பிறந்த குழந்தையை பொத்தி வைப்பது போல், தன் பிள்ளைகளை பொத்தி வைத்திருந்தாள் சரண்யா. அந்த நேரத்தில், அந்த இடத்தில் பிள்ளைகளை அவளால் சமாளிக்கவே முடியவில்லை. இதுவரை விஜியிடம் இவ்வளவு பிடிவாதத்தை பார்த்ததே இல்லை. அஜி அளவுக்கு சமத்து இல்லை, கொஞ்சம் பிடிவாதம், அடம் எல்லாம் சின்ன குட்டியிடம் உண்டு தான். ஆனால், இன்று அளவு மீறி விட்டதாக தோன்றியது.
பொதுவாக நடுத்தர வர்க்கத்துக்கு கீழ உள்ள மக்கள் இந்த நிலையை கடந்தே வந்து இருப்பார்கள். அந்த சூழ்நிலையில் வளரும் குழந்தைகளுக்கு, தங்கள் வறுமை நிலை புரியும் முதல் படி இது தான்… கேட்டது எல்லாம் கிடைக்காது என்று உணர முடியாமல், முதலில் அழுது, அடம் பண்ணி… பின்பு வலியுடன் தான் சூழ்நிலையை எதிர் கொள்ளும். வெளியில் வளரும் குழந்தைகளுக்கே வலி அதிகம் எனும் போது, ஒரே வீட்டில் வளரும் குழந்தை தினம் ஒரு சூழலை எதிர்கொள்ள தான் வேண்டும். மூன்றை வயதில் குழந்தை மனதில் வரும் கேள்வி தான்… ஒன்றாக இருக்கிறோம், அண்ணனுக்கு, அக்காக்கு வாங்கும் பொருள் ஏன் எனக்கு வாங்கபட வில்லை…
தற்போது குழந்தைகள் இருவரும் தங்கள் சூழலை குழந்தை மனதுக்கே உரிய பக்கவத்துடன் எதிர்கொள்ள தொடங்கினர். அவ்வாறு தான் சரண்யாவும் உணர்ந்தாள். அதில் முதல் நிலை… கேட்டது எல்லாம் கிடைக்காது, அழுது அடம் பண்ணினால் அடி கிடைக்கும் என்பதை தான். தங்களின் வறுமையை ஏக்கம் என்ற முகமூடி கொண்டு அறிய தொடங்கினர்.
எது ஒன்று என்றாலும் தாயின் முகம் பார்க்க தொடங்கினாள் அஜிதா. தாயின் கோபத்தை கற்க தொடங்கினாள் போல… விஜியிடம் பிடிவாதம், அழுகை, அடம் எல்லாம் முன் போல தான் என்ற போதும் அதன் வீரியம் குறைந்து தான் இருந்தது. தாய் அடிப்பாள் என்ற பயம் அவளை அடங்கி போக செய்தது.
கோவிலில் விழுந்த அடி இரு பிள்ளைகளையும் அடக்கி வைத்தது. ஒரு அடி தான். ஆனால், முதுகில் தடிப்பு விழும் படி தான் இருந்தது. தாய் அடித்து விட்டாள் என்று பிள்ளைகள் யாரிடம் ஆறுதல் தேடும். அப்படி ஒருவர் தான் அவர்களுக்கு இல்லையே… தாத்தா, பாட்டிக்கு பாசம் இருந்தாலும் தூக்கி வைத்து ஒன்றும் கொஞ்ச மாட்டார்கள். அதற்கு வேறு பல காரணங்களும் உண்டு. அவர்கள் காரணம், அவர்களுக்கு சரியே…
இங்கு பிள்ளைகளை பொறுத்த வரை… தாய் என்ற ஒருத்தியை தாண்டி ஒன்றுமே இல்லை. தூக்குவதும், கொஞ்சுவதும் அவள் ஒருவள் தான். அதனால் தான், தாயின் கோபத்தை கண்ட பொழுதில் இருந்து ஒரு பயம் தாய் மீது பிள்ளைகளுக்கு. அது நல்லதுக்க, இல்லை கெட்டதுக்க என்று சரண்யாக்கு தான் தெரியவில்லை…
கோவில் விட்டு வந்ததில் இருந்து சரண்யா முகம் இறுகி தான் இருந்தாள். முன் போல இல்லை, ஏதோ ஒன்று அவளை தள்ளி நிறுத்தியது. அவ்வப்போது பிள்ளைகளை தன் கை பிடியிலே வைத்து கொண்டாள். தன் பெற்றோர்களிடம் கூட விட வில்லை. ஏதோ ஒன்று முன்னே உந்தி தள்ளியது முடிவெடுக்க சொல்லி… ஆனால், என்ன முடிவு எடுப்பது என்று தான் தெரியவில்லை. அவள் கல்யாணம், விவாகரத்து, பிள்ளைப்பேறு என்று எல்லாம் அவள் வீட்டினர் முடிவு தான். வீட்டின் கடைசி பிள்ளை என்பதால் அண்ணன், அக்கா வரையும் அவள் வாழ்வு அலசப்படும்.
தான் இரு பிள்ளைக்கு தாய், தனித்து நில் என்று மனம் சொன்னாலும்… அதன் வழி மட்டும் தென்படவில்லை. ஆனால், காலம் அமைதியாக இல்லை. அவள் வாழ்வில் எப்போதும் முடிவு எடுக்கும் அவள் வீட்டினர் தற்போதும் ஒரு முடிவு எடுத்து விட்டார்கள். அதை சொல்ல தான் நேரம் பார்த்து கொண்டிருந்தார்கள்.
சரண்யா பிள்ளைகளை அதிகமாக இறுக்கி பிடிக்க, பிள்ளைகள் கொஞ்சம் இறுக்கத்தை உணர்ந்தார்கள். அந்த மூன்றை வயது பிள்ளைகளை ஒரே இடத்தில் கட்டி போட்டது போல வைத்திருந்தால், எவ்வாறு உணர்வார்கள். அவளை சொல்லியும் குத்தமில்லை. தன் பிள்ளைகளை யாரும் ஒரு சொல் சொல்லி விட கூடாது என்பதில் கருத்தாக இருந்தாள் சரண்யா. கொலுசு ஒளி கலகலக்க வீட்டையே சுத்தி வரும் பிள்ளைகள் எவ்வாறு ஒரே இடத்தில் அமர்வார்கள்.
ஆனாலும் என்ன செய்ய முடியும். அன்று பிள்ளைகள் உடன் சேர்ந்து விளையாட விட்டவள், அக்கா மகளை பார்த்து கொள்ள சொல்லி தான் சென்றாள். ஒரு மணி நேரம் கடந்து இருக்கும் விஜி அழுகை சத்தம் கேட்டு பதறி ஓடினாள் சரண்யா. அடித்தது சுகந்தி தான், அதிர்ந்து போய் தாயை பார்த்தாள் பெண்.
சாத்விக்கை தள்ளி விட்டாள் என்று திவ்யா ஒரு பக்கம் கத்த, சாத்விக் ஒரு பக்கம் அழுக. யார் பக்கம் சரி, தப்பு என்று சுகந்தி யோசிக்க வில்லை. குழந்தை தானே என்று மருமகளை சமாதானம் செய்யவும் இல்லை. காரணம் யார்?… விஜிதா. அவள் முதுகில் இரண்டு அடி போட, பேரன் வாயை மூடி கொண்டான், மருமகள் உள்ளே சென்று விட்டாள். மெளனமாக சின்ன மகளை பார்த்தார். அழும் பிள்ளையை இடுப்பில் வைத்து, அஜியை கையில் பிடித்து உள்ளே சென்று விட்டாள் சரண்யா.
மனம் கொதித்தது. சொந்த பாட்டி… தப்பு செய்தால் அடிக்கட்டும் வேண்டாம் என்று சொல்ல வில்லை. ஆனால், அது ஏன் என் பிள்ளை மட்டும் அடி கொடுக்க வேண்டும். வேற யாரையும் கை வைக்க யோசிக்கும் தாய், என் பிள்ளைகள் என்றால் எளிதாக கை ஓங்கி விடுகிறார்கள். திவ்யா இரு முறை அடித்து இருக்கிறாள். அப்போது எல்லாம் சரண்யா சண்டைக்கு சென்றால், ஒரே வீடு, அவள் அத்தை தானே அவளுக்கு உரிமை இல்லையா என்று தாயே சரண்யாவை தட்டி விடுவார்.
அதே போல் ஒரு நாள் கண்ணாடி பாத்திரத்தை உடைத்தான் என்று சாத்விக்கை இவள் கண்டிக்க… “என் பிள்ளை என் வீட்டில், நாங்கள் வாங்கிய பொருளை தானே உடைத்தான் , திரும்ப நாங்க தானே வாங்கி வைக்க வேண்டும். எங்கள் செலவு தானே, நாங்க பார்த்துக்கிறோம்…” என்று திவ்யா முகத்திலடித்தது போல் சொல்ல, என்ன பேச முடியும் சரண்யாவால்.
சிறு பிள்ளைகளுக்கு விரோதம் தெரியாது இல்லையா… அன்று மாலையே சேர்ந்து விளையாட தொடங்கி விட்டது. ஆனால் நடந்தது வேறு… இந்த முறை தவறு செய்தது சாத்விக் தான். ஏதோ தரவில்லை என்று அஜியின் கன்னத்தை நன்றாக கடித்து வைத்து விட்டான். பிள்ளை துடித்தது போய் கதறி அழ, தூக்கி சமாதானம் செய்தும் அழுகை நிக்க வில்லை. கடித்த இடம் சிவந்து போய் கிடந்தது. அஜியை தொடர்ந்து விஜி அழுக, சரண்யாக்கு ஒன்றும் முடியவில்லை. யாரை தூக்கி, யாரை இறக்கி, யாரை மடியில் வைத்து சமாதானம் செய்ய, சோர்ந்து போனாள். பிள்ளைகள் இருவரும் யாரிடமும் செல்ல வில்லை. யார் தூக்கியும் தாய் முந்தியை விடாமல் பிடித்து கொண்டு மேலும் தான் அழுதார்கள். தினமும் தூக்கி பழகினால் தான் பிள்ளைகள் ஒட்டும், என்றோ தூக்கும் போது தாயை விட்டு நகரவில்லை. அதுவும் அழுகையில் இருக்கும் போது தாயை தாண்டி யாரை தேடும் பிள்ளைகள்.
சரண்யாக்கு, தான் பெற்ற பிள்ளைகளோடு சேர்ந்து, தானும் ஒரு ஆளாக அழுக தான் தோன்றியது. ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாதே… மடிந்து அமர்ந்தவள் ஒரு பிள்ளையை மடியிலும், ஒரு பிள்ளையை தோலிலும் போட்டு தான் சமாதானம் செய்தாள். இரட்டை பிள்ளை என்பதால் எல்லாவற்றையும் ஒன்றாக தான் செய்ய வேண்டி இருந்தது.
“சின்ன பிள்ளைக ஒரு நேரம் சிரிச்சு விளையாடும், ஒரு நேரம் அடிச்சுக்கும். இது எல்லாம் பெரிய விஷயமா… நாளைக்கே ரெண்டும் சேர்ந்து போகும் , இதை பெரிசாக்காதீங்க…” என்றார் தந்தை. மூச்சு விடவில்லை சரண்யா…
சுகந்தி மகள் அருகே வந்தார், “ எம் மேல கோபமா சரண். நான் என்னடி செய்ய… உங்கக்காவ எதுவும் சொல்ல முடியாது. வருசத்துல ஒரு நாள் தான் வாரேன். எம் பிள்ளைகளை குத்தம் சொல்றீங்கன்னு சண்டைக்கு நிப்பா. மக கிட்டவே என் வாய் எடுபடாது, மருமககிட்ட பேச முடியுமா… உங்கண்ணன் வரைக்கும் கொண்டு போய் பெரிய பிரச்சனையாக்குவா… அவனும், உன்னை எதாவது சொன்ன?… அதான் நான் எம் பேத்திக்கு ஒரு அடிய போட்டேன். எம் பேத்திக தான, எனக்கு உரிமை இல்லையா…” என்ற தாயின் விளக்கம் அவளுக்கு ஏறவே இல்லை. தங்களின் இழி நிலை தான் கருத்தில் நின்றது.
அடுத்த நாள் மதியம் பிள்ளைகளை உறங்க வைத்து அமர்ந்திருந்த சரண்யாவை அவள் அக்கா அழைத்தாள். சமீப காலமாக அவளுக்கு பல அலைகழிப்பு மனதில் இருக்க சோர்வோடு தான் நடந்து சென்றாள். வீட்டில் எல்லா உறுப்பினர்களும் இருக்க, விசயம் பெரிது என்று கண்டு கொண்டாள். யாருக்கு பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு இருந்தார்கள்.
ஆக, விசயம் பெரியது. அதுவும் தன்னை பற்றியது தான் என்று புரிந்தது. பிரியாவே வாய் திறந்தாள்,
“உன் நல்லதுக்குன்னு நாங்க ஒரு விசயத்தை யோசிச்சு இருக்கோம்…” என்று தயங்கி நிறுத்த
அப்போதும் சரண்யா வாய் திறந்தாள் இல்லை.
“தேனி போற ரோடு இருக்குல சரண். அங்க ஒரு ஹாஸ்டல் இருக்கு. சின்ன குழந்தைக்காக தான் நடத்துறாங்க. ஒரு வயசு பிள்ளைக கூட இருக்கு. நல்லா பார்த்துப்பாங்க, கொஞ்சம் தள்ளி அவங்க ஸ்கூல் இருக்கு. நல்ல ஸ்கூல் தான். அஜி, விஜி பத்தி எந்த கவலையும் வேண்டாம். நாங்க நல்லா விசாரிச்சுட்டோம். உம் பிள்ளைகளை அங்க கொண்டு போய் விடுவோம்…”
கோபம், எதிர்ப்பு என்று எதையும் காட்ட வில்லை.
“அவங்களை விட்டு நான் தனியா எப்படி இருப்பேன்…” நிதானமாக வந்தது வார்த்தைகள். இதற்கு பதில் அவள் அண்ணன் இடம் இருந்து வந்தது.
“உனக்கு சின்ன வயசு தான் சரண். இந்த பிள்ளைகளோடு உன் வாழ்க்கை முடிய போறது இல்லை. நீ எங்க தங்கச்சி, உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை எங்க பொறுப்பு. அதுக்காக பிள்ளைகளை அப்படியே விட சொல்லலை. நாம எல்லாரும் இருக்கோம், நல்லது செய்வோம். அப்பப்ப போய் பார்த்து, தேவையானத வாங்கி கொடுப்போம். நாம எல்லாம் பக்கத்தில தான இருக்கோம்…” என்ற அண்ணனின் வார்த்தை பல விசயங்களை அவளுக்கு தெளிவு படுத்தியது.
“எனக்குன்னு தனிப்பட்டு எந்த வாழ்க்கையும் இல்லை அண்ணா… எம் வாழ்க்கையே எம் பிள்ளைக தான்…” என்றவள் நிற்காமல் உள்ளே செல்ல போக…
“உன் வாழ்க்கை உம் பிள்ளைக தான். அவங்களுக்கு நீ என்ன வாழ்க்கைய அமைச்சு கொடுக்க முடியும். உனக்கே ஒன்னும் தெரியாது, ரெண்டு பிள்ளை பெத்தும் எல்லாத்துக்கும் அம்மா, அப்பா தான் வேணும். உன்னால அவங்களுக்கு என்ன நல்லது நடக்கும். அந்த ஆசிரமத்தில வெளிநாட்டுகாரங்க உதவி செய்றாங்க… நல்லா இருக்கு. உங்க வீட்டு ஆளுக சொல்றதுக்கு பேசாம சரின்னு சொல்லு…” நிதர்சனமாக பேசினாள் திவ்யா.
பதில் சொல்லாமல் உள்ளே சென்று விட்டாள் சரண்யா. தவிப்பாக பார்த்த பெற்றோரை கண்ட சுரேந்தர்,
“ விடுங்கப்பா, சரண் கொஞ்சம் யோசிக்கட்டும். காலத்துக்கும் நாம வச்சு பார்க்க முடியாது. சரண்க்கும் ஒரு நல்ல வாழ்க்கை வேணும். அழுகட்டும் விடுங்க, பெத்தவ இல்லையா வலிக்க தான் செய்யும். அழுதாலும் நம்ம பேச்சுக்கு சரின்னு சொல்லட்டும்…”
“உங்க காலம் எவ்வளவு நாளைக்கு, கடைசி வர நீங்க பார்க்க முடியுமா… பிள்ளைகளோடு சேர்த்து தான வரன் பார்த்தோம் ஒன்னும் அமையலை. உங்க பிள்ளையோட வாழ்க்கைய மட்டும் யோசிங்க…” என்றாள் பிரியா. உள்ளே இருந்த சரண்யாக்கும் கேட்க தான் செய்தது.
இரவு உணவுக்கு கூட வெளியில் வரவில்லை சரண்யா. அவள் யோசிக்கட்டும் என்று எல்லோரும் தள்ளி தான் நின்றார்கள். பிள்ளைக்கு மட்டும் தான் உணவு கொடுத்தாள். தூக்கத்திற்கு சிணுங்கி பிள்ளைகளை உறங்கவும் வைக்க வில்லை. மகள்களை மடியில் அமர்த்தி யோசித்து கொண்டிருந்தாள்.
யார் மீதும் அவளுக்கு கோபமில்லை. கோபப்பட என்ன தகுதி இருக்கு… பெற்றவள் தான் பிள்ளைகளை பார்க்க வேண்டும். அடுத்தவர் மீது தன் பொறுப்பை கடத்தினால், அவர்கள் எவ்வாறு சுமப்பார்கள். முட்டாள் சரண்யா நீ… உன் பிள்ளையை நீ தான் வளர்க்க வேண்டும். வேற ஒருவரின் துணையை, உதவியை நாடினால். அவர்கள் பழுக்க கொடுக்க தான் செய்வார்கள். வலிக்குதே என்று அழுவதால் பயன் இல்லை. இரு பெண் குழந்தைகள் பொறுப்பு என்பது சாதாரணம் இல்லை. அதனால் தான் அவள் சொந்தமே முன் வர வில்லை. தங்களின் நிலை தெளிவாக புரிந்தது.
இரு பெண் குழந்தையோடு மறுமணம் என்பது சாத்திமில்லாத ஒன்று. தனியாக நிற்கும் அளவுக்கு படிப்போ, பொருளாதார திடமோ அவளிடம் இல்லை. அவள் காலத்திற்கும் அவர்கள் கை பிடியில் தான். அதனால் தான் அவள் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள். அவளின் பிள்ளைகள் பொறுப்பை ஏற்க முன் வர வில்லை. எப்படி வருவார்கள்?… தற்போது இருக்கும் போட்டி நிறைந்த உலகில் தங்களின் பிள்ளையை வளர்த்து படிக்க வைப்பதே சிரமமாக இருக்கும் காலத்தில் உடன் பிறந்தவளின் பிள்ளையை யார் பார்ப்பது?… பெண் பிள்ளை வளர்ப்பு சாதாரணம் இல்லையே. மறுமணம் செய்ய வருபவர்களும், இரு பெண் குழந்தைகள் எனும் போது பின் வாங்கி விடுகிறார்கள். அப்படி யோசிக்கும் போது இந்த முடிவு எல்லோருக்கும் நலமாக தான் இருந்தது.
ஆனால், பெற்றவள்… அவளுக்கு அல்லவா பதறி துடித்தது. இனி இவர்கள் விடமாட்டார்கள். தான் ஒரு முடிவு எடுத்தாக வேண்டும். அவர்கள் சொல்வது போல் பிள்ளைகளை ஆசிரமம் அனுப்புவது எல்லா ஒரு நாளும் நடக்காது. ஆம், அது ஆசிரமம் தான். சரண்யாக்கு அந்த ஆசிரமம் நன்கு தெரியும். தாய் இல்லா பிள்ளைகளை அங்கு கொண்டு வந்து விடுவார்கள். தந்தை இல்லை என்று வருபவர்கள் அரிது தான். தாய் இருந்தால் போதும் எப்படியும் பிள்ளையை வளர்த்து விடுவாள்.
அன்று இவர்கள் சொல்லிய உடன் கணவனையே விட்டு வந்தவள், பெற்ற பிள்ளைகளையும் விட்டு விடுவாள் என்று எவ்வாறு நினைத்தார்கள். தான் பெற்ற பிள்ளைகளை விட்டு தனக்கென்று ஒரு வாழ்வா!… அதில் என்ன இருக்கும். என் பிள்ளை பசியில் வாட, தான் எவனோ ஒருவனோடு புது வாழ்வு வாழ்வேனா… நிச்சயம் முடியாது. பெற்றவள் நான் இருக்கும் போது யாருமில்லை என்று ஆசிரமத்தில் ஏன் விட வேண்டும்.
ஒரு கணம் மனம் திடமாக நினைத்தாலும், மறுகணம் சோர்ந்து போனது. எவ்வாறு பிள்ளைகளை வளர்ப்பேன். தனக்கு சரியான படிப்பும் கிடையாது, எந்த வேலைக்கும் போக தெரியாது, யார் துணையும் இனி இருக்காது எனும் போது தன்னால் இரு பெண் பிள்ளைகளை வளர்க்க முடியுமா… இவர்களை பகைத்து கொண்டு இந்த வீட்டில் இருக்க முடியாது எனும் போது தனியாக வீடு பார்த்து, வேலைக்கு சென்று, பிள்ளைகளை படிக்க வைத்து என்று யோசிக்கும் போதே நெஞ்சில் பயம் கவ்வியது. மூன்றும் பெண்கள் தனியாக வாழ்க்கையை எவ்வாறு எதிர்கொள்ள, வீட்டை தாண்டாத தன்னால் எவ்வாறு நல்ல வாழ்க்கையை எம் பிள்ளைகளுக்கு அமைத்து தர இயலும்.
இந்த பரந்த உலகில் தாங்கள் மட்டும் தனியாக இருப்பது போல் மனம் மிரட்ட தொடங்கியது. நொடியில் முடிவெடுத்து விட்டாள். இந்த உலக வாழ்க்கை எங்களுக்கு போதும்…
பிள்ளைகளை பார்த்தாள் சரண்யா. பாதி தூக்கத்தில் கண்கள் சொருக விஜி இருக்க, தாயின் அரவணைப்பு இல்லாமல் தூங்க மாட்டேன் என்று அஜி இருந்தாள். மனதில் துக்கம் பொங்க…
“நமக்கு இந்த வாழ்க்கை வேணாம். யாருக்கும் பாரம் இல்லாம நாம செத்து போவோமா?…” தான் பெற்ற பிள்ளைகளை பெரிய மனிதர்களாக கருதி கேள்வி கேட்டாள் சரண்யா. மலங்க மலங்க விழித்து கொண்டு பிள்ளைகள் இருவரும் அழும் தாயைதான் பார்த்து இருந்தார்கள்.
மறுநாள் எல்லோரும் அதிசியம் பார்க்க செல்ல தயாராக. சரண்யா மட்டும் வரவில்லை, குலதெய்வ கோவில் போவதாக சொல்லி விட்டாள். அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து காட்டு பகுதியில் இருக்கும் அந்த கோவிலுக்கு வந்தடைந்தாள். மணி மதியம் இரண்டு, ஆள் அரவம் ஒன்றும் இல்லை. இந்த நேரத்தில் ஆள் இருக்காது என்று யோசித்து தான் வந்தாள். பிள்ளைகளுக்கு பிடித்த நெய் பருப்பை ஊட்டி விட்டு, கொஞ்ச நேரம் அங்கு விளையாட விட்டாள். மனம் நிர்மலமாக இருந்தது. எதையும், யாரையும் யோசிக்க வில்லை. அவளுக்கு பிடித்த வெங்காய கலர் சேலை அணிந்திருந்தாள். பிள்ளைகளை தூக்கி கொஞ்சினாள், மடியில் அமர்த்தி மார்போடு அழுத்தி பிடித்தாள். பிள்ளைகள் இருவரின் வாசனையை ஆழ்ந்து இழுத்தவள், பின் எழுந்து கொண்டாள்.
இரு பிள்ளைகளையும் முன் பக்கம் நிறுத்தி கை கூப்பி தன் வீட்டு தெய்வத்தை வணங்கியவள். அந்த ஒத்தையடி பாதையில் மெல்ல நடந்தாள். பிள்ளைகள் இருவரும் அழகான பேபி வண்ண உடை அணிந்து, கை பிடித்து தளிர் நடை போட்டது. பார்க்கையில் உள்ளம் பொங்கியது, வேண்டாம் மனமே எதையும் யோசிக்காதே…
சற்று தள்ளி இருந்த கிணற்று அருகில் சென்று விட்டவள், மெதுவாக எட்டி பார்த்தாள். சுற்றியும் மஞ்சநத்தி, கருவேல மரம் சாய்ந்து கிடந்தது. தண்ணி பச்சை நிறமாக இருட்டு கட்டி இருக்க, நெஞ்சு முழுக்க பயம் தான். தன்னை திடப்படுத்தி கொண்டு திரும்பி பார்க்க, தாயை ஒட்டி வந்தாள் அஜிதா. நெஞ்சில் வேதனை தான். தன்னிடம் இருந்து வெளி வந்த முதல் மகவு. வேதனை பொங்க பிள்ளையை தூக்கினாள், சாவின் விளிம்பில் நிற்கிறோம் என்ற உணராத குழந்தை தன் தாயை பார்த்து பல் தெரிய சிரித்தது.
சரண்யா திரும்பி சுற்றும், முற்றும் பார்த்தாள். எவ்வளவு தடவை டிவி, பேப்பரில் பார்த்திருக்கிறாள். தாய் பிள்ளைகளை கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டாள் என்று… அப்போது எல்லாம் தோணும், பெற்ற தாயே எப்படி பிள்ளையை கொள்வாள் என்று… இன்று தெரிகிறது, அவரவர் சூழல் எப்படியோ!…
அஜி குட்டியை தூக்கி கிணற்றுக்கு மேல கொண்டு வந்தாள். இரு பிள்ளைகளையும் முதலில் தூக்கி போட்டு பின்னாடி தானும் குதித்து விட வேண்டும். நொடி யோசிக்க கூடாது. பிள்ளைகள் தனியாக கிடந்தது போகும். கீழ குனிந்து பார்க்க விஜி குட்டி தாயின் காலை கட்டி கொண்டு நின்றிருந்தாள். அஜிக்கு பயம் எல்லாம் ஒன்றும் இல்லை, தூக்கியது தாய் அல்லவா…
மெதுவாக கிணற்றை எட்டு பார்க்க, ஒரே இருட்டு. தன் கையை மெதுவாக தளர்த்த தொடங்க, அம்மா தூக்கி போட்டு விளையாட பார்க்கிறாள் என்று பிள்ளைக்கு சிரிப்பு பொங்கியது. அதை பார்த்து விஜி, “ அம்மா நானு…” என்க.
நெஞ்சை பிளந்தது போல் வலி பரவியது. “ஐயோ! சரண்யா… இப்படி பாதியில் தூக்கி போடவா, இடுப்பு எலும்பு உடையும் வலியை பொறுத்து கூட இவர்களை உலகிற்கு கொண்டு வந்தாய். உன் முன் துடித்து அடங்கவா, உன் உத்திரம் கொடுத்து வளர்த்தாய். உன் மகவின் கடைசி மூச்சு அடங்குவதை, நீ கண் கொண்டு பார்க்க போகிறாயா!… உன்னை மட்டும் நம்பி வந்த இரு உயிர்களை அழிக்க போகிறாய்…” மனம் குத்தி எடுக்க, கையை கீழ விடவே முடியவில்லை. கொஞ்சம் தளர்த்தினால் போதும் எல்லாம் முடிந்து விடும். தளர்த்த தான் முடியவில்லை.
பிள்ளையை கீழ இறக்கி விட்டவள், இருவரையும் மார்போடு அணைத்து கொண்டாள். அழுகை தான் அப்படி ஒரு அழுகை. வாழ்நாளில் இந்த மாதிரி என்றும் அழுதது இல்லை. இருவரையும் சேர்த்து பிடித்தவள், திரும்ப நடக்க தொடங்கினாள். திரும்பி பார்க்கவே இல்லை.
எனக்கு என் பிள்ளைகள் இருக்கு, என் பிள்ளைக்கு நான் இருக்கேன். வேற யார் துணை வேண்டும். எந்த வேலை செய்தும் பிள்ளையை வளர்த்து விடுவேன். என் கண் முன்னே மட்டும் சாக கொடுக்க மாட்டேன். என் வாழ்வு என் பிள்ளைகளோடு தான். இனி எல்லாவற்றையும் போராடி தாண்டி வருவோம். என் பிள்ளைகளுக்காக தானே சாக போனேன். இப்போ என் பிள்ளைகளுக்காக வாழ்ந்து தான் பார்ப்போம்…