சரண்யாக்கு காலையில் எழும் போது இருந்தே மனது சரியில்லை. இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து பெரிய பிரச்சனை என்று எதுவும் கிடையாது. நடுத்தர வர்க்க மக்களின் வாடகை வீட்டில் வரும் சில பிரச்சனைகள் மட்டும் தான். அதிலும் பெரும்பாலும் சரண்யா ஒதுங்கி கொள்வாள். வீண் பேச்சு பேசுபவர்களிடம் கூட வாய் திறக்க மாட்டாள். தனியாக இருக்கிறோம், சுற்றி இருப்பார் ஆதரவு தேவை என்று எல்லோரையும் அனுசரித்து, சில நேரம் ஒதுங்கி கூட சென்று விடுவாள்.
தற்போது வரை எந்த பிரச்சனையும் இல்லை தான். ஆனால், சில நாட்களாக பிள்ளைகள் டியூசன் செல்லும் அமுதக்கா கணவர் பேச்சு சரியாக படவில்லை. இரு பொருள் கொண்ட உள் அர்த்த சொற்களாக வார்த்தைகளை விடுகிறார். இவள் இல்லாத நேரம் பிள்ளைகளை பார்ப்பது அமுதக்கா தான் என்பதால் முகத்திலாடித்தது போல் பேச முடியவில்லை. வெளிப்படையான பேச்சு இல்லாமல் மறைமுக பேச்சாகவே இருக்க, குழப்பம் தான் மிஞ்சியது. அவசரப்பட்டு வார்த்தையையும் விட முடியாது. இவர்கள் இந்த தெருவில் பல வருசமாக இருப்பவர்கள். இவள் புதிது… இவள் பேச்சு எந்தளவிற்கு எடுபடும் என்று தெரியாமல் பிரச்சனையை இழுக்க விருப்பமில்லை. இவளின் அமைதி அவருக்கு ஊக்கம் கொடுத்ததோ, அதிகப்படியான பார்வை, உரசல் என்று பெரிய மன உளைச்சல் தான்…
வெற்றி காலையிலே வேலையாக மதுரை வந்து விட்டான். அபியை தன்னுடன் அழைத்து வரவில்லை. திருமண பேச்சு சுத்தமாக ஈடுபாடு இல்லை. உனக்காக தான் நான் காத்து நிக்குறேன் என்ற அபியின் நடத்தை தான் அவனை பதம் பார்க்கிறது. சுற்றம், சொந்தம் என்று எல்லோருக்கும் தெரியும் அபி காத்திருப்பது வெற்றிக்காக தான் என்று…
ஏற்கனவே திருமணம் ஆனவன். முதல் தாரம் வாழாமல் சென்று இருக்க, இரண்டாவது தாரமாக ஒரு பெண், அதுவும் அழகான, படித்த பெண் மனம் முடிக்க முன் வருவது பெரிய விஷயமாக தான் தோன்றியது. நடந்த பிரச்சனை அவளை கொண்டு தான் என்றாலும், அவள் மட்டுமே காரணம் அல்ல. விதியால் தான் தன் காதல் கை கூடி வந்ததாக அபிக்கு ஒரு எண்ணம். நன்றாக வாழும் கணவன், மனைவியை தான் பிடிக்க வில்லையே. அவர்களாக வாழாமல் பிரிந்து சென்றால் தான் எப்படி அதுக்கு பொறுப்பாக முடியும். தனியாக நிற்கும் வெற்றிக்கு என்றேனும் ஒரு நாள் திருமணம் ஆகும். அது ஏன் தன்னோடு என்று இருக்க கூடாது… எப்படி ஒரு யோசனையில் தான் அபி, வெற்றியை திருமணம் செய்ய தீர்மானமாக இருந்தாள்.
அத்தோடு அவளுக்கு மிக நன்றாக தெரிந்த ஒன்று வெற்றிக்கு, அவன் மனைவி சரண்யா மீது துளி கூட காதல் இல்லை. அவனின் காதல் மனதிற்கு முழு சொந்தக்காரி அபிராமி மட்டுமே. அது நன்றாக தெரிந்து தான், அவள் தைரியமாக முன் நின்றது. தற்போது வரை அவன் மனதில் இருப்பது குற்ற உணர்ச்சி தான். அதை சரி செய்து விடலாம் என்பது தான் அபியின் எண்ணமே. அந்த நம்பிக்கையில் தான் காரியத்தை திருமணம் வரை முன்னெடுத்தது.
மாலை நான்கு மணி போல் பெரியார் வந்த அபி, அங்கிருந்து வெற்றிக்கு போன் செய்தாள். அவனுக்கும் அங்கு தான் ஒரு கடையில் வண்டியை சர்வீஸ் விட்டவன். ஒரு பெருமூச்சு விட்டு அவளுக்கு பதில் சொல்லி, தான் இருக்கும் இடத்தை சொன்னான். அவன் சொன்ன இடத்தை தேடி பிடித்து அபி வந்து நிற்க, பெரிதான வரவேற்பு எல்லாம் அவனிடம் இல்லை. ஒரு தலையசைப்பு மட்டும் தான்.
அதுவே அவன் பிடித்தமின்மையை காட்ட, முகம் சுருங்கியது அபிக்கு. தான் தேவையில்லாமல் இழுத்து பிடிக்கிறோமோ என்ற எண்ணம் தோன்ற மனமெல்லாம் ஒரே பதட்டம். இல்லை, நான் பின் வாங்க மாட்டேன். எந்த ஊர் முன் என் பெயர் இவன் பெயரோடு சேர்ந்து கெட்டதோ, அப்போ அவனே தான் என் கணவன். இவனோடு தான் என் பெயர் ஊர் முழுக்க பேசு பொருள் ஆனது. பின் இவனை தாண்டி வேற எதுவுமில்லை. என் காதல், என் உரிமை தோற்று போக நான் விட மாட்டேன்.
மனதை நிலைப்படுத்தி சில ஜவுளி கடை பெயரை சொல்லி அழைத்தாள். ஆச்சர்யம் தான் வெற்றிக்கு, அவனுக்கு தெரியும் அபி ரொம்பவும் ரோசம் பார்ப்பாள் என்று… தன் பிடித்தமின்மையை முகத்தில் காட்டியும், தன் முடிவில் உறுதியாக நிற்பவளை தடுக்கும் மார்க்கம் தெரியவில்லை. புரிந்து கொள்வாள் என்று நினைக்க, புரிந்தாலும் நான் இப்படி தான் என அபிராமி நிரூபித்தாள்.
உடைத்து பேசவும் பயம். ஏற்கனவே தற்கொலை வரை போய் எல்லாரையும் ஒரு ஆட்டு ஆட்டி விட்டாள். அன்று இருந்த சூழலை ஒரு நாளும் மறக்க முடியாது. ஒரு உண்மையுள்ள ஆண் மகனாக கட்டிய மனைவிக்கு துணை நிற்காமல்… அவ்வளவு ஏன் மாசமாக இருக்கும் மனைவியை நிமிர்ந்தும் பார்க்காமல், சுற்றம் பார்க்க காதலிக்கு துணை நின்று போனான். அன்று சரண்யா அவனை பார்த்த பார்வையை சாகும் வரை மறக்க முடியாது.
தப்பு எல்லாம் சரண்யா பக்கம் என்று திருப்பி விட்டாலும், அவன் உள் மனம் அறியும். ஒரு மனைவியாக அவள் எதிர்பார்ப்பு சரியே என்று… குத்துகல் மாதிரி மனைவி தான் நிற்க, யாரோ ஒருத்தி உடன் கணவன் ஏன் நிற்க வேண்டும். அதுவும் தோல் அணைத்து கொண்டு… சரண்யாவை பொறுத்த வரை அபிராமி யாரோ ஒருத்தி தான். அவளோடு தன் கணவனுக்கு என்ன வேலை, இது தான் அவளின் நியாயமான கோபம்.
ஆனால், காதல் கொண்ட மனம் நியாயத்தை நினைக்க வில்லையே. முழுதாக நான்கு வருட காதல் தான் அன்று கண் முன் நின்றது. நான்கு மாதங்களுக்கு முன் வந்த மனைவி அவன் கருத்தில் கூட படவில்லை. அபிக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்த வெற்றி தான். சரண்யாவின் நம்பிக்கையை மொத்தமாக அழித்து விட்டான்.
சரண்யாவும் அந்த நாளை மறக்க மாட்டாள். ஒரு பெண்ணுக்கான மரியாதை என்பது தொங்க தொங்க தாலியும், வயிற்றில் சுமக்கும் பிள்ளையும் அல்ல… அவள் கணவனின் மனதில் மனைவியாக அவள் இருக்கும் இடம் தான் அவளுக்கான மரியாதை என்பதை வலிக்க கத்து கொடுத்தது காலம். வெற்றியின் மனைவியாக, அவன் பிள்ளையின் தாயாக நாலு மாத கருவை சுமக்கும் தன்னைவிட யாரோ ஒரு அபிராமி முக்கியத்துவம் பெற்றால், இனி வாழ்ந்து என்ன பயன். தன் மனமே தன்னை காறி துப்பிய உணர்வில் ஒதுங்கி கொண்டாள் பெண்.
அபி கையில் எடுக்கும் தற்கொலை என்ற ஆயுதம் தான் வெற்றியின் பயம். இருவரும் அவரவர் யோசனையிலே முன்னே நடக்க, எதிரே வரும் சரண்யாவை கவனிக்க மறந்தார்கள். சரண்யாவும் இவர்களை கவனிக்க வில்லை. கூட்ட நெரிசல் என்பதை விட நேரத்திற்கு சென்று பிள்ளைகளை அழைத்து வர வேண்டும். பின் திரும்பவும் ஓட்டமாக ஓடி வேலைக்கு வர வேண்டும். அந்த அவசரம் மனதில் நிற்க, ஏறெடுத்து பார்க்கவில்லை. முக்காடு போட்டு நடையிலேயே ஒரு ஓட்டம் வைத்து ஓடோடி பள்ளி வந்தாள்.
வெற்றியும் ஒரு சில கடை சென்று எதுவும் பிடிக்காமல் மாய சொன்ன கடைக்கு செல்லலாம் என்று அபியின் கட்டாயத்தில் தான் தேவி பொட்டிக் வந்தான். அப்போது தான் சரண்யா உள் நுழைந்து சேலை இருக்கும் பிரிவிற்கு சென்று நின்று, கொஞ்சம் மூச்சு விட்டாள்.
“ ஸ்கூல் விடுற நேரம், ரொம்ப கூட்டம் அகி…” என்று சொல்லியவாறு தண்ணியை எடுத்து தொண்டையில் சரிக்க, வந்து விட்டார்கள் அபியும், வெற்றியும்.
நேராக சேலை இருக்கும் பிரிவிற்கு வந்தவர்கள், துப்பட்டா கொண்டு முகம் துடைக்கும் சரண்யாவை பார்த்து அரண்டு போனார்கள். நிமிர்ந்து பார்த்த சரண்யாவும் யார் என்று கண்டு கொள்ள வில்லை. தினமும் எத்தனையோ பேர் வருவார்கள். அதில் ஒரு தம்பதி அவ்வளவு தான். ஒரு சின்ன எரிச்சல், “இப்போதுதான் வந்தேன், ரெண்டு நிமிசம் கூட உட்கார விடாம ஆள் வாராங்களே…” முனங்கி கொண்டு எழுந்து கொண்டாள்.
“வாங்க அண்ணே!… என்ன பாக்குறீங்க…” என்று சொல்லியவாறு மேலே அடுக்கி இருந்த சேலையை எல்லாம் எடுக்க,
அரண்டு போய் நின்று இருந்தான் வெற்றி. சத்தியமாக அவளை அங்கு எதிர்பார்க்கவே இல்லை. அத்தோடு அவளின் அழைப்பு, முகம் கசங்கியது. யாரோ என்று தான் பேசி கொண்டிருக்கிறாளா…
நம்பாமல் மீண்டும் அவளை தான் பார்த்தான். கொஞ்சம் பழைய சுடிதார், கழுத்தில் வெறும் மஞ்சள் கயிறு, அதே ஒல்லி உடல் வாகு, குட்டை முடி, கொஞ்சம் கருத்து இருந்தாள். ஏற்கனவே மாநிறம் கொண்டவள் தான். தற்போது வேலை கொஞ்சம் கருத்து தெரிந்தாள். முழுதாக நான்கு வருடம் கழிந்த பின்பும் பெரிதான மாற்றம் எல்லாம் அவளிடம் இல்லை.
வெற்றியை விட அதிக அதிர்ச்சியில் இருந்தது அபிராமி தான். பேயை கண்டது போல ஒரு படபடப்பு. ஏதோ ஒரு நம்பிக்கையில் முன்னெடுக்கும் போதெல்லாம் ஒரு தடங்கள். புலி வருது என்று பிரம்மை போய் உண்மையில் புலி தான் வந்து விட்டது. இத்தனை வருடம் இல்லாமல் இன்று ஏன் காண வேண்டும். அதுவும் தாங்கள் ஜோடியாக நிற்கும் போது… கடவுளுக்கு ஏன் தன் மீது கருணை இல்லை. மீண்டும் ஒரு போராட்டமா…
வெற்றிக்கு மனதில் ஒன்றுமே ஓட வில்லை. எந்த யோசனையும் இல்லை. பேசாமல் முகம் பார்த்து நின்றான். உண்மையில் எந்த உணர்ச்சியும் அவனில் இல்லை. நான்கு வருடம் கழித்து பார்க்கிறான். ஏதோ ஒரு ஆறுதல், ஒரு அமைதி. மெதுவாக அவளை அளவிட்டான்.
கழுத்தில் மஞ்சள் கயிற்றை தாண்டி ஒன்னும் இல்லை. கையில் வளையல் கூட இல்லை. நெற்றியில் குங்குமம் என்று எதுவுமில்லை. ஏதோ ஒரு பேருக்கு என்று கழுத்தில் மஞ்சள் கயிறு கிடந்தது. அதுவும் ஒரு ஒழுங்கு இல்லாமல். அதுவே சொல்லியது அது வெறும் கயிறு தான் என்று… தாலி, குண்டு, காசு என்று இருக்கும் தாலி கயிறு வேற மாதிரி தெரியும். இது ஏதோ சும்மா ஒரு பேருக்கு இருந்தது.
இதன் அர்த்தம் என்ன… தலை கிருகிருவென்று சுத்த, அங்கிருக்கும் சேரில் அமர்ந்தான் வெற்றி. வேற ஒரு திருமணம் ஆனா அறிகுறி எதுவும் தென்பட வில்லையே. அப்படியானால் என் குழந்தை… ஐயோ!… தலையை பிடித்து அமர, பதறி போனாள் அபிராமி.
வெயில் ஏறும் மாலை நேரம் என்பதால் கூட்டம் குறைவு தான். கடையில் சரண்யா, அகிலா மட்டும் தான் இருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் எதுவும் புரியவில்லை. கொஞ்சமும் இவன் தன் கணவன் என்று சரண்யா அறியவில்லை. அந்தளவிற்கு அறிமுகமில்லாதவன் ஆனான் கணவன்.
அகிலா தான், “வெயிலுல நடந்து வந்தா கொஞ்சம் கிறக்கமா தான் இருக்கும். இந்தாங்க கொஞ்சம் தண்ணிய குடிங்க…” என்று கொடுக்க, பார்த்து நின்றாள் அபி.
இது என்ன வெற்றியின் மனதின் வெளிப்பாடா… மனதில் பயம் கவ்வியது. பிடிவாதமாக மனதை திசை திருப்பி கொண்டாள். இவர்கள் வீட்டிலே பேசி குடித்த பின் யார் என்ன செய்ய இயலும். முன்பும் இவர்கள் வீட்டு முடிவின் படி தானே சரண்யா, இவன் மனைவி என்று ஆனாள். கொஞ்சம் திடம் கொண்டு சரண்யா புறம் திரும்பி பட்டு சேலை பார்க்கணும்…
“என்ன விலை?…”
வெற்றியை பார்த்து கொண்டே முப்பதாயிரம் என்றாள்.
பெரிய கஸ்டமர் என்று முகமெல்லாம் பல்லு தான் சரண்யா, அகிலா விற்க்கு.
நல்ல அடர்த்தி மெருன் கலர் சேலை நன்றாக இருந்தது. பார்த்ததும் பிடித்து விடும் கலர் தான். அடுத்து ஆரஞ்ச், அப்புறம் காப்பி கொட்டை கலர், கிளி பச்சை என்று எல்லாம் பளிச் நிறம் தான். யோசனையாக அபி பார்க்க,
“இந்த கலர் எல்லாம் உங்களுக்கு சூப்பரா இருக்கும். எங்களை மாதிரி கருப்பா இருந்தா தான் எடுக்காது எரிக்கும். உங்களுக்கு அம்சமா எடுத்து கொடுக்கும்…” என்ற சரண்யாவின் சொல் வெற்றியை காயப்படுத்தியது.
ஒரு முறை அவள் நிறத்தை குறைவாக எடுத்து சொல்லி இருக்கிறான். அதுவும் அபியுடன் ஒப்பிட்டு. அன்று அவ்வளவு காயப்பட்டவள். இன்று அதை ஆம், நான் கருப்பு தான் என்று எளிதாக எடுத்து கொண்டாள். வெற்றி நிமிர்ந்து மனைவி முகம் பார்க்க , கொஞ்சமும் சலனமில்லை. இது அவளின் ஆஸ்தான டயலாக், பல கஸ்டமர்கள் பிடித்தாலும் எடுக்க தயங்கி நிற்கும் போது, கூசாமல் ஐஸ் வைத்து விடுவாள். அதுவும் ஒரு பெண்ணோ, தன்னோடு ஒப்பிட்டு நீ தான் அழகு என்று சொல்லும் பொதுபெருமையாக தான் உணர்வார்கள். சரண்யாவிற்க்கு வேலை முடிய வேண்டும்,அவ்வளவு தான்.
வெற்றி அவளையே பார்த்து நிற்க, குறுகுறுப்பு தாங்காமல் திரும்பி நேர் கொண்டு ஒரு பார்வை தான் பார்த்தாள், எழுந்து கொண்டான் வெற்றி. அவளை போல் நேராக, நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை. ஆனால், ஒன்று தெளிவு கண்டான். அவள், சரண்யா, அவன் மனைவி… அவனை கண்டு கொண்டாள் என்பதை. நொடி நேர பார்வை தான். அதில் இருந்த சவால், நீ எனக்கு ஒரு ஆள் இல்லை. நீ என்னை சலனபடுத்தவும் இல்லை என்று நொடியில் காட்டி விட்டாள். தன்னை கணவனாக கண்டு கொண்டதோடு, கடந்தும் விட்டாள். அதில் அவள் தெளிவு.
தான் வீட்டிற்க்கு வந்தாலே, தன் பின்னவே சுற்றும் மனைவி நினைவு வந்தது. அவளுக்கு தன்னை தெரிகிறது என்று தெரிந்த நிமிடம் அபியோடு சேர்ந்து நிக்க மனம் வரவில்லை. அவளை விட்டு பத்தடி தள்ளி நின்று கொண்டான். கைகளில் எல்லாம் நடுக்கம். தான் தப்பு செய்ய வில்லை, தப்பானவனும் இல்லை…
யாரோ போல ஒதுங்கி கொண்டான். ஏதோ ஒன்றை கையில் எடுத்து அபி திரும்பி பார்க்க, அருகில் அவன் இல்லை. ரொம்பவும் தள்ளி நின்று இருந்தான்.
“மாமா…” என்று தொடங்கும் போதே…
“ உனக்கு பிடிச்சதை எடு, அப்படியே மாயாக்கு, ஜெயந்திக்கு, அம்மாக்கு எல்லாம் ஒரே விலையில் எடு… முப்பதாயிரம் தேவையில்லை பத்தாயிரம் போதும், எல்லாருக்கும் ஒரே விலை தான். யாருக்கும் கூட குறைய எடுக்க வேணாம்…” என்று அவள் பேசும் முன்னே படபடப்பாக சொல்லி முடித்தான்.
“அத்தோடு அகிலாவின் அருகில் வந்து புது வீடு பால் பாய்ச்ச போறோம், வீட்டுல இருக்குற எல்லா பொண்ணுகளுக்கும் சேலை எடுக்கணும். மொத்தம் முப்பதாயிரம், ஒரு ஆளுக்கு மட்டும் இல்லை. இவங்க என் மாமா பொண்ணு, நல்ல செலக்ட் பண்ணுவாங்க அதான் கூட்டி வந்தேன். தங்கச்சிக்கு குழந்தை இருக்கு, அதான் வர முடியலை…” எதற்கு என்று தெரியாமல் விளக்கம் கொடுத்தான் வெற்றி.
அத்தோடு மேசையின் அந்த பக்கம் நின்று இருந்த சரண்யாவின் இந்த பக்கம் வந்து அமர்ந்து கொண்டான். லேசாக சிரித்து விட்டு சேலை எடுக்க வந்த அகிலா, மெல்ல சரண் காதருகில் குனிந்து,
“யார் இந்த கோமாளி சரண்… ரேசன் வாங்குன அரிசி, சீனி கூட சொல்லுவான் போலா…” என்று சொல்லி தான் நகர்ந்தாள்.
சிறு முக மாறுதல் கூட சரன்யாவிடம் இல்லை. நீ யாருப்பா… என்று அறிமுகமில்லா பார்வையில் கடந்து விட்டாள்.
இங்கு கொதித்து போய் இருந்தாள் அபிராமி. அவன் சட்டையை பிடிக்கும் ஆத்திரம் வந்தது.
“நான் யாரடா உனக்கு… நாலு வருடம் கடந்தும் மனைவியை கண்டு பதறி துடிக்கிறான். எட்டு வருட என்னோட காதல் உனக்கு ஒன்றுமே இல்லையா…”
“என்ன சொல்ல வருகிறான். இவன் முடிவு இது தானா… மனைவியை கண்ட நொடியில் மாறி கொண்டான். ஆக, கோவலன் மனைவி கண்ணகி தான். உயிராக நேசித்தாலும் மாதவி மனைவி ஆக முடியாதே… எல்லோருக்கும் கோவலன் மனைவி என்றால் அது கண்ணகியை தானே குறிக்கும். இன்று நிரூபித்து விட்டான்…”