சரண்யா தனியே செல்வதை அவள் வீட்டில் யாரும் அனுமதிக்கவே இல்லை. வேலைக்கு செல்வதை கூட ஒரு மாதிரி ஏற்று கொண்டவர்களுக்கு, தனிக்குடித்தனம் அவ்வளவாக மனம் ஒப்பவில்லை. இரு பிள்ளைகளை வைத்து தனியே எவ்வாறு இருப்பாள், அவளே ஒரு பயந்தவள்… எடுத்து கூறியும் சரண்யா கேட்டு கொள்ள வில்லை.
அவள் மனம் கொண்ட யோசனை ஒன்று தான். இரு பெண் பிள்ளைகளின் தாய். அவர்கள் வாழ்க்கையை நீ தான் பார்த்து கொள்ள வேண்டும் எனும் போது, வேற யாருடைய நிழலிலும் அடைக்கலம் தேடாதே… இன்று தயங்கி நின்றாள், நாளை உன் மக்களின் எதிர்காலத்திற்கு துணிந்து நிற்பது எவ்வாறு?…
புது வீடு மாடியில் இருந்தது. சின்ன வீடு தான், ஆனால் கச்சிதமாக இருந்தது. ஒரு பெரிய அறை மட்டும் தான். பாத்ரூம் வெளியில் இருந்தது. தனியே அடுப்படி, பெட்ரூம் எதுவும் கிடையாது. வாடகை ரொம்பவும் கம்மி என்பதால் செலவு சரண்யா கைக்குள் நிற்கும். பிள்ளைகள் வயதுக்கு வந்தால் பெட்ரூம் இருப்பது போல வீடு பார்த்து கொள்ளலாம் என்று ஒரு எண்ணமும் உண்டு. அதுவரை யோசித்து தான் செயல் பட்டாள் சரண்யா. ஒற்றை அறை என்பதால் நான்கு பக்கமும் காற்றோட்டம், அந்த பெரிய அறையிலே இரண்டு பக்கமும் வாசபடி இருந்தது. முன்பு அவர்கள் புழக்கத்துக்கு இருக்கும் போது பின் பக்க படி வழியாக வந்து உபயோகித்தார்கள். தற்போது வீட்டை எடுத்து கட்டி முன் பக்கம் மாடி படி விட்டு, புது வாசல் ஒன்றை வைத்திருந்தார்கள். பின் பக்க மாடி படி ஓனர் வீட்டோடு இணைந்தது. முன் பக்க மாடிப்படி சரண்யா உபயோகித்து கொண்டாள்.
அவள் வீட்டில் இருந்து பெரிய அளவிலான பொருட்கள் எதையும் எடுத்து வரவில்லை. தற்போது புழங்கும் பாத்திரங்கள் மட்டும் தான். இவளுக்கு கொடுத்த சீதனம் எல்லாம் திவ்யா புழங்கி விட்டாள். அதையெல்லாம் கேட்டாள் முழுதாக வெட்டி கொள்ளும் நிலை வரும் என்பதால் பிள்ளைகள் பெரிதான பின்பு அவளுக்கு உரிய சீர், நகையை புதிதாக வாங்கி கொள்ளும் எண்ணம் இருந்தது. ஆனால், விட்டுவிட மட்டும் நினைக்க வில்லை.
அகிலா மூலமாக பிள்ளைகள் பள்ளிக்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கி கொண்டாள். நாளை முதல் பிள்ளைகள் பள்ளிக்கும், இவள் வேலைக்கும் ஓட வேண்டும். தனியாக இந்த சமூகத்தை இரு பெண் பிள்ளைகளின் தாய் என்ற ரீதியில் அணுக வேண்டும். கொஞ்சம் பயம் தான். ஆனால், துணிந்து தான் நின்றாள்.
திங்கள் கிழமை காலை பரபரப்பு கூடியது. தனக்கு வேலைக்கும், பிள்ளைகள் பள்ளிக்கும் முதல் நாள். நான்கு தெரு தள்ளி தான் பள்ளி, நடந்து தான் கூட்டி சென்றாள். பள்ளி வேன் வரும் தான். ஆனால், அதற்கு தனியாக பணம் வேண்டுமே… அந்த தெருவில் மற்ற பிள்ளைகளும் நடந்து செல்லுவதால் பெரிய வேறுபாடு இல்லாது பிள்ளைகளை நடந்தே கூட்டி வந்து விட்டாள்.
ஆசையாக வந்த பிள்ளைகள், தாய் தங்களை தனி அறையில் விட்டு செல்கிறாள் எனவும் அழுது ஆர்பாட்டம் செய்ய தொடங்கியது. அஜி கழுத்தை கட்டி கொண்டு விடவே இல்லை. பிள்ளைகள் இருவரின் அழுகை, சரண்யாக்கு அங்கமெல்லாம் பதறியது. பள்ளியின் முதல் நாள் எல்லா குழந்தைகளும் அப்படி தான் என்றாலும் அவர்களின் அழுகை இவளுக்கும் தொற்றி கொண்டது.
காலையில் விஜி பாத்ரூம் போகவில்லை. அவர்கள் இஷ்டத்திற்கு தூங்கி, எழுந்து விளையாடும் பிள்ளைகளுக்கு, நேர ஒழுங்கு இன்னும் வரவில்லை. அஜிதாக்கு ரொம்ப பயம் வந்தாள் துணியை ஈரம் செய்து விடுவாள். அதனால், இருவருக்கும் ஒரு மாற்று உடை எடுத்து வைத்திருந்தாள். அதையும் அவர்கள் வகுப்பு ஆசிரியர், ஆயம்மாவிடம் சொல்லி, பிள்ளைகளை கதற விட்டு தான் வந்தாள்.
பிள்ளைகளுக்கு புது இடம் என்பதால் பெற்றோர்கள் ஒரு வாரத்திற்கு மதியம் வரை உடன் இருக்கலாம். அதாவது, வகுப்பிற்கு வெளியே… தாய், தந்தையை பார்த்த பிள்ளைகள் ஓரளவு பயம் நீங்கி பழகும் என்பதால் தான். சரண்யாக்கும் ஆசை. அப்புறம் அவள் வேலையை யார் பார்ப்பது?
ஓட்டமும், நடையுமாக கடைக்கு வந்தாள். நான்கு பெண்களுடன், தேவி அக்கா இருந்தார். நல்ல விதமாகவே நடத்தி வேலையில் சேர்த்து கொண்டார். அவளுக்கு அது ஒன்று தான் கொஞ்சும் நிம்மதி. அகிலா உடன் சேர்ந்து சேலையை ரகம் பார்த்து பிரித்து அடுக்கி கொண்டு இருந்தாள். அவளையே பார்த்து நின்ற அகி, மெல்ல நெருங்கி வந்து,
“அடியே சரண்!… எப்ப உனக்கு கல்யாணம் ஆச்சு?. பார்த்தியா என்கிட்ட கூட சொல்லலை…” அவள் முகத்தில் கேலி இருந்தது.
சரண்யா தன் கழுத்தை பார்த்து கொண்டாள். அதில் ஒரு புது மஞ்சள் கயிறு மின்னி கொண்டு இருந்தது. அதை பார்த்து தான் அகிலாவின் கேலி,
பெருமூச்சு விட்டவள், “வேற என்னத்த பண்ண சொல்ற, இருந்த ஒத்தை சங்கிலியும் வித்து தான் வீட்டு அட்வான்ஸ், பிள்ளைகள் ஃபீஸ், பண்டபாத்திரம் வாங்கிட்டேன். மிச்சம் இருக்குறது பிள்ளைக படிப்புக்கு, அடுத்த டேர்ம்க்கு ஃபீஸ் கட்டனும். சம்பளம் எப்படின்னு தெரியலை, அதான் கொஞ்சம் எடுத்து வச்சேன். அத்தோட இந்த கயிறு பதினஞ்சு ரூபாய் தான். நம்ம பட்ஜெட்க்கு ஏத்தது. விலை கம்மினாலும், அதுக்கு மதிப்பு அதிகம் தான. கொஞ்சம் பாதுகாப்புக்கு, ஒரு மரியாதைக்கு… வெறும் கழுத்தா இருந்தா, எல்லாரும் உத்து பாக்குறாங்க…” என்ற அவள் விளக்கம் சரிதான்.
தாலி இல்லை வெறும் கயிறு மட்டும் தான். அது ஒருமாதிரி மரியாதையை கொடுத்தது. வெறும் கயிறு வயிறு வறுமையை காட்டும் தான். ஆனால், தவறான சொல், ஒரு நினைப்பு வராது அல்லவா… திருமணம் ஆனவள், இரு பிள்ளைகளின் தாய் என்ற கண்ணோட்டம் ஒரு நேர்த்தி, மரியாதையை கொடுக்கும். வெறும் கழுத்தாக, இரு பிள்ளைகள் இருக்க பார்ப்பவர்களுக்கு பல நினைப்பு வரும்.
மதியம் பன்னிரண்டு மணிக்கு பிள்ளைகள் உணவு வேளை என்பதால், தேவியே அவளை போக சொல்லி விட்டார். தேவி அம்மாக்கு பிள்ளைகள் இல்லை. இரு பிள்ளைகளோடு சரண்யா தனித்து நிற்பதை பார்த்து, அவளுக்கு சில சலுகையை கொடுத்தார். அதுதான் மதியமும், மாலையும் ஒரு மணி நேர இடை வேளை… அந்த நேரத்தில் பிள்ளைகளையும் கவனித்து, அவளும் உண்டு வேலைக்கு நேரத்திற்கு செல்ல வேண்டும். மதிய நேரம் என்பதால் தெருவில் ஆள் நடாட்டம் எதுவுமில்லை. உச்சி வெயிலோடு, எல்லா வீடும் அடைத்து கிடந்தது, டிவி சத்தம் மட்டுமே கேட்டது. ஆள் நடமாட்டம் இல்லை என்ற பின் எடுத்தாள் ஒரு ஓட்டம், பள்ளியின் முன் தெருவில் தான் வந்து நின்றாள். பலமாக மூச்சு வாங்கியது, அது பொருட்டல்ல… பிள்ளைகளுக்கு உணவு வேளை தொடங்கும் முன் வர வேண்டுமே. மற்ற பிள்ளைகளுக்கு தாய்மார் உணவு ஊட்டும் போது தன் பிள்ளைகள் வாய் பார்த்து நிற்க கூடாதே.
அழுது ஓய்ந்து, சோர்ந்து போய் கிடந்தார்கள் பிள்ளைகள். இவளை பார்த்ததும் தாவி அனைத்து கொண்டார்கள். அழுகை மட்டும் குறையவே இல்லை. பிள்ளைகளை சமாதானம் செய்து உணவை கொடுத்து, திரும்பவும் அழுக விட்டு தான் கடைக்கு ஓடி வந்தாள். அவள் வேலை செய்யும் கடையும், பள்ளியும் கொஞ்சம் தூரம் தான். ஒரு பாட்டில் தண்ணியை காலி செய்த பின் தான் சோர்ந்து போய் அமர்ந்தாள் சரண்யா. பார்க்கையில் அகிலாவுக்கே பாவமாக தான் தோன்றியது. தான் கொண்டு வந்திருந்த உணவை வேகமாக வாயில் அடைத்தது விட்டு, இரண்டு மணிக்கு சேலை பக்கம் ஒதுங்கி கொண்டாள். இனி ஆட்கள் வந்து விடுவார்கள் ஓய்வு இல்லை.
திரும்பவும் மாலை நான்கு மணிக்கு ஒரு அவசர ஓட்டம். மாலையில் பிள்ளைகள் ஓரளவு சமாதானம் ஆனது போல தான் தோன்றியது. அது கொஞ்சம் நிம்மதி. அவசரமாக வீட்டுக்கு வந்து பால் ஆத்தி பிஸ்கட் வைத்து கொடுத்து, உடம்பு கழுவி விட்டு, அவள் வீட்டின் பக்கத்து மாடியில் குடியிருக்கும் மீனா அக்காவிடம் டியுசனுக்கு விட்டு வந்தாள். வேற என்ன செய்வாள், அவள் கூட இருக்க முடியாது, கடையிலும் வைத்து கொள்ள முடியாது. பெண் பிள்ளைகள் தனியே விட முடியாது. ஒரு பாதுகாப்பு கருதி மட்டும் தான். நன்றாக பார்த்து கொள்வார்கள் என்று வீட்டு ஓனர் சொல்லி தான் சேர்த்து விட்டாள். இந்த விசயத்தில் மட்டும் செலவை யோசிக்க வில்லை. ஆனால், பிள்ளைகள் அழுகை மட்டும் குறையவில்லை. தாய் நாள் முழுக்க கூடவே இல்லை என்ற ஏக்கம் போல…
ராத்திரி ஒன்பது மணிக்கு தான் வந்தாள். முதல் நாள் என்பதால் கால் வலி உயிர் போனது. முட்டி, தொடை எல்லாம் இரத்தம் கட்டி கொண்டது போல் நல்ல வலி. மனம் பேசாமல் முடங்க சொல்ல, பிள்ளைகள் பசியை யார் பார்ப்பது. மாவு வாங்கி ஆளுக்கு இரண்டு தோசையை உள்ளே தள்ளி விட்டு, சுடு தண்ணீரில் உடம்பு கழுவியவல் பிள்ளைகளோடு முடங்கி கொண்டாள்.
முழுதாக ஒரு வாரம் ஆனது. அந்த இடம், சூழல், பள்ளி என்று எல்லாம் ஒரு ஒழுங்கமைப்புக்கு வர, வெளி ஆர்வம் கொண்ட விஜி தெளிந்து விட, இந்த அஜிக்கு மட்டும் அழுகை குறையவில்லை. அன்று சரண்யாவின் அக்கா ஊருக்கு செல்கிறாள். ஒரு பார்வை தங்கையை பார்க்க வந்திருந்தாள். சரண்யாவை பார்த்ததும் பிரியாவுக்கு கண்கள் கலங்கியது.
அந்த ஒற்றை அறையில் இரு பிள்ளைகளை வைத்து கொண்டு, எந்த பொருளும் இல்லாமல், வறுமையான வாழ்க்கை வாழும் தங்கை மேல் கோபம் கூட வந்தது. ஊர், உலகத்தில் விவாகரத்து ஆனா யாரும் திருமணம் செய்து கொள்வது இல்லையா… இவளுக்கு ஏன் இந்த பிடிவாதம். பெத்தவன் ஒதுங்கி கொண்டான். இவள் ஏன் தூக்கி சுமக்கிறாள். இவர்களை பொறுத்த வரை உரிமையானவன் வெற்றி தான். பிள்ளைகளை பார்க்கும் கடமை, பொறுப்பு எல்லாம் அவனுக்கு உரியது என்ற எண்ணம் தான்.
பிள்ளைகளை பார்த்தவள், இருவருக்கும் தனித்தனியே ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க… தடுத்து நிறுத்தினாள் சரண்யா.
“இவ்வளவு பணம் வச்சு செலவு செய்ற வயசு அவங்களுக்கு இல்லை…”
“பழச யோசிக்கிறையா சரண்?…” என்றாள் பிரியா.
“என்ன பழசு, நான் எதை யோசிக்கிறேன். பொதுவா தான் சொன்னேன். மூன்றை வயசு பிள்ளைகளுக்கு ஆயிரம் ரூபாய் ரொம்ப அதிகமான பணம். அதோட மதிப்பு அவங்களுக்கு என்ன தெரியும்…” நிர்மலமான முகத்தோடு தான் சொன்னாள். ஆனால், பார்த்திருந்த பிரியா, அவள் கணவன் இருவருக்கும் உள்ளே ஒன்றை வைத்து தான் பேசுகிறாள் என்று தோன்றியது.
“திவ்யா எப்படின்னு உனக்கு தெரியாதா சரண். எங்கேயும் தான் மட்டும் தான் உசத்தியா இருக்கணும்ன்னு நினைப்பா… அவளை மீறி ஏதாவது செஞ்சா குடும்பத்தை உள்ளுக்குள்ள இருந்தே பிரிச்சு விடுவா… நம்ம கூட பொறந்தவன் அவன் ஒருத்தன் தான். அவனை விட்டு ஒதுங்கி நிக்க முடியுமா சொல்லு…” என்று தன் பக்க விளக்கத்தை கொடுத்தாள் பிரியா.
மறுப்பு சொல்லாமல் அமைதியாகி கொண்டாள் சரண்யா. பெரும் தயக்கத்துடன் தான் விடை பெற்று சென்றாள் பிரியா.
அது வேற ஒன்றும் இல்லை. ஆரம்பத்தில் பிரியா தாய் வீட்டிற்க்கு வரும் போது எல்லாம் பிள்ளைகள் மூவருக்கும் பிடிக்காமல் தான் வாங்கி வந்தாள். சாத்வீக் என்னவோ அது தான் மற்ற இரு பிள்ளைகளுக்கும். ஆனால், திவ்யா சும்மா விடவில்லை.
“அது எப்படி அண்ணி எல்லாம் ஒன்னாகும். இந்த நிமிசம் வரைக்கும் வீட்டு பொண்ணுன்னு உங்களுக்கு எல்லா சீரும் செய்றோம். ஒரு முறையும் தவறல்ல, உங்க மாமியார் வீட்டு பக்கம் கூட நாங்க இழுத்து போட்டு செய்றோம். எம் மகன எப்படி ஒரே தராசில வச்சு எடை போடுவீங்க. நீங்க ஒன்னு செஞ்சா, ரெண்டா திருப்பி செய்யுற நாங்களும்… எதுவுமே செய்யாத அவங்களும் எப்படி ஒன்னாக முடியும். நீங்க எவ்வளவு பார்த்தீங்க், அதுல ஒன்னாவது உங்க தங்கச்சி திருப்பி செய்ய முடியுமா… அப்புறம் எப்படி எம் பிள்ளைக்கும், அவங்களுக்கும் ஒன்னாக முடியும். இனி நாங்களும் உங்க தங்கச்சி மாதிரி எல்லாம் வாங்கி மட்டும் வச்சுக்கணும் போல…” என்று கடுமையாக பேசி விட, ஒன்றும் சொல்ல முடியாமல் போனது. அன்று அழுது புலம்பிய சரண்யாக்கு, இன்று நிதானமாக யோசிக்கையில் தெளிவாக விளங்கியது.
சரண்யாக்கு அக்கா மீது பாசம் அதிகம். அக்கா பிள்ளைகளை வளர்த்தாலும், அத்தான் ஊருக்கு வரும் போது எல்லாம் அவர் உடைகளை முகம் சுழிக்காமல், வேறுபாடு நினைக்காமல் துவைத்து போட்டாலும் நிதர்சனம் வேறாகி போனது. பணத்தை அது கொண்டு வாழும் வாழ்க்கை வைத்து தான் உறவுகளின் மதிப்பு. பிடித்ததை சமைத்து தரும் தங்கையை விட, ஐயாயிரம் ரூபாய்க்கு புடவை எடுத்து தரும் தம்பி மனைவி உசத்தி தான் போல… எந்த உறவுக்கும் கொடுக்கள், வாங்கள் சரிசமமாக இருக்கும் போது தான் உறவு வலுப்படும். திருப்பி செய்ய முடியாத தங்கையை விட, சேர்த்து செய்யும் தம்பி குடும்பம் முக்கியத்துவம் பெற்றது. அதை தப்பாக சொல்ல முடியாது. ஆனால், பெரியவர்களின் வேறுபாடு பிள்ளைக்கு தெரியாதே, ஊரில் இருந்து வரும் ஒரு சொந்தமும் தங்களுக்கு எதுவும் வாங்கி வர வில்லை, தங்களை தூக்கி கொஞ்ச வில்லை, காரில் கூட்டு செல்ல வில்லை என்று ஏமாற்றம், ஏக்கம் நிரம்பிய முகத்தோடு சாத்வீக்கை உறவுகளை பார்த்து ஏங்கி போகும் பிள்ளைகள். இதுக்கெல்லாம் சேர்த்து தான் சரண்யா தனியாக சென்றது. வேலை விட்டு வந்ததும் மகனை தூக்கி போட்டு விளையாடும் மாமனை ஏக்கமாக அஜி பார்க்க, விஜியும் பைக்கில் குட்டி தம்பியை மட்டும் அழைத்து செல்லும் மாமனை ஏக்கம் சுமந்த முகத்தோடு கேட்டை பிடித்து கொண்டு பார்த்து நிற்பாள். இங்கு அவர்களுக்கு பெரிதாக ஏக்கம் இருக்குது. இங்கு இருக்கும் அனைவரும் அவர்களை போலவே கஷ்டப்படும் குடித்தன வீட்டு காரர்கள் தான். எல்லோர் வீட்டிலும் எல்லாம் இருக்காது. பெரும்பாலும் பிள்ளைகள் தெருவில் தான் விளையாடும், டிவி இல்லாத சரண்யா வீட்டிற்க்கு குறை தெரியாது. அங்கு ஒவ்வொண்ணிக்கும் சாத்வீக்கை பார்த்து ஏங்கும் பிள்ளைகள், இங்கு அதிகப்படியான ஆடம்பர விளையாட்டு பொருட்கள் யாரிடமும் இல்லை. அதனால், எளிதாக மற்ற பிள்ளைகள் உடன் கலந்து விடுகிறார்கள்.
அதிகாலை நான்கு மணிக்கே ஆளம் கரைத்து தயாராக வைத்திருந்தார் தனம். கிட்டத்தட்ட நான்கு வருடம் கழித்து வீட்டிற்க்கு வரும் தலை மகனை வரவேற்ற தயராகியது அந்த குடும்பம். வாசலில் கார் வந்து நிற்க, எல்லோருக்கும் பரபரப்பு தொற்றி கொண்டதுq எல்லோர் கண்களும் ஆவலாக காரை பார்க்க, இறங்கினான் வெற்றி வேல். வெளிநாட்டு வாசம் நன்றாக தெரிந்தது அவன் முகத்தில். முன்பே சிவந்த நிறம் கொண்டவன், தற்போது இன்னும் மெருகேறி இருந்தான். கொஞ்சம் தாடி, மீசை வைத்து வெள்ளை சட்டை ஜீனில் வந்து இறங்கிய மகனை கண்டு முகம் கொள்ள புன்னகையும், கண்ணில் நீருமாக வரவேற்றார் தனம்.
நீண்ட வருடம் சென்று தன் குடும்பத்தை பார்த்த மகிழ்ச்சி அவன் முகத்திலும் தொற்றி கொண்டது. அவன் வெளிநாடு செல்லும் போது தங்கைக்கு வரன் மட்டுமே பேசி முடித்து இருந்தார்கள். மூன்று வயது பையனுடன் தங்கையும், ஒரு வயது மகனுடன் தம்மி சக்தியும், தம் ஜோடிகளுடன் சேர்ந்து நின்றார்கள். எல்லோரையும் நலம் விசாரித்து முடிந்த பின் தன் அறையில் சென்று அடைந்து கொண்டான்.
குடும்பத்தார் அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டார்கள். முன்பு இருந்த நெருக்கம் குறைந்தது போல தோன்றியது. தந்தை வேல் முருகன் தான், “அம்புட்டு தூரம் இருந்து வந்து இருக்கான், அழுப்பா இருக்கும். ஏய்! தனம், கோழி கவுத்து வச்சையே, வா அதை புடிப்போம். காலையில எழுந்தா தம்பிக்கு எண்ணெய் விட்டு குடுக்கணும்…” என்று சொல்லி தனத்தை கூட்டி சென்றார்.
அண்ணனும், தங்கையும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டார்கள். அர்த்தமான பார்வை தான். அதில் பயம் மிகுந்து இருந்தது. காலை உணவு, சொந்தங்களின் நல விசாரிப்பு எல்லாம் முடிந்த பின், வெளியே காற்றாட அமர்ந்தவன் கவனத்தை கலைத்தார்கள் மாயா, சக்தியின் பிள்ளைகள். இருவரும் அங்கிருந்த பாயில் அமர்ந்து விளையாட, அவனுக்கு நினைவு சரண்யாவின் பின் சென்றது.
“தன் குழந்தையை வைத்து இருப்பாளா… நிச்சயம் பெத்து இருக்க மாட்டாள். என் மீது அவ்வளவு கோபத்தில் சென்றவள் ஆயிற்றே!… அவள் அண்ணனும் விட்டு இருக்க மாட்டான். அவள் வீட்டவர்கள் சொல்லி தானே சென்றார்கள்…” என்ற நினைப்பு ஓடும் போதே உள் மனம் குத்தியது.
“பிள்ளையை யோசித்து கூட சேர்ந்து வாழும் எண்ணம் அவனுக்கும் வரவில்லையே. குந்தைக்காக என்று ஒரு நொடியும் அவன் யோசிக்க வில்லையே. சரண்யா வேண்டாம், அது தான் அவன் தீர்மானம். கருவை கழிக்க அவனும் சம்மதம் கொடுத்தான் தானே… இதில் சரண்யாவை மட்டும் எவ்வாறு குற்றவாளி ஆக்க முடியும். அன்று இருந்த நிலையில் மனைவி சவகாசமே வேண்டாம் என்று தானே நினைத்தான். தன் இரத்த உறவை கூட அந்த நிமிடம் அவன் யோசிக்க வில்லை. எல்லாம் முடிந்து வெளிநாடு சென்ற பின், நிதானம் கிட்டும் போது தான் தன் குற்றம் புரிந்தது. ஆனால், பயன் என்னவோ பூஜியம் தான். அன்றில் இருந்து சரண்யா மனது ஓரம் ஒரு அரிப்பாக தொடர்ந்து கொண்டே இருக்கிறாள்…”
ஆகாய வண்ண பட்டு புடவையில், ஒரு தூக்கு நிறைய பால் பாயசம், அதிரசம், கை முறுக்கு என்று வெற்றிக்கு பிடித்த மாதிரி அடுக்கி கொண்டு தயங்கி தயங்கி வந்த அபியை, அவன் கவனிக்கவே இல்லை. அவன் எண்ணம் முழுக்க தொலைத்த பிள்ளை மீது தான் மையம் கொண்டு இருந்தது. தனம் தான் பார்த்து, “ வா வா அபி… உன் மாமனை பார்க்க வந்தியாக்கும்?…” என்று கேள்வி எழுப்ப.
அதில் நினைவு கலைந்தவன் நிமிர்ந்து அபியை பார்த்து அறிமுக சிரிப்பை மட்டும் உதிர்த்து விட்டு அறைக்கு உள்ளே சென்று விட்டான்.
அபிக்கு பெருத்த ஏமாற்றம். முகமே சுண்டி போனது. அவனுக்காக எல்லாரையும் எதிர்த்து எட்டு வருடம் தவம் கிடக்க, நொடியில் தள்ளி நிறுத்தி விட்டான். முழுதாக நான்கு ஆண்டுகள் கடந்த பின்னும் மனம் தெளிய வில்லையா?…
வெற்றி கட்டிலில் முடங்கி கொண்டான். அவன் மனம் என்ன எதிர்பார்க்கிறது என்றே அவனுக்கு தெரியவில்லை. அபியின் காதல் நிச்சயம் அவனை அசைக்கிறது தான். ஆனால், காதலிக்கும் போது அவனில் இருந்த ஒன்று தற்போது இல்லை. தனக்காக காத்திருக்கும் பெண்ணை கை பற்றவும் முடியவில்லை, விலகி ஓடவும் தெரியவில்லை. அபி அவனை பிடித்து தான் வைக்கிறாள். உனக்காக நான், உனக்காக மட்டுமே நான், மாற மாட்டேன் என்னும் அவள் வைராக்கியம் தான், மனைவியாக சரண்யா தன் வாழ்வில் வந்த பின்னும் தெளிவில்லா நிலையில் இருந்தான்.
காதலித்தவளுக்கு துரோகம் செய்து, வேற பெண்ணை மணம் முடித்தவன் என்ற குற்ற உணர்வில் சுத்தியவன். இன்று கட்டிய மனைவியை ஒதுக்கி, கை தூக்க வேண்டிய பிள்ளையை கருவிலே இழந்து என்று முழு குற்றவாளியாக வாழ்கிறான். அவன் நேர்மையே அவனை குற்றம் சுமத்த, அபியை போன்று காதல் கை கூடி விட்டது என்று மகிழ முடியவில்லை.
“அய்யா வெற்றி!… என்னையா சோர்ந்து போய் கிடக்க. உடம்பு முடியலையா…” என்று தாய் கேட்க.
இல்லை என்று தலையாட்டினான்.
“நம்ம புது வீட்டை ஒரு எட்டு போய் பார்த்துட்டு வா வெற்றி. இன்னும் நீ நேர்ல பார்க்கவே இல்லை…” என்று தாய் வாஞ்சையாக சொல்ல. மனம் இறுகி போனான் வெற்றி.
அவனின் சொந்த உழைப்பில் இடம் வாங்கி, அகலமா விஸ்தாரமாக கட்டிய புது வீடு. அவன் தான் எல்லாவற்றையும் பார்த்து தேர்வு செய்தது. ஆனால், அதை சென்று பார்க்க மனம் ஒத்துழைக்க வில்லை. வீட்டின் மேல் வேலை போய் கொண்டு இருக்கிறது. வெற்றியோடு அபியை அந்த வீட்டில் குடி வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அந்த பேச்சு தான் முள்ளாக குத்தியது.
இந்த இடம் வாங்கி பத்திரம் முடிக்கும் போது சரண்யா அவன் மனைவி. அப்போது முப்பத்தைந்து நாள் கரு அவள் வயிற்றில். புது பெண் பூரிப்பு பொங்க, அவளின் பிள்ளை வயிற்றை சேலையால் மறைத்து அவனோடு சேர்ந்து தம்பதிகளாய் பூஜை செய்தார்கள். திருமணம் முடிந்த ஒரு மாதத்திலே குழந்தை, கணவன் பெயரில் சொந்த இடம் என்று நல்லதாகவே நடக்க, முகம் கொள்ள புன்னகையோடு அவனை ஒட்டி நின்ற சரண்யாவின் முகம் உள்ளே குத்தியது. இந்த வீட்டை பற்றிய கனவுகோட அவளுக்கு உண்டு. இன்று எல்லாம் எதிராக நிற்கிறது. மனம் கசங்க தலையை பிடித்து கொண்டு படுத்து விட்டான்.
சரண்யாக்கு அன்று வார விடுமுறை. இவளுக்கு மட்டும் ஞாயத்து கிழமை விடுமுறை எடுத்து கொள்வாள். மற்றவர்கள் வார நாளில் தான் எடுக்க முடியும். சிறு பிள்ளைகள் இருப்பதால், இவளுக்கு கொஞ்சம் சலுகை. பத்து மணி வரை பிள்ளைகளை அனைத்து கொண்டு படுத்து கிடப்பவள். பின் கறி எடுத்து சமைத்து, பிள்ளைகள் உடன் சேர்ந்து விளையாடி என்று அந்த பொழுதை நன்றாக கழிப்பார்கள். அவள் நினைவில் கூட வெற்றி வேல் என்ற ஒருவன் கிடையாது.