வருடத்திற்கு ஒரு முறை மட்டும் வரும் அக்காவை காண ஓட்டமும், நடையுமாக ஓடி வந்தாள் சரண்யா. சிறு வயதில் அக்காவின் செல்லம் அவள்… அந்த பிடிப்பை மனம் தற்போதும் எதிர் பார்த்தது. அவசரமாக ஓடி வந்தவளுக்கு, அலங்கோலமாக நிற்கும் பிள்ளைகளை பார்த்து அதிர்ந்து போனாள். அவள் போய் கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் ஆகிவிட்டது. மெதுவாக உள்ளே வந்தவளுக்கு யார் மீதும் கோபம் எல்லாம் வரவில்லை, முனுக்கென்று அழுகை தான் வந்தது.
மூன்றை வயது சிறு பிள்ளைகள் தான். அந்த வயதில் என்ன விவரம் தெரியும். ஒரு வேளை வாய் திறந்து தான் சொல்ல தெரியாது, ஆனால் புரிந்து கொள்ளும் போல… தங்களை உள்ளே விடவில்லை என்று புரிந்து இருவரும் தனியாகவே இருந்து கொண்டார்களோ…
வேகமாக பிள்ளைகளை அள்ளி சென்றவள் குளிக்க வைத்து சுத்தப்படுத்தி தான் தூக்கி வந்தாள். அதுவரை வெளியில் விட்ட குழந்தைகளை பற்றி ஒருவரும் அக்கறை காட்ட வில்லை. யாரை கேள்வி கேட்க முடியும். எதுவும் பேசாமல் பிள்ளைகள் உடன் உள்ளே சென்றாள். அங்கு எல்லோரும் அமர்ந்து பேசி கொண்டிருக்க, பையை கொண்டு போய் தாய் அருகில் வைத்தாள்.
“என்ன சரண் சூடு ஆறி போச்சு… சூடா இருந்ததான் பிரியாக்கு ரொம்ப பிடிக்கும்…” என்ற தாய்க்கு பதில் சொல்லாமல் அடுப்படி சென்று விட்டாள்.
“கோபம் போல…” என்றாள் திவ்யா. என்ன கோபம் என்று விசாரித்தார் சுகந்தி. விசயம் சொல்ல படவும் கொஞ்சம் பதற்றம் தான்.
“என்ன பிரியா… உன் தங்கச்சி பிள்ளைக தான. நீ கொஞ்சம் பார்க்க கூடாதா…” என்றார் வருத்தமாக.
“அம்மா… போம்மா, கொஞ்சமும் சுத்தமில்லை, குளிக்க கூட வைக்கலை. டிரஸ் எல்லாம் மண்ணு…” ஒரு மாதிரி குரலில் பிரியா சொல்ல, மருமகனை வைத்து கொண்டு மேலே எதுவும் சொல்ல முடியாமல் வாய் மூடி கொண்டார் சுகந்தி. உள்ளம் சின்ன மகளை எண்ணி தவித்தது. காலையிலிருந்து சமையல் எல்லாம் அவள் தான் என்பதால் பிள்ளைகளை கவனிக்க நேரமில்லை.
மகளுக்கு உடை மாற்றி கொண்டு இருந்த சரண்யாவும், இந்த வார்த்தைகளை கேட்க தான் செய்தாள். அக்காவின் இரு பிள்ளைகளை வளர்த்தது இவள் தான். அன்று இவளுக்கு, இது தன் அக்காவின் குழந்தை … தன் குழந்தை கிடையாது என்ற நினைப்பெல்லாம் இல்லை. தங்கள் வீட்டின் முதல் குட்டி, தன்னையும் அம்மா என்று அழைக்கும் உயிர் என்று நினைத்து தான் அனைத்தையும் செய்தாள். இன்று தானே தெரிகிறது, தாங்கள் சுமந்து பெற்று கொள்ளும் குழந்தைகளிடம் தான் அருவருப்பு வராது போல. ஒரு வகையில் அது உண்மையும் தான்.
நம்ம பக்கம் ஒன்று சொல்வார்கள் பார். பெற்றவள் உண்ணும் போது, குழந்தை வெளியில் போய்விட்டால் சிறு முக சுணக்கமும் இல்லாமல் பிள்ளையை கழுவி சுத்தம் செய்து விட்டு மீண்டும் உணவில் கை வைப்பாளாம். அசுத்தத்தை தொட்டு விட்டோம் என்று எண்ணம் துளி கூட இருக்காதாம். குடித்த பால் செமிக்காமல் வாய் வழி வரும் போதும் அருவருப்பு இல்லாமல் கையில் ஏந்துவாள் ஒரு தாய்… ம்ம் தாய் தான், என் பிள்ளைக்கு நான் தான் தாய். அதே அன்பை, பரிவை உடன் பிறந்தவள் என்ற ஒரு காரணத்திற்காக அவளிடம் எதிர்பார்க்க முடியுமா…. நீ ஒரு மக்கு தான் சரண்யா. எதையும் யோசிப்பது கிடையாது, வலிக்க பட்டால் தான் புத்தியே…
உணவை எடுத்து வைக்க சொல்லி தந்தையின் அழைப்பு வர, ஒரு யோசனையில் தான் எழுந்து சென்றாள். இரு சின்ன பிள்ளைகள் வைத்திருப்பவள் நான் தான். நான் வந்து தான் உணவை எடுத்து வைக்க வேண்டுமா… மூத்த மகள், மருமகள் இருக்க இன்றும் வேலை என்றாலே சின்ன மகள் தான் வேண்டுமா…
மதுரையில் பேர் போன அசைவ உணவு அனைத்தும் இடம் பெற, நாட்டு நடப்பை அலசிய படி உணவை உண்ண தொடங்கினார்கள். சரண்யா அடுப்படியில் ஆம்லெட் சூடாக போட்டு கொண்டு இருந்தாள். அவளை யாரும் சாப்பிட சொல்ல வில்லை. அவளுக்கு அது பெரிய விசயமும் இல்லை. எல்லா நாளும் இப்படி தான்.அவள் தான் பதினாறு வயதிலேயே அடுப்படி புகுந்து விட்டாளே… ஆனால், அவள் பிள்ளைகளை உண்ண அழைக்க வில்லை. அது தான் மனம் அரிக்க தொடங்கியது. இரண்டும் அடிப்படையிலேயே அமர்ந்து விளையாண்டு கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு, அங்கு அமர்ந்து இருப்பவர்களுடன் கலக்கவே முடியவில்லை.
இதுவரை தன் வீட்டு ஆட்கள் செயல்களை மட்டும் அவதானித்தவள் . இன்று பிள்ளைகளையும் கவனிக்க தொடங்கினாள். புதிதாக வந்தவர்களிடம் ஒட்டவே இல்லை. சரண்யா ஒரு யோசனையில் இருக்க, அந்த இடத்தில் சுகந்தி ஒரு தப்பை செய்தார். அது என்னவென்றால் சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்து வைத்தவர். அவர்கள் சிந்திய சோறு, கடித்து போட்ட எலும்பு எல்லாவற்றையும் எடுத்து ஒரு குட்டி தட்டில் வைத்து, அங்கிருந்த அஜிதா கையில் கொடுத்து விட்டார். அவர்கள் சாப்பிட்டு போட்ட எச்சியை தன் குட்டி கைகளில் ஜாக்கிரதையாக கொண்டு வரும் தன் செல்ல சிட்டை கண்டு நெஞ்சு கொதித்து போனது. அக்கா பிள்ளைகள் இருவரும் பிள்ளைகள் தான். அவர்களிடம் கொடுக்க மனம் வருமா… வராது. ஏனென்றால் மாமாவிற்கு தன் பிள்ளைகளை குறையாக நடத்தினால் கோபம் வரும். அதற்கு முன் அக்காவே வரிந்து கட்டி சண்டைக்கு செல்வாள். ஆனால், என் பிள்ளைகள் போக்கிடம் இல்லாமல் அவர்களை நம்பி வாழ்கிறோம். அப்பா இல்லாத பிள்ளைகள் கேட்க ஆள் இல்லை. தாய் ஒன்றுக்கும் வக்கத்தவள், அழுகையை தாண்டி என்ன தெரியும். எனக்கு அடுத்து என் மகள் என்று பழக்க படுத்திகிறார்களோ!…
தாயிடம் முகம் கொடுக்கவில்லை சரண்யா. அவளுக்கு மற்றுமொரு வருத்தம் அரிக்க தொடங்கியது. இவள் சிறு வயதில் இருக்கும் போது எந்த பண்டமும் முதலில் சரண்யா கையில் வந்த பின் தான் அக்கா, அண்ணன் பக்கமே போகும். குழந்தை இருக்கும் வீடு என்றாள் அவர்களுக்கு தான் முதலில் எந்த உணவும் போகும். இப்போது இங்கு நடந்தது என்ன… குழந்தைகள் விரும்பி உண்ணும் ஈரல் கூட்டும், உப்பு குழம்பும் முழுதாக தீர்ந்து போனது. சுடு சோற்றில் உப்பு கறி குழம்பு அஜிக்கு ரொம்ப இஷ்டம். குழம்பு வகைகள் மட்டுமே மீதம் இருந்தது. சாப்பிட்ட ஒருவருக்கு கூடவா சிறு பிள்ளைகள் நினைவு வரவில்லை. ஆடம்பர பொருட்களை விடு, விரும்பி உண்ணும் உணவை கூட வாங்கி கொடுக்க முடியாத நானெல்லாம் என்ன தாய்… எனக்கு எல்லாம் எதற்கு பிள்ளை வரம்.
தீர்ந்து போன உணவு பாத்திரத்தை பார்த்திருந்த மகளை கண்டு சங்கடமாக இருந்தது சுகந்திக்கு.
“என்னைக்கோ ஒரு நாள் வரும் பிள்ளைக, ஆசையாக உண்ணும் போது தடுக்க முடியலை சரண்…” என்று சமாதான வார்த்தைகளை சொன்னார் சுகந்தி.
மறுமொழி ஒன்றும் சொல்ல வில்லை. ஆனால், மனம் தான் எண்ணியது உணவு என்றால் ஒரு வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்களோ, அத்தனை பேருக்கும் நிரந்து தான உண்ண வேண்டும். குழந்தைகள் உண்ணட்டும், பெரியவர்கள் உண்ணாது இருந்திருக்கலாம் அல்லவா… அவர்கள் காசு போட்டு வாங்கும் உணவு அவர்களுக்கு தான் முதலில், சும்மா இருக்கும் தங்களை எல்லாம் யார் கவனத்தில் கொள்ள போகிறார்கள். பேசாமல் ஒரு மூலையில் சென்று அழ வேண்டும் போல் தோன்றியது. ரோச பட தெரியவில்லை. நேரமும் கடந்து விட்டது, பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும். வலியில் மனம் துடித்தாலும், வயிறு பசிக்கு கூப்பாடு போட்டது.
மீதம் இருந்தது எல்லாம் அதிக காரம். பிள்ளைக்கு கொடுக்க முடியாது. வெறும் சோற்றில் நெய் விட்டு ஊட்டி விட, விஜி குட்டி வாங்கி கொண்டாள். அஜி மட்டும் புரியாமல் தாயின் முகம் பார்த்தாள். பின் எதுவும் பேசாமல் வாங்கி கொண்டாள். இது ஒன்று தான் சரண்யாக்கு உள்ளே உறுத்த தொடங்கியது. பிள்ளைகளுக்கு தங்கள் வறுமை புரிகிறதா?… பிள்ளைகள் அசைவம் உண்ணாததால், பெற்றவழுக்கும் உண்ண மனமில்லை. இது தான் தாய் மனது. இதே மனப்பான்மையை மற்றவர்களிடமும் எதிர்பார்க்க முடியுமா…
மறுநாள் கோவில் கிளம்பி சென்றார்கள். இரு பிள்ளைகளை இழுத்து கொண்டு சரண்யாவும் உடன் சென்றாள். சாமி தரிசனம் முடித்து அங்கிருக்கும் கடைகளை சுற்றி பார்த்தார்கள். ஏதேனும் ஒன்றை எல்லோருக்கும் வாங்கி தந்தார் அவள் மாமா. அப்படி ஒன்றும் பிள்ளைகளை வெளியில் அழைத்து வரும் ரகம் அல்ல சரண்யா. என்றாவது ஒருநாள் குடும்பத்துடன் வருவது மட்டும் தான்…
கலர்கலரான கடைவீதியை பார்த்ததும் கால் தரையில் இல்லை விஜி குட்டிக்கு. முன்ன பின்ன ஓடி கொண்டே இருக்க, புன்னகை தான் பெற்றவள் முகத்தில்… அஜி எப்பவும் தாயின் கை பிடியில் தான். ஒவ்வொன்றும் ஆசையாக, ஆர்வமாக பார்த்து கொண்டே வந்தாள். பிரியாவின் பிள்ளைகள் பிடித்ததை எடுக்க தொடங்கினர். அவர்களுக்கு தேவை என்று பட்டதை எல்லாம் வாங்க ஆரம்பித்தார்கள். திவ்யாவும் தன் பிள்ளைக்கு என்று பொருளை தேட… சரண்யா சங்கடமாக உணர்ந்தாள். அவளிடம் காசு இல்லை. எது ஒன்று என்றாலும் தாயிடம் கேட்டு வாங்கி கொள்வாள். இன்று அவர்கள் உடன் வரவில்லை. அஜி எதுவும் கேட்டு அழுது தாயை கஷ்டபடுத்த வில்லை. ஆனால், விஜி அப்படியல்ல… தன் அக்கா, அண்ணன் வைத்திருக்கும் பொருட்களை பார்த்து, தனக்கும் வேண்டும் என்று அழ ஆரம்பித்தாள்.
பிரியா, அவள் கணவனிடம் ஏதோ சொல்ல, அவன் பிள்ளைகள் இருவருக்கும் பலூன் வாங்கி கொடுத்தான். அது என்னவோ சின்ன குட்டிக்கு பிடிக்கவில்லை. அவளுக்கு அண்ணன் கையில் இருக்கும் கார் மீது தான் ஆர்வம் அதிகம். அவள் அதை கேட்டு அழ, சமாதான படுத்த தெரியவில்லை சரண்யாக்கு. அதன் விலை எண்ணூறு, இவள் எங்கே போவாள். ஐம்பது ரூபாய் பலுனுக்கு தகுதியானவள் எண்ணூறு ரூபாய் பொருளுக்கு ஆசைப்படலாமா… குழந்தைக்கு தகுதி புரியாத, தன் அண்ணன் வைத்திருக்க தனக்கு ஏன் இல்லை என்ற அழுத்தம் அழுகையை மாற தொடங்கியது. மற்றவர்கள் வேடிக்கை தான் பார்த்தனர். அழுகை அடமாக மாறி கத்த தொடங்கினாள் விஜிதா…
தாயின் சொல் காதில் ஏற வில்லை. சரண்யாவின் சேலையை இழுத்து பிடித்து அடமாக அழுக தொடங்கியது. சத்தம் கொஞ்சம் பலம் தான். அவளுக்கு பிள்ளையை அடக்கவே தெரியவில்லை. பொது இடம் என்பதால் போவோர், வருவோர் எல்லாம் திரும்பி பார்க்க ஆரம்பித்தார்கள்.
“உஷ்… விஜி வாய மூடு. அம்மா வீட்டுல போய் வாங்கி தாரேன்…” எடுபடவில்லை குழந்தையிடம்.
“உம் பிள்ளையை அடக்கு சரண். எல்லோரும் நம்மளை தான் பாக்குறாங்க…” ஒரு பக்கம் பிரியா சொல்ல.
“செல்லம் கொடுத்து பிள்ளைய கெடுத்து வச்சிருக்க…” அண்ணன் ஆரம்பித்தான்.
“ யார் என்ன வச்சுருந்தாலும் நமக்கு வேணும்ன்னு கேக்குறது என்ன பழக்கம். உன் சொல்லுக்கு உம் மக கட்டுப்படலை. பிள்ளை வளர்க்க தெரியாம ஏன் பெத்துக்கணும்…” என்று திவ்யா சொன்ன நொடி, சரண்யா போட்டாள் ஒரு அடி. நிச்சயம் பிள்ளை முதுகில் தான். நல்லா சுள்ளென்று ஓங்கி தான் விழுந்தது.
அப்படியே மூச்சை அடக்கி போனாள் குழந்தை. அரண்டு போய் நடுங்கி நின்றாள் அஜிதா. சரண்யா எப்பவும் பிள்ளைகளை அடிக்க மாட்டாள். ஆனால் இன்று கை ஓங்கி அடித்து விட்டாள். அடம்பிடிக்கும் பிள்ளை மீது கோபம் என்பதை விட, தான் இயலாமை, ஒன்னும் செய்ய முடியாத கையாலாகத தனம், எதுக்கும் லயக்கி இல்லை என்ற மனதின் குமுறல்… எல்லாம் சேர்ந்து தாக்க, தன்னால் முடியவில்லை என்ற ஆதங்கம் பிள்ளை மீது திரும்பி விட்டது.
யாரும் எதிர்பார்க்க வில்லை, எல்லோரும் அமைதியாக நிற்க, பிள்ளையின் சத்தம் உரத்து கேட்டது.
“மூச்… சத்தம் வர கூடாது. வாய மூடி விஜி…” கோபமாக ஒரு அரட்டலில் பிள்ளை அடங்கி போனது. உடன் பிறந்தவள் அழுகை சத்தம், அஜிக்கும் அழுகையை வர வைத்தது. தாயின் கோபம் பார்த்து பிள்ளைகள் மூச்சடக்கி நின்றனர்.
பார்த்த பிரியாவுக்கு பாவமாக இருக்க, முன் சென்று பிள்ளையை தூக்கினாள். அடித்தாலும் என் தாய் இவள் என்று விஜி யாரிடமும் போகாமல் தாயின் காலை கட்டி கொண்டாள். மறு புறம் தாயின் முந்தானையை அஜி பிடித்து அழுது கொண்டிருந்தாள். இனி முடியும் என்று தோன்றவில்லை சரண்யாக்கு. தன்னுடைய கேவலை பெருமூச்சு விட்டு அடக்கி கொண்டவள்,
“ நாங்க வீட்டுக்கு போறோம்…” என்றவள். இரு பிள்ளையையும் தரதரவென இழுத்து கொண்டு சென்று விட்டாள்.