மகனுக்கு எந்த பதிலும் சொல்ல வில்லை தனம். அவன் சொல்வது போல அவர் குடும்பம் என்பது இவர்கள் தானே. வெற்றி அவரின் தலை மகன். மற்ற இருவரை விட வெற்றி மீது தான் அதிக பாசம். அதில் தவறில்லை, சரண்யா மகனுக்கு பொருத்தமில்லை என்ற எண்ணம் தான் தப்பாக போனது. அவரால் அதை மாற்றி கொள்ள முடியவில்லை.
கிடா வெட்டு வேலை ஜோராக ஆரம்பித்து விட்டது. பிள்ளைகளுக்கு மொட்டை எடுத்து, காதும் குத்துகிறார்கள். நிறைய வேலை தான் வெற்றிக்கு… ஊரில், சொந்தத்தில் என்று அனைவருக்கும் அழைப்பு சென்றது.
அன்று இரவு சாப்பிடும் போது, “சரண்யா, நீ ஊர்ல வேலைக்கு போன தான். ஆனா இப்போதைக்கு எந்த வேலைக்கும் நீ போக வேண்டாம்…” என்றவன் மனைவி முகம் பார்க்க.
கணவனுக்கு பரிமாறி கொண்டு இருந்தவள், நிமிர்ந்து பார்த்தாள்.
“வீட்டுக்குள்ளே அடைச்சு போடுற எண்ணம் எல்லாம் இல்லை. பிள்ளைக ரெண்டும் சின்னவங்க, அவங்க கொஞ்சம் பெரிய பசங்க ஆகுற வரை வேலைக்கு போக வேண்டாம்…”
“ மதுரையில பிள்ளைகளை வச்சு கிட்டு தாங்க வேலைக்கு போனேன்…”
“இல்லைன்னு சொல்லலை. அது வந்து, இங்க அப்படி யார் கிட்ட விட முடியும். அப்படியே விட்டாலும், எங்கப்பாவே விட மாட்டார். தாத்தா, பாட்டி நாங்க இருக்கோம், வெளியே எதுக்கு அனுப்பணும்ன்னு தான் சத்தம் போடுவாங்க. எங்கம்மா, அப்பா கிட்ட பிள்ளைகளை விட்டா செல்லம் கொடுத்தே கெடுத்துடுவாங்க. போதாக்குறைக்கு வார வாரம் அவங்க அத்தை, சித்தப்பா வந்து இறங்கிடுடாங்க. நானும் கொஞ்சம் செல்லமாவே வளத்துட்டேன். கண்டிப்பு காட்டுற ஒரு ஆள் நீ மட்டும் தான். நீயும் கூட இல்லாம போன… நானும் சவாரி போவேன், வெளி ட்ரீப் போன வீடு வர மூணு நாள் ஆகும். பிள்ளைக எங்க அம்மா கைக்கு தான் போவாங்க. ஓரளவு அவங்க வளர்ற வரை நீ கூட இருந்து தான் ஆகணும் சரண்யா. நீ ஒரு பக்கம், நான் ஒரு பக்கம்ன்னு ஓட முடியாது…” வெற்றி அழுத்தி சொல்ல, புரிந்து கொண்டாள் சரண்யா.
முன்பு எல்லாம் சரண்யா ஒன்று இல்லை என்று சொன்னால் இல்லை தான். இப்போது பெற்றோரிடம் கிடைக்க வில்லையா, அடுத்து தாத்தா, அப்பத்தா, அத்தை, சித்தப்பா என்று ஓடி விடுகிறார்கள். பிள்ளைகளிடம் அவள் பிடி நழுவ தொடங்கியது. வெற்றி குறிப்பு காட்டி விட்டான். அவர்களை ஒன்றும் சொல்ல முடியாது. நம் பிள்ளைகளை நாம் தான் கட்டு படுத்த வேண்டும்.
வெற்றி தன் மனைவியோடு சேர்ந்து போய் மாமனார், மாமியார் மற்றும் அவள் வீட்டு சொந்ததுக்கு அழைப்பு விடுத்தான். பிரியாவுக்கு போனில் தெரிவித்து கொண்டார்கள்.
சரண்யா, மாயாவுடன் சேர்ந்து சொந்தத்தில் அனைவருக்கும் சேலை எடுத்தாள். மாமியாருக்கும் மகளவே எடுக்க விட்டாள்.
அந்த வாரத்தில் வெற்றி வீட்டில் தான் குடும்பம் கூடி இருந்தது. தனம் மட்டும் தான் இல்லை. அவருக்கும் ஒரு மாதிரி இருக்க, மகன் வீட்டுக்கு புறப்பட்டார். வாசலில் நுழையும் போதே வேல் முருகன் சத்தம் கேட்டது.
“ இந்த பச்சை கலர் சேலை உங்கம்மாக்கு எடுப்பா இருக்கும். ஆனா, ஏதாவது ஒரு குறை சொல்லுவா…” என்று வேல் முருகன் சொல்ல.
“அப்ப அம்மாவையும் கூட்டி போய் எடுக்கணும். நீங்க தான் வேண்டாம்ன்னு சொன்னீங்கப்பா…” மாயா குறை பட
“ உங்கம்மாகாரி குணம் அப்படி. மகன் சேலை எடுத்து குடுத்தா, மனசுக்கு புடிச்ச மாதிரி வாங்க வேண்டி தான… அதை விட்டு யாருக்கு கூட எடுக்குறா, மருமக சேலை என்ன, சம்மந்தி எடுத்த சேலைன்னு ஓவ்வொண்ணையும் பார்ப்பா. உங்கம்மா பேச்சு விருந்து வச்சு ஓரத்துல மாட்டுசானி வச்ச எப்படி இருக்கும், அப்படி தான் அவ குணம்…” அடுத்து சொன்னதை கேட்க தனம் இல்லை. விலகி வந்து விட்டார். மருமகள் சொன்னதன் அர்த்தம் விளங்கியது, குணத்தை மாற்ற முடியவில்லை.
வெற்றி தன் குடும்பத்தோடு தனியாக சென்று துணி எடுத்த விட்டான். இது பொதுவில் எல்லோருக்கும் எடுத்து கொடுப்பது. சரண்யாக்கு அதிக விலையில் எடுத்து கொடுக்க ஆசை. அம்மா, தங்கை, தம்பி மனைவி என்று ஒரே விலையில் எடுக்கும் போது, சரண்யாக்கு அதிக விலையில் எடுக்க முடியாது. எதற்கு வீணாக மன சடவு, தங்கள் விருப்பம் பார்த்து தனியாக எடுத்து கொண்டார்கள்.
சரண்யாக்கு தங்க நிறத்தில் சிவப்பு பார்டர் வைத்த பட்டு சேலை. அம்பதாயிரத்துக்கு மேல் தான் வந்தது. பிள்ளைகளுக்கு அதே நிறத்தில் பட்டு பாவாடை சட்டை எடுத்து இருந்தார்கள். வெற்றி எப்பவும் போல வெள்ளை சட்டை தான்.
சரண்யா வீடு நேர கோவில் வந்து விட, வெற்றி வீட்டு பக்கம் தான் ஆட்களை திரட்டி கொண்டு வந்தார்கள். சரண்யா பட்டும், நகையும், தலை நிறைக்க பூ வைத்து காரில் இருந்து இறங்க, அவள் பெற்றோர் பார்வை அவள் மீது தான். கொஞ்சம் உடம்பு வைத்து இருந்தாள். வெற்றி முறையாக உபசரித்தான்.
மொட்டை எடுக்க போவதால் மாயா பிள்ளைகளுக்கு பூ வைத்து விட, மல்லுக்கு நின்றார் தனம். இவங்க உடுப்புக்கு கனகாம்பரம் தான் எடுப்பா இருக்கும் என்று தனம் சொல்ல.
“அட, போம்மா… இப்போ எல்லாம் யார் வைக்கிற…”
“ எம்புட்டு வெள்ளை பூ வச்சாலும், கையளவு கனகாம்பரம் வை அம்சமா இருக்கும்…” என்று பேத்திகளுக்கு வைத்து விட, மலர்ந்து சிரித்தாள் பட்டு குட்டி.
“அடியே, சின்ன குட்டி பல்லு உங்கண்ணன் சின்னவன் மாதிரி இல்லை. கலரு கூட உங்க அப்பன் கலரு, அங்க தான ஒட்டுது. முடி கூட உங்க மதினி முடி இல்லை. அவளுக்கு சுருட்டைய நல்லாவே இருக்காது. விஜிக்கு அப்படியே என் முடி…” என்று அவளை ஆராய
“ நீயெல்லாம் திருந்தவே மாட்டியா…”
“நான் என்ன தப்பு செஞ்சேன் திருந்த. எல்லாத்தையும் அமைதியா பொறுத்து போறேன். குடும்பம் உடைய கூடாதுன்னு தான். உங்க மதினி சேலையை பாரு… ஒன்னு சொன்னேனா…”
மாயா வாயை மூடி கொண்டாள். தாயின் குணம் தான் தெரியுமே…
சரண்யா பொங்கல் வைக்க ஏற்பாடு செய்தாள். மாயா பிள்ளைகள் கூட இருக்க, இவள் தான் தனியாக பார்த்து நின்றாள். கை எல்லாம் ஒரே நடுக்கம் தான். இதுவரை தனியாக பொங்கல் வைத்தது இல்லை. கணவன் உடன் இருந்தால் தெரியும் குல தெய்வம், கோவில் வழிபாடு எல்லாம்… இதுவரை தனி தான். வந்ததில் இருந்து ஏனோ துளி துளியாய் கண்ணீர் வந்த வண்ணம் தான் இருந்தது.
திருமணத்தின் பின் பெண்களுக்கு எல்லாம் மாறி போகும்,ஊர், வீடு, உறவு, சொந்தம் அத்தோடு கோவிலும் தான். கணவன், மனைவி பிரியா கூடாது என்று தான் கணவன் உடைய எல்லாம் மனைவிக்கு உரியது என்று மாற்றி இருப்பார்கள் போல. விதியால், இவளை போல கணவனை பிரிந்து வாழும் பெண்கள். எந்த வீட்டை, எந்த உறவை, எந்த சாமியை உரிமை கொண்டாட…
திவ்யா, பிரியா எல்லாம் வருசா வருசம் அவர்கள் கோவிலுக்கு பொங்கல் வைக்க, இவள் வேடிக்கை மட்டும் தான் பார்ப்பாள். இன்று தான் அவர்களுக்கு என்ற கோவிலில், உரிமையாக, உறவுகளோடு தன் பிள்ளைகளுக்கு விசேஷம் செய்கிறாள். எதை என்று தெரியாமல் ஏதேதோ நினைத்து தான் கண்ணீர்.
தனக்கு தெரிந்த அளவில் அடுப்பு கூட்டி, பானை ஏற்றி விட்டாள். சிவகுமார், சுகந்தி தம்பதிகள் வெற்றி குடும்பத்தை தான் பார்த்து நின்றார்கள். மனதில் உறுத்தல் அதிகம் ஆகியது.
சிவகுமார் அக்கா சொல்லியே விட்டார், “சரண்யா மாமியார் ஒரு மாதிரி தான். ஆனா, பிள்ளைகளை நல்லா ஒற்றுமையா தான் வளத்து இருக்காங்க. வேறுபாடு இல்லாம நிறந்து நிக்குறாங்க…” என்று சொல்ல. அதை தான் சிவகுமாரும் நினைத்தார்.
இவர்களில் வெற்றி மட்டுமே படிக்காதவன். சக்தி சாப்ட்வேர் என்ஜினீயர், மாயா கணவன் அரசு வேலை. எல்லாம் நல்ல நிலை தான். வெற்றி தான் பார்க்க வேண்டும் என்று இல்லை. இருந்தாலும் அண்ணன் என்று உடன் நிற்கிறார்கள். எதுவும் சொல்லாமலே இழுத்து போட்டு வேலை செய்கிறார்கள். அஜி, விஜி கூட அத்தை, சித்தப்பா என்று அங்கு தான் ஓடிகிரார்கள். தாங்கள் ஏதோ வேற்று ஆளாக ஒதுங்கி நிற்கிரோம்.
சரண்யாக்கு அழுகை முட்டியது. நீண்ட நேரம் தீ வைத்தும் உலை பொங்கி வரவே இல்லை. எத்தனை வருடம் சென்று ஏதேனும் அபாசகுணமாக ஆகி விடுமோ, அதுவும் கடவுள் சந்நிதியில் பயமாக இருந்தது.
பொங்கி வரும் போல் இருக்க, நுரை வராமல் நீர் மட்டும் மேலே வர, பயந்து போனாள். பொங்காமல் நீர் மட்டும் மேல வந்து கொதித்து போனா எல்லாவற்றையும் நிப்பாட்ட தான் வேண்டும். பதட்டம் அதிகமானது, உடன் யாரும் இல்லை. பிரியாவும், திவ்யாவும் பார்த்து இருந்தார்களே தவிர கிட்ட வர வில்லை.
சுகந்தி பதறி போய் எழ, அதற்குள் தனம் வந்து விட்டார். அவசரமாக தீயை குறைத்து நீரை அமிழ்ந்து போக செய்து, பின் பொங்க விட்ட ,
“கூறு கெட்டவளே, உன்னை எல்லாம் என்னன்னு வளத்தாங்களோ… ரெண்டு பிள்ளை பெத்தும் ஒரு விவரமும் இல்லை.” என்று சாட, சரண்யா முகம் வாட வில்லை. நல்ல படியாக பொங்கல் வைத்தாள் போதும் என்று இருந்தது.
சுகந்தி பெரிய மகளை சொல்லியே விட்டார், “உம் கூட பொறந்தவ தான… அவ கூட சேர்ந்து வேலை செஞ்சா என்ன பிரியா?…”
“ போம்மா… உம் சின்ன பொண்ணு புருசன், பிள்ளைன்னு கொஞ்சம் ஓவர் தான். இத்தனை வருசம் பார்த்த நாம கண்ணுக்கு தெரியலை. எதுன்னாலும் மாயா தான். எங்களை எல்லாம் ஒதுக்கி வைக்குறா… நம்ம அக்கான்னு நினைப்பு இல்லை. இன்னைக்கு தான புருசன், நாம எவ்வளவு பார்த்தோம்…” என்று சொல்ல,
பிரியாவை அதிர்ந்து பார்த்தார் சுகந்தி. பின் தன் கணவனை திரும்பி பார்க்க,
“நீங்க என்ன பார்த்தீங்க பிரியா. யாரும் காசு, பணம் எதுவும் கொடுக்களையே. உங்களுக்கு எப்படி அந்த வீட்டுல உரிமை இருக்கோ, அதே போல தான சரண்யாக்கும். அந்த வீட்டுல இருக்க தான் விட்டோம். அப்படி பார்த்த எல்லா வேலையும் செஞ்சு, சரண்யா தான் எங்களை பார்த்திருக்கு…”
“ஏன் சொல்ல மாட்டிங்க. இப்போ உங்க சின்ன மக தான் கண்ணுக்கு தெரிவா. அவ வசதி அப்படி…” என்று முறுக்கி கொள்ள
“தப்பு நம்ம மேல தான் சுகந்தி. நாம யாரையும் சரியா வளர்க்கல…” பாவம் நொந்து போய் பேசினார் சிவகுமார்.
விசேஷம் நல்ல படியாக முடிய, கோவில் பெரியவர்கள் எல்லாம் வெற்றியிடம் ஏதோ சொல்ல, அவன் மறுத்து வெளி வருவது தெரிந்தது.
சரண்யா வீட்டு ஆட்களுக்கு முறையாக உடை கொடுத்து பழம் கொடுக்க, திருப்தி தான் திவ்யாக்கு. அவள் எதிர்பார்த்தது அது தான். உறவு என்பது ஒரு வழி பாதையாக அல்லாமல், இரு பக்கமும் நிறைவாக இருக்க வேண்டும்.
அவரவர் வீடு செல்ல, வெற்றி மனைவி முகம் பார்த்து முறைத்தான். சரண்யா புரியாமல் கணவனை பார்க்க,
“உங்க வீட்டு ஆளுகளை வீட்டுக்கு கூப்பிடு சரண்யா…”
அவளுக்கு நிஜமாகவே தோன்ற வில்லை. முறையாக எல்லோரையும் அழைக்க, தவறாமல் வீடு வந்தார்கள். அவர்களுக்கும் மகள் வாழும் வீட்டை பார்க்க ஆசை தான். அழைக்காமல் எவ்வாறு செல்ல, சரண்யா ஒரு வார்த்தை சொன்னதும் எல்லோரும் வந்தார்கள்.
தனம் ஏதோ சத்தம் போட்டார். மாமனார் முகமும் சரியில்லாமல் இருக்க, வீடு வந்ததும் கணவன் தனியாக சிக்க கேட்டு விட்டாள்.
அவர்கள் பங்காளி ஒருவர் தான் அவர்கள் குலதெய்வம் இறங்கி ஆடுவார். அவருக்கு பிள்ளை இல்லை. இறந்தும் விட்டார். அந்த சாமியை இறக்க வெற்றி தான் அடுத்த பங்காளி. அவனை ஏற்க சொல்ல, மறுத்து விட்டான். அது தான் தகராறு…
சாமியா… சரண்யாக்கு பயம். தயங்கி தான் கணவன் முகம் பார்த்தாள்.
“நான் உன் கைல பழகிட்டேன் சரண். சாமி வந்தா ரொம்ப சுத்தமா இருக்கணும். நீ வீட்டுக்கு தூரம் ஆனா, உன் கையால தண்ணி கூட குடிக்க கூடாது. தனியா ஒதுங்கி தான் நிக்கணும். உன்னை சுத்தியே பழக்கம். சாப்பாடு, தூக்கம், டிரஸ், டீ, தண்ணி கூட உம் கைல தான், விலகி நிக்க முடியாது. அப்புறம் எதுக்கு, அதான் வேணாம்னு சொல்லிட்டேன். வாசல்ல நின்னு கூட கை எடுத்து சாமி கும்பிடலாம்…” என்று வெற்றி சொல்ல
என்ன சொல்வது என்று தெரியாமல் கணவன் முகத்தையே பார்த்தாள் சரண்யா.