கோலம். அதுவும் கணவன் கண்ணில் தோன்றிய காதல்,அவளை மொத்தமாக உடைய செய்தது. என்னவோ பயம், பதட்டம், நடுக்கம் என்று மனதில் கலவையான உணர்வு, தன் பயத்தை கோபம் கொண்டு மறைக்க பார்த்தாள்.
“என்ன நடக்குது இங்க…” சத்தமா குரல் எழுப்ப.
பதறி போய் விலகி நின்றார்கள் இருவரும். அபிராமி அவன் பின்னே நிற்க, வெற்றி வேகமாக மனைவி அருகில் வந்தவன்.
“எதுவும் நினைக்காத சரண்யா. இங்க ஒன்னும் இல்லை…”
“என்ன நினைக்காத, இழவு வீட்டுல பண்ணுற காரியமா இது?… கட்டுன பொண்டாட்டி நான் நிக்க, யாரோ ஒருத்தி கூட கட்டி பிடிச்சு நிக்கற, அசிங்கமா இல்லை…” மாலை ஆறு மணி என்பதால் அவள் சத்தத்தில் எல்லோரும் வந்து விட்டார்கள்.
வெற்றி நிஜமாகவே பயந்து விட்டான். “ சரண்யா வா வெளிய போகலாம்…” கை பிடித்து அழைத்து செல்ல பார்க்க.
“முடியாது, எல்லாருக்கும் உங்க கேவலம் தெரியட்டும். எனக்கு ஒரு பதில சொல்லுங்க… ஏன் எனக்கு இப்படி ஒரு அநியாயத்தை பண்ணீங்க…” என்று கத்த
மற்றவர்களும் , “என்ன வெற்றி இதெல்லாம்… அபி மேல பழி சொல்லி பேசுது… வயசு பிள்ளை சும்மா கூட ஒரு பேச்சு வர கூடாது…” பொதுவாக வார்த்தைகள் வர, கோபம் கரை கண்டது சரண்யாக்கு.
இந்த இடத்தில் தான் சரண்யா ஒரு தப்பு செய்தாள். எல்லா பெண்களை போல கணவனை விட்டு, அபியை பிடித்து கொண்டாள்.அவள் நேரடியாக வெற்றியை தான் தாக்கி பேசி இருக்க வேண்டும், அதை விட்டு அபியை தாக்கி பேசி, எல்லோரையும் பகைத்து கொண்டாள். கட்டிய கணவன் மனதில் தான் இல்லையே என்ற நினைப்பு ஒரு ஆற்றாமையை, இயலாமையை கொடுத்தது.
அங்கிருக்கும் எல்லோருக்கும் இவர்கள் காதல் கதை அறியும் என்பதால், சரண்யாவை தான் வெளியேற்ற பார்த்தார்கள். ஏனெனில் அவள் தான் கத்தி கொண்டு இருந்தது. அபிராமி தலை குனிந்து நின்றவள் தான் கண்ணீர் மட்டும் தான் வெளி வந்தது. அவளை பார்க்கவும் பாவமாக இருந்தது.
தன் நியாயம் எடுபடும் இடம் இதுவல்ல என்று சரண்யா அறியவில்லை. இதில் முழுக்க பாதிக்கப்பட்டது தான் என்ற நினைப்பு மட்டுமே… அங்கிருக்கும் சூழல் அவள் உணர வில்லை. அக்கம், பக்கம் பார்த்தா உணர்வுகள் வெளிப்படும்.
“அடுத்தவ புருசன் கூட உங்க வீட்டு பொண்ணுக்கு என்ன வேலை?… அதுவும் யாருமில்லாத தனி அறையில்?…” என்று சரண்யா கேட்க.
“சரண்யா வா வெளிய, அம்மா நாங்க வீட்டுக்கு போறோம்…” தரதரவென அவளை இழுத்து செல்ல.
“கை விடுங்க, எனக்கு ஒரு நியாயம் சொல்லுங்க. பக்கத்து ரூம்ல பொண்டாட்டி இருக்க, அடுத்த ரூம்ல கள்ள காதலி கூட கூத்தடிக்கிற …” சொன்ன நொடி, ஒரு பக்க கன்னம் வீங்கும் அளவுக்கு அடி விழுந்தது.
சுவற்றில் முட்டி தான் கீழ விழுந்தாள். பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தூக்கி நிறுத்தினார்கள்.
“ஏம்ப்பா வெற்றி, மாசமா இருக்குற பிள்ளை மேல போய் கை வைக்கிற… எதுவா இருந்தாலும் உள்ள கூட்டி போய் பேசு…” அங்கிருக்கும் சிலர் அறிவுரை கூற.
சரண்யாக்கு காது வரை இழுத்து பிடித்து வலித்தது. அந்த நேர கோபம் தான் கணவன், மனைவி இருவருக்கும்… யாரேனும் ஒருவர் பொறுத்து போய் இருந்தால், விசயத்தை கொஞ்சம் தள்ளி போட்டால் நிலமை சீராகி இருக்கும்.
அவரவர் மனம், அவரவர் பாடு… கட்டிய மனைவியை விட யாரோ ஒருத்தி முக்கியம் என்றால் நான் யார், உன் தாலியை சுமந்து, உன் பிள்ளையை சுமந்து நிக்கும் எனக்கு, உன் மனதில் என்ன இடம். உன் சரிபாதி நான் என்றால் இனி என்னை தாண்டி தான் எதுவும்…
வெற்றிக்கு மனைவியை அறிய வில்லை. அவனை பொறுத்த வரை வலி அபிராமிக்கு மட்டும் தான். ஏனெனில் இழந்தது அவள் தான். வெற்றி கூட குடும்பம் என்ற கூட்டுக்குள் வந்து விட்டான். தனிமரமாக நிற்பது அபிராமி அல்லவா… தன்னை மனதார காதலித்தது தவிர, எந்த தப்பும் செய்யாத அவளுக்கு தன் வாங்கி கொடுத்த பெயர் கள்ள காதலி… மூன்று மாத முன் வந்த மனைவியை விட நான்கு வருட காதல் ஜெயித்தது. அப்படி தான் சொல்ல வேண்டும். அபிராமி இடத்தில் அவள் வலியை உணர்ந்தவன், மனைவி இடத்தில் நின்று அவள் மனம் படும் பாடை கவனிக்க வில்லை. அது தான் அவளின் ஆத்திரம் கூட… இவனின் இயலாமையை, கோபத்தை வெளிப்படுத்தும் இடம் மனைவி தானா…
வெற்றி கை பிடித்து இழுக்க, “எனக்கு ஒரு பதில் சொல்லுங்க. யார் அவங்க?… ஒரு கல்யாணம் ஆகாத பொண்ணு கூட கல்யாணம் ஆன நீங்க தனியா பேச, அதுவும் கதவ சாத்திட்டு பேச என்ன இருக்கு. அப்படி என்ன உறவு உங்களுக்குள்ள, அதுவும் உங்க பொண்டாட்டி எனக்கு தெரியாம…” சத்தமாக பேசி செல்ல, வெற்றிக்கு கோபம் கரை கடந்தது.
ஏதேனும் பேசி அபியின் பெயரை உள்ளே இழுக்க கூடாது என்று தான் அமைதி காத்தான். எப்போதும் ஒதுங்கி போகும் மனைவியிடம் இத்தனை கோபம், அவேசத்தை எதிர்பார்க்க வில்லை. தற்போது சரண்யாவை வெளியேற்றி விட்டாள் போதும் என்று தோன்றியது.
“ஒரு வார்த்தை பேச கூடாது சரண்யா. வாய திறக்காம என்கூட வா…” வீட்டின் நிலை படியை தாண்டும் போது,
“விட்டி தட்டான் மாதிரி இருந்துட்டு, எம்புட்டு துள்ளுறா… அவ வாழ வேண்டிய வாழ்க்கைய தான், நீ தூக்கி வச்சுகிட்ட. அந்த மனுசன் மட்டும் ஒழுங்கா இருந்திருந்தா, உம் மூஞ்சிக்கு உன் வீடு தேடி வருவோமாக்கும்…” ஒரு பக்கம் தனம் எகிற.
கணவன் பிடியில் இருந்தவள், நின்று விட்டாள். இங்கு யாரையும் அவளுக்கு தெரியாது. கணவனை நம்பி தான் இந்த ஊர் வந்தாள். இங்கும் அவளின் அழகு விமர்சிக்க படுகிறது. அதுவும் வீட்டில் இத்தனை பேர் நிக்க, தன் தோற்றத்தை வைத்து பேசும் மாமியார் மேல் கோபம் வந்தது. அபிராமியை கொண்டு பார்க்கும் போது சரண்யா கீழ தோன்றினாள் போல… சரண்யா வாய் கட்டுப்பாட்டை இழந்தது.
“யார் வாழ்க்கையை யார் விட்டு கொடுத்தது. என் வாழ்க்கைய தட்டி பறிக்க தான் உங்க தம்பி மக பாக்குற… முறையா பொண்ணு பார்த்து, நிச்சயம் பண்ணி, தாலி கட்டி வந்தவ நான்… யாருக்கும் தெரியாம அடுத்தவ புருசனை ரூம்க்கு தள்ளி போகல…” என்று சரண்யாவும் கத்த
“ஏய்! எங்க வீட்டுக்கு வந்து எங்க வீட்டு பொண்ணையே பேசுவியா… வயித்து பிள்ளைகாரி பார்த்து பேசு, நல்ல படியா பெத்து எடுக்கணும்ன்னு நினை, வயசு பிள்ளை மேல அபாண்டமா வாக்கு விடாத…” சரண்யாக்கும் எதிர்ப்பு குரல் வந்தது.
யாரும் அபாண்டமா பேசலைங்க. நீங்க எல்லாரும் எனக்கு பதில் சொல்லுங்க, எம் புருசன் கூட அந்த பொண்ணுக்கு ரூம்ல என்ன வேலை. அங்க இருந்தது அவரோட அக்காவோ, தங்கச்சியோ இருந்தா பேச்சில்லை. எனக்கு எப்படி இருக்கும். எம் மனசு என்ன பாடு படும். தாலி கட்டுன பொண்டாட்டி என்ன ஏதுன்னு கேட்க கூடாதா. நீங்க யாரும் என் எடத்துல இருந்தா கேட்க மாட்டீங்களா” தொண்டை அடைக்க பேச,
சாந்தி வந்து அபிராமியின் முதுகில் நாலு போட்டார். “உனக்கு இதெல்லாம் தேவையா… இப்படி கண்டவளும் வந்து பேசவா, உன்னை பெத்து வளர்த்தேன். உனக்கு என்னடி குறை… யார் யார் கிட்டையோ பேச்சு வாங்குற.” என்று அடிக்க
சரண்யா கையை விட்ட வெற்றி, ஓடி சென்று அபிராமியை தன் பக்கம் இழுத்து கொண்டான்.
“அத்தை, என்ன இது சின்ன புள்ளைய மாதிரி அடிக்கிரீங்க. அவ ஏதோ லூசு மாதிரி உளருனா, நீங்க நம்ம அபி மேல கையை வைப்பீங்களா… தப்பு அத்தை. அந்த அறிவு கெட்டவ சொல்றதை உண்மையாக்காதீங்க…” வெற்றி புரிய வைக்க பார்க்க.
சரண்யாக்கு தாங்க வில்லை. தன்னை பேசும் போது வாயை மூடி கொண்டவன். அவளுக்கு ஒன்று என்றதும் ஓடி சென்றதை ஏற்க முடியவில்லை. அப்போ நான் யார்?… இதுவே திரும்ப திரும்ப மனதில் தோன்ற, வேகமாக வெற்றியை நெருங்கியவள், அவன் கையை பிடித்து இழுத்தாள்.
“வாங்க, வீட்டுக்கு போகலாம்…”
சரண்யா நடவடிக்கை வீம்பு பிடிவாதமாக தான் தோன்றியது. அவள் மனம் யாருக்கும் புரியவில்லை.
“ஏண்டி இப்படி ஆடுற… அவன் கையால தொங்க தொங்க தாலியும் வாங்கி, வயித்துல பிள்ளையும் வாங்கி, உன் இடத்தை கெட்டியா பிடிச்சு கிட்ட தான… பாவம் எம் மருமக, நொந்து போய் கிடக்கா. அவளை கொத்தி எடுக்குற, அவ பாவம் உன்னை சும்மா விடாது. இவ வயித்தெரிச்சலை கொட்டி வாழு… ரொம்பவும் ஆடுனா சாமி தட்டி விட்ரும்…” என்று தனம் பேச
சரண்யாவும் விடவில்லை. அவளுக்கு புருசன் கை விட்டு போய் விடுவானோ என்ற பயம் போல…
“நான் நல்லா தான் வாழ்வேன். யார் குடியையும் நான் கெடுக்கல. உங்க மருமக தான் என் குடியை கெடுக்க அலையுறா. ஒரு ஆம்பிளை இன்னொருத்திக்கு புருசனாக்கிட்டா அங்க வேற பேச்சே இல்லை. நேத்து வந்தாலும் நான் தான் அவங்க பொண்டாட்டி, எனக்கில்லாத உரிமை யாருக்கு இருக்கு…” என்று அவளும் ஆவேசமாக பேசும் போதே, அபிராமி ஓடி சென்று கதவடைத்து கொண்டாள்.
மற்றவர்கள் பதறி போய் கதவை தட்ட, திறக்க வில்லை. மேல் தாழ்ப்பாள் உடைத்து வெற்றி உள் நுழைய, தூக்கில் நின்றாள் அபிராமி. அவ்வளவு தான் எல்லோரும் பதறி போய், அவளை தூக்கி தண்ணீர் கொடுத்து ஆசுவாச படுத்த…
“அந்த சண்டாளி பேசியே உன்னை சாகுர வரை கொண்டு வந்து விட்டாளே…” என்று தனம் ஒரு பக்கம் கத்த,
“ஏன் அபி…” என்றான் வெற்றி. அவன் கண்கள் கலங்கி இருந்தது. தன்னால் ஒரு பெண் வாழ்க்கை வீணாகி விட்டதே.
முகம் வீங்கி இருண்டு கிடந்த அபி, “ரொம்ப கஷ்டமா இருக்கு மாமா, முடியலை…” என்று உட்கார்ந்த வாக்கிலே அவன் இடுப்பை கட்டி கொண்டு அழுக.
சரண்யா தான் மொத்தமாக நொறுங்கி போனாள். இவர்கள் எல்லாம் நினைப்பது போல, அவன் தாலியை சுமந்தாலும், அவன் பிள்ளையை வாங்கி கொண்டாலும், அவன் மனம் மனைவி மீது படற வில்லையே. இதோ இப்போது கலங்கும் இவன் கண்கள். அதில் தெரியும் அன்பு. என்றாவது ஒருநாள் என்னை பார்த்தது உண்டா…
“சாகுறதா இருந்தா இவருக்கு கல்யாணம் ஆகும் போதே செத்திருக்கணும். இப்போ எல்லோரும் இருக்கும் போது யாராவது சாக போவாங்களா. இது மத்தவங்க கவனத்தை தன் பக்கம் திருப்ப…” என்று சரண்யா ஆரம்பிக்கும் போதே, வெற்றி அவள் வலது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்.
“என்னடி வேணும் உனக்கு, அபிய ஏன் குடையிற… உனக்கு பதில் நான் சொல்லுறேன். ஆமா, எங்களுக்குள்ள என்னவோ இருக்கு. என்னா அதுக்கு!… நான் அபி மேல தான் ஆசைப்பட்டேன். அவளை தான் பொண்டாட்டியாக்க நினைச்சேன். உன்னை எனக்கு பிடிக்கலை. கட்டாயபடுத்தி தான் உன்கூட வாழுறேன், போதுமா போய்டு. நீ ஒரு ராட்சசி, பேசியே ஒருத்திய செத்து போற நிலைமைக்கு தள்ளிட்டா, போடி வெளிய உன்னை பார்த்தாலே வெறுப்பா இருக்கு…” என்றவன், சரண்யா கையை பிடித்து வெளியே இழுத்து வர, எந்த முரண்டும் இல்லாமல் அவன் கையோடு வந்து விட்டாள்.
அவளை தெருவில் தள்ளி விட்டவன், உள்ளே சென்று விட்டான். அப்போது மணி ஒன்பது இருக்க, மழை வேறு பிடித்து கொண்டது. வெறும் நைட்டியில் தான் நின்று இருந்தாள். ஒருவரும் வந்து எட்டி பார்க்க வில்லை.
சரண்யா திமிர் பிடித்தவளாக, அடங்காத பெண்ணாக மற்றவர் பார்வைக்கு தெரிந்தாள். ஆனால், அவள் தான் அதிக வலியை அனுபவித்து கொண்டு இருந்தாள். வெளியில் சென்ற வேல்முருகன், அபிராமி அப்பா என்று அந்த வீட்டு பெரிய ஆண் மக்கள் வந்து விட, நடந்ததை பேசி அலசவே நேரம் போனதே தவிர, கொட்டும் மழையில் வெளியில் நின்ற சரண்யாவை கவனிக்க வில்லை.
அவளுக்கு எங்கு போகவென்று தெரியவில்லை. ராத்திரி வேளை வேறு, சென்றாலும் வெற்றி இடம் தான் செல்ல வேண்டும். அங்கு பார்த்து நின்ற அந்த ஊர் ஆட்கள் தான் ஆட்டோ பிடித்து,
“எம்மா, உம் புருசன் தான் அடிச்சு விராட்டுனது. எம்புட்டு நேரம் மழையில நிப்ப, ஒன்னு உள்ள போ, இல்லையா இந்த ஆட்டோல ஏறி வீடு போய் சேரு, உங்க வீட்டு ஆட்களை வச்சு ஆற அமர பேசுங்க…” என்ற சொல்ல.
சண்டை போட்டு உரிமையை பெறலாம். அன்பை பெற முடியாதே… புரிந்து கொண்டவள், தாய் வீடு சென்று விட்டாள். பன்னிரண்டு மணிக்கு மேல் தான் சரண்யா நினைவு வந்தது வெற்றிக்கு. பதறி போய் வெளி வந்து பார்க்க, அவள் இல்லை. அங்கு இருக்கும் சொந்தங்கள் தான் விவரம் சொன்னார்கள். தன் தலையிலே அடித்து கொண்டான் வெற்றி. அந்த நேர கோபம் தான், நிலமை கை மீறி விட்டது.
நனைந்த உடையோடு, மேல் வயிற்றை பிடித்து கொண்டு, முகம் வீங்கி வந்த மகளை பார்த்து கொதித்து போனார்கள் சரண்யா பெத்தவர்கள். மறுநாள் காலையிலே சுரேந்தர் நாலு பேரை கூட்டி கொண்டு சண்டைக்கு செல்ல, அந்த ஊர் வெற்றி ஊர் தான், விடுவார்களா… அடுத்த இருவது நாளில் திருமணம் நடக்க இருக்க, கை, கால் முறிந்து போய் வந்தான் சுரேந்தர்.
மகளை விட்டு மகன் பின்னே சென்றார்கள் பெற்றவர்கள். திருமணம் தள்ளி வைக்க வேண்டிய நிலை. மகன் அரை உயிராக கிடக்க, யாருக்கும் சரண்யா வாழ்க்கை கண்ணுக்கு தெரிய வில்லை. வீட்டின் மாப்பிள்ளை வெற்றி வேல் என்பது மறந்து விட்டது.
அங்கு சக்தி வேல்க்கும் நல்ல அடி தான் போல. தனம் ஒரு பக்கம் கத்தி கொண்டு இருந்தார். சரண்யா திரும்ப வீடு வர கூடாது என்று… அப்போது உடன் நின்றது தான் அபிராமி குடும்பம். சண்டையில் பிரிந்தவர்கள், மற்றொரு சண்டையில் சேர்ந்து கொண்டார்கள். பெண்ணை பெற்றவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இவர்கள் நிக்க, கொஞ்சமும் பிடி கொடுக்க வில்லை சிவ குமார். ஒற்றை மகன் வலி தான் பெரிதாக தெரிந்தது.
மேலும் ஒரு மாதம் கடந்த பின் கட்டு பிரிக்க சிவகுமார், சுரேந்தர் மருத்துவமனை சென்றிருக்க. சரண்யாவை பார்க்க வந்தான் வெற்றி, உடன் வேல் முருகன்.
சுகந்திக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. மகள் வாழ்க்கையை பார்க்கவா, மகனுக்கு நியாயம் கேட்கவா… தடுமாறி தான் போனார்.
நல்ல மேடாக வயிறு தெரிந்தது. வெற்றிக்கு பேச்சே வர வில்லை. அவன் பார்வை முழுக்க அவள் வயிற்றில் தான். சரண்யா முகத்தில் விரக்தி சிரிப்பு, கடமையை செய்ய முன் வந்து விட்டான், பெருமை பட தான் வேண்டும்.
சுகந்தி, வேல் முருகன் இருவரும் இருக்கும் போதே, சரண்யாவை தள்ளி கொண்டு போய் அறைக்கு சென்று கதவடைத்து கொண்டான். கணவன், மனைவியே சரி செய்யட்டும் என்று அமைதி காத்தார் வேல் முருகன்.
“சரண், நம்ம வீட்டுக்கு போகலாம். கொஞ்ச நாள் அமைதியா இரு, நான் எல்லாத்தையும் சரி செய்யுறேன். அன்னைக்கு நடந்ததை மனசுல வைக்காத சரண். ஏதோ கோபம்… நம்ம குழந்தையை யோசி. அபிராமி… அது வந்து… எல்லாம் கல்யாணத்துக்கு முந்தி தான்…” என்ற கணவனை தடுத்தவள்.
அவன் கையை எடுத்து தன் வயிற்றில் வைத்து கொண்டாள். உங்க குழந்தை மேல சத்தியம்…
“உங்க மனசுல நான் இருக்கானா வெற்றி…”
“சரண்யா” அதிர்ந்து போய் பார்த்தான் வெற்றி. பிள்ளை வயிற்றில் இருந்த அவன் கை நடுங்கியது.
“மனசாட்சிக்கு விரோதமில்லாம உண்மையை மட்டும் சொல்லுங்க. நம்ம குழந்தை தான் சாட்சி. எனக்கு உங்க மனசு தெரியணும்…”
“உங்க மனசுல நான் இருக்கேனா…”
“எம் மேல காதல், அன்பு, பாசம் ஏதாவது இருக்க…”
“இல்லை தான். ஆனா மாறும் சரண்…”
“அபிராமிய நீங்க மறந்துட்டீங்களா …”
“ இல்லை தான் ஆனா மறந்துடுவேன், கூடிய சீக்கிரம். எனக்கு கொஞ்சம் டைம் கொடேன்…”
“என் கூட நீங்க வாழ்ந்த வாழ்க்கை கட்டாயமா வெற்றி?… ஒரு நாள் ராத்திரி கூட என்னை நீங்க உணரலையா வெற்றி…”
“ சரண்யா பிளீஸ்…. என்னை விடு”
“உங்க மோகமும், ஆசையும் எனக்கு மட்டும் தான் தெரியும்ன்னு நினைச்சேன். இது எல்லாம் போலி தன் தானா வெற்றி…”
அவன் மெளனமாக நிக்க, “நீங்க போடுற வாழ்க்கை பிச்சை எனக்கு வேணாம் வெற்றி. தாம்பத்தியதை பிச்சையா போட வேண்டாம். அது என்ன வேசியா உணர வைக்கும்…”
“சரண்யா …” என்று வெற்றி சத்தம் போட.
“எம் புருசன், எனக்கு மட்டும் தான். என் ஆசை, மோகம் அவனுக்கு மட்டும் தான்னு நம்பி தான் என் உடை களைந்து உங்க கூட சேர்ந்தேன். இன்னைக்கு யாரோ ஒருத்தர் முன்னாடி துணி இல்லாம நின்ன உணர்வு… போயிடுங்க, என் வாழ்க்கைய விட்டு போங்க…”