கொஞ்சும் கிளிகள்
அத்தியாயம் 25
“அவ நல்லாவே இருக்க மாட்டா, நாசமா போவா… என்னை துரத்தி விட்டாளே, அந்த வீட்டுல நிலைச்சு நிப்பாளா… வயிறு எறிஞ்சு வெளிய வந்தேன், சாமி கேட்கும் பாரு. பேச்சியம்மா நீ அவளை போட்டு பார்க்கணும்…” என்று தொடர் சாபங்களா விட்டு கொண்டிருந்தார் தனம்.
கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்கள். வேற யார், அவர் கணவனும், அவர் பெத்த மக்களும் தான்.
“ஆமா, இவ வாக்கு விட்ட உடனே பச்சை மரம் பத்திக்கும் பாரு… போடி பொசகெட்டவளே. உன் வாய்க்கு தான் பெத்த மகனே ஒதுக்கி வைக்கிறான்…” என்று வேல்முருகன் எகிற
“இந்த குடும்பத்தை தூக்கி நிப்பாட்டுனதே அண்ணன் தான். இன்னைக்கு அது குடும்பமா நிக்கட்டும். நீங்க தள்ளி நில்லுங்க. உங்க வாய் கட்டு படாது…” என்று சக்தி சொல்ல.
“உம் மகன் தானம்மா. நல்லா வாழ்ந்த உனக்கு சந்தோசம் தான. நாங்க எல்லாம் குடும்பமா இருக்க, அண்ணன் கண் காணாத இடத்துல தனியா கெடங்தாங்க. நல்ல நேரத்துக்கு பொண்டாட்டி, புள்ளன்னு சேர்ந்தாச்சு. அண்ணன் சந்தோசத்தை மட்டும் பாரும்மா…” என்று மாயவும் பேச
“சரி தான். என் வயித்துல பொறந்து எனக்கே பாடம் சொல்றீங்களா… உங்க கோளாறு கேக்குற அளவு தனம் தரம் கெட்டு போகல. உங்களுக்கு பாடம் சொல்லி வளத்தவ உங்க ஆத்தா… உங்க அண்ணன் புத்தி தான் உங்களுக்கும், வளத்த கெடா மாருல முட்டுது…” என்று மூக்கை சிந்த
“அம்மா, அன்னைக்கு எங்க அண்ணனுக்காக தான் அபி பக்கம் நின்னோம். என்னைக்கும் எங்க அண்ணனுக்காக தான் மதினிய பக்குரோம்… நீ ஏன் மதினிய பாக்குற, உம் மகனை பாரு…” என்று எவ்வளவு எடுத்து சொல்லியும், தனம் மனசு ஆறவே இல்லை.
தாங்களும் உடன் வருகிறோம் என்ற தாய், தந்தை மறுத்து தான் சரண்யா கிளம்பினாள். ஆனால், மதுரை வீட்டுக்கு வந்து வழி அனுப்பி வைத்தார்கள். வெற்றி நல்ல விதமாகவே பேசி ஒதுங்கி கொண்டான். சரண்யா ரொம்பவும் பட்டு கொள்ள வில்லை. அக்கா, அண்ணன் எல்லாம் போனில் பேசினார்கள். நல்லவிதமாகவே, ஆனால் இரண்டு வார்த்தையில் முடித்து கொண்டாள்.
முதல் நாள் இரவு வந்தவர்கள். அதிகாலையில் கணவன், மனைவியாக பால் காய்ச்சி தங்கள் புது வாழ்க்கையை தொடங்கினார்கள். சரண்யா சங்கட படுவாள் என்று வெற்றி யாரையும் அழைக்க வில்லை. முதலில் இங்கு பொருந்தி போகட்டும் என்று விட்டான். கீழ மட்டும் அகலமான, விஸ்தாரமான வீடு. பிள்ளைகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான். அவர்களுக்கு என்று தனி அறை, மெத்தை, இரண்டு குட்டி சைக்கிள், விளையாடும் இடம், தனி டி.வி, ஊஞ்சல் என்று பலதும் யோசித்து அமைத்து இருந்தான்.
கிட்சேன் நவீனமாக இருந்தது. வெற்றி துபாயில் இருந்து பலதும் கொண்டு வந்து பொருத்தி இருந்தான். நிறைய செலவு செய்தான், பார்த்ததும் சரண்யா கண்டு கொண்டாள். அந்த வீட்டில் அவளுக்கு பிடித்த இடம், கிட்சேன் தான். புழங்க நன்றாக இருந்தது.
தாய், தந்தை அருகிலே இருப்பதால் பிள்ளைகள் புது இடம் என்ற பயமில்லாமல் ஒட்டி கொண்டார்கள். வெற்றிக்கு இப்போது தான் நிம்மதியே. குடும்பம், தொழில் என்று ஒரு இடத்தில் நிலையாக நின்று விட்டான். இனி முன்னேற வேண்டும்.
இப்போது எல்லாம் தினமும் சரண்யாக்கு அவள் வீட்டில் இருந்து போன் வந்து விடும். அவள் அக்காவிடம் பேசுவது போல் இவளிடமும் தாய் பேசுவார். மகள் கணவனோடு வாழ்வதில் அவ்வளவு நிம்மதி. ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீடியோ கால் வரும். அருகில் இருக்கும் போது தூக்காதவர்கள், வீடியோ காலில் அத்தனை முத்தம் கொடுப்பார்கள். என்ன சமையல் என்பது வரை கேட்பார் சுகந்தி.
“என்னம்மா… அவங்க அப்பாக்கு கத்தரிக்காய் புளி குழம்பு இருக்கு, இவங்களுக்கு மட்டும் தோசை சுடனும். அங்க என்ன சாப்பாடு?…” பொதுவாக பேசி வைத்து விடுவாள். உள்ளார்ந்து அண்ணன், அக்கா என்று குடும்ப விசயத்தில் உள் நுழைய மாட்டாள்.
தினமும் காலையில் வேல் முருகன் வந்து விடுவார். பேத்திகளை வண்டியில் ஏற்றி சுற்றி விட்டு, கடைக்கு கூட்டி போய் அப்பம், பால் பன் வாங்கி குடுத்து தான் தூக்கி வருவார். சக்கி சென்னையில், மாய பக்கத்து ஊர் அருகில் இருக்கும் பேத்திகளை இறக்கி விடமாட்டார். பிறந்தது தொட்டு தூக்க வில்லை என்பதால் அதிக செல்லம் இருவருக்கும்…
முதல் ஒரு வாரத்தில் மாயா அண்ணன் வீடு வந்து விட்டாள், அவள் கணவன் பிள்ளையோடு… இப்போது முகம் சுளிக்கவில்லை சரண்யா. நல்ல முறையில் தான் வரவேற்றாள். மாயாவுக்கே ஆச்சர்யம் தான். ஆனால், எதுவும் கேட்டு கொள்ள வில்லை. மதினி என்று பேசி, ஒட்டி கொண்டாள்.
அன்று மாலை தான் தாயை பார்க்க சென்றாள்.
“அவளை தான மொத பார்க்க போன, அவ வீடு போய் என் வீடு வராத…” என்ற தனத்தின் வார்த்தையில் முகம் சுருங்கி போனது.
அவளை தூக்கி வளத்த அண்ணன். அப்பன் இடத்தில் இருந்து அவளை கட்டி கொடுத்தவன். இவர் வீம்புக்கு கூட பிறந்தவனை ஒதுக்கி வைக்க முடியுமா… இவர்கள் காலத்துக்கு பின் உடன் பிறந்தவர்கள் தான் உடன் நிப்பார்கள். என் அண்ணனை நான் ஒதுக்க மாட்டேன்.
அடுத்த வாரத்தில் சக்தி வேல் வந்து விட்டான். அவனும் முதலில் அண்ணன் வீடு செல்ல, முறுக்கி கொண்டார் தனம். பிள்ளைகள் மூவரும் ஒற்றுமையாக இருப்பதில் பெருமை தான். ஆனாலும், பெத்தவள் என்னை மதிக்க வில்லையே என்று ஆதங்கமும் நிறைய இருந்தது.
சக்தி மனைவி நன்றாகவே பழகினாள். அவரவர் அவர் எல்லையில் இருக்க, பழக தடையில்லை. ஆனாலும், சரண்யாக்கு மாயாவிடம் தான் கொஞ்சம் ஒட்டுதல் வந்தது. இது என் அண்ணன் வீடு, நான் நாத்துனார் , இங்கு நான் விருந்தாளி என்ற எந்த தன்மையும் இல்லாமல் உடன் சேர்ந்து வேலை செய்தாள். உடன் பிறப்பாக இருந்த போதும் அவள் அக்கா விருந்தாளியாக தான் வலம் வருவாள். மாயா அப்படி அல்ல, ஆளுக்கொரு வேலையாக இழுத்து போட்டு செய்தாள். சரண்யா துணி துவைக்க, பேசிய படியே மாயா அலசி போட்டாள். அண்ணன் மனைவி துணியை தான் தொடுவதா என்ற எண்ணம் எல்லாம் இல்லை.
காலை சரண்யா எழுந்து வர தாமதம் ஆனாலும், மாயாவே டீ போட்டு வைத்து சமையலுக்கு தயார் செய்வாள். சரண்யா வாயில் கை வைக்காத குறை தான். அங்கு அவள் வீட்டில் நிலவரம் தான் அவள் அறிவாளே. ஒரு நாளும் உதவி என்று யாரும் வந்தது இல்லையே.
வெற்றி குடுத்து வைத்தவன். தாங்கி நிற்கும் உடன் பிறப்புகள் அமைவது வரம் தான். கண் கலங்கியது சரண்யாக்கு பொறாமை என்பதை தாண்டி ஒரு ஆதங்கம். என் உடன் பிறப்புகள் எனக்கு ஏன் சரியாக அமைய வில்லை. மனதில் ஏக்கம் தான்.
அந்த ஊர் சரண்யாக்கு பழக்க பட்டு விட்டது. வீடு ரொம்ப பிடித்து போனது. தன் வீடு அந்த சொந்தமே அலாதியானது. எப்போதும் துடைக்க, சுத்தம் செய்ய தான் இருப்பாள். ஒவ்வொன்றையும் தொட்டு தொட்டு ரசிப்பாள். தங்களுக்கு உரிமையான சொந்த வீடு…
வெற்றிக்கு மதுரையை விட இங்கு வேலை அதிகம் குடும்பத்தோடு நேரம் செலவிடவே முடிய வில்லை. சரண்யா தான் சமாளித்து கொள்கிறாள். அந்த வகையில் நிம்மதி தான். இன்று பக்கத்து ஊரில் ஒரு கல்யாணம், சவாரி கொண்டு சென்றது வெற்றி தான்.
மணப்பெண்ணுக்காக காரை திறந்து விட, அவர்களோடு ஏறி கொண்டது அபிராமி. தூரத்திலே பார்த்து விட்டான். தெரிந்த பார்வை கூட பார்க்க வில்லை. ஒதுங்கியே தான் நின்றான். சொந்தமாக கூட அபிராமியை நெருங்க கூடாது என்பதில் உறுதியாக நின்றான். ஒதுங்குவது என்றால் முழுதாக ஒதுங்கி கொள்ள வேண்டும்.
ஒத்த பார்வையில் கூட இனி அவளுக்கு நம்பிக்கையை தர கூடாது. வெற்றிக்கு தெரியும், தன்னை கொண்டு தான் அபிராமி நெருங்குவாள் என்று… அவளை நெருங்கி புரிய வைக்க வேண்டாம். ஒதுங்கி கொண்டாளே புரிந்து கொள்வாள். இன்னும் அபிராமி திருமணத்திற்கு பிடி கொடுக்க வில்லை.
தன்னால் தான் என்று தெரிந்தும் வெற்றி , அவளிடம் ஒரு வார்த்தை கேட்க வில்லை. அவள் தனியாக நின்று, தனக்கு குற்ற உணர்ச்சியை தூண்டுகிறாள் என்று தெரிந்தது. அவனுக்கும் வருத்தம் தான். நன்றாக அவள் வாழ வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. அதற்காக அவளிடம் பேசும் எண்ணம் எல்லாம் இல்லை. ஒரு நாள் நீயே புரிந்து கொண்டு உன் வாழ்க்கையை வாழ்…
அபிராமி அடிக்கடி வெற்றி வீடு இருக்கும் தெரு பக்கம் போய் வருவாள். சரண்யா வெளி வர மாட்டாள். அவள் நடமாட்டம் ரோட்டில் பார்த்தாலே தெரியும். மாலை ஐந்து மணிக்கு வெளி வாயிலில் இருக்கும் ஊஞ்சலில் அமர்ந்து டீ குடிப்பாள் சரண்யா. காலை உந்தி அட்டிய படி ஊஞ்சலில் அமர்ந்து விளையாடும் பிள்ளைகளை வேடிக்கை பார்ப்பாள்.
சொந்த வீடு, உரிமையான இடம் என்ற மெருகு அவள் முகத்தில் தெரியும். அபிராமிக்கு ஒரு நிறைவான வாழ்வில் சரண்யா இருப்பதாக தோன்றும். எந்த கவலையும், பயமும் இல்லாமல் கணவன், பிள்ளைகள் என்று நிறைவாக அவள் அமர்ந்து இருப்பதை பார்க்கையில், தன் காயத்தை தானே குத்தும் உக்தி தான். தன் இழப்பின் வலியை முழுமையாக அனுபவிக்கிறாள். இது தேவையில்லாத சுமை, இறக்கி விடு என்றாலும் மனம் கேட்க வில்லை.
தனமும் சில முறை பார்த்தார் தான். “ஒண்டி குடுத்தனத்தில் அண்ணன் பொண்டாட்டி கிட்ட குத்து பெத்து கிடந்தவ, காணாதத கண்டதும், கொஞ்சம் ஆடி பார்க்க தான் தோணும். எம்புட்டு நாளைக்கு…” என்று முனங்கி கொண்டு தான் செல்வார்.
ஒரு மாதம் தான் சென்று இருக்கும், மகனை ஒதுக்கி வைக்க முடியாமல், வெற்றி வீடு வந்து விட்டார்.
“ என் மகன் வீடு, நீ யாரு. எனக்கு தான் முதல் உரிமை” என்று அதாட்டலாக அமர்ந்து கொண்டார்.
அடுத்து வெற்றி, வேல் முருகன் வீடு வர, தனத்தை பார்த்து ஆச்சர்யம் தான்.
“ என்னம்மா…”
“பிள்ளைகளுக்கு மொட்டை எடுக்கணும் வெற்றி. நாள் குறிச்சு வந்துருக்கேன். பூசாரி கிட்ட சொல்லியாச்சு. ஏழு நாள் விரதம், நானு, உங்கப்பன், நீ, உன் தம்பி. வெளியில யாரையும் புழங்க கூடாது…” அவர் பாட்டுக்கு அடுக்கி கொண்டே போக,
தந்தையை பார்த்தான் வெற்றி. தேதி பார்த்தவர், தோது படுமா பாருங்க என்று வேல் முருகன் சொல்ல,
அந்த நாள் சரண்யா வீட்டுக்கு தூரம். மெதுவாக கணவனிடம் சொல்ல,
“சாமி காரியம் தள்ளி போட கூடாது. உம் பொண்டாட்டி வர வேணாம். நாம மட்டும் போய் வருவோம்…” என்று தனம் முடிக்க.
வெற்றி சரண்யா முகம் தான் பார்த்தான். தன் பிள்ளைகளுக்கு நடக்கும் முதல் நல்ல காரியத்தில் தன்னை ஒதுக்கி வைக்கிறார்…